கதிரவனின் கேள்வியில் பயந்து நடுங்கிகொண்டு கண்ணீர் விட்ட எழில்விழியை கண்ட ஸ்வாமிநாதன்,
“ டேய்!!…. நிறுத்துடா உனக்கு வேணாம்ன்னா வேணாம்ன்னு சொல்லு. அத விட்டுட்டு பெத்தவங்க முன்னாடி அவுங்க மகளை எதோ குற்றவாளி மாதிரி விசாரிக்குற. அவங்க மனசு எவ்வளவு கஷ்டப்படும் யோசிக்க மாட்டியா???…. ” என கதிரவனிடம் கத்த அதில் கோவம் கொண்டு அங்கிருந்து கதிரவன் வெளியே சென்றான்.
“ மச்சான், தங்கச்சி நீங்க எதுவும் நினைச்சுக்காதீங்க. அவன் இப்படித்தான் சட்டுன்னு கோவமா பேசுவான். ஆனா மனசுல எதுவும் இருக்காது. அவன் கோவப்பட்டாலும் அது நல்லதுக்காத்தான் இருக்கும். அவன் நீங்க கஷ்டப்படகூடாதுன்னு இப்படி கத்துறான். நீங்க மனசுல எதுவும் வச்சுக்காதீங்க ” என கூறிய ஸ்வாமிநாதனிடம்
“ ஐயையோ!!!…. மச்சான் எனக்கு புரியுது. இந்த காலத்துல யாரு இப்படி மாமனார் வீட்டுல செய்றத வேணாம்ன்னு சொல்லுவாங்க. அது எல்லாம் புரியுது மச்சான். ஆனா நாங்க மாப்பிளை கிட்ட நேத்து போனிலையே கேட்டுருக்கலாம். இப்படி எங்க மகளுக்கு தேவை இல்லாம பிரச்சனை வந்துருக்காதுல அதான் மனசுக்கு ஒரு மாதிரி இருக்கு ” என வெங்கடேசன் கூற
“ ஐயோ என்ன மச்சான் நீங்க புருஷன் பொண்டாட்டி சண்டை எல்லாம் சர்வ சாதாரணம். நீங்க அது எல்லாம் மண்டைல ஏத்திக்காதிங்க. அது எல்லாம் என் மருமக சமாளிச்சுடும். என்ன எழில்மா????… ” என கேட்ட ஸ்வாமிநாதனிடம் எதுவும் கூறாது கலங்கிய விழிகளுடன் திருதிருவென முழிக்க,
“ பார்த்திங்களா நீங்க கலங்கவும் மருமக பொண்ணும் பயப்புடுது தைரியமா இருங்க. அவன் அவசர அவசரமா தனியா வந்ததுக்கு காரணமே எழில் அங்க கஷ்டப்படுதுன்னு சொன்னே உடனே ஒரு வாரத்துல வீடு பார்த்து கூட்டிட்டு வந்துட்டான் ” என ஸ்வாமிநாதன் கூற,
தெய்வானையோ, ‘ அப்போ அந்த கருப்பு ஆடு நீதானாயா ’ என மனதில் பொருமலுடன் நிற்க
எழில்விழியோ, ‘ அப்பிடியா!!… ஆனா நம்ம மாமியார் வேற எதோல சொன்னாங்க இதுல எது உண்மை ’ என புரியாது அமைதியாக அங்கு நடப்பதை பார்க்க
“ என்ன தங்கச்சி??…. நீயாவது சொல்லுமா மச்சான் கிட்ட. இதுக்கு எல்லாம் கவலைபட்டா எப்பிடி??… ” என ஸ்வாமிநாதன் அன்னலெட்சுமியிடம் கூற,
மனதில் வருத்தமும் மகள் வாழ்க்கையை நினைத்து பயம் ஏற்பட்டாலும் வெளியே காட்டாது,
“ அதான் அண்ணே இவ்வளுவு தூரம் சொல்றங்கள்ல நீங்க விசனப்படமா இருங்க. இப்போ மருமகன் என்ன சொல்லிப்புட்டாரு சாமான் வேணாம்ன்ன்னு தானே சண்டை. நாம வாங்கி குடுக்க வேணாம். முத அந்த காசை வாங்குன இடத்துலயே கொடுப்போம் விடுங்க ” என கூறி வெங்கடேசனை சமாதானம் படுத்த அப்பிடியே இரவு வரை அவர்கள் உரையாடல் செல்ல அதில் கலந்து கொள்ளாதது தெய்வானையும் எழில்விழியும் தான்.
தெய்வானைக்கு அவர்களுடன் பேச கடுப்பு அதனால் அமைதியாக இருக்க எழில்விழிக்கோ அடுத்து கதிரவன் வந்தவுடன் எப்பிடி சமாதானம் செய்வது என்ற சிந்தனையில் இருந்தாள்.
ஒரு வழியாக இரவு வந்த கதிரவன் மதியம் எதுவும் நடவாதது போல எழில்விழியை தவிர அனைவரிடமும் சாதாரணமாக பேச அன்னலெட்சுமியும் வெங்கடேசனும் மருமகனிடம் தங்கள் வருத்தத்தை ஒதுக்கி வைத்துவிட்டு சாதாரணமாக பேசினர்.
பின் அனைவரும் சேர்ந்து இரவு உணவை உண்டு முடித்து உறங்க ஆயத்தமாக கதிரவன் மறுநாள் போட வேண்டிய சீருடையில் பட்டன்களை மாட்டிக்கொண்டிருக்க எழில்விழி அடுக்கலையை சுத்தம் செய்துகொண்டிருக்க,
தெய்வானை மதியம் போல உறங்க அந்த ஒற்றை படுக்கை அறைக்குள் செல்ல அவரை கண்ட ஸ்வாமிநாதன் பல்லை கடித்துக்கொண்டு யாரின் கவனத்தில் பதியாதவாறு தெய்வானையிடம் சென்றவர்,
“ ஏய்!!… உனக்கு கொஞ்சமாது அறிவு இருக்கா??… ” என மெதுவாக கோபத்துடன் கேட்ட ஸ்வாமிநாதனின் திடீர் கோவத்தில் ஒன்றும் புரியாது,
“ என்னங்க??.. ” என வினவிய தெய்வானையிடம்
“ உன்னைய தான் கேட்டேன் அறிவு இருக்கா உனக்கு ” என மீண்டும் கேட்ட ஸ்வாமிநாதன் மேல் காலையிலிருந்து இருந்த கோவம் விசிறப்பட
“ ஹ்ம்ம் அறிவு இருந்தா உங்களுக்கு எதுக்கு வாக்கப்பட போறேன் ” என தெய்வானையும் எரிந்து விழ எப்பொழுதும் தனக்கு எதிரே நின்று பேசவே அஞ்சும் மனைவி பேசியதை கேட்டு கடுப்பான ஸ்வாமிநாதன்,
“ ஏய்!!… என்னடி வாய் ரொம்ப நீளுது ”
“ ஹ்ம்ம் நான் என்ன பண்ணுனே நீங்க எதுக்கு இப்படி வந்த இடத்துல சண்டைக்கு வரீங்க ” என தெய்வானையும் பதிலுக்கு பேச
“ பின்ன என்ன இங்க இருக்குறதே ஒரு படுக்கை அறைதான். மதியம் நடந்த சண்டையில உன் மகன் மருமகளை தவிர எல்லார்கிட்டயும் பேசுறான். பாவம் எழிலு உன் மகன் மூஞ்சியவே பார்த்துகிட்டு இருக்குது. அவன் கண்டுக்கவே மாட்டேன்னு நிக்குறான்.
இதுல நீ இங்க வந்து படுக்குற அதுங்க சின்ன சிறுசுங்க எதாவது பேசி சமாதானம் ஆக வேணாமா. முதல்ல வெளிய வந்து படு. இதே இது உன் மக மருமகன் சண்டை போட்டுருந்தா இந்நேரத்துக்கு உன் மகள்கிட்ட சமாதானம் பண்ண சொல்லி பேசியிருக்க மாட்ட. மாமியாரான மட்டும் எந்த புளியமரத்து பேய்யி உன்னைய புடிச்சுக்குச்சோ தெரியல ” என கடிய
“ நானா உங்க மகனை சண்டை போட சொன்னே. உங்க மருமகளை மூஞ்சிய தூக்க சொன்னே. தேவை இல்லாம என்கிட்டே வம்புக்கு வராதீங்க சொல்லிட்டேன். எனக்கு தூக்கம் வருது நான் இங்கதான் படுப்பேன் ”
“ அடியே!!…. ” என ஸ்வாமிநாதன் எதோ கூற வருகையில் அங்கு வந்த கதிரவன்
“ என்னப்பா நீங்க ரெண்டும் பேரும் தூங்கலை??… ” என கேட்க
“ இதோ தூங்க போறோம் கதிரு நானும் உன்ன அம்மாவும் போர்வை தலையணை எடுக்க வந்தோம். வா தெய்வா நாம ஹால்ல தூங்கலாம் ” என கூறி கையை பிடித்த ஸ்வாமிநாதனின் கையை உதறிய தெய்வானை
“ நான் இங்க தான் படுக்க போறேன் நீங்க போங்க வெளிய ” என கூறி கட்டிலில் படுத்த தெய்வானையை கண்டு பல்லைக்கடித்துக் கொண்டு ஸ்வாமிநாதன் எதோ கூற வர,
“ அப்பா என்ன இப்போ அம்மா இங்க படுக்கட்டும். அவுங்க இங்க படுக்க பிரிய படுறாங்க போல விடுங்கப்பா காலையில வெள்ளன முத பஸ்ல போகணும்ல ” என கூறி கதிரவன் நகர
“ நான் இன்னும் ஒருவாரம் இங்க இருந்துட்டு தான் ஊருக்கு வரேன் நீங்க போங்க ” ஸ்வாமிநாதனிடம் தெய்வானை கூற
“ ஏதே!!!.. ஒரு வாரம??… எதுக்கு ஒழுங்கா நாளைக்கு என்கூட ஊரு வந்து சேரு” என ஸ்வாமிநாதன் கூற
“ ஏன் நான் கொஞ்ச நாலு என் மகன்கூட இருக்க கூடாதா ” என தெய்வானை கேட்க
‘ இங்க இருந்து சின்ன சிறுசுங்க சண்டையை பெருசா ஆகாம நீ விடமாட்ட ’ என ஸ்வாமிநாதன் மனதில் எண்ணிக்கொண்டு
“ ஹ்ம்ம் தாராளமா இரு யாரு வேணாம்ன்னு சொன்னது . உனக்கு எங்க புருஷன் அக்கறை எல்லாம் இருக்க போது. அவன் சாப்பாட்டுக்கு என்ன செய்வான் நம்ம கட்டிவச்ச மூத்த மருமகள் தவிச்ச வாய்க்கு தண்ணிகூட குடுக்க மாட்டாளே அப்பிடின்னு உனக்கு அக்கறை இருந்தா இங்க இருப்பேன்னு சொல்லுவியா நீ இரு நான் எக்கேடு போனா உனக்கு என்ன ” என ஸ்வாமிநாதன் பேச எப்பொழுதும் போல சாரதாவை பேசியவுடன்,
“ ஹ்ம்ம் எங்க இருந்தாலும் என் அண்ணா மகளை இழுக்கலைன்னா உங்களுக்கு தூக்கம் வராது. வரேன் காலையில வந்து தொலைக்குறேன் ” என முணுமுணுப்புடன் சொல்ல
“ சரிதான் ” என ஸ்வாமிநாதனும் புன்னகையுடன் வெளியே சென்றார்.
வந்ததில் இருந்து முகம் குடுத்து பேசாத கணவரை கண்டு எழில்விழிக்கு நெஞ்சம் அடைக்க எப்பிடியாவது பேச எண்ணி பக்கத்தில் போகும் போது எல்லாம் ஒரு முறைப்புடன் நகரும் கதிரவனிடம் என்ன சொல்லி சமாதானம் செய்வது என அறியாது மனதில் பெரிய கலவரத்துடன் இரவு நேர தனிமைக்காக காத்திருக்க,
அதற்கும் வழி இல்லாது தெய்வானை அறையில் படுப்பதை பார்த்து, ‘ ஹம்ம்ஹும்ம் இன்னைக்கு உனக்கு நேரமே சரி இல்ல எழிலு ’ என எண்ணி கலங்கி கண்களை யாருக்கும் காட்டாது அமைதியாக ஹாலில் தனது அன்னையின் அருகில் படுத்து கொண்டாள்.
ஆனால் மனம் முழுதும் நாளை அனைவரும் சென்றவுடன் எப்பிடி தனது கணவனை சமாளிக்க போறோம் என்ற சிந்தனையுடன் உறங்காமல் இருக்க கதிரவனோ படுத்த சில நிமிடங்களில் உறங்கிவிட்டான்.
மறு நாள் விடியலில் அன்னலெட்சுமியும் வெங்கடேசனும் கிளம்பிவிட சிறிது நேரத்தில் தெய்வானையும் ஸ்வாமிநாதனும் சென்றனர். அதுவும் கிளம்பும் நேரம் அன்னலெட்சுமி எழில்விழியிடம் ஆயிரம் அறிவுரைகள் கூறி எழிலை ஒரு வழி ஆக்கிவிட்டு செல்ல அடுத்து தெய்வானையும் தனது மகனை பற்றி கூறுகிறேன் என அவரும் அவர் பங்குக்கு ஒரு வழியாக்கி விட்டார்.
எழில்விழியோ காலையில இருவருக்கும் உணவை தயாரித்து கணவனை உணவு உண்ண அழைக்க கதிரவனும் எதுவும் கூறாது அமைதியாக உணவு உண்ண அமர,
“ என்ன எதுவும் கோவமா கூட பேசமாட்டேங்குறாரே ” என புலம்பலுடன் இட்லியை வைத்து சாம்பாரை ஊற்ற கதிரவனும் அமைதியாக உண்டு கொண்டிருந்தான்.
அதனை கண்டு தனது தயக்கத்தை உடைத்து மெதுவாக,
“ என்னங்க ” என அழைக்க
“ ஹ்ம்ம் ”
“ அது… அது… சாப்பாடு நல்லா இருக்கா??? ” என கேட்க பதில் கூறாது கதிரவன் ஒரு வாய் உணவை அவளின் வாயருகே கொண்டு சென்றான். அதனை புரியாது நோக்கிய விழியின் விழியின் பாஷையில் கட்டுண்டவன் சிறு புன்னகையுடன் ,
“ நல்லா இருக்கானு கேட்டல்ல அதான் நீயே சாப்பிட்டுப்பாரு ” என கூறி உணவை குடுக்க அதில் அதிர்ந்து விழித்து உணவை வாங்கி கொண்டவளுக்கு ஏனோ அந்த உணவின் சுவை பன்மடங்காக அவளின் மனதையும் நிறைத்தது. ஒன்றும் கூறாது இருந்தவளிடம்,
“ என்ன நல்லா இல்லையா??? ” என கேட்க ஹம்ம்ஹும் என தலையை ஆடியவளிடம்
“ என்ன மண்டையை ஆட்டுற ” என மீண்டும் சிறு புன்னகையுடன் கூறி உணவை முடித்து வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தான் கதிரவன்.
கதிரவனின் புன்னகையை கண்டவுடன் சிறு தைரியம் வர மெதுவாக கதிரவனின் பின்னால் சென்று நின்றவள்,
“ என்னங்க ” என மீண்டும் அழைக்க
“ இப்போ என்ன??… ” என திரும்பாமல் கேட்டவனிடம்
“ இல்ல….. நேத்து…. நான் இல்ல அப்பிடி…. ம்ப்ச்…. ” என எப்பிடி ஆரம்பிப்பது என புரியாது உளறியவளிடம் நெருங்கி சென்று அவளின் தோளின் மேல் கைவைத்தவன்
“ நேத்து நடந்ததை பத்தி பேசவந்தியா??… ” என மென் குரலில் கேட்க
“ ஹ்ம்ம் ” என தலையை அசைத்து
“ இல்ல தப்பு என்பேர்ல தானே உங்கள பத்தி தெரிஞ்சும்… ” என கூறி விழிகள் கலங்க பேசிக் கொண்டிருந்தவள் இமைகளில் கதிரவன் ஒற்றை முத்தம் வைக்க அதில் அதிர்ந்து பேச்சை நிறுத்தி விழி விரித்தவளிடம்,
“ என்ன சொல்லு எதோ பேசிகிட்டு இருந்த ” என மீண்டும் கதிரவன் கேட்க எதுவும் கூறாது அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தவளிடம்
“ என்ன முழிக்குற??… ” என கேட்க
“ இல்ல நீங்க… நீங்க…. கோவமா இருந்திங்க. நேத்து கூட என்கிட்டே பேசல. ஆனா இப்போ இப்போ… ” என எழில்விழி தயங்க
“ ஹ்ம்ம் இப்போ… இப்போ… ”
“ ம்ப்ச் ” என கதிரவனை பார்க்க வெட்கம் கொண்டு அவனின் மார்பில் சாய்ந்து கொண்டாள் கதிரவனின் விழி.
கதிரவனும் சிறு புன்னகையுடன் அவளை அணைத்துக்கொண்டு,
“ இங்க பாரு நேத்து உங்க யாரு மேலையும் தப்பு இல்ல ” என கூறியவனை கண்டு அதிசயத்து நிமிர்ந்து பார்த்தவளிடம்
“ நீ சும்மா சும்மா இப்படி உன் முட்டை கண்ணை வச்சு முழிச்சா நான் பேச வந்தத மறந்துடுவேன். பேசாம இப்படியே இரு ” என கூறி அவளை தன் மார்பிலே சாய்த்தவன்
“ இங்க பாரு விழி உங்க அம்மா அப்பா செய்றது சாதாரணமா எல்லாரும் செய்றது தான். ஏன் எனக்கு ரெண்டு அக்கா இருக்காங்க. நாங்களும் செஞ்சுருக்கோம் சரியா. அதுல தப்பு இல்ல. ஆனா நான் வேணாம்ன்னு சாதாரணமா சொல்லிருந்தா ஒன்னு வற்புறுத்துவாங்க இல்ல உன்கிட்ட கொடுப்பாங்க.
அப்பிடியும் இல்லைனா பின்னாடி அந்த பணத்தை எப்பிடியாவது நம்மகிட்ட குடுக்க பார்ப்பாங்க. அதான் உன்னைய சத்தம் போட்டேன். இனிமே உனக்கு செய்யணும்ன்னு அவங்க கஷ்டப்படவும் மாட்டாங்க கடனும் வாங்க மாட்டங்க சரியா ” என கூறியவனிடம் ஒன்றும் கூறாது விழிகள் பளபளக்க சிரிப்புடன் கணவனின் கன்னத்தில் முத்தம் வைத்து வெட்கத்தில் அறையை விட்டு வெளியே ஓடிவிட
கதிரவன் மனைவியின் இந்த செயலில் சிறு வெட்கம் வர புன்னகையுடன் கிளம்ப ஆரம்பித்தான்.
அங்கு அடுக்களைக்குள் சென்றவளோ,
“ ச்ச…. மடச்சி… அவுங்க இம்புட்டு நல்லவுங்களா இருக்காங்க. நீ சும்மா பயந்து பயந்து அவுங்கள கடைசி வரை புரிஞ்சுக்க மாட்ட போல ” என சிறு வெட்கத்துடன் தன்னையே திட்டிக்கொண்டிருந்தாள்.
அப்பொழுது அங்கு வந்த கதிரவன், “ விழி ” என அழைக்க,
தான் சற்று முன் செய்த செயல் நியாபகம் வர அது தந்த வெட்கத்தில் கணவனின் முகம் பார்க்காது,
“ ஹ்ம்ம் என்னங்க ” என கேட்ட எழில்விழியின் அருகில் வந்தவன்
“ நான் மதியம் சாப்பிட வர மாட்டேன் சாயங்காலம் தான் வருவேன். ஒரு அஞ்சு மணி போல. நீ தயாரா இரு படத்துக்கு போலாம் ” என கூறியவனை கண்டு எட்டாவது அதிசயமாக வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள் எழில்விழி.
“ என்ன நான் எது சொன்னாலும் ஏன் இப்படி முழிக்குறன்னு தெரியல. சரி தயாரா இரு எனக்கு தாமதம் ஆச்சுன்னா கோவம் வரும் பார்த்துக்க ” என கூறிய கணவனிடம் தலையை உருட்டியவள்.
கதிரவன் கிளம்பியவுடன் வேகமாக சாயங்காலம் கணவனுடன் வெளியே செல்ல எந்த சேலையை உடுத்தலாம் என ஓடி தனது அலமாரியை திறந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.