அதிகாலை முதலே பட்டாசு சத்தம் விண்ணை பிளந்துகொண்டிருக்கஅழ்ந்த உறக்கத்தில் இருந்து மெல்ல கண்களை கசக்கிகொண்டு எழுந்தமர்ந்த கீர்த்தி கண்களை மூடியபடியே கைபேசியை எடுத்து அதில் ஸ்க்ரீன்சேவராக வைக்கபட்டிருந்த தந்தையின் முகத்தில் விழித்து ‘குட் மார்னிங்ப்பா‘ என்று அவர் நெற்றியில் முத்தம் வைத்தவள் மறுநொடி அவருக்கு அழைத்து விட்டாள்.
‘குட்டிம்மா‘ என்று மறுபுறம் பிரகாசத்தின் குரல் உருகியது..
“இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்ப்பா” என்றவளிடம்,
“நீ இல்லாம எனக்கு எப்படிடா இந்ததீபாவளி இனிக்கும், டேய் கீர்த்திமா ப்ளீஸ் நான் சொல்றதை கொஞ்சம் கேளு இப்பவே நம்ம டிரைவர்க்கு சொல்றேன் கிளம்பி வந்துருடா, நாளைக்கு காலையில நீ ஆபிஸ்ல இருக்கிற மாதிரி அனுப்பிடுறேன் ப்ராமிஸ்” என்று மகளை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருந்தார்.
ஒற்றை மகளை தன் கரங்களுக்குள்ளே பொத்திவைத்து பாதுகாத்தவர்அவள் விருப்பபட்டு கேட்ட கல்லூரியை கூட மகளை பிரிய நேரிடுமே என்று அவள் மனம் கோணாத வகையில் மறுத்து உள்ளூரிலேயே சேர்த்திருந்தார். ஆனால் எழிலுடனான திருமண பேச்சு நின்ற பிறகு மகளின் வாடிய முகம் கண்டு அவளை பணிக்கு செல்ல அனுமதித்தார். அதுவும் அவருக்கு நெருக்கமான அமைச்சரின் மச்சான் பங்குதாரராக இருக்ககூடிய கம்பனியில் சேர்த்தவர் அவள் அலுவலகம் அருகிலேயே ஒரு அப்பார்ட்மெண்டை வாங்கி சகல வேலைகளுக்கும் ஆட்களை அமர்த்தி துணைக்கு தன் மாமியாரையும் உடன் இருக்க செய்திருந்தார்.
“அப்பா இன்னிக்கு உங்ககூட இருக்கனும்னு எனக்கும் ஆசையாத்தான்இருக்கு, ஆனா ஒரேநாள் தான்ப்பா லீவ் கொடுத்திருக்காங்க… இப்ப அங்க வந்தேன்னா நீங்க என்னை உடனே திரும்ப வரவிடமாட்டீங்க இந்த ஒருமாசத்துலையே ஐஞ்சு முறை லீவ் எடுக்க வச்சுட்டீங்க ட்ரைனிங் பீரியட்ல யாருமே இப்படி அலவ் பண்ணமாட்டாங்க ஆனா நீங்க உங்க பிரெண்ட் கிட்ட சொல்லி இப்படி அதிகமா அட்வான்டேஜ் எடுக்கறது எனக்கு பிடிக்கல. இதுக்கு நீங்க என்னை அனுப்பாமலே இருந்திருக்கலாம் நான் அடுத்த வீக் எண்ட் அங்க வரேன்”என்று குரலில் அதிருப்தியோடு கறாராய் முடித்தாள்.
இதுதான் கீர்த்தி தான் மேற்கொள்ளும் எந்த செயலிலும்அர்பணிப்பும், காலம் தவறாமையும், நேர்த்தியும் கொண்டு செயலாற்றுபவளிடம் சமரசம் என்ற பேச்சிற்கே இடமில்லை அது தந்தையாக இருந்தாலும் ஓரளவிற்கு தான் அசைந்து கொடுப்பாள். எப்போதும் கீர்த்தியை எதையும் கட்டாயபடுத்தி செய்யவைப்பது கடினமே, ஒருவேளை அவள் எண்ணத்திற்கு மாறானதாக இருந்தால் அது இயலாத காரியம் என்பது பிரகாசத்திற்கும் தெரியும்.
அதனாலே என்றுமே இவருக்கு பிடிக்காததை அவள் விரும்பி கேட்கும் பட்சத்தில் நேரடியாக அதை மறுக்காமல் அவளே அதை வேண்டாம் என்று மறுக்கும் வகையில் அதனை மாற்றி அமைத்துவிடுவார்.மகளிடம் உருகி, இறங்கி, பணிந்து, அடங்கி செல்லும்பாசமிகு தந்தையான பிரகாசத்திற்குமற்றொரு முகம் உண்டு. ஆனால் இன்றுவரையிலும் அதை மகளுக்கும் மனைவிக்கும் தெரியாத வகையில் பார்த்துகொள்பவர்.
இளம்வயதில் இருந்தே பிரகாசத்திற்கு எதையும் எளிதில், விரைவாக அடைய வேண்டும் என்ற எண்ணம் உண்டு. இலக்கை அடைய தேர்ந்தெடுக்காத குறுக்கு வழியும் இல்லை செய்யாத தொழில்களும் இல்லை. எப்போதுமே தொழிலில் நேர்மையாய் இருக்கும் நாதனை இவரின் பொய்யும் புரட்டும் கொண்ட தொழில் முறையே அவரிடமிருந்து எட்ட நிறுத்தியிருந்தது.
அரசியல் என்பது சிறு வயதிலிருந்தே அவருக்குள் ஊறிப்போன ஒன்று, இத்தனைக்கும் அவர் தந்தையான சுப்பிரமணியோ அண்ணன்களோ அந்த வாடைகூடபடாது ஓட்டு போடுவதோடு கடமையை முடித்துக்கொள்வர்கள். ஆனால் பிரகாசம் ‘ஹீரோ வர்ஷிப்‘ என்று சொல்வார்களே அதுபோல குறப்பிட்ட ஒரு கட்சி தலைவரின் மீது அவர் கொண்ட ஈடுபாடும் ஈர்ப்பும் பின்னாளில் அரசியலில் தடம் பதிக்க சொல்ல ஆரம்பகட்டத்தில் போஸ்டர் அடித்து ஒட்டுவது,கட்சியின் கொள்கைகளை பாமர மக்களிடம் கொண்டு சேர்ப்பது, முக்கிய கூட்டங்களை விளம்பரபடுத்துவது என்று துடிப்புடன் செயல்பட ஆரம்பித்தவர் அதன் பின் வார்ட் கவுன்சிலர், ஒன்றியம், மாவட்டம் என்று உயர்ந்து இன்று எம்.எல்.ஏவாக பயனித்து கொண்டிருக்கிறார்.
அதிலும் கந்து வட்டி மூலமாக சம்பாதித்தவற்றை கட்சி நிதியாக செலுத்தியதில் கட்சி தலைவரிடம் பெரும்மதிப்பை பெற்று கொடுத்தது. பிரகாசத்தின் அரசியல் மேடையே அடிதடி, ஆள்கடத்தல், கட்டபஞ்சாயத்து, கந்து வட்டி போன்றவைகளால் கட்டமைக்கப்பட்டது. சென்னை, பெங்களுரு, கேரளா, ஹைதராபாத் என்று நான்கு மாநிலங்களிலும் கோடிக்கணக்கான சொத்துக்கள் உண்டு அதேபோலவே முக்கியபுள்ளிகளின் தொடர்பும்.
கீர்த்தி பிறந்த பின்பு இந்த இருபது வருடங்களில் அவரது முன்னேற்றம் ராக்கெட் வேகத்தில் அமைந்தது, அதிலும் அதிர்ஷ்ட தேவதை பக்கபலமாக இருக்க கடந்த பத்து ஆண்டு காலமாக தொடர்ந்து எம்.எல்.ஏ வாக இருந்து கொண்டிருக்கிறார்.
அமைச்சர் ஒருவருடனான இவரது நெருக்கம் கட்சிக்குள் மிக பிரபலம் அதிலும் இருவருமே ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பிரகாசத்தின் வார்த்தை அவரிடம் பெரும் செல்வாக்கு பெரும். அவர்துறை குறித்த அனைத்து பரிவர்த்தனைகளும் அதற்குண்டான பணமும் பிரகாசம் மூலமாகத்தான் பெறப்பட்டு வந்தது.
இம்முறை மந்திரி பதவியை குறி வைத்து காத்திருக்கிறார்.
காலையில் இருந்து மகளின் முகத்தை காண ஆவலாக இருந்தவரிடம் வீடியோ காலில் பேசாதவள் இப்போது தந்தைக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் பொருட்டு தயாராகியதும் அழைத்துவிட்டாள். “என்னடா குட்டிமா தாவணி போட்டிருக்க” என்று அதிசயிக்க..
‘சும்மா தான்ப்பா நானும் என் ப்ரெண்டும் ஒரே மாதிரி எடுத்தோம் அதான் இன்னிக்கு போட்டிருக்கேன் எப்படிப்பா இருக்கு ?’
‘எப்பவும் போல அழகா இருக்கடா குட்டிமா பாட்டி கிட்ட சுத்தி போட சொல்லு‘, என்றவரிடம் தீபிகாவை கேட்டவள் அவரிடமும் பேசி கைபேசியை அணைத்துவிட்டு பால்கனிக்கு சென்றாள்.
ஆரவாரத்துடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காலையே புத்தாடை அணிந்து பட்டாசு வெடிப்பதை கண்டவள் முகம் நொடிக்கு நொடி மாற்றம் கண்டது.என்ன முயன்றும் வெடி சத்தத்தில் நெஞ்சம் தடதடப்பதை கட்டுபடுத்த இயலாமல் தன் அறைக்குள் வந்தமர்ந்தாள்.
**************************************
“ஏன்டி ஏன் இப்படி இருக்க, எஸ்கலேடர்ல ஏற பயம், வண்டி ஓட்ட பயம், புது ஆளுங்க கிட்ட பேச பயம், நாய்ன்னா பயம், பேய்ன்னா பயம், பட்டாசு வெடிக்க பயம்னு லிஸ்ட் ரொம்பவே நீளுது.., இன்னும் என்னென்னவெல்லாம் பயமோ எல்லாத்தையும் சொல்லித்தொலை” என்று சைந்தவி கேட்க,
“ஏன் உனக்கு எந்த பயமும் இல்லையா என்னை மட்டும் சொல்ற”
“உன்னை போல யாரும் இருக்க மாட்டாங்கடி விட்டா தெனாலி கமலுக்கே டப் குடுக்குற அளவுக்கு இருக்க, என்னன்னுடி வளர்த்து வச்சிருக்காங்க உன்னை! நீயெல்லாம் எம்.எல்.ஏ பொண்ணுன்னு வெளியில சொல்லிடாத” என்று படபட பட்டாசாய் பொரிந்தவள்,
‘இதெல்லாம் முடியாது ஆனா அன்னைக்கு அந்த ஹீரோக்கிட்ட மட்டும் அவ்ளோ பேசியிருக்க நீ! அவரும் புது ஆளுதானே ஆனா அது மட்டும் எப்படிடி முடிஞ்சது’ என்று கேட்க கீர்த்தி பதிலளிக்கும் நிலையில் இல்லை.
ஆம் இன்றுடன் சரணுடனான அவள் சந்திப்பு நிகழ்ந்து ஒரு மாத காலம் ஆகிற்றுஆனால் இத்தனை நாட்களாய் அவனை தாண்டிய வேறு எந்த சிந்தனையும் அவளிடம் இருந்ததில்லை. இதோ இப்போதுகூட சைந்தவிஎஸ்கலேடர் என்று ஆரம்பித்ததுமே கீர்த்தியின் நினைவுகளும் சரணை சந்தித்த நாளில் சுகமாய் அமிழ்ந்து போனது.அதிலும் அவன் முகத்தை ஒற்றை கரம் கொண்டு மூடி இதழ் கடித்து கீழ் கண்ணால் அவளை பார்த்த தோற்றமே பசுமையாய் அவள் நெஞ்சில் உறைந்துபோயிருந்தது.
“ஹலோ மேடம் என்ன திரும்பவும் ஹீரோ கூட டூயட் பாட போயாச்சா..?” என்று கேட்க முகத்தில் அரும்பிய புன்முறுவலுடன்,
“ஏய்… ச்சி அப்படி எல்லாம் இல்லைடிநானே அவரை திரும்ப பார்த்தா சாரி சொல்லனும்னு இருக்கேன்… அன்னைக்கு அவர் சாதாரணமாத்தான் சொன்னாரு, ஆனா அந்த பொண்ணுதான் கொஞ்சம்பெருசு பண்ணிட்டாங்க இன்ஃபாக்ட் அப்படி ஒரு எம்பாரஸிங் மொமென்ட் வரும்னு அவரே எதிர்பார்கலை” என்றவளுக்கு அவன் முகம் பொத்தி நின்ற கோலம் மீண்டும் மனதில் ஊர்வலம் வர..,
“அதை கேட்டதும் உடனேஅவர் முகம் எப்படி மாறுச்சு தெரியுமா..?” என்று ரசனை மிகுந்த குரலில் கீர்த்தி கேட்க..,
“எப்படி இப்படித்தானே!!” என்று சைந்தவி சரணை போலவே ஒற்றை கரத்தால் முகம் பொத்தி நிற்க, தோழியின் கேலியில் மீண்டும் முகிழ்த்த வெட்கத்தை முயன்று மறைத்தவள், அருகே இருந்த தலையணையை தூக்கிவீச அதை பிடித்த சைந்தவி,
“பின்ன என்னடி இந்த ஒரு மாசமா இதையே தான் தேஞ்சுபோன ரெக்கார்ட் மாதிரி சொல்லிட்டு இருக்க.., அன்னைக்கு நீ அவனை தீவிரமா தேடினதை பார்த்து நான்கூட அவனை பார்த்ததும் வரிஞ்சி கட்டிக்கிட்டு சண்டைக்கு போய் ஒரு உலுக்கு உலுக்குவன்னு பார்த்தா கேடிடி நீ! அத்தனை கலவரத்துலயும் சத்தமே இல்லாம சைட் அடிச்சுட்டு இருந்திருக்க”
“அப்படி இல்லை சவி ஆரம்பத்துல எனக்கும் கோவம் தான் வந்துச்சு ஆனா நிதானமா யோசிச்சப்போ அவரோட முகத்துல எந்த கள்ளமும் இல்லை சாதாரணமா தான் சொல்லியிருக்காரு நான் தான் கொஞ்சம் ஹைப் ஆகிட்டேன்” என்று சரணுக்காக வக்காலத்து வாங்க..
“அடிப்பாவி யாரு என்னன்னே தெரியாம இவ்ளோ கவனிச்சிருக்கியா நீ ! இது ஒன்னும் எனக்கு சரியா படலையே.. என்ன லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்டா” என்று கீர்த்தியின் மேவாய் நிமிர்த்தவும்,
‘சச்சே அப்படி எல்லாம் இல்லை’ என்று அவசரமாக மறுத்தவளுக்குமே இதுநாள் வரை சரணின் முகம் தன் அகத்தில் இருந்து அழியாது இருப்பதை கண்டு ஆச்சர்யமே !அதிலும் அவள் இங்கு வந்ததே எழிலை மறக்க வேண்டிதான்ஆனால் எப்போது சரணுடனான சந்திப்பு நிகழ்ந்ததோ அன்றிலிருந்து இன்றுவரைஎழில் அவள் நினைவுகளை பெரிதாய் ஆக்கிரமித்தது இல்லை.
பொதுவாகவே பெண்கள் தனக்கென்று வரப்போகும் ஆணிடம் முதலில் தன் தந்தையைதான் தேடுவார்கள். அதேபோல் தான் கீர்த்தியும் தந்தையின் அன்பு , அரவணைப்பு, பரிவு, பாசம், பாதுகாப்பு இதுவே தனக்கான ஆண்மகனிடம்அவளின் முதல் தேடலாய் இருந்தது. என்னத்தான் கீர்த்தி சிறு வயதில் எழிலிடம் அத்தகைய அன்பை உணர்ந்திருந்தாலும்அது அவளுக்கு மட்டுமே பிரத்யேகமானதாக என்றுமே இருந்ததில்லை.. இதில் அலர்விழிமட்டுமே விதிவிலக்கு அதிலும் மனதில் அவளை வரித்தபிறகு மற்ற மாமன் மகள்களிடமும் தனது எல்லையில் நின்றுகொண்டான்.. இவளாக கொண்டிருந்த ஒருதலை காதலுக்கு அவன் என்றுமே பொறுப்பாக முடியாது.
ஆனாலும் தான் கொண்டஏமாற்றத்தை தாங்கமுடியாமல் தவித்தவள்அதை எதிர்கொண்டு அதிலிருந்து வெளிவரவே சென்னைக்கு வந்திருந்தாள். அவள் நோக்கத்தை வந்த முதல் நாளே தன்னை அவள் மனதில் புகுத்தி அவனையும் அறியாமலே சரண் நிறைவேற்றியிருந்தான்.
கீர்த்தி முன் சொடக்கிட்ட சைந்தவி “சரி இப்படியே எவ்வளவு நேரம் உட்கார்ந்திருக்கிறது, பட்டாசு தான் வெடிக்க மாட்டேன்னு சொல்லிட்ட அட்லீஸ்ட் வெடிக்கிறதை வேடிக்கை பார்க்கலாம் வாடி” என்று அழைத்து சென்றாள்.
அவர்கள் இறங்கிய நேரம் சூரியதேவன் இளைப்பாற சென்றிருக்க இருள் கவ்விய வானில் வர்ண ஜாலங்கள் நிகழ்த்தி கொண்டிருந்தனர் அக்காலனியில் இருந்தவர்கள். இந்த ஒரு மாத காலத்தில் சில வாண்டுகள் கீர்த்திக்கு ஹாய், பை பிரெண்ட்ஸ் ஆகியிருக்க அவர்கள் இவளை கண்டதும் ‘ஹாப்பி தீபாவளி அக்கா‘ என்று வாழ்த்த புன்னகையோடு அருகே இருந்த கல்மேடையில் அமர்ந்தாள்.
ஆனால் கண்களை இறுக மூடி இருகரங்களாலும் காதை பொத்திக்கொண்டு அமர்ந்திருந்தவளை பார்த்த சைந்தவிக்கு எரிச்சல் மேலிட “அட ராமா இதுக்கு இந்த பருத்தி மூட்டை கோடவுன்லயே இருந்திருக்கலாமோ” என்று தோன்றாமலில்லை. பரிச்சயமான சில குழந்தைகள் கொடுத்த மத்தாப்பை மட்டும் வாங்கி கொண்டு அவர்களுடன் நின்றாள் கீர்த்தி.
“அக்கா எல்லாரும் தூரம் போங்க தௌசண்ட்வாலா வைக்கபோறேன்” என்ற குரலில் பதறிக்கொண்டு ஓடியவள் மரத்தருகே கண்களையும் காதையும் பொத்திக்கொண்டு நின்றிருந்தாள்.
‘படபட‘ வென்ற சத்தம் அடங்கும் வேளையில் மெல்ல கீர்த்தி கண்களை திறந்த நொடி பட்டாசு சிதறல்களுக்கு இடையில் தன் சட்டையை கழற்றியவாறே அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான் சரண்.
எங்கே தான்காண்பது கனவோ என்று கீர்த்தி கண்களை கசக்கிய நொடி அவள் தோளில் அழுத்தமாய் பதிந்த சரணின் கரம் அடுத்தநொடி அவள் தாவணியை அவிழ்த்திருந்தது. அதிர்ந்த கீர்த்தி அவனை நோக்கி கரம் ஓங்க அதற்குள் அவள் மீது தன் சட்டையை போர்த்தியவன் தாவணியை கீழே எறிந்தான்.
பாதி எறிந்த நிலையில் இருந்த தாவணி இப்போதுமுழுவதுமாக பொசுங்கி போயிருந்தது.மருளும் விழிகளோடு சரணை பார்த்தவளின் அச்சத்தை கண்டுகொண்டவன் உடனே அவளை அங்கிருந்து அழைத்து செல்ல வேண்டி கீர்த்தியிடம் ஏதோ கேட்க அது அவள் மூளையை சென்று சேர்ந்திருக்கவில்லை.
****************************************
அன்றைய கீர்த்தியின் மருளும் விழிகளில் தன்னை இழந்த சரண் இன்று நேர்கொண்டதீர்க்கமான அவள் பார்வையில் மீண்டிருந்தான். ஆம் அவன் எதிரில் நின்றிருந்த கீர்த்திகருவுற்றிருக்கும் பெண்களுக்கே உண்டான எந்த அசதியையும் சோர்வையும் முகத்தில்வெளிப்படுத்தவில்லை.சொல்லப்போனால் திருமணத்திருக்கு முன் கருவுற்றிருப்பதை எண்ணி அவள் அச்சமோ அசிங்கமோ படவில்லை மாறாக தன் கர்ப்பத்தை கொண்டாடும் பூரிப்பு அவள் முகத்தில் மிளிர்ந்தது.
தன்னை கடக்கும் போது அவள் முகத்தில் தோன்றிய எள்ளலைகண்டவன்அதுவரை கொண்டிருந்த நிதானம் தப்பித்தான் போனான்.வேகமாக அவள் பின்னே சென்றவன் அவளை அடையும் முன் அங்கே நாதன் பிரகாசத்தை கன்னம் கன்னமாய் அறைந்து கொண்டிருந்தார்.
எழிலுடன் உள்ளே நுழைந்த பிரகாசம் நாதனின் கனல் பார்வையை எதிர்கொள்ள முடியாது மௌனமாய் தலை குனிந்தவாறு அவரை கடக்க முயல, சட்டென எழுந்த நாதன், “துரோகி, என்னடா நடக்குது இங்க, என்னை பார்த்தா பைத்தியக்காரன் மாதிரியா தெரியுது..?” என்று கேட்டு பிரகாசத்தை இழுத்து பிடித்து கன்னம் கன்னமாய் அறைய தொடங்கினார்.
இதை கண்ட சரண் கீர்த்தி எழில் மூவருமே அமைதியாய் நிற்க அலர் தான் பதறி கொண்டு நாதனை தடுக்க முயன்றாள்.
ஆனால் ஒரே உதறலில் அலரை கீழே தள்ளியவர் மீண்டும் பிரகாசத்தை அறைந்தவாறு, “எத்தனை நாள்பைத்தியகாரன் மாதிரி கீர்த்தி எப்படி இருக்கான்னு ஓடி வந்திருப்பேன் ஒரு முறையாவது இந்த நிலமையில இருக்கான்னு சொன்னியாடா? எனக்கு முதல்லயே தெரிஞ்சிருந்தா இன்னிக்கு இப்படி வீட்டு விஷயத்தை ஊர் சிரிக்கிற மாதிரிபோகவிட்டிருக்க மாட்டேனே” என்று ஆதங்கத்தோடு கேட்க பதிலின்றி நின்ற பிரகாசத்தின் விழிகளில் ஈரம் மட்டுமே கசிந்து கொண்டிருந்தது.
“ஏன்டா இந்த விஷயத்தை மறைச்சு இவ்ளோ தூரம் வளரவிட்டு என்னை கழுத்தருத்த.., ஏன் என்கிட்டே முன்னாடியே சொல்லலை, எப்படி இதை மூடி மறைக்க முடிஞ்சது உன்னால?உன் பொண்ணு வாழ்க்கைடாஇது ! அதுகூடவா உனக்கு புரியலை எனக்கு பதறுதுடா” என்றவரை ‘அப்பா‘ என்று அலர் நெருங்க “கொஞ்சம் அமைதியா இரு அவர் பேசி முடிக்கட்டும்” என்று எழில் அவளை பிடித்து நிறுத்தினான்.
“என்னடா பேசுற அவருக்கு இவ்ளோ டென்ஷன் கூடாது.. மாத்திரை கொண்டு வந்தாரா தெரியலையே மாமா” என்று இமை மீறிய நீருடன் அலர் முடிக்குமுன் எழில்கைபேசியை எடுத்து கதிருக்கு அழைத்து மாத்திரைகளை கொண்டுவர சொன்னவன், “பட்டு இப்போ பேசலைன்னா தான் அவருக்கு அழுத்தம் அதிகமாகிடும் அதனால பேசவிடு” என்றான்.
“முந்தாநேத்து மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வராங்கன்னு சொன்னேனே அப்பவாவது இதை சொல்லியிருக்கலாமே” என்று கேட்டவரிடம் மாப்பிள்ளை வீட்டார் வரவை தடுக்ககூடாது என்பது கீர்த்தியின் கட்டளைஎன்று பிரகாசம் எப்படி கூறுவார் ?
கலங்கிய கண்களுடன் நாதன் முன் கைகூப்ப “ப்ச் உன்னை சொல்லி என்ன பிரோஜனம்” என்று கீர்த்தியை பார்த்தவரின் குரலில்அத்தனை களைப்பு…
பின்னே கடந்த சில மாதங்களாக கீர்த்திக்காக அவர் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல.. நடப்பவை அனைத்தையும் முகத்தில் எவ்வித உணர்வும் வெளிப்படுத்தாமல்கைகளை கட்டிக்கொண்டு பார்த்திருந்த கீர்த்தியை நெருங்கி‘எத்தனை மாசம்‘ என்றார் இறுகிய குரலில்.
அவளோ கையில் இருந்த இனிப்பை அவர்முன் நீட்டி ‘ஏழு முடிஞ்சது‘ என்றாள் உல்லாசக்குரலில்.
அதை கேட்ட நாதனின் மனம் வெகுவாக காயம் கொள்ள, “என்னைக்கு இவன் கூட நீரெண்டு வாரம் இருந்தியோஅப்பவே நான் இதை எதிர்பார்த்திருக்கணும் ஆனா நம்ம பொண்ணு, நம்ம மச்சான், நம்ம வளர்ப்பு தப்பாகாதுன்னு கண்மூடித்தனமான குருட்டு நம்பிக்கையில் இருந்துட்டேன் ஆனா அது எவ்ளோ பெரிய முட்டாள்தனம்னு இப்போ புரியுது” என்றவருக்கு உணர்வுகள் பிரவாகமாய் எழ அதன் அழுத்தம் தாள முடியாமல் அங்கிருந்த நாற்காலியில் தோய்ந்து அமர்ந்தார்.
அவர் முடிக்கும் முன்னமே “என்னது இரண்டு வாரமா..? ஒண்ணா இருந்தாங்களா..? இது எப்போ நடந்தது” என்ற எழில் மற்றும் அலரின் குரல் அதிர்ந்து இணைந்து ஒலிக்க அவர்கள் பார்வை அங்கிருந்த சரண் கீர்த்தி மீது அதிர்ச்சியோடு பதிந்தது.