மதுவை காப்பாற்ற முடிந்தளவு முயற்சி செய்கிறோம் என்று ஏதோ சொல்லவேண்டும் என்பதை போலவே சொல்லி செல்ல மொத்தமாய் நொறுங்கி போனான்.
மாதவன் கண் திறக்கவே இல்லை. ஆகாஷும் மயக்கத்தில் தான் இருந்தான். மகனின் அருகாமையை உணர்ந்ததாலோ, இல்லை மகனிடம் பேசாமலே போய்விடுவோமோ என்ற உள்ளுணர்வாலோ மது போராடினார் மகனின் கை பட்டதும் கண்களை திறக்க.
“ம்மா, என்னம்மா இது? இங்க எப்படிம்மா? ம்மா…” என்று அரற்றினான் விஜய்.
அதை தவிர வேறு கேட்கவோ பேசவோ முடியவில்லை அவனால். பிரனேஷ் தான் அவனை பார்த்துக்கொண்டான்.
“பிரனேஷ்…” என்று ஜெகன் அழைத்ததும் திரும்பியவன்,
“ஜெகாண்ணா…” என்றான் அவன்.
ஆகாஷின் அண்ணன் ப்ரென்ட் என்பதாலும், இங்கே எல்லா உதவிகளும் செய்திருக்க, வரும் வழியெல்லாம் அவனிடம் பேசியிருக்க அவனை அழைத்தான்.
“ஹ்ம்ம், நான் தான்ப்பா…” என்றவன் அங்கிருக்கும் நிலையை எடுத்துரைக்க அதற்குள் மதுவந்தி கண்விழிப்பதும் மயங்குவதுமாகவே இருந்தார்.
அதுவரை நடந்ததில் விஜய்க்கு தெரிந்தது இது ஒன்றுதான். மரகதத்தின் இறப்பிற்கு சென்றவர்கள் திரும்பி வரும் வழியில் இப்படி ஆகியிருக்கிறது என்று மட்டுமே அவனுக்கு தெரிந்திருந்தது.
வேறு எதுவும் இன்னும் சொல்லப்படவும் இல்லை. சூழ்நிலை சரியாகட்டும் என்று ஜெகனும் ப்ரனேஷிடம் சொல்லியிருக்க அவர்கள் கவனம் மொத்தமும் விஜய்யிடம்.
இதற்கிடையில் தாங்கள் இல்லாத நேரம் மதுவந்தி வந்த பொழுது அங்கே என்ன நடந்தது என்று தன் தந்தைக்கு அழைத்து விலாவரியாக தெரிந்துகொண்டான் ஜெகன்.
அத்தனை கோபம் அருமைநாயகத்தின் மேல். இப்போது அதை காட்ட நேரமில்லை என்று விஜய்யின் மேல் கவனம் செலுத்தினான்.
பார்க்கவே பரிதாபமாக இருந்தது விஜய்யின் இந்த நிலை. சிறிது நேரம் மாதவனிடமும், சிறிது நேரம் மதுவந்தியிடமும், சிறிதுநேரம் ஆகாஷிடமும் என்று மாறி மாறி அலைந்துகொண்டே இருந்தான்.
அங்கிருந்த மருத்துவர்கள் எந்நேரமும் அங்கிருக்க கூடாதென்று அனுமதிக்க மறுக்க ஜெகன் தனக்கு தெரிந்தவர்களை கொண்டு பேசி சம்மதிக்கவைத்தான்.
உண்ணாமல், உறங்காமல் இப்படியே இருக்க மறுநாள் காலை மதுவந்தி முழுவதுமாக கண்விழித்தார்.
“விஜய், அம்மா கண்ணு முழிச்சுட்டாங்கடா…” என்று பிரனேஷ் வந்து சொல்லவுமே மாதவனருகே இருந்தவன் எழுந்து தாயிருக்கும் அறைக்குள் சென்றான்.
“ம்மா…” என்று தாயை தேடும் கன்றாக அவன் சென்றவிதம் பார்த்தவர்களை உருக்குலைத்தது.
“வி வ்வ்வ்வி…” என்றதை தவிர மதுவந்தியால் ஒன்றும் பேசமுடியவில்லை.
அவருக்கு கண்ணீர் முட்டியது. மகனை விட்டு சென்றுவிடுவோமோ என்னும் பயத்தில் இதயத்துடிப்பும் வேறு தாறுமாறாக ஓடியது.
‘என்னோட அம்மாவை பார்க்கறேன்னு சொல்லி போய் இப்போ என் பிள்ளைக்கு நான் இல்லாம போக போறேனே’ என மனதிற்குள்ளேயே அழுதவரின் கண்ணீர் சூடாக வெளியேற,
“ம்மா அழாதீங்க. என்னால முடியலை. எப்பவும் அம்மா அழக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல. அழாதீங்க, ப்ளீஸ். நான் உடைஞ்சிருவேன்ம்மா. உங்க தைரியம் தான் என் தைரியம்…” என்று சொல்ல பார்வையை சுழற்றினார் மது.
அவர் மாதவனையும், ஆகாஷையும் தேடுகிறார் என்று விஜய்க்கு நன்றாகவே புரிய அழுகை பொங்கியது. இதழ்கடித்து அடக்கியவன்,
“அப்பாவுக்கு ஒண்ணுமே இல்லை. தலையில லேசா காயம் தான். அந்த பக்கத்து ரூம்ல தான் இருக்கார். இப்ப கொஞ்ச நேரம் முன்னாடி உங்களை வந்து பார்த்துட்டு தான் போனார். இப்ப ரெஸ்ட் எடுக்கனும்ன்னு இன்ஜெக்ஷன் போட்டுவிட்டிருக்காங்க. தூங்கறார்…” என்றவன்,
“ஆமா தானேடா பிரனேஷ்…” என்று நண்பனை துணைக்கழைத்தவன் ஜெகனை பார்த்ததும்,
“ம்மா, இவர் தான் உங்களுக்கு ப்ளட் குடுத்திருக்கார். ஜெகாண்ணா…” என்றவன்,
“அண்ணா என்னோட அம்மா. மதும்மா…” என்று அவனின் கையை பிடித்து முன்னே நிறுத்தி மதுவந்தியை அறிமுகப்படுத்த,
“விஜய் ஒன்னும் இல்லடா…” என்று அவனின் தோளை தட்டிக்கொடுத்த ஜெகன் கண்ணில் நீர்படலம்.
“ம்மா, பார்த்தீங்களா ஒன்னும் இல்லை. எல்லாம் ஓகே. எல்லாமே நார்மல். ரெண்டு நாள் ஆனதும் நாம கிளம்பிருவோம். உங்களுக்கு பிடிச்ச மாதிரி சென்னை வீட்டுல லாஸ்ட் வீக் இருந்தோம்ல அப்படி எப்பவும் அப்படி இருப்போம்…” என்று பேச பேச மதுவால் பதில் சொல்லமுடியவில்லை.
எதுவோ சொல்ல முயன்று தோற்றவராக மீண்டும் கண்ணீர் வடிக்க திரும்ப திரும்ப அதனை காணமுடியாமல் தவித்தவன்,
“ம்மா அழாதீங்க. நீங்க என்ன வேணும்னாலும் சொல்லுங்க நான் கேட்பேன்….” என்று அவரின் சின்ன சின்ன ஆசைகள் ஒவ்வொன்றாய் அவரிடம் இதுவா என கேட்க ஆரம்பிக்கும் போதே ஜெகனை அழைத்துவிட்டார் மருத்துவர்.
மாதவனுக்கான முக்கியமான மருந்து அங்கே இல்லாததால் அவர் சொல்லிய இடத்திற்கு சென்று வாங்கி வரும்படி ஜெகனை அனுப்ப ப்ரனேஷிடம் சொல்லிவிட்டு கிளம்பினான் ஜெகன்.
அவனின் நண்பர்களும் அப்போதுதான் வீடு சென்றிருந்ததால் தானே கிளம்பிவிட்டான்.
இங்கே மதுவிடம் மாற்றி மாற்றி கேட்க கேட்க அவர் கண்ணை மூடி சிமிட்டி மகனின் உருவத்தையும் தவிப்பையும் தாங்கவியலாது துடித்தார். கடைசியாக,
“வேணும்னா ஒன்னு பண்ணவா? அப்போவாச்சும் அழாம இருப்பீங்களா? அந்த பொண்ணு. ஐயோ பேர் என்ன? எனக்கு ஞாபகம் வரலையே? என்னவோ சொன்னீங்க. என்ன அது?…” என தலையை தட்டி யோசித்தவன்,
“ஹாங், அப்பு அப்பு தானே அன்னைக்கு சொன்னீங்க? கூட்டிட்டு வரட்டா? கண்டிப்பா அந்த பொண்ணை உங்களுக்காக பார்த்துக்கறேன். உங்க கவலை அதானே? அவளை கூட்டிட்டு வரேன். நாம எல்லாரும் ஒண்ணா இருப்போம். போதுமா?…” என்று கேட்கும் போதே மதுவின் நெஞ்சம் விம்மியது.
‘தப்பு பண்ணிட்டேனே விஜய். அம்மா பாவிடா. எனக்காக எனக்காகன்னே இத்தனை வருஷம் இருந்த பிள்ளையை விட்டுட்டு, உதறின சொந்தத்தை தேடி போய் இப்ப உன்னையும் பிரிய போறேனே?’ என நினைக்கும் போதே கண்ணீர் இன்னும் அதிகமாக வேண்டாம் என்று தலை அசைந்தது.
அவனோ தலையசைக்கவும் மதுவும் அதைத்தான் விரும்புகிறாரோ என்று நினைத்தவன் தாய் ஆசைப்படுவதாக எண்ணி,
“இப்ப இப்ப கூட்டிட்டு வரேன். ம்மா. ஒண்ணுமில்லை. இங்க இருந்து ரெண்டுமணி நேரம். கூட்டிட்டு வரேன். அப்போவாச்சும் அழாம சீக்கிரம் குணமாகி எனக்காக வந்துரனும்…” எனும் போதே மது மீண்டும் மயங்கியிருந்தார்.
“பிரனேஷ் அம்மா கண்ணு முழிக்கிறதுக்குள்ள நான் போய் கூட்டிட்டு வரேன்டா. அவங்க அடுத்து பார்க்கும் போது எங்க ரெண்டுபேரையும் ஒண்ணா தான் பார்க்கனும்…” என்று சொல்ல,
“தனியாவா போற?…” என்று பயந்தான் பிரனேஷ்.
மேலோட்டமாக ஜெகன் ப்ரனேஷிடம் சொல்லியிருந்தான் வந்த இடத்தில் என்ன நடந்தது என்று.
அதனைகொண்டே விஜய்யை அனுப்ப யோசனையாக இருக்க ஜெகன் வந்துவிடுவானே என்று ஆகாஷின் குடும்பத்தினரிடம் ஒரு வார்த்தை பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு விஜய்யுடன் கிளம்பினான்.
விஜய் அங்கே செல்லும் போது இன்னும் சொந்தங்கள் எல்லோருமே இருந்தார்கள். ஜெகனின் வீட்டினர் கிளம்பிய பின்னர் ஒருவரும் அருமைநாயகத்தை எதிர்த்து பேசவில்லை.
சாங்கியம் எதுவும் முடியாமல் கிளம்ப முடியாதே என்று இருந்துகொள்ள விஜய் வரும் பொழுது ஆண்கள் எல்லோரும் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள்.
வெளியே பந்தலின் கீழே கேட்டின் பக்கவாட்டில் டேபிள் போடப்பட்டிருக்க அங்கே சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள்.
விறுவிறுவென வீட்டிற்கு வந்தவன் யாரையும் கவனியாமல் பதட்டத்தில் பவித்ராவை தேடினான் பார்வையால். சாப்பிட்டுக்கொண்டு இருந்த அருமைநாயகம் அவனை பார்த்ததும் கையிலிருந்த சோற்றை உதறிக்கொண்டு எழுந்து வந்தார்.
“எங்கடா வந்த ராஸ்கல்?…” என்று அவனின் சட்டையை பிடித்ததும் கொஞ்சமும் யோசிக்காமல் அவரின் காலை பிடித்தான் விஜய்.
“என் மேல உங்களுக்கு கோவம் இருக்கும்ன்னு தெரியும். ஆனா இப்போ அத காட்ட வேண்டாம். உங்க கால்ல விழுந்து கேட்கறேன் ஸார். எங்கம்மா ரொம்ப ரொம்ப சீரியஸா இருக்காங்க. ப்ளீஸ்…” என்றவன்,
“உங்க பொண்ணை அனுப்புங்க. அவங்க பார்க்கனும்னு ஆசைப்படறாங்க. ஒருதடவை அவங்க பார்த்துட்டா கண்டிப்பா குணமாகிருவாங்க. அப்பறம் என்னை என்ன வேணா செய்ங்க இங்கயே இருக்கேன்…” என்று கெஞ்ச அதில் மிதமிஞ்சிய கர்வம் உண்டானது அருமைநாயகத்திற்கு.
தன்னிடம் அன்று அகம்பாவமாக பேசியவன் இன்று தன் காலடியில் என்றதுமே அவரின் ஆணவம் உச்சத்திற்கு செல்ல கொஞ்சமும் இரக்கமின்றி அவனை எட்டி உதைத்தார்.
“அண்ணே…” என்ற பழனியை ஒற்றை முறைப்பில் அடக்கியவர்,
“இதுதான்டா உன்னோட நிலைமை. இங்க தான் நீ இருக்கனும். உனக்கு என் பொண்ணு கேட்குதோ? அன்னைக்கு என்னவோ பேசின? எங்க இப்ப பேசேன் அந்த திமிரை காட்டு பார்ப்போம்…” என்று சொல்ல,
“என்ன ஸார் நீங்க? அவன் எப்படி ஒரு சூழ்நிலையில உங்கள கெஞ்சறான். நீங்க என்னன்னா மனுஷத்தன்மை இல்லாம நடந்துக்கறீங்க?…” என்று விஜய்யை பிரனேஷ் தூக்கினான்.
“விடுடா பிரனேஷ். எனக்கு இதை விட எங்கம்மா முக்கியம்….” என்ற விஜய் அத்தனையையும் துடைத்துவிட்டு கண்ணீருடன் மன்றாடினான்.
“சத்தியமா எந்த உறவும் வேண்டாம்னு தான் நானும் நினைக்கேன். இப்பவும் உறவுக்காக உங்க பொண்ணை கூப்பிடலை. எங்கம்மா உயிரை காப்பாத்தத்தான். நானே கொண்டுவந்து திரும்ப விட்டுடறேன். இல்லன்னா நீங்க யாராச்சும் கூட வாங்க…” என்றான்.
அங்கிருந்த ஒவ்வொருத்தரையும் கையெடுத்து கும்பிட்டவன் அங்கே வீட்டு வாசலில் நின்ற பவித்ராவை பார்த்ததுமே அவளிடம் பேச வேகமாய் முன்னேறினான் விஜய்.
“நில்லுடா. எவளோ பொழைக்க எல்லாம் என் வீட்டு பொண்ணை அனுப்ப முடியாது. சாவட்டும். வெளில போடா…” என்று கீழே தள்ள விஜய் விழுந்தாலும் எழுந்து நின்றவன் அந்த அவமானத்தை எல்லாம் தன் தாயிற்காக தாங்கினான்.
“இங்க பாரும்மா உன் பேர் கூட எனக்கு தெரியாது. உன் பேர் என்னம்மா?…” என்றான் அவன்.
பவித்ரா உடனே பார்வதியின் பின்னால் ஒடுங்கினாள். வசந்தியின் பேச்சுக்களும், அருமைநாயகத்தின் வசைகளும் அவளை ஒதுக்கியிருந்தது. அவள் வயதிற்கு அது அவளுக்கு மிக மிக அதிகம்.
“உன்னை சத்தியமா எந்தவிதத்துலையும் நான் தொந்தரவு பண்ணமாட்டேன். இந்த ஒருதடவை ஒரு மனிதாபிமானத்துல வந்து பார்த்துட்டு வந்துரு. இந்த உறவு, இந்த ஊர் இனி எப்பவும் எங்களுக்கு வேண்டாம். இனி இந்தபக்கம் வரவே மாட்டோம்….” என்று அவளையும் கையெடுத்து கும்பிட்டு இறைஞ்ச,
“ப்ளீஸ் போய்டுங்க. வெளில போங்க. என்னோட பெரியப்பா பேச்சை மீறி நான் வரமாட்டேன். அதான் பெரியப்பாவே சொல்லிட்டாங்களே. போங்க போங்க…” என்று பவித்ரா கத்தி சொல்ல,
“அவன்கிட்ட உனக்கென்னடி பேச்சு?…” என்று அவளின் முதுகில் அடித்த வசந்தி அவளை உள்ளே விரட்டினார்.
“ஸார் ஸார்…” என்று மீண்டும் அருமைநாயகம், பழனியப்பனை பார்த்து அவன் நின்றான்.
“என்னங்க பாவங்க இந்த பிள்ளை. தாய்க்கு தவிச்சு நிக்குது. கொஞ்சமாச்சும் இரக்கம் காட்டுங்க. நான் கூட கூட்டிட்டு போய்ட்டு வரேனே?…” என பார்வதி சொல்ல,
“அடி சக்கைன்னானா. பார்த்தீங்களா மாமா. நினைப்பு எங்க இருந்திருக்குதுன்னு. இங்க என்ன நடந்திருக்குது, அதப்பத்தி எல்லாம் கவலை இல்லாம அக்காவுக்கு அவனோட கொண்டுபோய் இவள சேர்த்துடனும்…” என்று கொந்தளித்தார் வசந்தி.
“இல்லை, இது எதுவும்…” என்று விஜய் அதை மறுத்து கெஞ்சும் போதே ப்ரனேஷிற்கு போன் வந்தது ஜெகனிடமிருந்து.
“எங்கடா போனீங்க? இங்க அம்மாவுக்கு சீரியஸ் ஆகிடுச்சு…” என்று அவன் கத்த,
“என்ன சொல்றீங்க?…” என்ற பிரனேஷ்,
“விஜய், வாடா போகலாம். இவங்கலாம் மிருகங்கடா. இங்க மனிதாபிமானத்துக்கு கொஞ்சமும் இடமில்லாதவனுங்க…” என்று சொல்ல,
“இல்லடா அம்மா…”
“அம்மாவுக்கு தான். அம்மாக்கு முடியலையாம்…” என்று பிரனேஷ் விஜய்யை கூட்டிக்கொண்டு செல்ல அருமைநாயகம் கல் போல நின்றார்.
அங்கிருந்தவர்கள் அனைவருக்குமே அவரின் மேல் அத்தனை கோபம் இருந்தும் யாரும் மதுவை பார்க்கவேண்டும் என்று நினைக்கவில்லை. நமக்கெதுக்கு வம்பு? என்றுதான் ஒதுங்கி நின்றனர்.
மதுவிற்கு ஆக்ஸிடென்ட் ஆனதும், ஜெகன் உதவுவதும் ஏற்கனவே தெரிந்திருந்தது அவர்களுக்கு.
ஆனாலும் ஜெகனிடம் செய்யாதே என்று சொல்ல முடியாதே? பல்லை கடித்துக்கொண்டு ரஞ்சனியிடம் தான் கோபத்தை காட்டினார்.
விஜய் கிளம்பும் பொழுதே பாதி வழியில் ஜெகன் கால் செய்ய வந்துகொண்டிருப்பதாக சொல்லிய பிரனேஷ் காரை அத்தனை வேகத்துடன் ஓட்டினான்.
எத்தனை முயன்றும் அவர்கள் ஹாஸ்பிட்டல் வந்து சேர்ந்த நேரம் மதுவை விஜய் காண்பதற்குள் அவர் உயிர் பிரிந்திருந்தது.
“விஜய்…” என்று அவன் வந்ததும் கட்டிக்கொண்ட ஜெகன்,
“ஏன்டா அங்க போன? அவனுங்க மனுஷங்க இல்லடா. நீ ஏன்டா போன? அம்மா உன்னை எத்தனை தேடினாங்க? இப்படி கடைசி நேரம் பார்க்கமுடியாம பண்ணிட்டியேடா….” என்று ஜெகன் கதறி அழ பிரனேஷ் அங்கு நடந்தவற்றை அழுதுகொண்டே சொல்ல,
“அவனுங்களை நான் சும்மா விடமாட்டேன்டா. விடமாட்டேன்…” என்று ஜெகனும் கொந்தளிக்க விஜய் மதுவின் முகத்தை பார்த்தபடி அமர்ந்துவிட்டான்.
மனது அம்மா அம்மா என்று அரற்ற எழுந்து என்னவென்று கேட்பதற்கு தான் அவர் இல்லை.