மறுநாள் புண்ணியதானம் செய்து கதிரவன் எழில்விழி தம்பதி அவர்கள் மகனிற்கு கண்ணாயிரம் என பெயர் வைத்து விழாவை முடித்துவிட்டு அனைவரும் கிளம்பிவிட கதிரவனும் மதியம் போல் கிளம்பிவிட்டான்.
வீட்டில் எழில்விழியும் அவளின் ரெண்டாவது அக்கா சரசுவும் பாத்திரத்தை துலக்கி கொண்டிருக்க கண்ணாயிரம் தொட்டிலில் உறங்கிக்கொண்டிருந்தான். அன்னலெட்சுமி வீட்டை சுத்தப்படுத்திக்கொண்டிருந்தார்.
பாத்திரத்தை துலக்கிக்கொண்டு சரசு எழில்விழியிடம்,
“ ஏன் எழிலு இது என்ன பேரு??… இத வைக்கதான் அன்னைக்கு நான் என்ன பேரு வைக்கபோறன்னு கேட்டதுக்கு என் வீட்டுக்காரர்கிட்ட கேட்டுதான்….. சொல்லுவேன்னு சொன்ன???” என சலிப்படைய,
அதற்கு எழில்விழியோ முகம் தெளியாமல் ஒரு வித கோவம் எரிச்சல் அழுகை என அனைத்து உணர்வுகளின் பாவனையுடன்,
“ அட அக்கா!!!….. அது என் மாமியார் அப்பா பேராம். அதைத்தான் வைக்கணும்ன்னு சொல்லி வச்சுட்டாங்க. நான் எவ்வளவு அழகா பேரு செலக்ட் பண்ணி வச்சிருந்தேன் தெரியுமா??…. ம்ப்ச் இப்போ நினைச்சாலும் எனக்கு கடுப்பா வருதுக்கா. உன் கொழுந்தன்கிட்ட கேட்டா சத்தம் போடுறாரு” என கண்கள் கலங்கியவாறு பேசிய தங்கையை கண்டு தனது கையில் இருந்த பாத்திரத்தை கீழே வைத்துவிட்டு எழில்விழியை அணைத்தவாறு,
“ அட பாவத்தை!!!… நான் கூட ஏதோ வேண்டுதல் போல அதான் இந்த பேருன்னு நினைச்சேன். இது அந்த காட்டனை பண்ணுன வேலையா??….” என சரசு தெய்வானையை திட்ட உடனே
“ அக்கா என் மாமியரை எதையாவது சொல்லி திட்டாத. பெரியவங்கள அப்படி பேசகூடாது. ஒரு வேலை நீ இப்படி காட்டானைன்னு சொல்லி பழகிடுச்சுனு வை அவுங்க முன்னாடியும் இதே தான் வரும். அதனால அப்படி சொல்லாத” என எழில்விழி கூற
“ அக்கா அது அவுங்களுக்கான மதிப்பு இல்ல உன் கொழுந்தனுக்கு நான் குடுக்குற மதிப்பு. உன் கொழுந்தன் எப்பவும் என்னைய அவுங்க அம்மாகிட்டகூட விட்டுகுடுத்தது இல்ல. அதே மாதிரி அவுங்க கூட இருக்குறப்போ எனக்கு தனிமையை குடுத்தது இல்ல. ஏன் எவ்வளவோ சண்டை போட்டாலும்…….” என எழில்விழி பேசிக்கொண்டிருக்கையில்
“ ஒரு சின்ன திருத்தம் எழிலு. சண்டைன்றது ரெண்டு பேரு போடுறது. ஒருத்தர் மட்டும் திட்டுறது ஒருத்தர் திட்டுவாங்குறது சண்டைல சேத்தி இல்ல” என சரஸ்வதி கூற அதில் கடுப்பான எழில்விழியும் அக்காவை முறைத்துக்கொண்டு,
“ சரி சண்டை இல்ல. அவரு எவ்வளவு திட்டுனாலும் ஒரு நாளு நம்ம அப்பா அம்மா ஊரு குடும்பம்ன்னு சொல்லி திட்டுனதே இல்ல அப்பிடிபட்டவங்க சொந்தத்தை எப்பவும் நான் மதிக்கணும்தானே அக்கா” என எழில்விழி கூற
“ நல்லா மதி ஆத்தா. உன் புருஷன் உன் மாமியார் உன் குடும்பம். நாளைக்கு இன்னொரு பிள்ளை பிறந்தா மூக்கு தொள்ளாயிரம்ன்னு பேரு வைப்பாங்க அப்பவும் இப்படி அழுதுகிட்டு இரு எனக்கு என்ன??…”
“ அக்கா கோச்சுக்காதீங்க என் மனசுல வந்த ஆதங்கத்தை உங்க கிட்டத்தானே கொட்டமுடியும்”
“ ஹம்ம்ஹும்….. நல்லா கொட்டுன போ. உன் மாமியார் பேரை ஒன்னும் நான் கிண்டல் பண்ணல தெய்வம்ன்னா இங்கிலீஷுல காட் தானே. காட் கூட்டல் ஆனை காட்டானை” என தெய்வானைக்கு பெயர் விளக்கம் குடுத்த சரஸ்வதியை எழில்விழி பயங்கரமாக முறைக்க,
“ என்ன முறைக்குற??…. ஏண்டி பிள்ளைக்கு வைச்ச பேரை எப்படி கூப்புடறது கண்ணுன்னா இல்ல ஆயிரம்ன்னா. நாளைப்பின்ன பள்ளிக்கூடத்துல பிள்ளையை கிண்டல் பண்ண மாட்டாங்க”
“ ஆமா உனக்கு சரஸ்வதின்னு பேரு வச்சு பள்ளிகூடத்துல எல்லாரும் சரசுக்கு ராரான்னு சொல்லி கூப்புட்டு கிண்டல் பண்ணுறாங்கன்னு சொன்ன. இதோ எழிலை எலின்னு சொல்றாங்கன்னு பள்ளிகூடத்துக்கே போ மாட்டேன்னு அடம்பிடுச்சா. அதுக்கு என்ன செய்றது. எந்த பேரு வச்சாலும் கிண்டல் பண்ணுறவன் பண்ணத்தான் செய்வான். அதுக்காக நாம வாழமுடியுமா??….” என அன்னலெட்சுமி கேட்டுக்கொண்டு சரஸ்வதி எழில்விழியிடம் வர
“ ஹ்ம்ம் நீ சொல்லுவம்மா. ஆனா இப்போ உலகம் எப்படி மாறிக்கிட்டு வருது. இப்ப போய் இந்த பேரு” என சரஸ்வதி மீண்டும் புலம்ப அன்னலெட்சுமி எழில்விழியிடம் திரும்பி,
“ ஏன் எழிலு அன்னைக்கு உன்கிட்ட உங்க அப்பா பேப்பரை பார்த்து எதோ குளுகுளு தலைவர் ஒருத்தர் இருக்காரு. அவரு பேரு கூட எதோ பிச்சைன்னு சொன்னாரு அவரு யாரு??….” என அன்னலெட்சுமி கேட்க
“ அம்மா அது குளுகுளு இல்ல கூகிள். அதோட CEO தான் சுந்தர் பிச்சை “
“ பார்த்தியா இவரு பேரை எல்லாம் எத்தனை பேரு கிண்டல் பண்ணிருப்பாங்க. ஆனா அதை எல்லாம் தாண்டிதான் வந்துருப்பாரு. சும்மா பேரு வச்சதுக்கு எல்லாம் கண்ணு கலங்குவியா??… உலகம் பழிக்குமேன்னு எல்லாம் நாம வாழமுடியாது போ போயி கண்ணா எழுந்துட்டானான்னு பார்த்து பாலை கொடு” என அன்னலட்சுமி எழில்விழியை அனுப்ப,
ஏனோ அன்னையின் பேச்சில் அதுவரை இருந்த பேரு பற்றிய மன சஞ்சலம் எழில்விழிக்கு குறைய தெளிந்த மனதுடன் எழுந்து சென்றாள்.
எழில்விழி எழுந்து சென்ற பின் சரஸ்வதி அன்னலெட்சுமியை பார்த்துக்கொண்டே,
“ ஏம்மா மனசாட்சி தொட்டு சொல்லு உனக்கு இந்த பேரு பிடிச்சுருக்குன்னு??….” என கேட்க
“ அட நீவேறடி….. நானே கடுப்புலதான் இருக்கேன். அதுக்கு என்ன பண்றது. எழிலபத்தி எனக்கு நல்லாவே தெரியும். இவ இதை மனசுல வச்சு கஷ்டப்பட்டுக்கிட்டே இருப்பா. சாதாரண பேரு விஷயத்துக்கு எல்லாமா வாழ்க்கைல நாம சோர்ந்துபோறது. அதான் அவகிட்ட அப்படி பேசுனே.
அதோட கண்ணா வளர்ந்து அவனுக்கு பிடிக்கலைன்னா மாத்திக்கிட்டு போறது இதுக்கு போட்டுக்கிட்டு அழுதுகிட்டு இருக்கறதா. நானே உங்க அப்பா நண்பர் அந்த நொள்ளக்கண்ணு கண்ணாயிரத்தை நக்கல் பண்ணுனதுதான் என் பேரனுக்கு ஆண்டவன் இந்த பேரை வச்சுட்டான்போலன்னு நினைச்சுகிட்டு இருக்கேன். நீ வேற அவகிட்ட சும்மா சும்மா பேரை பத்தி பேசாத” என கூறி அன்னலெட்சுமியும் நகர்ந்துவிட சரஸ்வதியும் அவர் வேலையை பார்க்க சென்றுவிட்டார்.
பின் மூன்று மாதங்களும் ஓடிவிட அன்று மனைவி மகனை அழைக்க ஸ்வாமிநாதன் தெய்வானையுடன் கதிரவன் வெங்கடேசன் வீட்டிற்கு வந்திருக்க, அனைவரிடமும் விடைபெற்று மனைவி மகனுடன் புதுக்கோட்டைக்கு வந்தான்.
அதில் தெய்வானைக்கு மன சுணக்கம் தான். ஆனால் அவன் முன்னரே கூறிவிட்டான் அவன் குடும்பம் புதுக்கோட்டையில் அவன் கூடத்தான் என. இதில் மறுத்து கூறினாலும் அவன் கேட்கபோவது இல்ல என அறிந்து பெற்றவர்கள் எதுவும் கூறவில்லை.
வீட்டிற்கு வந்து ஒன்பது மாதங்கள் முடிந்த நிலையில் கதிரவன் எழில்விழி தம்பதிக்கு வாழ்க்கை நன்றாகத்தான் சென்றது. சிறு சிறு சண்டைகள், நிறைய அக்கறைகள், சிறு புரிதல் உணரப்படாத ஆணின் காதல், ஸ்வாசிக்கப்பட்ட பெண்ணின் காதல், கணவனின் கர்வம் மனைவியின் ரசிப்பு என இவர்களின் வாழ்க்கை மழலை மொழியோடு காதல் மொழி சிறுது கலந்து சென்றது.
எப்பொழுதும் கதிரவன் வீட்டில் இருக்கையில் கண்ணா அவனின் அரவணைப்பில் தான் இருப்பான். உணவு உண்ணும்போது கூட மடியில் மகனை வைத்துக்கொண்டுதான் உண்பான். அதிகபட்சம் வீட்டில் அவன் இருக்கும் நேரங்களில் அவனே கூறிவிடுவான்.
“ விழி கண்ணாவ நான் பார்த்துக்கறேன் அதுக்குள்ள சமையல் துவைக்குறது எல்லா வேலையும் முடிச்சுக்கோ” என மகனின் பொறுப்பை எடுத்துக்கொள்ள அதில் எழில்விழி கணவனை இன்னும் நேசிக்க ஆரம்பித்தாள்.
‘ பாரே எழிலு சாப்புடறப்போ தண்ணி கேட்டாகூட எடுத்துக்கொடுக்க மாட்டாரு இன்னைக்கு மகனை பார்த்துக்கறேன் வேலைய பாருன்னு சொல்றாரு.என்னமோ போ எழிலு உன்னைய புரிஞ்சுக்க ஆரம்பிச்சுட்டாரு போல’ என அவளின் காதல் கொண்ட மனம் எண்ணி மகிழ்ந்துகொள்ளும்.
அன்று கண்ணா உறங்கிக்கொண்டிருக்க எழில்விழி அவளின் சட்டையில் எதோ ஊசி வைத்து தைத்துக்கொண்டிருக்க அதனை கண்டு கதிரவன்,
“ என்ன விழி செய்ற??…” என கேட்க
“ அதுவா நான் கன்ஸீவா இருந்தப்போ கொஞ்சம் எடை போட்டேன்ல அப்போ சட்டை எல்லாம் பிரிச்சுவிட்டேங்க. இப்போ கொஞ்சம் கிறங்குனவுடன் பெருசா லூசா இருக்கு அதான் ஊசி வச்சு தைக்குறேன்” என கூறி அவள் வேலையை தொடர அன்றிலிருந்து நாலாவது நாள் கையில் தையல் இயந்திரத்துடன் வீட்டிற்கு வந்தான் கதிரவன்.
அதனை கண்டு,
“ என்னங்க தையல் மெஷின் வாங்கிருக்கிங்க??…” என எழில்விழி ஆச்சரியமாக கேட்க கதிரவனோ,
“ நீதான் கையில தைக்குற. மெஷின் இருந்தா உன் தோதுக்கு தச்சுக்குவல அதான். அப்புறம் தம்பி கொஞ்சம் வளர்ந்த அப்புறம் நீ தையல் கத்துக்கோ. நான் பணம் கட்டி சேர்த்துவிடுறேன்” என கூறிவிட்டு கதிரவன் சென்றுவிட
அன்று வேலைக்கு செல்ல கூடாது என கூறியவன் இன்று அவளுக்கு தேவையான ஒன்றை செய்துகொள்ள உதவியது கற்றுக்கொள்ள உதவுவது என அவனின் பரிமாணத்தில் அசந்து நின்றாள்.
‘ இவுங்கள புரிஞ்சுக்க இன்னும் நமக்கு ஒரு ஜென்மம் வேணும் போல’ என எண்ணி மகிழ்ந்தாள்.
நாட்கள் அதன் போக்கில் செல்ல கண்ணாயிரத்தின் இரண்டு வயது முடிந்த நிலையில் அன்று அவன் வீட்டு வாசலில் மணலில் விளையாடிக்கொண்டிருக்க,
சிறுது மண்ணை அள்ளி வாயில் வைத்து உண்ண அதனை கண்டு வேகமாக அவனின் கையை தட்டிவிட்டு,
“ ஏய்!!!!… என்னடா??.. சீ…. மண்ணை திங்குற” என கதிரவன் கத்த
திடீரென தந்தையின் சத்தத்தில் கையில் அடித்ததில் ஓவென அழ ஆரம்பித்த குழந்தையை கண்டு,
“ டேய்!!… என்னடா எதுக்கு இப்போ கத்துற” என தூக்கி குழந்தையை சமாதானம் செய்த கதிரவனிற்கு அடங்காது
“ ம்மா….. ம்மா…..” என கத்தி கண்ணாயிரம் அழ அந்த சத்தத்தில் வேகமாக வாசலுக்கு வந்த எழில்விழி கண்டது குழந்தையை கையில் வைத்து சமாதானம் செய்யும் கதிரவனும் அவனின் சமாதானத்திற்கு ஒத்துவராது அழுகையை தொடர்ந்த குழந்தையும்தான். வேகமாக அவர்களை நெருங்கி,
“ என்னங்க என்னாச்சு??… எதுக்கு கண்ணா அழுறான்?…” என கேட்டுக்கொண்டே எழில்விழி குழந்தையை தூக்க அன்னையிடம் சென்றவுடன் அழுகையை நிறுத்தி அன்னையின் தோளில் சாய்ந்துகொண்டு,
“ ம்மா…. ம்மா…. ப்பா என்ன அச்சு” என குறை கூறி ஊ…. ஊ…. என கையை உதறிகாட்டிய அழகில் கதிரவன் சிறு புன்னகையுடன்,
“ ஏன் அடிச்சேன்னு சேர்த்து சொல்லுடா” என கூற அதில் குழந்தை கண்களை உருட்டி முழித்து அன்னையின் தோளில் முகத்தை மறைத்துக்கொண்டான்.
அவனின் விழி அசைவில் மயங்கி குழந்தையின் தலையை வாஞ்சையுடன் தடவி எழில்விழியிடம்,
“ குழந்தைகூட உன்னைய மாதிரி பெத்துவச்சுருக்க. என்னால அவன்கிட்ட கூட கோவத்தை காட்ட முடியலப்போ” என கூறிவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட
“ எதே!!!…. மகனே உங்க அப்பாவுக்கு கோவப்பட முடியலையாம்டா அதிசயம்தான் போ. ஆனாலும் நீ பிறந்ததுக்கு அப்புறம் மம்மி கொஞ்சம் திட்டு வாங்குறதை குறைச்சுருக்கேன். அது நான் நடந்துக்குறதால இல்ல உங்க அப்பா மாறிட்டாரான்னு தெரியல. ஆனா இதுவும் நல்ல தான் இருக்கு” என கூறிவிட்டு அவளும் மகனுடன் வீட்டினுள் சென்றுவிட்டாள்.
ஒரு மாதம் கடந்த நிலையில் அன்று ஒரு மாதிரி சோம்பலாக இருக்க எழில்விழி தாமதமாக எழுந்து சமையலை செய்ய அதற்குள் வேலைக்கு கிளம்பியவன்,
“ விழி சமையல் ரெடியா??…” என கேட்க
“ இதோ இன்னு பத்து நிமிஷம்ங்க” என வேகமாக எழில்விழி கூற
“ என்னது பத்து நிமிஷமா??… அப்போ நீயே சாப்ட்டுக்கோ எனக்கு சாப்பாடு வேணாம்” என கூறி சென்றுவிட கணவன் உணவை தவிர்த்து சென்றதில் மனம் வருந்தியவள்,
“ சரியான லூசுடி நீ அவரு நேரத்துக்கு கிளம்புறவரு அப்பிடி என்ன தூக்கம் உனக்கு” என தன்னையே கடிந்துக்கொண்டு மகனை பார்க்க சென்றுவிட்டாள்.
ரெண்டு நாள் கடந்து அன்று கதிரவன் எழில்விழியிடம்,
“ விழி என் யூனிபோர்ம்க்கு பட்டன் மாட்டிட்டியா??….” என கதிரவன் கேட்க சோர்வாக எழுந்துவந்தவள்,
“ அச்சச்சோ மறந்துட்டேங்க” என கூறி பட்டனை மாற்ற போக
“ ஒன்னும் தேவை இல்ல நானே பார்த்துக்கறேன். உன் வேலையை பாரு” என கூறிவிட்டு அவன் வெளியில் சென்றுவிட அதில் கண்கள் கலங்கியவாறு,
“ ம்ப்ச் என்ன எழிலு இப்படி சொதப்புற. என்னதான் பிரச்சனை உனக்கு. இப்படி சோர்ந்து சோர்ந்து வருது அதை அவருகிட்ட சொல்லவும் மாட்டேங்குற. உனக்கு வேலை செய்யவும் முடியல. என்னன்னு தெரியல. இதுல இவரு கோச்சுக்குறாரு வேற” என அவளையே திட்டிக்கொண்டு அமைதியாக நாற்காலியில அமர்ந்தாள்.
மகனும் உறங்கிக்கொண்டிருக்க அவளும் தன்னை பற்றி தன்னுடைய உடல்நிலை பற்றி சிந்தனையில் இருக்க வெளியில் சென்ற கதிரவன் வீட்டிற்குள் வந்தான்.
அவன் வந்ததைகூட உணராது சிந்தனையில் இருந்தவள் முன் கதிரவன்,
“ விழி ” என அழைத்தான். அந்த சத்தத்தில் கணவனை நிமிர்ந்து பார்த்து எதோ ஒரு நியாபகத்தில் எழில்விழி கணவனை கண்டு முழிக்க,
“ ஹ்ம்ம் அவ்வளவு தூரம் ஏத்தம் ஆகிடுச்சு. புருஷன் நான் வந்ததும் தெரியல. நான் நிக்குறேன் நீ உட்கார்ந்துருக்க ஹ்ம்ம்” என அழுத்தமாக கூறி அவளை கூர்மையாக பார்க்க திருமணம் ஆன புதிதில் பேசும் தோரணையில் பேசும் கணவனிடம் பயம் வர வேகமாக எழுந்தவள்,
“ இல்லங்க நான் கவனிக்கல நீங்க வந்ததை” என எழில்விழி கூற
“ ஓ!!… வீட்டு கதவு திறந்து இருக்கு நான் வந்தது கூட தெரியாத அளவுக்கு மேடத்துக்கு என்ன யோசனை??….” என மீண்டும் அந்த அழுத்தமான குரலில் கேட்க
“ இல்லங்க எனக்கு உடம்பு அடிக்கடி சோர்ந்து சோர்ந்து வருது. சாப்பிட்டா நெஞ்சு எல்லாம் அடைச்சுக்குறாப்புல இருக்கு. அதை பத்தி யோசிச்சுகிட்டு இருந்தேன்” என சோர்வாக கூறியவளை கண்டு
“ ஓ!!… அதான் நீ நேரத்து சமைக்காம வேலை செய்யமா இருக்கியா??…ஹாஸ்பிட்டல் போவோமா?…”
“ இல்லங்க வேணாம் பார்த்துக்குவோம். இன்னும் ரெண்டு நாலுல சரி ஆகலன்னா போவோம்ங்க”
“ பேசாம வேலைக்கு ஆளுவச்சுக்குவோமா??…” என கதிரவன் கேட்க
“ இல்லங்க வேணாம்”
“ ஏன் வேணாம் அதுக்குதான் உடம்பு முடியாத மாதிரி ட்ராமா போடுற” என கதிரவன் கேட்க அதில் அதிர்ந்து,
“ என்னங்க என்ன சொல்றிங்க நான் எதுக்கு ட்ராமா போடணும்” என அழுகையுடன் கேட்க
“ வேற எதுக்கு வேலை செய்ய முடியல. உட்கார்ந்து சொகமா இருக்கலாம்ன்னு நினைச்சு உடம்பு முடியலன்னு சொல்லிக்கிட்டு இருக்க.அதான் ஹாஸ்பிடல் கூப்டாலும் வர மாட்டேங்குற. அது எப்பிடி திடீர்ன்னு ஒரு அஞ்சு நாலுல முடியாம போகுமா??…” என கதிரவன் எள்ளலாக கேட்க அதற்கு பதில் கூட குடுக்க தோணாது எழில்விழி அமைதியாக மகனை காண செல்ல,
“ ஓ!!!… பேசிக்கிட்டு இருக்கையில் எழுந்து போற அளவுக்கு எனக்கு இந்த வீட்டுல மரியாதை இல்லாம போச்சு” என கத்திவிட்டு கதிரவனும் வெளியே சென்றுவிட இரவு உணவை மகனுக்கு குடுத்துவிட்டு சிறுது நேரம் விளையாட விட்டு உறங்கவைத்தாள் எழில்விழி.
ஏனோ மனது விரக்தியாக எண்ணிக்கொண்டிருந்தது.
‘ என்ன வாழ்க்கை இது. உடம்பு முடியலைன்னு சொல்லக்கூடாதா??… அதுவும் ட்ராமான்னு சொல்றாங்க??…. அப்படி என்ன பண்ணிட்டேன் நானு. எப்போ பார்த்தாலும் எதாவது சொல்றது .
சரி கல்யாண ஆனா புதுசுல எதோ நம்மள தெரியாது அப்படி பேசுறாங்கன்னு அமைதியா இருந்தா கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆக போகுது. இன்னும் நம்மள நோகுறமாதிரி பேசுறாங்க. அப்போ நம்ம மேல நம்பிக்கை இல்லையா??…. அந்த நம்பிக்கையை நேசத்தை நான் குடுக்கலையா??….
அப்படித்தான் மூணு நாளைக்கு முன்னாடி கொஞ்சம் காரத்தை கூட போட்டதுக்கு என்ன காரத்தை போட்டு என்னைய கொல்ல பாக்குறியான்னு கேட்குறாரு. அந்த வார்த்தை எல்லாம் மறக்கவே நான் ரொம்ப கஷ்டப்பட்டா….. இப்போ உடம்பு முடியலைன்னு ட்ராமா போடுறேன்னு சொல்லறாரு. என் மனசு வலிக்குதுன்னு இவருக்கு தெரியுதா இல்லையா??…
அப்போ நான் வாழுற வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் ஒவ்வொரு தடவையும் நான் பயந்து பயந்து தான் இருக்கணுமா….” என பலவாறு மனதை குழப்பிக்கொண்டிருந்தவள் உறங்கிவிட,
கதிரவன் தன்னிடம் இருந்த இன்னொரு சாவி கொண்டு கதவை திறந்து வீட்டிற்கு வர அங்கு தரையில் கண்களில் கண்ணீர் தடங்களுடன் உறங்கிக்கொண்டிருந்த எழில்விழியிடம் சென்றவன் அவளின் தலையை தடவி சிறுது நேரம் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
அவனுக்கே தெரிந்தது இன்று தான் பேசியது அதிகபடியான வார்த்தை என. அவனுடைய வீட்டில் கணேசன் சாரதா திருமணம் முடிந்து ஒரு குழந்தை பிறந்தவுடன் சாரதா அடிக்கடி உடம்பு சரி இல்லை என கூறி வீட்டில் வேலை செய்யாது வேலைக்கு ஆள் வைக்க சொல்லி சண்டை போட்டது எல்லாம் நினைவுவர கோவத்தில் வார்த்தைகளை விட்டான்.
காலையில் பேசி எழில்விழியை சரி செய்து மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என எண்ணி கதிரவன் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்த எழில்விழியை தூக்கி படுக்கையில் படுக்க வைத்து அவளை அணைத்துக்கொண்டு உறங்கிவிட,
சிறுது நேரத்தில் கணவனின் அணைப்பில் விழிப்பு தட்டிய எழில்விழி மெதுவாக அணைவாக இருந்த கணவனின் கையை மெதுவாக விலக்கிவிட்டு சற்று தள்ளி படுத்துக்கொண்டாள்.
அவளின் விலகளில் விழித்த கதிரவன் அவளை ஆழ்ந்து பார்த்துக்கொண்டே இருந்தான். முதல் முறை அவன் மனதில் அவனின் கர்வத்தில் சிறு அடி. ஏனெனில் திருமணம் ஆகி இத்தனை நாட்களில் கணவனின் அணைப்பை விலக்குவது எழில்விழிக்கு இதுவே முதல் முறை. அந்த விலகல் கதிரவன் மனதில் சிறு வலியையும் கோவத்தையும் குடுக்க அவனும்,
‘ சரிதான் போடி உன்கிட்ட கெஞ்சுவேன் மன்னிப்பு கேட்பேன்னு நினைச்சியா…..’ என எண்ணிக்கொண்டு வேகமாக திரும்பி பத்துக்கொண்டான்.
அவனின் விலகளில் பெண்ணவளின் மனம் மேலும் காயம் கொள்ள,
‘ என்னைக்குத்தான் இவரு என்னை பத்தி என் மனசை பத்தி யோசிச்சுருக்காரு’ என விரக்தியாக எண்ணிக்கொண்டு கண்களை மூடினாள் எழில்விழி.