என்றுநல்லோர் தீயோர், தேவர் அசுரர், செல்வர், வறியோர் என்ற பாகுபாடின்றி அவன் அருளாலே அவன் தாள் பணிவோரின் ஆணவத்தையும் செருக்கையும் அழித்து வரங்களை அளித்தருளும்அனல்மலையானான அண்ணாமலையானின் பாடல் உன்னிகிருஷ்ணனின் தெய்வீக குரலில் சற்றுமுன் ஏற்றபட்டிருந்த ஊதுபத்தி மற்றும் சாம்பராணியின் மணத்துடன் கலந்து வீட்டை நிறைத்து தெய்வமணம் கமழ செய்திருந்தது.
பிரம்மாண்டமான வீட்டில்அமைந்திருந்த விஸ்தாரமான பூஜையறையினில் இடையில் வேட்டியும் தோளில் போர்த்திய துண்டும் நெற்றியிலும் மார்பிலும் திருநீறு பூசி கழுத்தினில் ருத்ராட்சத்தோடு அமர்ந்திருந்த பிரகாசத்தின் ஈரவிழிகள் அங்கு நடுநாயகமாக வீற்றிருக்கும் ஈசனின் பாதத்தின் மீது படிந்திருந்தது. மனமுருகஇருக்கரங்களும் ஈசனைநோக்கிஏந்தியவரின் ஆதாரங்களோ ‘இறுகிய நெஞ்சை இலக்கிடுவாய்’ என்ற வரியிலேயே தேங்கி நின்று மீண்டும் மீண்டும் அதையே உச்சரித்து ஈசனின் செவி சென்றடையாதோ என்ற ஏக்கத்தோடு மன்றாடி கொண்டிருந்தது.
பிரகாசம் சுப்பிரமணி தாயம்மாளின் நான்காவது மகன்.
கடந்த வருடத்திற்கு முன்பு வரை சுகாதாரத்துறை அமைச்சராக சில வருடங்கள் பதவி வகித்து வந்தவர்.. கடந்த ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தாலும் தன் மகளின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றத்தாலும் அனைத்தில் இருந்தும் ஒதுங்கி ஒடுங்கி இருப்பவர்.., இயன்ற அளவு எளியோருக்கு உதவுவதே தான் கொண்டிருக்கும் மானிட பிறப்பின் அர்த்தமாகும் என்று இரவு பகல் பாராது பதவியில் இல்லையென்றாலும் பொது பணியில் தன்னை ஈடுபடுத்தி கொள்பவர்.
ஆரணியின் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பல பின்தங்கிய பகுதிகளை தத்தெடுத்து அங்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்வது மட்டுமின்றி சுமார் முன்னூறுக்கும் அதிகமான ஏழைக்குழந்தைகளின் கல்வி செலவினை ஏற்று வருங்காலம் சிறக்க தன்னால் இயன்றதை செய்து கொண்டிருப்பவர். சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் தவறாமல் மூன்று வேலையும் அன்னதானம் அளித்து ஏழைகள், ஆதரவற்றோரின் வயிற்றை வாடாது வைத்திருப்பவர் மாலை வீட்டிற்கு வந்தால் ஈசனின் பாதத்தில் சரணடைந்து நமசிவாய மந்திரத்தை ஓயாது கூற ஆரம்பித்துவிடுவார்.
‘தீதும் நன்றும் பிறர் தர வாரா..’ என்ற நிதர்சன உண்மையைகாலம் அவருக்கு ஆணித்தரமாக உச்சந்தலையில் அறைந்து உணர்த்தியிருக்க, தன்னை முழுதாக ஈசனிடம் ஒப்புவித்து அவரையே பற்றுகோலாய் பற்றிகொண்டிருப்பவரின் விழிகளில் நிரந்தரமாக உறைந்திருக்கும் ஈரமே அவர் நிலை சொல்லும். ஊரில் இருக்கும் அனைத்து கோவில்களின் திருகாரியங்களையும் ஏற்று செய்பவர் சிவராத்திரியான இன்று காலையே பூஜையறையில் தஞ்சம் புகுந்துவிட்டார்.
சமையலறையில் பிரகாசத்திற்கான காலை கஞ்சியை தயாரித்துகொண்டிருந்த தீபிகா வாயிலில் அழைப்பு மணி ஓசையில் கதவை திறக்கஅங்கே சுடரும் பாலனும் நின்று கொண்டிருந்தனர்.
“வா சுடர்.., வாப்பா” என்று இருவரையும் வரவேற்று உள்ளே அமர்த்தி அவர்களின் வரவை தீபிகா பிரகாசத்திற்கு தெரியபடுத்த ஈசனை ஒருமுறை பார்த்தவரின் கண்கள் கரையுடைக்கதோளில் கிடந்த துண்டில் கண்களை துடைத்தவாறுபூஜை அறையில் இருந்து வெளிப்பட்ட பிரகாசம் முயன்று புன்னகையை தத்தெடுத்து அவர்களிடம் சென்று அமர்ந்தார்.
‘எப்படி இருக்கீங்க மாமா?’ என்ற சுடரின் கேள்விக்கு தலையசைப்பை பதிலாக தர, தீபிகா அவர்களுக்கான டீயை தயாரிக்க செல்லவும், “இல்லை மாமி வேண்டாம் இப்போதான் ராஜன் மாமா, பெரிய மாமா வீட்டுக்கும் போயிட்டு வந்தோம் அங்கேயே ரெண்டு காபி ஆகிடுச்சுஇதுக்கு மேல முடியாதுநீங்க வந்து உட்காருங்க” என்று சுடர் அழைக்கவும் அருகே அமர்ந்தவர்,
“வீட்டில் எல்லாரும் எப்படி இருக்காங்க சுடர்” என்று விசாரிக்கவும் கரகரத்திருந்த குரலை மெல்ல செருமிய பிரகாசம், “என்ன விஷயம் சுடர் காலையிலேயே இரண்டுபேரும் வந்திருக்கிங்க ?” என்றார்.
“வீட்டில விசேஷம் மாமா வேதா பெரிய பெண்ணாகிட்டா நாளை மறுநாள் காலையில பதினோரு மணிக்கு மேல நல்ல நேரம் அப்போ வீட்டுக்கு அழைச்சிக்கிறோம் கண்டிப்பா நீங்களும் மாமியும் கலந்துக்கனும்’ என்று கூற..
“எங்க பெண்ணை எல்லாரும் ஆசிர்வதிக்கனும்னு ஆசைபடுறோம் அதனால கண்டிப்பா நீங்க வரணும்” என்று பாலன் அழுத்தி கூற, பிரகாசத்தின் முகமோ ஒளியிழந்து போனது மெல்ல தன்னை தேற்றிகொண்டவராக அவர்களிடம் ‘சரி வரேன்’ என்று உறுதியளித்தார்.
*******************************************
இங்கு அலரும் எழிலும் காலையே தங்கள் வாதத்தை ஆரம்பிக்க சரணோ அதில் தலையிடாது அவிரனுடன் வெளியில் வந்துவிட்டான். அலர் எழிலின் வாதத்தில் ஏனோ சரணுக்கு இதில் யாருடைய தலையீடும் இல்லாதிருப்பது நல்லது என்றே தோன்றியது.
அவிரன் சரணிடம் ஏதோ வளவளத்துகொண்டிருக்க பார்வை அவன் மீது பதிந்திருந்தாலும் மனமோ நினைவலைகளில் சிக்கிகொண்டது.
“சிட்டா அங்க பாருங்க..” என்று அவிரன் சரணின் முகத்தை திருப்பவும் அவன் காட்டிய திசையில் 108 வாகனம் சைரன் எழுப்பிக்கொண்டு செல்வதை கண்டவன் மீண்டும் அவிரனை காண ஒரு நொடி அதிர்ந்து போனான்.
பின்னே அவிரன் தன் கழுத்தில் இருந்த சாமி டாலரை ஏந்திய வண்ணம் கைகூப்பி கண்களை மூடி இதழ்களுக்குள் பிரார்தித்து கொண்டிருந்தான்.. இப்போது சரணுக்கு அங்கு அவிரனின் முகம் மறைந்து கீர்த்தியின் முகம் தோன்ற திடுக்கிட்டு போனான். கண்களை கசக்கிகொண்டு பார்த்தவனுக்கு என்ன முயன்றும் அவிரன் நின்ற கோலம் சரணுக்கு கீர்த்தியை சந்தித்த முதல்தருணங்களை ஞாபகபடுத்தஅன்றைய நாளும் அவன் மனக்கண்ணில் விரிய சுகமாய் அதில் மூழ்கிபோனான்.
சில வருடங்களுக்கு முன் :
‘ஹே சரண் லுக் அட் தேர்’ என்ற திலக்கின் குரலில் மாலின் இரண்டாம் தளத்தில் கதிரின் பிறந்தநாளுக்காக உடைகளை தேர்ந்தெடுத்து கொண்டிருந்தவன் அவன் சுட்டி காட்டிய திசையில் பயணித்து முதல் தளத்தை பார்த்தவன் இதழ்களோ ‘that’s quiet interesting’ (சுவாரசியமாக இருக்கிறது) என்ற வார்த்தைகளை உதிர்த்தது.
அங்கு முதல் தளத்தில் இரு பெண்கள் இயங்கும் படிக்கட்டின் (எஸ்கலேட்டர்) முன் நின்று கொண்டிருக்க, அதில் ஒருத்தி கண்களை இறுக மூடி ஒரு கரத்தை அருகே இருந்தவளுடன் இறுக்கமாய் கோர்த்துக்கொண்டு மற்றொரு கரத்தை தன் கழுத்தில் அணிந்திருந்த டாலரில் அழுந்த பதித்திருந்தாள். நெரிந்த புருவங்களின் கீழ் மூடிய இமைகளுக்குள் கருவிழிகள் அசைந்தாட அவள் இதழ்களோ ஓயாது எதையோ முணுமுணுத்து கொண்டிருப்பதை கண்டான்.
அப்பெண்ணின் குழந்தைதனமான முகமும் அதில் குடிகொண்டிருந்த பயத்துடன் கூடிய அப்பாவித்தனமும் அவனை ஈர்க்க நொடியில் கணித்துவிட்டான் அவளுக்கு இயங்கும் படிக்கட்டில் ஏறுவதற்கு பயம் என்று..!!
ஆனால் அங்கிருக்கும் லிப்ட்டை பயன்படுத்தாது அவள் அங்கேயே நின்று ஒரு காலை எடுத்து வைப்பதும் எஸ்கலேட்டர் இயங்க தொடங்கியதும் பயந்து பின்னால் இழுப்பதும் என்று தொடர்ந்து செய்துகொண்டிருக்க, அவன் விழிகள் மேலும் சுவாரஸ்யம் பெற்று அவளின் முயற்சியை சிறுபிள்ளையின் செய்கையாய் ரசித்து கொண்டிருந்தது.
அருகே இருந்தவள் ஏதோ சொல்லவும் மெல்ல இமைகளை மலர்த்தியவளின் மருண்ட நயனங்கள் சரணை மாய சுழலில் தள்ளஅதை அருகில் சென்று பார்க்கும் ஆவல் எழுந்தது. இதுவரை எந்த பெண்ணையும் பின்தொடர்ந்து சென்றிறாதவன் நண்பனையும் துணைக்கு அழைக்க அவனோ சிரித்துகொண்டே ‘தட்ஸ் க்ரேஸீ’ என்று நகர்ந்துவிட்டான்.
சரண் மீண்டும் கீழே பார்க்க அங்கு அவளின் முயற்சி தொடர்ந்து ஒருகட்டத்தில் காலை பின்னால் இழுத்தவள் தடுமாறி தோழியுடன் சேர்ந்து கீழே விழுந்து எழ தோழியோ கண்டமேனிக்கு அவளை திட்ட தொடங்கிவிட்டாள். அப்பெண் அவளிடம் கெஞ்சிகொண்டிருப்பதை கண்டவன் அவர்கள் இப்போதைக்கு மேலே வரப்போவதில்லை என்று உணர்ந்து அவள் என்ன செய்யபோகிறாள் என்பதை அறியும் ஆவலில் தளத்தின் வலப்பக்கத்திற்கு வந்தவன் அங்கிருந்த எஸ்கலேட்டரில் மேலிருந்து கீழ் அவர்கள் எதிரில் பயணப்பட்டான்.
அவன் கீழே வந்து சேரும்வரை அவனது மேலிமையும் கீழிமையும் ஊடல் கொண்டது போல ஒன்றை ஒன்று தழுவாது போக அவன் பார்வை அவள் கயல்விழிகளில் படிந்து மெல்ல அவள் கழுத்தில் அணிந்திருந்த டாலர், அதை பற்றியிருந்த அவளது நடுங்கும் கரங்கள், நெற்றியில் பயத்தினால் உருவாகியிருந்த வியர்வை முத்துக்களுடன்உறைந்திருந்த குங்குமமும் சந்தனமும், தோழியிடம் கெஞ்சிகொண்டிருந்த செவ்விதழ்கள்என்று சரணை முழுதாக கொள்ளையிட்ட காரிகையின்வடிவம் அவனில் ஆழ பதிந்து போனது.
இருபத்தியேழு வயது ஆண்மகனான சரணுக்கோ இது புது அனுபவம், இதுநாள் வரை தன் உடன் பணிபுரிவோரில் தொடங்கி எந்த பெண்ணிடமும் தேவையற்ற பேச்சோ வரம்பு மீறிய பார்வையோ செலுத்தாதவன் இன்று தன்னையும் மீறி அவள் மீது படியும் ஆராய்ச்சி பார்வையை குறித்து அவனுக்கே ஆச்சர்யம் தான்..!
அப்பெண்ணின் குழந்தைதனமான முகம் அவனை வசீகரிக்க, சிறு பனி துளி முதற்கொண்டு கடல் அலை வரை அனைத்தையும் ரசிப்பவனான அவனுக்கு இப்பெண்ணின் மீதான ரசனையும்குறையவில்லை. ஆனால் நிமிடத்திற்கும் மேலாக அப்பெண்ணின் செய்கை அன்றி அவள் முகத்தில் படிந்திருந்த அவன் பார்வை மாற்றம் பெறுவதை உணர்ந்த நொடி அதிர்ந்து போனான்.
பின்னே நான்கு தமக்கைகளுடன் பிறந்து அவர்களின் குழந்தைகளுக்கு தாய் மாமனாக அல்லாது மற்றொரு தாயாகவே திகழ்பவனுக்கு அக்கா பெண்களும் பிள்ளைகளும் ஒன்றுதான் அவனை பொறுத்தவரை அனைவருமே அவன் பெறாத பிள்ளைகள். அத்தகைய பிணைப்பை கொண்டிருப்பவனுக்கு இதுநாள் வரை அல்லாமல் இன்று புதியதாய் பார்க்கும் பெண்ணிடம் சொல்லப்போனால் அவனது மூத்த தமக்கையின் பெண்ணான அலரின் வயதை ஒத்த பெண்ணின் மீது முதல் சந்திப்பிலேயே தான் கொண்ட தடுமாற்றத்தை எண்ணி திகைப்பே மேலோங்கியது.
அதற்கும் மேலாக அவன் மனமோசில மாதங்களுக்கு முன்தமக்கைகள் அவனுக்கான திருமண பேச்சைவீட்டில் எடுத்திருக்க அவர்களிடம் இப்படி ஒருத்தியை ம்ஹுஹும் இவளையே பாருங்கள் என்று கூற வேண்டும் என்று துடிப்பதை அறிந்தவன் பதறிப்போனான்.
“என்ன பண்ற சரண் யாரு என்னன்னே தெரியாத பெண்ணை அவள் அனுமதி இல்லாமல்” என்று தன்னை தானே கடிந்துகொண்டவன் இனியும் இதை தொடர்வது நல்லதல்ல என்று எண்ணி அவர்களை கடந்து அருகே இருந்த லிப்ட்டில் மேல் தளத்திற்கு சென்றான்.
கதிரின் பிறந்த நாளுக்காக உடைகளை எடுத்துக்கொண்டு கேஷ் கவுன்டர் சென்றவன் காத்திருந்த தருணத்தில் கொலுசு சத்தமும் சிரிப்பும் ஒன்றை ஒன்று போட்டிபோட இரு கரங்களையும் நீட்டிக்கொண்டு அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்த குழந்தையும் சிரிக்கும் போது அதன் இரு கன்னங்களிலும் விழும் குழியும் அவன் கவனத்தை கவர்ந்ததில் முகத்தில் மாறா புன்னகையுடன் குழந்தையில் லயித்து போனான்.
நண்பன் வந்து தோளை தட்டவும் தான் பணத்தை செலுத்தி உடைகளை பெற்றுக்கொண்டு அவனுடன் இணைந்து நடக்க தொடங்கியவன் எஸ்கலேட்டர் நோக்கி செல்ல.. அவனை இடித்துக்கொண்டு அவனுக்கு முன்னே பாய்ந்திருந்தாள் அவன் சில நிமிடங்களுக்கு முன் கண்ட மஞ்சள் நிற சுரிதார் அணிந்த அப்பெண். நிலை தடுமாறி நண்பனை பிடித்துக்கொண்டு சரண் நிமிர அதற்குள் அப்பெண் சற்று முன் அவன் கண்ட குழந்தை இயங்கும் படிகளில் கால் இறங்க முற்படுவதைகண்டு ஓடி சென்று அவளை தூக்கி கொண்டு எஸ்கலேட்டரில் கீழே இறங்கி கொண்டிருந்தாள்.
அவள் சற்று தாமதித்திருந்தாலும் குழந்தை தடுமாறி இயங்கும் படிகளில் உருண்டிருக்கும்.
அவளை பார்க்ககூடாது என்று தப்பித்து வந்தவனுக்கு அவள் செய்கை ஆச்சர்யத்தை அளித்தாலும் குழந்தை காப்பாற்றப்பட்டதில் ஆசுவாசமாய் உணர்ந்தவன் நண்பனிடம் குழந்தையின் பெற்றோரை கண்டுபிடித்து அழைத்து வா என்று கூறி உடனே படிகளில் தாவி கீழே வந்தவன் பயத்தில் அழுது கொண்டிருந்த குழந்தையை வாங்கி முழுதாக ஆராய்ந்தவன் அதை ஆசுவாசப்படுத்தியவாறே உடனே தாயிடம் சேர்ப்பிக்க திரும்பவும் அவன் பின்னிருந்து “எக்ஸ்க்யூஸ் மீ” என்ற குரல்.
குழந்தையின் அழுகையை மட்டுபடுத்தி கொண்டிருந்தவனுக்கு அவள் அழைப்பு சரியாக காதில் விழாது போக… “ஹலோ உங்களைத்தான் எங்க போறீங்க” என்று அவன் கையை பிடிக்க அவள் முயற்சி புரிந்து குழந்தையை தட்டி கொடுத்தவாறு அவனே திரும்பினான்.
கீர்த்தியின் முகம் மட்டுமின்றி குரலும் குழந்தையினதாய் இருக்க கொஞ்சும் குரலே அவனை அவள்பால் சாய்த்ததில் தன்னையும் மறந்து அவளை ரசித்து கொண்டிருந்தான் சற்று முன் எடுத்த உறுதிமொழியை காற்றில் பறக்க விட்டவனாய்.!
“எதுக்கு கூப்பிட்டீங்க”
“என்னது எதுக்கு கூப்பிட்டேனா..?? சார் கொஞ்சம் விட்டிருந்தா என்ன ஆகியிருக்கும்னு தெரியுமா..? உங்களுக்கெல்லாம் என்ன அவ்ளோ அலட்சியம் உங்களை நம்பி வந்திருக்க குழந்தை மேல இவ்வளவு தான் அக்கறையா..?? குழந்தையை பொறுப்பா பார்த்துக்க முடியாட்டி எதுக்கு கூட்டிட்டு வரணும்” என்று கேட்க சரணோ இதழில் உறைந்த புன்னகையுடன் அவள் உணர்வுகளையும் கருவிழிகளின் அசைவையும் குரலின் இனிமையையும் துளி துளியாய் தன்னுள் நிறைத்து கொண்டிருந்தானே தவிர அவள் கூறியது எங்கே அவன் காதில் விழுந்தது..!!!
அவள் இதழ்கள் அசைவை நிறுத்தி விழிகள் அவன் பதிலுக்காக காத்திருப்பதை உணர்ந்த பின் தான், ‘ஒஹ்.. ம்ம்ம், அப்புறம்’ என்றான்.
கீர்த்திக்கோ அவன் செய்கை கோபத்தை கிளற, “ஏங்க நான் என்ன கதையா சொல்லிக்கிட்டு இருக்கேன் அப்புறம் கற்பூரம்னு கடுப்பை கிளப்புறீங்க” என்று கடுகடுக்க அதையும் புன்னகை இழையோட தலையசைத்து ரசித்திருந்தான் சரண்.
ஏனோ அவள் குரலை மீண்டும் கேட்கும் பொருட்டு பேச்சை வளர்க்கவென்று இதுநாள் வரை தன் முறைபெண்களிடம் கூட உரிமை கொண்டு சீண்டியிராதவன் ‘பச்சை கற்பூரமா..? ரசக்கற்பூரமா..?’ என்றான்.
இது போதுமே கீர்த்தியின் பொறுமையை சோதிக்க!இவ்வளவு நேரம் தோழியிடம் திட்டு வாங்கியவள் இயங்கும் படிகளை தவிர்த்து இறுதியில் லிப்ட்டில் தான் அடுத்த தளத்தை சென்றடைந்திருந்தாள். இரண்டாம் தளத்திலும் தோழியின் வசவுகளை கேட்டுகொண்டே எவ்வாறு சிறு பிள்ளைகள் கூட இயங்கும் படிகளில் பயமின்றி பயணிக்கின்றனர் என்பதை பார்த்து கொண்டிருந்தவளின் கண்ணில் படிகளை நோக்கி சென்று கொண்டிருந்த குழந்தை பட்டது.
உடனே குழந்தையை காக்கும் பொருட்டு படபடக்கும் இதயத்தோடு ஓடி வந்தவளுக்கு எவ்வாறு அதில் கால் பதித்து கீழே விழாமல் குழந்தையுடன் அடுத்த தளத்திற்கு வந்து சேர்ந்தோம் என்பதே பெரும் ஆச்சர்யமாகி போனது. இருப்பினும் அவள் கை கால் உடையாமல் முழுதாய் இருப்பதே செய்த சாதனையை உறுதி செய்ய தடதடக்கும் இதயத்துடன் மிரட்சியோடு இயங்கும் படிகளை பார்த்துகொண்டிருந்தாள்.
அப்போது சரண் ஏதும் கூறாமல் குழந்தையை பெற்று செல்லவும் குழந்தையின் நிலை அவனிடம் அவளை பேச செய்தது. ஆனால் இப்போது அவன் பேச்சை கொண்டு செல்லும் திசையை கண்டுகொண்டவள் சென்னை வரும் முன் இவன் போன்ற ஆட்கள் பற்றி ஏற்கனவே தோழிகள் மூலம் அறிந்திருந்திருந்ததில் அவன் முன் சொட்டுக்கிட்டு,
“என்ன கிண்டலா ?குழந்தையை பத்திரமா பார்த்துக்க தெரியலை ஆனா பேச்சு மட்டும் எகத்தாளமாய் வருது குழந்தையை அப்படியே விட்டிருக்கணும் அப்போ தெரிஞ்சிருக்கும் சேதி” என்று பல்லை கடித்தவாறு லிப்ட்டை நோக்கி செல்ல,
‘ஒரு நிமிஷம் எதோ சொல்ல வந்தீங்க போல’ என்று ஆரம்பிக்கவும் பொறுமை காற்றில் பறக்க, “அது ஒன்னுமில்லைங்க நீங்க குழந்தையை மேல இருந்து கீழ உருட்டி விட்டு பிடிச்சி ரொம்ப சுவாரஸ்யமா விளையாடிட்டு இருந்தீங்க போல நான் தான் தேவை இல்லாம உள்ள நுழைஞ்சு உங்க ஆட்டத்தை கெடுத்துட்டேன் அதனால மன்னிச்சிடுங்கன்னு சொல்ல வந்தேன் போதுமா.!!’ என்று அங்கிருந்து அகல முயன்றவளின் துப்பாட்டா இழுபட்டு அவள் வேகத்தை தடை செய்தது.
தன்னிடம் எண்ணையில் இட்ட கடுகாய் படபடவென பொரிந்து திரும்பி நடக்க முயன்றவளின் துப்பட்டாவை குழந்தை பிடித்திழுக்க கீர்த்தியின் பார்வை சிறு முறைப்புடன் சரணிடம் நிலைகொண்டது.
அப்போதுதான் குழந்தை அவனிடம் இல்லாது அதன் பெற்றோர்கள் வசம் இருப்பதும் அது தன் துப்பட்டாவை பிடித்திழுப்பதையும் கண்டாள்.குழந்தையின் பெற்றோரை திலக் அழைத்து வந்திருக்க அவர்களிடம் சரண்கீர்த்தி குழந்தையை காப்பாற்றியதை பற்றி விளக்கி கூறவும்கீர்த்தி திகைத்து போனாள்.
பின்னே அவள் குழந்தையை காப்பாற்றியதை பற்றி மட்டும் கூறாது எஸ்கலேட்டரின் மீது அவள் கொண்டிருந்த பயம் அதை களைவதற்கு அவள் எடுத்த முயற்சிகள் இறுதியாய் அவள் குழந்தைக்காக அச்சத்தை புறந்தள்ளி குழந்தையைஅவர்களுக்கு மீட்டு கொடுத்திருக்கிறாள் என்று விளக்கவுரை அல்லவா அளித்துக்கொண்டிருந்தான்.
இதை கேட்ட அக்குழந்தையின் தந்தையோகண்ணீர் மல்க நன்றி பெருக்குடன் அவளை பார்த்து ‘நாலு வருஷம் கழிச்சி கிடைச்ச புள்ளைம்மா,எங்க உசுரையே மீட்டுகொடுத்திட்டரொம்ப நன்றி‘, என்று இருகரம் கூப்ப அவரருகே கண்ணீரில் கரைந்தவாறு பிள்ளைக்கு முத்தம் இட்டுஅவனை முழுதாய் ஆராய்ந்த அன்னை கீர்த்தியின்கரங்களை பிடித்துகொண்டு ‘நீ தான்க்கா எங்க குலசாமி!ரொம்ப நன்றிக்கா உன் உதவியை மறக்கவே மாட்டோம்‘ என்றிட,
கீர்த்திக்கோ அவர்களின் அதீத உணர்வின் வெளிப்பாடு சங்கடத்தை உண்டாக்க, ‘அச்சோ தேங்க்ஸ் எல்லாம் எதுக்குங்க குழந்தையை பத்திரமா பார்த்துகோங்க‘ என்றவளின் குரலில் இருந்த கனிவு நிச்சயம்சரணை பார்த்த பார்வையில் இல்லை,
‘நீ நல்லா இருக்கனும்மா, நிச்சயம் இனி இதுபோலநடக்காம பார்த்துக்குறோம்‘ என்றுகூறவும் அக்குழந்தையோ தாய் வசம் சென்று சேர்ந்ததும் அழுகையை நிறுத்தி தன் அழகிய சிரிப்பின் மூலம் இருவருக்கும் நன்றி உரைத்தது.
‘சரிங்க நான் கிளம்புறேன்‘ என்று கீர்த்தி திரும்பவுமே,
“என்னக்கா இது பொசுக்குன்னு இப்படி போறன்னு சொல்ற எங்க வம்சத்தையே காத்து கொடுத்திருக்க உன்னை அப்படியேவிட்டுட முடியுமா..?” என்றிட கீர்த்திக்கோ சுத்தமாய் அவர்கள் என்ன கூற வருகிறார்கள் என்று புரியவில்லை அவ்வளவு ஏன் அருகே நின்றிருந்த சரணுக்கும் தான்.!!
‘என்ன சொல்றீங்க புரியல‘
“எக்கா இந்த படிகட்டுல போறதுக்கு அம்புட்டு பயமாக்காஉனக்கு” என்று கேட்கவும் சரணுக்கோ ‘இது ஏதுடா கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையா போகுதே‘ என்று எண்ணியவனுக்குஐயோ என்றாகி போக வலக்கரத்தால் முகத்தை மூடிக்கொண்டான்.
ஆனாலும்விரல்களின் இடைவெளியில் கீழ்க்கண்ணால் கீர்த்தியை கவனிக்க தவறவில்லை.
அப்பெண்ணின் எதிர்பாரா கேள்வியில் அதிர்ந்த கீர்த்தி சுற்றும் முற்றும் ஒரு பார்வை பார்த்த பின் சரணை பார்க்க அவள் விழிகளில் வழிந்த கனலை சரணும் உணர்ந்தே இருந்தான். ஆனால் அப்பெண்அத்துடன் நிறுத்தாமல் அவர்களுடன் இருந்தஏழு வயதுபெண்ணிடம் “பாப்பு அத்தைக்கு இதுல எப்படி ஏறி இறங்குறதுன்னு சொல்லிகொடுத்தா” என்றிட,
சரணுக்கே கீர்த்தியின் நிலை பாவமாகிவிட, “எதுக்கும்மா அதெல்லாம் நீங்க குழந்தையை பாருங்க” என்றான்.
“இல்லைங்கநானேபார்த்துக்குறேன் எனக்கு நேரமாச்சு” என்றிட
‘யண்ணே நீ சும்மா இருண்ணே‘ என்றவள் கீர்த்தியிடம் “யக்கா அது எப்படி அப்படியே விட்டுட்டு போக சொல்ற ஒருத்தருக்கு ஒரு கஷ்டம்னா சும்மா விட்டுட்டு போற பரம்பரை இல்லை எங்களது…” எனவுமே கீர்த்தியோ எனக்கென்ன கஷ்டம் வந்தது என்று குழம்பி போனாள்.
“அண்ணதே சொல்லுச்சேசாமி மாதிரி வந்து எங்க புள்ளையை காப்பாத்தியிருக்க நாளபின்னஉனக்கு எதுவும் ஆகிட கூடாது அதான் நீ ஒன்னும் பயப்படாதஇது எங்க அண்ணன் மவஎனக்கு இதுல ஏற கத்துகொடுத்ததே இவதேன் சின்ன பிள்ளையா இருந்தாலும் எல்லாத்துலயும் படு சுட்டி அவநல்லாவே கத்துகொடுப்பா”
சரணும் திலக்கும் சிரிப்பை கட்டுபடுத்த முடியாமல் நடப்பதை அமைதியாய் பார்த்துகொண்டிருக்கதிலக் அவன் செவியோரம் ‘லிஸன்டியூட் திஸ் இஸ் தி டைம் லெட்ஸ் மூவ்‘ (நாம இப்போ கிளம்புறது தான் நல்லது) என்றான்.
சரணுக்கு அவளை தனியாக விட்டு கிளம்ப மனமில்லை எப்படியாவது அவளை காப்பாற்றி விட முனைய.., அதே சமயம் அச்சிறுபெண்ணோ கீர்த்தியிடம் “ஆன்ட்டி இட்ஸ் வெரி சிம்பிள் யு க்நொவ்” என்று இயங்கும் படியில் ஏறும் முறையைகூறி அவளுக்கு செயல் முறை விளக்கம் அளிக்கவும் அங்கு வந்து சேர்ந்தாள் சைந்தவி.
மூச்சு முட்ட நின்றிருந்தவள், ‘தேங்க் காட்‘ என்று கடவுளுக்கு நன்றி உரைத்துதன் தோழியை காட்டி அவர்களிடம்இருந்து விடை பெற்றாள்.
“யாரு கீகீ அவங்க தெரிஞ்சவங்களா..?” என்று சைந்தவி கேட்கவும்அவளை முறைத்த கீர்த்தியின் கண்கள் சரணை தான் தேடியது.. பின்னே தன் பலகீனத்தை அடுத்தவருக்கு வெளிச்சம் போட்டு காட்டியது மட்டுமின்றி ஏழு வயது பெண்ணை கொண்டு தனக்கு விளக்கம் அளிக்க வைத்தவனை சும்மாவா விட முடியும்.. ஒரு கை பார்த்தே தீருவது என்று அத்தளம் முழுதும் தேடிக்கொண்டிருக்கமால்லைவிட்டு வெளியேறிக்கொண்டிருந்த சரணின் இதழ்களில் புன்னகை உறைந்திருந்தது.