அவரின் முகத்தில் கண்ணீர் கறை வழிந்து காய்ந்துபோய் இருந்தது. அது மகனுக்கான தேடலும், கணவரை பிரிந்துசெல்லும் வேதனையும் என்று அப்போது அவனால் உணரமுடிந்தது.
“மாறா, உங்கப்பா பேருன்னு ஞாபகத்துக்குன்னு சொல்லி சொல்லி கூப்பிடுவீங்க. அப்போலாம் வேணும்னே வேண்டாம்னு சொல்லுவேன். இப்போ கூப்பிடுங்கம்மா. கேட்கனும் போல இருக்கு. ம்மா, ம்மா…” என்று மெல்லிய குரலில் புலம்பிக்கொண்டே அவரின் கையை எடுத்து தன் கழுத்தை சுற்றி போட்டு அவரருகே தலை சாய்த்துக்கொண்டான்.
அதை காண ஜெகனுக்கும், ப்ரனேஷிற்கும் கொஞ்சமும் திராணி இல்லை. மாதவனும் உணர்வின்றி இருக்க இங்கே தேற்றுவார் அற்ற பிள்ளையாய் விஜய்.
ஒருவழியாய் அவனை தேற்றி உடனே மதுவின் உடலை கேரளாவிற்கு எடுத்து செல்ல ஏற்பாடாக அதனோடே அங்குள்ள மருத்துவமனைக்கு மாற்ற மாதவனுக்கும், ஆகாஷிற்கும் கூட ஏற்பாடு செய்யப்பட்டது.
மாதவனின் உடலில் முன்னேற்றம் இருந்தாலும், உயிருக்கு ஆபத்தில்லை என்றாலும் அவரின் கழுத்து நரம்புகளின் சேதத்தினால் தலை நிற்காமல் போனது.
“ஆக்ஸிடென்ட்ல கழுத்து நரம்பு நிறைய கிராஷ் ஆகிடுச்சு. அதனால தலை ஸ்டேபிளா நிக்காது. முதல்ல இவர் குணமாகட்டும். அடுத்து இதை கவனிப்போம்…” என்று சொல்லிவிட்டார்கள்.
மனதளவில் இறுகி போனான் விஜய். தந்தையையாவது காப்பாற்ற வேண்டும் என்று தன்னையே மீட்டெடுத்துக்கொண்டான். மதுவின் மரணம் அவனின் மொத்த சந்தோஷத்தையும் அவருடனே கொண்டு சென்றிருந்தது.
கேரளாவில் ஒரு புகழ்பெற்ற ஆயுர்வேத மருத்துவமனையுடன் கூடிய ஆசிரமத்தில் மாதவனை சேர்த்தவன் மதுவின் இறுதிசடங்கை செய்துமுடித்தான்.
அவனுக்கு துணையாக ஜெகனும், அவனின் தந்தையும் கேரளா வந்திருக்க இந்த விஷயத்தை அருமைநாயகம் குடும்பத்திற்கு கூட யாரும் சொல்லவில்லை.
மதுவந்தியின் இறப்பு மட்டுமே அவர்களுக்கு தெரிந்திருக்க மற்ற எவையும் எந்தவிதத்திலும் தெரிய கூடாது என்று விஜய் சொல்லியிருந்தான். அவர்களுக்கு எதுவும் தெரிவதில் அவனுக்கு விருப்பமில்லை
இனி இவர்களும் சம்மந்தமில்லை என்று அவன் ஜெகனிடம் கூட ஒதுங்கினான். முதலில் சரியாக தெரியவில்லை என்றாலும் ஜெகனின் அப்பா வந்து சென்றதும் யார் என்ன என்று புரிய மௌனமானான்.
“டேய் அவனுங்க வேண்டாம்ன்னா இருந்துக்கோ. தாராளமா இப்படியே இரு. நானும் நீ எங்க இருக்கன்னு எதுவும் சொல்லமாட்டேன். ஆனா என்னை விலக்கி வைக்க முடியாது. இப்ப உனக்கு நான் ரத்த சொந்தமும் கூட…” என்றவன் விஜய் நிமிர்ந்து பார்த்ததும்,
“என்ன பார்க்கற? மதும்மா உடம்புல என்னோட ரத்தமும் தான் இருந்துச்சு. அப்போ நான் யார்டா உனக்கு? போற நேரம் உன்னை என்னோட ரத்த சொந்தமா குடுத்திருக்காங்க. இதை நீயே வேண்டாம்னு சொல்லமுடியாது ஆமா. நான் வருவேன் என் தம்பியை பார்க்க. உன்னால என்னடா பண்ண முடியும்?…”
ஜெகன் பேசியதும் தன்னுணர்வுகளை அடக்க முயன்ற விஜய் என்ன முயன்றும் முடியாமல் போக,
“ஜெகாண்ணா…” என்று அவனை அணைத்துக்கொண்டான்.
“அண்ணன் தான்டா. எப்பவும் உனக்கு எல்லாவிதத்துலயும் கூடவே இருப்பேன். நீ மறுத்தாலும். என்னை யார்டா கேட்பா?…” என்று அவனை அணைத்துக்கொண்டவன் விஜய்யை தேற்றினான்.
இரண்டு நாட்கள் கூடவே இருந்து ஓரளவு அவன் தேறியதும் எப்போது சென்னை செல்கிறான் என்ற விவரங்கள் கேட்டுவிட்டு தான் கிளம்பினான் அவன்.
அங்கிருந்து ப்ரனேஷிடம் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு நேராக பழனி வந்த ஜெகன் அருமைநாயகத்தின் வீட்டிற்கு வந்தான்.
“ரஞ்சனி கிளம்பு..” என்றான் வந்ததும் வராததுமாக.
“என்ன மாப்பிள்ளை? அதுக்குள்ளே கூப்பிடறீங்க? இன்னும் பதினாறாம் நாள் விசேஷம் நடத்தலையே?…” என்று அருமைநாயகம் சொல்ல,
“அது நடத்தற அன்னைக்கு கூட்டிட்டு வரேன். இப்ப நான் என் பொண்டாட்டியை கூட்டிட்டு போறேன். ஏன் போக கூடாதோ?…” என்றவன்,
“ரஞ்சனி வர ஐடியா இருக்கா? இல்லை இங்கயே இருக்க போறியா?…” என ஜெகன் போட்ட சத்தத்தில் எழுந்து பிள்ளையை கூட்டிக்கொண்டு கிளம்பிவிட்டாள் ரஞ்சனி.
அருமைநாயகத்திற்கு ஒன்றும் புரியவில்லை. ஜெகனின் தந்தை சண்டை போட்டு சென்றதிலிருந்து இப்படித்தான் இருக்கிறான் என்று நினைத்துக்கொண்டார்.
பதினாறாம் விசேஷத்தில் வெளியூர் சென்றிருந்த சொந்தங்கள் முதற்கொண்டு ஊரே கூடி இருந்தது அவரின் வீட்டில்.
மதிய உணவிற்கு சமையல் ஆகிக்கொண்டு இருக்க காலையில் நடக்கவேண்டிய சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்திருந்தது.
பந்தலின் கீழே சேரில் அங்காங்கே அமர்ந்து அத்தனைபேரும் பேசிகொண்டிருக்க சீறிக்கொண்டு வந்து நின்றது விஜய்யின் கார்.
அமர்ந்திருந்தவர்களுக்கு குடிக்க குளிர்பானத்தை தட்டில் வைத்து அனைவருக்கும் தந்துகொண்டிருந்தாள் பவித்ரா. கார் வந்த வேகத்தில் மிரண்டு பார்த்தாள் அதை.
அன்று காலை தான் ரஞ்சனியுடன் வந்த ஜெகன் சடங்கு நடக்கும் வரை இருந்துவிட்டு வேலை இருக்கிறது என்று மதுரை கிளம்பி இருந்தான்.
அவனிடமும் விஜய் தான் வருவதை பற்றி ஒன்றும் சொல்லவில்லை. இப்படி திடுமென வந்து நின்றவன் வந்த வேகத்தில் பவித்ராவின் கையில் இருந்த தட்டை தட்டிவிட்டுவிட்டு அவளை இழுத்துக்கொண்டு நடுநாயகமாக நின்றான்.
“டேய் என்னடா பன்ற?…” என்ற கூச்சலுடன் அருமைநாயகம் வர,
“எவனாச்சும் பக்கத்துல வந்தீங்க இவ கழுத்தை திருகி போட்டுட்டு போய்க்கிட்டே இருப்பேன்…” என்று சொல்லவும் அத்தனை பேரும் பின்னால் நகர்ந்தார்கள்.
“அன்னைக்கு அத்தனைபேரும் அந்தாள் பின்னாடி தான வாய மூடிட்டு நின்னீங்க. இப்பவும் அவனவன் அங்கங்க நிக்கனும். எவனாச்சும் முன்னாடி வந்தீங்க?…” என்றவன் பவித்ராவின் கையை பின்னால் இழுக்க ஆவென்று கத்தினாள் அவள் சுளீரென்ற வலியில்.
“வலிக்குதாமா உனக்கு? வலிக்கட்டும். எத்தனை கெஞ்சினேன்? கொஞ்சம் கூட மனசாட்சின்னு இல்லைல உனக்கும்? எங்கம்மா உனக்காக எவ்வளவு யோசிச்சிருப்பாங்க? உன்னை போய் என்னோட சேர்க்கனும்னு நினைச்சாங்க பாரு. அதை சொல்லனும்…” என்றவன்,
“அப்பறம் என்ன மாமா, ரொம்ப சந்தோஷம் போல? இவன் இனி வரமாட்டான். நிம்மதியா இருக்கலாம்ன்னு நினைச்சுட்டியோ?…” என நக்கலாய் விஜய் பேசினாலும் அதில் அருமைநாயகத்தின் மீதான பழிவெறியே மிதமிஞ்சி இருந்தது.
“டேய் யாருக்கு யார்டா மாமா? வாயை கிழிச்சிருவேன்…” என்று அருமைநாயகம் துள்ள,
“உன்னை கிழிக்கத்தான இப்ப நான் வந்திருக்கேன்…” என்றவன்,
“வீட்டுக்கு துக்கம் விசாரிக்க வந்தவங்களை அடிச்சு விரட்டிருக்கியே உன்னை எல்லாம்…” என்று பல்லை கடித்தவன் உடனே வன்மத்துடன் சிரித்தான்.
“அன்னைக்கு வந்து கெஞ்சிட்டு போன விஜய்க்கு நினைச்சியோ? உன்னை கழுத்துல கையை வச்சு சுவத்துல ஏத்தின அன்னைக்கே தெரிஞ்சிருக்க வேண்டாம் என்னை பத்தி? எங்கம்மாவுக்காக கால்லயும் விழுவேன். கழுத்தையும் திருகுவேன்டா. யாரா இருந்தா என்ன?…”
என்று பவித்ராவின் கழுத்தில் அழுத்தம் கொடுத்து அங்கிருந்தவர்களை ஆத்திரம் மிகுந்த பார்வை பார்த்தான்.
முதல்நாள் தான் ஆகாஷினால் சரியாகவே பேச முடிந்தது. பற்கள் எல்லாம் நொருங்கியிருந்ததில் சரி செய்யவே இத்தனை நாட்கள் ஆகியிருந்தது.
அதுவரை விஜய்க்கும் எதுவும் தெரியாமல் இருக்க ஆகாஷின் தாய் மூலமாக நடந்தவை எல்லாம் விஜய்யை வந்தடைந்தது. வந்தவேகத்தில் உடனே கிளம்பியும்விட்டான்.
இப்போது அருமைநாயகத்தை பார்க்க பார்க்க உடலில் உள்ள ரத்தம் மொத்தமும் கொதித்துக்கொண்டு வந்தது.
இன்று தாயும் இன்றி, தந்தை இருந்தும் இன்றி இருக்கும் தன்னிலைக்கு காரணமானவர்கள் அல்லவா? அன்று மட்டும் அப்படி அடித்திருக்காவிட்டால் அந்த விபத்தே இல்லையே. தானும் எல்லோருடனும் இருந்திருப்போமே.
மனக்கண்ணில் குடும்பத்துடன் இருந்தவை எல்லாம் ஞாபகம் வந்து துக்கம் தொண்டையை அடைத்தது. முயன்று தன்னை சரிசெய்துகொண்டான்.
குடும்பத்தின் மீதான பாசமும், அன்பும் எல்லாம் இப்போது அருமைநாயகத்தின் குடும்பத்தின் மீதான வன்மமும், வெறியுமாய் உருவெடுத்திருந்தது.
“உன்கிட்ட எல்லாம் உன்னை மாதிரிதான் டீல் பண்ணனும். என்ன சொன்ன? நான் உன் வீட்டுக்கு மருமகனா வர முடியாதா? ஆனா இனி நான் தான் உன் வீட்டு மருமகன். அந்த வீட்டுக்குள்ளயே நுழையாம ஆனா உன் குடும்பத்துக்குள்ள, இவளுக்கு புருஷனா உனக்கு மருமகனா எப்பவும் நான் மட்டும் தான்…” என்று சொல்லிய விஜய் பவித்ராவை பார்க்க அவள் மிரண்டாள்.
“டேய்…” என்று அருமைநாயகம் என்னவென்று பார்க்கும் முன்னர் பவித்ராவை சுழற்றி தன் பக்கம் திருப்பியவனின் இதழ்கள் அவளிடம் ஆவேசத்துடன் பொருந்த சுற்றியிருந்தவர்கள் அத்தனைபேரும் வாயில் கைவைத்தனர்.
“ஐயோ ஐயோ, அடியே அப்பு. அவனை தள்ளிவிட்டுட்டு இங்கிட்டு வாடி. அப்பு…” என்று வசந்தி வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொள்ள இங்கே பவித்ரா விஜய்யின் இரும்பு பிடியில் வலியில் துவண்டிருந்தாள்.
தன் கோபத்தின் ஒருபகுதியை மொத்தமுமாக அவளிடம் கொட்டி தீர்த்தவன் தொய்ந்துபோய் இருந்தவளை கையில் பிடித்துக்கொண்டே,
“இந்த நிமிஷம் இவளை என்னால தூக்கிட்டு போக முடியாதா? ஆனா அதை நான் செய்யமாட்டேன். இங்க தான் இவ இருக்கனும். என் பொண்டாட்டியா? எங்கயும் எப்பவும் என்னோட பொண்டாட்டியா இருக்கனும்…” என்றவன்,
“என்ன சொன்ன? எந்த காலத்துலயும் அந்த வீட்டுக்குள்ள என்னால வரமுடியாதா? வரவே வேண்டாம். வரவும் மாட்டேன். ஆனா வராமலே வெளில இருந்து உன் கண்ணுல விரலைவிட்டு ஆட்டலை நான் மதுவந்தி மகன் இல்லய்யா…” என்று சொல்ல,
“என் குடும்பத்தை உங்கம்மா நாசம் பண்ணினா. இப்ப அவனுக்கு தப்பாம பிறந்த நீ பண்ணிட்ட? நல்லா இருப்பியா?…” என்று அருமைநாயகம் கத்தினார்.
“என்னோட அம்மாவை அன்னைக்கு என்ன பேசின நீ? இந்த வீட்டுக்கு சம்பந்தியாக என்ன தகுதின்னா கேட்ட? இப்ப என்ன சொல்ற? உங்களுக்கு தகுதி இருக்கா இப்போ? ஆனா நீ வேண்டாம்னு உதறினாலும் ஊரே சொல்லும் மதுவந்தி மருமக தான் இந்த பொண்ணுன்னு…” என்றவன்,
“நாசம் பன்றது என்னன்னு இப்பத்தான கத்துக்க ஆரம்பிச்சிருக்கேன். உனக்கு ஈக்வலா பண்ண வேண்டாமா. பண்ணுவேன். அனுபவி. அப்பறம் இவளுக்கு மாப்பிள்ளை பார்ப்பேன், வேற கல்யாணம் பண்ணுவேன்னு எதாச்சும் கிறுக்குத்தனம் பண்ணாத? அசிங்கப்பட்டு போவ…”
எச்சரிக்கையுடன் சொல்லியவன் பவித்ராவை வெறுமையுடன் பார்த்தான். அவளின் கழுத்திலும், இடையிலும் பதிந்திருந்த தன் கையை தளர்த்த அப்படியே மடங்கி அமர்ந்தாள் அவள்.
அவள் இதழ்களில் விஜய் கட்டிய கடுமையின் காரணமாக காயம் பூத்திருக்க ஒருவரின் முகத்தையும் நிமிர்ந்து பார்க்கமுடியாமல் பயத்தில் அவ்விடத்திலேயே அமர்ந்துவிட்டாள்.
“இனி என்னை மறக்கவே கூடாது இந்த குடும்பத்துல இருக்கற ஒருத்தரும். எப்ப வருவேன் என்னன்னு தெரியாம நினைச்சுட்டே இருங்க. யோவ் எரும உன்னால என்ன பண்ணனுமோ பண்ணி பாரு. இனி நான் என்ன பன்றேன்றதையும் பாரு…” என்றவான்,
“எனக்கிருக்கற வெறிக்கு உன்னை என்னலாமோ பண்ணனும்னு தோணுதுய்யா. ஆனா உடனே அனுபவிக்க கூடாது பாரு. பயந்து சாவனும் நீ. எங்கயும் எதுவும் செய்யமுடியாதபடிக்கு தவிக்கனும் நீ. அதுக்கு என்ன எல்லாம் செய்யனுமோ நான் செய்வேன்…” என்று சொல்லிவிட்டு அவன் கிளம்பிவிட்டான்.
அதனோடு இல்லாமல் வக்கீல் நோட்டீஸ் வேறு அனுப்பியிருந்தான் அந்த குடும்பத்தின் மேல்.
அந்த குடும்பத்தின் பூர்வீக சொத்துக்கள் எதையும் விற்கவோ அடகுவைக்கவோ முயன்றால் பெரும் பிரச்சனையை சந்திக்க கூடும் என்றும், அதில் தனது தாய்க்கும் உரிமை இருப்பதாகவும் செக் வைக்க அருமைநாயகம் திணறி போனார்.
பூர்வீக சொத்தின் மூலம் வரும் வருமானத்தை வைத்து வாங்கும் எந்த ஒரு சொத்தும் தங்களுக்கும் பங்கு உண்டு என்றும் அதற்கு தங்களின் அனுமதி கேட்காமல் முடிவெடுக்க கூடாதென்றும் மாற்றி மாற்றி ஒவ்வொன்றாய் அவன் செய்தான்.
இருப்பவை எல்லாமே பூர்வீக சொத்தும், அதில் வரும் வருமானமும் தான் என்பதால் இப்படி விஜய் செய்திருக்க அருமைநாயகம் தனக்கு தெரிந்தவர்களை வைத்து அவன் இருக்குமிடம் எங்கே என்று தேட முயல கண்டுபிடிக்கமுடியவில்லை.
கேரளாவில் இருக்கும் வீட்டின் முகவரியில் இருந்து தான் எல்லாமே வந்திருந்தது.
வீடோ பூட்டியிருக்க அவன் வந்து போவதும் தெரியவில்லை. அந்த லட்சணத்தில் தான் அருமைநாயகம் அனுப்பியவர்கள் தேடி இருந்தார்கள் ஏனோதானோவென்று.
அதன் பின்னர் அருமைநாயகமும் பவித்ரா திருமணத்தை பற்றி பேசவில்லை. ஊருக்கு மத்தியில் அவன் செய்துவைத்ததும், பேசி சென்றதும் வேறு அவரின் செயலுக்கு முட்டுக்கட்டை போட்டது.
முதலில் ஒருவருடம் பவித்ராவை படிக்கவும் அனுப்பவில்லை. அதன் பின்னர் ஜெகனும், ரஞ்சனியும் சேர்ந்து தான் பவித்ராவை கல்லூரி அனுப்புவதை பற்றியும், என்ன படிக்கவைப்பது என்பதை பற்றியும் முடிவெடுத்தனர்.
அருமைநாயகத்திற்கு மருமகன் மீண்டும் கோபித்துவிட கூடாதே என்கிற பயத்தில் ஜெகனின் பேச்சிற்கு சம்மதித்தார்.
இப்போது இரண்டாம் முறையும் ஜெகன் பவித்ராவை சென்னைக்கு அனுப்ப விஜய் இருப்பது தெரியாமலே அவர்களும் சம்மதிக்க, இப்போது ஜெகனின் திட்டப்படி இன்று பவித்ரா விஜய்யின் வீட்டில்.
——————————————–
விஜய் சென்றதில் இருந்து ஹாலிலேயே அமர்ந்திருந்தவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. அங்கேயே படுத்துவிட்டவள் விஜய் சென்று மறைந்த கதவு திறக்கும் ஓசையில் எழுந்தமர்ந்தாள்.
அவளை பார்த்துக்கொண்டே வந்தவன் தனது மொபைலை நீட்டியதும் அதை வாங்காமல் அவள் அவனை ஏறிட,
“ஒன்னொன்னும் வாயை திறந்து சொல்லனுமோ? உன் மாமா தான் லைன்ல. போய் பேசு. எனக்கு வேலை இருக்கு…” என்று சொல்லி சென்றுவிட்டான் அதே அறைக்குள்.
தனக்கு அவன் தந்திருந்த அறைக்கு வந்தவள் ஜெகனிடம் விஜய்யை பற்றியும், மாதவனை பற்றியும் கேட்க ஜெகனும் அத்தனையையும் சொல்லிமுடித்தான் அவள் தெரிந்துகொள்வது நல்லது தான் என்று.