ஏழு மாடிகள் கொண்ட அக்கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் அமைந்திருந்த குளிரூட்டப்பட்ட கண்ணாடி அறையினுள் முழுக்கை சட்டையை முட்டிவரை ஏற்றி மடித்து விட்டுக்கொண்டே அவர்கள் தற்போது ஈடுபட்டிருக்கும் ப்ராஜெக்ட் குறித்ததன் குழு உறுப்பினர்களின் சந்தேகங்களுக்குவிளக்கமளித்து கொண்டிருந்தான் சரண்.
அலைபேசி ஒளிரவும் எடுத்து பார்த்தவன் முக்கியமான அழைப்பென்பதால் ‘எக்ஸ்கியுஸ் மீ கய்ஸ்’ என்றவன் தன் அருகே இருந்த மனோஜிடம் ஏனைய விளக்கங்களை அளிக்குமாறு கூறி வெளியில் வந்து அழைப்பை ஏற்றான்.
மறுபுறம் இருந்தவரிடம் “இப்போ எங்க இருக்கீங்க..??” என்று கேட்டு தெரிந்து கொண்டவன், அருகே இருந்த ஒரு காஃபிடேரியாவின் பெயரை கூறி “நீங்க அங்க வைட் பண்ணுங்கண்ணா நான் வரேன்” என்று கூறி மீண்டும் வேலையில் அமிழ்ந்தான்.
மனோஜ் இறுதிகட்ட நிலைகளை விளக்கி முடிக்க சரண் தன் உறுப்பினர்களின் கருத்துகளையும் வரவேற்று வேலையை தொடங்க செய்தவன் சொன்னபடி அடுத்த சில நிமிடங்களில், “என்னண்ணா இவ்ளோ தூரம் வந்திருக்கீங்க ஒரு கால் பண்ணி பேசி இருக்கலாமே ஏதாவது அவசரமா ?” என்று கேட்டவாறு அகனெழிலன் எதிரே அமர்ந்தான்.
“அவசரமெல்லாம் ஒண்ணுமில்லை, ஆனா இதை பத்தி ஃபோன்ல பேசுறதை விட நேரில் பேசுறது சரின்னு பட்டது அதான் வந்தேன்”
“என்ன விஷயம் சொல்லுங்கண்ணா”
“சொல்றேன் அதுக்கு முன்ன நீ எப்படி இருக்க..? ஏன் ரெண்டு வாரமா வீட்டுக்கு வரலை..?” என்று மழிக்கபடாத தாடியுடன், உறக்கம் தொலைத்த இரவுகளை அவனது ஒளி இழந்த விழிகள் பறைசாற்ற கறுத்துஇளைத்திருந்தவனை கண்டு கேட்க,
மௌனமாய் தன் கைகடிகாரத்தையே வெறித்திருந்தவன் குரலை செருமி முதல் கேள்வியை தவிர்த்து “புது பிராஜக்ட் அசைன் பண்ணியிருக்காங்கண்ணா இனிஷியல் ஸ்டேஜ் அதான் வரமுடியலை இந்த வாரம் வர பார்க்கிறேன்”
சரண் முகத்தையே ஆராய்ந்து கொண்டிருந்த எழில் அவன் பதிலில் ஏதோ கூறவந்து பின் அதை தவிர்த்து, “அபார்ட்மெண்ட் மாறபோறேன்னு சொல்லிட்டு இருந்தியே பார்த்து பைனல் பண்ணிட்டியா..?”
“இன்னும் இல்லைண்ணா” என்றவனிடம் தன் பணியிட மாற்றம் குறித்து கூறிய எழில் வீட்டை வாடகைக்கு விடவோ பூட்டி வைக்கவோ விரும்பமில்லை என்றவன்சரணை தன் வீட்டில் வந்து தங்கிக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தான்.
“என்ன நீயே பார்த்துப்ப..? கதிர் நேத்து ரொட்டீன் செக் அப் போயிருந்தானாம் பெருசா எந்த முன்னேற்றமும் இல்லை, சொல்லபோனா எல்லாமே கூடி போயிருக்கு தெரியுமா உனக்கு..?” என்று கேட்க,
“ஹ்ம்ம் நேத்து எனக்கும் பேசினான்.. ஆனாலும் இது சரிபடாதுண்ணா விட்ருங்க” என்று அவன் மீண்டும் மறுக்க,
“எப்படி சரிப்படாதுன்னு நீயே முடிவு பண்ற..?? ஏன்னடா முன்ன அங்க வந்து எங்ககூட தங்க சொன்னப்போ தயங்கின சரி, இப்போ நாங்க கிளம்புறோம் வந்து இருன்னு சொன்னா இப்பவும்மறுக்கிற உன் மனசுல என்னதான் நெனச்சிட்டு இருக்க..??”
‘இல்லைண்ணா நான் மட்டுன்னா பிரச்சனையில்லை ஆனாஅவளுக்காக தான் தயங்கினேன்’ என்றிட எழிலோ இது ஒரு விஷயமே இல்லை என்பதாக அவனை பார்த்தவன், “ஏன் அவளுக்கு அங்க தங்க உரிமை இல்லையா..?” என்று கேட்க…
‘உண்டு’ என்பதாய் சரணின் தலை தானாய் அசைந்தது.
ஆனால் சரண் அப்பார்ட்மென்டிற்கு செல்வதே அதிகபட்சமாய் உறங்குவதற்கு தான் அப்போதும்பெரும்பாலான நேரங்களில் அவனை ஆட்கொண்டு அலைகழிக்கும் உணர்வுகளின் படையெடுப்பால்நித்திராதேவியும் சரணுடன் ஊடல் கொள்வதில் உறக்கமற்ற இரவுகளே அவன் துணையாகி போனது. தற்போது இருக்கும் வீட்டில் காணும் யாவுமே அன்றைய நாட்களை நினைவு படுத்தி அவனை இன்னுமே உருக்குலைக்கும் என்பதால் முடிந்தவரை அங்கிருந்து தப்பித்து செல்லவே விரும்புபவன் விடுமுறை நாட்களில்அலரின் வீட்டிற்கு சென்று அவிரனிடம் தஞ்சம் புகுந்துவிடுவான்.
பின்னே அதேவீட்டில் தொடர்ந்தால் தான் கொலைகாரனாக போவது நிச்சயமே என்று தான் கடந்த இரண்டு மாதங்களாக வேறு வீடு பார்த்துகொண்டிருக்கிறான் ஆனால் அவனது துரதிருஷ்டம் இதுவரை அமையவில்லை.
‘அப்புறமென்னநாளைக்கு காலைல எட்டு மணிபோல கிளம்புறோம் வந்து சாவி வாங்கிக்கோ’ என்ற எழிலிடம்விடைபெற்ற சரண் நேரே மேனேஜரிடம் செல்ல அவரோ நானே உங்களுக்கு கூப்பிடனும்னு இருந்தேன் சரண் என்றார்.
என்ன விஷயம் மகேஷ் இஸ் தேர் எனி கரெக்ஷன்ஸ்..?? என்று ஏற்கனவே சமர்பித்திருந்த ப்ராஜெக்ட் குறித்து வினவ.
‘நோ நோ எவரிதிங் இஸ் பெர்பெக்ட்..’என்றவர் அவன் முன் ஒரு கவரை நீட்டி அகைன் ஆன் ஆன்சைட் ஆபர் வித் ஹைக் சரண்என்றார்.
அவர் நீட்டியதை பெறாமல் அவரையே பார்க்க,“ இட்ஸ் அப்ஸலூட்லி யூர் விஷ் டு அக்செப்ட் ஆர் டினை பட் கீப் ஒன் திங் இன் மைன்ட், தேர் இஸ் எ செகண்ட் ஆப்ஷன்” என்று அவர் கூறிய தொனியில் யோசனையில் ஆழ்ந்தவன்,“
யாஹ் கிவ் மீ சம் டைம்… வில் லெட் யூ க்நோவ் லேட்டர் மகேஷ்” என்றவனுக்கு ஏனோ இம்முறை அவசரப்பட வேண்டாம் என்று தோன்றியது.
“சூர்!டேக் யுவர் ஓன் டைம் !! என்றவரிடம் விடயத்தை கூறி தன் இடத்தில் வந்து அமர்ந்தவனின் மனமோ எழிலின் ‘எப்படி இருக்க..?’ என்ற ஒற்றை கேள்வியில் தேங்கி நிற்க, எதையும் நினையாதே மனமே என்று தனக்கு தானே கூறியவாறு எதிரில் இருந்த நீரை எடுத்து பருகியவன் மெல்ல தன்னை மீட்டுக்கொண்டு வேலையை தொடர்ந்தான்.
தனக்கடுத்த நிலையில் இருந்த சுவாதியை அழைத்து நாளைய பணிகளை திட்டமிட்டு கொடுத்தவன் மணி ஏழரையை நெருங்கவும் தன் உடமைகளை எடுத்துகொண்டு பார்கிங் நோக்கி விரைந்தான்.
ஹெல்மெட் அணிந்துகிளம்பியவன் சென்று சேர்ந்த இடம் அவனது அப்பார்ட்மெண்ட் வளாகத்தில் இருந்த உள்விளையாட்டு அரங்கத்திற்கு..கடந்த சிலமாதங்களாகவே வேலை முடிந்ததும் பின்மாலை பொழுதுகளில் சரண் தஞ்சமடையும் இடமது. அவர்கள் வளாகத்தில் இருக்கும் ஐடி ஊழியர்கள் சிலரும் நேரம் கிடைக்கும் போது எல்லாம் திடலுக்கு வருவதை வழக்கமாய் கொண்டிருக்க பின் மாலை பொழுதுகளில் துவங்கும் அவர்கள் ஆட்டம் சில நாட்கள் இரவு வரையிலும் தொடரும்.. சரணோ காலை அலுவலகம் கிளம்பி செல்பவன் வேலை பளு கழுத்தை நெரித்தாலும் இங்கு வருவதை ஒருபோதும் நிறுத்தியதில்லை.
உள்ளே சென்றவன் அங்கிருந்த அறையிலேயே தன் ஃபார்மல் உடையை களைந்து விளையாட தோதாய் மாற்றி கொண்டு விளையாட ஆரம்பித்தான். அவன் மனம் கொண்டிருக்கும் ரணத்தையும் ரௌத்திரத்தையும் தீர்க்கும் வடிகால் விளையாட்டே என்றாகிட என்றுமே வெறித்தனமாக நேரம் காலம் பாராமல் ஃபுட் பால் விளையாடுபவனுக்கு நினைவுகளின் ஆர்பரிப்பால் இன்று ஏனோ மனம் அதில் ஒன்றாது போனது.
அவன் கைபேசி இருமுறை அழைத்து ஓய்ந்தது.. அவர்கள் விளையாட ஆரம்பித்து இரண்டு மணி நேரத்தை கடந்திருக்க ஆட்களும் மெல்ல மெல்ல விடைபெற்றனர் இறுதியாய் வந்த திலக் ‘குட் நைட் டியூட் மீட் யூ டூமாரோ’ என்று விடைபெற அவனுக்கு தலை அசைத்தவன் என்றுமில்லாத சோர்வுடன் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்துகைபேசியை உயிர்பித்தான்.
வந்திருந்த அழைப்புகளை கண்டவனின் மனம் பேசும் திறன் அற்றிருக்க மீண்டும் அழைக்காமல் பேசியை சட்டைப்பையில் வைத்தவன் நாற்காலியில் இருகரங்களையும் விரித்து தலை சாய்த்து அமர்ந்து என்றும் போல் இன்றும் ஏகாந்தமான பொழுதை உணர துவங்கினான்.
இதுகாறும் இருந்த கூச்சலும் ஆர்பரிப்பும் அமிழ்ந்து ஆட்களும் குறைந்த முன்னிரவு பொழுதினில் குளிர் தென்றலும், நிலவொளியும், நிசப்தமும் அவனை ஆட்கொள்ள வான்மகளில் பார்வை பதித்திருந்தவன் சில நிமிடங்களுக்கு தன்னை மறந்து இருக்க அலைபேசியின் ஒலி அவனை மீட்டெடுக்க மீண்டும் அதை அணைத்து வீட்டிற்கு கிளம்பினான்.
*****************************
பார்க்கிங்கில் பைக்கை நிறுத்திவிட்டு லிப்ட்டினுள் நுழைந்தவன் ஐந்தாவதுதளத்தை அடைந்து வீட்டின் அழைப்பு மணியை அழுத்திட சற்று முன் வரை இவனுக்காக காத்திருந்தவள் அப்போது தான் உறக்கம் இமை தழுவகண்ணயர்ந்தாள்.
அழைப்பு மணி ஓசையில் திடுக்கிட்டு எழுந்தவள் மணியை பார்க்க அது பத்தரையை எட்டிக்கொண்டிருந்தது. இது வழக்கம் தான் என்றாலும் எப்போதும் அதிகபட்சமாய் ஒன்பதரைக்குள் வீட்டிற்கு வந்து விடுபவனின் இன்றைய தாமதம் உறுத்தினாலும் உடனே ஓடி சென்று கதவை திறந்து அவன் முகத்தை அளவிட தொடங்கி இறுதியில் அவன் வலி நிறைந்த விழிகளில் தேங்கி நின்றாள்.
அவள் வழி விடுவாள்என்று காத்திருந்த சரணோ பொறுமை இழந்தவனாய் “வழி விடுற எண்ணம் இருக்காஇல்லையா..?” என்று கடிந்தவாறே நேரே அறைக்குள் செல்ல முயன்றான்.
அங்கும் அவனை தடுத்து நிறுத்தியவள் உணவருந்த அழைக்க, ஏகாந்த இரவும் அவனை குளிர்விக்காது போனதில் கொதிநிலை கொண்டிருந்தவன், “சாப்பாடு, சாப்பாடு, சாப்பாடு எப்பபாரு இதையே கேட்டு உயிரை எடுக்குற..? வேற எதுவும் தெரியாதா உனக்கு போ போய் வேலையை பார்..” என்று அறையினுள் சென்று கதவை அறைந்து சாற்றினான்.
இதை கண்டவளுக்கோ உள்ளம் வெதும்பி போனது. ‘தினமும் காலைஎட்டு மணிக்குள் அலுவலகத்திற்கு கிளம்புபவன் பல நேரங்கள் காலை உணவை நேரமின்மையை காரணம் காட்டி தவிர்த்து செல்வான். அரிதாய் அவள் அழைப்பை ஏற்று அமர்ந்தாலும் கடனே என்று தட்டில் என்ன விழுகிறது என்றும் பாராமல் உண்டு கிளம்புவான்.
அவள் மதிய உணவை பேக் செய்து கொடுத்தாலும் வேண்டாம் ஆபிஸ்ல பாத்துக்குறேன் என்று செல்பவன் இரவு உணவையும் நேரத்திருக்கு எடுக்காமல் தன்னையே வருத்தி கொள்வதை காண்பவளுக்கு என்ன சொல்லி அவனை மீட்க என்று புரியாது போகும்.
“கோபத்தின் வடிகால் உணவை மறுப்பது தானா..?” என்று அவன் மீது இவளுக்கு கோபம் எழாத நாளில்லை. ஆனால் இது நாட்களோ இல்லை வாரங்களோ அன்றி அவள் அறிந்து பல மாதங்களாகவே அவன் இப்படித்தான் அதனால் கோபத்தையும் மீறிய ஏதோ ஒன்று அவனை அலைக்கழிப்பதை புரிந்தவள் தன்னால் முடிந்த மட்டும் அவன் வயிறை வாடாது வைத்திருக்க முயற்சிப்பாள்.
அவன் அறை வாயிலிலே நின்றிருந்தவள் பின் தைரியம் வர பெற்றவளாய் உள்ளே சென்றாள். குளியலறையில் இருந்து சத்தம் கேட்கவும் அவன் பொருட்களை ஒழுங்கு படுத்தி வைத்தவள் சமையலறையை ஒதுக்க ஆரம்பித்தாள்.
கரங்கள் தன் வேலையை செய்வன செய்தாலும் கண்கள் அவன் வரவிற்காக காத்திருக்க ஒரு கட்டத்தில் உள்ளே சென்று பார்க்கஅவன் மீண்டும் மடிக்கணினியுடன் அமர்ந்திருந்தான்.
“தோசை போடட்டா” என்று கேட்க அவள் கேள்விக்கு பதிலளிக்காமல்,
“உனக்கு நாளைக்கு வேலை இல்லையா..?” என்று பதில் கேள்வி கேட்டான்.
‘இருக்கே ஏன் கேட்கறீங்க..?’
“அப்போ போய் தூங்கு” என்றான் முடிந்தவரை மென்மையாய்…
அவள் கைகளை பிசைந்து கொண்டு அங்கே நிற்பதை கண்டவன், ‘சரி ஒரு கப் காபி மட்டும் கொண்டு வா’ என்றான்.
வெறும் வயிற்றோடு படுக்காமல் இதையாவது கேட்டானே என்று மகிழ்வோடு அவனுக்காக காபி தயாரித்து பிஸ்கட் பாக்கெட்டை உடன் வைத்து கொண்டு சென்றாள். அவளுக்கு தான் தெரியுமே காபியில் பிஸ்கட் தோய்த்து சாப்பிடுவது அவனுக்கு பிடித்தமான ஒன்றுஅதனால் மறுக்க மாட்டான் என்று..!
அதற்குள் அவன் ஹாலில் தனக்கான மெத்தையை விரித்திருக்க இரண்டும் அடங்கிய ட்ரேயை கொண்டு சென்று சிறு மேஜை மீது வைக்க அவளை நிமிர்ந்தும் பாராமல் “நான் பார்த்துக்குறேன் நீ தூங்கு” என்றான்.
‘நீங்க சாப்பிடுங்க நான் போறேன்’ என்றவளை சரண் அழுத்தமாய் பார்க்க எவ்வளவு திட்டினாலும் ஏன் அடிச்சாலுமே நகர மாட்டேன் என்ற உறுதியுடன் அடமாய்அங்கேயே நின்றாள்.
அதில் தன்னை மீறி புன்முறுவல் பூக்க பிஸ்கட்டை காபியில் நனைத்து சாப்பிடவும் அவன் இளம் முறுவலை அதிசயித்து விழி விரித்து பார்த்து நின்றாள். பின்னே அவளறிந்த வரையில் அவன் தன் புன்னகை முகத்தை தொலைத்து வருடங்கள் பல கடந்திருந்தது. எந்நேரமும் அவன் இயல்பிற்கு மாறாக ரௌத்திரமும் வலியும் போட்டி போடும் முகமும், வார்த்தைகளில் அளவோடும் இறுகி இருப்பவன் சில நேரங்களில் அவனையும் மீறி தென்படும் வன்மம் நிறைந்த கண்களையும் கண்டவள்இன்று அவன் முகத்தில் தென்பட்ட சிறு மின்னல் கீற்றை கண்டு ஸ்தம்பித்து நின்றாள்.
அவள் முன் சொடக்கிட்ட சரண், “நின்னுட்டே தூங்குறதுக்கு வசதியா பெட்ல படுத்து தூங்கலாமே” எனவும் தான் ‘ஹம்ம்‘ என்று தலையசைத்து அறைக்கு சென்றாள்.
*************************************
ட்ரேயை சிங்க்கில் வைத்து கை கழுவி வர, சரணின் கைபேசி மீண்டும் ஒளிர்ந்தது இனியும் தவிர்க்க முடியாததால் உறங்கி கொண்டிருந்தவளின் உறக்கம் தடைபட்டு விடக்கூடாது என்று பால்கனி கதவை திறந்துகொண்டு அங்கு சென்றான்.
அழைப்பை எடுக்கவுமே மறுபுறம் வைதேகி ‘என்ன நெனச்சிட்டு இருக்க சரண்’ என்று கேட்டு படபடவென பொரிய தொடங்கி விட்டார்.
‘அக்கா பொறுமையா பேசு என்ன அவசரம்’
‘சரண் நாலு நாளைக்கு முன்னவே உன்னை வர சொன்னேன் ஆனா இன்னும் என்னடா பண்ணிட்டு இருக்க, ஃபோன் பண்ணாலும் எடுக்கிறது இல்லை உங்க மாமா பேசனும்னு காத்துட்டு இருந்து அவர் நம்பரை நீ எடுக்கலைன்னதும் என்னை அந்த பேச்சு பேசிட்டு போய் படுத்துட்டார். அவர் சொல்ற மாதிரிதான் நீயும் நடந்துக்குற ஏன்டா இப்படி பண்ற..?’ என்று ஆதங்கத்தோடு கேட்க,
‘இல்லைக்கா’ என்று மறுத்த சரணிடம் “வாயை திறக்காதாடா அப்போ உனக்கு எங்களை எல்லாம் விட அவர் தான் முக்கியமா போயிட்டாரா..?”
“ப்ச் அக்கா எதுக்கு இதை இப்போ பேசுற அப்படி எல்லாம் இல்லை சொன்னா புரிஞ்சிக்கோ” என்றவனுக்கு ஆயாசமாகி போனது..
“இல்லடா நீ அப்படி தான் நினைக்கற எனக்கு தெரியும், அப்படி நினைச்சதால தான் இன்னமும் அங்கேயே இருக்க… இதுவே என் பொண்ணு மேல அக்கறை இருந்திருந்தா நாளை மறுநாள் நிச்சயத்தை வச்சிக்கிட்டு உன்னால அங்கேயே இருக்க முடியுமா..?” என்றவரின் குரல் உடைய தொடங்கியது.
‘அக்கா’ என்றவனின் குரலில் இருந்த அழுத்தத்தை உணர்ந்தவர் “என்ன அக்கா, சபையில தாய் மாமனை கேட்டுட்டு அவன் சம்மதிச்சதுக்கு அப்புறம் தான் நிச்சய பத்திரிக்கையே எழுதுவாங்கன்னு தெரியாதாடா உனக்கு..!! அங்க வந்தா அப்படி என்னடா பண்ணிருவாரு.. இது என் வீட்டு விசேஷம் எனக்கு என் தம்பி தான் மொதல்ல மத்தவங்க எல்லாம் உனக்கு பிறகு தான். ஏற்கனவே என் மாமியார் வீட்டுல இஷ்டத்துக்கு பேசுறாங்க நீயும் வராம இருந்து அவங்க பேசுனது உண்மைன்னு நிருபிச்சிடாத” என்றவர் கட்டுபடுத்தமுடியாமல் அழத்தொடங்க,
தமக்கையின் கண்ணீர் சரணை அசைத்தாலும் அவன் அங்கு சென்றபின் ஏற்படும் நிகழ்வுகள் எத்தகையதாய் இருக்கும் என்பதை உணர்ந்தே அதற்கு தயாராய் இல்லை.
“சரண், டேய் தம்பி ஏற்கனவேஅன்னைக்கு மட்டும் நான் அங்க வராம இருந்திருந்தா எவ்வளவோ விஷயத்தை தடுத்திருக்கலாமேன்னு நான் மருகாத நாளில்லை அதையெல்லாம் நெனச்சிட்டா என் மனசாட்சியே என்னை கேள்வி கேட்டு கொலையா கொல்லுதுடா..” என்றவர் கண்ணீருடன் தொடரவும்
“க்கா போதும் எந்த நேரத்துல என்ன பேசிட்டு இருக்கஇதெல்லாம் இப்போ தேவையா..? தெரியாமதான் கேட்கிறேன் உனக்கு சரண்யா நிச்சயம் முக்கியமா இல்லை என்..” என்றவனை இடையிட்டு,
“அதே தாண்டா நானும் கேக்குறேன் உனக்கு என் பொண்ணு நிச்சயம் முக்கியமா..? இல்லையா..?” என்று கேட்டவரின் குரலில் இப்போது கண்ணீரோ ஆதங்கமோ இல்லை ஆவேசமே நிறைந்திருந்தது.
“ஆனா ஒன்னுடா நீ இப்படி அழுத்தமா மாறுவன்னு நான் கனவுல கூட நினைக்கல எல்லாமே நீ வளர்த்த பிள்ளைங்கடா உன் மேல உசுரையே வச்சிருக்குதுங்க.. உன்னைத்தான் மொதல்ல தேடுங்க அதுகூடவா உனக்கு புரியலை”
‘ஏன்க்கா நீயும் என்னை புரிஞ்சிக்க மாட்டேங்கிற’ என்று மனதினுள் அலுத்துக்கொண்டவன் சரி நான் நிச்சயத்தன்னைக்கு வரேன் போதுமா?என்றான்.
அப்பவும் நிச்சயத்தன்னைக்கு தான் வருவ முன்னாடியே வரமாட்ட இல்லை என்றவர் குரல் இறங்கியிருக்க ‘சரி சரி நீ வந்தா மட்டும் போதும் வாடா’ என்று வைத்துவிட்டார்.
வரேன் என்று அப்போதைக்கு வைதேகியை சமாதானபடுத்த கூறியவன் நிச்சயம் ஊருக்கு செல்ல போவதில்லை என்பது அவனுக்கு மட்டுமே தெரியும்… இதுபோதாதா அன்றைய இரவும் உறங்கா இரவாகி போனது சரணுக்கு.
காலைவிரைவாக குளித்து தயாராகி வந்தவன் அவளிடம் தான் வெளியே கிளம்புவதாகவும் சாவியை ஒரு குறிப்பிட இடத்தில் வைத்து செல்லுமாறு கூறி சென்றான்.
எழில் வீட்டின்முன் பைக்கை நிறுத்தியவன் அலர் கதவை திறக்கவும் அவளிடம் காலை உணவை கொடுத்து அவிரனுடன் கதை அளந்தபடி அமர்ந்தான்.