எழில்விழி தாய் வீட்டிற்கு சென்று பத்து நாள் கடந்து விட்டது. இத்தனை நாட்களில் கதிரவனுக்கு மனது எதையோ இழந்தது போல வெறுமையாக இருக்க அன்று ஏனோ மனம் எழில்விழியை அதிகம் தேடியது.
“ ச்ச எல்லா வேலையும் இவளே செஞ்சு அவளுக்கு நம்மள பழக்கப்படுத்திவிட்டு இப்போ நாமதான் ரொம்ப கஷ்டப்படுறோம் ” என புலம்பலுடன் இரவு டூட்டி முடிந்து காலை எட்டு மணி போல வீட்டிற்கு செல்ல அங்கு எழில்விழி இல்லாத வீடு மனதை ஒரு விதமாக தாக்க வெங்கடேசனுக்கு கால் செய்தான்.
“ சொல்லுங்கப்பு எப்பிடி இருக்கிங்க??… ”
“ ஹ்ம்ம் நான் நல்லா இருக்கேன் மாமா. எழில் எப்பிடி இருக்கா நல்லா இருக்காளா??… இன்னைக்கு முழுசும் பேச முடியல ”
“ ஹ்ம்ம் நல்லா இருக்காப்பு. இன்னைக்கு காலையில திடீர்ன்னு வலி வந்துடுச்சு ”
“ அப்புறம்??…. ”
“ ஆனா அது சூட்டு வலி மாப்பிள்ளை இன்னும்தான் ஒரு வாரம் இருக்கே… ” என கூறிய வெங்கடேசனிடம்
“ சரி மாமா. என்ன பண்ணுறா??… ” என கேட்ட கதிரவனிடம்
“ தூங்குறாப்பு ”
“ சரி மாமா அப்போ நாளைக்கு பேசுறேன் ” என கூறி அலைபேசியை தூண்டிக்கப்போனவனிடம்
“ மாப்பிள்ளை ” என அழைத்த வெங்கடேசனின் குரலில் இருந்த தயக்கம் உணர்ந்து,
“ என்ன மாமா??… எதுவும் பிரச்சனையா இல்ல எதுவும் வேணுமா??…. ” என கேட்க
“ இல்லப்பு இன்னைக்கு ஹாஸ்பிடல் போனப்ப எழிலுக்கு ரத்த அழுத்தம் அதிகமா இருக்கு அப்பிடின்னு சொன்னாங்க ”
“ பயப்புடாதிங்க மாமா பிரசவ தேதி நெருங்குதுல அதான் ”
“ அதோட…. ” என இழுத்த வெங்கடேசனின் குரலில்
“ என்னன்னு முழுசா சொல்லுங்க மாமா நீங்க இப்படி இழுத்து சொல்லுறதுல எனக்குத்தான் ரத்த அழுத்தம் ஏறுது ” என எரிச்சல் குரலில் கூற
“ இல்லப்பு எப்பப்பார்த்தாலும் இந்த பிள்ளை எதையோ யோசிச்சுகிட்டே இருக்கு. நீங்க போன் பேசும் போது மட்டும் மூஞ்சி கொஞ்சம் சிரிச்சாப்புல இருக்கும். நீங்க போன் போட்டீங்களான்னு ஒரு நாளைக்கு பத்து தடவை கேட்குது. அதான் நீங்க ஒரு எட்டு வந்துட்டு போனா பிள்ளை மூஞ்சி கொஞ்சம் தெளிஞ்சாப்புல இருக்கும் ” என வெங்கடேசனின் குரலில் இருந்த தயக்கத்தில்
“ அட!!…. என்ன மாமா நீங்க என் பொண்டாட்டிய பார்க்க வர சொல்ல நீங்க எதுக்கு இவ்வளவு தயங்குறீங்க.எனக்கு கொஞ்சம் இங்க வேலை மாமா. நேரம் கிடச்சவுடன் வரேன் நீங்க பார்த்துக்கோங்க ” என இணைப்பை துண்டித்தவன் மணியை பார்க்க ஒன்பது மணி ஆக கால்மணி நேரம் இருந்தது.
உடனடியாக குளித்து கடைக்கு சென்று ஒரு போன் வாங்கி அதில் அவனுடைய பயன்படுத்தாத பழைய சிம்மையும் பொருத்தி அங்கையே கடையில் வாட்ஸாப்பை ஆரம்பித்து பின் அந்த போனை கொரியரில் தனது மனைவிக்கு அனுப்பிவைத்தான். பின் வெளியே கடையில் உண்டுவிட்டு வேலைக்கு சென்றுவிட, அங்கு மதுரையில் பத்து மணிக்கு எழுந்த எழில்விழி,
“ அப்பா அவரு போன் பண்ணுனாங்களா??… ” என வெங்கடேசனிடம் கேட்க
“ என்ன அன்னம் நம்ம எழிலு இப்படி சோர்ந்து போச்சு. நானும் மாப்பிளையை முடிஞ்சா வந்துட்டு போங்கன்னு சொன்னே. அவரு வருவாருன்னு நம்பிக்கை இல்ல. ஆனா எழிலு இப்படி கிடந்து ஏங்குது ” என புலம்ப
“ அட!!…. சரியான கூறுகெட்ட மனுசங்க நீங்க”.
“ ஏன் அன்னம்??… ”
“ பின்ன அவரு என்ன சாதாரண உத்தியோகமா லீவு கிடைக்க இல்ல சாயங்காலம் வேலை விட்டு வந்தவுடனே பொண்டாட்டிக்கு போன் போட. அவரே சாப்பாடு இல்லமா தூக்கம் இல்லமா வேலை பார்க்குறாரு.
இதுல உங்க மகளுக்கு போன் பண்ணலைன்னு கவலை. உங்களுக்கு வந்து ஒரு எட்டு பார்க்கலைன்னு கவலை. நான் பிரசவத்துக்கு ஊருக்கு போனப்ப அரசாங்க உத்தியோககாரரு எத்தனை தடவை வந்து பார்த்தீங்க சும்மா மருமகனை குறை சொல்ல வந்துட்டீங்க ” என கடிந்துகொண்டு அன்னலெட்சுமியும் சென்றுவிட,
வெங்கடேசனோ தலையை இடம் வலமாக அசைத்துவிட்டு அவரும் அவரின் வேலையை பார்க்க சென்றுவிட்டார்.
எப்போதும் போல அன்றும் முழு நேரமும் வேலை அதிகம் இருந்ததால் கதிரவன் எழில்விழியோடு பேச முடியாது போக, எழில்விழியோ மனதை மேலும் குழப்பிக்கொண்டாள்.
கர்ப்பகால பயம் அதிகப்படியான சிந்தனை கதிரவனை எண்ணி அவள் காதல் மனதின் குழப்பம் என எழில்விழி மிகவும் சோர்ந்துவிட மறுநாளும் காலை பத்து மணிக்கு எழ சரியாக கதிரவன் அனுப்பிய பார்சலும் வந்து சேர்ந்தது.
அதனை வாங்கிய வெங்கடேசன் எழில்விழியிடம் குடுத்து,
“ உனக்குத்தான் மாப்பிளை என்னமோ அனுப்பிருக்காரு எழிலு. பிரிச்சு பாரு நேத்து பேசுறப்போ கூட ஒன்னும் சொல்லல ” என கூற,
கணவன் அனுப்பியது என தந்தை கூறியவுடன் மனது பரபரக்க வேகமாக அதை பிரிக்க அதில் இருந்த தொடுதிரை அலைபேசியை கண்டு “ ஆவென….. ” வாயை பிளந்த எழிலை கண்டு அன்னலெட்சுமி,
“ என்னத்த அப்படி மாப்பிள்ளை அனுப்பிருக்காரு இப்படி ப்பான்னு பார்க்குற??…. ” என கூறி அன்னலெட்சுமியும் எழிலின் கையில் இருந்த அலைபேசியை கண்டு,
“ அடேங்கப்பா அப்பாவும் மகளும் அவரை போன் போடல வந்து பார்க்கலைன்னு புலம்பிகிட்டு இருந்திங்களா அதான் மனுஷன் அறிவா யோசிச்சு இந்த போனை வாங்கி அனுப்பிருக்காரு ” என கூறி சிரிப்புடன் நகரந்துவிட வெங்கடேசனும் மனது சந்தோசத்துடன் நகர்ந்துவிட்டார்.
எழில்விழியோ இத்தனை நாள் மனதில் இருந்த அழுத்தம் குறைய கண்கள் கலங்க வேகமாக அந்த அலைபேசியில் ஏற்கனவே கதிரவன் பதிந்து வைத்திருந்த கதிரவன் என்ற எண்ணை அழுத்தி அவனிற்கு அழைக்க அந்த அழைப்போ சென்ற சில நொடிகளில் உரியவனால் நிராகரிக்க பட்டது.
மீண்டும் கதிரவனும் அழைக்க அதில் அழைப்பை ஏற்ற கதிரவன் எழில்விழி பேசும் முன்னே,
“ உனக்கு அறிவு இருக்கா போனை கட் பண்றேனா நான் முக்கியமான வேலைல இருக்கேன்னு உன்னால புரிஞ்சுக்க முடியாதா??…. வை அப்புறம் பேசுறேன் ” என கத்திவிட்டு கதிரவன் வைத்துவிட,
அதில் சற்று முன் தோன்றிய பரபரப்பு சந்தோசம் என அனைத்து உணர்வுகளும் வடிய அமைதியாக சென்று அமர்ந்தாள்.
ஆனால் அவள் சிந்தனை முழுதும் எப்பொழுது கதிரவன் அழைப்பான் என்பதில் இருக்க அலைபேசியையே பார்த்துக்கொண்டிருந்தாள். ஒரு அரைமணி நேரத்தில் கதிரவன் வீடியோ காலில் அழைக்க அதில் சிறுது நேரம் முன் காணாமல் போன ஒரு வித பயமும் பதட்டமும் தயக்கமும் வர மெதுவாக அழைப்ப ஏற்றாள்.
திரையில் தெரிந்த கணவனின் முகத்தை கண்டு அவளின் விழிகள் கலங்க புன்னகை முகத்துடன் ஒரு பரவச நிலையில் காதல் பார்வையுடன் கணவனை ரசித்து பார்க்க எழிலை திட்ட அழைத்தவன் எழிலின் காதல் பார்வையில்அவனும் தன்னை மறந்து மனையாளை ரசித்து பார்த்தான்.
பின் இருக்கும் சூழல் உணர்ந்து அலைபேசியை எடுத்துக்கொண்டு ஸ்டேஷன் வெளியே இருந்த கல் மேஜையில் அமர்ந்தான். பின் பேச எண்ணி அலைபேசியின் திரையை பார்க்க அதில் தெரிந்த எழில்விழியின் தோற்றம் கண்டு அதிர்ந்தான்.
ஒரு நிமிடம்தான் அந்த அதிர்ச்சி கருவளையம் சூழ்ந்த அவன் ரசிக்கும் விழிகள் வற்றிய அவளின் குண்டு கன்னங்கள் முகத்தில் இருக்கும் சோர்வு தளர்ந்த உடல் என பத்தே நாளில் இப்படி சோர்ந்து இருப்பவளை கண்டு வழக்கம் போல மனதில் கோவம் வர,
“ ஏய்!!… என்னடி பண்ணி வச்சுருக்க??… ” என கதிரவன் கத்த கணவனின் கோவம் புரியாமல் அதுவரை அவனை ரசித்துக்கொண்டிருந்தவள்
“ என்னங்க என்ன பண்ணி வச்சுருக்கேன்?….. ” என எழில்விழி கேட்க
“ ஹ்ம்ம் இப்படி பத்தே நாளில் ஆளே அடையாளம் தெரியாமல் போற அளவுக்கு என்ன கவலை??… என்னத்தை போட்டு அப்படி யோசிக்குற??… ” என கேட்க
அதில் திடுக்கிட்டு, “ நானா!!!… நா…. நான் ஒன்னும் யோசிக்கலங்க….. ” என எழில்விழி தயக்கத்துடன் இழுக்க
“ ஏய்!!!… பொய் சொன்ன பிச்சுடுவேன் என்னத்தை போட்டு குழப்பிக்கிட்டு இருக்க சொல்லு முதல்ல. நல்லபடியா பிள்ளைய பெத்து எடுத்து இங்க வர ஐடியா இல்லையா??…. ”
“ இல்லங்க நான் ஒன்னும் யோசிக்கல ”
“ ஏய்!!… கடுப்பேத்தாம சொல்லு இல்ல டென்ஷன் ஆகிடுவேன் ” என எரிச்சல் குரலில் கேட்ட கணவனிடம்
“ இல்ல உங்கள மனசு ரொம்ப தேடுது… ” என மெதுவாக கூறியவளிடம்
“ இந்த தேடுது பாடுதுன்றது எல்லாம் நீ வீட்டை விட்டு கிளம்பும்போதே சொல்லிட்ட ஒழுங்கா இப்போ உன் மனசுல என்ன இருக்குன்னு சொல்லு ” என அழுத்தமாக கேட்டவனிடம்
“ இல்லங்க நான்….. ” என மீண்டும் எழில்விழி இழுக்க அதில் கடுப்படைந்த கதிரவன்
“ விழி!!!…. ” என அவள் பெயரை பல்லை கடித்து கொண்டு கூற அதில் பயந்தோ, இல்லை கணவன் தூரம் இருக்கும் தைரியமா இல்லை இத்தனை நாள் மனதிலையே குழப்பி கொண்டிருந்ததாலோ வேகமாக சொல்ல ஆரம்பித்தாள் தனது மனநிலையை.
“ இல்ல கல்யாணம் ஆனதுல இருந்து நீங்க என்னைய திட்டிகிட்டு இருக்கீங்க. சில நேரம் நல்லா பேசுனாலும் எனக்கு மனசுக்குள்ள உங்ககிட்ட பேசும்போது எப்போதும் பயம் இருக்கும். நீங்க எப்போ திட்டுவீங்க எப்போ சண்டை போடுவீங்கன்னு. அதோட அன்னைக்கு உங்க மாமா வந்தப்போ நான் அவரு பேசுனதுக்கு அழுதேன்னு, நம்பிக்கை இல்லையா வீட்டை விட்டு போனு சொன்னிங்க.
நான் ஒன்னும் உங்க மேல நம்பிக்கை இல்லாம அழல. உங்க மேல நம்பிக்கை இருக்கக்கண்டு தான் என் பிறந்த வீட்டை பேசுறப்போ நான் எதுவும் பேசாம அமைதியா இருந்தேன். ஆனாலும் அந்த நேரம் கோவம் எனக்கு கண்ணீரா வெளிய வந்துச்சு. அன்னைக்கு நீங்க என் தரப்பை கேட்காம கோவப்பட்டிங்க.
சரி அதுக்கு அப்புறம்…., என்கிட்டே அதை பத்தி பேசவே இல்லை. ஏன்….. என்னைய போன்னு சொன்னதுக்கு ஒரு சாரி கூட கேட்கல நீங்க. அப்பவும் நாந்தான் பேசுனேன்.
அப்பிடித்தான் ஊருக்கு போறேன்னு சொல்றேன் நீங்க ஒன்னும் என்னைய நினைச்சு பீல் பண்ணவே இல்ல. நான்தான் உங்கள அதிகம் தேடுறேன். நீங்க என் மனசுல பாதிச்ச அளவுக்கு உங்க மனசுல நான் ஒரு சின்ன சலனத்தை கூட ஏற்படுத்தலையா??….
உங்களுக்கு என்னைய பிடிக்கலையான்னு ஒரே குழப்பமா இருக்குங்க ” என ஒருவாறு தனது மனநிலையை கணவனின் முகம் காணாது குனிந்துகொண்டே கூறி முடித்துவிட்டு கணவனை காண அவனோ கன்னத்தில் கைவைத்துக்கொண்டு எழில்விழியை பார்த்துக்கொண்டிருந்தான்அந்த பார்வையில் பயம் வர,
“ என்னங்க??… ” என மெதுவாக அழைக்க
“ ஹ்ம்ம் விழி நீ போனை கீழ வச்சுட்டு தண்ணீயை குடிச்சுட்டு முகம் கழுவிட்டு வா நான் கொஞ்சம் பேசணும் ” என அமைதியாக கதிரவன் கூற அவளும் மறுத்து எதுவும் கூறாது கணவன் சொன்னதை செய்த்துவிட்டு மீண்டும் போனை கையில் எடுத்து கணவனை காண,
“ நான் பேசவா??… ” என மெதுவாக கேட்ட கணவனின் குரலில் தலையை மட்டும் அசைத்து அவனை காண,
“ ஹ்ம்ம்…. இப்போ உன் கவலை என்ன?.. நான் நீ இல்லாம கஷ்டப்படுறேனான்னு தெரியணும். அதுக்குதான் இந்த வேலை எல்லாம் பார்த்துருக்க ”
“ இல்லங்க நான் அப்படி சொல்லல….. ” என மறுத்து பேச வந்தவளிடம்
“ நீ பேசும்போது நான் அமைதியாதான் இருந்தேன் நீயும் அப்படியே இருந்தா நான் பேசுவேன் இல்ல போனை வச்சுட்டு போயிட்டே இருப்பேன் ” என அழுத்தமாக கூறியவனிடம் ஒன்றும் பேசாது எழில்விழி அமைதியை தத்தெடுக்க
“ இங்க பாரு விழி இது நம்ம வாழ்க்கை. சினிமா இல்ல. இதுல கஷ்டம் சந்தோசம் ஏமாற்றம் கோவம் எல்லாமேதான் இருக்கும். அதுவும் கணவன் மனைவி வாழ்க்கைக்குள்ள எல்லாமே இருக்கு. உன்னைய எனக்கு பிடிச்சுருக்குன்னு நான் ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் காட்டிகிட்டு இருக்கேன்னு வை நான் ஒன்னு லூசா இருக்கனும் இல்ல நடிப்பா இருக்கும்.
நான் இப்படித்தான் எனக்கு கோவம் வந்தா பேசதான் செய்வேன். நான் யாருக்காக உழைக்குறேன் என் குடும்பத்துக்காகத்தானே. நீ சொல்லியா உனக்கு எல்லாம் செய்றேன் இல்ல நாளைக்கு நம்ம பிள்ளை சொல்லியா எல்லாம் அதுக்கு செய்யப்போறேன் இல்லதானே. அது எல்லாமே என் அன்புல செய்றது.
உனக்காக எதாவது செய்றப்போ மட்டும் அதுல அன்பு இருக்கானு பார்க்க மாட்டேங்குற. கோவம் வந்து பேசுனா உன்னைய திட்டுனா எனக்கு உன்னைய பிடிக்கலைன்னு அர்த்தமா??… என்னமா லாஜிக் உன்னோடது??…
இல்ல நான் தெரியாம கேட்குறேன் நீ என்னைய தேடுற மாதிரி நானும் உன்னைய தேடுறேன்னு சொன்னா நீ சந்தோசப்படுவியா??… அப்போ நான் சொல்ற சொல்லுலதான் என் நேசம் புரியுமா என் செயல்ல புரியாதா??…..
சத்தியமா நீ என்ன எதிர் பார்க்குறன்னு எனக்கு புரியல. நீ என் பொண்டாட்டி அதுவும் நாளைக்கு என் பிள்ளைக்கு அம்மாவாகப்போற இப்போ வந்து பிடிச்சுருக்கானு கேட்குற.
எனக்கு புரியல என்னைய பார்த்தா கடமைக்குன்னு குடும்பம் நடத்துறவன் மாதிரியா தெரியுது??…. அப்புறம் என்ன சொன்ன உன் பிறந்தவீட்டை சொன்னதும் அந்த நேரம் கண்ணீர் வந்துச்சா….. அது கூட வரகூடாது இந்த கதிரவனோட பொண்டாட்டிக்கு.
சிங்கம் மாதிரி என் பொண்டாட்டி பக்கத்துல நான் நிக்கும் போதே எவனோ என்னமோ சொன்னான்னு நீ அழுவ நான் பார்த்துகிட்டு இருக்கணுமா??… அதுல உன்கிட்ட நான் மன்னிப்பு வேற கேட்கணும்ன்னு எதிர்பார்த்துருக்க.
அப்பறம் என்ன சொன்ன போன்னு சொன்னேனா….. ஹ்ம்ம் சொன்னே. உனக்கு என் மேல நம்பிக்கை இல்லைனா போன்னு சொன்னேன் எனக்கு பிடிக்கலை போன்னு சொல்லல. எதுலயும் உனக்கு சாதகமா எடுத்துக்கிட்டு நீ கவலைப்பட்டால் அதுக்கு நான் எப்பிடி பொறுப்பாக முடியும்.
நல்லா கவலைப்படு. எனக்கு என்ன??.. உன் கற்பனைக்கு நான் உருவம் குடுக்க முடியாது. கவலை இருக்கறவன் கவலை படலாம். தேடி போய் ஒண்ணுமே இல்லாததுக்கு கவலைபட்டா நான் என்ன செய்ய முடியும். இப்போதைக்கு உன்னைய பார்கவர ஐடியா இல்ல எனக்கு வேலை இருக்கு அதுக்கு சேர்த்து கவலைபட்டு உடம்பை கெடுத்துக்கோ ” என கூறி அழைப்பை கதிரவன் துண்டித்துவிட
எழில்விழியோ மன பாரம் குறைய அமர்ந்திருந்தாள். அது கணவனிடம் பேசியதாலோ….. இல்லை அவன் வாய் மொழி அவளை பிடித்திருக்கு என்று கூறியதாலோ…… ஆகா மொத்தம் எழில்விழி மன அழுத்தம் குறைந்து சாதாரணம் ஆகிவிட்டாள்.
என்ன கணவன் வழக்கம் போல கோவமாக பேசினாலும், அதில் இருக்கும் அன்பை உணர ஆரம்பித்தாலோ இல்லை கதிரவன் மனைவியாக யோசிக்க ஆரபித்ததாலோ கண்ணீர் வரவில்லை இம்முறை. மனம் மட்டும் அவன் வரவில்லை என கூறியதில் சிறு வருத்தம் ஏற்பட்டது.
ஆனால் இங்கு கதிரவன் மனமோ பாரம் ஏறிய உணர்வு. அதுவும் அவளின் சோர்வு பொலிவு இழந்த அவன் ரசிக்கும் விழிகள் என அவன் மன கண்ணில் தோன்றி கொண்டே இருக்க, மறுநாள் விடுப்பு எடுத்து சென்று அவளை காணும் எண்ணம் தோன்றிவிட விடுப்பு சொல்ல உதவி ஆய்வாளர் அறைக்கு சென்றான்.
அங்கு கோப்புகளை பார்த்துக்கொண்டிருந்த உதவி ஆய்வாளருக்கு வணக்கம் வைக்க அவனை கண்டு புருவம் உயர்த்தி ,
“ என்ன கதிரவன் காத்து எல்லாம் இந்த பக்கம் வீசுது. எப்போதும் நீங்க இன்ஸ்பெக்டர்கூட தானே சுத்துவிங்க. என்ன இங்க…. ” என நக்கலாக பேச
அவரின் நக்கலில் வந்த கோவத்தை கட்டுப்படுத்திக்கொண்டு,
“ இன்ஸ்பெக்டர் சார் இன்னைக்கு லீவு சார். நாளைக்கு எனக்கு லீவு வேணும் அதான் உங்ககிட்ட கேட்கலாம்ன்னு ”
“ ஓ!!!…. பார்றா…. கதிரவன் லீவு எல்லாம் எடுக்குறாரு. எதுக்குன்னு தெரிஞ்சுக்கலாமா கதிரவன்??… ” என கேட்டவனிடம்
“ ம்ப்ச் என்ன கதிரவன் நீங்க. பிரசவம் இருக்கு அப்புறம் உங்க பிள்ளை பேரு வைக்குற விழா இருக்கும். அப்புறம் காதுகுத்து அப்புறம் அடுத்தடுத்து விழா இருக்கும் உங்களுக்கு கடமை இருக்கும் எல்லாத்துக்கும் லீவு போட முடியுமா??… பேசாம வேலைய விட்டுடுங்களேன் ” என உதவி ஆய்வாளர் கூற,
அதில் கோவம் கொண்ட கதிரவன்,
“ வேலையை விடணுமா இல்ல இருக்கணுமான்னு வேலையில சேர்ந்த நான் முடிவு பண்ணிக்குறேன் சார் நீங்க சொல்ல தேவை இல்ல. அதோட என் குடும்ப விஷயங்களை நான் பார்த்துக்குவேன் அடுத்தவன் சொல்ற அளவுக்கு ஒன்னும் வச்சுக்க மாட்டேன் ” என முகத்திற்கு நேராக கூறிவிட அதனை கண்டு கடுப்படைந்தார் இந்த உதவி ஆய்வாளர்.
எப்போதும் இவருக்கும் கதிரவனுக்கும் ஏழாம் பொருத்தம் தான். வேலை தெரிந்த கடைநிலை ஊழியரை ஒன்றும் தெரியாத அதிகாரிகள் மட்டம் தட்டும் காலத்தில், கதிரவனின் நேர்மையான குணமும், முகத்திற்கு நேராக பேசிவிடும் பழக்கமும், வேலை தெரிந்ததால் நேர்மையான இன்ஸ்பெக்டரின் தோஸ்துபோல இருப்பதால் இந்த உதவி ஆய்வாளருக்கு கதிரவன் மீது ஏக கடுப்பு. இதில் தன்னையே மட்டம் தட்டியதில் உண்டான கோவத்தில்,
“ ஹ்ம்ம் கதிரவன் நேத்து நீங்க பாராதானே ”
“ ஆமா சார் ”
“ இப்போ என்ன பண்ணிறிங்க அந்த எட்டாம் நம்பர் செல்லுல இருக்குற கைதிகளை நீதிமன்றத்துக்கு கூட்டிட்டு போயிட்டு அப்புறம் இன்னைக்கு பாராவும் பார்த்துட்டு நாளைக்கு காலைல எட்டு மணிக்கு கிளம்புங்க. ஆனா ஒரு நாள் தான் லீவு. நாளை மறுநாள் பத்து மணிக்கு என்கிட்டே நீங்க ரிப்போர்ட் பண்ணனும் ” என கூறிவிட்டு தனது வேலையை தொடர,
அவன் இட்ட பணிகள் வேணுமென்றே தனக்கு கொடுக்கப்பட்டது என தெரிந்தும் அதில் உண்டான கோவத்தில்,
‘ போடா நீயும் உன் லீவும் ’ என சொல்ல துடித்த எண்ணத்தை எழில்விழியின் முகம் தடுத்துவிட, கதிரவனும் பணிகளை முடித்துவிட்டு காலையில் பதினோரு மணிக்கு மதுரைக்கு எழில்விழி வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.
அப்பொழுதுதான் தூக்கம் வருவதாக அன்னலெட்சுமியிடம் எழில்விழி கூறிக்கொண்டிருக்க சரியாக வாசலில் கதிரவன் உருவம் கண்டு வேகமாக நடந்து வந்து கணவனை பாய்ந்து அணைத்துக்கொண்டாள். அதில் சற்றே தடுமாற,
“ ஏய்!!… பார்த்துடி மெதுவா வரவேண்டியது தானே ” என கடிந்துக்கொண்டு மெதுவாக அவளை அணைத்துக்கொண்டு வீட்டிற்குள் செல்ல சரியாக இவர்களின் சத்தம் கேட்டு அன்னலெட்சுமியும் வெங்கடேசனும் வந்து கதிரவனை வரவேற்றனர்.
அதில் வெங்கடேசனிற்கு பெரும் சந்தோசம் தான் கூறி மருமகன் வந்துவிட்டாரென அன்னலெட்சுமியிடம் பெருமை பட, அவர்,
“ ஹம்ம்ஹும் ” என நொடித்துக்கொண்டார்.
பின் சிறுது நேரம் பேசிவிட்டு அன்னலெட்சுமி கதிரவனிடம்,
“ மாப்பிளை நேத்து ராத்திரி முழுதும் சூட்டு வலி விட்டுவிட்டு வந்துச்சு. அவளுக்கு தூக்கமே இல்ல போய் தூங்க சொல்லுங்க ” என கூற,
அவனும் எழிலின் தூக்கம் சொக்கிய கண்களும் சோர்வான வதனமும் கண்டு தூங்க சொல்ல எழில்விழியோ மறுத்துவிட்டாள்.
“ என்னங்க எனக்கு தூக்கமே வராதுங்க ப்ளீஸ் நான் உங்ககூட இருக்கேனே ” என கெஞ்ச
“ விழி சொன்னா கேளு. நான் நாளைக்கு அதிகாலைல தான் கிளம்புறேன். நீ தூங்கு ” என அழுத்தமாக கூற அதில் உதட்டை பிதுக்கி பாவமாக பார்த்தாள் எழில்விழி.
அவளுக்கு கணவன் தன்னை ஒரு முறையாவது பார்க்க வர வேண்டும் என ஆசை. இதில் நேத்து போனில் வர மாட்டேன் என கூறியவன் இன்று நேரில் நிற்பது கண்டு மிகுந்த மன மகிழ்ச்சியில் இருந்தாள். இதில் எங்கனம் அவளுக்கு தூக்கமே வருவது.
அதை உணர்ந்த கதிரவனோ,
“ நான் இங்க இருந்தா நீ தூங்க மாட்ட. நான் படத்துக்கு போறேன் நீ தூங்கி எழுறதுக்கு முன்னாடி வந்துடுவேன் ” என கூற உடனே எழில்விழியும்,
“ என்னங்க நானும் படத்துக்கு வரவா??… ” என விழிகளில் ஆசைபொங்க கேட்க அதில் அன்னலெட்சுமியோ,
“ எடு அந்த வெளக்கமாத்தை பிள்ளை பிறக்க இப்பவோ அப்போவோன்னு இருக்கு இதுல படத்துக்கு போறாலாம்ல ” என சத்தமாக திட்ட
அதில் கதிரவனுக்கு கோவம் வந்தாலும் அவர் கூறுவதில் இருந்த நிலைமை புரிய ஒருவாறு எழில்விழியை சமாதானம் செய்து உறங்க வைத்துவிட்டு படத்திற்கு சென்றான்.
திரையரங்கில் அமர்ந்திருந்தவனுக்கு இன்னதென்று புரியாத உணர்வு ஏற்பட படத்தை பார்க்க மனம் ஒன்றவில்லை. மேலும் மனது முனுமுனு என ஏதோ அரிக்க படம் பார்க்க முடியாது இடைவேளைக்கு முன்பே எழுந்து வீட்டிற்கு வந்தான்.
அங்கு பூட்டிய வீட்டை கண்டு அவனின் பதட்டம் கூட வெங்கடேசனிற்கு அழைக்க அலைபேசியை எடுக்க அதில் தவறிய அழைப்புகளில் வெங்கடேசனின் எண்ணும் எழில்விழி எண்ணும் இருக்க அதில் அதிக பதட்டத்துடன் வெங்கடேசனிற்குஅழைத்தான்.
அழைப்பை ஏற்றவர்,
“ மாப்பிளை எழிலுக்கு பிரசவ வலி வந்துடுச்சு ” என கூறி மருத்துவமனை பெயரை கூற கதிரவனோ,
“ மாமா இன்னும் ஒரு வாரம் இருக்கே தேதிக்கு. விழி…. விழிக்கு ஒன்னும் இல்லைல ” என முதல் முறை அவனின் வார்த்தைகளில் பயம் தெரிய
“ இல்ல மாப்பிளை சுக பிரசவம் ஆகும்ன்னு சொல்லிருக்காங்க. பிள்ளை உங்களைத்தான் தேடுது சீக்கிரம் வரிங்களா??… ” என கேட்டவரிடம்
“ இதோ இப்போ கிளம்பிட்டேன் மாமா. வந்துடுறேன் ” என கூறி ஒரு ஆட்டோ பிடித்து மருத்துவமனை வந்து சேர்ந்தான்.
அங்கு அவளை சேர்த்திருந்த அறைக்கு செல்லும் போதே அவளில் பிரசவ வலியின் அலறல் கேட்டு முதல் முறை அவன் இதயம் மனையாளுக்காக வேகமாக துடிக்க ஆரம்பித்தது. அதனை பயம் என கூறவேண்டுமோ??….
அவனின் இதயம் முதல் முறை பயம் பதட்டம் பரிதவிப்பு என அனைத்து உணர்வுகளையும் வெளியிட, வேகமாக அவனுடைய விழியின் அலறல் வந்த அறைக்குள் நுழைய, அங்கு பிரசவ வலியிலும் தனது கணவனை கண்டு கண்களில் மின்னல் வர காதல் பார்வை பார்த்த மனையாளை கண்டு ஒரு நிமிடம் அதிர்ந்தவன் அவளின் விழியின் ஈர்ப்பில் அசையாது நின்றுவிட்டான்.
இறுதியாக பெரும் அலறலில் அவனின் ஆண் மகவு பிறந்தது. தனது மனைவியின் அலறலுக்கு பின் குழந்தையின் அழுகை என இரண்டும் கதிரவனை சிலிர்க்க வைக்க தனது மனையாளையே அவனறியாது பார்த்துக்கொண்டே இருந்தான்.
தீப்பந்தம் போன்றவன் நான் தீபமென்று மாறிவிட்டேன்…..
புயலுக்கு பிறந்தவள் நான் தென்றலென்று மாறிவிட்டேன்……
கருங்கல்லைப் போன்றவன் நான் கற்பூரம் ஆகிவிட்டேன்…….
சந்திரனை தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா அடி ஆம்ஸ்ட்ராங்கா…..
சத்தியமாய் தொட்டது யார் நான்தானே அடி நான்தானே……
கனவு தேவதையே நிலவு நீதானே உன் நிழலும் நான்தானே ஆ……