எழிலின் வலிய பிடியில் சிக்கியிருந்த நாதனின் கரத்தில் வலி எடுக்கவும் முகம் சுணங்க ‘என்னதிது கையை விடு‘ என்று சீறினார்.
“என்ன ஏதுன்னு கூட விசாரிக்காம கை நீட்டுற பழக்கத்தை எப்பதான் விடப்போறீங்க..?? அதுவும் அவன் திருப்பி அடிக்க மாட்டாங்கிற நம்பிக்கை தானே உங்களை கை ஒங்க வைக்குது.. ஆனா எல்லாரும் எப்பவும் ஒரே மாதிரி இருக்கனும்னு அவசியமில்லை ஒருவேளை அவன் இருக்கிற நிலைக்கு உங்களை ஓங்கிட்டானா யாருக்கு அசிங்கம்” என்று ஒற்றை புருவம் ஏற்றிநிறுத்தியவன் அவர் கையைவிடவும் நாதனும் சரணின் முகத்தை நன்கு பார்த்தார்.
அதில் இதுநாள் வரை அவர் கண்டிராத ஆக்ரோஷமும் ரௌத்திரமும் போட்டி போடுவதை கண்டவர் அதிர்ச்சியில் முகம் கன்றி போய் நின்றிருந்தார்.
“எப்பவும் நம்ம மரியாதை நம்ம கையில அதனால தொட்டதுக்கெல்லாம் முணுக்குன்னு இப்படி கை நீட்டுறதை மொதல்ல நிறுத்துங்க” என்ற எழிலின் வார்த்தைகள் நாதனை மீட்டெடுக்க மௌனமாய் அவனை பார்த்தார்.
“உங்க கையை பிடிச்சது உங்களை அசிங்கபடுத்துறதுக்கு இல்லை..என் மாமனார் யாருக்காகவும்யாரிடமும் அசிங்கபட்டுட கூடாதுன்னு தான்… இப்போதைக்கு நான் சொல்லி புரிஞ்சிக்கிற நிலையில நீங்க இல்லை ஆனா காலம் புரியவைக்கும்” என்று கூறிவிட்டு சரணிடம் சென்றவன் அவனை தன் கைவளைவில் நிறுத்தினான்.
அதை கண்ட நாதனுக்கு இதுவரை எழில் பேசியதை கேட்டு ஏதோ மாயசுழலுக்குள் இழுபட்டு சென்றுகொண்டிருந்த நிலையில் தன்னை மீட்டுஇயல்புக்கு திரும்பினார்.
பழையபடி மாறிய நாதனின் நிலையை சொல்லவும் வேண்டுமா..?
மனிதருக்கு இப்போது சரண் மீதிருந்த மொத்த சினமும் கரைகடந்த வெள்ளமாய் சீறிக்கொண்டு எழிலிடம் சென்றது. போதாததற்கு எழில் சரணுக்கு பாதுகாவலனாய், அரணாய் நிற்பதை கண்டதும் மனிதர் உக்கிரமூர்த்தியாய் மாறிப்போனார்.
*********************************
“டேய் மாப்பிள்ளைஎன்னடா நடக்குது இங்க ? ஏன்டா எல்லாரும் இப்படி அடிச்சுக்குறீங்க.., அதுவும் எங்க வந்து கொஞ்சம் சுத்தி பாருங்க” என்று பாலன் கூறவும் தான் எழிலுமே சுற்றம் உணர்ந்தான்.
அங்கு பாலனின் தந்தை முதற்கொண்டு சில குடும்ப பெரியவர்கள் குழுமி இருப்பதை கண்டவனுக்குமே சங்கடமாகி போனது.
“ஸாரி மாமா இப்படி ஆகும்னு நானே எதிர்பார்க்கலை அதுவும் இந்தாளு வரவும் எதுவும் கட்டுபடுத்த முடியாம போயிடுச்சு ”
“என்னமோ போ ஆனா எனக்கு எதுவும் சரியாபடலை.. அப்படி என்ன பிரச்சனை சம்பந்தமே இல்லாம எதுக்குடா சரண் திடீர்னு இவரை அடிக்கணும், என்ன நடக்குது..??”
அது… என்று ஆரம்பித்தவன் நாதன் இன்னமும் சரணை முறைத்து நிற்பதை கண்டவன் ‘அதெல்லாம் அப்புறம் சொல்றேன் மாமா நீங்க கொஞ்சம் அவங்களை சமாளிங்க’ என்று பாலனை அவர் தந்தையிடம் அனுப்பியவன்அருகே இருந்த கதிரிடம்,
“டேய் உங்கப்பாவை கூட்டிட்டு போ” என்றான்.
“நானா.., நான் எப்படி மாமா..?”
“நீ தானே அவர் பையன் … அப்போ நீதான் போகணும் போடா” என்றுவார்த்தையில் அழுத்தம் கொடுக்க கதிரும்நாதன் அருகே வந்தவன் எவ்வாறு அவரிடம் பேசுவது என்று மீண்டும் எழிலை பார்த்துகொண்டு நிற்க..,
“சொன்னதை செய் கதிர்..”
“வாங்கப்பா” என்ற கதிர் அவர் கையை பிடிக்கவும் பல வருடங்களுக்கு பின்பான மகனின் அழைப்பு நாதனை சிறிது அசைக்கபிரகாசத்தை மறந்தவராக மகனுடன் கிளம்பினார்.
இங்கு “மாப்பிள்ளை..” என்று மீண்டும் பிரகாசம் சரணை அழைக்கபதறிய வெற்றி சரணை பிடித்துக்கொண்டு “யோவ் சித்தப்பு அவன் தான் இப்படி கூப்பிட்டா காண்டாகுறான்னு தெரியுதில்லை திரும்ப ஏன்யா அதுலையே நிக்குற.., ஏன் வாங்கினது பத்தலையாஇன்னும் வேணுமா..??” என்று கடுப்புடன் கேட்க,
“டேய் போ போய் உன் சொத்தப்பனை ஒழுங்கா வீடு போய் சேர சொல்லு” என்றான் எழில்.
“ஏன் அதை நீ சொல்லமாட்டியா..?? டேய்நீ ஹீரோவா இருந்துட்டு போ அதுக்காக உனக்கு அடியாள் வேலை பார்க்கனும்னு எதிர்பார்க்காத.. அந்தாளு என்ன பச்சை பிள்ளையா நான் கொண்டுவீட்லவிட நீயே சொல்லுடா வந்த மாதிரியே போயிடுவாரு” என்றவன் வேகமூச்சுக்களை எடுத்தவாறு,
‘அப்பாஆஆ அம்மாஆஆ..‘ என்று வலியில் முனங்கிக்கொண்டே ஒரு கையால் இடுப்பை பிடித்தவாறு “பரதேசி நிக்க கூட முடியாம பண்ணிட்டு பேச்சை பாரு பேச்சை” என்று நாற்காலியை இழுத்துபோட்டு அமர்ந்தவன் குறையாத ஆக்ரோஷத்துடன் இருந்த சரணை கண்டு,
“இத்தனை நாள் இவனை அமுல் பேபின்னு நெனச்சா பால் வடியுற மூஞ்சிக்கு பின்னாடி பாட்ஷாவை இல்ல ஒளிச்சி வச்சிருக்கு பக்கி”என்றவன் சிதறி கிடந்த பொருட்களை கண்டு, ‘படுபாவி விசேஷ வீட்டை கொஞ்ச நேரத்துல கலவர பூமியாக்கிட்டானே..!!’
பிரகாசம் எதுவும் பேச முடியாதவராக மனம் கணக்க அங்கிருந்து செல்ல சரண் இப்போது ஓரளவுக்கு தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்திருந்தான்.
எழிலையும் சரணையும் அதுநேரம் வரை விழியகலாமல் பார்த்து கொண்டிருந்த வெற்றி, “ஏன்டா ஒருகாலத்துல உன்னைமாப்பிள்ளைன்னு சொல்லிட்டு இருந்தாரு அதுகூட ஒரு வகையில ஏத்துக்கலாம் ஆனாஎதுக்கு சமந்தமே இல்லாம இவனை மாப்பிள்ளைன்னு கூப்பிடுறாரு.. என்னடா இந்த ஆளோட லாஜிக்கு எப்படி பார்த்தாலும் இடிக்குதே, நமக்கு தெரியாம எப்போடா கீர்த்தியை இவனுக்கு கட்டி கொடுத்தார்” என்று சந்தேகத்தை கேட்க,
“டேய் அந்தாளு எதோ உளறிட்டு போறான் அதை பெருசா பேசிட்டு இருக்க”
“என்னடா பேசுற இங்கநீ என் சித்தப்பனை அடிச்சிருந்தா கூட அதுல நியாயம் இருக்கு ஏன்னா அது உட்கட்சி பூசல்ஆனா சம்மந்தமே இல்லாம இவன் ஏன்டா அவரை அடிக்கணும்அதை நீயும் கைகட்டி வேடிக்கை பாக்குற என்ன நடக்குது இல்ல எனக்கு ஒன்னும் புரியல..” என்றவன் அதிர்ச்சியுடன் எழிலிடம்,
“அடப்பாவிடேய் என்னதான் இருந்தாலும் அவர் உன் தாய் மாமாடா..! இப்படி முக்கை உடைச்சி விட்டுடீங்களே” என்று தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆட கேட்டவன் அவர்கள் முகத்தில் இருந்த இறுக்கத்தை கண்டு விளையாட்டை கைவிட்டு,
“டேய் உண்மையை சொல்லுங்க எனக்கு தெரியாம ஏதாவது நடந்ததாஎன்கிட்டே இருந்து மறைக்கறீங்களா..?” என்று கேட்டு கொண்டிருக்க அங்கு வந்து சேர்ந்தாள் தாமரை..
சற்றுமுன் நடந்த கலாட்டாவில் பொருட்கள் அங்கங்கு சிதறி இருக்க ‘பார்த்து வா செல்வி’என்று எழில் எதிரே இருந்த ஸ்டூலை நகர்த்தி கையை பிடித்து கொண்டு வெற்றியிடம் கூட்டி வந்தான்.
வெற்றி தடுமாறி எழவும், “பார்த்து மச்சி” என்று பதறிய எழில் அவனை பிடித்து நிற்க வைக்கவும்,
“டேய், போதும் போதும் உன் பெர்பாமன்ஸை நிறுத்து.. அதான் இடுப்பை ஒடச்சி விட்டுட்டியே இன்னும் எதாவது மிச்சம் இருக்காஆனா இதுக்குமேல என் பாடி தாங்காதுடா சாமி, என்னை உட்டுடு நான் வீடு போய் சேருறேன்” என்றதில் தான் தாமரை அவன் நிலையை கண்டு ‘என்ன ஆச்சுங்க‘ என்றாள்.
தாமரையை தோளில் கை போட்டவன் ‘என்னாச்சா ? ஏன்டி அப்பவே நீ மட்டும் போயிட்டு வான்னு சொன்னேன் கேட்டியாவலுக்கட்டாயமா கூட்டிட்டு வந்த, இந்தா கும்மி அடிச்சிட்டான்’
‘ஏய் சொல்லுடி நீயும் இதுல கூட்டா..? ஆனா ஒன்னு தாமரை கொலைகார குடும்பத்துல தப்பி பொறந்ததுக்கு இன்னும் என்ன எல்லாம் அனுபவிக்கனுமோ தெரியல வாடி மொதல்ல இங்கிருந்து கிளம்பலாம்’
“மச்சி இந்த நிலைமையில எப்படிடா நீ தனியா போவஇரு நான் வீட்டுல விடுறதுக்கு வரேன் அப்படியே ஹாஸ்பிட்டல்ல செக்அப் பண்ணிடலாம்” என்று உண்மையான வருத்தத்தோடு எழில் கேட்கவும் உடனே கைக்கு கிடைத்த தேங்காயைஓங்கியவன்,
“கொய்யாலே ஒரு அடி எடுத்து வச்ச மண்டையை ரெண்டா பொளந்துடுவேன் நான் தவழ்ந்து கூட வீடு போய் சேர்ந்துப்பேன் அதை பத்தி உனக்கென்னடா” என்றவன் தாமரையுடன் கிளம்பினான்.
**********************
“ஹை மேரி பரம்.. பரம்.. பரமசுந்தரி..” பாடலை ப்ளேயரில் ஓடவிட்டு குளித்துவிட்டு வந்த கீர்த்திபட்டுப்புடவை சரசரக்க ஹேர் ட்ரையர் கொண்டு தலைமுடியை ஆற வைத்தவள் தலைவாரி முகத்திற்கு ஒப்பனை செய்ய தொடங்கியவள் அறையின் வாயிலில் நின்றிருக்கும் தீபிகாவின் கண்ணீர்முகத்தை கண்ணாடியினூடு கண்டாள்.
‘என் பொண்ணு தானாடிநீ…?’ என்று ஆதங்கத்தோடு கேட்டவர் அடுத்த நொடியே
“கீர்த்தி ஏன்ம்மா இப்படி எல்லாம் பண்றே வேண்டாம்டா அம்மா சொன்னா கேளு”
“சுமந்து பெத்த நீயே இப்படி ஒரு கேள்வி கேட்கலாமாம்மா..?” என்று எள்ளலாய் கேட்டவள் தீபிகாவை நெருங்கி,
“ஏன் உனக்கு தெரியாதா நான் ஏன் இப்படி பண்றேன்னு., ஆமா அது எப்படி நீ சொல்லி நான் கேட்பேன்னு நினைக்கிற ஓஒ.. அவ்ளோ நம்பிக்கையாஎன்மேல? ஆனா ஒன்னு புரிஞ்சிக்கோ நீன்னு இல்ல யாராலையும் என்னை கட்டுபடுத்த முடியாது ஸோ தேவையில்லாத கேள்வி கேட்கிறதை விட்டுட்டு நல்ல பிள்ளையா போய் எனக்குஜூஸ் கொண்டு வா வெறும் வயிற்றோடு அங்க போனா ரொம்ப நேரம் தாங்காது” என்று கட்டளையிடதீபிகாவும் கண்ணீரை துடைத்துக்கொண்டு சமயலறைக்கு சென்றார்.
“டேட்ஸ் லிட்டில் பிரின்சஸ்” தான் கீர்த்தி..பிரகாசத்தின் வாழ்விற்கு அர்த்தம் சேர்க்க வந்தவளிடம் அவருக்கு அதீத பற்றும் பாசமும் உண்டு. நாதனாவது சிறு கண்டிப்புடன் கூடிய அன்பை அலர்விழி மீது செலுத்துவார் ஆனால் பிரகாசம் கீர்த்தி மீது நிபந்தனையற்ற அன்பை பொழிபவர், அவள் விருப்பமே அவருக்கு பிரதானம்என்பதற்கு உதாரணம் தான் கீர்த்தி எழிலை மறுத்தபோது தங்கையாகவே இருப்பினும் என் பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக செய்ய மாட்டேன் என்றது.
மெல்லிய மனம் கொண்ட கீர்த்திபெற்றோருக்கு ஒற்றை பெண்ணாக இருந்தாலும் அன்னை தந்தையின் கட்டளைக்கு கீழ்படிந்து நடக்கும் கீர்த்தியிடம் இருந்து சில வருடங்களாகவே கட்டளை மட்டுமே பிறப்பிக்கபட்டு கொண்டிருக்கிறது.காலத்தின் கட்டாயத்தில் பிரகாசமும் தீபிகாவும் அவள் கரங்களில் பொம்மையாய் மாறி அவள் விரும்பும் வண்ணம் ஆட்டுவிக்க பட்டு கொண்டிருக்கின்றனர்.
இன்று அதன் உச்சகட்ட காட்சி என்று தான் கூறவேண்டும்.
இதுவும் அவள் விருப்பபடியே இத்தனை மாதங்கள் கழித்து நிகழ்கிறது… சரியான காரணம் தெரியாவிட்டாலும் அவள் இடும் கட்டளைகளை சிரம் மேற்கொண்டு செய்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.
தீபிகா கொடுத்த பழச்சாறை குடித்து முடித்த கீர்த்தி ‘பூ வச்சு விடும்மா‘ என்றிட பொங்கிய அழுகையை மென்று விழுங்கி மகளுக்கு பூ வைத்துவிட்டவர் மீண்டும் ஒரு முயற்சியாக ‘கீர்த்தி கொஞ்சம் பொறுமையா இருடா‘ என்று அவர் முடிக்கும் முன்னமே,
‘பொறுமையா இருந்தா.. உன்னால என்ன பண்ணிட முடியும் ?அதுதான் இத்தனை மாசம் பொறுத்துட்டேனே இனியும் முடியாது.. இன்னிக்கு என்னோட நாள்! என் வாழ்க்கையை பார்த்துக்க எனக்கு தெரியும்நீ உன் வேலையை மட்டும்பார்” என்று குத்தீட்டியாய் வார்த்தைகளை வீசியவள்,
“உன் பொண்ணுக்கு இன்னிக்கு கல்யாணம் ஆனா உன் முகத்துல அந்த சந்தோஷம் கொஞ்சம்கூட இல்லை.. நீஜமாவே நீ என் அம்மாதானா..?”
‘கீர்த்தி..’
‘ஷ்ஷ்.. நான் சொன்னதெல்லாம் எடுத்து வை போ’என்றவள்ஹாலில் வந்து அமர்ந்தாள்.
வெளி வேலையாக சென்றிருந்த பிரகாசம் அப்போதுதான் வீட்டிற்குள் நுழைய பல மாதங்களுக்குபின் மகளை கண்டவர் அவள் கோலத்தில் ஸ்தம்பித்து போய் நின்றார்.
இத்தனைக்கும் பல வருடங்களாக அவர் காணத்துடித்த கோலம் தான் என்றாலும் தலை முதல் கால் வரை மணமகள் அலங்காரத்தில் ஜொலித்துக்கொண்டிருந்த மகளை இன்று அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. அவள் கோலம் கண்டவருக்கு நெஞ்சினுள் சுருக்கென வலி படர்ந்திட கண்களில் இருந்து கண்ணீர் கங்கையாய் பெருக்கெடுத்தது.
நடுங்கும் கால்களை மெல்ல எடுத்து அடி மேல் அடி வைத்து ஒருவழியாக மகளிடம் சென்று சேர்ந்தார்.
கீர்த்தி அவரை மதிக்காமல் தன் போக்கில் விழிகளை எதிரே இருந்த தொலைக்காட்சியில் நிலைக்க விட்டிருக்க ‘குட்டிம்மா’ என்று நா தழுதழுக்க அவள் காலடியில் அமர்ந்தவர் “எப்படிடா இருக்க..இப்போ கூட இந்த அப்பாவை மன்னிக்க மாட்டியா..? ஏதாவது பேசுடா கீர்த்துமா” என்றிட பதிலின்றி அழுத்தமாய் அமர்ந்திருந்தாள் கீர்த்தி.
“தப்பு பண்ணினது நான்தானே உனக்கு எதுக்குடா தண்டனை..” என்று கனத்த மனதுடன் அவள் கையை பிடிக்க சட்டென அதை உதறியவள் எழுந்து கொள்ளவும் ‘அம்மாடி‘ என்று பதற்றத்துடன் அவளுக்கு முன் எழுந்தவர்,
“மாப்பிள்ளை எதையும் மறக்கலை கோவமா இருக்கார் இப்போ அங்க போறது சரியா இருக்காது.. நான் சொன்னா கேளுடா தேவையில்லாம அவர் கிட்ட.. ” என்றவரின் பேச்சை தடுத்தவள் தன் கைகடிகாரத்தை பார்த்தவாறு “கிளம்பலாம்” என்று நேர்கொண்ட பார்வையுடன் முன்னாள் நடக்க வேறு வழி இன்றி அவரும் அவள் பின்னே சென்றார்.
‘ஸ்ஹ்ஸா எதுக்குடி இப்படி கத்துற..?’ என்று வண்டியை நிறுத்தினான் எழில்.
“ஏன்டா நேத்து நைட் எத்தனை மணிக்கு வந்தன்னே தெரியல, எங்க போனன்னு கேட்டா அதுக்கும் பதில் சொல்லாம காலையில எந்திரிச்சதும் சிக்கிரம் ரெடியாகு சரணுக்கு நிச்சயம் பண்ண போறோம்னு உன் இஷ்டத்துக்கு ஆர்டர் பண்ணிட்டு குளிக்க போயிட்ட.. சரின்னு நானும் ரெடி ஆகிவந்து யார் பொண்ணுன்னு கேட்டா எந்த தகவலும் சொல்லாம வர என்னடா நினைச்சிட்டு இருக்க” என்று கண்களை உருட்டிக்கொண்டு அவன்முன் வந்தவள்,
“இப்போ சொல்லலைன்னா இங்கிருந்து கிளம்ப மாட்டேன்” என்று அழுத்தமாய் நின்றாள்.
“பட்டு நேத்து வேதாவோட பங்க்ஷன்ல சின்ன பிரச்சனை ஆகிடுச்சிடி அதனால சரண் கிட்ட பேச போயிருந்தேன் அப்படியே உங்க பாட்டியையும் சித்தி வீட்டுல இருந்து கூட்டிட்டு வந்தேன்…”
‘சரி மாமாக்கு யாரை நிச்சயம் பண்ண போறோம்?’
‘உங்க சித்தப்பா வீட்டுக்கு போய் கீர்த்தியை தான் நிச்சயம் பண்ண போறோம் போதுமா..? வர முகூர்த்ததுலயே கல்யாணம்’
“ஒஹ் ரியல்லி.. ஏன்டா என்னை என்ன மாங்கான்னு நெனச்சிட்டு இருக்கிங்களா..?? அன்னைக்கு எதுக்கு இன்னொரு பெண்ணை பார்க்க போனீங்கன்னு மாமா கிட்ட கேட்டதுக்கு கீர்த்தி கூட ப்ரேக்அப் ஆகிடுச்சி இதுக்கு மேல இதை பெருசு படுத்தாத உன் வாழ்க்கையை பாருன்னு சொன்னாரு.. இப்போ என்னடான்னா கீர்த்தி நிச்சயம் பண்ண போறோம்னு சொல்ற எப்படி பேட்ச்அப் ஆனாங்க ? அப்பா சித்தப்பா எல்லாருக்கும் தெரியுமா..? இதுல நேத்து பிரச்சனைன்னு வேற சொல்ற என்ன ஆச்சுன்னு இதுவரை என்கிட்டே சொல்லலை..” என்று அடுக்கடுக்காய் கேள்விகளை தொடுக்க எழிலுமே சற்று திணறித்தான் போனான்.
“ஏன்டி உனக்கு சொல்லாம நானா இன்னொரு பெண்ணை நிச்சயம் பண்ண போனேன் என்னை இத்தனை கேள்வி கேட்கிற, வேணும்னா சொல்லு உன்னையே கூட்டிட்டு போறேன் மாமாக்கு ஏத்த பொண்ணை நீயே செலக்ட் பண்ணி கொடுப்ப என்னை விட உனக்கு நல்ல டேஸ்ட்டி செல்லம்..” என்று முடிக்குமுன் பட்டென கையில் இருந்த பர்ஸ் கொண்டு அவன் வாயில் அறைந்தவள் நொடியில் உக்கிரகாளியாய் உருமாறி இருந்தாள்.
தன் உதட்டில் ஈரம் கசிவதை உணர்ந்தவன், ‘ஏய் ரத்தம் வருதுடி’ என்று விரல்களால் உதட்டை ஒற்றி எடுத்து அவள்முன் நீட்ட “டேய் இது ரோடா இருக்க போய் உன்னை இத்தோட விடுறேன், இதே நீ வீட்ல சொல்லி இருந்த மவனே உன் குடலை உருவி மாலையா போட்டிருப்பேன்டா” என்று அடிக்குரலில் சீற,
“ஏய் லூசாடி நீ விளையாட்டுக்கு சொல்றதை கூட ஈஸியா எடுத்துக்க மாட்டியா எவன் பொண்ணு பார்க்க போறானோ அவனை போய் கேட்பியா அதைவிட்டுட்டு எல்லாத்துக்கு என்னை பிடிச்சி வறுத்தெடுத்தா நானும் என்ன பண்ண” என்று சூழலை இலகுவாக்கி வண்டியை எடுக்க முனைய அவனிடமிருந்து சாவியை கைபற்றியவள் ‘கீழ இறங்கு’ என்றாள்,
“எதுக்கு? டைம் ஆச்சு சீக்கிரம் உட்காரு உன் பாட்டி வைட் பண்ணிட்டு இருப்பாங்க”
“அதை நான் பார்த்துக்குறேன் நீ மொதல்ல இறங்கு” என்று பைக்கில் ஏறி அமர்ந்தவள் அதை கிளப்ப..,
‘ஏய் உங்கப்பா பார்த்தா திட்டபோறாருடி இப்போ நானே ஓட்டுறேன் நீ உட்காரு’
“உன்னை கூட்டிட்டு போறதா யார் சொன்னா…? அவர் திட்டினாலும் பரவாயில்லை வாங்கிக்குறேன் ஆனா உன் வாய் கொஞ்சநஞ்ச பேச்சா பேசுச்சு அதுக்கு தண்டனை வேண்டாம்’ என்று அலர் கேள்வியாய் நிறுத்த..,
“தண்டனை தானே குள்ளச்சி..?? நீ கொடுத்தா எவ்ளோ வேணும்னாலும் வாங்கிக்க மாமா ரெடிடி” என்று அவள் இதழ்களை இணைய முயல மீண்டும் ஒரு அடி வைத்து அவனை பிடித்து தள்ளியவள்,
“திருந்த மாட்டடா நீ..!! திருந்தவே மாட்ட இருக்க கொழுப்பு மொத்தமும் கரையட்டும் பாட்டி வீட்டுக்கு நடந்தே வந்து சேரு..” என்று கூறி புயலென கிளம்பி சென்றாள்.
‘பட்டு பத்திரமா போடி’ என்றவன் அவள் சென்ற வழியில் நடையை தொடங்கிட அவன் நினைவுகளோ வலியுடன் அன்றைய நாளை நோக்கி பயணித்தது.
சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் இருந்து சரண் திரும்பிய பின்:
“என்னங்க நான் சொல்றது கேட்குதா..??” என்று அவிரனை வீட்டு பாடங்களை எழுத வைத்து கொண்டிருந்த எழிலிடம் அலர் கேட்கவும் ‘என்னம்மா சொன்ன கவனிக்கலை’
“மாமா ஸ்டேட்ஸ்ல இருந்து வந்துட்டாங்க..”
‘அப்படியா !! எப்போடி வந்தான் எனக்கு தெரியாதே இதுவரை எனக்கு அவன் கூப்பிடலை’
“ரெண்டு நாள் முன்னவே வந்துட்டாங்களாம் பிஸியா இருக்கிறதால நேத்து சாயங்காலம் தான் அடுத்த வாரம் தான் ஊருக்கு வருவேன்னு பாட்டிக்கே தகவல் கொடுத்திருக்கார். ஆனா பாட்டி இத்தனை வருஷம் பார்க்காம இருந்ததுல வைதேகி சித்திகூட வராங்களாம் நாமலும் போகலாமா..??? பாட்டியெல்லாம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு மாமா”
‘ஸாரிடி இப்போ கண்டிப்பா உன்னை கூட்டிட்டு போக முடியாது முக்கியமான விசிட் இருக்கு‘
“சரி ஆனா ஒன்னு கண்டிப்பா மாமா இந்த வாரம் ஊருக்கு போகும் போது மாமாக்கும் கீர்த்திக்கும் சீக்கிரமா கல்யாணத்தை ரெடி பண்ணனும்..,பாட்டியும் அம்மாவும் தான் எப்போ பார்த்தாலும் புலம்பிட்டே இருக்காங்க நான் கேட்டா மாமா ஒழுங்கா பதில் சொல்றது இல்லை. அதனால இன்னிக்கு மாமாகிட்ட கண்டிப்பா நீங்க பேசியே ஆகணும்” என்று கண்டிப்புடன் கூற..
எழிலோ காதை குடைந்துக்கொண்டே ‘ஏன்டி உன் மாமன் ஆன்சைட் போனதும் தான் போனான் கீர்த்தியை கல்யாணம் பண்ணிகூட கூட்டிட்டு போயிருக்க கூடாதா..?? இதோட ஆயிரத்து நாற்பது முறையா சொல்லிட்ட போதும்டி எனக்கே எல்லாம் மனப்பாடம் ஆகிடுச்சி ஆனா இவ்ளோ அக்கறை இருக்கறவங்க எதுக்குடி அவனை போகவிட்டீங்க கல்யாணத்தை பண்ணி கீர்த்தியை கூட அனுப்ப வேண்டியது தானே”
“மாமா முதல்ல ஆறு மாசம்னு சொல்லவும் சரி வந்ததும் பண்ணிடலாம்னு தான் எல்லாரும் இருந்தாங்க ஆனா அவர் அதை ரெண்டு வருஷத்துக்கு மேல எக்ஸ்டெண்ட் பண்ணுவாருன்னு யாருக்கு தெரியும். இப்போ தாத்தாவும் இல்லை மாமாக்கு அண்ணன்னு யாரும் இல்லை அப்பா சித்தப்பாங்க மேல மாமாக்கு மரியாதை இருக்கே தவிர நெருக்கம் இல்லை அதனால உங்களை பேச சொன்னா மைனருக்கு முறுக்கு ரொம்ப அதிகமா இருக்கு” என்று அவன் தோளில் இடிக்க,
“ஏன்டி நான் என்ன பேசமாட்டேன்னா சொன்னேன், அதையே நீ திரும்ப திரும்ப பேசுறதுதான் எரிச்சலா இருக்கு.. ஆமா, கீர்த்தியும் அவனும் லவ் பண்ற விஷயம் உங்க பாட்டி வீட்ல எல்லாருக்கும் தெரியும்தானே..!!”
அது என்றவளின் முகத்தில் சிந்தனை கீற்று !!
ஆம் அன்று மருத்துவமனையில் ‘சிக்கிரம் பேசு சரண்’ என்று எழில் கூறவும் தலையசைத்த சரண் பெரிதாக எதையும் இவர்களிடம் கலந்துக்கொள்ளவில்லை. இவர்களும் அடுத்து அவிரனின் வரவு, பிள்ளைபேறு என்று சிக்கிக்கொள்ள சரண் கீர்த்தி பற்றி எதுவும் விசாரிக்கவில்லை.
ஏனோ மனதை நெருட, ‘தெரியலைங்க அனேகமா மாமா இன்னும் சொல்லலைன்னு தான் நினைக்குறேன் மே பி இங்க வந்தப்புறம் பேச்சை எடுக்கலாம்னு இருந்திருப்பாரு போல’ என்றவளுக்குமே அவன் சொல்லி இருந்தால் சித்திகள் யாரேனும் கீர்த்தி குறித்து அவளிடம் விசாரித்து இருப்பார்களே என்று தோன்றாமல் இல்லை.
**********************
எழிலும் அலரும் சரணின் வீடு இருந்த ஐந்தாம் தளத்தை லிப்டில் அடைந்த அதேநேரம் தன் மொபைலை எடுக்க சரண் படிகளில் இறங்கிகொண்டிருந்தான்.
வந்தவர்களை வரவேற்ற வைதேகி புன்னகை முகமாய் இருவருக்கும் இனிப்பை வழங்க ‘என்ன சித்தி வந்ததும் ஸ்வீட் கொடுக்குறிங்க என்ன விசேஷம்’ என்ற அலர் கலைவாணியின் முகம் பார்க்க அவர் முகத்திலும் புன்னகை உறைந்திருந்தது.
உடனே வைதேகி ஒரு பெண்ணின் புகைப்படத்தை காட்டி “சரணுக்கு பார்த்திருக்க பொண்ணு அலர் பூர்வீகம் சேலமா இருந்தாலும் இப்போ சென்னைல செட்டில் ஆகிட்டாங்க பேரு சௌமியா டாக்டரா இருக்கா” என்று சத்தமே இல்லாமல் இருவர் தலையிலும் இடியை இறக்கினார்.
அதை அறியாதவர் தம்பிக்கு வரன் தகைத்துவிட்ட மகிழ்வில் ‘உங்க சித்தாப்பாவோட சின்ன தாத்தா வகையில நமக்கு சொந்தம்டா போன மாசமே தம்பிக்கு பொண்ணு போட்டோ அனுப்பிட்டோம் அவன் வரவும் கையோட கூட்டிட்டு காலைல பொண்ணு வீட்டுக்கு தான் போயிட்டு வந்தோம், அவங்களுக்கும் சரணை ரொம்ப பிடிச்சிடுச்சு நாளைக்கு நாள் குறிக்க போறோம்’ என்றார்.
“ஆனா சித்தி.. மாமா.. அவருக்கு நீங்க” என்று அதிர்ச்சியில் அலருக்கு வார்த்தைகள் துண்டு துண்டாய் வந்து விழுந்தது.
“எங்களுக்கு முழு சம்மதம் வளருக்கும் நேத்து தான் சொன்னேன் இன்னிக்கு அவளால வரமுடியல இல்லைன்னா மாமாவும் வளரும் எங்க கூட தான் வந்திருப்பாங்க, அதுக்கென்ன அடுத்த வாரமே எல்லாரையும் கூட்டிட்டு வந்து நிச்சயம் பண்ண போறோம் இல்லை அப்போ பார்த்துக்கட்டும்” என்று கூற அலரின் இடக்கரத்தில் மெல்லிய வலி ஊடுருவ தொடங்கியது.
ஆம் அவள் அருகே அமர்ந்திருந்த எழில் தன் உணர்வுகளை கட்டுபடுத்த அரும்பாடு பட அதன் விளைவாக அலரின் கரம் கன்றி சிவந்து போனது.
கண்களில் வலியுடன் அலர் திரும்பி பார்க்க அவன் பார்வையே சொல்லாமல் சொல்லியது அவன் கோபத்தின் அளவை.. எழிலவனின் பேசும் விழிகளை என்றும் படிப்பவளுக்கு இன்று அதில் தென்பட்ட தகிப்பு அச்சுறுத்தியது, அதற்கேற்ப எழிலும் அடக்கப்பட்ட சினத்துடன் ‘உங்க தம்பி எங்க..??’ என்றான்.
“மொபைல் எடுக்கறதுக்காக கீழ பார்க்கிங் போயிருக்கான் மாப்பிள்ளை நான் கால் பண்ணி கூப்பிடுறேன் இருங்க” என்றவரிடம் இல்லை நானே பார்த்துக்குறேன் என்றவன் மறுநொடி அலரின் கரத்தை விடுவிக்க அவள் மணிக்கட்டு மரசோபாவின் கைபிடியில் வேகமாய் இடித்து வலியை அதிகப்படுத்த கையை நீவியவாறு அலர் நிமிர அங்கு எழில் இல்லை.