உருக்கம் – 16
அன்று கல்லூரி முடிந்து லைப்ரரி பக்கம் வந்தவன் வெகு நேரம் கழித்து தான் தேடிய புத்தகத்துடன் வெளியேற ஏனையோர் இன்றி கல்லூரி வெறிச்சோடி இருந்தது.
எப்போதும் இத்தனை தாமதமாக்குபவன் அல்ல. என்றாவது இப்படி வந்தால் காலம் நேரம் பார்ப்பதில்லை.
“என்ன ஸார், க்ளோஸிங் டைம் ஆகிடுச்சே. நானே ரொம்ப நேரம் பண்ணிட்டேன்னு நினைச்சேன்….” என தான் எடுத்த புக்கை பதிவு செய்தபடி விஜய் பேச,
“அங்க ஒரு பொண்ணு ஐடியை எங்க வச்சேன்னு தேடிட்டு இருக்குது சார். அதான் வெய்ட் பண்ணிட்டிருக்கேன்…” என லைப்ரேரியன் சொல்லி அவனிடத்தில் அந்த புத்தகத்தை நீட்டினார்.
யார் என்று தற்செயலாக திரும்பி பார்க்க அங்கே தனது கார்டை தேடிக்கொண்டிருந்தாள் பவித்ரா.
கடந்த சில நாட்களாக அவனும் அவளை கவனித்துக்கொண்டுதானே வருகிறான். ஒன்றும் இல்லை என்றாலும் அவனின் கவனத்தை அவளிடத்தில் திருப்பத்தான் செய்கிறாள்.
இப்போதும் பேசாமல் நமக்கெதற்கு என்று கிளம்பிவிட தோன்ற மனது கேட்கவில்லை. அவனின் கால்கள் அவனின் மனதை விட வேகமாய் முன்னே சென்றது பவித்ராவை நோக்கி.
“கார்டை எங்க போட்ட?…” என்றபடி வந்து நின்றவனை பார்த்தவள்,
“புக் படிக்க வந்தேன். எடுத்துட்டு போறதுக்கு புக் எடுக்கும் போது கார்ட் மிஸ் ஆகிடுச்சு. இப்போ புக் வேணும்…” என்று அவள் நிற்க,
“இப்போ நேரமாகுது. நீ கிளம்பு. நாளைக்கு உன் ப்ரென்ட் கார்ட் வச்சு எடுத்துக்க…” என்றான்.
“ஹ்ம்ம், இல்லை. புக் கண்டிப்பா வேணும். கார்ட் இல்லாம குடுக்க மாட்டாங்க. நாளைக்கு எக்ஸாம்…” என சொல்லும் போதே விஜய்க்கு எரிச்சலானது.
“போன வருஷம் அளவுக்கு கூட இல்லை நீ. உன் கான்சன்ட்ரேஷன் ஃபுல்லா வேற எங்கையோ போய்டுச்சு…” என பல்லைகடித்தபடி சொல்ல மௌமனாக நின்றாள்.
“என்னாச்சு உனக்கு? நல்லா தான வந்தப்ப படிச்ச? உன்னோட யுஜி மார்க்ஸ் ரொம்ப நல்லா இருந்துச்சு. இப்போ என்ன?…” என ஒரு ஆசிரியனாய் அவளிடத்தில் கேட்க,
“தெரியலை ஸார்…” என்றாள் அமைதியாக.
மேலும் திட்டுவதற்கு வாய் திறக்க போக அங்கே இருந்து இவர்களை கவனித்துக்கொண்டு இருந்தார் லைப்ரேரியன்.
“ப்ச், இங்க வச்சு ஒன்னும் பேச முடியலை. கிளம்பு முதல்ல…” என்றான் விஜய்.
“என் கார்ட். நாளைக்கு புக் வேணும்…” என்று சொல்லவும்,
“வா என்னோட…” என்றவன் அவனின் கார்டில் அவளுக்கு புக் தர சொல்லி சொல்ல,
“இல்ல ஸார்…” என்று லைப்ரேரியன் தயங்கினார்.
“அக்சஸ் பண்ணலாம் தானே? குடுங்க…” என்று சொல்லி வாங்கி பவித்ராவிடம் நீட்டினான்.
“முடிச்சுட்டு புக்கை என்கிட்டே குடுத்திரு. நான் ரிட்டர்ன் பண்ணிடுவேன்…” என சொல்லிவிட்டு கிளம்பியவன் செல்லும் பொழுதே ஜெகனுக்கு அழைத்துவிட்டான்.
“படிக்க அனுப்ப மட்டும் தெரிஞ்சது. அவ எப்படி படிக்கிறான்னு கேட்கமாட்டீங்களா?…” என்று எடுத்ததுமே இவன் பொங்க,
“யாரை அனுப்பினேன்? என்னடா பேசற?…” என்றான் ஜெகன்.
அவனுக்கு உடல்நிலை சரியில்லாது இருக்க அரை மயக்கத்தில் இருப்பவனை போல பேசிக்கொண்டிருந்தான்.
“சுத்தம், என்னாச்சு? வாய்ஸ் எல்லாம் டல்லடிக்குது?…” என்றான்.
“எல்லாம் என் சின்னமாமியாரால தான். அப்புவை பார்க்கனும்னு ஊருக்கு கூப்பிட்டுட்டு இருந்துச்சு. பரிச்சை நேரம் போகாதீங்கன்னு தான் சொன்னேன். அதுக்கு பெரிய பஞ்சாயத்தை இழுத்துவிட்டு ஜோதிட்ட சண்டை போட்டு, சின்னமாமாவை பேசின்னு பெரிய ரகளை பண்ணிட்டாங்க…”
“அம்மா தானே? வந்து பார்த்தா உங்களுக்கு என்னவாம்?…” என்றான் விஜய்.
“உனக்கு அவங்களை பத்தி தெரியாதுடா…”
“ப்ச், உங்களுக்கு என்னாச்சுன்னு சொல்லுங்க. யாரை பத்தி நான் ஏன் தெரிஞ்சுக்கனும்?…” என்று விஜய் கடுப்பாக,
“அதானே? என்னடா உடனே நல்லபிள்ளை மாதிரி பேசறன்னு பாத்தேன்…” என்ற ஜெகன்,
“அங்க சண்டைக்கு போனேன். அதுல இருந்தே தொண்டைக்கட்டி இப்ப லேசா காய்ச்சல். அதான் வாய்ஸ் அப்படி இருக்குது…” என்று சொல்லி முடிக்க,
“ஓகே, உடம்பை பார்த்துக்கோங்க…” என சொல்லி விஜய் வைத்துவிட்டான்.
அதற்கு மேல் அங்கே யோசிக்க எதுவுமில்லை. இதில் சென்னை வந்து சென்றதில் இருந்து ஜெகனின் மூலமாக விஜய்யின் தொலைபேசி எண்ணை வாங்கிய ஜோதி அவ்வப்போது ஏதேனும் மெசேஜ் அனுப்ப ஆரம்பித்திருந்தான்.
பார்வேர்ட் மெசேஜ், நல்ல தகவல்கள் என்று விஜய்யிடம் பகிர முதலில் எரிச்சலுடன் பார்த்தவன் பின் என்னவும் செய்துகொள் என்று பார்ப்பதோடு சரி. அவ்வளவுதான்.
பரிட்சை முடிந்து விஜய்யிடம் அப்புத்தகத்தை ஒப்புவிக்கவென்று அவனை தேட அவனானால் இரண்டுநாட்கள் விடுப்பில் இருந்தான்.
எப்போதும் வார நாட்களில் அவன் இப்படி விடுப்பென்று எடுத்து சென்றதில்லை என இத்தனை தினங்களில் அவனை அறிந்திருந்தாள் பவித்ரா.
திடீரென இப்போது வராது இருக்கவும் என்னவோ என்று நினைத்தவள் ஒரு தைரியத்தில் புறப்பட்டுவிட்டாள் அவனின் வீட்டிற்கே.
யாரிடமும் சொல்லவில்லை. ஜெகன், ஜோதி, ரஞ்சனி என்று எவரிடமும் அங்கே செல்ல போவதாக சொல்லாமல் கல்லூரி விட்டு பிஜி வந்ததுமே மனதில் தோன்ற தோன்றியதுமே அப்படியே கிளம்பிவிட்டாள் அந்த புத்தகத்துடன்.
ஆட்டோ பிடித்து விஜய்யின் வீடு வந்து சேர முக்கால்மணி நேரம் பிடித்தது. ஏதோ குருட்டு தைரியத்தில் கிளம்பிவிட்டாலும் தன்னை வீட்டில் பார்த்தால் என்ன சொல்லுவானோ என்று அவன் வீட்டு வாசலில் இறங்கியதும் தான் தோன்றியது.
ஒருவித பதட்டமும் கூட. தன்னை சுத்தமாக பிடிக்காது. வீட்டிற்கு வந்தால் குத்தலாக பேசுவானே? இது தேவையா? அப்படி தேடி வரவேண்டுமா? என்றெல்லாம் ஒரு மனம் கேட்க தட்டி தட்டி வைத்தாள் அம்மனதை.
வந்துவிட்டோம், பார்த்துவிட்டும் இதை தந்துவிட்டும் சென்றுவிடுவோம் என்று நினைத்தபடி கேட்டில் நின்றுகொண்டே அண்ணார்ந்து பார்த்துக்கொண்டு இருந்தாள்.
பேசாமல் வந்தவழியே அவன் பார்ப்பதற்குள் ஓடிவிட்டால் என்னவென்றும் யோசனை தோன்ற அதுவே சரி என்று பலவாதிடல்களுக்கு பின்னால் நகர்ந்து திரும்பி செல்ல போக அங்கே பைக்கில் கை கட்டியபடி சாய்ந்து நின்றுகொண்டிருந்தான் விஜய்.
அவனை சற்றும் எதிர்பாராதவள் திருதிருவென்று விழித்தாள். இங்கே என்ன என கேட்டால் சொல்ல பதில் இருந்தாலும் படபடவென்றானது.
“கிளம்பிட்ட போல?…” என்றான் விஜய் அவளை பார்த்து.
“இல்ல இந்த புக், அதை குடுக்கத்தான் வந்தேன்….” என தடுமாறி அவள் சொல்ல ஒரு பெருமூச்சுடன் அவள் முன்னே வந்தவன்,
“வந்துட்டு ஏன் குடுக்காம கிளம்பிட்ட?…” என்றதுமே அவனிடத்தில் புக்கை நீட்டினாள்.
“இதை காலேஜ்ல குடுத்திருக்கலாம் தானே?…” என வாங்கிக்கொண்டு அவன் கேட்டதும் பவித்ராவிற்கு பதில் சொல்லவே வரவில்லை.
“ஓகே..” என்று சொல்லியவன்,
“கிளம்பு…” என்றான்.
“ஹ்ம்ம்…” என்ற தலையாட்டலுடன் அவள் மெல்ல நகர,
“நில்லும்மா…” என்று நிறுத்தியதும் அவனை திரும்பி பார்த்தாள்.
“மேல வா, உன்கிட்ட கொஞ்சம் பேசனும்…” என்று சொல்லிவிட்டு கதவை திறந்துகொண்டு மாடிக்கு சென்றான்.
பவித்ரா மேலே செல்லும் பொழுது தான் கீழ் வீட்டு பாட்டி எடி பார்த்துவிட்டு போனார்.
“உள்ள வா…” என்று கதவை திறந்தவன் அவளை ஹாலில் அமர சொல்லிவிட்டு கிட்சனிற்கு சென்று இருவருக்குமான காபியை கலந்தான்.
மனதில் பலவித யோசனைகள். தான் நினைத்ததற்கு மாறாக ஒன்று நடந்துகொண்டிருக்க மனதிற்கு சரி என்று படவில்லை. ஏதோ ஒரு சாஃப்ட்கார்னர் பவித்ரா மீது அவனுக்கு.
அது அவனறியாமல் சில இடங்களில் வெளிப்படவும் செய்தது. காட்டிக்கொள்ளாமல் இருக்க அவன் பட்டபாடுகள் அவன் மட்டுமே அறிந்தவை.
என்னதான் ஜெகனிடம் தனக்கும் அவளுக்கும் சம்பந்தமில்லை என்று சொன்னாலும் இங்கே தன்னை கொண்டே அவளை அனுப்பியிருகின்றான் ஜெகன் என்னும் அழுத்தமே அவனறியாமல் அவனை ஒரு வட்டத்திற்குள் நிறுத்தியது.
முடிந்தளவிற்கு பவித்ராவை எந்த பிரச்சனைகளும் அண்டாமல் பார்த்துக்கொண்டு தான் இருந்தான். ஆனாலும் அது அவளுக்கோ ஜெகனிற்கோ தெரிவிப்பதில் விருப்பமில்லை.
வேகமாய் காபிக்கு சர்க்கரையை போடு கலக்கியவன் கப்பில் ஊற்றிக்கொண்டு வந்தான்.
“பிடி…” என்று அவளிடம் தந்துவிட்டு தானும் அவளுக்கெதிரே அமர்ந்துகொள்ள ‘திட்டுவான் என்று பார்த்தால் இப்படி உபசரிக்கிறானே?’ என்ற ஆச்சர்யத்தில் பவித்ராவும் இருக்க,
“முதல்ல காபியை குடிச்சு முடி. உன்கிட்ட இன்னைக்கு பேசத்தான் செய்யனும்…” என்று அவன் சொன்ன விதமே அச்சமூட்டியது.
வந்திருக்கவே கூடாதோ என்று அவள் முழிக்க அவளை கண்டுகொண்டே தான் அமைதியாய் தனது காபியை குடித்துமுடித்து அவள் முடிப்பதற்கு காத்திருந்தான்.
“முடிச்சுட்டேன் ஸார்…” என்று காபியை குடித்துமுடித்து கப்பை கீழே வைத்துவிட்டு அவள் சொல்ல,
“ஹ்ம்ம், குட்…” என்றவன்,
“இந்த புக்கை குடுக்கத்தான் வந்த? ட்ரூ…” என்று அவன் கேட்கவும் ஆமாம் என்று தலையசைத்தாள்.
“பவித்ரா…” என்று அவன் அழுத்தமாய் அழைத்தவிதமே திக்கென்று இருந்தது.
“இல்லை நீங்க காலேஜ் வரலை. அதான் என்னன்னு தெரியலைன்னு பார்த்துட்டு இதையும் குடுத்துட்டு போகலாம்ன்னு வந்தேன். நான் கிளம்பறேன்…” என்று அவள் வேகமாய் எழுந்து நிற்க,
“ஐ சே சிட் டவுன்…” என்றான் விஜய்.
“அஸ்யூஸ்வல் நீயும் மத்த பொண்ணுங்க மாதிரி தான் இல்லையா?…” என்று கேட்டதும்,
“எனக்கு புரியலை. நான் வந்தது தப்புன்னா இனி வரலை. புக்கை குடுப்போம்ன்னு தான் வந்தேன். அது தப்புன்னு தெரிஞ்சிருச்சு. இனிமே நான் வரமாட்டேன்…” என்று அவள் சொல்லவும் இன்னுமே முறைத்தான்.
“இது தப்பிச்சு போகற வேலை. நான் கேட்டதுக்கு பதில் சொல்லனும்…” என்று விஜய் அதட்ட,
“என்ன? கேளுங்க…” என்றாள்.
“நீ உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க?…” என்று அவன் கேட்டதும் அவளிடம் பதில் வருமென பார்த்தால் அசையவே இல்லை அவள்.
“என்ன லவ்வா?…” என்று இப்போது அவன் நேரடியாக கேட்டதுமே படக்கென்று நிமிர்ந்து பார்த்தாள்.
“ரைட், ஆல்ரைட். ஒன்னு பார்த்ததும் பிடிச்சுட்டா லவ். இல்லையா பரிதாபத்துல லவ். இதுல நீ செகென்ட் கேட்டகிரி…” என்று சொல்லவும் பவித்ரா மறுத்து பேச ஆரம்பிக்க,
“லுக், இது ஒத்துவராது பவித்ரா. உன்னோட சாய்ஸை நீ மாத்திக்கறது உனக்கு பெட்டர்…” என்று சொல்லவுமே அவளுக்கு அத்தனை கோபம் வந்தது.
“சாய்ஸை மாத்திக்கனும்னா?…” என இப்போது அவனிடம் சூடாக கேட்க விஜய்க்கு ஒருமாதிரி ஆனது.
மாற்றிக்கொள்ளும் விதமாகவா அவன் பேசியதும், இதுவரை நடந்ததும்? எதுவும் இல்லையே? எங்கிருந்தலும் என் பொண்டாட்டியா மட்டும் தான் இருப்பான்னு ஊரறிய சொல்லியவனால் இப்போது பதில் பேச முடியவில்லை.
இப்போது அவன் செய்ததின் இன்னொரு பலனை கண்கூடாக காண்கிறான். அது அவனுக்கு பலனல்லவே.
“ஓஹ் மை காட்…” என்று முகத்தை அழுத்தமாய் துடைத்துக்கொண்டவன் அவளை பார்க்க,
“நான் ஒன்னும் உங்ககிட்ட வந்து சொல்லலையே. அப்பறம் எதுக்கு?…” என்றாள் ரோஷமாக.
“ஆனா நீ நினைக்கிறது சரி இல்லையே…” என விஜய்யும் சொல்ல,
“நீங்க உங்க ஹைட்ல இருந்து இறங்கி எனக்கு ஒன்னும் வாழ்க்கை குடுக்க வேண்டாம். நீங்க ஒரு முடிவு எடுத்தீங்க. அது மாதிரி நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன். என் லைப் இப்படித்தான்னு…” என்றதுமே அவனை ஆயாசத்துடன் பார்த்தான் விஜய்.
“நான் கூட உன்னை பாவம், அப்பாவி. பேச பயந்த பொண்ணுன்னு நினைச்சேன். ஆனா அப்படி இல்லை நீ. அவ்வளவு அழுத்தம். ஆனா இது என்கிட்டே வேலைக்காகாது…” என்றவன்.
“நான் சொத்துபத்தையோ, பணத்தையோ பறிகுடுக்கலை பவித்ரா. ஒரு உயிரை, நாங்க சாமியா கொண்டாடின எங்க சந்தோஷத்தை பறிகுடுத்திருக்கோம். நிச்சயம் என்னால உன்னை ஏத்துக்கமுடியாதும்மா. புரிஞ்சுக்கோ…” என்றதுமே பவித்ராவின் விழிகள் கண்ணீர் சூழ்ந்தது.
இந்த நிமிடம் அழுது கரைவதற்கானது அல்லவே. முயன்று தன்னை திடப்படுத்தினாள்.
யார் என்ன சொன்னாலும் தன் முடிவிலிருந்து மாறுவதாகவும் இல்லை என்று உறுதியாய் இருந்தாள். அதன்பொருட்டு அவனை எதிர்கொண்டவள்,
“நான் இந்த புக் குடுக்கத்தான் வந்தேன் ஸார். இதை பேச இல்லை. நீங்களா பேசறீங்க. நீங்க முடிவெடுத்தா அதுல மாறமாட்டீங்க, ஆனா நான் மட்டும் யார் என்ன சொன்னலும் உடனே தலையாட்டனும்…” என்று சொல்லவுமே அவனுக்கு கஷ்டமாக போனது.
ஆனாலும் இப்படியேவிட்டால் அவளின் வாழ்கையும் பாழாகி போகுமே. முடிவெடுத்திருந்தான் அவளுக்காகவேணும் இதில் தான் யோசிக்கவேண்டும் என்று நினைத்தான்.
அருமைநாயகம் அவரை எப்படி வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம். ஆனால் இது, இவளின் இந்த மனதும், அந்த காதலும். விஜய்க்கு உண்மையில் குற்றவுணர்வை தந்தது.
தான் அதை செய்யும் பொழுது தோன்றாத ஒரு அழுத்தம் பவித்ரா சென்னை வருகைக்கு பிறகு அதிலும் அவள் இங்கே வந்து தங்கிவிட்டு சென்ற பிறகு அவளின் மாற்றம் அவன் உணர்ந்தானே.
அவளுக்காய் பார்த்தான். அதனால் அவளைவிட்டு இன்னுமே விலக நினைத்தான்.
“நான் கிளம்பறேன் ஸார்…” அவன் சொல்லிய எதையும் காதில் வங்காதை போல பவித்ரா அதிலேயே தான் இருந்தாள்.
“என் கோவத்தை கிளறாத பவித்ரா. நான் என்ன பேசிட்டு இருக்கேன். சொன்னா புரிஞ்சுக்க மாட்டியா?…” என்றவன்,
“இப்போ என்ன? நான் உங்க ஊர்ல வந்து பேசினது தானே பிரச்சனை. ஓகே, இனி உன் விஷயத்துல தலையிடலை. ஐ மீன், உன்னை உன் பெரியப்பா விஷயத்துல இழுக்கலை. சோ…”
“இனி இங்க இருக்கமுடியாது. நான் போறேன்…” என்று எழுந்துகொண்டாள் அவள்.
“நான் உனக்காக பேசிக்கிட்டே இருக்கேன். நீ கொஞ்சமும் அதை பத்தி யோசிக்காம என்ன பிடிவாதம்?…” என்ற விஜய்யை பிடிவாதத்துடன் பார்த்தவள்,
“எங்கம்மா என்னை அடிப்பாங்க ஸார்…” என்றாள்…”
“என்ன?…” என புரியாமல் விஜய் முழித்தான்.
“அவங்க என்னை அடிக்கும் போதும் திட்டு போதும் சொல்லிட்டே இருப்பாங்க. உனக்கும் உன்னோட அத்தைக்காரி ரத்தம்னு. அதான் இவ்வளவு பிடிவாதம் போல…” என்று சொல்லவுமே விஜய் சஞ்சலத்துடன் பார்த்தான்.
“என்ன இது எல்லாம்?…” என்று அவன் பார்க்க,
“இது மட்டுமில்லை இன்னும் நிறைய…” என்றவள்,
“அதான் அவ மகன் தாலி கட்டினதும் வாங்கின, முத்தம் குடுத்ததும் வாங்கின. விட்டா அவளை மாதிரியே அவனோட போயிருப்பன்னு. சொல்லிட்டே இருப்பாங்க. இப்பவும் சொல்லத்தான் செஞ்சாங்க அவனோட போகத்தான் நிச்சயத்தை ஆளுக்கு முன்னால நிறுத்தினியா? நீ தான் வர சொன்னியான்னு…”
“ஓஹ் நோ…” என்று தலையை பிடித்துக்கொண்டான்.
இப்படி ஒரு கோணத்தில் பவித்ராவை கொஞ்சமும் யோசிக்காது எவ்விடத்தில் நிறுத்தியிருக்கிறோம் என்று அவனுக்கு அப்போதுதான் விளங்கியது.
“அப்பவும் பேச விடலை. இப்ப இங்கயும் நீங்க என்னை பேசவிடாம நீங்க சொல்றதை தான கேட்கனும்னு சொல்றீங்க. எனக்கு தெரியலை. நானா ஒரு முடிவுக்கு வந்தது உங்க விஷயத்துல மட்டும் தான். அதுலையும் உங்களை எந்தவிதத்துலயும் தொந்தரவு பண்ணலையே…” என்றவள்,
“படிப்பு முடிஞ்சாலும் நான் ஊருக்கு போறதா இல்லை. இங்கயே ஒரு வேலையை பார்த்துட்டு இருந்திருவேன்…” என்றாள்.
“இன்னொரு விஷயம் ஸார், படிப்புல கவனமில்லைன்னு சொன்னீங்க. ஆமா, உண்மை தான். நிறைய அழுத்தம். அதான் என்னால சரியா எதையும் செய்ய முடியலை. வீட்டுலையும் பிரஷர். அச்சோ உங்ககிட்ட சொல்லி நீங்க இதை எல்லாம் கேட்க விரும்பமாட்டீங்க இல்லையா?…”
“பவித்ரா லிசன், எனக்கு இது எதுவுமே தெரியாது…” என்றான் விஜய்.
“எங்கண்ணனுக்கு நீங்க சொன்னது தான் ஸார். ஒருத்தர் பத்தி இன்னொருத்தர் சொல்லி தெரிஞ்சு வரது ஏத்துக்க முடியாதுன்னு. எல்லாமே எல்லாருக்கும் பார்த்ததும் புரிஞ்சுக்கனும்னு இல்லை. நிறைய விஷயங்கள் இன்னொருத்தர் மூலமா தான் தெரியவருது…” என்றவள்,
“நான் கிளம்பறேன் ஸார். இனி உங்களை பார்க்கறதும் உங்களுக்கு கஷ்டம்ன்னா பார்க்கலை. ஆனா நானும் மாறமாட்டேன். முதல் முறையா ஒரு தெளிவான முடிவு எடுத்திருக்கேன்…” என்று சொல்லிவிட்டு கதவை தாண்டி செல்ல விஜய்யும் பின்னால் சென்றான்.
கீழே வந்து காரை எடுத்தவன் வேகமாய் அவளை உரசிக்கொண்டு நிறுத்தியவன் பவித்ராவை பார்த்து,
“வண்டில ஏறு. நானே ட்ராப் பன்றேன்…” என்றான்.
“வேணாம் ஸார். என்னால உங்களுக்கு எதுக்கு சிரமம்? நானே போய்ப்பேன்…” என்று பிடிவாதமாய் மறுக்க காரை விட்டு இறங்கியவன் அவளிடம் வந்து,
“ஒழுங்கா வண்டில ஏறு. இந்த நேரம் ஆட்டோ சேஃப் இல்லை. பஸ் நீ மாறி மாறி போகனும். சொன்னா கேளு…” என்று அவளிடம் சொல்லும் போதே தலைக்கு மேல் என்னவோ பறந்து செல்ல சடுதியில் கேட்ட அந்த சத்தத்திலும் தலையில் முட்டுவதை போல வந்ததையும் பார்த்து தடுமாறியவள்,
“ம்மா…” என்ற சத்தத்துடன் அவனின் மேல் சாய்ந்தாள்.
“ஹேய் ட்ரோன் கேமரா தான். இதுக்கா பயந்த?…” என்று அவளை தட்டிக்கொடுத்து நேராய் நிறுத்தியவன்,
“போய்ருச்சு…” என்று சொல்ல,
“இது எப்படி இங்க?…” என்றாள் தலையை சரிசெய்தபடி.
“இங்க அடிக்கடி பறக்கறது தான். நீ வா…” என்று சொல்லியவன் அவளை பிடித்து காரில் ஏற்றினான்.
ஒன்றும் பேசாமல் அவள் அமர்ந்து வர பிஜியில் கொண்டு சென்று விட்டவன் காரை எடுத்து திருப்பும் போதே ஜெகனிற்கு அழைத்துவிட்டான்.
“என்னடா என்னை விசாரிக்க போன் போட்டியா?…” என ஜெகன் கேட்க,
“வாய்ஸ் நல்லா தான் இருக்குது. அதை விடுங்க. உங்க சின்ன மாமியார் என்ன பேசினாங்க பவித்ராவை?…” என்றான் ஜெகனிடம்.
“விஜய்?…” என ஜெகன் திகைப்புடன் கேட்க,
“எனக்கு தெரியனும். என்னவோ எங்கம்மாவை சொல்லி அவளை பேசினாங்களாம். என்ன நடந்துச்சு?…” என்றான் முதல் முறையாக அவனாகவே.
“இத்தனை வருஷம் இதை எல்லாம் காதுல வாங்காம இருந்துட்டு இப்ப என்னடா?…” என்ற ஜெகன்,
“அப்பு பேசினாளா?…” என்று கேட்க,
“நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்கண்ணா…” என்றான் விஜய்.
ஜெகனும் ஒவ்வொன்றாய் விவரிக்க கார் ஒட்டிக்கொண்டிருந்தவனின் ஆத்திரம் எல்லையை கடந்தது.
தான் ஒரு உயிரை இழந்து இத்தனை வருடம் அனுபவித்திருந்தேன் என்றால் ஒருத்தியின் உணர்வுகளை நித்தமும் சாகடித்து நடமாட செய்திருக்கிறார்களே? என்ற ஆவேசம் கொண்டவனின் கோபம் இப்போது வசந்தியின் மேலும் பரவியது.
‘இதெல்லாம் என்ன அம்மா?’ என்று அன்றைய யோசனைகளை முழுவதும் ஜெகன் சொல்லியதிலேயே தான் சுழல மனது வெகுவாய் விண்டுபோனது பவித்ராவின் நிலையை எண்ணி.
இரவு உறக்கம் தொலைத்தவனின் மறுநாள் மிக முக்கியமான நாளாக அமைந்து போனது.
விஜய்யின் வீட்டிற்கு வந்த பவித்ராவின் வருகையும், வசந்தி, அருமைநாயகத்தின் அராஜகமும் அவனை வாழ்க்கையின் இன்னொரு கட்டத்திற்கு தள்ளியது.