மறுநாள் காலை எழுந்ததில் இருந்து அத்தனை வேலைகள். சீதாவை வைத்துக்கொண்டு பரபரப்பாக செய்தார் யமுனா.
தங்கள் வீட்டு பக்கத்தில் இருந்து சொந்தங்கள் யாரவது வேண்டுமே. பெண் வீட்டார் வரும் நேரம்.
அங்கை இருந்தாலும் நெருங்கிய உறவு வேண்டுமாதலால் முதல் நாளே மாலை பூங்காவனமும், யமுனாவும் சென்று பூங்காவனத்தின் தம்பியை குடும்பத்துடன் வருமாறு அழைத்து வந்திருந்தார்கள்.
யமுனாவின் அண்ணன் வெளியூரில் இருப்பதால் உடனே சென்னை வரமுடியாத சூழ்நிலை.
முதலில் முடிவு செய்ததை போல வார இறுதியாக இருந்திருந்தால் வந்திருப்பார். யமுனாவிடம் ஏன் இந்த திடீர் மாற்றம் என்றதற்கு யமுனாவே பேசி சமாளித்துவிட கேள்விகள் அடுத்து எங்கே வர?
பூங்காவனத்தின் தம்பி குடும்பம் அந்தளவு மிகவும் நெருங்கி ஒட்டி பழக கூடியவர்கள் இல்லை.
எப்போதுமே ஒருவித எல்லைகோடு தான். மற்ற சொந்தங்களை ஓரிடத்தில் நிறுத்தி தாங்களும் நின்றுகொள்வார்கள்.
நெருக்கமும் வேண்டாம், கசப்பும் வேண்டாம். என்னவென்றால் என்ன. அவ்வளவு தான்.
உறவும் நீடிக்கும். முறிவும் இல்லாமல் இலகுவாக செல்லும் என்று இருந்துகொண்டார்கள்.
பெரிதாய் இழுத்துபிடித்து யமுனாவும் உறவு பாராட்டுவதில்லை. இருக்கிறாயா இருந்துகொள். விலகுகிறாயா உன் விருப்பம். இதுதான் அவர் சொந்தங்களிடம் இருந்து படித்துக்கொண்டது.
ஆனால் பூங்காவனம் விட்டுக்கொடுக்கவும் மாட்டார். பாசத்தில் இதை எதையும் எதிர்பார்க்கமாட்டார்.
விலகி சென்றாலும் தேடி சென்று உறவை பார்த்துக்கொள்ள கூடியவர். அதனாலேயே யமுனாவிடம் வாங்கிக்கட்டிக்கொள்வார்.
அப்போதும் பூங்காவனத்தின் தம்பி பெண் வீட்டார் வருவதற்கு சிறிது நேரம் முன்பு தான் தாங்கள் வரமுடியும் என்று சொல்லியிருக்க யமுனா ஒன்றும் சொல்லவில்லை. சரி என்றுவிட்டார்.
“என்ன யமுனா யார் போன்ல?…”
பூங்காவனம் சாப்பிட இலைகளை வாங்கிக்கொண்டு வரும் போது தான் யமுனா பேசி முடித்தார்.
“எல்லாம் உங்க தம்பி சம்சாரம் தான். வாசுகி தான் போன்ல. சம்பந்தி வீட்டுல இருந்து கிளம்பினதும் கிளம்பி வராங்களாம். அவங்களால முன்னாடியே வர முடியாதாம்…”
“நான் எங்க பண்ணேன்? அன்னைக்கு நேரமிருந்தா காலையில சீக்கிரம் கிளம்பி வாங்கன்னு சொன்னோம்ல. அதுக்கு தான் போன் பண்ணி வர நேரமிருக்காதுன்னு சொல்றாங்க…”
“ஹ்ம்ம், என்னவோ ஒட்டாத ஒரு பழக்கம் இவங்களுக்கு மட்டும். நாளைப்பின்ன அவன் பொண்ணுக்கு முடிக்கும் போது என்ன பன்றானோ? இப்படி இருந்தா எங்க ஒண்ணுகூடி இருக்க?…”
கவலையுடன் பூங்காவனம் பேச யமுனா ஒவ்வொரு இலையாக சரிபார்த்து எடுத்து வைத்தார்.
“அதை விடுங்க, இந்த இலை எல்லாம் கழுவி வைக்கனும். கிழிஞ்சிடாம கழுவி நுனியை நறுக்கி வைங்க. அப்படியே மேல பாயை எடுத்து வைங்க. கீழ வச்சு தான் பரிமாற முடியும்…”
“நல்ல கதையா இருக்குதே? ஒரு இலை இத்தனை நீளம். நல்லா பெருசா போடனும்ல. டேபிள் பத்தாது. அதுவும் விசேஷம்ன்னா கீழ தன்தரையில இலை போட்டு சாப்பிட்டாதான் நிறைஞ்சு இருக்கும்…”
சொல்லிக்கொண்டே பொரியலுக்கான காய்களை எல்லாம் அரிந்துகொண்டு இருந்தார்.
“தர்ஷன் ஆபீஸ் போறானா?…”
“இல்லை இல்லை. மதியம் சாப்பிட்டு போக சொல்லிருக்கேன்…”
“மத்யானமா?…” என பூங்காவனம் கேட்கும் பொழுதே தர்ஷன் வந்துவிட்டான்.
“நல்லா கேளுங்கப்பா, நான் என்ன பள்ளிக்கூடமா போறேன்? காலையில வேண்டாம். மத்தியானம் போன்னு இவங்க இஷ்டத்துக்கு சொல்றது…” என்றான் தர்ஷன்.
“அப்ப லீவா?…” என்ற யமுனா,
“மருமகளுக்கு சாப்பாட்டை உன்கிட்ட அடைச்சு குடுத்துவிடலாம்ன்னு பார்த்தேனே?…” என யோசனையான முகத்துடன் யமுனா சொல்ல பூங்காவனம் சிரித்துவிட்டார்.
“ம்மா, என்னை பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது?…” என கடுப்பாகிவிட்டான் தர்ஷன்.
“நீ போகலைன்னா விடு. மத்தியானம் போய் கேரியரை குடுத்துடு வா. விசேஷ சாப்பாடு குடுத்தா பொண்ணு சந்தோஷப்படும்ல…” என்ற யமுனா,
“அதுக்கு…”
“வா வா. அந்த ஸ்டூலை போட்டு மேல இருக்கற அஞ்சடுக்கு கேரியரை இறக்கு. அப்படியே அந்த மூணடுக்கையும் சேர்த்து இறக்கு…”
“எதுக்காம்?…”
“என்னடா நீ ஒருத்தன் கேள்வி கேட்டுட்டே இருக்க? எல்லாம் உன் அண்ணிக்கு தான்…”
யமுனா சொல்ல சொல்ல தர்ஷனின் முகம் போன போக்கில் பூங்காவனம் வந்து மகனை காப்பாற்றினார்.
“நாம வேணும்னா போறப்போ சம்பந்திக்கிட்டையே குடுத்து விட்டுடுவோம். அங்க ஆபீஸ்ல இதை எல்லாம் கொண்டு போனா நல்லாவா இருக்கும்?. நம்ம தர்ஷனே இதை எதையும் எடுத்துட்டு போனதில்லையே?…” என்றார்.
“என்ன ஆபீசோ? ஒரு சாப்பாட்டை கூடவா கொண்டு போக முடியாது? குடும்பம்ன்னு ஆகிட்டா இதெல்லாம் வேண்டாமா? நாளைக்கு கல்யாணம் ஆகிட்டா அவளுக்கும் சேர்த்து தான் கட்டி குடுக்கனும்…” என யமுனா சொல்ல,
“ம்மா, இப்படி எல்லாம் கொண்டுபோனா சிரிப்பாங்கம்மா. இத்தனை அடுக்கு?…” என்ற தர்ஷன் அந்த கேரியரோடு அலுவலகத்திற்கு நுழைவதை போல கற்பனை பார்க்க தனக்கே பிடிக்கவில்லை.
“நான்லாம் அங்க எப்படி இருக்கறவன்?…” என மனதிற்குள் நினைப்பதாக வாய்விட்டு சொல்ல,
“எங்க போறீங்க? கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா? இந்த நேரத்துல வெளிய உலாத்தல் என்ன வேண்டிக்கிடக்கு?…” என்று வந்துவிட்டார் யமுனா.
‘ஐயோ அரையும்குறையுமா கேட்டுட்டு இந்தம்மா பன்ற அலம்பு தாங்கலை’ என தலையில் கைவைத்தான் தர்ஷன்.
“என்னடா தலை வலிக்குதா? காபி வேணுமா? ஒரு மாத்திரையை போட்டுட்டு ஒருமணி நேரம் தூங்கி எந்தி. அவங்களாம் வாரதுக்குள்ள தலைவலியை குறைச்சிடு…” என்றவர்,
“உங்ககூட பேசினா ஒருவேலையும் ஆகறதில்லை. போங்க அங்கிட்டு சும்மா தொணதொணக்காம…” என்று இருவரையும் சொல்லி திரும்பவும் கிட்சனுக்குள் நுழைந்துகொள்ள,
“நீங்க தெய்வம்ப்பா…” என்று காலில் விழுந்து எழுந்தான் தர்ஷன்.
“ஏன்டா?…” என பூங்காவனம் பக்கென்று சிரித்துவிட்டார் மகனின் செயலில்.
“பின்ன? உங்களை பார்த்தா இந்த ஜென்மத்துல ஒருத்தருக்கும் கல்யாண ஆசையே வராது…” என சொல்லிக்கொண்டிருக்க,
“இந்தா இந்த காபியை குடி..” என்று வந்து மகனுக்கு நீட்டினார் யமுனா.
அவரின் முகம் கடுகடுவென்று இருக்க ஒருவேளை தான் காலில் விழுந்து எழுந்ததை பார்த்திருப்பாரோ என்ற ஐயத்துடன் அதை குடித்துமுடித்தான்.
“ம்மா குடிச்சுட்டேன்…” என்று தம்ளரை நீட்ட,
“ம்க்கும். இதுக்கு மட்டும் நொம்மா. ஆனா கால்ல விழறது கையை பிடிக்கிறது அப்பாக்கிட்ட. உங்களுக்கு எல்லாம் நான் கிள்ளுக்கீரையா போய்ட்டேன்…” என்று சொல்ல அவரை சமாளிக்கமுடியாமல் பூங்காவனத்தை பார்த்தான்.
நடப்பதற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்பதை போல புதினாவை கிள்ளிக்கொண்டு இருந்தார் அவர்.
“உட்காரு. உடனே போய் படுத்துராத. இந்த கறிவேப்பிலையை உருவி இந்த டப்பால போட்டுவை. மாத்திரை ஜீரணமாகட்டும்….” என யமுனா சொல்ல,
“அதை கூட நான்தான் சொல்லனுமா? போய் போட்டுட்டு வந்து உட்காரு. அப்பத்தான் மாத்திரை உள்ளுக்குள்ள கரையும்…” என யமுனா சொல்லவும்,
“அதத்தான் யமுனா நானும் சொன்னேன். அதுக்கு தான் கால்ல விழுந்து என்னை விடுங்கன்னான். வேற ஒண்ணுமில்லை…” என பூங்காவனம் சொல்ல,
“அதானே? அவர் சொல்லியும் கேட்கலையா நீ? தர்சா பாரு உழைச்சு ஓடா போன வயசுல உக்கார்ந்து எனக்கு கூடமாட ஒத்தாசையா இருக்காரு. நீ பார்த்துட்டு இருக்க. உக்கார்ந்து உங்கப்பாவுக்கு உதவி பண்ணு…”
யமுனா படபடவென்று சொல்லிவிட்டு செல்லவும் பூங்காவனம் புதினா கட்டில் இருந்து பாதி பிரித்து மகன் பக்கம் நகர்த்தினர்.
“தனி தனி இலையா எடுக்கனுமாம்…” என சொல்ல,
“உங்களுக்கெல்லாம் ஏன்ப்பா ஆஸ்கார் குடுக்கலை?…” என்று முறைத்தவனின் கோபத்தில் சிரித்தவர்,
“உன்னை நான் காப்பாத்தியிருக்கேன், அதை நினைக்காம…”
“எது புதினா கிள்ள விடறதுக்கு பேரு காப்பாத்தறதா? போங்கப்பா. நான் ஆபீஸ்க்கே போயிருப்பேன்…”
“முடியாதுடா. முடிஞ்சதை பேசு. இதை சொல்லலைன்னா இன்னும் பேசும் போதெல்லாம் அப்பா கால்ல மட்டும் தான விழறான் மகன்னு சொல்லி சொல்லி உன்னை ஒருவழி ஆக்கிருப்பா. அதுல இருந்து இப்ப நீ தப்பிச்ச தானே?…”