“ சொல்லு விழி இதான் மரியாதையா??…” என கோபத்துடன் கேட்ட கதிரவனுக்கு என்ன பதில் கூறுவது என தெரியாது
“ இல்லங்க அப்படி நினச்சு சொல்லல. ஆனா இனிமே உங்க பேரை சொல்ல மாட்டேன் ” என கூறிய விழியின் நீரில் சற்றே கோவம் மட்டுப்பட
“ சரி வா போலாம் ” என கூறி எப்பொழுதும் போல தனது வேக எட்டுகளுடன் நடந்த கதிரவனை கண்ணீரை துடைத்துகொண்டு தொடர்ந்தாள்.
ஆனால் வரும் போது இருந்த இதம் இல்லாமல் வெறுமையான மனதுடன் வீட்டினை அடைய கதிரவன் அறைக்குள் சென்றுவிட்டான்.
எழிலின் முகத்தை பார்த்த வாணி என்ன என விசாரிக்க நடந்ததை ஏனோ கூற மனம் வராத எழில் “ ஒன்னு இல்ல அண்ணி ” என கூறி சமாளிக்க பார்த்தாள்.
“ ஹ்ம்ம் உங்க தம்பி திட்டாம இருந்தாதான் அதிசயம். எதாவது சொல்லிருப்பாரு கொழுந்து அதானே ” என சாரதா எழிலிடம் கேட்க
அப்பொழுதும் ஒன்றும் கூறாது சிறு புன்னகையுடன்,
“ அண்ணி மதியத்துக்கு எதுவும் செய்யணுமா??? ” என கேட்க
“ அது எல்லாம் நாங்க பார்த்துக்குறோம் நீ கொஞ்சம் நேரம் படுத்து எழுந்திரு. முகமே வாட்டமா இருக்கு ” என கூறி வாணி எழிலை அறைக்கு அனுப்பிவிட்டு மற்றவர் மதிய உணவுக்கு சமையலில் ஈடுபட,
“ அண்ணி பாப்பாவுக்கு தூக்கம் வருது. நான் தூங்க வச்சுட்டு வரேன் ” என கூறி சாரதா எப்பொழுதும் போல நகர பார்க்க
அதனை கண்ட ஜெயா.
“ பார்த்து அண்ணி பாப்பா மதிய சாப்பாடு வேளை தாண்டியும் தூங்கிடபோது. சாப்பிட்டனும்ல வந்துருங்க சாப்டறதுக்கு ” என நக்கலாக கூற தெய்வானை அருகில் இருந்ததால் எதுவும் கூறாது கடுப்புடன் சாரதா நகர்ந்துவிட,
“ ஏன்டி அவுங்ககிட்ட வம்பளக்குற??…. ” என வாணி ஜெயாவை கடிய
“ பின்ன என்னக்கா நாம எப்ப வந்தாலும் சமைக்குறப்போ எல்லாம் பாப்பாவை தூங்க வைக்கப் போறேன். தலைவலி இந்தா வந்துடுறேன் அந்தா வந்துடுறேன்னு சொல்லிட்டு கரெக்ட்டா சாப்பிடற நேரத்துக்கு வந்து, ‘ என்ன அண்ணி அதுக்குள்ள சமச்சிட்டிங்களா நான் வந்துருப்பேன்லன்னு’ கடுப்பேத்றது ” என ஜெயா சாரதாவை வறுத்தெடுக்க
“ ஏய்!!… சும்மா இருடி பாவம் அவளே பிள்ளைய வச்சு சிரமப்படுறா அதான் கொஞ்சம் முன்ன பின்ன ஆகுது. உனக்கு சமைக்க கஷ்டமா இருந்தா நீ போ நான் பார்த்தருக்குறேன் ” என தெய்வானை எப்பொழுதும் போல சாரதாவுக்கு ஆதரவாக வர
அதில் வாணியும் ஜெயாவும் தெய்வானையை முறைத்துவிட்டு தங்கள் சமையல் பணியை தொடர்ந்தனர்.
அறைக்கு வந்த எழில்விழி கதிரவனை காண அவன் தூங்க ஆயத்தமாக அதனை கண்டு ஒன்றும் பேசாது,
அறையில் வந்தவுடன் எதுவும் பேசாமல் அமைதியாக நிற்கும் எழில்விழியை கண்டு,
“ என்ன நிக்குற எதுவும் வேணுமா??? ” என கதிரவன் கேட்க
“ ஒன்னும் வேணாங்க ”
“ சரி அப்போ கொஞ்ச நேரம் தூங்கி எழுந்திரி ” என படுக்கையில் சற்று நகர்ந்து படுத்து எழில்விழிக்கு படுக்க இடம் விட எதுவும் பேசாது அமைதியாக எழில்விழியும் படுத்துக்கொண்டு கண்களை மூடிக்கொள்ள சிறுது நேரத்தில்,
எழில்விழிக்கு “ விழி……” என்ற கதிரவனின் குரலில் அடித்து பிடித்து எழுந்தமர
“ ஏய்!!… என்ன நான் எப்ப கூப்பிட்டாலும் பதறிக்கிட்டே இருக்க. என்ன இப்போ விழின்னு தானே சொன்னே ” என கம்பீர குரலில் கேட்ட கதிரவனிடம்
“ சும்மா சட்டுன்னு கூப்பிட்டவுடனே பக்குன்னு இருந்துச்சு வேற ஒன்னும் இல்லங்க ” என மெதுவாக எழில்விழி கூற
“ சரி இந்தா போன் உங்க அம்மா பேசணும்ன்னு கூப்பிட்டு இருந்தாங்க நீ கீழ இருக்கும் போது. இந்தா பேசிடு ” என கால் செய்து அலைபேசியை எழிலிடம் குடுத்துவிட்டு கதிரவன் படுத்துவிட,
அவனின் பரிமாணத்தில் அவனை பார்த்துக் கொண்டே போனை காதில் வைத்த எழில்விழி,
“ எழிலு… ” என கேட்ட அன்னலெட்சுமியின் குரலில்
“ அம்மா ” என கலங்கிய குரலில் அழைத்தாள்.
அவளின் குரலில் இருந்த கலக்கத்தில் பதறிய அன்னலெட்சுமி,
“ ஆத்தா!!!… எழிலு என்னத்தா உன் குரலே சரி இல்லையே. எதுவும் பிரச்சனையா???… அம்மா வரவாத்தா பார்க்க ” என கலங்கி கேட்க
அன்னையின் குரலின் பதட்டத்தில் தன் கண்ணீரை உள்ளிழுத்து குரலை செறுமியவாறு
“ ம்மா ஒன்னும் இல்ல நான் நல்லா இருக்கேன் உன் குரல் கேட்டவுடனே அழுகை வந்துடுச்சு ”
“ அடி கூறுகெட்ட கழுதை கொஞ்ச நேரத்துல நான் பயந்திட்டேன் என்னமோ ஏதுன்னு. சரி மருமகன் உன்னைய நல்ல பார்த்துக்குறாப்லயா ”
“ ஹ்ம்ம் பார்த்துக்குறாங்கம்மா ”
“ சரி சரி நாளை மறுநாள் மறுவீடு விருந்துக்கு அழைக்க சரசும் மருமகனும் வராங்க. ஸ்வாமிநாதன் அண்ணாகிட்டையும் மாப்பிள்ளைக்கிட்டயும் அப்பா பேசிட்டாங்க சரியா ”
“ ஹ்ம்ம் சரிம்மா ” என சிறுது நேரம் நேரம் அன்னலெட்சுமி வெங்கடேசனிடமும் பேசிவிட்டு போனை வைத்துவிட்டு கதிரவனை பார்க்க நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான்.
இன்னும் ஒரு நாளில் அம்மா வீட்டிற்கு செல்ல போகிறோம் என்ற சந்தோஷத்தில் காலையில் நடந்த விஷயம் கோவிலில் நடந்த விஷயம் அனைத்தும் பின்னுக்கு சென்றுவிட சந்தோசமாக படுக்க சென்றாள்.
சந்தோஷத்தில் கண்ணை மூட மூடிய விழிகளில் “ மரியாதை இல்லாம என் பேரை சொல்லுவியா சொல்லவியா????….. ” என கதிரவன் உலுக்குவது போல தோன்றிட வேகமாக எழுந்தமர்ந்தாள்.
பின் மூச்சுவாங்க கதிரவனை காண அவன் அசந்து தூங்கிக்கொண்டிருந்தான்.
“ ஹ்ம்ம் இவுங்க நல்ல தூங்குறாங்க. ஆனா, எனக்கு அடுத்து எதுக்கு திட்டுவாங்குவோம்ன்னு பயத்துலையே தூக்கம் வரமாட்டேங்குது.
ஆனா இந்தா ரெண்டு நாளுல நான் கண்டுபிடிச்ச ஒரு நல்ல விஷயம் இவுங்க என்ன சத்தம் போட்டாலும் அதை அப்பொழுதே விட்டுடுறாங்க. திரும்ப திரும்ப அதை பத்தி பேசி சண்டை பிடிக்கமாட்டாங்க போல ” என கதிரவனை பற்றி ஆராய்ச்சியில் தன்னை அறியாது சிறுது நேரத்தில் கண்ணயர்ந்துவிட கதிரவன் அலைபேசியின் சத்தத்தில் முதலில் கண்விழித்தான்.
“ ஹலோ ”
“ கதிரு ” என வாணி அழைக்க
“ ஹ்ம்ம் என்னக்கா??? ”
“ மணி ரெண்டு ஆச்சுடா சாப்பிடலாம் எழில்விழிய கூட்டிட்டுவா ” என கூற
“ ஹ்ம்ம் சரிக்கா இதோ வரோம் ” என கூறி அலைபேசியை அணைத்துவிட்டு எழில்விழியை காண சிறுகுழந்தைபோல் இதழ் பிரித்து நன்றாக அசந்து தூங்க ஏனோ மனைவியை எழுப்ப மனம் வரவில்லை கணவனுக்கு.
இருந்தாலும் உணவு உண்ண நேரமாவதை உணர்ந்து எழிலின் கன்னத்தில் இதழ் பத்தித்து விழி என அழைக்க,
அந்த குரலில் சட்டென்று எழுந்தமர்ந்தாள் அது கதிரவனின் அழைப்பாலா இல்ல முத்தத்தாலா என்பதை அவள் மனம் அறிந்த ஒன்று.
பின் இருவரும் உணவு உண்ண செல்ல காலையில் போல இருவரையும் சேர்ந்து வாணி உணவு உண்ண சொல்ல உடனே தெய்வானை,
“ வாணி எதோ புதுசு சரி காலையில ஒன்னா உட்காரவைச்சு சாப்பிட சொன்ன. இப்பயும் அப்பிடின்னா அப்போ எப்போதான் புருசனுக்கு பரிமாறுறது. எழிலு கதிருக்கு நீ சாப்பாடு போடு ” என கூறிவிட்டு அனைவருக்கும் பரிமாற தெய்வானை சென்றுவிட
கதிரவனுக்கு பரிமாறவேண்டும் என கூறியவுடன் எழில்விழிக்கு கைகள் நடுங்க ஆரம்பித்துவிட்டது.
‘ போச்சு காலையில ஒரு வாய் டீக்கு அந்த பேச்சு வாங்குனே இப்போ சாப்பாட்டுல என்ன வாங்கபோறேனோ ’ என பயந்து
கதிரவன் அமர்ந்திருந்த இலையின் முன்னே குனிந்து சாதத்தை வைக்கப்போக அதனை கண்டு,
“ இந்தா மருமகளே முத முத புருசனுக்கு பரிமாற போற முதல் இனிப்பை வை அவன் இலைல ” என தெய்வானை கூற
‘ இனிப்பா அது எங்குன இருக்கு?? ’ என எண்ணிக்கொண்டு சுற்றி தேட
“ அட!!…. பக்கத்துல அந்த வட்ட சட்டில பாரு குலோப்ஜாமூன் இருக்கு பாரு உன் கண்ணுக்கு தெரியலையா??…. ” என சாரதா நக்கலுடன் கூற
அந்த வட்ட சட்டியை பார்த்த எழில்விழியோ,
‘ ஏதே இது குலோப்ஜாமூனா…. எங்க ஊருல இது உருண்டையால இருக்கும். இதுயென்ன ஒருமாதிரி கருப்பா பிஞ்சு பிஞ்சு இருக்கு. ஓ!!… சாப்பிட கஷ்ட படக்கூடாதுன்னு பிச்சுட்டாங்க போல ’ தன் போல எண்ணிக்கொண்டு கரண்டியால் அள்ளி கதிரவனின் இலையில் வைக்க அதனை கண்டு,
“ என்ன கருமம் இது. பார்க்கவே நல்லா இல்ல. இதை தூர போடு அங்குட்டு முதல்ல சோத்தை வை” என கதிரவன் கூற அதில் எழில்விழிக்கு சிரிப்பு வர பார்க்க சாரதாவுக்கோ அவளும் கல்யாணத்திற்கு வந்த அவள் அன்னையும் சேர்ந்து செய்த பலகாரத்தை கதிரவன் அவ்வாறு கூறியது கடுப்பை கிளப்பியது.
சாதத்தை சிறுது இலையில் வைத்துவிட்டு கதிரவனின் முகம் பார்த்த எழில் அவன் ஒன்றும் கூறாது அமைதியாக இருக்க மீண்டும் சிறுது சாதம் வைக்க,
“ ஏன் வீட்டுல அரிசியை எல்லாம் கோழி கொத்தி தின்னுடுச்சா?? ” என கேட்ட கதிரவனின் முகத்திலும் குரலிலும் என்ன இருந்தது என புரியாது
“ தெரியலைங்களே….” என பாவமாக கூறிய எழில்விழியைக்கண்டு முறைத்த கதிரவன் அடுத்து வாயை திறக்கும் முன்னே
“ எழிலு என் தம்பி சோறு சோறு குழம்பு குழம்பு ரசம் ரசம்ன்னு சாப்டுறவன் ஒழுங்கா சோத்தை அள்ளி வை. நீ என்ன கொஞ்சூண்டு வச்சுட்டு அவன் முகத்தை பார்த்துகிட்டு இருக்க ” என ஜெயா கூற வேகமாக சாப்பாட்டை வைக்க ஆரம்பித்தாள்.
அப்பொழுது ஜெயா எழிலின் அருகில் வந்து,
“ எழிலு ” என அழைக்க
“ அண்ணி ”
“ அவன் மூணு வேலைக்கு நல்லா சாப்புடுவான் ஆனா இடையில டீ காப்பி நொறுக்கு தீனி எல்லாம் எதுவும் சாப்பிடமாட்டான். அதனால பார்த்துக்க ” என கூறி சென்றுவிட
“ ஓ!!…. அப்போ ஸ்னாக்ஸ் சாப்பிட மாட்டாங்களா ” என எண்ணிக்கொண்டு, கதிரவன் இலை பார்த்து சாப்பாட்டை பரிமாற தயிருக்கு சாதம் வைக்கும் போது அதிகமாக வைத்துவிட,
“ நான் சாப்பிடக்கூடாதுன்னு மூச்சில் அடிச்சாப்புல அள்ளி வைகுறியா??….. ” என கடுப்புடன் கேட்ட கதிரவனிடம்
“ இல்லங்க தெரியாம….. ” என கூற வந்தவளிடம்
“ மிச்சத்தை நீயே சாப்டுக்கோ ” என கூறி எழுந்து சென்று விட கண்கள் கலங்க ஆரம்பித்தது எழில்விழிக்கு. அதனை கண்டு,
“ பரவால்ல விடு. அவன் அப்படித்தான் நீ வா சாப்பிடலாம் ” என வாணி அழைத்து சென்று அனைவரும் சாப்பிட்டனர். எழில்விழிக்கு மட்டும் ஏனோ சாப்பாடு இறங்கவே இல்லை கதிரவனின் கோவத்தில்.
கதிரவனும் மதிய உணவு முடிந்ததோடு வெளியே ஸ்வாமிநாதனுடன் வயலுக்கு சென்று விட இரவுதான் வீட்டிற்கு வந்தான். பின் இரவு உணவை முடித்துவிட்டு அவரவர் உறங்க சென்றுவிட
அறைக்கு சென்ற எழில்விழிக்கோ பயத்தில் இதயமே வெளியே எகிறி குதித்துவிடுமோ என்று என்னும் அளவிற்கு வேகமாக துடித்துக்கொண்டிருந்தது. மெதுவாக அறை கதவை திறந்துகொண்டு உள்ளே மட்டும் தலையை நீட்டி எழில்விழி கதிரவனை தேட அவன் போனில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தான்.
அதனை கண்டு மெதுவாக அறையின் உள்ளே சென்று அறையினை தாளிட்டுவிட்டு புடவையை மாத்த எண்ணி தனது பையிலிருந்து நைட்டியை எடுக்க,
“ விழி ” என திடீரென கேட்ட கதிரவனின் குரலில் அதிர்ந்து நைட்டியை இறுக்கி பிடித்துக்கொண்டு கதிரவனை நோக்க
“ என்ன செய்ய போற??? ” என கேட்ட கதிரவனிடம்
“ அது புடவைய மாத்தலாம்ன்னு ”
“ புடவைய மாதிக்கோ ஆனா புடவையை கட்டிக்கோ ” என கூறிய கதிரவனை புரியாது நோக்கிய எழிலிடம்
“ இந்த நைட்டி எல்லாம் போடாத எனக்கு பிடிக்காது.வெளிய போனா சுடிதார் போட்டுக்கோ ஆனா நான் கூட இருக்குறப்போ எப்பொழுதும் புடவை கட்டிக்கோ” என கூறிவிட்டு எழுந்து அவன் லேப்டாப்பை எடுத்துக்கொண்டு அமர்ந்துவிட
ஏனோ எழில்விழியின் கையில் இருந்த ரோசாபூ கலர் நைட்டி அவளை பார்த்து இளிப்பதுபோல் இருக்க பாவமாக அதனை மீண்டும் பையில் வைத்துக்கொண்டு வேற பூனம் சேலையை எடுக்க,
அவள் கற்பனையிலோ வாணி சாரதா ஜெயா என அனைவரும் ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ என்ற பாட்டிற்கு நைட்டியுடன் ஆட அதில் தலையை உலுக்கி,
‘ அவுங்க ரெண்டு அக்கா அண்ணிங்க எல்லாரும் போடுறாங்க நான் மட்டும் போடக்கூடாதா’ என முதல் முறை கதிரவனை எண்ணி சிணுங்க
“ நீ புடவைல ரொம்ப அழகா இருக்க ” என தன் பின்னிலிருந்து மிக அருகில் கேட்ட கதிரவனின் குரலில் திடுக்கிட்டு எழில்விழி திரும்ப,
அவளின் இடையை வளைத்து பிடித்து தன் முகம் பார்க்க வைத்து,
“ இங்க பாரு நீ என்ன நினைக்குறன்னு புரியுது. என் அக்காக்கள் என் அண்ணி எல்லாரும் இந்த வீட்டில் நைட்டி போடும்போது நீ போடகூடாதான்னு தானே. யாரு என்ன போட்டாலும் எனக்கு கவலை இல்ல.
ஆனா நீ போடுறதை தானே நான் ரசிக்கப்போறேன் அப்போ எனக்கு பிடிச்சதை பிடிக்காததை உன்கிட்ட தான் சொல்ல முடியும் ” என கூறி கன்னத்தில் இதழ் பதிக்க ஏனோ
எழில்விழிக்கு அந்த நிமிடம் பிடித்த உடை புடவை மட்டுமே.