“எல்லாம் முடிஞ்சது. அங்கை இப்பத்தான் கிளம்பறோம்ன்னு போன் பண்ணினா. அதுக்குள்ள உங்க தம்பிக்கு போன் போட்டு கிளம்பி வர சொல்லுங்க. கசகசன்னு இருக்கு நானும் குளிச்சுட்டு புது புடவை கட்டிட்டு வரேன்…”
கடகடவென ஒப்பித்துவிட்டு உள்ளே ஓடியவர் ஓடிய வேகத்தில் மீண்டும் வந்தார்.
“மணி என்ன?…” என வந்தவர்,
“வாசல்ல நில்லுங்க. இன்னும் கொஞ்சம் நேரத்துல நொங்கு, பதநீர் கொண்டுவருவான். நேத்தே சொல்லிட்டேன். வாங்கி வைங்க. வரவங்களுக்கு குடிக்க குடுக்கலாம். குளுகுளுன்னு இருக்கும் வெயிலுக்கு…”
பூங்காவனத்திடம் அதையும் சொல்லிவிட்டு அவர் சிட்டாய் பறக்க மனைவியின் பரபரப்பில் சிரித்துக்கொண்டார் அவர்.
“போங்க போங்க இங்க என்ன ரசிப்பு வேண்டிக்கிடக்கு? போய் வாசல்ல நில்லுங்க…” என கிண்டல் பேசினான் தர்ஷன்.
“யப்பா சாமி. புரியவே வேண்டாம்…” என்று கையெடுத்து கும்பிட்டான்.
யமுனா சொல்லியதை போல தன் தம்பிக்கு அழைத்து கிளம்பி வருமாறு சொல்லிவிட்டு கதிருக்கும் அழைத்துவிட்டார்.
“என்னப்பா இன்னும் கிளம்பலையா நீ? தாமரை வீட்டுல இருந்து கிளம்பிட்டாங்க கதிர்…” என்றார் பூங்காவனம்.
“கிளம்பிட்டேன்ப்பா. இன்னும் பத்து நிமிஷத்துல வீட்டுல இருப்பேன்…” என சொல்லி வைத்தவன் தீபக்கை அழைத்து பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு கிளம்பினான்.
ட்ராவல்ஸில் இருப்பவர்களுக்கும் சேர்த்தே யமுனா சமைத்திருக்க அவர்களுக்கு முன்பே கொடுத்தனுப்பியும்விட்டார்.
எப்போதும் விசேஷ நாட்களில் அவர்களை என்றுமே அவர் விட்டதில்லை. அப்படி இருக்க இது மகனின் திருமணம்.
யமுனா தனது சந்தோஷத்தை எப்படியெல்லாம் வெளிப்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் காட்டிக்கொண்டு இருந்தார்.
கதிரும் கிளம்பி வீட்டிற்கு வந்து சேர வந்ததுமே அவனை முதலில் குளித்து வேறு உடையை மாற்ற சொல்லி அனுப்பினார் யமுனா.
உள்ளே தனதறைக்கு வந்தவனுக்கு தாமரை வரப்போவதில்லை என்று தெரிந்திருந்தாலும் வந்தால் என்ன என தோன்றியது.
முதல்நாள் இரவு அவள் பேசிவிட்டு போனை வைத்ததோடு சரி அதன் பின்னர் இவன் பேச முயற்சிக்கவில்லை. பேசினால் மீண்டும் தாமரை அதையே பேசுவாளோ என்று தவிர்த்துவிட்டான்.
அவள் மீண்டும் மீண்டும் இதையே பேசி தன்னை கோபமூட்டினால் தானே இந்த திருமணத்தை நிறுத்திவிட கூடும் என்று அஞ்சினான்.
தன்னுடைய குணம் அப்படி. வேண்டாம் வேண்டாம் என அவள் மறுத்தால் நிச்சயம் தனது ஈகோ ஏதேனும் ஒரு நேரத்தில் பிரச்சனைக்குரிய விஷயமாக மாறி இந்த திருமணத்தையே நிறுத்தலாம் என அமைதியாகிவிட்டான்.
யமுனாவை இனி தடுத்தும் நிறுத்தமுடியாது. அவர் காத்திருந்தது தனது சம்மதத்திற்காக மட்டுமே. அது கிடைத்த பின்னரும் ஏன் தாமதிக்க போகிறார்?
‘வரட்டும், எப்படியும் கல்யாணம்ன்னா பந்தல் சொல்றதுல இருந்து, மண்டபம் பிடிக்கிறது வரைக்கும் நிறையவே நேரமிருக்கும். மூணு, நாலு மாசம் ஆகிடும். அது போதாதா தாமரைக்கு?’ என நினைத்தான் கதிர்.
ஆனால் அவனின் எண்ணங்களுக்கு அப்பாற்ப்பட்ட நிகழ்வுகள் அன்று நடக்கவிருப்பது கதிரே அறியாதது.
அறையின் கதவு தட்டப்பட திறந்தால் தர்ஷன் நின்றுகொண்டு இருந்தான். அவனை உள்ளே விட்டு மீண்டும் கதவை சாற்றினான்.
“அம்மா இதை உனக்கு குடுக்க சொன்னாங்க. வரப்பவே பசிச்சா மாதிரி இருந்துச்சாம் உன் முகம்….” என பெரிய தம்ளர் நிறைய குட்டி குட்டியாய் வெட்டி போட்டிருந்த நுங்குகள் பதநீரில் மிதந்துகொண்டு இருந்தது.
“ம்ஹூம். ஐஸ் க்யூப் போட்டு நான் தான் கொண்டுவந்தேன். வாங்கிவச்சதை சின்ன மண்குடுவைல அம்மா நுங்கு கலந்து ஊத்தி வச்சுட்டாங்க. மோர் கடைஞ்சு வைப்பாங்கள, அந்த குட்டி பானையில. அதுல இருந்தா நல்லா குளுகுளுன்னு இருக்குமாம்…”
யமுனாவை போலவே அவன் சொல்லி காண்பிக்க கதிர் முகத்தில் புன்னகை மிளிர்ந்தது.
“உனக்கு?…” என்றான் கதிர் குடிக்கும் முன்னர்.
“நான் இவ்வளவு நேரமா குடிக்காம இருக்கேன்? இன்னைக்கு நடந்ததுக்கு மொத்த பானையும் நான் தான் குடிச்சிருக்கணும்…” என்றவன் கதைகதையாய் சொல்ல கேட்டவன் சிரித்துக்கொண்டே இருந்தான்.
“விட்டா என் தலையில துண்டை சுருட்டி வச்சு கூடையை ஏத்தி என்னோட ஆபீஸ்க்கு அனுப்பிருப்பாங்க. அவ்வளோ பாஸ்ட்ல இருந்தாங்க அம்மா. ஜஸ்ட் மிஸ்…” என்றான் தன் காலை தட்டிக்கொண்டே.
“அப்பா ஒன்னும் சொல்லையா?…”
“ஏன் சொல்லாம? சொன்னாங்களே? திவ்யமா என்ன செய்யனுமோ சிறப்பா செஞ்சாங்க. தெரியாம கால்ல விழுந்தேன் அந்த மனுஷர் மேல பாவப்பட்டு. கடைசில நான் தான் பாவம்…” என்றவன் எதையோ நினைத்து சிரிக்க,
“என்னடா சொல்லிட்டு சிரியேன்…”
“இல்ல, நமக்கே இந்த பாடுன்னா. அண்ணி வரவும் கல்யாணத்துக்கு அப்பறம் அவங்க ஆபீஸ்க்கு எப்படி சாப்பாடு கொண்டு போவாங்களாம்? இதுல வளர்ற பொண்ணாம். நல்லா சாப்பிட வைக்கனுமாம். அதை நினைச்சேன். சிரிப்பு வந்திருச்சு…” என சொல்லி சிரிக்க,
“நல்லா இருக்குடா உன்னை அவனுக்கு குடிக்க குடுத்துட்டு வர சொன்னா உக்கார்ந்து அரட்டை அடிச்சுட்டு இருக்க? வா வா. மாடில போய் எலுமிச்சை பறிச்சுட்டு வா…” என்றார்.
“எதுக்கும்மா?…” என தர்ஷன் எழுந்து நிற்க,
“மோர்ல பிழிஞ்சு விடத்தான்டா. இதுக்கெல்லாம் விளக்கம் கேட்பியா நீ? போ போய் பறிச்சுட்டு வா…” என்று சொல்லி செல்ல,
“ஹ்ம்ம், உனக்கு கல்யாணம் ஆகறதுக்குள்ள எனக்கு வயசாகிடும். பார்த்துட்டே இரு…” என சொல்லி செல்ல கதிருக்கு முகத்தின் புன்னகை வாடவே இல்லை.
“வளர்ற பொண்ணா?…” என தாமரையை நினைத்து சிரித்துக்கொண்டவன் அவளின் உருவத்தை மனதிற்குள் அளவீடு செய்தான்.
“பூசினா மாதிரி தான் இருக்கா. இந்த வெயிட்டே போதுமே? இன்னும் என்னத்தை சாப்பிட வச்சு தேத்த போறாங்களாம்?…” என சொல்லும் போதே இதழ்கள் மின்னியது சிரிப்பில்.
சற்று நேரத்தில் மீண்டும் கதவு தட்டப்பட வெளியே வேறு பேச்சுக்குரல்களும் கேட்க கதவை திறந்து வந்தான். பூங்காவனத்தின் தம்பியும், தம்பி மனைவியும் வந்திருந்தார்கள்.
“வாங்க சித்தப்பா, வாங்க சித்தி…” என்றவனை பார்த்து தலையசைத்த மதிவாணன்,
“எப்படி இருக்க கதிர்? பிஸ்னஸ் எல்லாம் எப்படி போகுது?…” என்றார் பொதுவாக.
“அப்படியே நீயும் மடமடன்னு சொல்லிருவ உன் ஒபீனியனை. போடா…” என்றான் அதற்கும் சேர்த்து கதிரிடம்.
இதை எல்லாம் கண்டும் காணாமல் பூங்காவனம் அமர்ந்திருக்க யமுனா அவர்களுக்கு குடிப்பதற்கு நீர் மோர் கொண்டுவந்து தந்தார்.
வாசுகி மட்டும் எடுத்துக்கொள்ள மதிவாணன் உணவு நேரத்தில் வேண்டாம் என மறுத்துவிட்டார் மோரையும் பதநீரையும்.
“பொண்ணு நம்ம அங்கை மூலமா தான் அமையனும்னு இருந்திருக்கு போல அண்ணே…” என்ற மதிவாணன்,
“எல்லாம் பேசி முடிச்சாச்சா?…” என கேட்டார்.
“பேசியாச்சுப்பா, இன்னைக்கு வரவும் நாள் குறிக்கிறது தான் வேலை…” என்ற பூங்காவனம் சொல்லும் விவரங்களை எல்லாம் கேட்டுக்கொண்ட மதிவாணனும் வாசுகியும்,
“எவ்வளவு போடறாங்கன்னு எல்லாம் சொல்லிட்டாங்களா? அதை பேசாம பேசியாச்சுன்னு சொல்றீங்க?…” என்றனர் இருவரும்.
“அதுவும் நம்ம வசதிக்கு ஏத்த மாதிரி இருந்தா செய்முறையில குறை எதுவும் இருக்காது. நாளைப்பின்ன எந்த நொச்சுபிச்சும் இல்லாம இருக்கும்ல. பார்த்துக்கோங்க…” என்றார் வாசுகி.
மதிவாணனும் வாசுகியும் அறிவுரை சொல்லாததை போல தங்கள் பக்கம் நடந்த சில திருமணங்களை பற்றி உதாரணத்திற்கு சொல்ல சொல்ல பூங்காவனத்தை போல அமைதிகாக்க முடியாமல் யமுனா கடுப்பாகிவிட்டார்.
“அவங்க பொண்ணுக்கு அவங்க விருப்பப்பட்டதை செய்யட்டும். அவங்கக்கிட்ட கேட்டுவாங்க நாம யாரு? அவங்க சம்பாத்தியம். அவங்க தான் அதை முடிவு பண்ணனும். பெத்தவங்களுக்கு தெரியாதா பிள்ளைக்கு என்ன செய்யனும்னு…” என்று யமுனா சொல்லிவிட,
“ம்மா நீங்க இதுவரைக்கும் எதுவும் கேட்கல தானே?…” என்றான் கதிர்.
மகன் இப்படி கேட்டதும் யமுனாவிற்கு இப்போது திக்கென்று ஆனது. கோபக்காரன், படக்கென்று வெளியேறு என சொன்னாலும் ஆச்சர்யமில்லை என்பதால் மகனை பார்வையால் எதுவும் பேசாதே என்று சைகை செய்தார்.
தானென்றால் சிரித்துக்கொண்டே எப்படி பேசவேண்டுமோ பேசிவிடலாம். இதுவே மகன் என்றால் முகத்திற்கு நேராகவே சொல்லிவிடுவான்.
அவனை இழுக்காதவரைக்கும் அமைதி தான் அவன். தேவை இல்லாமல் இப்படி பேசினால் பொறுமை காப்பவன் அல்லவே.
“அதெதுக்குப்பா நான் பேசிட்டு? நான் ஒத்த வார்த்தை கேட்கலையே. ஏன் உனக்கு தெரியாதா அம்மாவை பத்தி…” என்றவர் கண்ணை மூடி அவனை பேசாதே என்றவர்,
“நமக்கென்ன ஒன்னுமில்லாமலா இருக்குது வாசுகி? என் வீட்டுக்கு வரப்போற மருமக பொட்டு தங்கமில்லாம வந்தாலும் என் மகனுக்கு பிடிச்சா மனசார ஏத்துக்குவேன். ஏன் என்னால அவளுக்கு செஞ்சு போட முடியாதா? ரெண்டு மருமகளுக்கும் எப்ப இருந்தோ நான் சேர்க்க ஆரம்பிச்சுட்டேன்…”
“அப்பறம் இந்த வரதட்சனை கேட்டு அவங்க குடுக்கற இடத்துல நாங்களும் இல்லை. பொண்ணோட இடமும் ரொம்ப தங்கம். அவங்க மனசுக்கு பொண்ணை குடுத்தாலே போதும். இந்த நகையும், பணமும் பெருசுன்னு நினைக்கிறங்கவளுக்கு தான் பெருசு….”
“என் மகன் சம்பாத்தியத்துல தங்கமா இழைச்சிட மாட்டானா? அம்புட்டுக்கா நான் என் புள்ளையை வளர்த்திருக்கேன்?. ரெண்டு பிள்ளைகளும் தானா உண்டாக்க நினைக்கிற பசங்க. குடுக்கறதை எதிர்பார்க்கற பசங்க இல்லை…”
பெருமை தான். அதனை பெருமை பேசும்போது யமுனாவின் வார்த்தைகளில், முகத்தில் இருந்த தன்னம்பிக்கையில் வாசுகி, மதிவாணன் முகத்தில் ஈயாடவில்லை.
ஏன் தான் இதில் தலையிட்டோம் என்பதை போல நினைக்க வைத்துவிட்டார் யமுனா.
ஆனால் எந்த நேரத்தில் சொன்னாரோ? யமுனாவின் வாய்முகூர்த்தம் அந்த நொடி தேவதைகள் தாதஸ்து கூறிவிட நகைகள், சீர்வரிசைகள் இன்றி தான் அவரின் வீட்டிற்கு வந்தாள் தாமாரை.
பூங்காவனம் யமுனாவை ஒரு பார்வை பார்க்க ‘நானா வாய திறக்கலை. என் வீட்டை பேசினா சும்மாவா இருப்பேன்?’ என்பதை போல யமுனாவும் கழுத்தை வெட்டிக்கொண்டார்.
வந்தவர்களை மனதார கவனிப்பதில் அவர் எந்த குறைவும் வைத்துவிடவில்லை. ஆனால் வந்தவர்கள் பேச்சில் தொனித்த நக்கலும், நையாண்டியும், இளக்கார வார்த்தைகளும் என யமுனாவை சீண்டிவிட்டது.
‘இப்ப கம்முன்னு கிட. மதிச்சு கூப்பிட்டா என்னலாமோ பேசிட்டு இது தேவையா?’ என்பதை போல சிரித்துக்கொண்டே தான் நின்றிருந்தார் யமுனா.
அதன் பின் பூங்காவனம் தான் சூழ்நிலையை இலகுவாக்கினார். மதிவாணனிடம் பேச்சுக்கொடுக்க இடையிடையே கதிரையும், தர்ஷனையும் உடன் இழுத்துக்கொண்டார் பேச்சில்.
சற்று நேரத்திற்கெல்லாம் தாமரையின் குடும்பத்தினர் அனைவரும் வந்துவிட்டார்கள் கதிர் வீட்டிற்கு.
வந்தவர்கள் பிரமிக்கும் வண்ணம் அப்படி ஒரு கவனிப்பு தான். விருந்தும் அமர்க்களப்பட்டது.
கையோடு ஜோசியரும் வந்துவிட்டார் நாள் குறிக்கவென்று. கதிர் இதை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.
நாள் குறிக்கவெல்லாம் நாளாகும் என அவன் நினைத்திருக்க நாள் குறித்து திருமணம் இன்னும் சரியாய் ஒருமாதத்தில் என்றும் குறித்துவிட்டார்கள்.