மறுவீடு செல்வதற்கு அழைத்து செல்ல சரசுவும் அவர் கணவர் சங்கரும் வந்து முறைப்படி அழைக்க கதிரவனும் எழில்விழியும் அவர்களுடன் மதுரைக்கு கிளம்பினர்.
எழில்விழி எடுத்து வைத்திருந்த ரெண்டு பெரிய பைகளை பார்த்த கதிரவன்,
“ ஏன் விழி போயிட்டு ரெண்டு நாளுல நாம திரும்பி வறோமா இல்ல நீ அப்படியே அங்கேயே இருக்க போறியா???…” என கேட்டவனின் குரலில் இருந்த அழுத்தத்தில்
“ என்னங்க!!!….. நான் ஏன் அங்க இருக்க போறேன் ரெண்டு நாளுல வந்துரனும். அதுக்கு அடுத்த நாளு லீவு முடிந்து வேலைக்கு போனும் சொன்னிங்களே ” என புரியாது கேட்டவளிடம்
“ அது எல்லாம் தெளிவா தான் இருக்க ஆனா அப்புறம் எதுக்கு இவ்வளவு பெரிய ரெண்டு பை. அதுல என்ன வச்சுருக்க??? ” என கேட்டவனிடம்
“ போட்டுக்க டிரஸ் தாங்க ரெண்டு நாளைக்கு ”
“ இவ்வளவா!!!… ” என கதிரவன் ஒரு நிமிடம் அதிர்ந்துவிட்டான் பிறகு ஒன்றும் கூறாது இருவரும் அனைவரிடமும் விடைபெற்று கிளம்ப பயண பொதிகளை சரசும் சங்கரும் எடுத்து செல்ல ஒருவழியாக மதுரைக்கு செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தனர்.
அதில் இருவர் அமரும் இருக்கையில் ஜன்னல் ஓரம் எழில்விழியும் பக்கத்தில் கதிரவனும் அமர்ந்துகொண்டு வந்தனர்.
“ நீ எப்போவும் அமைதியா இல்ல என்கிட்ட மட்டும் அமைதியா இருக்கியா விழி ” என கேட்ட கதிரவனிடம் ஏதும் கூறாது புன்னகைக்க
“ என்ன சிரிக்குற?? ”
“ இல்லங்க. எனக்கு தெரியல. எனக்கு விவரம் தெரிஞ்ச நாளுல இருந்து வீட்டுல நான் கடைசின்னு என் பேச்ச யாருமே கேட்க மாட்டாங்க. அதோட என் அக்காக்கள் ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சு அவுங்க பிரச்சனைன்னு என் அப்பா அம்மா அதை சமாளிக்க நேரம் சரியா இருந்துச்சு.
இதுல என்கிட்ட உட்கார்ந்து சும்மா பேசிகிட்டு இருக்க மாட்டாங்க. எதாவது நான் சொன்னாலும் பேசுனாலும் உனக்கு ஒன்னும் தெரியாது சின்ன பிள்ளை பேசாம இருன்னு சொல்லிடுவாங்க. நானும் அதுக்கப்புறம் சரி பேசி என்ன ஆகப்போகுதுன்னு விட்டுட்டுட்டேன்.
அதோட எனக்கு ஒருத்தவங்கட்ட பழக நேரம் எடுக்கும். ரொம்ப தயக்கம் வேற. அப்புறம் எதாவது மனசு நோக்குற மாதிரி பேசிடுவாங்களோன்னு அமைதியாவே இருந்து அதுவே பழகிடுச்சு” என கூறி சிறு புன்னகை சிந்த
அந்த புன்னகையை ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்த கதிரவனின் பார்வையில் கன்னங்கள் சிவந்த எழில்விழி அவஸ்த்தையுடன்,
“ என்னங்க என்ன அப்படி பார்க்குறீங்க ??? ”
“ இல்ல சும்மா நீ பேசும்போது உன்னோட அந்த பெரிய விழியும் கதை பேசுதா அது எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு ” என வெளிப்படையாக கூறிய கதிரவனின் பேச்சில் மேலும் சிவந்து வெட்கத்தை மறைக்க ஜன்னல் புறம் திரும்பி வேடிக்கை பார்க்க ஆரம்பிக்க சிறுது நேரத்தில்,
என பேருந்தில் கேட்ட பாட்டிலும் ஜன்னல் காற்றிலும் தூங்கி ஜன்னல் கம்பியில் மோதி கொள்ள வேகமாக எழுந்து நெற்றியை தேய்த்துவிட்டு மறுபடியும் உறங்க ஆரம்பித்தவள்,
மீண்டும் கம்பியில் மோத பார்க்க ஜன்னல் கம்பிக்கும் எழில்விழியின் நெற்றிக்கும் தனது கைவிரல் வைத்து இடிக்காமல் தடுத்து அவளின் தலையை தனது தோளில் சாய்த்துக்கொண்டான் கதிரவன்.
ஏனோ அந்த பயணம் கதிரவன் மனதில் ஒரு வித இதத்தை பரப்ப மனமும் சந்தோசமாக இருக்க அவனும் அப்படியே கண்ணயர்ந்தான்.
மாமியார் வீடு விருந்து தடபுடலாக நடைபெற கதிரவன் அன்னலெட்சுமி வெங்கடேசன் கவனிப்பில் சற்றே திணறிவிட்டான். சமையல் அனைத்தையும் செய்த அன்னலெட்சுமி மருமகனுக்கு பரிமாற பயந்துகொண்டு மகளையே பரிமாற சொன்னார்.
“ ஏன்மா நீங்க பரிமாற வேண்டியதுதானே?? ”
“ அட!!… இவ ஒருத்தி. நீ பரிமாறுனா கேட்டு வாங்கி சாப்புடுவாரு. நான் பரிமாறுறப்போ சங்கடப்பட்டு ஒழுங்கா சாப்புடலைனா….. ”
‘ யாரு உங்க மருமகன் சங்கடப்படுவாரு ’ என மனதில் எண்ணிக்கொண்டு தன் தாயை பார்க்க,
“ அதோட எழிலு உன் புருஷன் கிட்ட போனாலே ஏதாவது கேள்வி கேட்பாரோன்னு பயமா இருக்கு. நேத்து அப்படித்தான் மீனை பொருச்சு வைக்குறேன். இது செக்கு எண்ணைல செஞ்சதான்னு கேட்குறாரு. நான் பதட்டத்துல இல்ல கடையில வாங்குன எண்ணைன்னு சொன்னவுடனே மனுஷன் எண்ணைய பத்தி நல்லது கேட்டது சொல்றேன்னு சொல்லி உங்க அப்பாவுக்கு இல்லாத ஒரு வியாதி கொழுப்பு தான். அதுவும் வந்துடும் போல ” என அன்னலெட்சுமி கூற ஏனோ கணவனை விட்டு குடுக்க மனது இல்லாது,
“ அம்மா அங்க வீட்டுல நல்லெண்ணெய் கடலெண்ணெய் ரெண்டும் செக்கெண்ணை தான் அதான் கேட்டுருப்பாங்க” என எழில்விழி கூற
“ அதோட நீங்க வறீங்கன்னு உங்க அப்பா கிலோ அம்பது ரூபாய்க்கு அரிசி வாங்கிட்டு வந்தாரு நானும் பூ மாதிரி வடிச்சு போட்டா. இது என்ன சக்கை மாதிரி இருக்கு. இதுல ஒரு சத்தும் இருக்காது அத்தை. அதுக்கு நீங்க ரேஷன் அரிசிலையே சமைச்சுருக்கலாம். அதுல ஆரோக்கியமாது இருக்கும்ன்னு சொன்னாரு ” என மீண்டும் அன்னலெட்சுமி புலம்ப
“ ம்மா அங்க வீட்ல வீட்டரிசி சாப்டுறவங்க அதான் அப்பிடி சொல்லிருப்பாங்க. விவசாயம் பண்ணி அந்த அரிசியை சாப்பிட்டவங்களுக்கு இது பிடிக்காதுல நீங்க கண்டுக்காதீங்கம்மா ” என கூறிய எழில்விழியிடம்
“ பார்த்தியா உன் புருஷனை பத்தி உனக்கு தான் தெரியுது. அதான் சொல்றேன் நீதான் பக்குவமா பரிமாறனும் ” என கூறிய அன்னலெட்சுமியிடம் மறுத்து கூறாது சரிம்மா என கூறி அன்று மதியம் கதிரவனுக்கு எழில்விழி பரிமாற,
“ என்ன அத்தை மாமாவை எல்லாம் காணோம். சாப்பிட வரல??? ” என கேட்ட கதிரவனிடம்
“ இல்லங்க அப்பா மாத்திரை போட்டாங்க. கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடுவாங்க ”
“ ஓ!!… சரி… சரி. நேத்துதா கறி மீனு நண்டுன்னு எல்லாம் பண்ணிருந்தாங்க இன்னைக்கு என்ன மறுபடியும் அசைவம். பேசாம இன்னைக்கு சாம்பாரை வச்சுருக்கலாம்ல ”
“ விருந்துல அதான் ”
“ என்ன அதான்??… நாம மட்டும் தானே இருக்கோம். நமக்குள்ள என்ன. வயசான காலத்துல அவுங்களுக்கு கஷ்டம்தானே. என்னமோ போ ” என கூறிக்கொண்டு சாப்பிட்டு எழுந்துவிட,
கதிரவனின் இந்த பரிமாணத்தில் கன்னத்தில் கை வைத்து அமர்ந்துவிட ‘ இவரை புரிஞ்சுக்கவே முடியல ’ என வழக்கம் போல புலம்பிக்கொண்டு இருந்தாள் எழில்விழி.
மறுவீடு விருந்து முடிந்து எழில்விழி கதிரவனுடன் ஊருக்கு கிளம்ப எல்லாம் எடுத்துவைத்து கொண்டிருக்க,
“ விழி ” என கதிரவன் அழைக்க
“ என்னங்க ”
“ கிளம்பலாமா??? ”
“ ஹ்ம்ம் போகலாங்க ” என கூறி அன்னலெட்சுமியிடமும் வெங்கடேஷுடமும் விடை பெற்று பேருந்து நிலையத்திற்கு செல்ல பைகளை எடுத்துக்கொண்டு சங்கரும் பஸ் ஏற்றி விட சென்றார்.
அம்மா அப்பாவை பிரிந்து வர கவலையில் கலங்கிய கண்களை துடைத்துக்கொண்டு வந்த எழில்விழியிடம்,
“ இங்க பாரு நான் என்ன உன்னைய கொடுமை படுத்தவா கூட்டிட்டு போறேன். என்கூட வர எதுக்கு இப்போ இப்படி அழற ” என கதிரவன் கேட்க
“ இல்லங்க…. இல்ல… அது…. அம்மா… ” என மீண்டும் கலங்கிய கண்களை துடைத்தவளிடம்
“ இங்க பாரு விழி நான் பார்க்குறது போலீஸ்காரன் உத்தியோகம். என்னால நினைச்ச நேரம் உன்னைய கூட்டிகிட்டு எங்கையும் சுத்த முடியாது. இதுல நீ வேற சும்மா சும்மா கண்ண கசக்கிட்டு இருக்காத. என்னால எப்போ இங்க மதுரைக்கு கூட்டிட்டு வறேனோ அப்போதான் வர முடியும். அதுவரைக்கும் அம்மா வீடுன்னு என்கிட்டே வாய திறக்காத ” என சிடுசிடுப்புடன் கதிரவன் கூற சரி எனும் விதமாக தலையை ஆட்டிவிட்டு தனது சேலை முந்தானையால் கண்ணீரை துடைத்துக்கொண்டே வந்தாள்.
சரியாக பேருந்து நிலையத்திற்கு அருகில் செல்லும் போது ஒரு போட்டோ கடையில் எழில்விழியின் போட்டோ முகப்பு கண்ணாடியில் இருப்பது போல தோன்ற அருகில் இருந்த சங்கரிடம்கேட்க எண்ணி,
“ அண்ணா ” என அழைக்க
“ என்ன தம்பி??? என சங்கர் கேட்க ”
“ அதோ அந்த கடையில் முன்னாடி கண்ணாடியில் நிறைய போட்டோ இருக்குதே அதுல விழி போட்டோவும் இருக்க மாதிரி இருக்கு ”
“ அட ஆமா தம்பி. இந்த கடை எழிலோட பெரியப்பா பையன் கடைதான். இவன்தான் கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்க எழிலை போட்டோ எடுத்தான். அப்புறம் அந்த போட்டோ நல்லா இருக்கவும் இந்த போட்டோ கடையில் முகப்புல சின்னபிள்ளைங்க போட்டோ கல்யாண போட்டோ ஒட்டிவைப்பாங்கல அது மாதிரி எழில் போட்டாவையும் வச்சுருக்கான். மாமா ஒன்னும் சொல்லல ” என சங்கர் கூற
அதற்கு ஒரு பதிலும் கூறாது,
“ சரி நீங்க முன்னாடி எழிலை கூட்டிட்டு போய் எங்க ஊருக்கு போற பஸ்ல உட்காரவச்சுட்டு கீழ நில்லுங்க. நான் பத்து நிமிசத்துல வரேன் ” என கூறி அவர்களை அனுப்பிவிட்டு,
பத்து நிமிடம் சென்று சங்கரிடம் விடைபெற்று எழிலின் அருகில் அமர கதிரவனின் சட்டை பையில் கடையில் இருந்த எழில்விழியின் போட்டோ இருந்தது.
அதனை கண்டு அரண்ட எழில்விழி ‘ இதற்கு திட்டுவாங்க போறோம் ’ என உடல் நடுங்க கதிரவனை காண அவன் எழில்விழியின் முகம் பயத்தில் வெளிறி இருப்பதை பார்த்து,
“ என்ன ஏன் ஒரு மாதிரி இருக்க?. உடம்பு சரி இல்லையா???…. ” என கேட்ட கதிரவனிடம்
“ இல்லங்க அது இந்த போட்டோ….. ” என அவன் சட்டை பையில் இருந்த போட்டோவை காட்ட
“ ஆமா போட்டோ. உன் போட்டோ தான். உன் பெரியப்பா மகன் கடையில இருந்தது ”
“ அதை வாங்கிட்டு வந்துட்டீங்களா???? ”
“ ஹ்ம்ம் என் பொண்டாட்டி போட்டோ இங்க இருக்க கூடாதுன்னு சொல்லி வாங்கிட்டு வந்துட்டேன். இதுல உனக்கு என்ன பிரச்சனை ”
“ எதுக்கு உன்னைய திட்டனும். கல்யாணத்துக்கு முன்னாடி உன் அப்பாவுக்கு தெரிஞ்சு வச்சுருக்காங்க. இப்போ எனக்கு பிடிக்கல அதான் வாங்கிட்டு வந்துட்டேன். இதுல உன்னைய என்ன சொல்ல போறேன் ” என கூறிவிட்டு போட்டோவை பையில் வைக்க சொல்ல எழில்விழி குழம்பித்தான் விட்டாள்.
‘ என்ன வாழ்க்கைடா இது!!!….. எப்போ என்னனு பதட்டத்துலையே நமக்கு வாழ்க்கை போயிடும் போல. இவரு எதுக்கு கோச்சுக்குறாரு எதுக்கு சாதாரணமா இருக்காருன்னு ஒரு மண்ணும் புரியல. இப்பவே எனக்கு கொண்டே கொண்டே அடிக்குது……’ என மனதில் புலம்பிக்கொண்டு கண்ணை மூடி உறங்கிவிட்டாள்.
கதிரவனின் ஊரும் வந்துவிட பேருந்தில் இருந்து இறங்கி கதிரவனும் எழில்விழியும் நடந்து வர ஏனோ கதிரவனின் முகம் ஒரு பத்து நிமிசமாக கடுகடுவென இருப்பதாக எழில்விழிக்கு தோண,
‘ என்ன இவுக முகம் இப்பிடி சிடுசிடுன்னு இருக்கு. போட்டோ விஷயம் ஒன்னும் இல்லைன்னு சொல்லிட்டாங்க. அப்போ என்னவா இருக்கும்???’ மனதில் எண்ணிக்கொண்டு வேகமாக பையை தூக்கி கொண்டு கதிரவனின் அருகில் சென்று,
“ என்னங்க ” என அழைத்தவளிடம் கதிரவன் எதுவும் கூறாது அமைதியாக வர
‘ ரைட்டு சாமி மலையேறிருக்கு. ஆனா எதுக்குன்னு தெரியலையே ’ என எண்ணிக்கொண்டு
“ என்னங்க எதுவும் கோவமா இருக்கீங்களா?? ” என கேட்டவளிடம்
“ இது என்னது?? ” என தனது கையில் இருந்த பையை காட்டி கேட்க
“ பை ” என கூறியவளிடம்
“ அது தெரியுது. உனக்கு பை தூக்க சேவகம் பண்ணத்தான் உன்னைய கட்டி கூட்டிட்டு வந்தேனா. போகும் போது உன் அக்கா மாமா வந்தாங்க ரெண்டு பை கொண்டு போன. இப்போ நாம மட்டும் தான வரோம். அப்போ உன் நினைப்பு என்ன இவன் வரான்ல இவன் தூக்குவான்னு தானே என எறிந்துவிழுந்த கதிரிடம் “
‘ ஐயோ என் சாமி நாம இந்த கோணத்துல யோசிக்கவே இல்லையே ’ என எண்ணிக்கொண்டு கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டு தன் வலது கையில் இருந்த பையை இடது கைக்கு மாற்றி விட்டு வேகமாக கதிரவனிடம் இருந்த பையை வாங்க போக,
“ வேணா விடு. என்ன இப்போ நீ ரெண்டு பையையும் கொண்டு போவ. ஊருக்குள்ள பொண்டாட்டி கஷ்டப்பட்டு பைய தூக்கிட்டு போறா. இந்த மைனர் ஒன்ன வாங்க கூடாதுன்னு சொல்லணும் அதானே ” என கேட்ட விதத்தில் வாயில் கைவைத்து எழில்விழி பாவமாக பார்க்க
“ என்ன முழிக்குற இதுக்கு தான் கிளம்பும் போதே உன்னால என்ன முடியுமோ அதை மட்டும் எடுத்துட்டு வந்துருக்கணும் ” என கடிந்துவிட்டு முன்னே நடக்க இப்பொழுது கையில் இருந்த பையைவிட மனது கனக்க கண்ணீரை துடைக்க தோணாது மெதுவாக அவனை பின் தொடர்ந்தாள்.