கதிரவன் மாலை படத்திற்கு அழைத்து செல்வதாக கூறியதில் இருந்து சந்தோஷத்தில் தலை கால் புரியாமல் சுற்றிக்கொண்டிருந்தாள் எழில்விழி.
அலமாரியை திறந்து,
“ ஹ்ம்ம் இந்த சிவப்பு.. இல்ல இந்த பச்சை ஹ்ம்ம்ஹும்….. இது ரெண்டும் வேணாம். ஹ்ம்ம் இந்த மஞ்சள். இதான் இப்போ கோவிலுக்கு கட்டிட்டு போனோம்ல. ஹ்ம்ம் இந்த மயிலப்பச்சை. இது செமையா இருக்கும்” என தனக்குள் பேசிக்கொண்டு ஒரு வழியாக மயில் பச்சை வண்ண பான்சி புடவையை நேர்த்தியாக கட்டிமுடித்து கண்ணாடியில் தன்னை பார்த்தவள்
“ ஹ்ம்ம் எழிலு செம்மயா இருக்குடி ஜிமிக்கி வச்சு தச்சு இந்த சட்டையை நம்ம வள்ளி அக்கா சூப்பரா தச்சுருக்கு. அம்மாகிட்ட சொல்லணும் இன்னும் தைக்காம இருக்க சட்டை துணியை வள்ளி அக்காகிட்ட குடுத்து இதேமாதிரி தைக்க சொல்லி ” என அவள் ஊரில் இருந்த தையல்கார பெண்ணை புகழ்ந்து கொண்டிருந்தவள்,
“ அச்சச்சோ இந்த கண்ணாடி வளையல் இதுக்கு பொருத்தமா இல்ல. வேற போடுவோம் ” என வேற வளையலை புடவைக்கு தோதாக போட்டவள் தலையை அழகாக பின்னலிட்டு மஞ்சள் பூசிய முகத்திற்கு சிறிது பவுடர் பூசி நெற்றியில் வகுட்டில் பொட்டும் வைத்து கண்களில் மையை வைத்தாள்.
பின் அதனை சரிபார்த்து கதிரவனுக்காக காத்திருக்க அவன் வரும் வரை இருந்த இந்த இடைப்பட்ட நேரத்தில் எத்தனை முறை கண்ணாடியை பார்த்தாள் என அவளே அறியாத ஒன்று.
சரியாக ஒரு நாலரை மணி போல வந்தான் கதிரவன். வந்தவன் மனைவியை கண்டு ஒரு நிமிடம் அசந்துதான் நின்று விட்டான். அதுவும் அவன் எப்பொழுது ரசிக்கும் அவனின் விழியின் விழி கூடுதல் அழகுடன் இருப்பது போல இருக்க அவளின் கண்களையே உற்றுப்பார்த்தான். கதிரவனின் பார்வையில் வெட்கம் கொண்ட எழில்விழியோ,
“ என்னங்க என்ன பார்க்குறீங்க??.. ” என தயக்கத்துடன் கேட்க
“ இல்ல உன் கண்ணுல எதோ வித்தியாசம் அதான் ”
“ ஹ்ம்ம் அது மை போட்டுருக்கேங்க வெளிய போகும் போது எப்பொழுதும் சின்னவயசுல இருந்து போடுவேன். பெரிய கண்ணா இருக்கா அதான் அம்மா அழகா இருக்குன்னு போட்டு பழக்கி விட்டாங்க. உங்களுக்கு பிடிக்கலையா??… ” என தயக்கத்துடன் கேட்டவள் அருகில் வந்தவன்
“ ஹ்ம்ம் இந்த விழியை பிடிச்சதாலதான் இந்த எழில்விழிகிட்ட இந்த கதிரவன் மயங்கி நிக்குறான். ஆனா இந்த சட்டையை மாத்து நல்லா இல்ல ”
“ என்னங்க இது…. ” என்ன பேசுவது என தெரியாது எழில்விழி நிற்க
“ என்ன என்னங்க??… இது என்ன சட்டையா அங்கேயும் இங்கையுமா எதோ தொங்குது. ஜூகுஜுகுன்னு வேற என்னமோ நல்லாவே இல்ல எனக்கு பிடிக்கல மாத்து ” என கூறி கதிரவன் கிளம்ப ஆரம்பிக்க
எனோ தனக்கு பிடித்த ஒன்றை கணவன் மாத்த சொன்னது ஒரு மாதிரி இருக்க கதிரவனிடம் சென்றவள்,
“ என்னங்க ”
“ ஹ்ம்ம் ”
“ இந்த சட்டை நிஜமா நல்லா இல்லையா??? ” என பாவமாக கேட்டவளிடம் அருகில் வந்தவன்
“ இது நல்லா இருக்கோ என்னமோ எனக்கு பிடிக்கல இனிமே இந்த மாதிரி போடாத ” என கூறி தனது வேலையை பார்க்க வாடிய முகத்துடன் எழில்விழியும் அமைதியாக வேற புடவையை மாற்றினாள்.
புடவையை மாற்றியவளுக்கு அவ்வளவு நேரம் இருந்த சந்தோச மனநிலை மாறி ஒரு வித அழுத்தம் பரவ மெதுவாக கூடத்திற்கு நடந்து வந்தவளிடம் வந்த கதிரவன்,
“ விழி இந்தா இதை வச்சுக்கோ ” என கூறி ஒரு மல்லிகை சரத்தை குடுக்க அதனை கண்டவள் விழியோ விரிந்து இதழ்கள் புன்னகையில் வளைந்தது.
கணவன் வாங்கி வந்த மல்லிகையில் மங்கையின் மன சோர்வும் மாயமாக வேகமாக அதனை தோளில் இரு பக்கமும் பரவவிட்டவாறு மல்லிகையை வைத்து கணவனிடம் வந்தவள் ஒரு வேகத்தில்,
“ நல்லா இருக்காங்க???? ” என கேட்டு கண்ணை சுருக்கி பார்த்தவளிடம்
“ ஹ்ம்ம் நல்லா இருக்கு… நல்லா இருக்க…. ” என கூறி முன்னே நடக்க கதிரவனின் பதிலில் வெட்கம் வர எழில்விழியும் கதிரவனை சிரிப்புடன் பின் தொடர்ந்தாள்.
தனது இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து தலைக்கவசம் அணிந்து வண்டியை இயக்கியவன், தனது பின் அமராமல் நின்றுகொண்டிருந்த எழில்விழியை கண்டு,
“ என்ன நிக்குற ஏறு ” என கூறி வண்டியை முறுக்க
“ ஹ்ம்ம்… ” என கூறி ஒரு வித படபடப்புடன் குஷியாக கணவனின் தோளை அழுத்தி பற்றி ஏறி உட்கார்ந்தவள் வலது கையை கணவனின் தோளில் வைத்து “ போலாம்ங்க” என கூற சரியாக கதிரவனின் அலைபேசி இசைத்தது.
அதில் தலைக்கவசத்தை கழற்றி அழைப்பை ஏற்று பேசியவன் அந்த பக்கம் என்ன சொல்லப்பட்டதோ,
“ ஹ்ம்ம் இதோ இன்னும் கால்மணி நேரத்துல அங்க இருப்பேன் சார் ” என கூறி போனை வைத்துவிட்டு,
“ விழி இறங்கு ” என வேகமா கூற அதில் எழில்விழியும் வேகமாக இறங்க
“ விழி நான் டூட்டிக்கு போனும் என் யூனிபார்ம் எடுத்து பட்டன் போடு நான் ஸூக்கு பாலிஸ் போடுறேன் ” என கூறி வேகமாக பூட்டிய வீட்டை திறந்து உள்ளே செல்ல வெளியே நின்றுகொண்டிருந்த எழில்விழிக்கோ ஏமாற்றத்தில் கண்கள் கலங்க ஆரம்பித்தது.
அதனை வெளியே காட்டாது கண்களை துடைத்து கொண்டு வேகமாக வீட்டிற்குள் வந்தவள் கணவன் சொன்ன வேலையை செய்ய ஆரம்பித்தாள்.
வேகமாக கதிரவன் எழில்விழியிடம் இருந்து உடையை வாங்கி போட்டுகொண்டு
“ விழி கொஞ்சம் தண்ணி கொண்டு வா ” என கூற,
ஏற்கனவே கணவனோடான முதல் பயணம் தடைபட மனது ஏமாற்றத்துடன் கலங்கி கொண்டிருக்க, இதில் அப்பிடி ஒரு விஷயமே நடைபெறாதது போல ஒரு சின்ன சமாதான வார்த்தை கூட சொல்லாது கிளம்பியவனிடம் முதல் முறை கடுப்பு வந்தது எழில்விழிக்கு.
ஆனால் அதனை வெளியே காட்டாது தண்ணீரை கொண்டுவந்து எழில்விழி குடுக்க அதனை வாங்கி குடித்துவிட்டு செம்பை மீண்டும் எழில்விழியிடம் குடுக்கும் போது தான் கதிரவன் எழில்விழியின் முகத்தை கண்டான்.
அதில் கலங்கிய கண்களை துடைத்ததால் கண்களின் கீழ் மை இழுத்து அசிங்கமாக இருந்தது. அதனை கண்டு,
“ என்ன அழுதியாக்கும் ” என கதிரவன் கேட்க,
அவன் குரலில் இவ்வளவு நேரம் இருந்த மென்மை காணாமல் போய் ஒருவித அழுத்தமும் கண்களில் ஒரு கூர்மையும் இருக்க அதில் நடுங்கிய விரல்களை மடக்கி கொண்டு,
“ இல்லைங்க அழல ” என மெதுவாக கூற
“ பொய் சொல்லாத நீ அழுது வடிஞ்சதுல உன் மை எல்லாம் இழுவி பேய்மாதிரி இருக்க இனிமே மை போடாத ” என கதிரவன் கடுப்புடன் கூற,
வெளிய அழைத்து செல்லாததுக்கு சிறு வருத்தம் கூட சொல்லாது மை பற்றி பேசியவனை கண்டு கோவம் வர லேசாக முறைத்து எழில்விழி முகத்தை திருப்ப அதில் கதிரவன் கோவம் கொண்டான்.
அந்த கோவம் எழிலின் முக திருப்பியதாலா இல்லை சொன்னபடி வெளியே அழைத்து செல்ல முடியாத குற்றஉணர்வாலோ என்பதை அவன் மனம் மட்டுமே அறிந்த ஒன்று.
எழிலின் முகத்தை கண்டு,
“ ஏய்!!!… என்ன மூஞ்சிய காட்டுற. உன் இஷ்டத்துக்கு எல்லாம் நான் ஆடமுடியாது. போலீஸ்காரன்னு தெரிஞ்சுதான கட்டிக்கிட்ட. அப்புறம் மூஞ்சிய திருப்புற. ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்க மாட்டேன் பார்த்துக்க.
என்ன இப்போ படத்துக்கு தானே போல என்னமோ பெரிய விசயமாதிரி மூஞ்சிய தூக்கி வச்சுருக்க. அங்க டாஸ்மாக்ல குடிச்சுட்டு அடிச்சுகிட்டு பெரிய சண்டையா இருக்காம் SI போன் பண்ணி போய் என்னனு பார்க்க சொல்லறாரு,
நான் இப்போ முடியாது என் பொண்டாட்டி கூட படத்துக்கு போய்ட்டு வந்து போவான்னு கேட்கணும்ன்னு எதிர்பார்க்குறியா??… ” என கதிரவன் எறிந்துவிழ
அதில் உதடுகள் துடிக்க கண்கள் கலங்கி அங்கே மடங்கி உட்கார்ந்து அழுக ஆரம்பித்தாள் எழில்விழி.
இதோ ஓடிவிட்டது பதினைந்து நாட்கள். அன்று கதிரவன் திட்டிவிட்டு சென்ற பின் எப்பொழுதும் போல கதிரவன் அந்த விஷயத்தை மறந்து பேச அதே போல் கணவனின் ஒற்றை வார்த்தை ஒற்றை சிரிப்பில் பழைய மன வருத்தத்தை மறந்து வாழ்க்கையை கணவனோடு ஒன்றி வாழஆரம்பித்தாள் எழில்விழி.
ஆனா அவள் மனதில் மட்டும் அந்த நிகழ்வு பதிந்துவிட்டது. அதனால் இந்த பதினைந்து நாட்களில் இரு முறை படத்துக்கு அழைத்து சென்றுவிட்டான் கதிரவன். ஆனால் எழில்விழியோ முன் போல அல்லது சரியாக கதிரவன் சொன்ன நேரத்திற்கு ஐந்து நிமிடம் முன் கிளம்பி தயாராவாள்.
அதனை கண்டு கதிரவனுக்கு சிரிப்பு கூட வரும் அதில்,
“என்ன முன்னமே தயாரா இருக்கவேண்டியது தானே ” என வேண்டுமென்றே கேட்கஎழில்விழியும் பயப்புடாமல்,
“ ஹ்ம்ம் நீங்க சொல்லி நான் முன்னமே ஆசையா கிளம்பி ஏமாந்து போறதுக்கு கடைசியா கிளம்பிக்கலாம்ல அதான். ஒரு வேளை உங்களுக்கு திடீர்னு வேலை வந்துட்டா நான் ஏமாறமாட்டேன்ல ” என மிடுக்காக கூறி நகர்வாள்.
அதில் கதிரவனுக்கு அதிசயமாக கோவம் வராது சிரிப்புதான் வரும். அதுவும் அவனின் விழியின் விழி அசைவில் தலையை சிலுப்பி கொண்டு போகும் மனையாளின் அழகை ரசித்துக்கொண்டே, “ ரொம்ப விவரம் தான் ” என சத்தமாக சிரிப்பான். அந்த சிரிப்பு எழிலுக்கு சிறு உற்சாகத்தை கொடுக்கும்.
அன்று காலை “ விழி ” என சத்தமாக அழைத்த கதிரவனின் குரலுக்கு துணியை துவைத்துக்கொண்டிருந்தவள் வேகமாக,
“ என்னங்க…. ” என ஓடி வர
“ இந்தா ” என ஒரு சிறிய காகித கவரை குடுத்தான்.
அதனை வாங்கி எழில்விழி பிரித்து பார்க்க அதில் நிறைய பணம் இருந்தது. அதனை பார்த்து புரியாது கணவனை நோக்கிய விழியிடம்,
“ விழி இதுல இந்த மாசம் சம்பளமும் இதுவரைக்கு வீட்டுக்கு அனுப்புனது போக மிச்சம் நான் செலவுக்கு வச்சுருந்ததும் இருக்கு. இனிமே வீட்டுக்கு வரவு செலவை நீயே பார்த்துக்கோ. எனக்கு தேவைன்னா உன்கிட்ட காசு வாங்கிக்குறேன் ” என கூறியவனை அதிசயமாக பார்த்தாள்.
ஏனென்றால் இதுவரைக்கும் வெங்கடேசன் கூட முழு சம்பளத்தை அன்னலெட்சுமியிடம் குடுத்தது இல்லை அப்பிடி இருக்க கணவன் குடுத்ததில் முதலில் எழில்விழிக்கு சந்தேகம்தான் வந்தது.
‘ எதுவும் உள் குத்து இருக்குமோ ’ என எண்ணி பார்க்க,
“ என்ன அப்பிடி முழிக்குற??.. ”
“ இல்ல நீங்களே பார்க்கலாம்ல எனக்கு என்ன தெரியும்ங்க ”
“ ஹம்ம்ஹும் நீயும் எல்லாம் தெரிஞ்சுக்கோ. நம்ம குடும்பத்துக்கு செலவு என்ன எப்பிடி சேமிக்கலாம் எப்பிடி சிக்கனமா இருக்கலாம்ன்னு ” என கூறி கதிரவன் நகன்றுவிட
“ ஆகா இது நமக்கு டெஸ்ட் போல. காசை நாம வச்சு செலவு பண்ணுனா நமக்கு செலவு பண்ண மனசு வராது. சிக்கனமாவும் இருக்கலாம். பெருசா ஆசையும் வராது. விரலுக்கு ஏத்த வீக்கம் இருக்கும். எல்லா விவரமாதான் இருக்காருய்யா நம்ம புருஷன் ” என எண்ணிக்கொண்டு பணத்தை சாமி அறையில் வைத்தாள்.
இரு மாதம் கடந்த நிலையில் வெங்கடேசன் கதிரவனுக்கு அழைத்தார்.
“ ஹ்ம்ம் சரி மாமா நான் வெளியே இருக்கேன் வீட்டுக்கு போய்ட்டு கால் பண்ணவா விழிக்கிட்ட பேச ”
“ இல்ல மாப்பிள்ளை உங்ககிட்டத்தான் பேசணும். ”
“ என்ன மாமா??.. ”
“ இல்ல எழிலு பன்னிரெண்டாவது முடிச்சவுடன் அவுங்க அம்மா காலேஜ் படிக்கவேணாம்ன்னு சொல்லிப்புட்டா. ஆனா நல்லா படிக்குற பிள்ளை அதான் மனசு கேட்காம பிள்ளையை டைப் கிளாஸ் சேர்த்தேன். எல்லாத்துலயும் முதல் வகுப்புல பாஸ் ஆகிடுச்சு ” என கூறி வெங்கடேசன் நிறுத்த
“ ஹ்ம்ம் சொல்லி முடிங்க மாமா ”
“ அதான் வேலைக்கு எம்பிளாய்மென்ட் ஆபீஸ்ல பதிஞ்சு தெரிஞ்சவங்க மூலமா சொல்லி வச்சேன். இப்போ கிடைக்குறாப்புல இருக்கு எழிலு வந்தா பேச முடிக்கலாம் உங்களுக்கு விருப்பம்ன்னா மட்டும் மாப்பிள்ளை ”
“ எனக்கு விருப்பம் இல்ல மாமா வேணாம்ன்னு சொல்லிடுங்க ”
“ எதுக்கும் எழில்கிட்ட… ”
“ நான் வேணாம்ன்னா வேணாம் தான் மாமா”
“ சரி மாப்பிள்ளை வச்சுடவா ”
“ ஹ்ம்ம் சரி மாமா ” என அலைபேசி வைத்தவன் நேராக நின்றது எழிலின் முன் தான்.
இந்த இரு மாதத்தில் பெரிதாக எந்த ஒரு சண்டையும் வராததில் எழில்விழி இந்த வாழ்க்கை முறைக்கு பழகிவிட கதிரவனுக்கு நன்றாக பழகிவிட்டாள்.
கணவனின் மீது இருந்த பிடித்தம் கூட நேசமாக வளர ஆரம்பித்திருந்தது. இந்நிலையில் திடீர்ன்னு தன் முன்னாள் கோவமாக நின்றுகொண்டிருந்தவனை கண்டு ஒன்றும் புரியாது நோக்கிய எழில்விழியிடம்,
“ நீ கல்யாணத்துக்கு மூன்னாடி வேலைக்கு முயற்சி பண்ணினியோ???… ” என கதிரவன் கேட்க எழில்விழியோ எதற்கு என புரியாது,
“ ஹ்ம்ம் ஆமாங்க. ஏன் கேட்குறீங்க??.. ”
“ இல்ல உங்க அப்பா போன் பண்ணிருந்தாரு. வேலை கிடைக்குறமாதிரி இருக்கு வர முடியுமான்னு ” என கதிரவன் பேசிக்கொண்டிருக்கையில்
“ ஐ!!… நிஜமாவா???.. ” என சந்தோச கூச்சலிட்டாள் எழில்விழி
அதில் புருவம் சுருக்கி,
“ உனக்கு வேலைக்கு போகணும்ன்னு ஆசையோ ” என கதிரவன் கேட்க
“ ஹ்ம்ம் ஆமாங்க இப்ப இருக்குற நிலைமைக்கு ரெண்டு பேரு வேலைக்கு போனாதான் சமாளிக்க முடியும் குடும்பத்தை ” என எழில்விழியோ பொதுவாக கூற
“ அப்போ நான் சம்பாரிக்குறது பத்தாது நீ சம்பாரிச்சு உன் தயவுலதான் குடும்பம் நடத்தனுன்னு சொல்லவறியா??… ” என கதிரவன் கேட்க அதில் அதிர்ந்து
“ என்னங்க நான் அப்படி சொல்லல பொதுவா… ”
“ என்ன பொதுவா??… இங்க பாரு நீ வேலைக்கு போறது எனக்கு பிடிக்கல. என் ஒருத்தர் சம்பாத்தியத்துல குடும்பம் நடத்துனா போதும். எனக்கே அடிக்கடி ட்ரான்ஸ்பெர் ஆகுற உத்தியோகம் இதுல நீயும் வேலைக்கு போய் நாளைக்கு பிள்ளைகுட்டின்னு பிறந்து நாம ஆளுக்கொரு திசைக்கு இருக்குறதுக்கு பேசாம இருக்கறதை வச்சு வாழ்க்கையை நடத்திக்கலாம் ” என கூறி நகர்ந்துவிட கணவனையே கண்களில் நீர்வழிய வெறித்து பார்த்துக்கொண்டிருந்த எழில்விழி திடீரென மயங்கி சரிந்தாள்.
ஒரு கண்ணில் நீர் கசிய…..
உதட்டு வழி உசிர் கசிய……
ஒன்னால
சில முறை இறக்கவும்
சில முறை பிறக்கவும் ஆனதே!!….
அட ஆத்தோட விழுந்த எல
அந்த ஆத்தோட போவது போல் – நெஞ்சு
ஒன்னோடுதான்
பின்னோடுதே
அட காலம் மறந்து
காட்டு மரமும்
பூக்கிறதே………