உருக்கம் – 18
வீட்டை நெருங்கிக்கொண்டிருக்கும் நேரம் விஜய்யின் எண்ணிற்கு அழைப்பு வர அதை பவித்ராவும் பார்த்தாள். இரண்டுமுறை அழைப்பு அடித்து ஓய்ந்தது. மீண்டும் வர,
“உங்களுக்கு தான் போன்…” என்றாள் அவள் அவனிடத்தில்.
“காதுல விழுகுது. தெரிஞ்சு தானே எடுக்கலை…” என்று அவளை பார்க்காமலே விஜய் சொல்ல எப்படியோ போ என்று விட்டுவிட்டாள்.
ஆனால் அழைப்பு நீண்ட நேரமாக வந்துகொண்டே இருக்க எரிச்சலுடன் அவனை பார்த்தாள்.
“யாராவது முக்கியமான விஷயமா இருக்கும். பேசுங்க. இல்லைன்னா வேலை இருக்குன்னு கட் பண்ணி விடுங்க. திரும்ப பண்ணிட்டே இருக்காங்க…” என டென்ஷனுடன் சொல்ல,
“நானே டென்ஷன் ஆகலை, உனக்கு ஏன் இவ்வளவு டென்ஷன்? ஏன் உங்க வீட்டுல இருந்து போன் வருதுன்னு நினைச்சியா பழனி?…” என்றான் அலட்டிக்கொள்ளாமல்.
“இல்லை. எதுவும் நினைக்கலை…” என சொல்ல,
“அஷ்வினி தான் கூப்பிடறாங்க. அட்டன் பண்ண தோணலை…” என்றதும் பவித்ராவின் முகம் யோசனையானது.
“என்னாச்சு? எதாச்சும் கேட்கனுமா?…” என்றவனுக்கு மறுப்பாய் தலையசைத்தாள்.
“ஆனாலும் உன் முகத்துல என்னவோ இருக்கே. என்னன்னு கேளு…” என விஜய் கேட்க,
“இல்லை ஒண்ணுமில்லை…” என்று மறுத்தாள்.
“ஓஹ்…” என்றவனின் குரல் ஒருமாதிரி இருக்க,
“இல்லை கேட்கறேன்…” என்று தானே முன்வந்தாள்.
சொல், சொல்லாதே என்று எதுவும் சொல்லாமல் அவன் வீடிருக்கும் திசையில் காரை திருப்பினான்.
“அன்னைக்கு ஒரு லெட்டர் குடுத்தீங்களே என்கிட்டே?…”
“என்னைக்கு? என்ன லெட்டர்?…” என கேட்டவனுக்கும் அதன் ஞாபகம் துளியும் இல்லை.
“அன்னைக்கு அவங்க உங்களை பேசினப்போ. நான் வந்தேன்ல. அந்த பேப்பரை கூட கிழிச்சு போட்டேனே?…” என்றதுமே விஜய்யின் முகத்தில் குறுஞ்சிரிப்பு.
“ஹ்ம்ம், ஆமா…”
“அது நிஜமாவே லவ் லெட்டர் தானா?…” என்றாள்.
“இந்த ரணகலத்துளையும் உனக்கு இப்படி ஒரு டவுட் வருது பாரேன்?…” என அவன் கிண்டலாய் சொல்ல,
“நீங்க தான கேட்க சொன்னீங்க…” என்றாள்.
“ஏன் அந்த லெட்டரா இருந்தா மட்டும் என்னவாம்? அதுல அப்போ உனக்கு என்ன நஷ்டம்?…” என்றான் வேண்டுமென்றே.
பவித்ராவின் முகம் வாடிவிட அவனுக்கு புரியத்தான் செய்தது அவளின் மனநிலை. ஆனாலும் அவன் வாய் ஒன்று இருக்கிறதே?
“நீ கூட தான் நிச்சயதார்த்தம் வரை மேடை ஏறின? நான் கேட்டேனா?…” என்றதுமே முகம் கன்றிவிட்டது.
“அதான் நடக்கலையே…” என்றாள் சின்ன குரலில்.
“நான் வரலைன்னா?…” என்றான் தெரிந்துகொள்ளும் ஆவலில்.
“அது தெரியலை. ஆனா நடக்காதுன்னு மட்டும் தெரியும்…”
“அது எப்படி தெரியும்? நான் வருவேன்னு நினைச்சியா?…”
“தோணுச்சு…”
“ரியலி? எங்க எப்படின்னு சொல்லு?…” என்றான் ஆர்வமாக.
அவனின் கேள்வியில் முகம் சிவந்தது அவளுக்கு. அந்த திடீர் மௌனத்தை வித்தியாசமாக பார்த்தான்.
“என்ன?…” என அவன் மீண்டும் கேட்க,
“அதை விடுங்க…” என்று சொல்லும் பொழுதே மீண்டும் மீண்டும் அழைப்பு வர,
“எடுத்து பேசுங்க ப்ளீஸ்..” என்றதும் முறைத்துவிட்டு திரும்பிக்கொண்டான்.
‘என்ன மனிதன் இவன்?’ என்றுதான் தோன்றியது அவளுக்கு. அத்தனை அழைப்பையும் சலிக்காமல் கண்டுகொள்ளாததை போல இருக்கிறானே என்று அவள் நினைக்க அவளின் கோபம் முகத்தை பார்த்துவிட்டு காலை அட்டன் செய்து ப்ளூடூத்தில் கனெக்ட் செய்தான்.
“விஜய் ஸார்…” என்றவளின் குரலில் பவித்ராவிற்கு பற்றிக்கொண்டு வந்தது.
“சொல்லுங்க அஷ்வினி…” என்றான் விஜய்.
“என்ன சொல்ல சொல்றீங்க? இங்க காலேஜ் ஃபுல்லா உங்க போட்டோவை காமிச்சு…” என்று அவள் பேச,
“ஆமா, அதுக்கென்ன இப்போ?…” என்றான் இவன்.
“அப்போ அதனால தான் என்னை அவாய்ட் பண்ணுனீங்களா?…” என விசும்பலுடன் கேட்க இப்போது அப்பட்டமான எரிச்சல் விஜய்யின் முகத்தில்.
“வாட் ரப்பிஷ்? நான் ஏன் அவாய்ட் பண்ணனும்? சொல்ல போனா நான் கன்சிடரே பண்ணலை உங்களோட ப்ரப்போசலை. அன்னைக்கே நோ சொல்லிட்டேனே?…” என்றான் பவித்ராவை ஒரு பார்வை பார்த்தபடி.
“இல்லை, இது…” என்று அஷ்வினி மேலும் பேச,
“அஷ்வினி எனக்கும் பவித்ராவுக்கும் கல்யாணமாகி நாலு வருஷம் முடிஞ்சது. இந்த காலேஜ்க்கு அவ என்னோட வொய்பா தான் படிக்க வந்தா. இதுக்கு மேலே நீங்க என்னை டிஸ்டர்ப் பண்ணமாட்டீங்கன்னு நினைக்கறேன்…” என்று சொல்லி அவன் காலை கட் செய்துவிட்டான்.
“போதுமா? இனி போன் வராது…” என்று சொல்ல,
“நான் ஒன்னும் அதுக்காக சொல்லலை. அவங்கன்னும் நினைச்சு பேச சொல்லலை…” என்றாள் பவித்ரா.
வீடு வந்துவிட காரை உள்ளே நிறுத்திவிட்டு அவளுடன் மாடி ஏறினான். இத்தனை நாள் வந்ததற்கும் இன்றைக்கு வந்ததற்கும் உள்ள வித்தியாசத்தில் இருவரின் மனதிலும் இருவேறு வகையான உணர்வுகள்.
“நீ உள்ள போ, இப்போ வந்திடறேன்…” என்றவன் பவித்ரா செல்லவும் ஜெகனிற்கு அழைத்தான்.
“என்னண்ணா எங்க இருக்கீங்க?…” என்று கேட்க,
“சென்னைக்கு தான் வந்துட்டு இருக்கோம். போனை வை…” என்று பல்லை கடித்துக்கொண்டு அவன் சொல்லியவிதமே சிரிப்பாய் இருக்க,
“ண்ணா, ண்ணா…” என்றான் மீண்டும் விஜய்.
“கொன்னுடுவேன், இங்க மனுசன அள்ளிப்போட்டுட்டு வரமாதிரி வந்துட்டு இருக்காங்க. பேசற நிலமையிலையா இருக்கேன்…” என்று கிசுகிசுப்பாய் சொல்லி போனை வைத்துவிட்டான்.
ஒரு சிரிப்போடு வீட்டிற்குள் வந்தவன் பவித்ராவை தேட அங்கே தண்ணீரை குடித்துக்கொண்டு இருந்தாள் அவள்.
“இன்னும் சாப்பிடலையா நீ?…” என அவள் குடித்த வேகத்தை பார்த்து கேட்க,
“இல்லை, பசிக்கலை…” என்று சொல்லவும் இருவருக்கும் உணவை ஆடர் செய்ய,
“இல்லை வேண்டாம். பசிக்கலை…” என்றாள் மீண்டும்.
“நானும் சாப்பிடலை. காலேஜ்ல இருந்து அப்படியே கிளம்பி வந்துட்டேன். எனக்கு பசிக்குது…” என்றான் விஜய்.
“நீ போய் உட்கார். இப்ப வந்திடறேன்…” என்றவன் தன்னறைக்குள் சென்று முகம் கழுவி உடை மாற்றிவிட்டு வந்தான்.
அப்பொழுதுதான் ஞாபகமே வந்தது பவித்ராவிற்கு உடையும், அவளின் புத்தகங்களும் எடுத்து வரவில்லை என்று.
“ஓய் பழனி…” என உள்ளிருந்தே அவளை அழைக்க அறை வாசலில் வந்து எட்டி பார்த்தாள்.
“உனக்கு ட்ரெஸ் எதுவும் எடுத்துட்டு வரலையே? நான் தான் கூப்பிட்டேன். நீயாச்சும் ஞாபகப்படுத்திருக்கலாம் தானே?…” என்று கேட்க இன்னுமே அவளுக்கு முகம் தெளிவில்லாமலே இருந்தது.
அதில் அதிசயம் என்னவென்றால், விஜய் இதை அத்தனை இலகுவாய் எடுத்து அவளிடத்தில் பேசிக்கொண்டிருப்பது.
கொஞ்சமும் எந்த பதட்டமும் இல்லை, இப்படி அழைத்துவந்துவிட்ட யோசனையும் இல்லை. இவனால் எப்படி இப்படி இருக்க முடிகிறது? என்று அவனை பார்த்துக்கொண்டே நிற்க,
“உன்கிட்ட என்ன கேட்டா இந்த லுக் லுக்கற?…” என்று அவளின் தலையில் லேசாய் தட்டினான்.
“உங்களுக்கு கோவமே வரலையா?…” என்றாள் அவள்.
“ஏன் கோவம் வரனும்?…” என்றபடி ஹாலுக்கு சென்று சோபாவில் தொப்பென்று அமர்ந்தான்.
“நேத்து நீங்க பேசினதும், இன்னைக்கு நீங்க பேசறதும். நீங்க யோசிக்காம அவசரப்பட்டு…” என்று அவள் நிறுத்தவும் அவளின் குழப்பம் ஒருவகையில் தன்னை கொண்டும் என்று அவனுக்கு புரிந்தது.
“நேத்தும் நான் தான் பேசினேன். இன்னைக்கும் நான் தான். ஆனா தெளிவா நிதானமா தான் பேசறேன். நல்லா யோசிச்சு தான் இந்த முடிவெடுத்தேன். இதுக்கு மேல இதுல என்ன யோசிக்கனும்? இதுல உனக்கு என்ன கன்ப்யூஷன்?…” என்று கேட்க,
“என்னை கூட்டிட்டு வந்துட்டீங்க? அதை பத்தி எதுவும் தோணலையா?…”
“இப்ப நீ தெளிவா இருக்கியா?…” என்று லேசாய் சிரித்தவன்,
“எஸ், தோணலை. நான் எதுவும் புரியாம அந்தந்த நேரத்தை வச்சு டிஸைட் பண்ணலை. நேத்தே நைட் ஒருமாதிரி இந்த டிஷிஷனுக்கு வந்துட்டேன். சரி பார்த்துப்போம்னு ஒரு ஐடியா. ஆனா எதுக்குமே உனக்கு நேரமில்லைன்னு நம்மோட விதி தீர்மானிச்சிருச்சு…” என்றான்.
“நாளைக்கு வீட்டுல இருந்து வந்து பேசுவாங்களே?…”
“ஆமா, நீயும் பேசு. ஆனா ஒன்னு, நீ இங்க வந்துட்ட. இனி போகனும்னு எந்த காலத்துலயும் நினைச்சிடாத. அதுக்கு உனக்கு ஒரு பர்சன்ட் கூட நான் சான்ஸ் தரமாட்டேன்….” என்றான் விஜய்.
“உங்களுக்கு தான் இன்னும் என்னை பார்த்தா பிடிக்காதே. நான் அருமைநாயகம் ரத்தம்ன்னு சொல்லுவீங்க?…”
“ஹ்ம்ம், அப்படித்தான் நினச்சுட்டு இருந்தேன். ஆனா எங்கம்மாவோட ரத்தமும் உன் உடம்புல ஓடுது தானே? பாசிட்டிவா நினைச்சுக்கறேன். ஆமா நீ ஏன் என்னை கன்ப்யூஸ் பண்ண பார்க்கற?…” என்றான்.
அவனிடம் அவள் எப்படி தெளிவாக சொல்லுவாள் உன்னால் தான் இந்த குழப்பமே என்று.
“ஒரு விஷயம் தெளிவா புரிஞ்சுக்கோ. நாளைக்கு நான் உன் கூடவே இருந்தாலும் சில விஷயங்கள் நீ தான் பேசனும். நான் பேசிடுவேன் தான். ஆனா வேற மாதிரி ஆகிடும்…” என்று சொல்ல அவளின் முகம் வெளிறியது.
“ஓகே, இப்போவே எதுவும் பேச வேண்டாம். காலேஜ் முடிஞ்சிருக்கும். உன்னோட ரூம் மேட் அந்த பொண்ணு உனக்கு ஹெல்ப் பண்ணுவாளா?…” என கேட்க,
“என்ன ஹெல்ப்? எதுக்கு?…” என்றாள்.
“நீ இன்னும் குளிக்கவும் இல்லை. சரிதானே?…” என்றதுமே அசடுவழிந்தது பவித்ராவின் முகம்.
“ஹ்ம்ம், சுத்தம். குளிச்சுட்டு பீல் பண்ண வேண்டியது தானே?…” என்றவன்,
“உன் ப்ரெண்டுக்கு போன் பண்ணி உன்னோட லக்கேஜை எல்லாம் பேக் பண்ணி வைக்க சொல்லு. கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு போய் எடுத்துட்டு வந்திருவோம்…” என்றான்.
“ஹ்ம்ம்…” என்றவள் விகாஷினிக்கு அழைத்தாள்.
“என்ன பவி, இங்க காலேஜ்ல என்னென்னவோ பேசிக்கறாங்க. நம்ம பிள்ளைங்க போட்டோ ஷேர் பன்றாங்க. உன்னையும் நம்ம விஜய் சாரையும். என்னடி நடக்குது. இப்ப என்னன்னா அஷ்வினி மேம் நீங்க ஹஸ்பண்ட் அன்ட் வொய்ப்ன்னு சொல்றாங்க. நிஜமாவா?…”
விகாஷினி எடுத்த எடுப்பில் கேள்விகளால் துளைக்க பவித்ராவினால் எதிரே விஜய்யை வைத்துக்கொண்டு பதில் பேச முடியாமல்,
“ஆமா…” என்றாள்.
“என்னடி ஆமா? தெளிவா சொல்லு. உன் கூட இத்தனை நாள் இருந்தேன். ஒரு வார்த்தை சொல்லிருப்பியா?…” என தோழியாய் அவள் கோபமாக கேட்க பவித்ரா எழுந்து அறைக்குள் செல்ல போனாள்.
“இங்கயே பேசேன். ஏன் ஓடற?…” என்றான் விஜய்.
“இல்ல, ப்ரென்ட், பேசிட்டு வரேன்…” என்று நிற்காமல் ஓடிவிட சிரித்தபடி அவள் சென்றதை பார்த்தான் விஜய்.
சற்று நேரத்தில் உணவும் வந்துவிட இருவருமாக சாப்பிட்டு முடித்து சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்தார்கள். இருவருக்குள்ளும் பேச்சுக்கள் இல்லை.