உருக்கம் – 17
விஜய் வீட்டில் இருந்து வந்ததில் இருந்து அவன் பேசியதை மட்டுமே நினைத்துக்கொண்டே இருந்தாள் பவித்ரா.
அவனின் மனதில் இருந்தவற்றை அவன் நிதானமாக சொல்ல சொல்ல மேலும் மேலும் தன் முடிவில் ஸ்திரமானாள் பவித்ரா.
வசந்தி அழைத்த போதும் கூட போனை எடுக்கவே இல்லை. அவர் அழைத்துக்கொண்டே இருக்க ஏற்கனவே நொந்துபோன மனநிலையில் இப்போது போன் எடுத்தால் இன்னும் பேசுவார் என்று எடுக்கவில்லை.
சாப்பிடாமல் கூட கண்ணை மூடியவளுக்கு அங்கே அவன் பேசியவை மட்டும் தான் சுழன்றது.
கோபமில்லாமல் அந்த நேரத்திலும் தன்னை கொண்டு அவன் யோசிக்க இன்னுமின்னும் அவனை பிடிக்க ஆரம்பித்தது அவளுக்கு.
“உனக்கு என்னை பிடிக்காதேன்னு நினைச்சேன் பவித்ரா. நீ என்னை மாதிரி ஒருத்தனை விரும்பமாட்டன்னு நினைச்சேன். இப்பவும் ஒன்னும் ஆகலை. இனி உன் லைன்ல நான் க்ராஸ் பண்ணிக்க மாட்டேன்…”
“நீ உனக்கான லைஃப் என்னவோ பார்த்துக்கோ. உன் வீட்டுல எடுக்கற முடிவுக்கு ஒத்து போய்டு. ஆனா நான் எந்த காலத்துலயும் உன்னோட வாழ்வேன்னு மட்டும் நினைக்காத. அதுக்கு வாய்ப்பே இல்லை….” என உறுதியோடு அவன் சொல்ல,
“ஏன் ஏன் அப்படி சொல்றீங்க?…” என்றாள் தவிப்போடு.
“என்ன ஏன்? இப்பவும் சரி நீ அருமைநாயகம் பொண்ணா தான் எனக்கு தெரியற. எங்கம்மா இறப்புக்கு உன் பெரியப்பாவோட உங்கப்பாவும் உன் குடும்பமும் ஒரு காரணம். என்னால இதை எப்பவும் மறக்க முடியாதே?…” என கோபமாய் பேசியவன் பின் குரலை தாழ்த்தி,
“உன்மேல கோபம் இருந்துச்சு. இல்லைன்னு சொல்லலை. இப்போ நானே உன்னை சரின்னு சொன்னலும் உனக்கு உன் குடும்பத்தை மொத்தமா பிரிக்கிற மாதிரி தான் நடந்துப்பேன்…” என்றதும் பவித்ராவிற்கு அவனை மறுக்கவும் மனதில்லை.
“நிஜமா பவி, என்னால உங்க வீட்டுல உள்ளவங்களை மன்னிக்கவே முடியாது. அதுக்கு உன்னை பழி வாங்கிருவேனோன்னு தோணுது. சோ நீ உன் மைண்ட்செட்டை மாத்திக்கறது நல்லது…” என்று சொல்லிவிட்டான் விஜய்.
அவன் அப்படி பேசியதும் அவனின் பேச்சை கேட்ட பின்பும் திடமாக நின்றாள். பேசிக்கொள். நீ இருப்பதை போலவே நானும் இருந்துகொள்கிறேன். அவ்வளவே.
நினைத்ததை போலவே மனது கனத்து இருந்தாலும் அதன்படி நடக்க முடிவெடுத்துவிட்டாள். ஆனால் மறுநாள் கல்லூரிக்கு கிளம்பவே முடியவில்லை.
எத்தனை முயன்றாலும் விஜய் தன்னை மறுத்ததும் அவன் சொல்லிய காரணங்களுமே மனக்கண்ணில் தோன்ற, விகாஷினி கிளம்பி அவளை எழுப்பியும் உடல்நிலை சரியில்லை என்று காரணம் சொல்லி மறுத்துவிட்டாள்.
மனது பலகீனமாகி பாரமாய் தோன்றியது. என்ன வாழ்க்கை தன்னது என்று கழிவிரக்கத்தில் கண்ணீர் பெருக படுத்தே இருந்தாள் சாப்பிட கூட வராமல்.
—————————————————————–
காலை காலேஜ் சென்றவன் அன்று எக்ஸாம் ட்யூட்டி இருக்க வகுப்பறைக்கு சென்றான்.
வழக்கம் போல உள்ளே சென்றதுமே ஒருமுறை மாணவர்களை சுற்றிலும் பார்வையை ஓட்டியவனின் புருவங்கள் சுருங்கியது.
இன்னும் பவித்ரா வந்திருக்கவில்லை. தனது வாட்சில் நேரத்தை பார்த்தவன் யோசனையோடு வேலையை கவனித்தான்.
ஆனாலும் அவள் வராதது சற்று உறுத்தலாக இருந்தது. இப்போது அவளுக்கு சென்று அழைக்கவும் முடியாது என்பதால் பல்லைக்கடித்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.
‘பெரிதாய் படித்து வேலைக்கு செல்ல போவதாய் தன்னிடம் முதல்நாள் பேசிவிட்டு இப்படி பரிட்சைக்கு வராமல் போய்விட்டாளே, இவ்வளவு தானா?’ என்று கோபம் கோபமாய் வந்தது.
அதிலும் வசந்தியின் பேச்சுக்களும், பவித்ரா அனுபவித்ததையும் ஜெகனின் மூலமாக கேட்டிருந்தவனுக்கு இப்போது பவித்ராவின் மீது வருத்தமும் ஏமாற்றமுமாக இருந்தது.
‘அப்படி இருப்பவர்களிடம் சாதித்து காட்டவேண்டிய பெண் இப்படி செய்கிறாளே?’ என ஆதங்கமும் கூடியது.
அன்றைய தேர்வு முடிந்து விடைதாள்களை சேர்ப்பித்துவிட்டு தன்னறைக்குள் நுழைந்தவனை அங்கிருந்த அனைவருமே நக்கலாய் பார்க்க என்னவென்று புரியாமல் குழம்பினான்.
இன்னமும் அவனுக்கு மதிய உணவு வந்திருக்கவில்லை. வரதனிடம் கொஞ்சம் தாமதமாக வாங்கி வரவும் என்று தான் சொல்லி இருந்தான்.
“அப்பறம் விஜய் ஸார், வீட்டுல எல்லாரும் சவுக்கியமா?…” என்றார் கணேஷ்.
அன்றொருநாள் அத்தனைபேர் முன்னிலையில் தன்னை விஜய் அவமதித்து பேசிவிட வன்மத்தில் அவனை வம்பிற்கு இழுக்க அவனின் நோக்கம் புரிந்த விஜய்க்கு திடீர் என்று என்ன இந்த பேச்சு? என்றுதான் புரியவில்லை.
இருக்கட்டும், ஆனாலும் இதற்கு பதில் கொடுக்காமல் இருந்தால் அவனுக்கு தூக்கம் வராதே?
“ஏன் கணேஷ் ஸார் நல்லா இல்லைன்னா என்ன பண்ண போறீங்கலாம்?…” என்றான் அவரின் போக்கிலேயே.
கணேஷ் கேட்டதும் அங்கிருந்தவர்களில் பாதி பேர் சத்தமாய் சிரித்தும் விட இப்போது விஜய்யின் பதிலால் முகம் சுண்டினார்கள்.
“என்ன ஸார் இப்படி கேட்டுட்டீங்க?…” என கணேஷ் கேட்கும் போதே வரதன் விஜய்க்கான உணவுடன் வந்துவிட்டான்.
“விஜய் ஸார் உங்களை கரஸ்பான்டேன்ட் வர சொன்னாரு…” என்று உணவை மேஜையில் வைத்துவிட்டு சொல்ல,
“ஹ்ம்ம்…” என எழுந்துகொள்ள,
“சாப்பிட்டு வருவீங்களாம்…” என்று வரதன் சொன்னான்.
“சாப்பாடு இங்கயே வச்சுடு வரதா. நான் வந்து சாப்பிட்டுக்கறேன். கொஞ்சம் நேரமாகும்…” என்று சொல்லிவிட்டு நகர அத்தனைபேரும் அவர்களுக்குள் பேசிக்கொள்ள அதையும் கவனித்தபடி தான் சென்றான்.
போகும் வழியிலும் சில மாணவர்கள் விஜய்யை பார்ப்பதும் அவர்களுக்கு பேசுவதுமாக இருக்க தாளாளர் அறைக்குள் நுழைந்தான்.
“வா விஜய்…” என்று அவனை பார்த்ததும் அழைத்தவர்,
“உட்கார்…” என்றார்.
“வர சொன்னீங்கன்னு சொன்னாங்க ஸார்…” என்று விஜய் கேட்டதும்,
“பவித்ரா வரலையா?…” என அவனிடம் கேட்க அவன் குழம்பினான்.
“இதை ஏன் ஸார் என்கிட்டே கேட்கறீங்க?…” என்றதும் அவரின் போனை எடுத்து அவனிடம் நீட்டியவர்,
“இந்த போட்டோவை பாரேன்…” என்று காண்பிக்க வாங்கி பார்த்தால் அதில் முதல்நாள் பவித்ராவும் விஜய்யும் இணைந்து இருந்த போட்டோ.
“ஓஹ், நோ…” என்றவன்,
“எவன் பார்த்த வேலை இது? எனக்குன்னே வருவானுங்க போல?…” என்றான் எரிச்சலுடன்.
“விஜய் இதுக்கு என்ன பதில் சொல்ற?…” என்றார் அவர்.
“ஏன் அங்கிள் என் வொய்ப் தானே இவ? இவளோட நிக்கிறது ஒரு தப்பா?…” என்று அவன் கடுப்புடன் கேட்கவும் அவருக்கு சிரிப்பு.
தான் இந்த வார்த்தையை சொன்னால் மட்டும் அத்தனை கோபப்படுபவன். இன்று தானாக தன்னை அங்கிள் என்று அழைத்ததும் இல்லாமல் பவித்ராவை வொய்ப் என்று தன்னைப்போல வார்த்தை இயல்பாக வர அவருக்கு சந்தோஷமாக இருந்தது.
உயிர் நண்பனின் மகனல்லவா? அவனுக்காகவே ஜெகனோடு சேர்ந்து பவித்ராவிற்கு அங்கே படிப்புக்கு ஏற்பாடு செய்தது.
அவர் அவனே பேசட்டும் என சிரித்தபடி அமர்ந்திருக்க மீண்டும் மீண்டும் அந்த போட்டோவையே பார்த்துக்கொண்டு இருந்தவன்,
“இது எப்படி? ஓஹ் அதான் காலேஜ்ல எல்லாரும் அந்த பார்வை பார்த்தாங்களா?…” என்றான் கண்டுகொண்ட விதமாய்.
ஹ்ம்ம், எவனோ சேனலுக்கு ட்ரோன் வச்சு வீடியோ எடுத்திருந்திருக்கான். அந்த நேரத்துல நீங்க வெளில இருக்கவும் அதுவும் கேப்சர் ஆகிருக்கு. க்ளோஸா…” என்று சொல்ல,
“உங்களுக்கு யாருன்னு தெரியுமா?…” என விஜய் கோபத்துடன் சொல்லவுமே சுதாரித்துக்கொண்டார்.
சொன்னால் கோபத்தில் அந்த பையனை பிடித்து சாத்திவிடுவான் என்று உடனே பெயரை சொல்லாமல் மறைத்தார்.
“நான் கூப்பிட்டு வார்ன் பண்ணிட்டேன். அந்த பையன் அவனோட ப்ரெண்டுக்கு அனுப்ப அவன் இன்னொருத்தனுக்கு அனுப்ப, அது ஒரு க்ரூப்க்கு போகன்னு இப்படித்தான் ஸ்ப்ரெட் ஆகி இருக்குது…” என்றார்.
“ஓஹ், அதான் நான் ஸ்டாஃப் ரூம் போகும் போதே அந்த கணேஷ் நக்கலா பேசினார். அப்பவே ஏதோன்னு நினைச்சேன்….”
“விஜய் எனக்கு தெரியும் அந்த பொண்ணு யாருன்னு. ஆனா இங்க யாருக்கும் தெரியாதுல…” என்று சொல்ல,
“அதுக்கு என்ன செய்ய சொல்றீங்க? ஏன் சொல்லனும் எல்லாருக்கும்?…” என்றான் எரிச்சலுடன்.
“சரி இந்த போட்டோவை எனக்கு அனுப்பி வைங்க…” என்று சொல்லி எழுந்துகொண்டவன்,
“இதனால தான் அவ வராம இருக்காளா?…” என்றான் அவரிடத்தில்.
“என்னை கேட்டா? ஏன்டா என்னை பார்த்தா எப்படி தெரியுது?…” என்றதும் விஜய்க்கு அவரின் அந்த பதட்டத்தில் சிரிப்பு வர,
“ஓகே ஸார். நான் கிளம்பறேன்…” என்று செல்ல போக,
“நில்லு விஜய், இது எனக்கே கொஞ்சம் நேரம் முன்ன தான் வந்துச்சு. ஒருமணி நேரம் இருக்கும். ஆனா பவித்ரா எக்ஸாம்க்கே வரலை. இந்த போட்டோ நேத்து எடுத்தது தானே?…” என்று கேட்க ஆமாம் என்று தலையசைத்தான்.
“சொல்றேன்னு நீ கோவிச்சாலும் பரவாயில்லை. இது நீ மட்டுமில்லை. அந்த பொண்ணும் சம்பந்தப்பட்ட விஷயம். நல்ல முடிவா எடு…” என்று சொல்லவும் தலையசைத்துவிட்டு வெளியேறி ஸ்டாஃப் ரூம் வந்தான்.
“என்ன விஜய் ஸார் போட்டோ பார்த்தாச்சா? கல்யாணத்துக்கு கூப்பிடுவீங்களா?…” என்று மீண்டும் கணேஷ் வம்பிழுப்பதை போல பேச அதற்கு மேலும் வாயை மூடுபவனா விஜய்?
“கூப்பிடலைன்னா ரொம்ப வருத்தம் போல? கூப்பிட்டா யாரோட வருவீங்க நீங்க?…” என்றுவிட்டான் துடுக்காக.
“விஜய்…” என்று கணேஷ் எகிற அவனை பிடித்துக்கொண்ட மற்றவர்கள்,
“என்ன விஜய் ஸார் இது? அவர் வயசென்ன? இப்படி பேசறீங்க?…” என்றார்கள் கணேஷிற்கு ஆதரவாக.
“ஏன் அவர் பேசும் போது அது உங்க யாருக்கும் தெரியலையா?…” என்று கடுமையுடன் கேட்டவன்,
“ஏன் என் பர்ஸனல் விஷயத்தை நான் சொல்லனும்? இல்லை தெரிஞ்சு நீங்க என்ன பண்ண போறீங்க? உங்க வேலையை நீங்க பார்க்கறீங்க. என் வேலையை நான் பார்க்கறேன். அதுக்கு மேல இங்க என்ன இருக்குது?…”
“அதுக்கு இப்படித்தான் பேசுவீங்களா?…” என்றார் கணேசன்.
“ஆமா, அப்படித்தான் பேசுவேன். என்கிட்டே எப்படி பேசனும்னு நீங்க நினைக்கறீங்களோ அதுவே தான் திரும்ப கிடைக்கும். ஆயிரம் காரணம் இருக்கும் என்னோட விஷயத்தை நான் சொல்லாம இருக்க. அதை தோண்டி துருவி ஏன் தெரிஞ்சுக்கனும்னு நினைக்கறீங்க? அதுல எவ்வளவு நக்கல்?….” என்றவன் தன் கோபத்தை கட்டிப்படுத்திக்கொண்டு,
“ஒரே இடத்துல இருக்கோம். ஜஸ்ட் ஒரு ப்ரெண்ட்லி அப்ரோச். ஒரே இடத்துல வேலைன்றதால ஒரு ஹாய் அன்ட் ஸ்மைல். அந்த லிமிட்ல இருங்க என்னோட. நானும் அப்படியே இருப்பேன். அதுக்கு மேல என் பர்ஸனல் பேசினா…” என்று எச்சரிக்கும் பார்வை பார்த்தான்.
“வரதா…” என வெளியே இருந்தவனை அழைத்தவன்,
“இந்த சாப்பாட்டை எடுத்துட்டு போய்டு. எனக்கு வேண்டாம்…” என்று சொல்லியவன் மீண்டும் தாளாளர் அறைக்கு வந்தான்.
“நான் பவித்ராவை பார்த்துட்டு வரேன் ஸார்…” என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.
கிளம்பியவன் நேராக அவின் பிஜியில் வந்து தான் வண்டியை நிறுத்தினான். உள்ளே ரிசப்ஷனுக்கு சென்றவன்,
“நான் பவித்ராவை பார்க்கனும்…” என்று சொல்ல அங்கே நின்றிருந்த பெண்மணி,
“நீங்க யாரு?…” என்றார்.
“அவங்க ஹஸ்பண்ட்…” என தயக்கமின்றி விஜய் சொல்ல அவனை திகைப்பாய் பார்த்தார்.