“எனக்கென்ன கோவம்? நான் எதுக்கு கோவப்படனும்?…” என விட்டேற்றியாக பேசினார் பூங்காவனம்.
“சொல்ல கூடாதுன்னு இல்லை. எனக்கு ஒரே பயமா போச்சு, இதுவும் நின்னுடுமோன்னு…” என்றவர் முதல் நாள் இரவு கதிர் வந்து பேசியதை பற்றி சொல்ல,
“இதை ஏன் நீ நைட்டே சொல்லலை?…” என்றார் பூங்காவனம்.
“நீங்க அப்பத்தான் போய் படுத்தீங்க. எழுப்பி சொல்ல மனசில்லை. காலையில ரெண்டுபேரும் கிளம்பட்டும்ன்னு இருந்தேன். அதுக்குள்ளே சம்பந்தியும் இப்படின்னு சொல்லவும் வேற எதையும் யோசிக்க முடியலை…” என்றார்.
“ஏன் அவங்க வீட்டுல என்ன? இன்னைக்கு கோவில்லையும் சம்பந்தி புலம்பினாரு…”
“பின்ன, புலம்பாம? பொண்ணுக்கு ஒரு கல்யாணத்தை பண்ண முடியலையேன்னு மனுஷன் மருகி போய் கிடக்கார். தாமரை கல்யாணத்தை தள்ளி போட சொல்லுச்சாம்…”
“அந்த பொண்ணும்மா?…”
“எனக்கென்னமோ கதிர் வேலையா தான் இருக்கும்ன்னு நினைக்கேன். இவன் தான் பார்க்க வந்த பொண்ணுட்ட என்னத்தையோ பேசிருக்கான். அதான் அந்த புள்ளை மிரண்டு போய் கொஞ்சம் நாள் தள்ளி போடுங்கன்னு சொல்லிருக்கு…”
“அவன் தான் கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டானே?…”
“ஆமா, அங்க தான டவுட்டாகுது. உடனே எப்படி சம்மதிச்சான்?…”
யமுனா இன்வஸ்டிகேஷன் செய்வதை போல கையை ஆட்டியபடி என்னென்னவோ சொல்லி பேச பூங்காவனத்திற்கு சிரிப்பு வந்தது.
“ரொம்ப யோசிக்கிற நீ…” என சிரித்தார்.
“அதெல்லாம் இல்லை. ரெண்டு மாசத்துல கல்யாணம் நடக்கனும். நாம நினைக்காமலே பொண்ணும் அமைஞ்சு போச்சு. போதாதா. இதை விடமுடியுமா?…”
“என்னவோ நிலத்தை கிரயம் பன்ற மாதிரில பேசிட்டு இருக்க? சம்பந்தப்பட்டவங்க ரெண்டுபேருக்கும் தள்ளி போடலாம்ன்னு தோணிருந்தா அதை என்னன்னு விசாரிக்கிறதை விட்டு கையை காலை பிடிச்சா கட்டி வைக்க முடியும்?…”
“அட நீங்க வேற சும்மா இருங்க. அவங்க பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டாங்க இல்ல. ரொம்ப மாசத்துக்கு தள்ளி போட்டா மனசு மாறிடும். இவங்களை நம்ப முடியாது. காலாகாலத்துல முடிச்சு வச்சுட்டு நிம்மதியா உக்காருவோமா நீங்க வேற?…” என்றவர்,
“முதல்ல ஜோசியர்ட்ட கலந்துப்போம். என்ன சொல்றாருன்னு பார்த்துப்போம்…” என்றார் யமுனா.
“இப்போ அவங்க வீட்டுல தள்ளி போட சொன்னது ஏன்னு சொன்னாங்களா?…”
“ஹ்ம்ம், ஒரு ஆறுமாசம் போனா கடனை கொஞ்சமாவது அடைச்சுட்டு கல்யாண செலவுக்கு தேத்திட்டு ஏற்பாடு பண்ணலாம்ன்னு சொன்னாங்களாம்…”
“நீ என்ன சொன்ன?…”
“என்னத்த சொல்லுவாங்க? நகை எல்லாம் இருக்காம். மத்த செலவு தானே? பாதி பாதி பண்ணிக்கலாம்ன்னு சொல்லிட்டேன். அதுலயே அவங்களுக்கு பாதி சுமை குறைஞ்ச மாதிரி ஆகிடுச்சு. நம்மளும் கொஞ்சம் நேக்கு போக்கா பார்த்துப்போம்…” என்றார் யமுனா.
“பார்த்துக்கறது சரி. ஆனா…”
“என்ன ஆனா? என்ன ஆனாலும் நாளைப்பின்ன கதிர் மாமனாருக்கு ஒரு கஷ்டம்ன்னா அது அவனுக்கும் தான? பொண்ணை எடுக்கும் போது வருந்தி வளைச்சா எடுப்பாங்க? சந்தோஷமா குடுக்க வேண்டாமா அவங்களும்? நம்ம குலம் தழைக்க வைக்க வர பொண்ணு. நாம தான் அள்ளி குடுத்து கூப்பிடுக்கனும்…” என்றார் யமுனா.
“சரி, கதிர்ட்ட கேட்கவே இல்லை நீ?…”
“அதெல்லாம் ஒன்னும் சொல்லமாட்டான். அவங்க பயந்தது அவங்க பக்கம் எப்பவும் பொண்ணு வீடு தான் கல்யாண செலவெல்லாம் எடுத்து நடத்தனுமாம். நம்ம பக்கம் பாதி செலவு பிரிச்சுப்போம் தானே? அதை சொல்லவுமே நிம்மதியா போய்டுச்சு அவங்களுக்கு ..” என்றவர்,
“மேற்கொண்டு ஆகற சின்ன சின்ன செலவுகளை நாம பார்த்துப்போம். போக்குவரத்து எல்லாம் நம்ம ட்ராவல்ஸ் வண்டியை எடுத்துப்போம். பூவுக்கு, காய்கறிக்கு எல்லாம் நம்ம சீதாவுக்கு சொந்தக்காரங்க தோட்டத்துல வாங்கிப்போம். நமக்குன்னா பார்த்து பண்ணுவாங்க…”
“ஹ்ம்ம் அப்பறம்?…”
“மண்டபம் வாடகை தான். நம்ம அரியலூர் சுந்தரம் அண்ணே தான் நம்ம வகையறா மண்டபத்தை பார்க்கறாங்க. நமக்குன்னா அதுலையும் கம்மி ஆகும். அட நல்லவேளை. அப்படியே அவருக்கு ஒரு போனை போடுங்க, எந்த தேதில மண்டபம் இருக்குன்னு கேட்டு வச்சுப்போம்…”
“நான் நேத்தே ஒரு வார்த்தை சொல்லி வச்சுட்டேன். அதெல்லாம் பார்த்துக்கலாம்…” என்றார் பூங்காவனம்.
“நல்லது. இப்படி எந்தெந்த வகையில நம்மால முடிஞ்சதை பண்ணனுமோ நாம பார்த்துக்குவோம்…” என்றதும்,
“இன்னும் கல்யாணமே முடியலை. அதுக்குள்ள அவங்களுக்காக இவ்வளவு யோசிக்கிற?…”
“யோசிக்காம, கல்யாணம் ஆகிட்டா அடுத்து அவங்களும் நாமளும் ஒன்னுக்குள்ள ஒன்னுதான? அவங்களுக்கு ஒண்ணுன்னா நாம போய் நிப்போம். நமக்கு ஒண்ணுன்னா அவங்க தான வருவாங்க. நம்ம புள்ளைக்காக நாம, அவங்க பொண்ணுக்காக அவங்க…” என்றவர்,
“மனுஷங்களுக்குள்ள என்ன பெரிய இது? புள்ளைகளை பெத்துட்டு கரையேத்தறதுக்கு படற பாடு என்னன்னு எனக்கு தெரியும்ல. இதுல பொண்ணு என்ன? பையன் என்ன? அவங்க நிலைமை எனக்கும் புரியுது. அதோட பொண்ணு ரொம்ப பொறுப்பு. தங்கச்சிக்காக கல்யாணத்தை தள்ளி போடற மனசு எத்தனை பேருக்கு வரும்?…”
“ஆமா நீ சொல்றதும் சரித்தான் யமுனா…” என்றார் பூங்கோதை.
“அதுக்கு தான் சொல்றேன். வெள்ளந்தியா வேற இருக்காங்க. சூதுவாது தெரியமாட்டிங்குது சம்பந்தியம்மாவுக்கு. பாவம்…” என சொல்லிய யமுனா,
“சரி நாளைக்கு வரவங்க மத்தியான சாப்பாட்டுக்கு வர மாதிரி சொல்லிருக்கேன். என்னெல்லாம் வாங்கனும்னு லிஸ்ட் சொல்லறேன். எழுதிக்கோங்க…” என்றார்.
பேப்பர் பேனாவை எடுத்துக்கொண்டு லிஸ்ட் போட தயாராக ஒவ்வொன்றாய் அரங்கேற ஆரம்பித்தது.
யமுனா எங்கும் தேங்கி நிற்கவில்லை. தான் ஓடிய வேகத்திற்கு அனைவரையும் இழுத்துக்கொண்டு ஓடினார்.
இரவு கதிர் வீட்டிற்கு வரும் பொழுது வீட்டில் காய்கறிகளும், பழங்களும் சில பலசரக்கு சாமான்களும் என்று டைனிங் டேபிளில் நிறைத்திருக்க கையில் வைத்திருந்த பேப்பரை கொண்டு அவற்றை சரிபார்த்து தனியே எடுத்து வைத்துக்கொண்டு இருந்தார் யமுனா.
“ம்மா, என்ன இவ்வளவு காய்கறி? நாளைக்கு எதுவும் விசேஷமா?…” என கதிர் கேட்க,
“ஹ்ம்ம், ஆமாப்பா. நாளைக்கு உன்னை மாப்பிள்ளை பார்க்க வராங்க…” என்று சொல்லவுமே கதிர் ஜெர்க் ஆனான்.
எங்கே கல்யாணத்தை தள்ளி போடுங்கள் என்றதும் வேறு பெண்ணை அதற்குள் பார்த்து அவர்களை வர சொல்லிவிட்டாரோ என ஒருநொடி குழம்பி போனான்.
“ம்மா, என்ன சொல்றீங்க? யார் வராங்க?…” என்றான் மீண்டும்.
“கேட்ச்…” என தர்ஷன் கிண்டலாய் கதிரை பார்த்து சொல்ல,
“என்னடா?…” என்றான் முறைப்பாய் கதிர்.
“உன்னோட மைன்ட் வாய்ஸை நான் கேட்ச் பண்ணிட்டேன்…” என தர்ஷன் கேலி பேச,
“என் மைன்ட் வச்சு நீ என்ன பன்ற? உன் வேலையை நீ பாரு…” என்றான் கடுப்புடன்.
“ம்மா…” என்று மீண்டும் தாயை அழைக்க,
“தர்சா முந்திரிப்பருப்பை எங்கடா?…” என்றார் கதிரை கண்டுகொள்ளாமல்.
“அடடடடா உங்களோட இம்சையா போச்சும்மா. இப்பத்தான எடுத்து குடுத்தேன்….” என்றவன் தேடி எடுத்து தர வாங்கிக்கொண்டு அதனை தனியே வைத்தார்.
“அப்பறம் ம்மா, மாப்பிள்ளை பார்க்க வரவங்களுக்கு நாளைக்கு விருந்து தடபுடலா இருக்கும் தானே?…” என ஓரக்கண்ணால் அண்ணனை பார்த்துக்கொண்டே கேட்டான் தர்ஷன்.
“ஆமா, காலத்துக்கும் இன்னார் வீட்டுக்கு போனோம். இப்படி கவனிச்சாங்கன்னு பேர் வேணும்ல. என்னதான் நாளைப்பின்ன கல்யாணம் ஆகிட்டு சம்பந்தியானாலும் இந்த கவனிப்பு நெஞ்சுல நிக்கனும்ல…” என்றார் யமுனா.
“அப்படி சொல்லுங்க. ஆமா அதென்ன பொண்ணு பார்க்கறதா இருந்தா சாயங்காலம். பஜ்ஜி சொஜ்ஜி கேசரியோட முடிஞ்சிருது. மாப்பிள்ளை பார்க்கறதுன்னா மட்டும் மீல்ஸ் மீட்டிங்?…”
“இதுக்கு பேரு கை நனைக்கிறதுடா…” என்று அவனுக்கு விளக்கினார்.
“சரி அப்ப நாளைக்கு மாப்பிள்ளை பார்க்க பொண்ணும் வருவாங்களா?…” என சொல்லியவனின் தலையில் நறுக்கென குட்டியவன்,
“போட்டேனா பாரு. நான் என்ன கேட்டுட்டு இருக்கேன். ரெண்டுபேரும் பேசிட்டே இருக்கீங்க? எனக்கு பதில் சொல்லாம என்ன விளையாடறீங்களா?…” என்றான் கோபமாக.
“அட ஆமாப்பா மறந்துட்டேன். நாளைக்கு மத்தியானம் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்திரு. அவங்க வரப்போ நீ வீட்டுல இருக்கறது தான் மரியாதை. அம்மாவுக்காக இதையாச்சும் செய்…” என்றார் யமுனா பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு.
“ம்மா, அவன் தான் சின்ன பையன் விவரம் புரியாம பேசறான். நீங்களும் சேர்ந்துட்டு என்னம்மா இது? என்னால நம்பவே முடியலை…” என்றான்.
மகன் இத்தனை நீளமாக விடாமல் பேச பேச யமுனாவிற்கு சிரிப்பு பொங்கியது. ஆனாலும் அடக்கிக்கொண்டு மகனை இன்னைக்கு ஒரு கை பார்ப்பதென்று முடிவெடுத்திருந்தார்.
“என்ன நம்ப முடியலை? உனக்காக தான இந்த பாடு படறேன். உனக்கொரு கல்யாணத்தை பண்ணிட்டா போதும்…”
“அப்பா என்னை கடைகண்ணில விட்டுட்டு அப்படியே தண்ணி தெளிச்சிறனும்? அதானே?…” என்றான் தர்ஷன் இடையே.
“நீவேற சும்மா இருடா. பேசிட்டு இருக்கேன்ல…” என இளையமகனை கடிந்தவர்,
“கதிர், நாளைக்கு வராங்க. நீயும் வந்திரனும்…” என்றார் அழுத்தமாக.
“நல்லா இருக்கும்மா, ரெண்டு நாள் முன்னாடி தான் ஒரு பொண்ணை பார்த்துட்டு வந்துட்டு இப்ப நான் கல்யாணத்தை தள்ளி போடுங்கன்னதும் வேற பொண்ணை பார்த்திருக்கீங்க? நான் என்ன பிடிக்காமலா வேண்டாம்ன்னு சொன்னேன்?…”
“பிடிச்சா தள்ளி போடனும்ன்னா நினைப்பாங்க? எனக்கு தெரியலப்பா. பொண்ணை பிடிச்சா எப்படா கல்யாணம்ன்னு தான் நினைப்பாங்க. நீ என்னன்னா? அப்ப நான் என்னன்னு நினைக்க?…”
“அப்ப அவ்வளோ அவசரம்ன்னா இவனுக்கு பார்த்து முடிச்சு வைங்க. எனக்குன்னு நாளைக்கு மாப்பிள்ளை பார்க்கறேன்னு யாராச்சும் வந்தாங்க?…”
“வரவங்களை வேண்டாம்ன்னு சொல்ல முடியாது. பாரு எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு…” தர்ஷன் சொல்ல,
“தர்ஷா…” என பல்லை கடித்தான்.
“வேண்டாம்ன்னு சொல்ல முடியாதுப்பா…” என யமுனா சொல்லிக்கொண்டு இருக்கும் போதே,
“யமுனா நாளைக்கு சம்பந்தி வீட்டோட அங்கை குடும்பமாவே வராலாம். அப்படியே தாமரையோட தாய்மாமாவும், அவங்க சம்சாரமும் கூட வராங்க. சேர்த்து சமையல் பார்த்துக்கோ…” என்று பூங்காவனம் வந்து குட்டை உடைத்துவிட கதிர் மூவரையும் மாற்றி மாற்றி பார்த்தான்.
யமுனா மாட்டிக்கொண்ட விதமாய் திருதிருவென முழிக்க, தர்ஷன் கேலியாய் சிரிக்க, பூங்காவனம் வழக்கம் போல என்ன நடக்கிறது என தெரியாமலே நின்றார்.
யாருக்கும் பதில் சொல்லாமல் கோபமாய் தன்னறைக்குள் நுழைந்துகொண்டவனை சமாதானம் கூட செய்யமுடியாமல் யமுனா நிற்க,
“ம்மா, விடுங்க. ஆனாலும் இவனுக்கு எவ்வளவு அழுத்தம்? வாயை திறந்து சொன்னா முத்தா உதிர்ந்திரும்? பிடிச்சிருக்கு, வேற பொண்ணை பார்க்க வேண்டாம்ன்னு வெளிப்படையா சொல்ல இவனுக்கு என்ன ஒரு மண்டைக்கனம்?…” என்றான் தர்ஷன்.
“டேய் விடுடா….” என்றவர் ஆகவேண்டிய வேலையை பார்க்க ஆரம்பித்தார்.
அறைக்குள் நுழைந்தவனுக்கு மனதிற்குள் உற்சாகமாகவும், அதே நேரம் தன்னை இப்படி ஏமாற்றிவிட்டார்களே என்ற கடுப்பும் ஒருங்கே உருவாக அப்படியே உடை கூட மாற்றாமல் படுத்துவிட்டான்.
மனது லேசாய் அமைதிப்பட்டது. கொஞ்ச நேரத்தில் எத்தனை படபடப்பு. யோசிக்க கூட இல்லையே தான் என்று நினைக்கும் போது இதழ்கள் புன்னகைத்தன.
சரியாய் அதே நேரம் தாமரையும் அவனின் மொபைலுக்கு அழைத்துவிட ஏற்கனவே அவளின் எண்ணை தர்ஷனிடம் வாங்கி பதிந்து வைத்திருந்தவன் அட்டன் செய்தான்.
“சொல்லுங்க தாமரை…” என்றதுமே,
“வீட்டுல நாளைக்கு அங்க வராங்களாம்…” என்றாள் படபடப்புடன்.
“ஆமா தெரியும்…” சற்றே அமர்த்தலாக அவன் கூட,
“என்ன தெரியும்ன்னு சாதாரணமா சொல்றீங்க? பத்திரிக்கை அடிக்கிற வரைக்கும் லிஸ்ட் போட ஆரம்பிச்சிட்டாங்க. என்னோட மாமா வேற வந்திருக்காங்க…”
“இப்ப அதுக்கு என்ன பண்ணனும்ன்றீங்க?…” என்றான்.
“என்ன பன்றதா?…”
“ஆமா, எதுவும் பண்ண முடியாது. கல்யாணம் அவங்க முடிவு பண்ணின படி நடக்கட்டும். இதை பத்தி நாம இனி பேச வேண்டாம் தாமரை. திரும்ப திரும்ப தள்ளி போடறதை பத்தி என்கிட்டே பேசாதீங்க….” என்று சொல்லிவிட்டான் சற்று முன் வீட்டில் நடந்த நிகழ்வில்.
“ஓகே, பை…” என சொல்லி வைத்துவிட்டாள் அவள்.
கொஞ்சம் கோபமாகவே பேசிவிட்டோமோ என யோசனையுடன் இருந்தவன் மறுநாள் அழைத்து பேசலாம் என்று விட்டுவிட்டான்.
அடுத்து பேசியதோ சோமநாதன் தான். அந்த ட்ரிப்பை அடுத்த மாதத்திற்கு தள்ளி போட முடியுமா என்று.
மாப்பிள்ளை வீடு வந்திருந்த நேரத்தில் ஜோஸியரை உடனே வீட்டிற்கு வரவழைத்து முகூர்த்த நாளும் குறித்துவிட திருமணத்தை ஒரு மாதத்தில் நடத்தவிருக்க அதுவரை எங்கும் செல்லமுடியாது என்று சோமநாதன் மறுத்துவிட்டார் உறுதியாக.