பழனியை நோக்கி அந்த கார் விஜயின் கைகளில் மெல்ல நகர்ந்துகொண்டு இருந்தது.
“மாட்டுவண்டில போயிருக்கலாம். வேகமா போடான்னா உயிர் போற வேகத்துல ஓட்டுவான். மெல்லடான்னா உருட்டுவான். தூங்கலாம்ன்னா பாட்டை அலற விட்டு அதுக்கும் விடமாட்ரான்…” என்று கதறிக்கொண்டு இருந்த ஆகாஷ் பொறுக்கமாட்டாமல்,
“முதல்ல கார்ல சத்தத்தை குறை விஜய். எப்பவும் இப்படி சாங் கேட்டா மனசு லேசாகவே ஆகாது. ஆடிட்டே தான் இருக்கும். கொஞ்சமாச்சும் ஒருதடவையாவது மெலோடிஸ் கேட்டு பாரு. அதோட அருமை உனக்கு விளங்கும்…”
ஆகாஷின் எரிச்சலை எல்லாம் புறம் தள்ளியவனாக இன்னும் இரண்டு பாயின்ட் வால்யூமை ஏற்றினான் அவன். விஜயநெடுமாறன்.
“உன்கிட்ட பேசினதுக்கு கார் கதவுல முட்டிக்கலாம்…” என்று ஆகாஷ் காதிற்கு பஞ்சை வைத்துக்கொண்டு கண்ணை மூடிவிட்டான்.
இது இப்படித்தான் ஆகும் என்று முன்பே தெரிந்திருந்த பிரனேஷ் பின் சீட்டில் கால்களை பரப்பியபடி முகத்தில் கர்சீப்பை போட்டுக்கொண்டு உறங்க முயன்றான்.
முயன்றான் அவ்வளவே. காதில் அடைத்திருந்த பஞ்சை தாண்டி அந்த பாடல் குடைந்தது.
“நீயெல்லாம் மனுஷனே இல்ல தெரியுமா? பிடிக்கிற பாட்டை கூட வெறுக்க வச்சிருவ…” என்று சத்தமாக சொன்னாலும் அது விஜய்க்கு கேட்டால் தானே?
“பொண்டாட்டிக்கு நிச்சயதார்த்தம்ன்னு கூட்டிட்டு போறான். கொஞ்சமும் அலட்டிக்காம எப்படி இருக்கான்?…” என ஆகாஷ் ஒருபக்கம் பொருமிக்கொண்டு இருந்தான்.
ஒரு விஷயம் ஏன் செய்யற என கேட்டால் யோசிக்காமல் இறங்கிவிடுபவன் வேறு. அங்கே என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் இருக்க கார் பழனியை நோக்கி சென்றுகொண்டு இருந்தது.
“போறது பழனி முருகன் இருக்கற ஊர். கேட்கிற பாட்டை பாரு…” என பிரனேஷ் பெருமூச்செறிந்தான்.
செல்லமே தங்கமே மெல்லமா பாரடி செத்துகித்து போவேன்டி
நீ சரி சரின்னு ஒருமுறை சொன்னா சத்தியமா பிழைப்பேன்டி
என்ற பாடலுடன் சேர்ந்து விஜயும் சத்தமாய் பாட நண்பர்கள் இருவருமே வாயை திறக்கவில்லை.
யார் பேச்சை கேட்பவனில்லை. இல்லை என்றாலும் போகிறது என்று இதை விட சொல்லலாம். ‘வேண்டாம். ஆனாலும் நடத்த கூடாது. என்ன ஒரு வில்லத்தனம் இவனுக்கு?’ என்றுதான் தோன்றியது.
ஆனாலும் அவனை தனித்து விடமுடியாதே? நொந்துகொண்டு அங்கே எந்த பிரச்சனையும் இவன் செய்துவிட கூடாதே என்னும் வேண்டுதலுடனே சென்றார்கள்.
——————————————-
அந்த மண்டபத்தினுள் நுழைந்தவனை கண்டதுமே அருமைநாயகத்தின் முகம் வெளிறியது.
“இவன் எங்க இங்க வந்தான்?…” என்று முணுமுணுத்தபடி தன் மகனை பார்த்தவர்,
“ஜோதி என்னன்னு போய் பாருடா…” என்று சொல்லவும் அவனும் வேகமாய் வந்தான் விஜயை நோக்கி.
“இங்க உட்காருங்கடா. நான் போய் நிச்சயத்தை தலைமை தாங்கிட்டு வரேன்…” என்று நண்பர்களை பார்வையாளர்களுடன் அமர சொல்ல,
“விஜய் சொன்னா கேளுடா…” என்ற ஆகாஷின் கையை பிடித்த பிரனேஷ்,
“வாயை வச்சிக்கிட்டு இருக்கியா? போனா போய்ட்டு வரட்டும். சொன்னா வேணும்னே கூட கூட செய்வான்…” என்று அடக்கினான்.
இருவரையும் ஒரு சிரிப்புடன் பார்த்தவன் அமர்ந்துகொள் என்பதை போல சைகை காட்டிவிட்டு முன்னே செல்ல அதற்குள் பரஞ்ஜோதி வழி மறிப்பதை போல நின்றான்.
வேண்டுமென்றே அவனை நெஞ்சோடு இடித்துக்கொண்டு சென்ற விஜய் அவனை முட்டி நிற்க,
“கண்ணு தெரியலைன்னா கண்ணாடிய கழட்டிட்டு நடக்கனும். உனக்கெதுக்கு கண்ணாடி?…” என்று பரஞ்சோதி கோபத்துடன் கேட்க,
“மச்சான் பேச்சுக்கு ரெஸ்பெக்ட்…” என்றவன் கூலரை கழற்றி சட்டையில் கோர்த்தவன்,
“தள்ளு மச்சான்…” என கை கொண்டு நகர்த்திவிட்டு இரண்டிரண்டு படிகளாக தாவி மேடையில் அருமைநாயகத்தின் அருகிலேயே வந்து அமர்ந்துகொண்டான்.
மொத்த குடும்பமும் ஸ்தம்பித்து செய்வதறியாமல் முழித்துக்கொண்டு இருந்தார்கள்.
“ஹவ் ஆர் யூ மாம்ஸ்?…” என்று வேறு விஜய் அவரை கேட்க,
“டேய்…” என அவர் பல்லை கடித்தார்.
“மரியாதை மரியாதை…” என்றவன்,
“என்ன மாப்பிள்ளை எல்லாம் பார்த்திருக்கீங்க. ஒரு வார்த்தை உரிமைப்பட்டவனுக்கு சொல்லிவிடனும்னு தோணலையே?…” என்றான் நக்கலாக.
“ஊர்பேர் தெரியாதவன்லாம் உரிமை கொண்டாடிட்டு வர நினைக்கலாமா?…” என விஜயை முறைத்தார் அருமைநாயகம்.
“ஜோதி…” என மகனை திரும்பி பார்த்து அழைக்க,
“சில் மாம்ஸ், உங்க ஜோதி அங்கயே திகுதிகுன்னு எரியறான். இப்ப உங்களோட பேசறதை கேட்டா இன்னும் எரியமாட்டானா?…”
“நிச்சயத்தை நிறுத்தனும்னு ஏன்டா வந்த? அதான் எப்பவோ ஒட்டும் இல்லை, உறவும் இல்லைன்னு ஆகிடுச்சே….” என நாயகம் கேட்க விஜயின் முகத்தில் அப்படி ஒரு வலியுடன் கூடிய வெறி.
“உறவில்லையா? அதை நான் தான் இனி முடிவு பண்ணுவேன். அதையும் ஏற்கனவே சொன்னேனா இல்லையா?…” என சொல்லியவனை அடிக்க பாய்வதை போல பார்த்தார் அருமை நாயகம்.
“மிஸ்டர் பெருமைநாயகம் மாம்ஸ். இப்ப எதுக்கு வந்தேன்னா, இந்த பெருமைக்கு ஒரு ஹாய் சொல்லிட்டு போகலாம்ன்னு தான் வந்தேன்…” என சிரிக்காமல் சொல்லி,
“நிச்சயம் பண்ண வந்திருக்கவங்கட்ட என்னை யாருன்னு சொல்லவேண்டியது தானே? இல்லை யாரோன்னு சொல்லவேண்டியது தானே? நீங்க என்ன சொல்ல போறீங்கன்னு பார்க்கனும்ய்யா….” என்று கேட்டவனின் கண்களில் அத்தனை வன்மமும், ஆக்ரோஷமும் போட்டிபோட்டது.
——————————————————
அந்த வகுப்பறையில் அமர்ந்திருந்தவர்களை வரிசையாக நிதானமாக பார்வையிட்டவன் எழுந்து வந்து மேஜையின் முன்னால் சாய்ந்து நின்றான்.
அதில் முன் வரிசையில் அமர்ந்திருந்த பெண்ணை விரல் நீட்டி எழ சொல்லியவன்,
“உங்க நேம்?…” என்று சொல்ல அப்பெண்ணும் எழுந்து நின்று சொல்ல சொல்ல அதில் கவனம் இருந்தாலும் பார்வை மொத்தமும் மூன்றாம் வரிசையில் அமர்ந்திருந்தவளிடமே இருந்தது.
அவளும் அவனையும், அடுத்தது தானா என்பதையுமே கவனித்து திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டு இருந்தாள்.
எதற்கு செய்கிறான் என்று கூட தெரியாத அளவிற்கு முட்டாள் இல்லையே அவள்.
அவளின் பெயரை கேட்டு அவன் நின்ற நாள் மனக்கண்ணில் தோன்ற முகம் ஒரு நொடியானாலும் கசங்கி போனது.
“ஹேய் கேர்ள், நீ தான். இங்க என்ன தூங்கவா வந்திருக்க?…” என்றான் ஒருமையில் சத்தமாக கோபத்துடன்.
‘தன்னை தானோ?’ என்று அவள் மலங்க மலங்க விழித்தபடி சுற்றிலும் பார்த்து வைக்க,
“உன்னை தான்…” என்றான் மீண்டும் கடுமையுடன்.
மெல்ல அவள் எழுந்து நின்று அவனை பார்த்தாள். அத்தனைபேரின் முன்பும் இப்படி அவன் திட்டிவிட்டது அசிங்கமாக போக சற்று கோபமும் கூட அவளின் கண்களில்.
‘உனக்கு கோபம் கூட வருமா? வா வா’ என கேலியாக தன் இதழை வளைத்துக்கொண்டவன்,
“இதென்ன ஸ்கூலா? இப்படி திருதிருன்னு முழிக்கிற? யு.ஜி முடிச்சிட்டு தானே பி.ஜிக்கு வந்திருக்க? அப்பறம் என்ன பர்ஸ்ட் டைம் காலேஜ் வந்த மாதிரி நிக்கிற?…” என்றான் விஜய்.
அவன் வேண்டுமென்றே தன்னை பேசுகிறான் என்று தெரிந்து வாயை திறக்காமல் அவள் நிற்க,
“உன் பேர் என்ன?…” என்றான் ஒரு ஆழ்ந்த பார்வையுடன்.
‘இப்ப நீ சொல்லித்தானே ஆகனும்’ என்னும் கிண்டல் தொனித்ததோ என்பதை போல ஒரு குரல்.
“ஹ்ம்ம், ஸ்பீக்அவுட். பர்ஸ்ட் டே. இன்னும் நிறைய பேர் இன்ட்ரோவுக்கு வெய்ட்டிங்…” என்று அவளை துரிதப்படுத்த,
“பவித்ரா பழனியப்பன்…” என்றாள் அவள்.
கடுகடுத்த முகத்துடன் அவள் தன் பெயரை உச்சரிக்கவுமே ஒரு வெற்றிப்புன்னகை விஜய் முகத்தில்.
“நீ உன் பேரை மட்டும் தானே சொல்ல கேட்டேன்? அதென்ன பழனியப்பன்?…” என்றான் இன்னும் அதே கேலியோடு.
“என்னோட ஃபுல் நேம் அதுதான். பழனியப்பன் எங்கப்பா பேர்…”
“இங்க படிக்க நீ மட்டும் தானே வந்திருக்க?…” என்றவன் பேச்சில் முகம் கன்ற,
“ஓகே, உட்கார்…” என்றான் பெரியமனது பண்ணி இன்றைக்கு இது போதும் என்பதை போல.
அவன் பவித்ராவிடம் அத்தனை கடுமையுடன் நடந்துகொண்டதே அங்கிருந்தவர்களுக்கு ஒரு கிலியை உண்டுபண்ணியது.