உருக்கம் – 14
பிஜி வந்து சேர்ந்ததுமே விஜய் வீட்டில் இருந்து கொண்டுவந்த தன் பொருட்களை எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு இருந்தாள்.
இன்னும் அறை தோழியான விகாஷினி வந்திருக்கவில்லை. தான் மட்டும் என்பதால் வெகுநிதானமாக ஒவ்வொன்றையும் பார்த்து எடுத்து வைக்க நினைவுகள் அங்கிருந்த நிமிடங்களையே வலம் வந்தது.
பயத்துடன் பார்த்தவனின் பண்புகள் அவனின் எண்ணங்களை இவளிடத்தில் ஆழ விதைத்திருந்தது.
அதுதான் விதிக்கப்பட்டதோ? எத்தனை முயன்றும் அந்த எண்ணங்கள் அவனுக்கு உவப்பானதாக இருக்காதென ஒதுக்க நினைத்தும் முடியவில்லை.
இவ்வளவுக்கு பின்னும் அவனின்பால் தோன்றும் அந்த எண்ணங்களின் வலிமை சிறுகுற்றஉணர்ச்சியையும் அவளிடம் பதித்தது.
இதற்கு மேலும் அவன் நிம்மதியாக தங்களின் இடையீடு இன்றி இருந்துவிட்டு போகட்டும் என்று நினைத்தாலும் விஜய்யை மறுக்காத மனமோ அவன் அப்படி இருந்துவிட்டு போகட்டும். தான் இப்படியே இருந்துவிட்டு போகிறேன் என்ற ஸ்திரம் பெற்றது.
ஆம், பவித்ராவின் முடிவுகள் இப்போது தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தது. யோசிக்க தெரியாத வயதில் அவளின் வயதிற்கு மேலான அனுபவங்களை தாங்கிவிட்டாள்.
இனியும் சுயமாய் யோசிக்க கூடிய வயதிலும் தான் தயங்கி நின்றால், அதுவும் எப்பேர்பட்ட செயலை செய்திருப்பவர்களுக்கு அடிபணிந்து நின்றால் அதைவிட பாவம் வேறென்ன?
விஜய் தன்னை வேண்டாம் என்றே இருக்கட்டும். ஆனால் தனக்கு அவன் உட்பட எதுவும் வேண்டாம், அவன் மீதான நேசம் மட்டும் போதும் என்று இருந்துவிட்டாள்.
நீ விரும்பவில்லை என்றால் என்ன? உனக்கும் சேர்த்து நான் விரும்பிவிட்டு போகிறேன். அது உன்னை அடைந்தாலும் சரி, உன்னை அடைந்து உன்னால் அது உடைந்தாலும் சரி.
எங்கிருந்து வந்ததோ இந்த தைரியம். பவித்ராவின் மனதில் வேரூன்றிய சிறு துளி இன்று அவன் மீதான பிராவகமாய் உருவெடுத்திருந்தது.
அவனும் அறியவில்லை, அவனை அறிந்தவர்களுக்கும் இது அவளால் அறிவிக்கப்படவில்லை.
பொம்மையென ஆட்டுவிக்கப்பட்டிருந்தவள் இனி ஒவ்வொரு நொடியும் ஒவ்வொருவரையும் ஆட்டுவிக்க போவது அவளே அறியாத ஒன்று.
மாலை ஜெகன் சொல்லியதை போல ஒருவர் தேடி வந்து பவித்ராவின் போனை கொடுத்துவிட்டு செல்ல வாங்கி சார்ஜ் போட்டுவிட்டு ஜெகனுக்கு அழைத்து சொல்லிவிட்டு வைத்துவிட்டாள்.
வழக்கம் போல இரவு உணவு முடிந்ததும் அழைத்துவிட்டார் வசந்தி. இத்தனை நாள் பேசாததற்கு என்ன கேட்பாரோ என்று யோசனையுடனே தான் எடுத்தாள்.
“ஏன்டி கிளம்பி போறவளுக்கு போனை எடுத்துட்டு போகனும்னு கூடவா அறிவில்ல? என் பேச்சை கேட்காம போய் அவஸ்தைப்பட்டியே? தேவையா? கொஞ்சமாச்சும் பொம்பளப்புள்ளன்னா கூறு இருக்கனும்…” என்று எடுத்ததும் ஆரம்பித்துவிட்டார்.
இத்தனை நாள் பார்க்காமல், பேசாமல் இருந்தோமே என்ற எந்த தவிப்பும் இன்றி அத்தனை ஆத்திரத்துடன் பேசியவரை அசையாமல் பார்த்தவள் பதிலின்றி அமர்ந்திருந்தாள்.
“எங்க உன் கூட ஒருத்தி தங்கி இருப்பாளே? அவ வந்துட்டாளா?…” என கேட்க,
“இன்னும் இல்லை…” என்றாள்.
“உனக்கு மட்டும் அப்படி என்ன காலேஜு காலேஜூன்னு. நாங்க யாரும் போன் பண்ணலைன்னு ரொம்ப சந்தோஷமா இருந்திருப்பியே…” என்று வசந்தி சொல்லவும்,
“ஆமா, உண்மையிலையே ரொம்ப சந்தோஷமா இருந்தேன்…” என்றாள் பவித்ரா.
“என்ன?…” என்று அதிர்ச்சியுடன் பார்த்தார் வசந்தி.
தான் பேசினால் அப்படியெல்லாம் இல்லைம்மா என்று முகவாட்டத்துடன் பேசும் மகளை மட்டுமே அறிந்திருந்தவர் இன்றும் அப்படித்தான் பேசுவாள் என்று நினைக்க அவளோ பட்டென்று ஆமாம் என்று சொல்ல வசந்திக்கு அதிர்ச்சியானது.
“அப்பு, என்னடி பேச்சு இது?…” என்று அவர் கேட்க,
“ஆமாம்மா, நான் இல்லைன்னு சொன்னாலும் நீங்க நம்பப்போறதில்லை. அதான் ஆமான்னு உங்களுக்கு ஒரு சந்தோஷத்தை குடுப்போம்னு சொன்னேன்…” என்றவள்,
“போன்ல சார்ஜ் இல்லை. இப்போ தான் அந்தண்ணா கொண்டுவந்து குடுத்தாங்க. நான் நாளைக்கு பேசறேன். ரூமை கிளீன் பண்ணனும்…” என வேகமாக பேசிவிட்டு போனை வைத்துவிட நெஞ்சில் கைவைத்தபடி போனை வெறித்துக்கொண்டு அமர்ந்திருந்தார் வசந்தி.
பார்வதி எல்லாம் பார்த்தும் பார்க்காததை போல இருந்துகொண்டார். தானாக எப்படியும் ஆரம்பிப்பார் வசந்தி என்றே நினைத்து முடிக்கும் முன்,
“பார்த்தீங்களாக்கா. இந்த பிள்ளை பன்ற கூத்தை. கொஞ்சமும் நெஞ்சுல பயமில்லாம போச்சு. என்கிட்டையே என்ன பேச்சு பேசிட்டா பாருங்க…” என்று தாளமாட்டாமல் பேச,
“போன்ல சார்ஜ் இல்லைன்னு சொல்றதுக்கு என்ன பயம் வேணும் வசந்தி? அவ இன்னைக்கு ரூம்க்கு தான போயிருக்கா. சொன்னால சுத்தம் பண்ணனும்னு…” என்று பார்வதி பேச,
“அதானே? நீங்க என்னைக்கு அவளை விட்டுக்குடுத்து பேசிருக்கீங்க இன்னைக்கு பேச? உங்ககிட்ட போய் பேசினேன் பாருங்க…” என வெடுக்கென்று சொல்ல,
“அப்ப சொல்லாத…” என்று சொல்லிவிட்டு அங்கே மடித்துக்கொண்டிருந்த துணிகளை அள்ளிக்கொண்டு உள்ளே சென்றுவிட்டார் அவரும்.
“என்ன? நீங்களும் அவளை மாதிரியே சொல்றீங்க?…” என்று வசந்தி விடுவேனா என்று பின்னாலேயே வந்துவிட்டார்.
அதெப்படி தன்னிடம் இப்படி பேசலாம் என்னும் அகந்தையில் வசந்திக்கு கோவம் பொங்கியது.
“என்ன அவளை மாதிரி சொன்னேன்?…” என்று பார்வதி கேட்க,
“அவகிட்ட நான் கேட்டதுக்கும் ஆமா சந்தோஷமா இருந்தேன்னு சொல்றா. நீங்களும் சொல்லாதன்னு சொல்றீங்க? என்ன பேசி வச்சுட்டு செய்யறீங்களா?…” என கேட்க,
“இதென்ன வம்பா போச்சு? நீ தான என் கிட்ட பேசக்கூடாதுன்னு சொன்ன. சரின்னு சொன்னது தப்பா?…” என வசந்தியை தாண்டிக்கொண்டு வெளியே வர அருமைநாயகம் வந்துவிட்டார் கடையிலிருந்து.
அவரின் பின்னாலேயே ஜோதியும், பழனியப்பனும் வந்து சேர்ந்தனர். அவர்களை பார்த்ததுமே வேகமாய் சென்ற வசந்தி பவித்ராவிடம் பேசியதையும், அதற்கு பார்வதியிடம் சொல்லி அவர் சொன்ன பதிலையும் உடனே சொல்ல,
“அவளை வர சொல்லு…” என்றார் அருமைநாயகம்.
“எதுக்குப்பா? இப்ப அம்மா என்ன பண்ணினாங்க? வசும்மா தானே உங்ககிட்ட போய் சொன்னேன் பாருங்கன்னு சொல்லிருக்காங்க. அப்ப சொல்லாதன்னு தான யாரா இருந்தாலும் சொல்லுவாங்க…” என்றான் ஜோதி.
“வர வர நீயும் எதிர்த்து பேச ஆரம்பிச்சுட்ட. உங்கம்மாவுக்கு ஏத்தம் கூடி போச்சு. இப்ப நீ வேற சப்போர்ட்டுக்கு நிப்பியா?…” என்று மகனை திட்ட,
“அம்மாவுக்கு நான் பேசாம யார் பேசுவா? இங்க தப்பே இல்லாதப்போ எதுக்கு அம்மாவை சத்தம் போடனும்?…” என்றான் மகன்.
“ஜோதி, வாயை அடக்கி பேசு. என்னையே எதிர்த்து பேசுவியா?…” என்று அங்கே பிரச்சனை உருவானது தந்தைக்கும், மகனுக்கும்.
“என் வயசுல நீங்க தாத்தாவை பேசாததாப்பா? எல்லாம் பார்த்து தான வளர்ந்தேன்…” என்றதுமே அருமைநாயகம் ஆடிப்போனார்.
“ஜோதி…” என்று இரைய,
“நீங்க அம்மாவை சும்மா சும்மா பேசினா நானும் பேசத்தான் செய்வேன். எல்லாத்துக்கும் மண்டையில தட்டிவைக்காதீங்க…” என்ற ஜோதி,
“ஏன் வசும்மா, நீங்க எங்கம்மாவை என்ன வேணா பேசலாம். ஆனா அதுக்கு ஆமாம்ன்னு கூட எங்கம்மா சொல்ல கூடாதா? அப்போ இத்தனை வருஷம் நீங்க பேசினதுக்கு எங்கம்மா எவ்வளவு பிரச்சனை செஞ்சிருக்கனும்…” என்று பேச வசந்திக்கு வார்த்தை வரவில்லை.
ஏற்கனவே மகளின் பேச்சு, பார்வதியின் ஒதுக்கம் என்று இருப்பவர். இப்போது ஜோதியும் இப்படி பேச அங்கே நிற்க முடியாமல் கோபத்துடன் பின்பக்கமாக சென்று அமர்ந்துகொண்டார் கோவித்துக்கொண்டு.
அதை பார்த்த பார்வதிக்கு மனது தாங்காமல் போக அவரின் பின்னோடு செல்ல போனவரை தடுத்தான் பரஞ்ஜோதி.
“ம்மா, சும்மா விடுங்க. அவங்களே சமாதானம் ஆகட்டும். இப்படி தேடி தேடி போய் நீங்களும் பேசறது தான் எல்லாருக்கும் இளக்காரமா போச்சு. நீங்க பன்றது சகிப்புதன்மைன்னு யாரும் சொல்லமாட்டாங்க…” என்று தடுத்துவிட்டான்.
“பழனிப்பா, போய் கை கால் கழுவிட்டு வாங்க. சாப்பிடுவோம். காலையில நெல்லு மூட்டைக்கு கணக்கு முடிக்கனும்…” என்று அவரிடம் இருந்த நோட்டை வாங்கியவன்,
“சாப்பிட்டு கணக்கு பார்ப்போம். வாங்க…” என்று சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்றான்.
அருமைநாயகமும் ஒன்றும் பேசமுடியாமல் மகனின் இந்த அவதாரத்தில் அலமலந்து போயிருந்தார். என்ன நடக்கிறது? இவனுக்கு எங்கே இருந்து இப்படி பேச தைரியம் வந்தது? என்று அவரை யோசனை தின்றது.
பழனியப்பன் உடைமாற்றிவிட்டு சாப்பிட்டு வந்து வெளித்திண்ணையில் அமர்ந்துகொண்டார் ஜோதியுடன். பார்வதி மகனின் பேச்சை தட்டமாட்டாமல் வசந்தியை தேடி செல்லவில்லை.
வெகு நேரம் ஆகியும் யாரும் தன்னை பார்க்க வராமல் இருக்க எழுந்து உள்ள சென்று பார்க்க அருமைநாயகம் அறையில் விளக்கு எரிந்துகொண்டு இருந்தது.
வேறு யாரும் ஹாலில் இல்லாது போக வெளித்திண்ணையில் பேச்சுக்குரலில் எட்டி பார்த்தார் வசந்தி.
அங்கே வீடியோக்காலில் பவித்ராவுடன் அவர்கள் மூவரும் பேசிக்கொண்டிருக்க பழனியப்பன் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம்.
மகளிடம் அத்தனை ஆசையாய் பேசிக்கொண்டு இருந்தார். அனாவசியமாக இங்கே வரவேண்டாம் என்றும் சொல்லிக்கொண்டு இருந்தார்.
போதாததிற்கு ஜோதியும் சற்று முன் நடந்த சண்டையை தங்கையிடம் விவரிக்க பார்வதியிடம்,
“பெரிம்மா எப்பவும் அப்படியே இருங்க பெரிம்மா…” என்றாள் பவித்ரா.
“அதானே பாத்தேன், என்னடா கூட்டணி போடலையேன்னு. எம்மவளே எனக்கு சாய்வா இல்லாதப்ப உங்கள நினைக்கலாமா?…” என்று வசந்தி நிலைவாசலில் இருந்து கத்த திடுக்கிட்டு திரும்பினார்கள் மூவரும்.
“எல்லாரும் ஒண்ணா சேர்ந்துக்கிட்டா என்னைய மட்டம் தட்டுறீங்க? ஒருத்தி போனேனே, என்னன்னு பாக்க முடிஞ்சதா யார்க்காச்சும்?…” என்று பேச ஆரம்பிக்க எரிச்சலுடன் எழுந்து வசந்தியை தாண்டிக்கொண்டு உள்ளே சென்றுவிட்டார் பழனியப்பன்.
ஏற்கனவே பவித்ராவின் திருமணத்தன்று நடந்த பிரச்சனையில் தான் பழனியப்பன் தன் பேச்சை அவரிடம் நிறுத்தியது. வெளியே யாரிடமும் காட்டிக்கொள்ளவில்லை வசந்தி.
எங்கே புருஷன் பொண்டாட்டிக்குள் பேச்சுவார்த்தை இல்லை என்று வெளியே தெரிந்தால் அது தனக்கு அவமானம் என்று மறைத்தார்.
பொது இடங்களில் பொதுவான பேச்சுவார்த்தைகள் மட்டுமே அவர்களிடத்தில் இருக்கும்.
இப்படி இருக்க இன்றோ தான் அவமானப்பட்டதை பார்த்துக்கொண்டு இருந்தும் இப்போது அவர்களுடன் சேர்ந்துகொண்டு பேசிக்கொண்டிருந்தவர் மீது அத்தனை ஆத்திரம் கிளம்பியது.
“இந்த மனுஷன கட்டி நான் படுதபாடு இருக்கே?…” என்ற முணங்களுடன் ஜோதி, பார்வதியை முறைத்துவிட்டே உள்ளே செல்ல,
“என்னாச்சு? அம்மா வந்துட்டாங்கண்ணா?…” என பவித்ரா கேட்டதும் தங்கையின் பக்கம் கவனத்தை திருப்பினான்.
இன்னும் பார்வதிக்கே சொல்லப்பட்டிருக்கவில்லை பவித்ரா விஜய் வீட்டில் இருந்ததும், விஜய் அங்கே வேலை பார்ப்பதும் என்று எதையும்.
ஜெகனும், அவனின் தந்தையும் வேண்டாம் என்றிருந்தனர். முதலில் சம்பந்தப்பட்டவர்களிடத்தில் ஒரு புரிதல் வரவேண்டும், அதன் பின்னர் இவர்களிடம் எல்லாம் சொல்லிக்கொள்ளலாம் என்று.
“இங்க பாரு ஜோதி, என் பொண்டாட்டி கழுத்தறுத்தாலும் நான் சொல்லுறத வெளில சொல்ல மாட்டா. இருந்தாலும் நான் இத்தனை வருஷமா ஏன் சொல்லாம இருக்கேன்? ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல எல்லாருமே உணர்ச்சிவசப்பட்டுடுவோம். அதனால வார்த்தைகள் நம்மை அறியாம வந்திரும்…” என்றவர்,
“உங்களுக்கே ஜெகன் காலேஜ்ல வச்சு நீங்க விஜய்யை பார்த்ததால தானே சொன்னான். இல்லன்னா அப்பாவும் அவன் சொல்லியிருக்கமாட்டான். எல்லாத்துக்கும் ஒரு நேரம் காலம் வேணுமப்பா…” என்றுவிட்டார்.
அவரின் பேச்சை மீறி ஜோதியும் இங்கே யாரிடமும் சொல்லவில்லை. ரஞ்சனியை தனியே பழனிக்கு அனுப்ப கூடாதென்றும் சொல்லிவிட்டார் ஜெகனின் தந்தை.
“நீ போகும் போது கூட்டிட்டு போய்ட்டு கூட்டிட்டு வா…” என்றவர் ரஞ்சனியிடம்,
“இங்க பாரும்மா, இவ்வளவு சிரமமும் உன் தங்கச்சிக்காக மட்டுமில்ல, அந்த பையனுக்காகவும் தான். ரெண்டுபேரும் நல்லா இருக்கனும்னு நினைக்கிதோம். உனக்கும் அந்த நினைப்பு இருந்தா கொஞ்சம் வைராக்கியமா இறுக்கி பிடிச்சுக்கோ உன் அப்பா பாசத்தை. அவ்வளவுதான்…” என்று சொல்லிவிட்டார்.
அந்த வீட்டில் அவர் பேச்சுக்கு என்றைக்கு மறுப்பிருந்திருக்கிறது? எப்போதுமே மாமனார் மேல் அப்படி ஒரு மரியாதை இருக்கும் ரஞ்சனிக்கு. இப்போது அவரே விஜய்க்கு ஆதரவாக இருக்க ரஞ்சனி முழுமனதாக அதை ஏற்றுக்கொண்டாள்.
அதிலும் விஜய்யின் முழு விவரமும் அறிந்த பின்னும் மருகவில்லை என்றால் தான் என்ன மனுஷி என்ற எண்ணமும் வியாப்பித்தது.
இப்படி அவர்களின் மாற்றத்திற்காக குடும்பமே காத்துக்கொண்டிருக்க மாற்றம் கொண்டிருந்தவளோ விலகியே இருக்க மாற வேண்டியவனின் பார்வை இப்போது எல்லாம் பவித்ராவின் பார்வை மாற்றங்களை கவனிக்க ஆரம்பித்தது.
தன் பார்வை தான் தவறா? இல்லை உண்மையிலேயே பவித்ராவின் முகபாவனையில், அவளின் பார்வையில் ஏதேனும் ஒளிந்திருக்கிறதா என்று அவளை முன்பை விட கவனிக்க ஆரம்பித்தான்.
சாதாரணமாக பார்ப்பது போல் இருந்தாலும் அவனின் மனது அப்படி இல்லவே இல்லை என்று அடித்து கூறியது.
அதனாலேயே விஜய்யால் சாதாரணமாக இருக்கமுடியவில்லை அங்கே. எரிச்சலுடன் அவளிடம் கடுமையாக நடந்துகொண்டாலும், கண்டுகொள்ளாமல் இருந்தாலும் பவித்ராவின் பார்வை மாறவே இல்லை.
போதாததிற்கு பவித்ரா இப்போதெல்லாம் அஷ்வினியை பார்க்கும் போது ஒரு அழுத்தத்துடன் கடக்க அவளோ முறைத்துக்கொண்டே தான் இருந்தாள்.