உருக்கம் – 13
பவித்ராவிற்கு தெரிந்தவரை தங்கள் வீட்டிலிருந்து கிளம்பி சென்ற வழியில் விபத்து. அதனால் மரணம். அவள் அறிந்தது.
அடுத்து விஜய் வந்து அடித்து விரட்டியதால் தான் மரணம் என்பதை போல பேசி சென்றதும் அவளுக்கு ஓரளவு தெளிவில்லாமல் தான் புரிந்திருந்தது.
ஆனால் என்ன நடந்தது, அவனின் குடும்பம் எப்படி இப்படி சிதைந்தது, அதன் பின்னர் அவனின் தந்தைக்கு என்னவானது எதுவும் தெரிந்திருக்கவில்லை.
பவித்ராவை பொறுத்தவரை மட்டுமல்ல அங்கிருந்த அவளின் குடும்பம் முதற்கொண்டு மாதவன் உயிருடோ நன்றாக இருக்கிறார் என்றே நினைத்திருக்க இங்கு அவள் கண்டது வேறு அல்லவா.
ஜெகன் சொல்ல சொல்ல ஏற்கனவே ஒடிந்துபோய் இருந்தவளுக்கு விஜய் அனுபவித்தவை எல்லாம் ரணமாய் வலித்தது.
இப்படி ஒரு குடும்பமே நிலைகுலைந்து சிதறி போயிருப்பது பற்றி கொஞ்சமும் குற்றவுணர்ச்சி இல்லாது இப்போதும் அருமைநாயகம் நடந்துகொள்வது எல்லாம் என்ன பிறப்போ என்று தான் தோன்றிவிட்டது.
“அப்பு, என்ன அமைதியாகிட்ட?…” என்றான் ஜெகன்.
“எனக்கு பேச முடியலை மாமா…” என்றாள்.
தொண்டை அடைத்தது அவளுக்கு அவன் அனுபவித்த வேதனைகள், அந்த நேரம் என்னவெல்லாம் நினைத்திருந்திருப்பான் என்று நினைக்கும் போதே அழுகை பொங்கியது.
“விஜய் செஞ்சதுல ஏதாவது தப்பு இருக்காம்மா?…” என்றான் அவளின் மனதை பற்றி அறிய.
“அவர் இடத்துல யார் இருந்திருந்தாலும் இப்படி இந்த நிதானத்துல நடந்திருப்பாங்களான்னு எனக்கு தெரியலை மாமா. இதை விட வேற எப்படியும் அவர் நம்மளை பார்க்க முடியாதே?…” என்றாள்.
“சரி இப்போ சொல்லு, நீ என்ன பண்ணலாம்ன்னு இருக்க?…” என ஜெகன் கேட்க,
“என்ன பண்ணலாம்ன்னா? எனக்கு புரியலை. என்னால என்ன பண்ண முடியும் மாமா?…” என்றாள்.
“அப்புக்குட்டி, டேய்…” என்று ஜோதியின் குரல் கேட்க,
“ண்ணா…” என்றாள்.
“மாப்பிள்ளை பாவம்டா. இப்ப நீ தான் முடிவெடுக்கவேண்டிய சூழ்நிலையில இருக்க. நல்ல முடிவா எடு…” என்று அவன் சொல்லியவிதமே அவனுக்கும் தெரிந்திருக்கிறது என்று புரிந்தது.
“ண்ணா, உனக்கு எப்படி?…”
“உன்னை காலேஜ்ல சேர்க்க வரும் போது தான் மாமா எல்லாம் சொன்னார்டா. இனி நீ தான் தைரியமா இருக்கனும். அவருக்கும் சேர்த்து பார்க்கனும்…” என ஜோதி சொல்ல,
“நம்ம மனசாட்சி ஒத்துக்குமாண்ணா?…” என்றாள் பவித்ரா.
“என்னம்மா, என்ன பேசற?…” என்று ஜோதியும், ஜெகனும் கேட்க,
“தெரிஞ்சு தான் பேசறேன். நினைச்சு பாருங்க. அவர் இடத்துல நீங்க இருந்திருந்தா எப்படி இருப்பீங்க? இதுல என்னை முடிவெடுக்க சொல்றீங்க? இப்போ என்னை பார்க்கும் போது எல்லாம் அன்னைக்கு அவர் பட்ட வேதனை தானே ஞாபகம் வரும். அதுவே அவருக்கு நான் குடுக்கற கஷ்டம் இல்லையா?…”
தாங்கள் ஒன்று நினைத்து அனைத்தையும் சொல்ல பவித்ராவோ வேறு விதமாய் யோசித்திருந்தாள்.
இனியும் தன்னால் தங்கள் குடும்பத்தால் விஜய் எந்தவித கஷ்டங்களையும் அனுபவிக்க வேண்டாம் என்று நினைக்க ஜெகனுக்கு எங்காவது முட்டிக்கொண்டால் என்ன என்று தான் தோன்றியது.
“அப்பு, இப்படி பேசாத. முதல்ல இந்த நினைப்பை விடு. இப்போதைக்கு எதுவும் நினைக்கவேண்டாம்…” என்று சொல்ல,
“மாமா, நீங்க என்ன நினைச்சு என்னை இங்க கொண்டுவந்தேங்கன்னு புரியுது. ஆனா வாய்ப்பில்லையே. என்னை விடுங்க, அவர் பாவமில்லையா? நிச்சயம் என்னை ஏத்துக்கவோ விரும்பவோ மாட்டார்…” என்றாள்.
மீண்டும் மீண்டும் அவள் அதையே சொல்லிக்கொண்டு இருக்க எரிச்சலானான் ஜோதி.
“அப்ப என்ன செய்ய போற? இப்ப அவருக்கு இருக்கற ஒரே சொந்தம் நீ மட்டும் தான். அதையும் அவர் இல்லாம இருக்கனும்னு நினைக்கிற போல?…” என்று ஜோதி பேச,
“ண்ணா…” என்றாள்.
“ஜோதி, ப்ச் பொறுமையா பேசு. அவளே குழம்பி போய் இருக்கா…” என்ற ஜெகன்,
“அப்பு, இப்ப எதையும் நினைச்சு குழப்பிக்காத. இப்போதைக்கு நீ அங்க தான் இருக்க முடியும். நீயே நினைச்சாலும் வெளில போக முடியாது. மழை ரொம்ப அதிகமா இருக்குது. ஊரே வெள்ளமா இருக்கும் போது அங்க நீ இருக்கறது தான் சேஃப்…”
“இல்ல மாமா, என் ரூம் மேட் கிட்ட பேசறேன். இங்க வேண்டாம். எனக்கு கஷ்டமா இருக்குது….” என்று சொல்லும் பொழுதே விஜய்யின் எண்ணிற்கு ஏதோ அழைப்பு வர,
“மாமா, செகென்ட் கால் வருது. அவர்க்கிட்ட குடுக்க போறேன்…” என்று சொல்லி போனை வைத்துவிட்டவள் அறையை விட்டு வெளியே வந்தாள்.
ஹாலில், மற்ற அறையில், கிட்சனில் என்று விஜய் இருப்பதை போல தெரியவில்லை. எங்கே சென்றான் என்று தெரியாமல் போனை டீப்பாயில் வைத்துவிட்டு அவனை தேட வீட்டிற்குள் எங்குமில்லை.
மனதிற்குள் படபடப்பாக இருக்க வெளியே வந்து படியிறங்கி பார்க்க காரையும் காணவில்லை. மழை வேறு விடாது பெய்ய ரோட்டில் தண்ணீர் ஆறு போல ஓடிக்கொண்டு இருந்தது.
எங்க போனாங்க? என்று கீழே இறங்கி பார்த்தவளுக்கு அவனை காணாத பயத்தில் இன்னும் வெளியே வந்து நிற்க மழையில் கீழே கால் வழுக்கி பொத்தென்று அந்த தண்ணீரில் விழுந்துவிட்டாள்.
“ம்மா…” என்ற சத்தத்தில் வீட்டின் பின்புறம் இருந்த ஷெட்டில் இருந்து குடையுடன் நடந்து வந்த விஜய் பார்த்ததுமே ஓடி வந்தான்.
“ஏய் பழனி, உன்னை யார் வெளில வர சொன்னா?…” என்று வேகமாய் வந்து அவளுக்கு கை கொடுக்க எழுந்துகொள்ள முடியவில்லை அவளால்.
“உன்னோட பேக்கை கார்ல இருந்து எடுத்துட்டு வரதுக்குள்ள இந்த பாடா? கொஞ்சம் நேரம் உள்ள இருந்தா தான் என்னவாம்?…” என்று சத்தம் போட்டபடி மாடிப்படியில் பவித்ராவின் பேக்கை நனையாமல் மேல வைத்துவிட்டு வந்து குடையையும் வைத்துவிட்டு அவளை இரு கைகளாலும் எழுப்பி நிப்பாட்டினான்.
“கீழே இருந்த ஹவுஸ் ஓனர் அங்கங்க செடி வைக்கறேன்னு குழி தோண்டி போட்டிருந்தாங்க. மேடும் பள்ளமுமா இருக்கும். அதான் நேத்தே உன்கிட்ட சொன்னேன். தேவையா உனக்கு?…” என்று சொல்ல மழையிலும் கீழே விழுந்ததிலும் மொத்தமாய் நனைந்திருந்தாள்.
“உங்களை காணுமேன்னு தான் வந்தேன். எங்க போனீங்க?…” என்று முகத்தை மழைநீரால் கழுவியபடி பவித்ரா கேட்க அவளின் நெற்றியில் தலையில் கோர்த்திருந்த சருகுகளை எடுத்துவிட்டவன்,
“உள்ள போய் பேசலாம். உன்னால நானும் நனைஞ்சு இப்ப பார். எனக்கு நல்லதை தவிர எல்லாமே பண்ணுவீங்க இந்த பழனி ஆளுங்க. இல்ல?…” என்று சொல்லியவன்,
“கையை புடிச்சுக்கோ…” என்று சொல்லி கூட்டிக்கொண்டு சென்றான்.
மேலே படியில் ஏறும் போதே காலிலும், இன்னொரு கை முட்டியிலும் அடிபட்டு தோல் உரிந்து ரத்தம் கன்றியிருந்தது.
“ப்ச், இதுவேறையா?…” என அவளை பார்த்தபடி மெதுவாய் மேலேவீட்டின் முன்னால் நிறுத்தியவன்,
“மெதுவா போ. நான் பேக்கை எடுத்துட்டு வரேன். விழுந்து வைச்சிடாத. உன்னை கூட வச்சுட்டே பார்த்துக்க முடியலை. இன்னும் கஷ்டம் குடுக்காத. அவசரத்துக்கு ஹாஸ்பிட்டல் கூட போக முடியாது…” என்றவனின் பேச்சு வெகு சரளமாக வந்தது.
பவித்ராவிற்கு கஷ்டமாக இருந்தாலும் அவனின் இந்த குத்தல் பேச்சிலும் ஒரு அனுசரணையை கண்டாள்.
“போய்டுவ தானே? கால் எதுவும் பிசங்கிடுச்சா? ஏன் மெதுவா எடுத்து வைக்கிற?…” என்றான்.
“தெரியலை. ரொம்ப வலிக்குது…” என சொல்லும் பொழுதே கண்ணீர் கரை கட்டி நிற்க,
“ஓகே, குளிச்சுட்டு வா. என்னன்னு பார்ப்போம்…” என்று அவளை குளியலறை வரைக்கும் அழைத்து சென்று விட்டவன்,
“பேக் இங்க வாசல்லையே வச்சிடறேன். ரூம் லாக் பண்ணிடறேன். நீ எடுத்துக்கோ…” என சொல்லிவிட்டு கதவையும் பூட்டிவிட்டு சென்றான்.
இத்தனையிலும் பவித்ரா கணித்த ஒன்று, விஜய்யின் உண்மையான முகம் இதுவென்று. ஆத்திரமும், கோபமும் எல்லாம் அருமைநாயகம் செய்ததினால் விளைந்தது என்று.
அத்தனை வன்மமும், பிடித்தமின்மையும் இருந்துமே தன்னை இந்தளவுக்கு பார்த்துக்கொள்கிறானே என்ற எண்ணம் அவளுள் விதைந்தது.
குளித்து முடித்து தலையை துவட்டிவிட்டு கட்டிலில் அமர்ந்திருந்தவள் காலை நன்றாக நீவி விட தொட முடியாதளவிற்கு வலி உண்டாகியது.
எழுந்து இவ்வளவு நேரம் சென்றது, மழையில் நனைந்து கீழே விழுந்தது என்று சோர்ந்திருந்தவளுக்கு பசி வேறு எடுக்க அவனிடம் கேட்க முடியாதே என தயக்கத்துடனே அமர்ந்திருந்தாள்.
கதவு தட்டப்படும் ஓசையில் எழுந்து சென்று திறந்தவள் விஜய்யை பார்க்க அவனுமே குளித்து உடை மாற்றி இருந்தான்.
“ரெடி ஆகிட்டா எழுந்து வெளில வரமாட்டியோ? மகாராணிக்கு ஒன்னொண்ணுக்கும் ஓலை வாசிச்சுட்டே இருப்பாங்களா?…” என்றான் முறைப்புடன்.
“இல்லை சும்மா தான்…” என்றவளின் கையை பிடித்து காயம் பட்ட இடத்தை பார்த்தான்.
“வந்து ஹால்ல உட்கார். சாப்பிட வேண்டாமா?. உன் மாமா வேற உன்னை என் தலையில கட்டிட்டார். இல்லன்னா நிம்மதியா எனக்கு நானே சமைச்சு நேரத்துக்கு சாப்பிட்டு முடிச்சிருப்பேன். இப்ப உன்னை விட்டும் சாப்பிட முடியாதே?…” என்று சுள்ளென்று அவளை கொட்டிக்கொண்டே இருந்தான்.
“உட்கார் எடுத்துட்டு வரேன்…” என்று நகர போனவன் அவளின் காலை பார்த்துவிட்டு,
“லேசா வீங்கி இருக்கோ? உன் நல்ல நேரம் எனக்கு கொஞ்சம் பர்ஸ்ட் எய்ட் தெரியும். முதல்ல ப்ரேக்பாஸ்ட் முடிச்சுக்கலாம்…” என்று சொல்லிவிட்டு அவளுக்கும் தனக்குமாக உணவை எடுத்துக்கொண்டு வந்தான்.
“நல்ல நேரம் ப்ரவிஷன், க்ரோசரி ஐட்டம்ஸ் கொஞ்சம் ஸ்டோர் பண்ணிருக்கேன். அதை வச்சு சமாளிச்சுடலாம்….” என்று பேசிக்கொண்டே அவளிடம் பொங்கலையும், சாம்பாரையும் தந்தான்.
“சட்னி பண்ணலை. சாம்பார் மட்டும் தான. கரண்ட் இல்லை. இன்வெட்டர்ல இருக்கிற பவர் வச்சு இதையே மெய்ண்டெய்ன் பண்ணிக்கனும்…” என்றான்.
அவன் பேச பேச அத்தனைக்கும் பவித்ராவிடம் தலையாட்டு மட்டுமே பதில். வேறு எதுவும் கேட்கவில்லை.
ஆனால் விஜய் அன்று பேசிக்கொண்டே இருந்தான். அவள் பேசவேண்டும் என்றும் எதிர்பார்க்கவில்லை.
“ஆமா எதுக்காக கீழே வந்த?…” என்றான் பொங்கலை எடுத்து வாய்க்குள் வைத்தபடி,
“ஜெகன் மாமா போன் பேசும் போது உங்களுக்கு ஒரு கால் வந்தது. அதான்…”
“ஓஹ், நான் காரை ஷெட்க்குள்ள விட போனேன். நேத்து நைட் அப்படியே வெளில விட்டாச்சு. மரத்துல இருந்து தேங்காய் எதுவும் விழுந்துட்டா? அதான் உள்ள வச்சுட்டு உன்னோட பேக்கையும் எடுத்துட்டு வர போனேன்…” என்றவன்,
“நீ எப்பவுமே இப்படித்தானா? அளவா தான் பேசுவியா?…” என்று கேட்க,
“பழகிடுச்சு…” என்றாள்.
“இதென்ன பதில்? இது கூடவா பழகும்? யார் கண்டா உன் குடும்பம் அப்படி. என்ன வேணா செய்வீங்க…” என்று அதற்கும் அவன் சொல்ல லேசாய் சிரித்துக்கொண்டாள்.
சாப்பிட்டு முடித்து அவளின் காலுக்கும், காயத்திற்கும் மருந்திட்டவன் மாத்திரையை குடுத்து போட சொன்னான்.
“ஒன்னு மழையில நனைஞ்சதால காய்ச்சல் வராம இருக்க. இன்னொன்னு பெய்ன்கில்லர்…” என்றவன்,
“போய் ரூம்ல இரு. புக்ஸ் வேணும்னா எடுத்து படி. என்னை டிஸ்டர்ப் பண்ண கூடாது…” என்று சொல்லிவிட்டு அவளை அனுப்பினான்.
இயல்பிலேயே இருக்கும் அவனின் அடிப்படை குணம் அவ்வப்போது வெளிவரத்தான் செய்தது. அதை பவித்ராவும் கண்டுகொண்டாள். ஆனால் இந்த கோபம்?
மதிய உணவு நேரத்தில் தான் அங்கே இனியும் இருக்க வேண்டாம் என்று முடிவெடுத்தவள் விஜய்யிடம் பேசினாள்.
“நான் என் பிஜிக்கே போய்டட்டுமா?…” என்று கேட்க,
“தாராளமா. ஆனா பிஜி இருக்கனுமே?…” என்றவன்,
“மழை அதிகமானதால அங்க இருந்தவங்களை எல்லாம் சேஃபா வேற இடத்துக்கு அனுப்பிட்டாங்களாம். அதனால இப்போதைக்கு நீ அங்க போக முடியாது. இல்லைன்னா காலையில முதல் வேலையா நானே உன்னை அனுப்பி வச்சிருந்திருப்பேன்…” என்றான் இறுக்கத்துடன்.
பவித்ராவிற்கு அடுத்த கவளம் தொண்டையில் இறங்க மறுத்தது. தன்னை அங்கே கொண்டு தொலைக்க முன்பே முயன்றிருக்கிறான் என்பதில் மனது அடிபட்டது.
அவன் வேறு என்ன செய்வான்? தன்னை இங்கேயே வைத்து வடித்துக்கொட்ட பிடிக்குமா என்ன? நினைக்க நினைக்க கழிவிரக்கத்தில் மனது வெடித்தது.
“என்ன டல் ஆகிட்ட? நான் சொன்னதாலையா? வேற என்ன சொல்லுவேன்? சத்தியமா உன்னை இங்க வச்சிருக்க பிடிக்கல எனக்கு. ஜெகாண்ணா சொன்னதால தான் வச்சிருக்கேன். அதே நேரம் உன்னை பத்திரமாவும் பார்த்துக்கனும்ல…” என்றவன்,
“எங்க வீட்டுக்கு யார் வந்தாலும் அவங்களை நல்லபடியா மதிப்பா, கவனிச்சுக்கனும்னு மதும்மா சொல்லிட்டே இருப்பாங்க. எங்க பழக்கமும் கூட. அது சுட்டு போட்டாலும் உங்களுக்கு வராது…” என்றான்.
அதிலேயே நீங்கள் வேறு நாங்கள் வேறு என்று அவன் நிதர்சனைத்தையும் எடுத்துரைக்க தண்ணீரை குடித்து உணர்வுகளை அடக்கினாள் வழக்கம் போல.
“உண்மையை சொல்லனும்னா, உன்கிட்ட நார்மலா என்னையறியாம பேசிடறேன். அப்பறம் இது அந்த பெருமையோட ரத்தம்டான்னு என்னையே அடிச்சுக்கறேன். என்னோட மொத்த இயல்பையும் இப்படி மாத்தினவாங்க பொண்ணுக்கு நான் சேவகம் பன்றேன். கொடுமைல…” என்றான் வெறுமையுடன்.