உருக்கம் – 1
வீட்டின் முற்றத்தில் அமர்ந்து அவளின் கைகளுக்கு மருதாணியை வைத்துவிட்டு கொண்டு இருந்தார் பார்வதி.
“ஒழுங்கா வாயை திறடி. கொஞ்சமாச்சும் அறிவுன்னு இருக்கா? நாலு இட்லி சாப்பிட எவ்வளவு நேரமாக்குற?…” என அவளுக்கு ஊட்டிக்கொண்டிருந்த வசந்தி திட்ட,
“ம்மா, நீங்க ஒன்னும் ஊட்ட வேண்டாம். எனக்குத்தான் சாம்பார் பிடிக்காதுல. நான் வேணாம்னு தானே சொன்னேன்? யார் கேட்டா?…” என கடுப்புடன் பேசினாள் அவள்.
“அப்புக்குட்டி, ஒழுங்கா சாப்பிட்டு சீக்கிரம் தூங்கு. உன் பெரியப்பா வந்தா அவ்வளோ தான். இவ்வளோ நேரமா என்ன பன்றீங்கன்னு பேசுவார்…” என பார்வதி சொல்ல கப்பென்று வாயை மூடினாள் பெண்.
“நல்லா சொல்லுங்கக்கா, இவளுக்கு மாமா தான் சரி…” என வசந்தி பேச,
“சித்தி அவளே டென்ஷன்ல இருக்கா. நீங்க வேற எதுக்கு இன்னும் டென்ஷனாக்கறீங்க? நாளைக்கு நிச்சயம் இருக்கும் போது யாரால சாப்பிட முடியும்?…” என்றாள் ரஞ்சனி பார்வதியின் மகள்.
“அக்கா, அதெல்லாம் ஒண்ணுமில்லை. நீ பாட்டுக்கு எதாச்சும் கற்பனை செய்யாத…” என்றாள் அவள் அப்புக்குட்டியாகப்பட்ட பவித்ரா.
“எங்களுக்கு தெரியாதா அப்பும்மா?…” என்றார் பார்வதி.
“ஆமா, தெரியாது. யாருக்கும் தெரியாது. சொல்ல சொல்ல கேட்காம தேவையில்லாத பிரச்சனையை இழுத்து வச்சிருக்கீங்க. வேண்டாம்னு சொன்னா கேட்டா தானே?…” என்றாள் பவித்ரா.
“ஏன் அப்புக்குட்டி மாப்பிள்ளையை பிடிக்கலையா?…” என்று ரஞ்சனி கேட்க,
“இப்போ வந்து நல்லா கேட்ட? இதை என்கிட்டே யார் கேட்டா?…” என்றவள்,
“வச்ச வரைக்கும் போதும். நான் போய் தூங்கறேன்…” என்று எழுந்து சென்றுவிட்டாள் பவித்ரா.
அவளுக்கு உறுதியாக தெரியும் மறுநாள் நிச்சயதார்த்தம் கண்டிப்பாக நடக்காது என்று.
அதை யார் பெரியப்பாவிடம் சொல்வது? அருமைநாயகம் வைத்தது தான் சட்டம் அக்குடும்பத்தில்.
வீட்டின் பெரியவர் என்னும் முறையில் அவர் எடுப்பது தான் முடிவுகள். இதுவரை அப்படித்தான் நடந்துகொண்டிருக்க அவனின் வரவிற்கு பின் அதெல்லாம் சாத்தியமா என்று தோன்றியது.
நிச்சயதார்த்தம் நடக்காது என்று தெரிந்தாலும் சொல்ல சொல்ல கேட்காமல் இப்படி ஊரை கூட்டி செய்வதை போல செய்கிறார்களே? அதுதான் அவளின் பயமே.
கண்ணை மூடியவளின் விழிகளுக்குள் சொடக்கிட்டு தன்னிடம் சவால் விட்டவனின் முகம் தான் பயங்கரமாக தோன்றியது.
ஒரு நொடி உடல் அதிர நடுங்கி விழித்தவள் இப்போது தன்னறை ஜன்னலில் தெரிந்த பழனி முருகனின் கோவிலை தான் வெறித்தது.
“அப்புக்குட்டி?…” என்று தோளில் கை விழ திரும்பி பார்த்தவள் அங்கே அக்கா ரஞ்சனியை பார்த்ததும் தோளில் சாய்ந்துகொண்டாள்.
“அக்கா, இதெல்லாம் வேண்டாம்னு சொல்ல யாருமே வாயை திறக்கமாட்டிங்கறாங்க….”
“உனக்கு மாப்பிள்ளையை பிடிக்கலையா? அதை சொல்லு. நீ காரணமே இல்லாம எதையோ நினைச்சு பயப்படாத…” என்று தட்டி கொடுக்க,
“இல்லை, எனக்கு தெரியும் இது நடக்காது…” என முணுமுணுத்த பவித்ரா,
“இது பிடிக்குது பிடிக்கலைன்ற விஷயமே இல்லக்கா. இது நடக்காது. அவங்க நடத்த விடமாட்டாங்க…”
“நீ எப்பவோ முடிஞ்சு போனதை பத்தி ஏன் பேசற? இப்போ அவனுக்கு கல்யாணம் கூட ஆகியிருக்கலாம். பாஸிட்டிவா நினை…” என்ற ரஞ்சனி அழுத்தமாய் தங்கையை பார்க்க,
“என்ன? எதுக்கு இந்த பார்வை?…”
“இல்லை, நாங்களே அதை எல்லாம் மறந்தாச்சு. நீ ஏன் இன்னும் அவனை நினைச்சுட்டு இருக்க?…”
“ப்ச், அக்கா நீ வேற. அவன் சந்தோஷமா நான் நினைக்கிற மாதிரியா நடந்திருக்கான்? எனக்கு பக்கு பக்குன்னு இருக்குது…” என்று சொல்லு பொழுதே கன்னமும், இதழ்களும் வியர்க்க வியர்க்க வேகமாய் புறங்கையால் அதை துடைத்தாள்.
“பவிம்மா?…”
“ஒண்ணுமில்லை க்கா. நீ போ…” என்று அவளை அனுப்பிவிட்டு கண்ணை மூடி முருகனை வணங்கியவள் கட்டிலில் படுத்துக்கொள்ள இன்னுமே அன்றைய அத்துமீறலில் இருந்து அவள் வெளிவரவில்லை.
அவனை நினைத்த நொடி அவனின் ஆவேசமும், அத்துமீறிய செயலும், ஆக்ரோஷமும் மாறி மாறி இதயத்தினுள் அச்ச விதைகளை தூவ மிரண்டுபோனாள்.
“நாளைக்கு எந்த வித அசம்பாவிதமும் நடக்காம விசேஷம் நல்லபடியா முடியனும்…” என வேண்டிக்கொண்டாள்.
அவளை பொறுத்தவரை அவனின் தலையீடு இன்றி தங்கள் குடும்பத்தின் மரியாதை போகாமல் பெரியப்பாவின் ஏற்பாடு நல்லமுறையில் நடக்கவேண்டும் என்ற குறிக்கோள் மட்டுமே.
பாதி இரவில் குளிர் அதிகமாக எழுந்து கையை கழுவிவிட்டு வந்து போர்வையை போர்த்திக்கொண்டாள். விடியற்காலை அவள் எழுந்து கீழே வரும் பொழுதே வீடே பரபரவென இயங்கிக்கொண்டு இருந்தது.
தங்கள் வீட்டில் இருந்து இரண்டு தெரு தள்ளி தான் அந்த மண்டபம். சிறியது என்றாலும் இப்போது உறவுகளுக்கு அது போதுமானது.
மாலை நிச்சயதார்த்தம். மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த ரேடியோ சத்தம் இங்கே வரை கேட்டது.
“குட்டிம்மா, என்ன இன்னும் குளிக்காம இங்க வந்து நின்னுட்ட?…” என்றார் பவித்ராவின் தந்தை பழனியப்பன்.
“இப்ப தான்ப்பா முழிச்சேன். அதான் இறங்கி வந்தேன்…” என சோர்வுடன் சொல்ல முகம் சோபையிழந்து காணப்பட்டது.
“என்னடாம்மா? எதுக்கு முகமெல்லாம் வாடி இருக்குது? போ போய் குளிச்சுட்டு கீழே வா…” என்றவர்,
“வெளியூர்ல இருக்கறவங்க எல்லாம் வர ஆரம்பிச்சுட்டாங்க. ஏற்கனவே கரூர்ல இருந்து வந்த உன் சித்தி உன்னை தான் கேட்டாங்க. அவங்களும் உள்ள இருக்காங்க. எல்லாரும் பார்த்துட்டா உன்னை பிடிச்சுட்டு விடமாட்டாங்க…” என்று சொல்லவும் தலையசைத்து மேலே சென்றாள் பெண்.
அருமைநாயகம், பழனியப்பன் இருவரும் உடன் பிறந்தவர்கள். பழனியில் பெரிய அரிசிமண்டி வைத்து மொத்த வியாபாரத்தில் செழிப்புடன், செல்வாக்காக அந்த ஊரில் வாழ்ந்து வருகின்றார்கள்.
அருமைநாயகம், பார்வதி தம்பதிக்கு ரஞ்சனி, பரஞ்சோதி என இரண்டு பிள்ளைகள்.
மூத்தவள் ரஞ்சனி வேடச்சந்தூரில் திருமணம் செய்துகொடுக்கப்பட்டிருக்க பரஞ்சோதிக்கு பவித்ரா திருமணத்திற்கு அடுத்து பேசலாம் என்று இருந்தனர்.
பழனியப்பன், வசந்தி இருவருக்கும் பவித்ரா ஒற்றை பெண். அந்த குடும்பத்தின் கடைக்குட்டி. ஆனால் அதற்கெல்லாம் எந்த செல்லமும் இல்லை. இரு பெண்ணையும், பையனையும் கண்டிப்புடனே வளர்த்தார் அருமைநாயகம்.
ஆம், அங்கே பிள்ளைகள் சம்பந்தமான முடிவுகள் எல்லாம் அருமைநாயகத்தின் முடிவுகளே. பழனியப்பன் இதில் எல்லாம் தலையிடமாட்டார். தொழில், குடும்பம் அவ்வளவே.
பரஞ்சோதி வீட்டினுள் நுழைய அவனை பார்த்த பழனியப்பன் வேகமாய் அவனிடம் வந்தார்.
“காலையிலையே உன்னை தேடிட்டிருந்தேன்டா. எங்க போய்ட்ட நீ?…” என கேட்க,
“மண்டபம் வரை போயிருந்தேன் பழனிப்பா. ஒரு போன் பண்ணிருக்கலாம்ல…” என்று கேட்டு தன் போனை எடுத்து பார்க்க அவர் அழைத்திருந்தார். ஆனால் போன் சைலண்டில் இருந்திருந்தது.
“அச்சோ, சைலன்ட்ல போட்டுட்டேன் போல? சொல்லுங்க பழனிப்பா?…” என்றான்.
“அந்த வேலையை நான் ஏற்கனவே முடிச்சுட்டேன். போ போய் குளி. மேலே எல்லாம் தூசியா இருக்குது…” என்று சொல்லி அவர் நகர்ந்துவிட,
“காபி குடிச்சுட்டு போறேன் குளிக்க…” என்று சொல்லிக்கொண்டே கிட்சனுக்குள் வந்தான் பரஞ்சோதி.
உள்ளே பார்வதி அவித்த இட்லியை தட்டில் மாற்றிக்கொண்டு இருக்க வசந்தி தாளித்தத்திற்கு வெங்காயத்தை நறுக்கிக்கொண்டு இருந்தார். இருவரின் கண்களும் கலங்கி இருந்தது.
“வாப்பா ஜோதி, என்ன காலையில நான் வரும் போது உன்னைய காணும்?…” என்றார் கரூர் சித்தி.
“மண்டபம் வரைக்கும் போயிருந்தேன் சித்தி. நீங்க எப்ப வந்தீங்க? பசங்க எங்க? சித்தப்பா வந்திருக்காங்களா?…” என வரிசையாக கேட்டு தண்ணீரை எடுத்து குடித்தான்.
“ம்க்கும், உன் சித்தப்பா எங்க வர? முதல்ல நிச்சயம் முடியட்டும் அப்பறம் கல்யாணத்துக்கு பார்க்கலாம்னு சொல்லிட்டாரு. அவரு சொல்லுததும் சரித்தான? இது முதல்ல முடியட்டும்…” என்று நீட்டிமுழக்க,
“சித்தி நீங்க ஏன் இங்க அடுப்பங்கரையில நின்னுட்டு இருக்கீங்க? போய் ரெஸ்ட் எடுங்க. சமையல் முடிஞ்சதும் அம்மா கூப்பிடுவாங்க…” என்று அவரை அனுப்ப பார்த்தான்.
“அட போடா அடுத்து எப்ப வருவேனோ? ரெஸ்ட் எடுக்கவா வந்தேன்? அதெல்லாம் ஒன்னும் வேணாம்….” என்றவர் பின் குரலை தழைத்து,
“அந்த பயலுக்கு இன்னும் தெரியாது தான? கமுக்கமா தான நிச்சயத்த பண்ணுறீங்க?…” என கிசுகிசுப்பாய் கேட்க வசந்திக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.
அழுதுவிடுவதை போல ஆனவர் பார்வதியை இயலாமையுடனும், கோபத்துடனும் பார்த்தார்.
‘உங்களால தானே இத்தனையும்?’ என அந்த பார்வை பார்வதியை குற்றம் சாட்டியது.
அவரும் தான் என்ன செய்வார் இப்படி எல்லாம் நடக்குமென்றா நினைத்தார்? அன்றைய சூழ்நிலை அப்படி. அவரின் கையில் மட்டுமல்ல அங்கிருந்த அனைவரின் கையிலுமே அதை தடுக்கும் சக்தி இல்லையே?
அன்றிலிருந்து வசந்திக்கு பார்வதியின் மீது அப்படி ஒரு மனத்தாங்கல். ஒரு வீட்டில் இருந்துவிட்டு பேசாமலும் தள்ளியும் இருக்க முடியாதே? சிறிது நாட்கள் மட்டுமே அப்படி இருந்தது.
அதன் பின்னர் ஆனது ஆகிவிட்டது என்று மனதை தேற்றிக்கொண்டு பழையபடி பேச ஆனாலும் விட்ட விரிசல் விட்டது தான்.
வீட்டிற்கு வந்த இரு மருமகள்களும் ஒற்றுமையாக இருந்தாலும் அவ்வப்போது வசந்தி கொஞ்சம் துடுக்காக பேசிவிடுபவர் தான்.
ஆனால் அதை எல்லாம் மனதில் வைத்துக்கொண்டு பேசுபவர் அல்ல. இப்போது வசந்திக்காக வேண்டும் இந்த சம்பந்தம் நல்லவிதமாக நடைபெற வேண்டும் என்று பார்வதி வேண்டாத தெய்வமில்லை.
ஆனாலும் இவை எல்லாம நடக்கும் காரியமா? நடத்த விடுவானா அவன்? நினைக்கும் பொழுதே படபடப்பானது.
“சித்தி என்ன பேசறீங்க நீங்க? அதெல்லாம் முடிஞ்சு போனது. நீங்க போய் தாத்தாவை பாருங்க. இந்நேரம் எழுந்திருச்சிருப்பாங்க…” என்று திசை மாற்றி அனுப்ப அவரும் கிட்சனை விட்டு வெளியேறினார்.
“யப்பா…” என்று நெற்றியை தடவிக்கொண்டவன்,
“ம்மா இந்த சித்திக்கு எல்லாம் சொல்லனும்னு என்ன இருக்குது? சொல்ல சொல்ல கேட்காம இப்படி கூட்டி வச்சு அலப்பறை பன்றார் உங்க புருஷர்…” என்று பார்வதியிடம் பரஞ்சோதி காய,
“ஜோதி…” என்றார் வசந்தி குரல் தழுதழுக்க.
“வசும்மா, எதுக்கு இப்படி இருக்கீங்க? ஒன்னும் பிரச்சனை ஆகாது…” என்று அவரின் பயத்தை புரிந்து பேச,
“எனக்கு உள்ளத சொல்லு. இந்த நிச்சயம் பத்தி அந்த பையனுக்கு தெரிஞ்சிருக்குமா?…” என்று கேட்க பரஞ்சோதிக்கே தெரியாத ஒன்றாகிற்றே. ஆனாலும் அப்படியே சொன்னால் இன்னும் பயந்துதானே போவார்கள்.
“இல்லைம்மா, தெரிஞ்சிருக்காது. வாய்ப்பில்லை. அவன் முன்னாடி இருந்த இடத்துல இப்ப இல்லை. எங்க இருக்கான்னும் தெரியலை. ஒருவேளை அவனே மறந்திருக்கலாம். இத்தனை வருஷம் ஆச்சே…”
நீண்ட நெடிய நான்கு வருடம். எங்கிருக்கிறான் என்று எதுவும் தெரியாது. நடந்தவை எல்லாம் அவனால் என்றாலும் இப்போது அவனின் ஞாபகத்திலேயே இருக்காது என்ற நினைப்பில் தான் இந்த திருமண ஏற்பாடே.
அருமைநாயகம் தனக்கு தெரிந்தவர்களை வைத்து அவனை தேடியிருக்க ஒருவருக்கும் ஒரு தகவலும் தெரியவில்லை.
எங்கே சென்று மறைந்தானோ என்று என்னும் அளவிற்கு இருக்குமிடம் தெரியாமல் போயிருக்க அந்த நிம்மதியில் சந்தோஷத்தில் தான் இந்த வரனுக்கு சம்மதம் தெரிவித்து தடபுடலாக நிச்சயதார்த்தத்தை ஏற்பாடு செய்திருக்கிறார் அருமைநாயகம்.
அவனின் அறிமுகமற்ற பார்வையில் இருந்து, இவர்கள் தானா என்ற அலட்சிய பாவனைக்கு வந்து, மண்டியிட்டு கை கூப்பி கெஞ்சிய கண்ணீர் முகம் தோன்றி ஆக்ரோஷமாய் கர்ஜித்து சென்றது வரை ஒவ்வொன்றாய் அடுத்தடுத்து தோன்ற அருமை நாயகத்தின் நாடித்துடிப்பு எகிறியது.
“பொடிப்பய என்கிட்டையே சவால் விட்டான்ல. இன்னைக்கு இருக்கற இடம் தெரியாம போய்ட்டான்…” என்று பெருமிதமாய் நினைத்துக்கொண்டார்.
————————————————
அந்த குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் பயத்தை கொடுத்திருந்தவன், வரவே மாட்டான் என்று நினைத்திருந்தவனோ மிக மிக நிதானமாக கிளம்பி வந்து நின்றான்.
“இன்னும் இன்னும் என்னடா பார்த்துட்டு இருக்க?…” என்று கடுப்புடன் ஆகாஷ் கேட்க,
“ஷர்ட் போடலாமா? இல்லை டிஷர்ட்டான்னு யோசிக்கிறேன். எப்படியும் எய்ட் ஹவ்ர்ஸ் ஜர்னி. சோ எது கம்பர்டபிளா இருக்கும்னு பார்த்துட்டு இருக்கேன்…”
என்று சொல்லியவனுக்கு சூடாக பதில் தர இருந்தவனை பிரனேஷ் எச்சரிக்க ஒன்றும் சொல்லமுடியாமல் வாயை மூடிக்கொண்டான்.
“ஓகே, இந்த ஷர்ட் பெர்பெக்ட்…” என்று எடுத்தவன் அதை அணிந்துகொண்டு கண்ணாடியில் தன்னை மெச்சுதலாய் பார்த்து,
“ஆகாஷ், நான் ஹேன்ட்சம் இல்ல…” என்றான் வெறுப்பெற்றுவதை போல.
“ஆமாமா…” என்றான் கடுப்புடன் அவன்.
“பிரனேஷ் நீ சொல்லுடா…” என அவனை கேட்க அவன் சுதாரித்துவிட்டான்.
“அழகு, நீ நடந்தால் நடையழகு. அழகு நீ சிரித்தால் சிரிப்பழகு…” என்று எக்கச்சக்க பிட்டுகளை போட,
“ஸ்டாப். இப்ப நீ ஏன் நான்-சிங்ல பாடிட்டு இருக்க?…” என்று ஆராய,
“வாய்ல அதான்டா வந்துச்சு. நீ ரெடின்னா வா. நான் ஹால்ல வெய்ட் பன்றேன்…” என்ற ஓடியேவிட ஒரு சிரிப்போடு தலையை ஆடிக்கொண்டான் விஜயநெடுமாறன்.
“ஓகே, லெட்ஸ் கோ…” என்று கார் சாவியை எடுத்தவன் காலெண்டரில் நேரத்தை பார்த்தான்.
“ஹ்ம்ம், நல்ல நேரம் தான்…” என சொல்லி விஜய் திரும்ப,
“ப்ச், டேய், இதுக்கெல்லாமா நல்ல நேரம்?…” என்று ஆகாஷ் கடுப்பானான்.
“அம்மா சொல்லிருக்காங்கடா. எங்க போனாலும், அதுவும் முக்கியமா நல்ல விஷயத்துக்கு போகும் போது பார்த்துட்டு போகனும்னு…” என்று நக்கலாக சொல்ல ஆகாஷிடம் மௌனம்.
“என்ன மூஞ்சி உம்முன்னு ஆகிடுச்சு?…” என்றபடி கதவை பூட்டிவிட்டு கீழே இறங்கி வாசல் கேட்டை திறந்தான்.
“என்ன தம்பி ப்ரெண்ட்ஸோட அவுட்டிங்கா?…” என்று வந்தார் கீழ் வீட்டு தாத்தா.
“ஆமா தாத்தா, சும்மா ஒரு ஜாலி ட்ரிப்…” என்று சிரித்தபடி விஜய் சொல்ல,
“என்ஜாய்…” என்று கை ஆட்டி அனுப்பி வைத்தார்.
“கார்ல ஏறுங்கடா…” என்று விஜய் சொல்லவும் உள்ளே ஏறிய ஆகாஷ்,
“போறது நிச்சயத்தை நிறுத்த. இது ஜாலி ட்ரிப்பா உனக்கு?…” என்றான்.
“ப்ச், தப்பா பேசாதடா. நிச்சயத்தை நான் ஏன் நிறுத்த போறேன்? அது எப்படி நடக்குதுன்னு பார்க்க தான் போறேன்…”
“நீ போறல. அப்ப அதான் அர்த்தம்…”
“வச்சிக்கோ…” என்றான் விஜய் ஒரு தோள் குலுக்கலுடன்.
“தலையெழுத்து, சரி போய் என்ன செய்ய போற?…” என ஆகாஷ் மீண்டும் கேள்வி கேட்க,
“பார்க்கத்தான் போறேன். அவ்வளோ தான். நான் எதுவும் செய்ய மாட்டேன். ஆனா தானா நடக்கும்…” என்றாள் இதழோரம் ஒரு விஷமப்புன்னகையுடன்.
“இது தப்பில்லையா விஜய்?…”
“தப்பு செஞ்சாங்க இல்ல? கதறவிட்டாங்க இல்ல. பட்டு தான் ஆகனும். இரக்கம் காட்டாதவங்கட்ட நானும் இரக்கம் காட்ட முடியாது. என்ன செய்யனுமோ செய்யட்டும். ஆனா அங்க என்னோட பிரசன்ஸ்ஸ அவாய்ட் பண்ண முடியாது…”
விஜயின் இறுகிய முகத்தில் தெறித்த கனலில் வார்த்தைகளும் கூட அந்த ஜுவாலையை ஒத்திருந்த வெம்மையுடன் தான் வந்து விழுந்தது.
“டேய்…” என பின்னிருந்து ஆகாஷை சுரண்டிய பிரனேஷ்,
“ஆபத்துடா, அவன் அந்நியனாகிட்டான். நீ கண்ணை மூடி மட்டையாகிடு…” என்று வாயசைத்து கிசுகிசுப்பாய் சொல்லி பின் சீட்டில் படுத்து கண்ணை மூடிக்கொண்டான்.
இருவரும் அடங்கி போக அந்த சூழலை மாற்றவென பாட்டை ஓடவிட்டான் விஜய்.
முதலில் பேசாமல் இருந்த ஆகாஷ் பாட்டின் சத்தத்தில் இதயமும் சேர்ந்து படபடவென அடிக்க எரிச்சலாம் போனது.
மெல்ல சத்தத்தை குறைத்து வைக்க மீண்டும் அதை விட கூட்டி வைத்தான் விஜய்.
“டேய் முடியலைடா. சவுண்டை கம்மி பண்ணு…” என்றான்.
“பேசிட்டு தான வந்த? அப்பறம் என்ன உடனே மௌனவிரதம். இப்ப எனக்கும் மூட் மாறிடுச்சு. பாட்டு கேட்கனும்…”
பழனியை நோக்கி அந்த கார் விஜயின் கைகளில் மெல்ல நகர்ந்துகொண்டு இருந்தது.
“மாட்டுவண்டில போயிருக்கலாம். வேகமா போடான்னா உயிர் போற வேகத்துல ஓட்டுவான். மெல்லடான்னா உருட்டுவான். தூங்கலாம்ன்னா பாட்டை அலற விட்டு அதுக்கும் விடமாட்ரான்…” என்று கதறிக்கொண்டு இருந்த ஆகாஷ் பொறுக்கமாட்டாமல்,
“முதல்ல கார்ல சத்தத்தை குறை விஜய். எப்பவும் இப்படி சாங் கேட்டா மனசு லேசாகவே ஆகாது. ஆடிட்டே தான் இருக்கும். கொஞ்சமாச்சும் ஒருதடவையாவது மெலோடிஸ் கேட்டு பாரு. அதோட அருமை உனக்கு விளங்கும்…”
ஆகாஷின் எரிச்சலை எல்லாம் புறம் தள்ளியவனாக இன்னும் இரண்டு பாயின்ட் வால்யூமை ஏற்றினான் அவன். விஜயநெடுமாறன்.
“உன்கிட்ட பேசினதுக்கு கார் கதவுல முட்டிக்கலாம்…” என்று ஆகாஷ் காதிற்கு பஞ்சை வைத்துக்கொண்டு கண்ணை மூடிவிட்டான்.
இது இப்படித்தான் ஆகும் என்று முன்பே தெரிந்திருந்த பிரனேஷ் பின் சீட்டில் கால்களை பரப்பியபடி முகத்தில் கர்சீப்பை போட்டுக்கொண்டு உறங்க முயன்றான்.
முயன்றான் அவ்வளவே. காதில் அடைத்திருந்த பஞ்சை தாண்டி அந்த பாடல் குடைந்தது.
“நீயெல்லாம் மனுஷனே இல்ல தெரியுமா? பிடிக்கிற பாட்டை கூட வெறுக்க வச்சிருவ…” என்று சத்தமாக சொன்னாலும் அது விஜய்க்கு கேட்டால் தானே?
“பொண்டாட்டிக்கு நிச்சயதார்த்தம்ன்னு கூட்டிட்டு போறான். கொஞ்சமும் அலட்டிக்காம எப்படி இருக்கான்?…” என ஆகாஷ் ஒருபக்கம் பொருமிக்கொண்டு இருந்தான்.
விஜயிடம் ஒரு விஷயம் ஏன் செய்யற என கேட்டால் யோசிக்காமல் இறங்கிவிடுபவன் வேறு. அங்கே என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் இருக்க கார் பழனியை நோக்கி சென்றுகொண்டு இருந்தது.
“போறது பழனி முருகன் இருக்கற ஊர். கேட்கிற பாட்டை பாரு…” என பிரனேஷ் பெருமூச்செறிந்தான்.
செல்லமே தங்கமே மெல்லமா பாரடி செத்துகித்து போவேன்டி
நீ சரி சரின்னு ஒருமுறை சொன்னா சத்தியமா பிழைப்பேன்டி
என்ற பாடலுடன் சேர்ந்து விஜயும் சத்தமாய் பாட நண்பர்கள் இருவருமே வாயை திறக்கவில்லை.
யார் பேச்சை கேட்பவனில்லை. இல்லை என்றாலும் போகிறது என்று இதை விட சொல்லலாம். ‘தனக்கும் வேண்டாம். ஆனாலும் இது நடத்த கூடாது. நடத்த விடமாட்டேன்றான். என்ன ஒரு வில்லத்தனம் இவனுக்கு?’ என்றுதான் தோன்றியது.
இருந்தாலும் அவனை தனித்து விடமுடியாதே? நொந்துகொண்டு அங்கே எந்த பிரச்சனையும் இவன் செய்துவிட கூடாதே என்னும் வேண்டுதலுடனே சென்றார்கள்.
அவ்வப்போது தனது மூடிற்கு ஏற்ற விதமாய் ஆங்காங்கே வேகத்தை குறைத்தும் கூட்டியும் சென்றாலும் சரியான நேரத்திற்கு மண்டபத்திற்கு சற்று முன்னரே காரை ஓரங்கட்டினான்.
அடுத்து அவன் செய்தது ஆகாஷால் சுத்தமாக பொறுக்கமுடியவில்லை. வேகமாய் காரை விட்டு இறங்கி பின் சீட்டில் சென்று அமர்ந்துகொள்ள,
“இதை நீ வரும் போதே செஞ்சிருந்திருக்கலாம்…” என்றான் விஜய்.
“போச்சு, போறப்போ என்ன பண்ண போறானோ? நீ ஏன்டா டென்ஷனா ஆகற?…” என பிரனேஷ் கேட்க,
“அப்படியே சாத்து சாத்துன்னு உன்னை தான் சாத்தனும். நீ மட்டும் வந்திருக்க வேண்டியது தானே?…” என்று இருவரும் சண்டையிட்டு,
“இவனுக்கு எங்க இருந்துதான் இந்த ந்யூஸ் தெரிஞ்சதோ? நானே இப்படி கிளம்புவான்னு நினைக்கலைடா. விடியக்காலை அஞ்சு மணிக்கு தூங்கிட்டு இருந்தவனுக்கு போன் பண்ணி இப்படி கிளம்பறேன்னு சொன்னா என்னை என்ன செய்ய சொல்ற?…”
“அதுக்கு என்னையும் நீ கூப்பிடுவியா?…” என்று இன்னும் ஆறாத கோபத்துடன் கலவர முகத்துடனே விஜயை பார்த்தான் ஆகாஷ்.
விஜயோ காரின் கதவை திறந்து வைத்து முகத்தை நன்றாக கழுவியவன் தலையை வாரி உடையை நேராய் சீர் செய்து கண்ணாடியில் முகம் பார்த்துகொண்டான்.
“ஓகே தானே?…” என திரும்பி நண்பர்களை பார்க்க இருவருமே ஒன்று போல தலையசைத்தனர்.
“ஹ்ம்ம், சரி நான் போய்ட்டு வரேன். நீங்க கார்லையே இருங்க. லாக் பண்ணிட்டு போறேன்…” என்று சொல்லவும் இருவருமே ஆளுக்கொரு பக்கமாய் இறங்கி நின்றனர்.
“என்னடா நீங்களுமா வரீங்க?…” என்றான் நம்பமாட்டாமல்.
“வேற வழி?…” என ஆகாஷ் சொன்னாலும் ப்ரனேஷின் முறைப்பில் அடங்கி போனான்.
“வரமாட்டீங்கன்னு நினைச்சேன். ஓகே. வாங்க…” என்று காரை லாக் செய்துவிட்டு நடந்தான்.
“அங்க பார்க்கிங் இருக்குமோ என்னமோ? அதான் இங்கயே நிறுத்திட்டேன்…” என்றான் விஜய்.
‘நாங்க கேட்டோமா?’ என்பதை போல அவர்கள் இருவரும் பின்னால் வர மண்டபத்தை நெருங்க நெருங்க விஜயின் இலகுவான முகம் கடினமாக மாற துவங்கியது.
மண்டபத்தின் முன்னால் இருந்த டிஜிடல் பிளக்ஸ்போர்டை பார்த்தவன் என்ன நினைக்கிறான் என்று ஆகாஷிற்கும், ப்ரனேஷிற்கும் பிடிபடவில்லை.
குளிர்கண்ணாடியின் உள்ளே ஒளிந்து இருந்த அவனின் விழிகள் என்னவிதமான பிரதிபலிப்பை காட்டிக்கொண்டிருந்தது என்று தெரியாமல் மண்டப வாயிலை பார்க்க அங்கே அப்போது தான் மேடையில் வந்து அமர்ந்த அருமைநாயகமும் தற்செயலாக வாசலில் வந்து நின்றவனை பார்த்தார்.
விஜயை பார்த்த நொடி ரத்த அழுத்தம் கூட முகம் வெளிறி கைகள் எல்லாம் நடுங்கியது.
“பழனி இது அவன் தானே?…” என தம்பியிடம் காண்பிக்க,
“ஆமாண்ணே…” என்றார் அவரும் விஜயை கண்டுகொண்ட விதமாய்.
“இவன் எப்படி இங்க? அதுவும் இன்னைக்கு?…” என கேட்ட பொழுதே தொண்டை வறண்டது அவருக்கு.
அனைவரையும் குத்தி கிழிக்கும் பார்வையுடன் அழுத்தமாக தன் காலடியை அங்கே பதித்தான் விஜயநெடுமாறன்.