உருக்கம் – 15
விஜய்யின் முகத்தில் தெரிந்த சிரிப்பில் கொஞ்சம் நிம்மதியான ஜெகன் உடனே அவனின் கையை பிடித்துக்கொண்டு,
“வாடா சேர்ந்தே சாப்பிடுவோம். முதல்ல சொல்லாததுக்கு இப்போ சொல்லிட்டேன்ல. பாரேன், நம்மளை அந்த சாமியே சேர்த்து வைச்சுடுச்சு…” என்று பேச,
“ஆமா மாப்பிள்ளை. வாங்க எல்லாரும் சுமூகமா பேசுவோம்…” என்று முன் வந்து நின்றான் ஜோதி.
அவர்களின் அலப்பறையில் லேசாய் சிரித்திருந்தவன் மீண்டும் ஜோதி வந்து மாப்பிள்ளை என்று உரிமையுடன் தன்னை நெருங்கவும் சுருக்கென்றது விஜய்க்கு. உடனே ஜெகனை பார்த்து,
“ண்ணா, கையை விடுங்க முதல்ல…” என்றவன் பவித்ரா, பரஞ்ஜோதியை பார்த்துவிட்டு,
“அதான் முடிவு பண்ணி வந்தாச்சுல. அப்பறம் எதுக்கு? நீங்களே சாப்பிடுங்க…” என்றவன் கிளம்பிவிட்டான்.
“டேய் நில்லுடா…” என்ற ஆகாஷின் சத்தத்தில் கூட நிற்கவில்லை.
விஜய் கிளம்பவும் அனைவருக்குமே ஒருமாதிரி ஆகிவிட்டது. தங்களுடன் சேர்ந்து இருப்பதில் கூட இவனுக்கு பிரச்சனையாக இருக்கிறதோ என ஜோதி மனம் கலங்க,
“என்ன மாமா இது? இவ்வளவு கோவப்படறார்?…” என ஜெகனிடம் கேட்க,
“உங்கப்பா பண்ணின வேலைக்கு உன்ன பார்த்ததும் நீ மாப்பிள்ளைன்னு கூப்பிட்டதும் சட்டைய புடிக்காம விட்டானே?…” என்றவன் கூட கொஞ்சம் கவலையானான்.
“ண்ணா, இவனை இப்படியே விட்டா இன்னும்ல ஏறுவான். என்ன பண்ணலாம்?…” என்று பிரனேஷ் கேட்க,
“ஆமாடா, என்னையே கேளுங்க. இப்ப என்ன பன்றது?…” என்று யோசிக்க,
“சாப்பிட்டுட்டே யோசிப்போமா?…” என்றாள் ரஞ்சனி.
“அங்க அவன் சாப்பிடாம போயிருக்கான். உன்னைய…” என்றவனுக்கு அப்போது தான் பளிச்சென்ற ஒரு யோசனை.
“டேய், சரியாத்தான்டா சொல்ற நீ. இவனை இப்படியே விட்டா எல்லாத்துக்கும் நாம தான் தலையாட்டனும்….”
“சொல்லுங்கண்ணா, இப்ப நாங்க என்ன பண்ணனும்?…” என்று ஆகாஷ் வந்து இல்லாத டிஷர்ட் கையை மடிப்பதை போல ஆக்ஷன் காண்பித்தான்.
“இப்ப என்னத்துக்கு ஆர்ம்ஸை தூக்கிட்டு ஆம்லேட்க்கு வெய்ட் பன்றவன் மாதிரி நிக்கிற? அவனை பார்த்ததும் பம்மிட்டு இப்ப என்ன பண்ணனுமாம்?…” என்று ஆகாஷை ஜெகன் வாரிவிட்டான்.
“இன்னுமாப்பா நீங்க போகலை? உங்களை பார்த்தா சாப்பிட வந்த மாதிரியே தெரியலையே. வழிய விடுங்கப்பா….” என்று கையை கழுவ உள்ளே சென்றவர் மீண்டும் வெளியே இவர்களை திட்டிக்கொண்டு செல்ல,
“நகர்ந்து வந்து நில்லுங்களேன்டா. இன்னும் எவனாச்சும் வந்து திட்டாம. அப்படியே கதவை திறந்துவிட நிக்கிற செக்யூரிட்டி மாதிரி ஆளுக்கொருபக்கமும் இவன் நட்டநடுவிலயும் பாதையை மறிச்சு நின்னா இன்னும் ஏசுவானுங்க…” என்று அவர்களுடன் நகர்ந்து வெளியே வந்தான்.
“என்ன வெளில கூட்டிட்டு வந்துட்டீங்க?…” என்று ரஞ்சனி கேட்க,
“அப்பு உனக்கு என்னடா வேணும்?…” என்றான் ஜெகன்.
“எதுக்கு மாமா?…” என அவள் கேட்க,
“அதுசரி, உன் நினைப்பு இங்க இல்ல போல?…” என்றதும் மீண்டும் அமைதியாக வெளியே சாலையை வெறித்தாள்.
அப்போது தான் விஜய்யின் கார் கீழே பார்க்கிங்கில் இருந்து வெளியேறியது. அதை பார்த்ததும்,
“மாமா, அவங்க இப்போ தான் கிளம்பறாங்க. அங்க பாருங்க…” என்று காட்டவும்,
“டேய் பிரனேஷ், நீயும் ஜோதியும் இங்க இருந்து சாப்பாடு வாங்கிட்டு வாங்க. நாங்க விஜய் எங்க போறான்னு பார்க்கறோம். ஆகாஷ் காரை எடு…” என அவனை கீழே அனுப்ப,
“வாங்கிட்டு வாங்கன்னா எங்க வாங்கட்டு வர?…” என்றான் அவன்.
“விஜய் வீட்டுக்கே வாங்கிட்டு வாங்கடா…” என்று சொல்லிய ஜெகன்,
“ஹ்ம்ம், எல்லாரும் கீழே போங்க. இன்னைக்கு லஞ்ச் விஜய் கூட தான் நமக்கு….” என்று சொல்ல ப்ரனேஷ்க்கு ஒன்றும் புரியவில்லை.
“எல்லாருக்கும் என்ன வேணும்னு மெசேஜ் பன்றேன்டா. இல்லனா நீங்களே பார்த்து வாங்கிட்டு வாங்க. நமக்கென்ன புதுசா? உனக்கு தெரியாதா?…” என சொல்லிக்கொண்டே இறங்கி சென்றுவிட்டான்.
“இன்னைக்கு என்ன நடக்க போகுதோ?…” என பிரனேஷ் சொல்ல,
“ஏன் ப்ரென்ட், மாப்பிள்ளை உங்க ப்ரென்ட் தானே?…” என ஜோதி விளக்கம் கேட்க,
“பார்க்க தான போறீங்க. பார்த்து தெரிஞ்சுக்கோங்க…” என்று பிரனேஷ் சொல்லிவிட்டு அத்தனைபேருக்கும் விஜய்க்கும் சேர்த்தே ஆடர் செய்து வாங்கிக்கொண்டு செல்ல ட்ராபிக்கில் சரியாக ஒருவர் பின் ஒருவராக வீடு வந்து சேர்ந்தார்கள்.
விஜய் காரை பார்க் செய்துவிட்டு மாடி ஏறி வீட்டை திறந்து உள்ளே தான் சென்றிருப்பான் ஆகாஷும் அவனின் பின்னோடே ப்ரனேஷும் வந்துவிட்டான்.
“இந்த சாப்பாட்டை கார்ல வச்சிருப்போம். அப்பறமா வந்து எடுத்துப்போம்…” என பிரனேஷ் சொல்ல,
“அதெல்லாம் வேண்டாம். எல்லாரும் பின்னால வாங்க…” என்று ஜெகன் சொல்ல ஆகாஷும், ப்ரனேஷும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.
“இதான் விஜய் வீடா?…” என ரஞ்சனி கீழிருந்தே மேலே இருந்த வீட்டை பார்க்க பவித்ராவிற்கு திக்கென்று இருந்தது.
எல்லோரும் இப்படி கிளம்பி வந்திருக்க ஏதாவது சொல்லி காயப்படுத்தும்படி பேசிவிடுவானோ என்று பயந்துகொண்டே நின்றாள்.
“ரஞ்சு இப்படி வா…” என பின்னே பவித்ரா அருகில் நின்றவளை முன்னால் அழைத்தான்.
“ஜோதி உனக்கும் தான். அக்காவுக்கும் தம்பிக்கும் சேர்த்தே சொல்றேன். அங்க வந்து அனாவசியமா வாயை திறக்க கூடாது. அவன் சுள்ளுன்னு பேசினாலும் கம்முன்னு நினக்கனும். நான் சமாளிச்சுப்பேன். புரியுதா?…” என பாடம் நடத்த ஆகாஷ் வாயை பொத்தி சிரித்துவிட்டான்.
“அடேய், சும்மா இருங்கடா…” என்று அவனை முறைத்துவிட்டு,
“புரியுதா ரஞ்சு?…” என்றான்.
“எதாச்சும் ஏடாகூடமா வாய விட்ட உன் சித்திக்கிட்ட கொண்டுபோய் தனியா விட்டுட்டு வந்துருவேன். பார்த்துக்கோ…” என்று சொல்ல,
“இது உலகப்போர் மிரட்டல் ரேஞ்ச்ல இருக்கே….” என பிரனேஷ் சிரிக்கவும்,
“இல்லை இல்லை. நான் எதுவும் பேசமாட்டேன். அவரு எதாச்சும் கேட்டா கூட நீங்க சொல்ற மாதிரி தான் சொல்லுவேன்…” என்று சமத்தாய் தலையசைக்க,
“நம்பலாமா?…” என்றான் ஜெகன்.
“ண்ணா, நீங்க பேசி முடிவெடுங்க. நானும் இவனும் டிக்கிலையே உட்கார்ந்து சாப்பிட்டு வரோம்…” என்ற ஆகாஷ்,
“டேய் எடுடா அந்த பார்சலை….” என்றதும் அவனின் கழுத்தில் கையை வைத்து முன்னால் இழுத்தவன்,
“மரியாதையா கூட வா…” என்று கூட்டிக்கொண்டு சென்று மாடியில் கதவை தட்டினான்.
“ண்ணா பெல்…” என ப்ரனேஷ் ஞாபகப்படுத்த பவித்ரா, ரஞ்சனி, ஜோதி மூவருக்கும் ஆச்சர்யமாகவும் சிரிப்பாகவும் இருந்தது.
அவர்கள் அறிந்திருந்த ஜெகன் வேறு. அழுத்தமும், கோபமும், திருத்தமான பேச்சும் என்று அத்தனை முதிர்ச்சியான பக்குவமான ஆண்மகன்.
இங்கே இவர்களுடன் சேர்ந்து அவன் அடிக்கும் லூட்டியில் அந்த ஜெகனுக்கும் இந்த ஜெகனுக்கும் அத்தனை வித்யாசங்கள்.
அதிலும் அவர்களிடம் ஜெகன் புலம்புவதும், குழைவதும், மாட்டிக்கொண்டு முழிப்பதும் என்று பார்க்கவே சந்தோஷமாக இருந்தது.
“எவ்வளவு நேரமா மாமா தட்டுவீங்க?…” என ஜோதி வேகமாய் கலிங் பெல்லை போட்டு அழுத்த,
“அடேய்…” என்று ஜெகன் பேசும் முன்னே கதவை திறந்தான் விஜய்.
முகம் கழுவியிருப்பான் போலும். முகத்திலும் டிஷர்ட்டிலும் என துடைத்தும் துடைக்காமலும் இருந்தன நீர்த்திவலைகள்.
விஜய்க்கு இவர்கள் அத்தனைபேரையும் சேர்த்து தன் வீட்டில் பார்த்ததுமே திகைத்துவிட்டான் ஒருநொடி. ஒரு நொடிதான் அவனின் திகைத்த முகம் எல்லாம்.
அடுத்த நிமிடம் இது யார் காரணம் என்று தெளிவாய் கண்டுகொண்டிருந்தவன் முழுமூச்சாய் ஜெகனை தீயாய் முறைத்தான்.
“ஐயோ முறைக்கானே?…” என பார்சலுடன் பிரனேஷ் பின்னால் நகர்ந்துவிட்டான்.
ஆகாஷும் சற்று பின்னால் நகர்ந்து இவர்கள் பேசட்டும் என்று ஒதுங்குவதை போல திரும்ப,
“எங்கடா போற?…” என்று அவனின் சட்டையை பிடித்துக்கொண்டு அவ்விடத்திலேயே ஜெகன் நின்றான்.
“ஆனாலும் ஜெகாண்ணா உங்களுக்கு தைரியம் தான். அவன் இவ்வளவு முறைச்சும் முன்னால நிக்கறீங்க பாருங்க. அதுவும் குடும்பத்தோட கூட்டிட்டு வந்து…” என்ற ஆகாஷை கிள்ளினான்.
“சும்மா இரேன்டா…” என்ற ஜெகன் மனதிற்குள், ‘பயத்தை காட்டாம உடம்பை இரும்பாக்கிக்கோடா கரிகாலா’ என்று மூச்சை இழுத்துவிட்டான்.
“இங்க எதுக்கு வந்தீங்க?…” என விஜய் கோபமாக கேட்க,
“ண்ணா உங்களைத்தான்…” என்று பிரனேஷ் பின்னால் இருந்து ஜெகனை பிடித்து இன்னும் முன்னே தள்ளிவிட,
“ஆத்தீ…” என்று முன்னே சென்று நின்றவன் சமாளித்துவிட்டு விஜய்யை பார்க்காமல் மனைவியிடம் திரும்பினான்.
“ரஞ்சு போய் பாப்பாவுக்கு தண்ணிய குடு. என்னா வெயிலு என்னா வெயிலு. வர வழியெல்லாம் தாகம்ன்னு பாப்பா தனி கேட்டுட்டே இருந்தா…” என்று சொல்லி ரஞ்சனியை உள்ளே அனுப்ப பார்த்தான்.
“இதை நீங்க கீழ சொல்லையே. பேசாம இருக்கனும்னு தான் சொன்னீங்க…” என ரஞ்சனி அந்த நேரம் சந்தேகம் கேட்கவும் முட்டிக்கொள்ளலாம் போல இருந்தது.
“இதுங்களை வச்சுக்கிட்டு…” என்று ஜெகன் புலம்ப,
“ஜெகாண்ணா…” என்ற விஜய்க்கு பொறுமை பறந்தது.
ரஞ்சனியையும், அவளின் குழந்தையையும் கூட ஜெகனிற்காக ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் ஜோதி, பவித்ரா இருவரையும் சுத்தமாய் முடியவில்லை.
“அட இருப்பா…” என சொல்லிய ஜெகன்,
“சொன்னா கேட்கமாட்டியா? உள்ள போய் பிள்ளைக்கு தண்ணியை பிடிச்சு குடு…” என்றவன்,
“அம்மு, சித்தப்பாவுக்கு ஷேக் ஹேன்ட் குடு…” என்று தன் பெண்ணை முன்னால் நிறுத்தினான்.
“ஹாய் சித்தப்பா…” என்ற அப்பெண்ணின் கையை படித்து தானும் லேசாய் குலுக்கியவன்,
“ஹாய்…” என்றான் லேசாய் புன்னகைத்து.
“ஹப்பா சிரிச்சுட்டான். அப்பறம் என்ன எல்லாரும் உள்ளே போங்க. போங்க…” என்று விரட்ட பவித்ராவும் ஜோதியும் தயங்கி நின்றார்கள்.
“இவங்க வேற…” என்று ஆகாஷை பார்க்க,
“வாங்க ஜோதி…” என்று அவனை கையை பிடித்து உள்ளே அழைத்து சென்றான் ஆகாஷ்.
எல்லோரும் உள்ளே சென்றுவிட பவித்ரா விஜய்யை ஒரு பார்வை பார்த்துவிட்டு செல்ல முறைத்தவண்ணம் தான் நின்றான் அவன்.
அத்தனைபேரும் உள்ளே சென்றுவிட விஜய் வெளிவாசலில் இருந்த கம்பியை பிடித்தபடி கீழே தெருவை வெறித்தான்.
“விஜய்…” என்று ஜெகன் அழைக்க,
“ஏன் ஜெகாண்ணா இப்படி பன்றீங்க? …” என்றான் விஜய் அவனிடம் ஆயாசத்துடன்.
“தள்ளி தள்ளியே நின்னா எல்லாருக்குமே கஷ்டம்டா விஜய். உன்னை நான் என்ன சொல்றேன்? நாங்க வந்த நேரம் எங்களையும் உன்னோட இருக்க விடு…” என சொல்லும் போதே விஜய்க்கு ஒரு விரக்தி புன்னகை.
“நிறைய ட்ரை பன்றீங்க ஜெகாண்ணா நீங்க. எனக்காக நீங்க ரிஸ்க் எடுக்கறீங்க. ஆனா நோ யூஸ். விட்டுடுங்க. எனக்கு இப்போ மாதிரி இப்படி இருக்கத்தான் பிடிச்சிருக்குது…”