அதற்கு மேல் சாப்பிடாமல் எழுந்து அறைக்குள் அழுதுகொண்டே ஓடியவள் இரவு வரை வெளியே வரவில்லை.
கதவு ஒருக்களித்து சாற்றபட்டிருந்தாலும் விஜய்யும் உள்ளே சென்று பார்க்க முயலவில்லை.
மதிய உணவு பாதியிலேயே நின்றுவிட அதை அப்படியே எடுத்துவைத்துவிட்டு வந்து புக்கை எடுத்துக்கொண்டு அமர்ந்துவிட்டான்.
அவளின் அழுகை, கண்ணீர் என்று எதுவும் அவனுக்கு பாதிக்கவில்லை. வரும் போது வரட்டும். தாங்கவெல்லாம் முடியாது என்று இருந்தாலும் இரவு உணவை அவளை விட்டு உண்ணமுடியாமல் தானும் சாப்பிடாமல் இருந்தான்.
அறையில் இருந்த தண்ணீர் காலியாகி இருக்க அதை எடுப்பதற்காய் பத்துமணி போல வெளியே வந்தாள் பவித்ரா.
ஹாலில் இருந்த சோபாவில் புக்கோடு மூழ்கி இருந்தவன் அவளை கண்டும் ஒன்றும் பேசவில்லை.
தண்ணீர் குடிக்க சென்றவளுக்கு அங்கே தட்டில் மூடிவைக்கப்பட்டிருந்தவற்றை எல்லாம் பார்த்துவிட்டு அவனும் எதுவும் சாப்பிடவில்லை என்று புரிந்தது.
எத்தனை தவறுகள் தங்கள் மேல் இருந்தாலும் பிடிக்காமல், வெறுப்புடன் போடப்படும் அந்த உணவை உண்ண அவளுக்கு துளியும் விருப்பமில்லை.
அங்கே இருக்கவும் முடியாமல், போகவும் முடியாமல் பவித்ராவின் நிலையோ நரகம் தான்.
இப்போது அவனும் உண்ணாமல் இருக்க மனது கேட்காமல் அவனிடம் நடந்து வந்தாள்.
வந்தவளின் பாதத்தையும், நடையையுமே அடிக்கண்ணால் கவனித்தவன் அவளே பேசட்டும் என்று இருந்துகொண்டான்.
“இன்னும் நீங்க சாப்பிடல?…” என்று பவித்ரா கேட்க,
“வீட்டுக்குள்ள உன்னை வச்சுக்கிட்டு நான் மட்டும் சாப்பிட்டா சரியில்லை…” என்றான்.
“இல்லை, எனக்கு பசிக்கலை, அதான்….”
“ஓஹ், எனக்கும் பசிக்கலை. நீ போகலாம்…” என்று சொல்ல அங்கேயே நின்றாள் அவள்.
“ப்ச், இன்னும் என்ன? பசிக்கலைன்னா போய் தூங்கு. அதையும் சொல்லனுமா?…” என எரிந்து விழுந்தான்.
“நான் என் மாமாட்ட பேசனும். போன் பண்ணி குடுங்க…” என பவித்ரா கேட்கவும் ஒன்றும் சொல்லாமல் மொபைலை எடுத்து ஜெகனுக்கு அழைத்து அவளிடம் கொடுத்தான்.
“சொல்லுடா விஜய்…” என்று ஜெகன் சொல்லவும்,
“மாமா நான்…”
“அப்பு, என்னம்மா? சொல்லு…” என்றான் ஜெகன்.
“என்னை இங்க இருந்து கூட்டிட்டு போங்க மாமா, ப்ளீஸ். இங்க நான் இருக்கமாட்டேன். கூட்டிட்டு போங்க…” என்று சொல்லவும் எந்த உணர்வையும் காண்பிக்காத ஒரு பாவனை விஜய்யின் முகத்தில்.
“அப்பு, அப்பு என்னாச்சு?…” என்று கேக்கும் பொழுதே இவளுக்கு கண்ணீர் வழிந்துவிட்டது.
“இங்க இருக்கமுடியலை. எனக்கு வேண்டாம், படிக்கவும் வேண்டாம். வீட்டுலையே இருந்துக்கறேன். ப்ளீஸ். கூட்டிட்டு போய்டுங்க மாமா…” என்று விம்மி அழ ஜெகனுக்கு பதறியது.
விஜய் கோபத்தில் அதிகமாய் பேசிவிட்டானோ இல்லை சண்டையோ என்று பதறியவன்,
“நீ விஜய்க்கிட்ட போனை குடு…” என்றான் பதட்டத்துடன்.
“இல்ல, அவங்க எதுவும் சொல்லலை. என்னால தான் இருக்க முடியலை. இங்க இங்க சாப்பிடும் போது கூட அவங்கம்மா நம்ம வீட்டுல வந்து நின்னது தான் ஞாபகம் வருது. எனக்கு முடியலை மாமா. கூட்டிட்டு போங்க…” என்றவள் அழுகை சத்தம் இன்னும் அதிகமாகியது.
“நீ போனை விஜய்க்கிட்ட குடும்மா, அப்பு மாமா சொல்றதை கேளு. இப்ப முடிஞ்சா நாங்க கிளம்பி வந்துருவோம். அங்க சூழ்நிலை சரி இல்லையே…” என்று ஜெகன் புலம்ப விஜய்யிடம் போனை நீட்டினாள்.
“ஹ்ம்ம், சொல்லுங்கண்ணா…” என்றான் அவன்.
“என்னடா விஜய், எதுக்கு இப்படி அழறா அப்பு? எப்பவும் அழுதா கூட யாருக்கும் தெரியாது. இவ்வளவு சத்தமா அழுததில்லையே. என்னடா ஆச்சு?…” என்று ஜெகன் கேட்க,
“இங்க என்னோட என் பேச்சை கேட்டுட்டு இந்த ஒரு நாள் அவளால முழுசா என்னோட இருக்க முடியலை. போகனும்னு சொல்லி இப்படி அழறா. இந்த பொண்ணை எப்படி வாழ்நாள் முழுக்க என்னோட வாழ வைக்கலாம்னு நம்பறீங்க?…” என்று பவித்ராவை பார்த்துக்கொண்டே விஜய் கேட்டான்.
“நான் என்ன கேட்கறேன், நீ என்ன பேசற?…”
“எதை பேசனுமோ அதான் பேசறேன். என்னால இப்பவும் இந்த பொண்ணை இங்க வச்சு பார்த்துக்க முடியலை. உங்களுக்காக தான் ஓகே சொன்னேன். அதுக்கு மேல வேற என்ன பண்ண முடியும்?…” என்றான்.
அவனால் இயல்பாகவும் இருக்கமுடியாமல், அவளின் காயங்களை கண்டும் காணாமல் தன் கோபத்தை பிடித்தபடியும் இருக்க முடியாமல் ஏதோ ஒரு அல்லாட்டம் மனதினுள்.
“இந்த நேரம் உங்களால வர முடியாது. அதே நேரம் என்னாலையும் கொண்டுவந்து விட முடியாது. ஏரியா ஃபுல்லா தண்ணி கூடிருச்சு. கீழே ஹவுஸ் ஓனர் வீட்டுல இருந்தா கூட அங்க தங்க வச்சிருவேன். அவங்களும் இல்லை. எல்லாம் என் தலையெழுத்து…” என்றான் வெறுப்புடன்.
“விஜய்…” என்று ஜெகன் சங்கடத்துடன் அழைக்க,
“ண்ணா, ஒன்னே ஒன்னு பண்ண முடியும். இனிமே ஒரு வார்த்தையும் பேசலை நான்…” என்றவன்,
“பேசாம சாப்பிட சொல்லுங்க. இங்க அந்த பொண்ணும் சாப்பிடாம என்னால சாப்பிட முடியலை. வீட்டுல ஆதரவுன்னு இருக்கற பொண்ண பட்டினி போட்டு நானும் சாப்பிட முடியாம இருக்கேன். தயவு செஞ்சு இந்த உதவியை மட்டும் செய்ய சொல்லுங்க…” என சொல்லிவிட்டு போனை கொடுக்க திரும்பினான்.
அங்கே பவித்ரா இல்லாமல் போக என்ன செய்கிறாள் என்று அந்த அறையை எட்டி பார்ப்பதற்குள் உள்ளிருந்த பேக்குடன் காலை விந்தியபடி நடந்து வந்தாள்.
‘வீட்டை விட்டு தான் செல்ல போகிறாள்’ என்று பார்த்தபடி இருந்தவன் லைனில் ஜெகன் கத்த,
“ண்ணா, நான் கூப்பிடறேன் வைங்க…” என்று சொல்லிவிட்டு பவித்ராவை பார்த்தான்.
“உங்க ஆதரவுக்கு ரொம்ப நன்றி. ஆதரவு இருக்கறவங்களுக்கு இப்படி எல்லாம் அவ்வளோ பெரிய ரூம் குடுக்க மாட்டாங்க. அதனால இந்த ஹால் போதும். இந்த சோபாவுல படுத்துக்கறேன். அதுவும் உங்களுக்காக தான். இல்லைன்னா எனக்கு எதாச்சும் வந்து அதுவும் உங்க தலையில விழுந்திருமே…”
படபடவென்று வேகமாய் அவனிடத்தில் பேசியவள் பேக்கை சோபாவின் ஓரத்தில் வைத்துவிட்டு அதற்குள் இருந்த சுடிதார் துப்பட்டாக்களை எடுத்து பெட்ஷீட் போல சேர்த்து அதை சோபாவில் போட்டாள்.
“என்னால இங்க யாரும் பசியோட இருக்க வேண்டாம். நான் சாப்பிடறேன். ஆனா அதுக்கான வேலையும் நான் பார்க்கத்தான் செய்வேன். ஓசில சாப்பிட என்னால முடியாது. எனக்கும் கொஞ்சம் ரோஷம் இருக்கும்…” என்று அழுதபடி சொல்லியவள் உள்ளே சென்று மதியம் பாதியில் வைத்த சாப்பாட்டை எடுத்து உண்ண,
“அது வேஸ்ட் பண்ணிடு. வேற எடுத்துக்க…” என்றான்.
“இல்லை தேவையில்லாம யாரோட உழைப்பையும் நான் வீணாக்க விரும்பலை. இதுவும் கெட்டு போகலை…” என சொல்லி வேக வேகமாய் சாப்பிட்டு முடித்தவள் வந்து படுத்துக்கொண்டாள்.
இவ்வளவு நீளமாய் அவள் பேசிய பலமாதங்கள் ஆகியிருந்தது. எப்போதாவது அத்திபூத்ததை போல இப்படி வரும். இன்று விஜய்யின் பேச்சினால் விளைந்த காயம் பேசவைத்துவிட்டது.
படுத்தவள் கண்ணை மூடிக்கொள்ள விஜய் தானும் சாப்பிட்டு வந்து ஒரு மெத்தையை கீழே விரித்து படுத்துக்கொண்டான்.
அதனருகே லைட்லேம்பை வைத்தவன் புக்குடன் தலை சாய்ந்தான். மெல்ல கண் திறந்தவள் அதனை கண்டுவிட்டு மீண்டும் கண்ணை மூடிக்கொண்டாள்.
அடுத்த இரண்டு நாட்களும் இருவருக்கும் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை. பவித்ரா அந்த வீட்டில் முடிந்தளவு சிற்சில வேலைகள் செய்ய விஜய்யும் ஒன்றும் பேசவில்லை. தடுக்கவும் இல்லை.
ஆனால் அவள் செய்வதிலும் சில கட்டுப்பாடுகள் விதித்தான். இதை செய்யாதே. அதை தொடாதே என்று ஒற்றை வார்த்தை தான்.
ஆனால் இருந்தவரையிலும் உணவென்பது இருவருமே சேர்ந்து தான் உண்ணுவார்கள். அந்த வீட்டில் ஒரு அறையை தவிர மற்ற எல்லா இடங்களிலும் பவித்ரா இருந்துவிட்டாள்.
தாய், தந்தை இருந்த அந்த அறைக்கு தினமும் விஜய் சென்றுவிட்டு ஒருமணி நேரத்தின் பின்னர் தான் வருவான். மாதவனுக்கு பேசுகிறான் என்று ஓரளவு அவளே யூகித்துக்கொண்டாள்.
ஜெகனின் மூலமாக தன் வீட்டின் நிலவரத்தையும் தெரிந்துகொண்டாள். இங்கே பிஜியில் போன் வேலை செய்யவில்லை என்றும் ஜெகன் தெரிந்தவர் மூலமாக பேசியதாகவும் சில நேரங்களில் அதுவும் தொடர்பு கிடைப்பதில்லை என்றும் சொல்லியிருந்தான் ஜோதி மூலமாக வசந்தி, அருமைநாயகத்திற்கு.
அந்த நான்கு நாட்களும் இப்படியே செல்ல ஐந்தாம் நாள் பிஜி திறந்துவிட்டதாக தகவல் கிடைக்கவும் கிளம்பிவிட்டாள் பவித்ரா.
“மாமாவுக்கு பேசனும்…” என்று விஜய்யிடம் போனை வாங்கியவள் ஜெகனுக்கு அழைத்து,
“மாமா, நானே கிளம்பறேன். அவங்களை வர வேண்டாம்னு சொல்லுங்க…” என விஜய்யின் முன்பே அவள் பேச ஜெகனுக்கு இதென்னடா என்று இருந்தது.
“அப்பு…”
“நான் இங்க இருந்து ஆட்டோ புடிச்சு போய்ப்பேன். அவங்க வேண்டாம். ஏற்கனவே அவங்க தலையில இந்த நாலுநாளா என்னை கட்டிவிட்டுட்டீங்க. இதுவும் எதுக்கு? நானே போய்ப்பேன், ப்ளீஸ்…” என்று சொல்ல ஜெகன் திகைத்து போனான்.
“என்னாச்சு? நீ இப்படி எல்லாம் பேசமாட்டியே?…” என கேட்க,
“பேச வேண்டிய நேரம் பேசனும்ல மாமா. இவ்வளோ நான் பேசாம இருந்துட்டேன். இனி பேசறேன். என் போனை குடுத்து விடறேன்னு சொன்னீங்க?…”
“ஹ்ம்ம், நம்ம ஊர்க்கார அண்ணன் ஒருத்தர் வராரு. சாயந்தரம் பிஜில கொண்டு வந்து குடுப்பாரு…” என்றவன்,
“விஜய்க்கிட்ட குடு…” என்றான்.
“ஓகே மாமா, பை…” என சொல்லி போனை கட் செய்துவிட்டு அவனிடம் நீட்டினாள்.
“எல்லாத்துக்கும் தேங்க்ஸ்…” என்ற பவித்ரா,
“தங்கவிட்டதுக்கும், சாப்பாடு போட்டதுக்கும் காசு குடுக்கலாம்ன்னா நீங்க மனிதாபிமானத்தோட எனக்கு ஆதரவு குடுத்ததுக்கு அர்த்தமே இல்லாம போய்டும். அதான் குடுக்கலை. கிளம்பறேன் ஸார்…” என்று பேச அவளின் பேச்சு என்றைக்கும் போல அமைதியாக தான் இருந்தது.
அந்த தொனி, முகபாவனை எல்லாமே அதே அப்பாவியான பயந்த சுபாவத்துடன். ஆனால் இத்தனை பேச்சு? அவளை கூர்ந்து பார்த்தான்.
“உன்கிட்ட ஏதோ சேஞ்சஸ். ஹ்ம்ம்…” என்று தலையை தட்ட மீண்டும் ஜெகன் அழைத்தான்.
“விஜய், என்னப்பா?…”
“ப்ச், ண்ணா, என்ன என்னப்பா?…”
“என்கிட்டே ஏன்டா எரிச்சல் படற?…” என ஜெகன் கேட்க,
“எனக்கென்ன எரிச்சல்? எல்லாம் உங்களால தான். சீக்கிரம் கிளம்ப சொல்லுங்க. இந்த அஞ்சு நாளும் ஒரு ப்ரைவேசி இல்லை எனக்கு…” என்று எரிந்துவிழ பவித்ரா அவனை பார்த்தபடி நின்றாள்.
“அவ ஏதோ ஆதங்கத்துல பேசறா. நீயே கொண்டு போய் விடு. அந்த ஏரியா பத்தி அவளுக்கு என்ன தெரியும்?…”
“அதெல்லாம் முடியாது. போகனும்னா போகட்டும். எனக்கென்ன?…” என்று சொல்ல பேக்கை எடுத்துக்கொண்டு வாசலுக்கு சென்றாள் பவித்ரா.
“விஜய்…”
“நான் சொல்ல மாட்டேன். வேணும்னா நீங்க சொல்லுங்க. கொண்டுபோய் விடு தொலையறேன்…” என்று சொல்லி அவளிடம் வந்தான்.
ஜெகன் பவித்ராவிடம் பேசவும் அவளும் ஒன்றும் சொல்லாமல் சரி என்று தலையசைத்தபடி இருந்தவள் முகத்தையே அவதானித்தபடி நின்றான்.
“நான் உங்க கூடவே வரேன்…” என்று பவித்ரா சொல்லவும் கதவை பூட்டிக்கொண்டு கீழே இறங்கியவன் ஒன்றும் பேசாமல் பிஜியில் கொண்டு இறக்கிவிட்டு நொடியும் நிற்காமல் கிளம்பிவிட்டான்.
அவன் கிளம்பியதை கண்டு பார்த்தது பார்த்தபடியே நின்றவளின் இதழ்களில் மென்னகை அவனை நினைத்து.
ஒரு பாதி கதவு நீயடா மறுபாதி கதவு நானடா
தாழ் திறந்தே காத்திருந்தோம் காற்று வீச பார்த்திருந்தோம்