“சரி நீ இப்படியே இருந்துட்டு போ. ஆனா எங்களையும் ஏன் தள்ளி வைக்கற?…” என ஜெகன் கேட்க,
“உங்களை நான் தள்ளிவைக்கனும்னு நினைச்சதே இல்லையே. சொல்ல போனா உங்க வொய்ப், குழந்தை கூட நான் எந்த லைனும் போட்டுக்கலை. இது ஜெகாண்ணாவுக்காக. அவரோட குடும்பம் எனக்கு என்னைக்கும் தூரமாகாது. ஆனா…” என்றவன் ஜோதியையும் பவித்ராவையும் நின்ற இடத்தில் இருந்தே திரும்பி பார்த்தான்.
“அந்த பொண்ணுக்கு என்ன சொல்லி நீங்க இங்க படிக்க அனுப்பினீங்க?…”
“நான் எதுவும் சொல்லலை விஜய்…”
“ம்ஹூம், இல்லை. என்னால் நம்ப முடியலை. அவ பார்வை எல்லாமே மாறி இருக்குது. என்னவோ சரியில்லை…” என சொல்ல ஜெகனின் பெண் வந்தாள்.
“அப்பா, சித்தப்பாவை கூட்டிட்டு சாப்பிட வர சொன்னாங்க அம்மா…” என்றாள் அம்மு.
“வாடா, எங்களுக்காக. எல்லாரும் பசில இருக்காங்க…” என்றதும் விஜய்யும் உள்ளே சென்றான்.
அதற்குள் அங்கே தட்டுக்கள் எல்லாம் எடுத்துவைக்கப்பட்டு ஆகாஷ், பிரனேஷ் சாப்பிட ஆரம்பித்திருக்க பவித்ராவும், ஜோதியும் சாப்பாட்டை தொடாமல் இருந்தார்கள்.
“ண்ணா, அவங்களையும் சாப்பிட சொல்லுங்க. எங்களுக்கு மனுஷங்களை எப்படி நடத்தனும்னு நல்லாவே தெரியும். அந்தளவுக்கு அறிவோட தான் எங்கம்மா என்னை வளர்த்திருக்காங்க…” என்றுவிட்டான் விஜய் படக்கென்று.
“விஜய்…” என ஆகாஷ் சொல்லவும் ரஞ்சனிக்கும், பவித்ராவிற்கும் முகம் தொங்கிப்போனது.
“தப்புத்தான் மாப்பிள்ளை. உண்மையா எங்களுக்கு அதை எல்லாம் சொல்லி வளர்க்கலை தான். வீட்டுல சொல்றதுக்கு தலையாட்டியே பழகிட்டோம். அதனால அதை மீற முடியலை. பழக்கமில்லை. அதனால வந்த தப்பு தான்…” என ஜோதி விஜய்யின் கோபத்தை பெரிதுபடுத்தாமல் பேச விஜய்க்கே என்னவோ போல் ஆனது.
“சரி போதும்டா, உட்கார்…” என்று விஜய்யை கீழே அமரவைத்தவன் தானும் அவனருகே அமர்ந்துகொண்டான்.
“சரி சரி எல்லாரும் சாப்பிடுங்க. எப்பா என்ன பசி? இந்த பிரியாணியை சாப்பிடறதுக்கு இந்த பாடு…” என்று தன் தட்டில் இருந்ததை எடுத்து ஒரு வாய் வைத்தவன் மட்டன் பீஸை தேட அதில் ஒன்றும் இல்லை.
“என்னடா இது? மட்டன் பீஸ் எங்கடா?…” என்றான் ஆகாஷ், ப்ரனேஷை பார்த்து.
“உங்க பிரியாணியை தான் விஜய் எடுத்துக்கிட்டான். குஸ்கா தான் இருந்துச்சு. அதான் உங்களுக்கு…” என ஆகாஷ் சொல்ல,
“லேட்டர் என்ட்ரிக்கு எல்லாம் இப்படித்தான்…” என ப்ரனேஷும் சொல்லி சிரிக்க ஜோதியும் அவர்களுடன் சேர்ந்துகொண்டான்.
பவித்ரா, விஜய்யை தவிர மற்றவர்கள் கலகலப்புடன் பேசி சிரிக்க பவித்ரா விஜய்யையே பார்ப்பதும் உண்ணுவதுமாக இருந்தாள்.
விஜய்யின் நினைவுகளோ முன்பொரு காலத்தில் இப்படி ஆகாஷ் குடும்பமும், தங்கள் குடும்பமும் ஒன்றாக கழிக்கும் நாட்களும், மதுவின் கைமணமும் என கழியும் தருணங்களை தட்டி எழுப்பியது.
‘ம்மா’ இதயம் உள்ளுக்குள் சத்தமிட்டு அலற தொண்டையில் உணவு இறங்குவேனா என்றது.
வாயில்லா ஊமையாய் தன் தவிப்புகளை காற்றோடு கலந்திருக்கும் மதுவிடம் அவன் சேர்ப்பிக்க முயன்றான்.
அவனின் அந்த உணர்வுகளை கண்டுகொண்ட பவித்ராவிற்கு மனது பொறுக்கவில்லை.
“அம்மு, நீ சித்தப்பாவோட போய் பேசிட்டே சாப்பிடுடா. போ…” என்று எழுப்பி அனுப்ப சரி என்ற பெண்ணும் தனது ப்ளேட்டுடன் எழுந்து வந்து விஜய்யின் அருகே அமர்ந்துகொண்டாள்.
“சித்தப்பா சாப்பிடலையா நீங்க?…” என்று அவள் வந்து கேட்டதுமே தன்னுணர்வு வந்தவன்,
“ஹாங், என்னம்மா?…” என்றான் குழந்தையிடம்.
“இல்ல, நீங்க ஒண்ணுமே பேசாம இருந்தீங்க அதான் வந்துட்டேன். சாப்பிடுங்க..” என்றாள்.
“ஓகே குட்டி…” என்றவன்,
“உங்க பேர் என்ன?…” என்று கேட்டபடி உணவை விழுங்கினான்.
“மானஸ்வி…”
“குட்..” என விஜய் சொல்ல,
“உங்களுக்கு என் பேர் இன்னைக்கு தான் தெரியுமா?…” என அம்மு கேட்க,
“முன்னாடியே தெரியும். ஆனா நீ சொல்லலையே…” என்றவன்,
“என்னோட பேர் தெரியுமா?…” என்றான்.
மானஸ்வியுடன் விஜய் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்திருக்க பவித்ராவின் முகம் திருப்தியானது.
“ஓஹ், நல்லா தெரியும். நீங்க யாருன்னு கூட அப்பா கார்ல வரும் போது சொல்லிட்டே தான் வந்தாங்க. நீங்க ஏன் எங்க வீட்டுக்கே வரலை? நாம சொந்தம் தானே?…” என அவள் கேட்க,
“அம்மு, என்ன இதெல்லாம்? இப்படி பேச கூடாது…” என்று ரஞ்சனி அதட்டவும்,
“இருக்கட்டும்ங்க…” என்றான் விஜய் அவனாகவே.
அதற்குள் தாயின் அதட்டலில் மானஸ்வி முகம் வாடிவிட விஜய்க்கும் வருத்தமானது.
“ஆமா, உன் ஏஜ் என்ன?…” என்றன சட்டென ஜெகனை வம்பிழுப்பதை போல.
“ஏன்டா நல்லாத்தான போய்ட்டிருந்துச்சு. இப்ப இதுவரை எதுக்குடா உனக்கு?…” என்று அவன் விஜய் பக்கம் திரும்பி அமர,
“நீ சொல்லுடா…” என்றான் விஜய் ஜெகனின் பெண்ணிடம்.
“பதிமூணு வயசு…” என்றவள்,
“ம்மா, கரெக்ட்டா?…” என்றாள்.
“ஹ்ம்ம், ஆமா கரெக்ட்…” என்று ரஞ்சனியும் சொல்லவுமே விஜய், ஆகாஷ், பிரனேஷ் மூவருமே சிரித்துவிட மற்றவர்களுக்கு புரியவில்லை.
“டேய் அது ஒரு ப்லோவ்ல வாய்தவறி வந்திருச்சுடா. அதையே புடிச்சுக்கிட்டு ஓட்டாதீங்க…” என்றான் அழமாட்டாமல் ஜெகன்.
அதை கேட்டதுமே ஒரு சிரிப்புடன் மானஸ்வியை கூட்டிக்கொண்டு கை கழுவ அழைத்து சென்றாள் பவித்ரா. அவர்கள் எழுந்து செல்லவும்,
“என்ன வாய்தவறிடுச்சு?…” என்று ரஞ்சனி கேட்க,
“உங்க வீட்டுக்காரர் ஆவுனா ஒரு டயலாக் சொல்லுவார். டேய் நான் பதினாலு வயசு பொண்ணுக்கு அப்பன்டான்னு…” என்று பிரனேஷ் கோர்த்துவிட்டான்.
“பதினாலா?…” என ரஞ்சனி ஜெகனை பார்த்தாள்.
“ஆமாக்கா ஹோட்டல்ல கூட மாமா இதை சொன்னாரே. நான் கூட என்ன மாத்தி பேசறாரோன்னு நினைச்சேன்…” என்று ஜோதி ஞாபகப்படுத்திவிட,
“உனக்கு பேச தெரிஞ்சாலும் தெரிஞ்சது எல்லா இடத்துலையும் நீ இப்படி வெடிக்க கூடாதுடா…” என்றான் ஜெகன் ஜோதியிடம்.
“ஆமா, என்னனு கேளுங்க. அதுவும் இன்னைக்கு மட்டும் சொல்லலை. கடந்த அஞ்சு வருஷமா இதான் எங்கக்கிட்ட பேசிட்டு இருக்காரு. இதை எல்லாம் கேட்க மாட்டீங்களா?…” என்று ஆகாஷும் பேச,
“அதானே?…” என்றபடி ரஞ்சனி அவனை கலவரமாக பார்க்கவும்,
“போதும்டா உங்களால முடிஞ்சதை செஞ்சுவிட்டுட்டீங்க. அதையும் பார்த்துட்டு இவ என்னை பார்க்கறா பாருங்க…” என்று சொல்லவும் விஜய்க்கு அப்படி ஒரு சிரிப்பு.
“ண்ணா, நீங்களா இது?…” என்று வாய்விட்டு சிரித்தவன்,
“அப்படியெல்லாம் இல்லைங்க. அப்பப்ப இதை சொல்லி சொல்லியே உளறுவார். அப்ப தான் எங்களை விட பெரியவர்ன்னு நாங்க என்ன சொன்னாலும் கேட்போம்னு சொல்லி. மத்தபடி ஒண்ணுமில்லை…” என ஜெகனுக்கு விஜய் ஆதரவு தந்தான்.
“எனக்கும் அவரை பத்தி தெரியும்…” என்று ரஞ்சனி அந்த நேரம் விட்டுக்கொடுக்காமல் பேச,
“மூஞ்சியை தூக்கி வச்சுட்டு எனக்கு மூச்சே நின்றுச்சு. நீ ஊருக்கு வா மண்டையை பிளக்கறேன்…” என்றான் ஜெகன்.
பின் அனைவரும் உண்டுமுடித்த பாத்திரங்களை எடுத்துவைத்து பவித்ராவும் ரஞ்சனியும் உரிமையோடு விஜய்யின் வீட்டில் புழங்க விஜய்க்கு தான் அதை ஏற்கமுடியவில்லை இன்னும்.
ஒருவித அசாதாரண நிலையிலேயே தான் இருந்தான். என்னதான் பேச்சுக்கள், சிரிப்பு, கலாட்டா என்று நேரம் சென்றாலும் ஜெகனுக்காக என்று பார்த்தாலும் மனதிற்குள் அந்த கசப்புகள் அடிநாக்கில் வந்து அமர்ந்துகொண்டது.
மதுவின் மறைவிற்கு பிறகு இன்றுதான் வீடு நிறைந்தும், அதிகபட்சமான சிரிப்பு சத்தங்களும் என்று ஒருவித இதம் பரவியது.
என்னதான் ஆகாஷ், ஜெகன், பிரனேஷ் என்று வந்தாலும் இன்று அவர்களை தாண்டி இன்னும் சிலர்.
அவர்களை வெளியேயும் போக சொல்ல முடியாமல் ஜெகனின் அன்பிற்கு கட்டுண்டு நின்றான்.
“என்னடா இன்னும் தெளியலையா?…” என பிரனேஷ் விஜய்யிடம் கேட்க,
“நான் எப்பவும் தெளிவு தான். உங்களுக்கு தான் அது புரியலை. அதான் யோசிச்சுட்டு இருக்கேன்…” என்றவன்,
“ஆகாஷ் என்னால இதை ஜெகாண்ணாக்கிட்ட சொல்ல முடியாது. இனி இப்படி ஒரு சூழ்நிலை வந்துச்சுன்னா நான் கேரளாவுக்கே போய்டுவேன். அவ்வளோ தான்…” என பட்டென்று சொல்ல ஆகாஷ், பிரனேஷ் இருவருமே செய்வதறியாமல் நின்றார்கள்.
“விஜய்…” என ஜெகன் வர,
“கிளம்பியாச்சா ண்ணா…” என்றான் விஜய்.
“இதுக்கு நேராவே கிளம்புங்கன்னு நீ சொல்லியிருக்கலாம்…” என்று ஜெகன் சொல்லவும் அமைதியாய் நின்றான் அவன்.
“ஓகே, உன்னை சொல்லியும் தப்பில்லையே. எனக்கு உன்னோட நாங்க எல்லாரும் சேர்ந்து சாப்பிடனும்னு தோணுச்சு. அதான் கூட்டிட்டு வந்தேன். என் தம்பி வீடுன்ற உரிமையில…” என ஜெகன் சொல்ல,
“ண்ணா ப்ளீஸ்…” என்றான் விஜய்.
ஜோதியும், பவித்ராவும் வர ரஞ்சனி அவர்களுடனே மகளுடன் கிளம்பி வெளியே வந்தாள்.
“போலாமா…” என ரஞ்சனி கேக்கவும் தலையசைத்தான் ஜெகன்.
“வரோம்ங்க…” என்ற ரஞ்சனி,
“மன்னிச்சிடுங்க. வேற எதுவும் கேட்க முடியலை…” என்று சொல்லிவிட்டு கீழே இறங்கிவிட்டாள்.
“பை சித்தப்பா…” என மானஸ்வியும் கிளம்பிவிட ஆகாஷும், ப்ரனேஷும் சொல்லிக்கொண்டு கீழே சென்றார்கள்.
ஜெகன் தலையசைத்துவிட்டு கீழே இறங்கிவிட பரஞ்ஜோதி விஜய் அருகே வந்து நின்றான்.
தன்னிடம் பேசத்தான் வருகிறான் என்று தெரிந்து இறுக்கத்துடன் விஜய் நிற்க அவனின் தோரணையே ஜோதியை தயங்க செய்தது.
“மாப்பிள்ளை…” என்று அழைத்ததுமே அவனை முறைத்தவன்,
“பேர் சொல்லியே கூப்பிடுங்க. இந்த உறவு வேண்டாம்…” என்றவனின் பார்வை பவித்ராவை தொட்டு மீள அவள் அமைதியாய் நின்றாள்.
“அப்படி நீங்க சொன்னாலும் நாங்க அதை ஏத்துக்க முடியாதே? நடந்ததுக்கு எல்லாம் மன்னிப்பு கேட்டுக்கறோம். இனி எப்பவும் உங்களுக்கு ஒரு உறவா நாங்க இருப்போம்…” என்று சொல்லவும்,
“அந்த உறவு தான் வேண்டாம்னு சொல்றேன். இந்த பேச்சை உங்கப்பா முன்னாடி பேசுவீங்களா?…” என்றான் விஜய் கோபத்துடன்.
“ஆமா, பேசுவேன். கண்டிப்பா…” என ஜோதி சொல்லவுமே ஒரு நொடி அமைதியானவன்,
“இதுவுமே நடந்ததை தெரிஞ்சதால தான் இல்லையா? இல்லைன்னா அப்படியே தானே இருந்திருப்பீங்க? ஒருத்தர் சொல்லி சொல்லித்தான் இன்னொருத்தரை புரிஞ்சுப்பீங்க. அப்படித்தானே?…” என கேட்டதும் ஜோதி மௌனமானான்.
“அந்த உறவு தான் எனக்கு தேவை இல்லைன்னு சொல்றேன். ப்ளீஸ், என்னை பேசவைக்க வேண்டாம். வீட்டுக்கு வந்தவங்களை மனசு நோகடிச்சு அனுப்ப எனக்கு விருப்பமில்லை. இவ்வளவு நேரம் எப்படி சந்தோஷமா இருந்தீங்களோ அதே சந்தோஷத்தோட கிளம்புங்க…” என்று சொல்ல,
“அப்புக்குட்டி, வாடாம்மா…” என்ற ஜோதி,
“என் தங்கச்சி ரொம்ப பாவம்ங்க. நிறையவே கஷ்டப்பட்டுட்டா…” என்று ஜோதி விஜய்யிடம் சொல்ல,
“படிப்பு முடியவும் கூட்டிட்டு போங்க. இங்க இருந்து கஷ்டப்பட வேண்டாம்…” என்றான் அவனும் பளிச்சென்று.
“மாப்பிள்ளை…” என ஜோதி கவலையுடன் பார்க்க கீழே இருந்து ஜெகன் அழைத்துவிட்டான்.
“வரேன்ங்க…” என சொல்லிவிட்டு ஜோதி இறங்கி செல்ல,
“உனக்கு மட்டும் என்ன தனியா சொல்லனுமா?…” என விஜய் முறைக்க அவனிடம் பேசவேண்டும் என்று இருந்தவள் ஏற்கனவே நொந்துபோய் இருப்பவனிடம் என்ன பேச என்று தலையசைப்புடன் கிளம்பிவிட்டாள்.
படியிறங்கி சென்றவளையும் கீழே காருடன் காத்திருந்தவர்களையும் மாறி மாறி பார்த்தவன்,
“பழனி…” என அழைத்தான்.
அவனின் அழைப்பில் வேகமாய் ஆர்வத்துடன் அவள் திரும்பி பார்த்ததும் விஜய்க்கு ஏன்தான் அழைத்தோமோ என்றானது அவளின் அந்த முகத்தில் தெரிந்த ஆர்வத்தில்.
“ஸார்…” என்றாள்.
“உன்னோட துப்பட்டா கீழே படுது. பார்க்கமாட்டியா?…” என்றான் எரிச்சலுடன்.
“தேங்க்ஸ்…” என்று சொல்லிவிட்டு அவள் ஆகாஷின் காரில் ஏறிக்கொள்ள ஜெகன் ஆவென்று பார்த்தபடி நிற்க,
“என்ன? கிளம்புங்க…” என்றான் அவனின் பாவனையில் தொலைந்திருந்த சிரிப்பை மீட்டவனாக.
ஜெகனுக்குமே நிம்மதியானது கிளம்பும் நேரத்தில் விஜய்யின் புன்னகையுடனான முகத்தை பார்த்ததில்.
அவர்கள் கிளம்பியதும் வீட்டிற்குள் நுழைந்தவன் நேராக தாய் தந்தை அறைக்குள் நுழைந்துவிட்டான்.
“கல்யாணம் என் லைப்ல ஒருதடவை தான். அது எங்கம்மா பண்ணிவச்சது. எப்பவும் அதை மாத்த நான் விரும்ப மாட்டேன். அதே நேரம் அந்த பொண்ணோட, அந்த குடும்பத்தோட என்னோட வாழ்க்கை சாத்தியமில்லை ஜெகாண்ணா…”
முன்பொருநாள் இதை ஜெகனிடம் சொல்லியது. இன்றும் விஜய் தன் மனதில் உருபோட்டுகொண்டிருப்பது.
அவனை போலவே பவித்ராவும் அதை தன்னிடம் ஜெகன் சொல்லிய நாள் தொட்டு தன் மனதில் உருவேற்றிக்கொண்டு தான் இருந்தாள்.
இருவரும் அந்த உறவுக்கு கொண்ட உருவங்கள் வேறு. இருவரும் வெவ்வேறு விதமாக அதை கையாள நினைத்தனர்.