அப்போதுதான் சரண் அலுவலகத்தை சென்றடைந்து தன் அறைக்குள் சென்று முக்கிய ஆவணங்களை சரி பார்த்து மேனேஜருடனான மீட்டிங்கில் கலந்துகொள்ள கிளம்பி கொண்டிருந்தான். புது எண்ணில் இருந்து அவனுக்கு காணொளி வரவும் அதை அலட்சியபடுத்தி விட்டு வேலையில் கவனம் பதிக்க சில நிமிடங்களிலேயே அதே எண்ணில் இருந்து அழைப்பு…
அழைப்பை ஏற்க மறுபுறம் கீர்த்தியின் குரல் மிகவும் எள்ளலுடன் காணொளியை பார்க்குமாறு கட்டளை இடவும் உடனே கைபேசியை உயிர்பித்து காணொளியை கண்டவனின் முகம் மறுநொடியே குப்பென வியர்த்து போக சரணுக்கு சர்வமும் ஒடுங்கி போனது.
ஆனால் அதற்கு நேர்மாறாக காணொளியில் தோன்றிய கீர்த்தி படு அலட்சியமாக அவள் முன்பிருந்த ஸ்டூல் மீது ஒரு காலை வைத்து கரத்தை அதில் ஊன்றியவாறே மெல்ல குனிந்தவள் வார்த்தைகளின்றி அழுத்தமாக கேமராவையே பார்த்திருந்தவள் சில நீண்ட நொடிகளுக்கு பின்,
“என்ன மிஸ்டர் சரண்நான் தான் உங்ககிட்ட ஏற்கனவே சொன்னேனே என்னை வீட்டை விட்டு போக சொல்ற அதிகாரம் உங்களுக்கு இல்லைன்னு மீறி அனுப்ப நெனைச்சா விளைவு விபரீதமா இருக்கும்னு… நான் அவ்வளவு தூரம் எடுத்து சொன்னதுக்கு அப்..பு..ற..மும் எவ்வ்வ்வ்வளவு தைரியம் இருந்தா நீங்க எனக்கு ரெண்டு நாள் கெடு விதிச்சிட்டு கிளம்புவீங்க… ஹ்ம்ம்..!!” என்று புருவம் உயர்த்தியவள் பார்வையும், குரல் பேதமும், உடல்மொழியுமே சரணுக்கு ஏதோ விபரீதம் நிகழபோவதை உணர்த்த, ஒருவித அச்சம் மனதை கவ்வ இமை சிமிட்டாது காணொளியை பார்த்திருந்தான்.
இப்போது ஸ்டூலின் மீது ஏறி நின்றவள் வலக்கரத்தை உயர்த்தி எதையோ பிடித்துக்கொண்டே “நான் எதுக்கு இங்க வந்திருக்கேன்னு சொன்னதுக்கு அப்புறமும் கொஞ்சமும் எனக்கு கோவாப்ரேட் பண்ணாம ஹாயா ஆபிஸ் கிளம்பிடீங்க…, என்ன என்னோட வார்த்தைக்கு மரியாதை இல்லையா..?? இல்லை நான் என்ன அவ்ளோ ஈசியா போயிட்டேனா..என்றவள் மெல்ல கரத்தை கீழிறக்க அவள் கையில் சுருக்கிடப்பட்ட கயிறு இருப்பதை கண்ட சரணின் இதயம் வேகமாக தடதடக்க கீர்த்திஎன்ன செய்யவிருக்கிறாள் என்பது புரிபட கைபேசியை பிடித்துகொண்டிருந்த சரணின் கரத்தில் நடுக்கம் கூட முகத்தில் வியர்வை அரும்புகள் பூக்க ஆரம்பித்தது.
“எனக்கே கெடுவா..??” என்று எள்ளலாக தலையை ஒருபுறமாக சாய்த்தவள்,
“இப்போ வீட்டுக்கு வரதுக்கு உனக்கு சரியா இருபது நிமிஷம் தான் டைம்.., அதுலயும் இது பீக் ஹவர்ஹெவி ட்ராபிக் வேறபட் அதையெல்லாம் சாக்கா வச்சிக்கிட்டு நீமட்டும் நேரத்துக்குவராம போன…” என்று எச்சரித்தவள் கைபேசியை திருப்பி அங்கு மேஜை மீதிருந்த மற்றொரு கைபேசியில் முகபுத்தக பக்கத்தை திறந்து வைத்திருப்பதை காட்டவும் தூக்கிவாரி போட்டது சரணுக்கு.
“இருபத்தி ஓராவது நிமிஷம் நான் இதுல தொங்கிடுவேன் அதுவும் பேஸ்புக்ல லைவ்வா..!! ஊரே பார்க்கிற மாதிரி” என்றவள் இதழ்களில் மெல்லிய புன்னகை தவழ,
“இது எப்படி இருக்கு..!! நானும் கொஞ்சம் வித்யாசமானவதான் எங்கப்பனை மாதிரியே” என்றவளின் குரலின் அழுத்தம் கூடி இருக்க சரணுக்கு உடலின் மொத்த சக்தியும் வடிந்துபோனது.
அடுத்து அவள் என்ன பேசியிருப்பாளோ அதை எல்லாம் கேட்கும் நிலையில் சரண் இல்லைமறுநொடியே இருக்கும் இடம் நிலை அனைத்தையும் மறந்து தலைதெறிக்க அலுவலகத்தை விட்டுவெறிபிடித்தவன் போல ஓடி பேஸ்மென்ட்டை அடைந்தவன் பலமுறை தடுமாறி தூணில் இடித்துக்கொண்டும் கீழே விழுந்து எழுந்தும் ஓடியவன் சிந்தை முழுதும் கீர்த்தியே இருக்க தன் வேகத்தை கூட்டி ஓடியவன் எதிரே சென்ற வாகனத்தின் குறுக்கே பாய்ந்து தன் பைக்கை அடைந்து புயல் வேகத்தில் கிளப்பி இருந்தான்.
போக்குவரத்து விதிமுறைகளை மீறிக்கொண்டு காற்றைவிட அதிவேகமாகஓட்டி சென்றவனின் மனமோ அதைவிட வேகமாக துடிக்க மனக்கண்ணில் கீர்த்தி அனுப்பிய காணொளியே வலம் வர சிந்தை கெட்டு இருந்தவனின் புலன்களும் ஒருங்கே வேலை நிறுத்தம் செய்திருந்தது.
எதிரே வந்த வாகனத்தில் இருமுறை விபத்தில் மாட்ட இருந்தவன் இறுதி நேரத்தில் சுதாரித்துநூலிழையில் தப்பித்து முழுதாக வீடு சென்று சேர்ந்ததே அவன் செய்த புண்ணியம் தான்..!!
கிட்டத்தட்ட அரை உயிராக அவன் வீட்டை சென்று அடைந்தபோது கீர்த்தி அவனுக்கு விதித்திருந்த கெடுவில் ஐந்து நிமிடம் மீதமும் இருந்தது.
வீட்டின் முன் நின்று அழைப்பு மணியை ஒலிக்க விட்ட சரணின் சட்டை தெப்பலாக நனைத்திருக்க விழிகளில் திரண்டிருந்த நீருடன் கலக்கமும், அச்சமும் போட்டிபோட மூச்சு காற்றுக்கும் ஏங்கியவனாக வாயை திறந்து பிராண வாயுவை வேகமாக சுவாசித்து கொண்டிருந்தான். அவன் வந்த பின்னரும் உடனே கதவை திறக்காமல் கீர்த்தி அவனை சோதிக்க அவள் தாமதித்த ஒவ்வொரு நொடிக்கும் சரண் செத்து பிழைத்தான்.
கைபேசியை எடுத்து இறுதியாக அவள் தன்னை அழைத்திருந்த எண்ணிற்கு அழைக்க, உள்ளே கைபேசி ஒலி சரணுக்கு நன்கு கேட்டது ஆனாலும் ஏற்கபடவில்லை. இனியும் தாமதிப்பதற்கு இல்லை என்று கதவை உடைக்கமுற்பட அதற்குள் கீர்த்தி கதவை திறந்திருந்தாள்.
வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாய் பாய்ந்து கொண்டு உள்ளே நுழைந்தவன் தடுமாறி அருகே இருந்த மேஜையில் கரம் குற்றி ஆழ்ந்த மூச்சுக்களை எடுத்து தன்னை நிலைபடுத்தினான்.அதற்குள் கதவை தாளிட்டு வந்தவள் அங்கிருந்த சோபாவில் தோரணையாக அமர்ந்து கால் மேல் கால் போட்டு கொண்டு வைத்த கண்ணை எடுக்காமல் அவனையே பார்த்திருந்தாள். விழிகளோ எண்ணிலடங்கா உணர்வுகளை பிரதிபலித்தாலும் முகத்தில் ஒருவித உறுதியுடன் அவனவள்..!
“பரவால்லயே அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடியே வந்துட்ட அப்போ என்மேல லவ் இருக்குதானே..!! அப்புறம் ஏன் பேபி என்னை ஏத்துக்க மாட்டேங்கிற” என்று கேட்க தன்னை சமன்படுத்திகொண்டு திரும்பிய சரணின் தொண்டை வறண்டு போயிருக்க நீரை தேடி அலைந்தவனின் விழிகளில் தோரணையுடனான கீர்த்தியும் செவியில் அவள் எகத்தாள வார்த்தைகளும் அகப்படவும் மறுநொடியே கீர்த்தியை நெருங்கி ஓங்கி அறைந்திருந்தான்.
“ச்சி வாயை மூடு என்ன ஜென்மம்டி நீயெல்லாம்..??” என்று பேசமுடியாமல்இருமியவன் அருகே இருந்த தண்ணீரை எடுத்து மடமடவென குடிக்க கீர்த்தியோ அவன் அறைந்த இடம் தீப்பற்றினார் போல எரிய மெல்ல கரம் கொண்டு வருடினாள்.
மீண்டும் ஆத்திரம் தீர அவளை அறைந்தவன் சட்டென கழுத்தை பிடித்து.., “என்னதான்டி வேணும் உனக்கு…?? எதுக்கு வெறி பிடிச்சவ மாதிரி இப்படி நடந்துக்குற… உனக்கும் உங்கப்பனுக்கும் ஒரு வித்யாசமும் இல்லை, நான்தான் உன்னை குழந்தைன்னு தப்பா நினைச்சிட்டேன் ஆனா நீ..!! ச்சை எனக்கே தெரியாம உனக்குள்ள இத்தனை கொடூரமா..?? அப்போ நம்பி ஏமாந்தது நான்தானா..?காதலிக்கிறவளுக்குள்ள இன்னொரு கொடூரமான முகம் இருக்கிறதுகூட தெரியாத முட்டாளா இருந்திருக்கேனே” என்று விரகத்தியான குரலில் பேசிக்கொண்டே சென்றவன் அவள் விழிகளில் வலி மிகுவதை கண்ட பின்னரே தான் செய்து கொண்டிருக்கும் செய்ல் புரிபட உடனே அவள் கழுத்தில் இருந்து கரத்தை எடுத்தான்.
கீர்த்தி இருமியவாறே கண்ணில் திரண்டிருந்த நீருடன் அவனை பார்க்க, “மனுஷனா இருந்த என்னை ஏன்டி இப்படி கொஞ்சம் கொஞ்சமா மிருகமா மாத்துற, நீ பண்றதை எல்லாம் பார்க்கும்போது உங்கப்பனே மேலோன்னு தோணுது”
“எங்கப்பனை பழிவாங்க உனக்கு கஷ்டமே இல்லாம ஒரு வழி ஏற்படுத்தி கொடுக்க நினைக்கிறேன் இதுல என்ன தப்பு”
“வழியா.. என்ன வழி ?”
“ஆமா உனக்கு படம் பார்க்கிற பழக்கமோ இல்லை கதைகள் படிக்கிற பழக்கமோ இல்லையா..??”
சரண் பதிலளிக்காமல் அவளையே பார்க்க, “ஆமா சரண் வழக்கமா நம்ம தமிழ் சினிமால, கதைகள்ல எல்லாம் அப்பா ஹீரோ குடும்பத்துக்கு ஏதாவது கெட்டது பண்ணி இருப்பான் அவனை பழிவாங்க ஹீரோ அவனோட பெண்ணை கடத்தி கொண்டு வந்து கர்ப்பமாக்கி அவன் மானத்தை வாங்கி அவனை தண்டிப்பான் இதுதானே நம்ம மரபு.., அது மாதிரி தான் நான் உனக்கு ஏற்படுத்தி கொடுத்திருக்க வழியும்” என்று அவனை பார்த்தவள்..,
“என்ன ஒன்னு இங்க உனக்கு என்னை கடத்துற கஷ்டத்தைகூட நான் குடுக்கலை.., நான் கேட்கிறது எல்லாம் உன்னோட குழந்தை மட்டுமே அதை கொடுத்தா மட்டும் போதும்நீ என்னை கொண்டுவிட வேண்டாம் நானே போய்டுவேன்” என்றவள் வார்த்தைகளில் ஸ்தம்பித்து போனான் சரண்.
ஆனால் அவளோ மேலும் பேசி அவனே அறியாத அவன் மூர்க்க பக்கங்களை வெளிக்கொண்டு வருவதையும் உணர்ந்தவன் எங்கே அதன் விளைவாக அவளை கடுமையாக தாக்கி விடக்கூடுமோ என்று தன் சீற்றத்தை அடக்க வேண்டி சில நிமிடங்கள் மெளனமாக நடை பயின்றவன் அவளை நெருங்கி,
“வேண்டாம் கீர்த்தி என்னை ரொம்பவே சோதிக்கிற கடைசியா உன்னை நான் வார்ன் பண்றேன் இதுக்கு மேல ஏதாவது பேசின நான் மனுஷனாவே இருக்க மாட்டேன் ஜஸ்ட் ஸ்டாப் எவ்ரிதிங்” என்றவனின் முகம் இறுகிப் போயிருக்க அவன் குரலே அவளை அச்சுறுத்தியது.
“உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருக்கா..? வந்ததுல இருந்து குழந்தை குழந்தைன்னு உயிரை எடுக்குறியே முறையற்று அங்கிகாரம் இல்லாமல் பிறக்கும் குழந்தைக்கு இந்த சமூகத்துல என்ன பேர்ன்னு தெரியுமா..??? அந்த குழந்தையோட அம்மா இந்த சமூகத்தோட பார்வையில எந்த நிலையில இருப்பான்னாவது தெரியுமா? வாழ்க்கை முழுக்க ரணமும் வேதனையும் மட்டுமே மிஞ்சும் ஒருவேளை அது பெண் குழந்தையா இருந்தா அதனுடைய நிலை சொல்லவே வேண்டாம் இன்னும் மோசமானது” என்று கூறும்போதே அவன் குரல் கரகரத்துபோக குரலை செருமியவன்,
‘வளரும்போதே வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் சமூகத்தோட போராடனும் திருமணத்திற்கு பிறகு பிறக்கும் குழந்தை எல்லோராலும் கொண்டாடப்படும் ஆனா அதே முறையில்லாம பிறந்தா அதோட நிலை கண்கொண்டு பார்க்க முடியாது புரிஞ்சிக்கோ’ என்று அறையினுள் சென்றவன் அங்கு உத்திரத்தில் கட்டப்பட்டிருந்த கயிறை அவிழ்த்து அவள் முகத்தில் விட்டெறிந்து,
“இப்போ எதுக்குடி இந்த நாடகம் போட்டு என்னை வரவழைச்ச..??” என்றதும் கீர்த்தியிடம் மீண்டும் அழுத்தத்துடன் கூடிய அமைதி மட்டுமே..!!
“ஒன்னு மனுஷனை பேசி சாவடி இல்லாட்டி பேசாம சாவடி… இப்போ என்னடி இந்த வீட்டை விட்டு உன்னை போக சொல்லக்கூடாது அவ்வளவுதானே..!!’ என்று மூச்சை இழுத்துவிட்டவன்,
“ஒகே இனி உன்னை இங்க இருந்து போக சொல்ல மாட்டேன் நீ இங்கேயே இருக்கலாம்” என்று கூறவும் கீர்த்தியின் பார்வை ஆச்சர்யத்துடன் அவன் மீது படிந்தது.
“ஆமா இங்கயே இருக்கலாம் ஆனா உன் இஷ்டத்துக்கு இல்லை நான் சொல்ற மாதிரி இருக்கணும்.. இங்க வந்ததுல இருந்து வெறிபிடிச்ச மாதிரி நான் தான் வேணும் என்கூட தான் வாழனும் என்னோட குழந்தை வேணும்னு நீ பண்ணிட்டு இருக்க பைத்தியக்காரதனத்தை எல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு அமைதியா எப்படி இருக்கணுமோ அப்படி இருக்கிற வழியை பார்க்கணும் இல்லை” என்று ஒரு நொடி நிதானித்தவன்,
‘உனக்கே தெரியும் நான் எந்த அளவுக்கு பொறுமையானவன்னு என்னை இதுக்கு மேலும் சீண்டின இப்போ மாதிரியே இருக்கமாட்டேன் உங்கப்பனுக்கு விழுந்ததை விட உனக்கு அதிகமா விழும் பொண்ணுன்னு கூட பார்க்கமாட்டேன் ‘என்று ஆவேசமாக எச்சரித்து விட்டு அறையின் வாயிலிற்கு சென்றவன் திரும்பி அவள் பார்வை வேறெங்கோ இருப்பதை கண்டு சொடக்கிட்டு அழைத்தவன்,
‘ஏற்கனவே என் அக்கா பொண்ணு இங்க தான் இருந்தா அது உனக்கே தெரியும் இதோ இது அவளோட ரூம் இனி இதுல நீ தாராளமா இருந்துக்கலாம் ஆனா என்னை தொந்தரவு செய்யாம’ என்று இறுதி வார்த்தைகளில் அழுத்தம் கொடுத்தவன்,
அவள் பார்வை மாற்றத்தை கண்டு, “உனக்கு ஏதோ மனக்கஷ்டம் இருக்குன்னு புரியுது முடிஞ்சா எனக்கு என்னன்னு சொல்லு சால்வ் பண்ண ட்ரை பண்றேன் இல்லையா அது குறைஞ்சதும் இங்க இருந்து கிளம்பிடனும் அதுவரை எப்படி இருக்கணுமோ அப்படி இருக்கிற காட் இட் ! என்றவன் அலுவலகத்திற்கு கிளம்பி சென்றான்.
அவன் செல்லவும் சுவரில் சாய்ந்து நின்ற கீர்த்தியிடம் சரண் மீதான பிரமிப்பு இன்னுமே அதிகரித்தது. பின்னே சரணை மட்டுமே பத்து வருடங்களுக்கு மேலாக மனதில் சுமந்து கொண்டிருப்பவளுக்கு பிரகாசத்தை பழிவாங்க குழந்தை என்று முடிவெடுத்த பின்னர் அவள் சுமக்க நினைத்ததும் அவன் குழந்தையைதான்.
ஆனால் இங்கே அவனை கண்ட நாள் முதலே முற்றாக அவள் எண்ணங்களுக்கு அப்பாற்பட்டு நிற்பவன் கீர்த்தியிடம் ஒருவித ஆச்சர்யத்தையும் திகைப்பையுமே ஏற்படுத்தி இருந்தான். அதிலும் இரு நாட்களாக அவனிடம் வதைப்படுபவள் இன்று அவன் வார்த்தைகளில் முழுதாக உடைந்து போயிருக்க இப்போது தன்னை வெகுவாக கட்டுப்படுத்த வேண்டி இருந்தது அவளுக்கு.
ஆனால் அந்நிலைகூட சில மணித்துளிகளுக்கே!!
சில நிமிடங்களில் முகத்தை நிமிர்த்தியவள் ஈரம் கசிந்த விழிகளை துடைத்தவாறே தன்னையும் மீட்டெடுத்து மனதில் எக்கின் உறுதியோடு அடுத்து செய்ய வேண்டியவைகளை மனதில் பட்டியல் போட்டு ஒத்திகை பார்க்க தொடங்கினாள்.
அதற்கு பின்பான நாட்களில் சரணுடன் பேசாமல் மெளனமாக இருந்தாளே தவிர தன்முயற்சியை கைவிடவில்லை… வேலை செய்பவன் கவனத்தை திசை திருப்ப முயற்சிப்பது, டிவி பார்த்து கொண்டிருந்தால் ஒட்டி அமர்வது, குளிக்க சென்றால் குளியலறைக்குள் நுழைய பார்ப்பது என்று ஏதேனும் ஒரு வகையில் அவனை பலவீனமாக்கும் முயற்சிகளை செய்து கொண்டேதானிருந்தாள். இதிலிருந்து தப்பிக்க திலக்குடன் தங்க முற்பட்ட சரணை மீண்டும் மிரட்டியே வீட்டிற்கு வர வைத்திருந்தாள் நம் நாயகி.
அன்று அலுவலகத்தில் வேலை நெட்டி முறிக்க வழக்கத்திற்கும் தாமதமாகத்தான் வீடு திரும்பி கொண்டிருந்தான். ஆனால் அவன் வீடு வந்து சேர்வதற்குள் பல அழைப்புகள் வர, அழைப்பது யார் என்று தெரிந்ததும் மனம் பெரும் தவிப்பு கொள்ள அதன் விளைவு பாதையில் கவனம் இல்லாது போகவும் வண்டியை ஓரமாக நிறுத்தியவன் தன்னை ஆசுவாசபடுத்தி கொண்டு வீடு வந்து சேர்ந்திருந்தான்.
கணினியை உயிர்பித்து கொண்டு சோபாவில் சரண் அமர்ந்த சில நொடிகளில் அவன்முன் வந்து நின்றவள் ‘டின்னர் ரெடி’ என்றாள்.
இங்கு வந்ததில் இருந்து இதுநாள் வரை சமைக்காதவள் இன்று திடீரென்று சமைத்திருப்பதை கண்டு அவன் மனதில் கேள்விகள் எழ யோசனையாக அவள் முகம் பார்த்தவன் இல்லை வேண்டாம் நான் வழியிலேயே சாப்பிட்டுட்டு வந்துட்டேன் என்று மறுத்தான்.
‘அதனால் என்ன இதையும் சாப்பிடு எல்லாமே ஹெல்த்தியா உனக்காகவே பார்த்து பார்த்து சமைச்சது’
‘ஏய் நான் தான் வேண்டாம்னு சொல்றேனே உனக்கெல்லாம் ஒருமுறை சொன்னா புரியாதா போடி இங்கிருந்து’ என்று கணினியில் பார்வை பதித்தவனுக்கு அவள் இங்கு வந்ததில் இருந்தே சரியான ஊன் உறக்கம் இல்லாது வேலைகளையும் சரிவர செய்ய முடியாது போனதில் இப்போது முடித்தேயாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பவன் அவளை அலட்சியம் செய்து தன் வேலையை தொடரலானான்
அங்கிருந்து அகன்றவள் மீண்டும் சில நிமிடங்களில் திரும்பி அவனருகே அமர்வும் தன்னிச்சையாக சரண் தள்ளி அமர்ந்தான் அப்போதும் விடாமல் அவனை நெருங்கி அமர்ந்தவள் அவன் கையை பிடிக்க அவள் முயற்சியை அறிந்தவனாக உடனே கணினியை மேஜை மீது வைத்துவிட்டு எழுந்து நின்றான் சரண்.
‘ப்ச் கையை தானே பிடிக்க வந்தேன் ரொம்ப ஓவரா பண்ற’ என்றவாறே அவனுடன் எழுந்து நின்றவள் அவன் கரத்தை பிடித்து சில மாத்திரை அட்டைகளை வைக்கவும் சரணோ அம்மாத்திரைகளை என்ன என்று கூட பார்க்காமல் அவளையே அழுத்தமாக பார்த்திருந்தான்.
‘சாப்பாடு தான் வேண்டாம்னு சொல்லிட்ட இந்த மாத்திரையாவது எடுத்துக்கோ’
‘எதுக்கு..??’
‘ப்ச் நான் இங்க வந்து ஒரு வாரத்துக்கு மேல ஆச்சு, நான் எதுக்கு வந்திருக்கேன்னும் உன்கிட்ட சொல்லிட்டேன் அதற்கான பல முயற்சியும் எடுத்துட்டேன் என்றவளின் குரல் இப்போது மாற்றம் பெற்று சிறு எள்ளலுடன், ஆனா அதுக்கு உன்கிட்ட இருந்து ஸீரோ ரெஸ்பான்ஸ் அதான் ஒருவேளை உன்னால முடியாதோ….’ என்று அவள் பேச்சை முடிக்கும் முன்னமே,
‘கீர்த்தீஈஈ…’ என்ற சரணின் கர்ஜனையில் கீர்த்திக்கு உடல் அதிர்ந்தாலும் தன் உறுதியில் இருந்து பின்வாங்காது அவன் விழிகளில் வழிந்த கனல் அவளை சுட்டெரிப்பதையும் பொருட்படுத்தாது தொடர்ந்தவள்,
‘அதற்கு தான் இந்த டேப்லெட்ஸ்.. எடுத்துட்டு வந்..’ என்று அவள் முடிக்கும் முன்னமே சரணின் ஒற்றை அறையில் சுருண்டு மூலையில் விழுந்திருந்தாள்.
கடும் ஆக்ரோஷத்துடன் அவளை பார்த்தவனின் மனம் அலைகடலென சீற்றம் கொண்டது நிச்சயம் இத்தனை தரம் தாழ்ந்து செல்பவளிடம் இதற்கு மேலும் பொறுமையை கடைப்பிடிப்பதில் பிரயோசனமே இல்லை என்பது சரணுக்கு நன்கு புரிந்தது.
பின்னே நாளுக்கு நாள் அவளின் எண்ணம் ஈடேற வேண்டி மிகவும் தரம் தாழ்ந்து நடந்து கொண்டிருப்பவளை எப்படி தடுப்பது என்று புரியாத நிலையில் சரண் தவித்தது போனான். திருமணத்திற்கு முன் காதலன்றி சரணை பகடைக்காயாக உபயோகித்து எல்லை மீற துடிக்கும காதலியின் செயலுக்கு உடன்படுவது அவனுக்கு எத்தனை பெரிய அவமானம்…!! காலத்திற்கும் அழிக்க முடியாத கரும்புள்ளியாக அவன் வாழ்வில் அமைத்து விடக்கூடிய நிகழ்வல்லவா அதனாலேயே என்றும் இல்லாமல் இன்று தன் தேர்வு தவறோ..?? என்ற எண்ணம் அவனுக்கு வலுக்க தொடங்கியிருந்தது.
‘ஏய்இஈஈ…’ என்று அவளை இழுத்து நிறுத்தியவன் மறுநொடியே கீர்த்தியை கன்னம் கன்னமாய் கண்மூடிதனமாய் அறைய தொடங்கி இருந்தான்.
மனிதத்தன்மையை இழந்து கொஞ்சம் கொஞ்சமாக சரண் மிருகமாக மாறிக்கொண்டிருந்ததன் விளைவு கூந்தல் களைந்து முகத்தில் படர்ந்திருக்க அச்சத்தில் நடுங்கிக்கொண்டிருந்த கீர்த்தியின் இதழ் கிழிந்து செங்குருதி வழிந்து அவள் கழுத்தை நனைத்திருக்க முகமெங்கும் சரணின் கைத்தடம் ஆழமாக பதிந்து முகமே சிவந்து வீங்கி விகாரமாக தோற்றம் அளித்தது.
முகமே பற்றி எரியும் உணர்வில் சிக்குண்டு கிடந்தாலும் சிறு வலியைகூட வெளிப்படுத்தாத கீர்த்தியின் முகம் என்றும் போல கடும் உறுதியுடன் இறுகி கிடந்தது.
கொதிநிலையில் இருந்தவன் எதிரில் நிற்பவள் பெண் என்பதையும் மறந்திருக்க அவன் கரம் கன்றி சிவந்து எரிச்சல் கொண்டபோதும் அவளை மூர்க்கத்தனமாக அறைவதை நிறுத்தினான் இல்லை….
இறுதியாக கீர்த்தி மயங்கி விழவும் தான் சுயநிலை அடைந்தவன் அடிப்பதை நிறுத்தி அவளை தாங்கி பிடித்தான். தன் கரங்களில் மயங்கி கிடந்தவளையே பார்த்திருந்த சரணின் ஆவேசம் மெல்ல வடியவும் உடனே நீரை கொண்டு வந்து அவள் முகத்தில் தெளிக்க அசைவில்லை. கீர்த்தி கீர்த்தி என்றவாறு அவள் கன்னத்தை தட்டி எழுப்ப முயற்சிக்க பல நிமிடங்களுக்கு பின்னர் அவள் விழிகள் மலர்த்தினாள்.
அவளை தரையில் கடத்தி விட்டு எழுந்தவன் ஒட்டுமொத்த வேதனை, ஏமாற்றம், விரக்தி, வெறுப்பு , வலி அனைத்தையும் தேக்கி அருவெறுப்புடன் பார்த்தவன் “இப்போ நீ பண்ணிட்டு இருக்க வேலைக்கு அசிங்கமா எதையும் சொல்லிட கூடாதுன்னு என்னை நானே கட்டுப்படுத்திட்டு இருக்கேன் இதுக்கு மேல எதையும் செய்து உன்னோட தரத்தை நீயே தாழ்த்திக்காத கீர்த்தி, அப்படி நடந்தா நிச்சயம் அடி வாங்கியே செத்துடுவ..” என்று எச்சரித்தவனின் ரௌத்திரத்தை கண்டவளுக்கு உடல் உதறலெடுக்க தொடங்கியது.
“திரும்பவும் சொல்றேன் உன் மனசு மாறுற வரை சத்தமே இல்லாம இருந்துட்டு இங்க இருந்து கிளம்பிடனும் இது கூட உன்னை காதலிச்ச பாவத்துக்காக தான்..!! இதுவே உன்னோட இடத்துல வேற யாராவது இருந்தா என்னோட நடவடிக்கையே வேற மாதிரி இருந்திருக்கும் ஜாக்கிரதை” என்று வெளியேறி இருந்தான்..
சரண் செல்லவுமே சில நொடிகள் அவன் சென்ற திசையையே வெறித்து கொண்டு அமர்ந்திருந்தவள் பின் மெல்ல தன் முழங்கால்களை கட்டிகொண்டு முகத்தை அழுத்தமாக புதைத்து கொண்டாள்.