அன்று விஜய்யுடன் முழுதாய் பேசமுடியாமல் வந்து இடையிட்டவள், அதற்கும் மேல் ஏற்கனவே பவித்ரா வந்து சேர்ந்த அன்றே விஜய் அவளை அழைத்து பேசியபோது தானுமே அதை கவனித்தது என அஷ்வினிக்கு பவித்ராவை பார்க்கும் நேரமெல்லாம் பற்றிக்கொண்டு தான் வரும்.
விஜய் மறுத்துவிட்டாலும் அஷ்வினியால் பவித்ராவை அப்படியே விடமுடியவில்லை. அதென்ன இவளுக்கு இப்படி ஒரு பார்வை என்று அன்று தன்னை கடந்து செல்பவளை அழைத்தே கேட்டுவிட்டாள்.
“ஹேய் நில்லு, நீ என்ன இந்த பக்கம்?…” என்று அஷ்வினி கேட்க,
“லேப்க்கு போறேன் மேம்…”என்றாள் பவித்ரா.
“அதென்ன பார்க்கும் போதெல்லாம் தெனாவெட்டா ஒரு பார்வை? நானும் கவனிச்சுட்டே வரேன். அன்னைக்கு ஸ்டாஃப் ரூம்ல பார்த்ததுல இருந்தே நீ என்னை இப்படித்தான் பார்க்கற…” என்றாள் அஷ்வினி.
“இல்ல மேம், நான் நார்மலா தான் பார்க்கறேன்…” என்றாள் அவளும் அமைதியுடன்.
“உன் பேச்சு, பாடிலாங்க்வேஜ் எல்லாம் ஹம்பிளான ஒபிடியன் கேர்ள் மாதிரி தான் இருக்கு. ஆனா இந்த பார்வை? ஹ்ம்ம், சம்திங்…” என்று முடிக்கும் முன்,
“மேம், எனக்கு உங்களை தெரியாது. நான் எப்பவும் போல தான் இருக்கேன். நீங்களா தான் எதோ நினைச்சுட்டு பேசறீங்க…” என்று பவித்ரா சொன்னாலும் அவளின் துளைக்கும் பார்வையை அஷ்வினியால் கடக்கமுடியவில்லை.
“ஹேய் கேர்ள் இங்க என்ன பன்ற?…” என்றான் விஜய்.
அவனின் குரலில் இருவருமே திரும்பி பார்க்க பார்த்ததும் மலர்ந்து சிரித்தாள் அஷ்வினி.
அதை தன்னையறியாமல் ஒரு கடுப்புடன் பவித்ரா பார்த்துவிட அவளின் முகபாவனையை நொடிபொழுதில் கண்டுகொண்டவன்,
“உன்னை தான கேட்கறேன் இங்க என்ன?…”
“லேப்க்கு போகனும் ஸார்….”
“அப்போ போக வேண்டியது தானே? டைம் ஆச்சே…” என தன் வாட்சை பார்த்தவன்,
“உன் வொய்ட் கோட் எங்க?…” என்றான் கடுமை பூசிய முகத்துடன்.
“க்ளாஸ் ரூம்ல…”
“கோ…” என்று ஒற்றை வார்த்தையில் அவளை விரட்டியவன் தானும் அஷ்வினியை தாண்டிக்கொண்டு லேபை நோக்கி நடக்க தன்னை கொஞ்சமும் கண்டுகொள்ளாத அந்த தன்மையில் அஷ்வினியின் முகம் கருத்தது.
விஜய்யிடம் இரண்டுமுறை பேச முயன்று அவன் அதற்கு வாய்ப்பே தரவில்லை. இன்றானால் பவித்ராவிடம் பேசும் நேரம் அவளை காப்பாற்றுவதை போல அவன் செய்ததை கொஞ்சமும் ஏற்கமுடியவில்லை.
“விஜய் ஸார்…” என்று அவனை அழைக்க எரிச்சலுடன் திரும்பி பார்த்தவன்,
“லுக், உங்ககிட்ட ஒருதடவை தான் நோ சொல்ல முடியும். நோ நோ தான். அன்டர்ஸ்டேன்ட்…” என்று சொல்லிவிட்டு அவன் செல்ல தனது கோட்டை எடுத்துக்கொண்டு ஓடிவந்த பவித்ராவும் இதனை பார்த்துவிட்டு விஜய்யின் பின்னே சென்றாள் ஒருவித மகிழ்ச்சியுடன்.
“அதானே பார்த்தேன்…”என்று விஜய்யை தாண்டிக்கொண்டு செல்லும் போது அவள் சொல்லிவிட,
“ஹேய் நில்லு. இப்ப என்ன சொன்ன?…” என்றான்.
“எனக்கு சொன்னேன் ஸார். கீழே விழ போனேன். அதான் பார்த்து பார்த்துன்னு…” என்று சொல்ல,
“ம்ஹூம், நீ சரியில்லை. என்னை சீண்டி பார்க்காத அவ்வளோ தான். உள்ள போ…” என்று அவளை பல்லை கடித்தபடி சொல்லிவிட்டு லேப் கதவை திறந்துகொண்டு உள்ளே செல்ல ஒரு சிரிப்புடன் பவித்ராவும் பின்னே சென்றாள்.
கிட்டத்தட்ட அந்த இரண்டு மாதமும் பவித்ராவின் பார்வைக்கான அர்த்தத்தை ஓரளவு யூகித்தவன் அது உண்மையா பொய்யா என்னும் ஆராய்ச்சியில் இருந்தான்.
தனக்கு தான் அப்படி தோன்றுகிறதா என்பதை போல அவன் நினைத்து சமாதானம் செய்வதற்குள் மீண்டும் அவனை அப்படி பார்த்துவைத்து குழப்பிவிடுவாள்.
எதுவோ ஒன்று, ஆனால் அவளை பற்றி நினைக்க கூடாது என்று உறுதியுடன் இருந்தான்.
அன்று விடுமுறை நாள் என்பதால் காலை ஆகாஷிற்கு அழைத்து வெளியில் செல்லவேண்டும், ப்ரீயாக இருந்தால் வாயேன் என்று சொல்ல அவனோ அண்ணனின் வீட்டில் இருப்பதாக மறுத்துவிட்டான்.
பிரனேஷ் அவனாக வந்தால் தான் உண்டு. ஹாஸ்பிட்டல் லேப் என்று அதில் தான் இருப்பான். அதனால் அவனை அழைக்கவும் மனமில்லாமல் தானே கிளம்பினான்.
அந்த விபத்திற்கு பிறகு ஆகாஷின் உடல்நிலை தேறவும் சென்னைக்கே வந்துவிட்டான் ஆகாஷ்.
பூர்வீகம் விஜய், ஆகாஷ் இருவருக்கும் ஒன்று என்றாலும் பிரனேஷ் சென்னையை சேர்ந்தவன். படிப்பு மூவரையும் ஒன்று சேர்த்தது.
ஆகாஷும், ப்ரனேஷும் படிப்பு முடிந்ததும் அந்த துறையின் மருத்துவப்பிரிவில் சேர்ந்து தொழிலை தொடங்க விஜயக்கோ கற்றுக்கொடுப்பதில் இருந்த தீராகாதல் அவனை அதை தாண்டி யோசிக்கவிடவில்லை.
“எத்தனை படிப்புகள் வேணாலும் இருக்கலாம். ஆனா சொல்லி தரதும், பல மாணவர்களை திறம்பட செதுக்குவதும் ஆசிரியர்களுக்கே உண்டான திறமை. அது எல்லாருக்குமே வராது…” என மாதவன் எப்போதுமே பெருமிதமாக சொல்லுவார்.
தந்தையை போலவே பிள்ளையும் அதில் திறமை வாய்ந்தவனாக இருக்க அவனின் ஆர்வமும் அதற்கு தீனியாக பெற்றோர்களின் உற்சாகமும் விஜய்யை ஒருமனதாக கற்றுவிக்கும் பணியில் ஆழ்த்தியது.
விஜய் இப்போது மகன் அவரின் பணியை செவ்வனே செய்ய அதற்கு உறுதுணையாக ஆகாஷ், பிரனேஷ் மற்றும் அவர்களின் குடும்பங்கள். எப்போதுமே அவனை தாங்கும் ஜெகனும், அவனின் தந்தையும்.
உண்மையில் அவன் ஆசிர்வதிக்கப்பட்டவன் என்றே பலர் நினைத்து அதை பேசினாலும் அவனறிந்தது, எத்தனை மனிதர்கள், உறவுகள் தாங்கினாலும் தாயின் மடியும், தந்தையின் ஸ்பரிசமும் இல்லாதவனுக்கே அதன் அருமை புரியும்.
இதோ மாதவனை பார்க்க செல்ல வேண்டும். மறுவாரம் மாதவனை பார்க்க செல்லவிருப்பதால் அவருக்கு ஏதேனும் வாங்கி செல்ல என்று அந்த மாலிற்குள் நுழைந்தான்.
அங்கிருந்த புக் ஷாப்பிற்குள் சென்றவன் தனக்கு தேவையான இரண்டு புத்தகங்களை வாங்கிவிட்டு, மாதவனுக்கு மூன்று உடையும், இன்னும் சில பொருட்களும் என்று வாங்கிக்கொண்டு கிளம்பியவனுக்கு பசி எடுக்கவே அருகில் இருந்த தலப்பாக்கட்டிக்குள் நுழைந்தான்.
கீழே அன்டர்க்ரவுண்டில் காரை பார்க் செய்யும் போதே ஆகாஷின் காரை போல இருக்க, பார்த்தால் அதுவே தான்.
“உடம்பு சரியில்ல, அண்ணன் வீட்டுல இருக்கேன்னு சொல்லிட்டு இங்க என்ன பன்றான்? அதுவும் கார்ல?…” என்றபடி நகர அங்கே பைக்கில் பிரனேஷ் பைக்கும் இருந்தது.
‘என்னடா இது?’ என்று கையை தட்டிவிட்டு மேலே சென்றவன் ஆகாஷ் தென்படுகிறானா என பார்த்துக்கொண்டே நேராக கை கழுவுமிடத்திற்கு செல்ல,
“பார்த்து வரமாட்டீங்களா ஸார்?…” என்றவனின் குரலில் தான் நிமிர்ந்தான் விஜய்.
“அடேய்…” என ஆகாஷ் அதிர்ந்து விழிக்க விஜய்,
“இங்க என்னடா பன்ற நீ?…” என்று கேட்டதும்,
“இவன் தான் கூப்பிட்டான்…” என்று தனக்கு பின்னால் இருந்த ப்ரனேஷை இழுத்து முன்னே நிறுத்த,
“கையை கழுவ விடாம என்னடா இழுக்கற?…” என்றபடி ஆகாஷை தாண்டியவன் பார்வை விஜய்யிடம் நிற்க இருவருமே திருட்டுமுழி முழித்தனர்.
“உடம்பு சரியாகிடுச்சு போல?…” என விஜய் கேட்க ‘ஆமாம்’ என்ற ஆகாஷ் ‘இல்லை’ என்று உடனே தலையசைத்தவன்,
“அது வந்து…” என ஆரம்பிக்கும் முன்,
“என்ன இங்கயே நின்னுட்டீங்க. நகருங்க…” என்று வந்து நின்றாள் ரஞ்சனி.
அவளை பார்த்ததுமே விஜய்க்கு புரிந்துவிட்டது. யார் யார் வந்திருக்கிறார்கள் என்று. விஜய்யை பார்த்ததும்,
“என்னங்க?…” என்றாள் பின்னால்.
“ஏன் ரஞ்சு, போய் ஆடர் பன்றதுக்கென்ன? கையை கழுவினா இடத்தை காலி பண்ணுங்க? மறைச்சுட்டு நிக்கறீங்க? மனுஷன் அவசரத்துக்கு போய்ட்டு வர முடியுதா? இன்னும் எங்கலாம் போக வேண்டியதிருக்குது? போய் எனக்கு மட்டன் பிரியாணியை ஆடர் போடு. மசமசன்னு நின்னுட்டு….” என்று தன் கையை நன்றாக கழுவிவிட்டு வாசலை மறைத்தபடி நின்றவர்களை தள்ளிவிட்டு முன்னே வந்தவன் விஜய்யை பார்த்ததும்,
“ஐயோ இவனா?…” என்று மீண்டும் ரெஸ்ட்ரூம் ஓட பார்த்தான். கப்பென்று அவனின் கையை பிடித்த விஜய்,
“காலையில கால் பண்ணும் போது கூட பழனில இருக்கேன். மலையேற போறேன். பிரண்ட் பால்காவடி எடுக்கறாங்க. அங்க போறேனீங்க? இதானா?…” என முறைத்தவன்,
“மலையேறும் ஆசாமிக்கு மட்டன் பிரியாணி கேட்குதோ?…” என்று கேட்டதும் அசடு வழிந்தான். ஆகாஷ், ப்ரனேஷை பார்த்துவிட்டு,
“உங்களுக்கு எல்லாம் என்னடா?…” என விஜய் அதட்ட,
“எங்கட்ட எதுவும் கேட்காத. எல்லாம் ஜெகாண்ணா ப்ளான். எண்ணம், ஆக்கம், வசனம் எல்லாம் அண்ணா தான். நாங்க எல்லாம் கொசுறு…” என ஆகாஷ் சொல்ல,
“டேய் அநியாயம்டா. பதினாலு வயசு பொண்ணுக்கு அப்பன்டா நானு. என்னமோ ராபரிக்கு ஸ்கெட்ச் போட்டுக்குடுத்தா மாதிரி போட்டு குடுக்கறீங்களேடா?…” என்று ஜெகன் புலம்ப,
“இன்னும் எத்தனை வருஷத்துக்கு இதே டயலாக் சொல்லுவீங்க?…” என்றான் விஜய்.
“என்ன டயலாக்டா?…” என ஜெகன் கேட்க,
“பார்த்தியாடா பிரனேஷ், அண்ணனுக்கு தில்ல. என்ன டயலாக்க்கு விஜய்க்கிட்டையே கேட்கிறத?…” என்று ஆகாஷ் மீண்டும் வம்பு பண்ண,
“அடேய் இருங்கடா, நான்-சிங்ல பெர்பாமென்ஸ் பண்ணாத….” என்று ஆகாஷை ஒரு அடி போட்டான் ஜெகன்.
அவனின் செயலில் விஜய் சிரித்துவிட மூவரின் வயிற்றிலும் ஆளுக்கொரு குத்துவிட்டான்.
“என்கிட்டே சொல்லியிருந்தா நானும் வந்திருப்பேன்ல?…” என்று அவன் சொல்லவும்,
“மாப்ள…” என்றான் ஜோதி விஜய்யை பார்த்து.
அவனை பார்த்ததுமே முகம் மாற அவனை ஒட்டிக்கொண்டு வந்து நின்றாள் பவித்ரா.
“ஆக, ப்ளான் பண்ண கும்பலா வந்திருக்கீங்க. இல்லையா?…” என்று ஜெகனை முறைத்தான் விஜய்.
“இப்பதானடா சிரிச்ச?…” என்று ஜெகன் சொல்லும் பொழுதே,
“ஏன் மாமா, மாப்பிள்ளையை கூப்பிட்டிருக்கோம்னு சொல்லவே இல்லை. சப்ரைஸா?…” என ஜோதி கேட்டுவைக்க அவனுக்கும் சேர்த்து ஜெகனையே முறைத்தான் விஜய்.
“வாய மூடுடா. சும்மா போறவனை சொரிஞ்சு விடுற…” என்று ஜோதியை அடக்கியவன் அடுத்து பேசும் முன்,
“அப்பு, அவரை நம்மோட சாப்பிட சொல்லுடி….” என தங்கையை முன்னிழுத்தாள் ரஞ்சனி.
“ஆமா ஸார். இன்னைக்கு எங்களோட லஞ்ச் சாப்பிடலாமே?…” என்று பவித்ரா அவனின் கோபத்தை பார்த்து தயங்கியவாறு சொல்ல,
“என்ன ஸார் மோருன்னு? அவரு யாருன்னு தெரியும்ல. மரியாதையா மாமான்னு கூப்பிடு…” என்று அடுத்த வெடியை போட்டாள் ரஞ்சனி.
பற்றிக்கொண்டதென்னவோ விஜய்க்கு தான். அத்தனைபேரையும் அழுத்தமாய் பார்த்தவனின் பார்வையே ஒன்றும் சரியில்லை.
“இப்படி தொக்கா மட்டுவோம்னு தெரிஞ்சிருந்தா பேசாம வேற ஹோட்டல் போயிருந்திருக்கலாம்…” என்று ஆகாஷிடம் ஜெகன் முணுமுணுக்க,
“இதை அவன்கிட்ட நேராவே சொல்லியிருக்கலாம். நான் தான் பொய் சொன்னேன்னா நீங்க ஏன் சொன்னீங்க?…” என ஆகாஷ் கேட்கவும்,
“நீ சொல்லவும் தான் நானும் பொய் சொன்னேன்…” என ஜெகன் மல்லுக்கு நின்றான்.
“நல்லவேளை என்கிட்டே இவன் கேட்கவே இல்லை…” என்று பிரனேஷ் நெஞ்சில் கை வைக்க,
“அதானே? ஏன்டா அவன்கிட்ட மட்டும் நீ கேட்கலை? அப்ப நான் என்ன தக்காளி தொக்கா?…” என்று ஆகாஷ் விஜய்யிடம் கேட்டான்.
“அதென்ன நான் மட்டும்? என்னை விட்டுட்ட?…” என ஆகாஷை பார்த்து சொன்ன ஜெகன்,
“உள்ளூர்ல இருக்கறவன விட்டுட்டு நீ ஏன்டா என்கிட்டே மட்டும் கேட்ட? அப்ப நான் என்ன தொக்கா?…” என்று விஜய்யை ஜெகன் கேட்க என மாறி மாறி பேசிக்கொண்டிருந்தார்கள்.
“இதென்ன வம்பா போச்சு? எதுவானலும் அவன்கிட்ட நேரடியா பேசுங்க. என்னை வச்சு பேசாதீங்க…” என பிரனேஷ் பேச அங்கே சாப்பிட்டு முடித்து கை கழுவ வந்த ஒருவர் அவர்கள் மூவரையும் பார்த்துவிட்டு,
“பார்த்தா வளர்ந்த பசங்களா இருக்கீங்க? கை கழுவற இடத்துல ஏம்ப்பா கலவரம் பண்ணிட்டு இருக்கீங்க? அங்கிட்டு போய் போடுங்க உங்க குடும்ப சண்டையை…” என்று சொல்லிவிட்டு போக,
“சண்டையா போட்டோமா?…” என்றார்கள் மூவரும் ஒருவர் மாற்றி ஒருவர்.
கோபத்துடன் முறைத்துக்கொண்டிருந்த விஜய்யின் முகத்தில் இளக்கம் தோன்ற இதழ்களில் புன்னகை விரிந்தது.