உருக்கம் – 10
கோவை சென்று வந்ததில் இருந்தே அவ்வப்போது ஏதோனும் யோசனையுடனே தான் இருந்தார் மதுவந்தி.
“ம்மா உங்க சொந்தக்காரங்களை பார்த்தாலும் பார்த்தீங்க, உங்க இம்சை தாங்கமுடியலை…” என்று விஜய் புலம்பவே ஆரம்பித்துவிட்டான்.
“சும்மா இரு விஜய், இத்தனை வருஷம் கழிச்சு பார்த்திருக்கா, அவளோட பீலிங்க்ஸ் என்னன்னு புரிஞ்சுக்கோ…” என மாதவன் மனைவியை தாங்க,
“ஹ்ம்ம், அதான் நீங்க இருக்கீங்களே. பண்ணிக்கோங்க. அதைவிட உங்களுக்கு என்ன வேலை? இத்தனை வருஷம் நீங்க செஞ்சதை இப்ப நான் செய்யனும்னு கைமாத்த பார்க்கறீங்க. நோ நோ…” என்று கிண்டல் பேச அவனின் தோளில் அடித்தார் மதுவந்தி.
“உனக்கும் எங்களை கொஞ்சநாளாச்சும் பிரிஞ்சு இருந்து பார்த்தா தான தெரியும் அந்த வலி என்னன்னு. எத்தனை வருஷம் ஆகிடுச்சு. உன்னோட வயசு சொல்லும்…” என்றார் அவர்.
“அதென்ன வயசு சொல்லும், கூட ஒன்றரை வருஷம் லிஸ்ட்ல மிஸ் ஆகுதும்மா…” என்றவன்,
“ஆனா இப்படி எல்லாம் நான் லவ் மேரெஜ் பண்ணி என்னை வேண்டாம்னு போன்னு சொன்னலும் கூடவே தான் செய்வேன். என்னை உங்களைவிட்டு துரத்த முடியாது. செய்யவும் மாட்டீங்க…” என்று சொல்லி நகர்ந்துவிட்டான் விஜய்.
விஜய்க்கு எப்போதும் மதுவந்தியின் சொந்தங்கள் அப்ற்றிய பேச்சுக்கள் சுத்தமாக பிடிக்காது. அப்படி என்ன வைராக்கியம் என்று தோன்றும்.
அதையும் விட தாயை கட்டாயப்படுத்தி கஷ்டப்படுத்தியிருக்கிறார்கள் என்று விவரம் தெரிந்ததுமே அவனுக்கு அத்தனை கோபம். ஆனால் எதையுமே அவரிடத்தில் காட்டிக்கொள்பவன் அள்ள விஜய்.
தேவையில்லை அவர்கள். தூக்கி எரிந்தது எரிந்ததாகவே இருக்கட்டும் என்று இருந்தவனுக்கு இப்போது தாயிடம் அதை நேரடியாக சொல்ல அத்தனை வருத்தம்.
எந்த சூழ்நிலையிலும் மதுவந்தியின் மனம் வாடுவதையோ, அதனால் தந்தையின் முகம் சோர்வதையோ என்றைக்கும் பொறுத்துக்கொள்ளமுடியாது அவனால்.
இப்போது கோவையில் தான் சந்தித்த ஊர் உறவை பற்றி மதுவந்தி சொல்லியிருக்க சொல்லும் பொழுதே அவரின் முகத்தில் ஆயிரமாயிரம் உணர்வுகள்.
என் குடும்பம், என் மக்கள், என் உறவுகள் என்று தன் வேரை கண்டுவிட்ட பரவசமும் பாசமும் அவரை பந்தாடிக்கொண்டு இருந்தது.
பத்துநாட்கள் ஆகிவிட்டது திருவனந்தபுரம் வந்து. வந்ததில் இருந்து அவ்வபோது இப்படித்தான் எதையாவது நினைப்பதும், யோசிப்பதுமாகவே இருந்தார்.
அவனறியாதது மாதவனிடமும், மகனிடமும் சொல்லாத ஒன்று, தன் பெற்றோரை பார்க்கவேண்டும் என்னும் ஆசை. நெஞ்சை முட்டுமளவிற்கு பொங்கிக்கொண்டு இருக்க எண்ணங்களை பலன் அவருக்கும் பலித்ததோ?
சரோஜாவிடம் இருந்து போன் வந்தது மதுவந்திக்கு. கொஞ்சமும் யோசிக்கவில்லை கிளம்பிவிட்டார்.
“ம்மா, இப்போ எதுக்கு நாம அந்த ஊருக்கு? இத்தனை வருஷம் பார்க்கனும்னு நினைக்காத உங்களோட பேரன்ட்ஸ்க்கு இப்போ மட்டும் பார்க்கணும்ன்ற பாசம் பொங்கிருச்சோ?…” என்றான் விஜய் கொஞ்சம் அலுப்புடன்.
அதற்கே மாதவனுக்கு பொறுக்கவில்லை மகன் மனைவியை பேசியது. உடனே மதுவின் தோளை தட்டிக்கொடுத்தவர்,
“விஜய், அம்மாக்கிட்ட இப்படி பேசலாமா? பாரு உங்கம்மா முகமே டல் ஆகிருச்சு…” என்று சொல்ல,
“அதானே பார்த்தேன். ஒன்னு சொல்லிற கூடாது…” என்ற்றவனுமே தாயை அணைத்துக்கொண்டான்.
இருவருக்குமே மதுவின் சிறு சுணக்கம் கூட தாளமுடியாதது. அப்படி ஒரு வாழ்க்கையை தான் வாழ்ந்துவந்தார்கள்.
இதோ பழனி பயணம். சரோஜா தற்செயலாக மதுவின் தாயிடம் மதுவந்தியை பார்த்ததை பற்றி யாருக்கும் தெரியாமல் சொல்ல இரு நாட்கள் மகளை காணவேண்டுமே என்னும் ஆசையிலே இருந்தவரின் உடல்நிலை கவலைக்கிடமாக போக வாசல்படியில் மயங்கி விழுந்தார்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதுமே சரோஜா மதுவிற்கு அழைத்து தகவல் சொல்லிவிட இதோ கிளம்பி வந்துவிட்டார்கள்.
அதற்கும் முன் மகளை பார்க்கவேண்டும் என்று மகன்களிடம் அரையுயிராய் மன்றார அருமைநாயகம் வழக்கம் போல மருத்துவமனை என்றும் பாராமல் கத்திவிட்டு செல்ல இப்படியே தன் மகளுக்கும் தங்களுக்கும் உறவே இல்லாமல் போய்விடுமோ என்னும் ஏக்கத்தில் அவ்வுர்யிர் தவித்தது.
எத்தனை போராட்டம் இத்தனை வருடத்தி. கொஞ்சமும் மனமிறங்கவில்லை அருமைநாயகம்.
“ஏற்கனவே செத்தவளை கூட்டிட்டு வந்து கும்மாளமடிக்கவா பாக்கறீங்க? இப்பத்தான் நிம்மதியா தல உசந்து இங்க நடமாடிக்கிட்டு இருக்கோம். அவ போனதுல இருந்து ஒட்டிக்கிட்ட கேட்ட பேர் புடிச்ச தரித்திரம் எல்லாம் போதும்…” என்று வாயை திறக்கவிடமாட்டார்.
தான் தொழிலில் தலைஎடுத்ததில் இருந்து அத்தனை பொறுப்பையும் தனக்குள் வைத்துக்கொண்டவர் குடும்பத்தை தன் கட்டுப்பாட்டிற்குள் முழுவதுமாக கொண்டுவந்துவிட்டார்.
பொறுப்பானவர், கண்டிப்பானவர் என்று பழனியப்பனும் அண்ணனை எதிர்த்து ஒரு வார்த்தையும் பேசிவிடமாட்டார். அதுவே அருமைநாயகத்திற்கு இன்னும் சாதகமாக போயிற்று.
போனவள் போனவளாகவே இருக்கட்டும். இனி மீண்டும் அவளின் நிழல் கூட தங்கள் மேல் பட கூடாதென்பதில் அத்தனை திண்ணம் அருமைநாயகத்திற்கு.
செய்தி கேள்விப்பட்டதுமே கிளம்பியவர் மதியம் மூன்று மணி ஆனது மதுவந்தி தன் குடும்பத்துடன் வரும்பொழுது.
எங்கே மகளை பாராமலே தன்னுயிர் பிரிந்துவிடுமோ என்று பரிதவிப்புடன் தன் மூத்த மருமகளிடம் பேசிக்கொண்டிருந்தவர் அந்த அறையின் வாசலில் வந்து நின்றவர்களை புருவம் சுருக்கி பார்த்தார்.
“பாரு, அங்கன நிக்கிதது நம்ம புள்ளையா? பாரு…” என்று அவர் நடுங்கும் விரலுடன் அவர் நீட்டிய திசையில் திரும்பி பார்த்தார் பார்வதி.
“ம்மா…” என மதுவந்தி அழுகையுடன் உள்ளே வர பின்னோடே மாதவனும் வந்தார்.
விஜய் உள்ளே வராமல் வாசலிலேயே நிற்க மகளை தாண்டி வெளியே நின்றவனை பார்த்தார் அவர். மதுவந்தியின் தந்தை நெடுமாறன்.
“உள்ள வாப்பா…” என்று அவர் அழைக்க,
“இட்ஸ் ஓகே…” என்று சொல்லிவிட்டான்.
அவனுக்கு அவர்களை சந்திக்கவும், பார்க்கவும், பேசவும் எதிலும் விருப்பமில்லை. வந்திருப்பதும், அங்கே நிற்பதும் தன் தாய்க்காக மட்டுமே.
அப்படி இருக்க இப்படி இத்தனை வருடம் கழித்து திடீரென அந்த பாசத்தை ஏற்க விரும்பவில்லை.
“பா, எப்படிப்பா இருக்கீங்க?…” என்ற மகளை ஆதுரமாய் அவர் அரவணைத்துக்கொள்ள பேச்சுக்கள் கூட சொல்லாத மகிழ்ச்சியை அவரின் கண்ணீர் சொல்லியது.
“நல்லா இருக்கியா மது?…” என பார்வதி கேட்டதும் அவர் பக்கம் திரும்பியவர்,
“நான் நல்லா இருக்கேன் மதினி, நீங்க எப்படி இருக்கீங்க? எல்லாரும் நல்லா இருக்காங்களா?…” என கேட்டவர்,
“அண்ணன் இல்லையா?…” என்றார் தாயின் கையை பிடித்தபடி.
“அவர் இருந்தா இந்நேரம் இங்க கலவரமே ஆகியிருக்குமே. நல்லதுன்னு நினைச்சுக்கோ மது. அவர் இன்னைக்கு தொழிற்சங்க மீட்டிங்ல இருக்கார். எலெக்ஷன் வருது. அதுக்கு மீட்டிங்…” என்று சொல்லியவர்,
“உன் மகனை உள்ள கூப்பிடேன். மாமாவும் அத்தையும் அங்கயே பார்க்கறாங்க…” என சொல்லவும் தான் விஜய் உள்ளே வராமல் இருப்பதே அவருக்கு விளங்கியது.
திரும்பி பார்த்தவர் மகனை கை நீட்டி அழைக்க அவனோ இருக்கட்டும் என்பதை போல தலையசைத்து மறுக்க உடனே மாதவனை பார்த்தார் மது.
“ஹ்ம்ம், அடுத்து என்னை கூப்பிட உங்க வீட்டுக்காரர் உடனே வருவார். ரொம்ப பன்றீங்கம்மா…” என சொல்லிக்கொண்டே அவன் உள்ளே வந்து மாதவனருகே நின்றுகொண்டான்.
“இங்க பக்கத்துல வா விஜய்…” என மது அழைக்க,
“அப்பாவும் இங்க தானே நிக்கிறாங்க. என்னை மட்டும் ஏன் கூப்பிடறீங்க?…” என விஜய் கேட்டதுமே நெடுமாறன் பதறிவிட்டார்.
மாப்பிள்ளை என்று அழைக்க மனதுக்குள் எதுவோ தடுத்தது. ஆனாலும் பேசாமல் இருக்கமுடியாதே?
“வாங்க தம்பி, வாப்பா…” என்று மருமகனை அழைத்துவிட்டு பெசரின் கையை தள்ளாட்டத்துடன் பிடித்தவர்,
“உன் பேரு விஜய்யா?…” என்று கேட்க,
“ஹ்ம்ம், விஜயநெடுமாறன்…” என்றான் அவன்.
நெடுமாறன் நெகிழ்ந்துபோனார். மனது முழுவதும் மகளின் மாறா அன்பில் நெக்குருகி போக,
“தாயி…” என்று மகளை நெஞ்சோடு அணைத்துக்கொண்டார் அவர்.
“மது, அம்மாடி. உன் புள்ளைய கூப்பிடேன்…” என மரகதம் மதுவந்தியின் தாய் சொல்லவும் விஜயை அருகே அழைக்க அவன் வருவேனா என்று நின்றான்.
“வாம்மா விஜய்…” என மது கெஞ்சல் குரலில் கூப்பிடவும் தான் அருகே வந்ததே.
அவனின் கையை பிடித்தவர் முகத்தை வருட தலையை தடவ என்று ஒளியிழந்த விழிகளால் அவனை அணைத்தார்.
“அம்மாச்சி சொல்லுப்பா. கண்ணு அம்மாச்சி…” என்று கண்ணீர் வழிய அவர் கேட்கவும் விஜய்க்கு அதை கையாளவே முடியவில்லை.
“மாம், ப்ளீஸ்…” என்றான் தாயிடம் இறைஞ்சுதளாக.
சட்டென உத்தரவும் முடியாதபடிக்கு தடதாவும், பாட்டியும் பரிதாபகாம அவனின் முகத்தை பார்த்து இருக்க இரக்கம் கொண்டவன் நெஞ்சும் கசிந்தது.
“பேசு விஜய்…” என மாதவனும் சொல்ல,
“பேசு பேசுன்னா என்ன பேச? எனக்கு தெரியலை. கொஞ்சம் டைம் குடுங்க…” என்று சொல்லிக்கொண்டிருக்க,
“இப்போ கிளம்பிருவோம் விஜய். என்னோட அண்ணன் வரதுக்குள்ள போய்டுவோம். இல்லன்னா தேவையில்லாம பிரச்சனை ஆகும். எனக்கும் என்னோட அம்மாப்பாவை பார்க்கனும்னு தோணுச்சு. அதான் வந்தேன்…”
“ஒஹ் அந்த ஹிட்லர் அண்ணனா?…” என்று எரிச்சலுடன் அவன் சொல்லியவிதம் பார்வதியை கவலையாகக அமைதியாக நின்றார்.
“விஜய்…” என்று மது அழுத்தமாய் சொல்லவும்,
“ஓகே, நீங்க பேசுங்க. நான் எதுவும் சொல்ல போறதில்லை…” என்று கையை கட்டிக்கொண்டு அவன் நிற்க,
“பெரிம்மா…” என்ற குரலுடன் வந்தாள் அவள்.
“அப்புக்குட்டி…” என பார்வதியும் அழைக்க மற்றவர்களும் திரும்பி பார்க்க கடைசி பரிட்சை எழுதிய பள்ளி சீருடையிலேயே கையில் ஒரு கூடையுடன் பவித்ரா.
“உள்ள வாடா…” என அவர் அழைத்ததும் விஜய்க்கு ஒருநிமிடம் ஆனது அவளை ஞாபகத்தில் கொண்டுவர.
“மதினி இந்த பொண்ணு…” என மது கேட்க,
“நம்ம அப்புக்குட்டி. உன் சின்னண்ணன் மக. இன்னைக்கு தான் ப்ளஸ் டூ எக்ஸாம் எழுதி முடிச்சா…” என்று சொல்லவும்,
“நாங்க மருதமலையில பார்த்தோம்….” என மது சொல்லி அவளை கை பிடித்து தன்னருகே நிறுத்திக்கொண்டார்.
“அன்னைக்கு புடவை எல்லாம் கட்டி பெரிய பொண்ணா பிரசாதம்லாம் குடுத்தா…” என்று மது சொல்ல,
“அப்பு உன் அத்தை டா. பேசு…” என்று பார்வதி சொல்லவும் தலையசைப்புடன் பவித்ரா பேச ஆரம்பிக்க போக,
“நான் உன்னோட அத்தை மதுவந்தி. இது என் வீட்டுக்காரர். உன் மாமா. இது விஜய். என்னோட ஒரே பையன்…” என்று அறிமுகப்படுத்த அவளறியாமல் ஆர்வமாய் விஜய்யை பார்த்துவிட்டாள் பவித்ரா.
அன்று கோவிலில் கூட சில நொடிகள் தான் பார்த்திருப்பாள். அதிலும் கவனம் மொத்தம் தன் புடவையிலேயே இருக்க அவனை எங்கே கவனித்தாள்?
இப்போது புது உறவு, அத்தை மகன் என்னும் உரிமையும் தோன்ற அவள் பார்வை விஜய்யின் மேல் அழுத்தமாய் படிய அவளை முறைத்தான் விஜய்.
‘என்ன? திரும்ப அங்க’ என்று கண்களால் மிரட்டி தலையசைக்க இப்போது அவனை ஆராய்ச்சியாய் பார்த்தாள்.
‘இவன் என்ன என்னை கோபமா பார்க்கான்? அப்படி என்ன பெரிய இவன்?’ என்னும் ஆராயும் பார்வையில் கொஞ்சம் அலட்சியமும் பிறக்க அப்படித்தான் பார்ப்பேன்’ என்று இன்னும் பார்க்க விஜய் தான திரும்பிக்கொண்டான் கடுப்புடன்.
அவனுக்கு இந்த சொந்தங்கள் எதுவும் சுத்தமாய் பிடிக்கவில்லை. இத்தனை வருடங்கள் இல்லாது இப்போது என்ன ஏன்னும் வெறுப்பு தான்.
அதனாலேயே மதுவந்தியின் சொந்தங்களை முன்பே வெறுத்திருந்தவன் இப்போது இன்னுமே வெறுத்தான்.
ஆனால் அருகருகே நின்ற விஜய்யும் பவித்ராவும் அந்த பெரியவர்களின் கண்ணை நிறைத்தார்கள்.
அதுவரை தோன்றாத ஒரு எண்ணம், விபரீதமாய் தோன்ற தோன்றியதை செயல்படுத்தும் முன்பே,
“நாங்க கிளம்பறோம்மா. உங்களை பார்த்ததே எங்களுக்கு பெரிய நிம்மதி. அது போதும். இனிமே எப்போ பார்ப்பேனோ தெரியலை. இனி என் மனசு நிம்மதியா இருக்கும்…” என்று கிளம்ப எழுந்தார் மதுவந்தி.
“அம்மாடி…” என மரகதம் மகளின் கையை பிடித்ததுமே அவருக்கு மூச்சு திணறல் ஆரம்பித்தது.
“ம்மா…” என மது பதற என்ன செய்வது என்று புரியவில்லை.
பார்வதி உடனே ஓடி சென்று டாக்டரை அழைத்து வர அவருடன் விஜய்யுமே உடன் சென்று வந்தான்.
வந்தவர் செக்கப் செய்தவர் அவருக்கு ஆக்ஸிசன் பாசக்கை அணிவித்துவிட்டு துரிதமாய் சிகிச்சையை ஆரம்பிக்க மாட்டியதை எடுத்துவிட்டுக்கொண்டே இருந்தார் மரகதம்.
“ம்மா, என்னம்மா இப்படி பன்றீங்க?…” என்று மது அழ அவருடன் பவித்ராவும் பயத்தில் அழுதுகொண்டிருக்க அவளை ஆதரவாய் அணைத்துக்கொண்டார்.
“ப்ச், பாட்டி இப்படி ஆக்ஸிஜன் மாஸ்கை எடுத்தா உங்களை எப்படி காப்பாத்தவாம்?…” என்று விஜய் சத்தம் போட,
“எனக்கப்பரம் என் பொண்ணு இங்க ஒட்டுமில்லாம உறவுமில்லாம போய்டுவாளே?…” என மரகதம் திணறி திணறி சொல்ல,
“அதை நினைச்சு எல்லாம் கவலைப்படாதீங்க. இத்தனை வருஷம் இப்படி தானே இருந்தோம்? விடுங்க…” என்றான்.
அதுவும் கூட அவனறியாமல் வந்துவிட்டது. எப்போதும் போல மனதில்பட்டதை அவன் பேசியிருக்க அதில் மனதளவில் உடலளவில் துவண்டு போனார்கள் பெரியவர்கள் இருவரும்.
“மரகதம்…” என்று நெடுமாறன் மனைவியின் கையை பிடிக்க,
“என்னோட ஆசைங்க, என்னோட ஆசைங்க…” என்றே அதற்கு மேல் பேசமுடியாமல் தவித்தார்.
இங்கே பார்வதி வீட்டிற்கு போன் போன முயற்சிக்க வீட்டு லைன் பிஸி. அருமைநாயகம் போன் அணைத்துவைக்கப்படிருக்க, பழனியப்பனுக்கும், ஜோதிக்கும் அழைப்பு சென்றுகொண்டே தான் இருந்தது.
அங்கே ஒரு பிரச்சனை ஆகியிருக்க யாரும் போனை கவனிக்கவில்லை. எடுக்கவும் இல்லை.
இங்கே மரகதமோ பிடிவாதமாய் இருந்தார் விஜய், பவித்ரா திருமணத்திற்கு. பார்வதி போன் கிடைக்கவில்லை என்று சொல்ல வர அப்போதுதான் அத்தனைபேரின் அதிர்ந்த முகத்தையுமே கவனித்தார்.
“ம்மா, இதுக்கு மேல இங்க ஒருநிமிஷம் கூட இருக்க முடியாது. அவங்க தான் புரியாம பேசறாங்கன்னா நீங்க இன்னும் நின்னுட்டு இருக்கீங்க? என்ன இது? வாங்க போகலாம்…” என்று அவரின் கையை பிடித்து அழைக்க மதுவின் இன்னொரு கை தாயிடம் இருந்தது.
அப்படி பிடித்திருந்தார் விட்டுவிட்டு சென்றுவிடாதே என்பதை போல. மறுக்கவும் முடியாமல், மகனிற்கும் பார்க்கமுடியாமல் பரிதவித்து நின்றவர் மாதவனை பார்த்தார்.
“உன் முடிவு தான் மது எனக்கும் என்னைக்கும்…” என்று மாதவன் சொல்லும் போதே விஜய்க்கு புரிந்துவிட்டது அடுத்து தாய் என்ன சொல்வார் என்று.
“நோ ம்மா…” என்றவன் பவித்ராவை பார்த்தான்.
“பாருங்க, ஸ்கூல் ட்ரெஸ் கூட மாத்தாம இந்த பொண்ணு. ஓஹ் காட், அதுக்கு மேல இந்த குடும்பம் எனக்கு வேண்டவே வேண்டாம்…” என்று விஜய் பேசிக்கொண்டே பார்வதியை பார்க்க அவர் இதையெல்லாம் கேட்டு என்ன நடக்கிறதென அசையாமல் நின்றார்.
“பெரிம்மா…” என்று பார்வதி அவரருகே சென்று நின்றுகொள்ள மரகதம் கை அசைத்து பார்வதியை அருகே அழைத்தார்.
“நான் முடிவு பண்ணிட்டேன்…” என்று சொல்ல சொல்ல பார்வதிக்கு பயம் பிடித்தது.
எந்த நம்பிக்கையில் இவர்கள் முடிவெடுத்தார்கள் என்று நினைத்தபடி மாமியார், மாமனாரை பார்த்தவர்,
“அத்தை எதுவானாலும் உங்க மகன் வந்திரட்டும். இது சரியா வராது…”
“பார்வதி, உனக்கு புரியாதா? அவன் வந்தா எதையும் நடத்த விடமாட்டன. இத்தனை வருஷம் எங்கயும் போகவர விடாம மகளை எங்கேன்னு தேட விடாம சேரவிடாம எங்களை எப்படி வச்சிருந்தான் உனக்கு தெரியுமே?…” என்றார் நெடுமாறன்.
கிட்டத்தட்ட அவர்களுக்கு சிறை போல தான். மதுவந்து சென்று ஓரிரு வருடத்திலேயே மகளை பற்றிய எண்ணங்கள் மேலும் எழ அதை பற்றி பேசும் போதெல்லாம் அருமைநாயகம் அன்று ருத்ரதாண்டவம் தான்.
எங்கும் தனியே செல்லவிட்டதும் இல்லை. யாரிடமும் பேசும் போது மகளை பற்றி தெரிந்துவிடாதா என்று கேட்பதற்கும் தடை. எல்லா இடத்திலும் கூடவே இருந்து கையோடு கூட்டிக்கொண்டு வந்துவிடுவார்.
அப்படி இருக்க இத்தனை வருடத்திற்கு பின்னர் கிடைத்திருக்கும் இந்த உறவை இழக்க விரும்பவில்லை.
“அவர் இதுக்கு சம்மதிக்கவும் மாட்டார். ஏத்துக்கவும் மாட்டார் மாமா. உங்களுக்கு தெரியாதா?…” என பார்வதி கேட்க,
“ஆனா கல்யாணம் ஆகிட்டா கண்டிப்பா ஏத்துக்க தான் வேணும். அதுவும் அப்புக்குட்டியை அவனுக்கு புடிக்குமே. கண்டிப்பா அமகன்னு வரும் போது முதல்ல கோவப்பட்டாலும் ஏத்துக்க தானே செய்வான்…” என்று பேசியவர்,
“உன் அம்மாவோட கடைசி ஆசைன்னு வச்சுக்கோம்மா மது…” என்று பெரியவர்கள் மாற்றி மாற்றி பேசி சம்மதிக்க வைக்க மதுவந்தியும் முடிவெடுத்துவிட்டார்.
“விஜய் அம்மாவுக்காக…” என்ற ஒற்றை வார்த்தை அவனை கட்டி போட்டது.
மது அமைதியாய் இருந்தவரை விஜய் பேசிக்கொண்டிருக்க தனக்காக என்றதும் அவனும் கட்டுப்பட்டு நின்றான்.
“அப்புக்குட்டி…” என்றதும் முன்னே வந்தவள் அதுவரை அவர்கள் பேசிக்கொண்டிருந்ததை எல்லாம் கேட்டுவிட்டு,
“உங்க விருப்பம் தாத்தா…” என்றாள் பவித்ரா.
அதன் பின்னர் ஒரு நிமிடம் கூட தாமதிக்கவில்லை. கூடவே எப்போதும் வைத்திருக்கும் பையில் கோவிலில் கொடுத்திருந்த மஞ்சள்கயிறு, குங்குமம், மஞ்சள்கிழங்கு என்றிருக்க எடுத்து உடனே கிழங்கை கயிற்றில் கட்டி மஞ்சளை நீரில் கரைத்து அதில் இனனுமே பூசியவர் மதுவிடம் நீட்டினார்.
கை நடுங்க அதை வாங்கிக்கொண்டவர் தன் தாயின் முகத்தை பார்த்தார். பேராவலுடன் நடக்கவிருப்பதை முகமும், அகமும் மலர பார்க்க காத்திருந்தார்.
“கட்ட சொல்லும்மா…” என நெடுமாறன் சொல்ல மதுவந்தி மாதவனை பார்க்க அவர் மதுவருகே வந்து நின்றார்,
“எங்களுக்கு சம்மதம் விஜய். எங்க கல்யாணம் தான் யாருமில்லாம நடந்துச்சு. உனக்காவது உன் தாத்தா, பாட்டியோட நாங்களும் இருக்கோமே? அப்பறம் என்ன? கட்டுப்பா…” என்றார்.
வேறு வழியின்றி விஜய்யும் பவித்ரா முன்னே வர அவன் தாலி கட்டு போது பவித்ராவின் பார்வையெல்லாம் பார்வதி மேல் தான்.
இரு பெரியவர்களின் ஆசையினால் அடுத்து நடக்கவிருக்கும் ஆபத்து மகளின் உயிரையும், அவளின் உயிருக்குயிரான குடும்பத்தையும் நிலைகுலையசெய்யவிருப்பதை அறியாமல் போயினர்.