ஆகாஷ் அழைக்க அவனிடத்தில் நடந்ததை சொன்னான் விஜய். நீயாடா என்று அவன் ஆச்சர்யப்பட்டுபோக இப்போது அருமைநாயகம் கிளம்பி வருவதை பற்றி விஜய் சொல்லவும்,
“வரட்டும்டா என்னன்னு பார்த்துடுவோம்…” என்று ஆகாஷ் சொல்ல ப்ரனேஷிற்கு அழைத்து இப்படி பேச்சுக்கள் சிறிது நேரம் சென்றது.
மறுநாள் பவித்ராவிற்கு பரிட்சை இல்லாததால் படிப்பதற்கான ஒருநாள் விடுமுறை இருக்க விஜய்க்கு அது இல்லை. கல்லூரி செல்ல வேண்டுமே?
தாளாளருக்கு அழைத்து விஷயத்தை சொல்லவும் அவருக்கு அப்படி ஒரு சந்தோஷம்.
“நீ லீவ் எடுத்துக்க விஜய். பார்த்துக்கலாம்..” என்றவரிடம் மேலும் ஒரு விஷயத்தை சொல்ல,
“அவ்வளவு தானே? இந்த வீக்கெண்டா? நீ மாதவன்கிட்ட பேசிட்டியா?…” என்றார்.
“அப்பாக்கிட்ட இன்னும் கொஞ்சம் நேரத்துல பேசனும். இந்த நேரம் அப்பா ரெஸ்ட்ல இருப்பாங்க…” என்றான்.
“ஓகே, பக்காவா பண்ணிடலாம்….” என்றவர்,
“நான் வேணும்னா நாளைக்கு வீட்டுக்கு வரவா? தனியா சமாளிப்பியா?…” என்று கேட்க,
“அந்தாளுக்கு நான் போதும் அங்கிள். நோ வொர்ரி…” என்று விஜய் சிரித்தபடி சொல்ல,
“தட்ஸ் மை பாய்…” என்று சொல்லி வைத்துவிட்டார்.
அவன் பேசியதை கேட்டுக்கொண்டிருந்தவளுக்கு முகமே வெளிறி போனது பயத்தில்.
“என்ன? உனக்கு ஓகே இல்லையா?…” என்று விஜய் கேட்க,
“கேரளாவுக்கு இப்போ எப்படி?…” என்றாள்.
“இப்போவே இல்லை. பேசினதை கேட்ட தானே?…” என்றவன் அவளை அழைத்துக்கொண்டு பிஜிக்கு கிளம்பினான்.
அங்கே விகாஷினி காத்திருக்க ஜெகன் ஏற்கனவே பிஜியில் விஜய் விஷயமாக வந்துகொண்டிருந்த வழியில் கிடைத்த கேப்பில் பேசியிருந்தான். அதனால் அவர்கள் ரூமை காலி செய்வதும் சுலபமாக முடிந்தது.
வீட்டிற்கு வந்து அவளின் பொருட்களை எல்லாம் கொண்டுவந்து அவனின் அறையில் வைத்தவன்,
“குளிச்சுட்டு வா…” என்று சொல்லி அனுப்பி வைத்துவிட்டு வெளியே வந்தான்.
பவித்ரா குளித்து முடித்து வெளியே வரவும் இரவுக்கு விஜய்யே செய்துவிட அவனை தேடி கிட்சனில் வந்து நின்றவள்,
“என்கிட்டே சொல்லிருந்தா நானும் ஹெல்ப் பண்ணிருப்பேன்ல…” என்றாள்.
“அதிருக்கட்டும், முடிஞ்சது. நீ என்னோட வா…” என்றவன் தாயும் தந்தையும் தங்கி இருந்த அந்த அறைக்குள் அவளை அழைத்து சென்றான்.
முதன் முதலில் அந்த அறைக்குள் நுழைகிறாள். உடலுக்குள் ஏதோ ஒரு உணர்வு பொங்க அங்கே சுவற்றில் பெரிதாய் மாட்டியிருந்த புகைப்படத்தில் பார்வை நிலைத்தது.
குடும்பமாய் மாதவன், மதுவந்தி, விஜய் மூவரும் சிரித்தபடி இருக்கும் புகைப்படமும் அவர்கள் அங்காங்கே எடுத்துக்கொண்ட புகைப்படமுமாய் அந்த அறை முழுக்க இடம்பிடித்திருந்தது.
சுவர் எங்கே என்று தேடும் அளவிற்கு சுவரெல்லாம் போட்டோக்கள் மயம். பார்க்க பார்க்க துக்கம் தொண்டையடைக்க கண்ணீர் பொங்கிவிட்டது பவித்ராவிற்கு.
“ஹேய், கூல்டவுன் கேர்ள்…” என்று அவளின் தோளை தட்டிக்கொடுத்தவன்,
“எங்கம்மா ரொம்ப பிரேவ். இப்படி அழுதுட்டே இருக்கமாட்டாங்க. அவங்க அழுதது உங்க குடும்பத்தை மருதமலையில வச்சு பார்த்த பின்னாடி தான். அதுக்கப்பறம்…” என்று கையை விரித்தவனின் முகமோ பாறையாய் இறுகி போக தன்னை கட்டுக்குள் கொண்டுவந்தான்.
“ஓகே, சில். வா இங்க உட்கார்…” என்றவன் அங்கே இருந்த சிட்டரில் அமர சொல்லி எதிரே டீப்பாயில் வைத்திருந்த லேப்டாப்பை எடுத்து கால் கனெக்ட் செய்தான்.
“பாரு…” என்று காண்பிக்க அந்த திரையில் தெரிந்த மனிதரை பார்க்க ஒரு நொடி உடல் தூக்கிவாரி போட்டது.
மாதவன், ஒரு மனிதர் இப்படி உருக்குலைந்து இருப்பார் என்று கனவிலும் நினைத்ததில்லை.
தோல் எல்லாம் ஒட்டி முகம் முழுவதும் எலும்பு துருத்திக்கொண்டு கழுத்தை சுற்றிலும் பேண்ட் போடப்பட்டிருந்தும் அந்த தலை நிற்காமல் லேசாய் ஆடிக்கொண்டே இருந்தது.
அந்த நிலையிலும் தங்கள் இருவரையும் பார்த்தவரின் கண்கள் ஒளிர்ந்தது. கருத்திருந்த உதட்டில் சிரிப்பு பூக்க இருவரையும் பார்த்து என்னவோ சைகை செய்தார்.
அதற்கு மேல் அவரை பார்க்கமுடியாமல் தன் கையால் முகத்தை மூடி பவித்ரா அழுதுவிட,
“என்ன பன்ற பழனி? அப்பா பீல் பண்ண போறார் கண்ணீரை துடைச்சுக்கோ…” என்றான் அவளிடத்தில்.
“இல்லை, வேண்டாம். என்னால முடியலை…” என்று சொல்லியவளை தன் தோளில் சாய்த்துக்கொண்டவன் மனமும் கனத்து போனது.
“ஓகே ஓகே…” என்று சொல்லிக்கொண்டே தந்தையை பார்த்தான்.
“ம்மா…” என்று மாதவன் முயன்று சத்தத்தை வரவழைத்து அவளை அழைக்க,
“உன்னை தான் கூப்பிடறாங்க…” என்று சொல்லியும் அவரின் முகம் பார்க்கவே முடியவில்லை அவளால்.
“ஓகே பா. நான் நாளைக்கு பேசறேன். குட்நைட்…” என்று சொல்லி விஜய் வைத்துவிட்டான்.
“பவித்ரா இங்க பாரு…” என்று அவளை எழுப்பி நிறுத்தியவன்,
“அப்பாக்கிட்ட பேசிட்டேன் அப்பவே. அவருக்கு ரொம்ப சந்தோஷம். ஆனா நீ இப்படி இருந்தா என்னவோ உன்னை நான் தான் மிரட்டி கூட்டிட்டு வந்திருக்கேன்னு நினைப்பார்…” என்று சொல்லி அவளை தேற்றினான்.
“வா சாப்பிட்டு தூங்கலாம்…” என்றவன் மறுநாள் அவர்கள் வரும் பொழுது தைரியமாய் இருக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தினான்.
பவித்ரா உறங்க சென்றதும் சற்று நேரத்திற்கெல்லாம் அழைப்பு வந்துவிட்டது ஜெகனிடமிருந்து விஜய்க்கு.
“விஜய் என்ன நடந்துச்சுன்னு உன்கிட்ட சொல்றதுக்கு கூட இந்த மனுஷன் டைம் குடுக்கலை….” என்றவன் படபடவென்று பேச ஆரம்பித்தான்.
விஜய்யிடம் இருந்து போன் வரவுமே அங்கே ஜெகன் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்ற யோசனையுடனே தான் ஜோதி, ரஞ்சனியை மட்டும் கூப்பிட்டு விஷயத்தை சொல்ல அவர்களும் திகைத்தனர்.
“என்ன மாமா, இப்படி திடீர்ன்னு அவர் இப்படி பண்ணிட்டார்? அப்பாவுக்கு என்னன்னு சொல்ல?…” என்னும் பொழுதே அருமைநாயகம் வந்துவிட்டார்.
“வாங்க மாப்பிள்ளை, காலையில இருந்து சங்கத்துக்கு போக, கடையிலன்னு நேரம் போய்டுச்சு. அதான் நீங்க வந்ததும் வர முடியலை…” என்றவர்,
“என்னவாம், என்ன சொல்லனும்?…” என்று அவர் கேட்டதும் ஜெகனும் சட்டென சொல்லிவிட்டான்.
“அந்த பையன் விஜய் போன் பண்ணிருந்தான் மாமா இப்போ…” என்றதுமே அமர்ந்தவர் எழுந்துவிட்டார்.
“அந்த கடன்காரன் எதுக்கு உங்களுக்கு போன் பண்ணான்?…” என்ற சத்தத்தில் வசந்தியும், பார்வதியும் வந்துவிட பழனியப்பன் கடையில் இருந்ததனால் இது எதுவும் அவருக்கு தெரியவில்லை.
“நம்ம அப்புவை அவரோட கூப்பிட்டுக்கலாம்ன்னு இருக்கார் போல? அதான் என்கிட்டே சொன்னாரு…” என்றதும் ஒரு இகழ்ச்சியான சிரிப்பை வஞ்சகத்துடன் உதிர்த்தவர்,
“அதானே பாத்தேன்? எம்புட்டு நாளைக்கு தான் ஒத்தையாவே காலத்த ஓட்டுவான்? இப்ப பொண்டாட்டின்னு கூட்டிட்டு போக தோணுதோ?…” என்று நக்கலாய் பேச,
“நாம எதிர்பார்த்தது தானே மாமா? அன்னைக்கே அனுப்பனும்னு தானே முடிவு பண்ணிருந்தோம். இப்போ அவரே வரார். சுமூகமா முடிச்சு விடுவோம்…” என்று ஜெகன் தன்மையாக பேச தலையை அசைத்தபடியே இருந்தார்.
“ஜோதி, உடனே உன் தங்கச்சிக்கு போன போட்டு இங்க வர சொல்லு…” என்று சொல்லிவிட்டு,
“அந்த பய இங்க வரனும். இந்த ஊருக்கு முன்னாடி அவன் செஞ்சதுக்கு எல்லாம் என் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டுட்டு தான் பொண்ணை கூட்டிட்டு போகனும். அதுவும் முறைப்படி. இல்லன்னா நான் அனுப்ப முடியாது…” என்றதுமே ‘இதென்ன புதிய பிரச்சனை?’ என்று மூவரும் திருதிருத்தனர்.
“அவன்கிட்ட எங்க இருக்கான்னு கேட்டு போன போட்டு வர சொல்லுங்க மாப்பிள்ளை…” என்றதும்,
“அவரும் சென்னைல தான்ப்பா இருக்காரு. நம்ம அப்பு காலேஜ்ல தான் வேலை பார்க்காரு….” என்று சட்டென உளறிவிட்டாள் ரஞ்சனி.
“ஏய்…” என்று ஜெகன் தடுப்பதற்குள் போட்டு உடைத்துவிட,
“ஆத்தீ, அப்ப எம்மவ?…” என வசந்தி நெஞ்சை பிடித்துவிட அருமைநாயகத்தின் கோபம் பலமடங்காக மாறியது.
“என்ன சொல்ற? இத ஏன் முன்னாடியே என்கிட்டே சொல்லலை?…” என்று மகளிடம் பாய்ந்தார்.
“நீங்க டென்ஷன் ஆகவேண்டாம்னு தான் மாமா நான் சொல்லவேண்டாம்ன்னு சொன்னேன். ஏன் இப்ப என்ன? நம்ம அப்பு படிக்கத்தான போயிருக்கா?…” என்றதுமே அருமைநாயகம் கோபத்தை விடுத்து யோசனையுடன் ஜெகனை பார்த்தார்.
“மாமா, மாட்டிக்கிட்டீங்களா? அப்பா பார்வையே சரியில்லை…” என ஜோதி ஜெகனின் காதை கடிக்க,
“சும்மா இருடா நீ வேற…” என்றான் அவனை.
“அப்ப புள்ளைய பார்த்துட்டு தான் அவனுக்கு கூட வச்சு வாழனும்னு நினைப்பே வந்திருக்கோ?…” என்ற அருமைநாயகம்,
“சரி எல்லாரும் கிளம்புவோம். மாப்பிள்ள, உங்களுக்கு திரும்ப போன போட்டா ஒன்னும் பேசாதீங்க. நாம பேசிட்டு மெதுவா சொல்லுறோம்ன்னு சொல்லி வைங்க. முதல்ல போய் அப்புவை இங்க கூட்டிட்டு வந்துருவோம். அப்பறம் அவனுக்கு எப்புடி ஆட்டம் காட்டறேன்னு பாருங்க…” என்றவர்,
“ஜோதி வண்டிக்கு சொல்லுடா. அப்படியே கடைக்கு ஆளை பார்த்துக்க சொல்லி உன் சித்தப்பனை வர சொல்லு…” என்றார்.
“சரிங்கப்பா…” என்று ஜோதி போனை எடுத்துக்கொண்டு வெளியே செல்ல இங்கே ஜெகனிற்கு வயிற்றை கலக்கியது.
‘யோவ் லூஸு மாமா, அவன் ஏற்கனவே பொண்ணை தூக்கிட்டான்ய்யா. நானும் ரவுடிதான்னு உன் கனவுக்கு ஒரு அளவே இல்லையா?’ என பாவமாகவும், கலவரத்துடனும் பதைபதைக்கும் நெஞ்சத்துடன் நடப்பவற்றை வேடிக்கை பார்த்தான்.
“ரஞ்சு நீ இங்க இருந்து உன் தாத்தாவை பார்த்துக்கோ. நாங்க போய்ட்டு வரோம்…” என்று ஜெகன் கிளம்பினான்.
கிளம்பி செல்லும் வழியெல்லாம் அருமைநாயகம் அவனை அப்படி செய்வேன் இப்படி வளைப்பேன் என்று வீர வசனம் பேசிக்கொண்டே சென்றார்.
அதிலும் கிளம்பும் பொழுதே வீட்டில் இருக்கும் அனைவரிடமும் எச்சரிக்கையுடன் சொல்லியிருந்தார்.
“அவன்கிட்ட நான் மட்டும் தான் பேசுவேன். ஒருத்தரும் வாய திறக்க கூடாது. ஆமா…” என்று சொல்லியிருக்க,
“ம்க்கும்…” என்றான் ஜெகன் ஜோதியிடம்.
“என்ன மாப்பிள்ளை?…” என அருமைநாயகம் கேட்க,
“தொண்டையில கிச்சுக்கிச்சு மாமா….” என்று சமாளித்தான்.
அதன் பின்னர் பழனியப்பனிடம் அவர் வழக்கமான சவடால் பேச்சில் இருக்க ஜெகன் ஜோதியிடம்,
“பார்த்துட்டே இரு. பொண்ணையும் கூட்டிட்டு வர முடியாது. ஒன்னையும் பண்ண முடியாது. உன் மச்சான் பாடுவான், வாங்க மச்சான் வாங்க வந்த வழிய பார்த்து போங்கன்னு. போயி என்ன பாடுபட போறாரோ?…” என்று ஜெகன் சொல்ல,
“நீங்க கிண்டல் பன்றீங்களா? பீல் பன்றீங்களா மாமா?…” என்றன ஜோதி.
“டேய் நான் என்ன நடக்குமோன்னு பதட்டத்துல இருந்தா சாவகாசமா பேசற நீ?…” என்றான் ஜெகன்.
“விடுங்க மாமா, அதான் தங்கச்சி மாப்பிள்ளையோட இருக்காளே. என்ன ஒன்னு வசும்மா புலம்பல் தான் தாங்கலை…” என்று காதை குடைந்தான்.
“தைரியசாலிடா நீ…” என்றவன்,
“அங்க நீ தில்லா நீ நிக்கற. அத நான் பாக்கறேன்…” என்று ஜெகன் சொல்ல இப்படி பேசிக்கொண்டே வந்தவர்கள் இரவு உணவிற்கு ஓரிடத்தில் வண்டியை நிறுத்த வசந்தியின் அழுகை ஓயவே இல்லை.
“வசும்மா, தெம்பா சாப்பிட்டு அப்பறம் அழலாம்…” என்றான் ஜோதி.
இப்படி கிளம்பி வந்துகொண்டிருக்கும் அலப்பறைகளை விஜய்யிடம் ஜெகன் சொல்ல சத்தமாய் சிரித்தவன்,
“ஆக, இங்க பவித்ரா என்னோட தான் இருக்கான்னு அங்க யாருக்கும் தெரியாதா?…” என்றான்.
“என்னடா சிரிக்கிற? தெரியற மாதிரியா என் மாமனார் பேசினார்? நீ போன் பண்ணி அப்புவை கூப்பிட்டுக்கலாம்னு இருக்கன்னு சொன்னதுக்கே மனுஷன் ஓவர் ஆட்டம். அதுக்கப்பறம் எங்க சொல்ல? அங்க வந்து மொத்தமா ஷாக் ஆகிக்கட்டும்…” என ஜெகன் சொல்லவும்,
“ஓஓஹோ அவரை தவிர ஒருத்தரும் பேச கூடாதோ?…” என்னும் பொழுதே,
“டேய் ஐயம் யுவர் பெஸ்ட் அண்ணன். பார்த்து பதமா பண்ணு….” என்றான் ஜெகன்.
“இப்ப இருந்து நீங்க யாருன்னே தெரியாது. நாளைக்கும் அதையே மெய்ண்டெய்ன் பண்ணுங்க…” என்று சொல்லி போனை கட் செய்துவிட்டான்.
“என்ன மாமா எல்லாம் பாஸ் பண்ணியாச்சா?…” என ஜோதி வர,
“இன்னும் ஒன்னே ஒன்னு. இப்ப வந்திடறேன்…” என சொல்லி ரெஸ்ட்ரூம் நோக்கி ஓடினான் ஜெகன்.
நடு இரவிலேயே சென்னையை வந்தடைந்தவர்கள் வழக்கமாக தங்கும் அந்த ஹோட்டலில் ரூம் போட்டிருக்க அருமைநாயகம் காலை ஆறுமணிக்கே ஆரம்பித்துவிட்டார் பவித்ராவை பார்க்கவேண்டும் என்று.
“உங்க அண்ணனுக்கு இத்தனை நாள் இல்லாம இன்னைக்கு தான் தம்பி பொண்ணு மேல பாசம் பொங்குது பாருங்க…” என்று போகிற போக்கில் ஜெகன் கோர்த்துவிட்டு வேறு செல்ல பழனியப்பன் முகம் சோர்ந்துவிட்டது.
“மாமா, இப்போவே அங்க போக முடியாது. அங்க அலோவ் பண்ணமாட்டாங்க…” என்றான் நேரத்தை கடத்தவென்றே.
இந்த பக்கம் விஜய் வேறு போனை எடுக்கவில்லை. ஆகாஷ், ப்ரனேஷ்க்கு அழைத்து விஜய் வீட்டிற்கு போக சொல்ல அவர்கள் ஏற்கனவே தயாராகி சென்றுகொண்டிருப்பதாக சொன்னார்கள்.
“இன்னும் எவ்வளவு நேரம் மாப்பிள்ளை?…” என்று சொல்ல வசந்தி அதற்கு மேல் பவித்ராவின் எண்ணிற்கு அடித்து அடித்து ஓய்ந்து போனார்.