“இந்த பொண்ணு வேற எடுக்கமாட்டேன்றா. ஒருத்திய பெத்துட்டு நிம்மதியில்லாம இருக்கேனே? ஒரு வார்த்தை சொல்லியிருப்பாளா?…” என்று அழ,
“உன் சித்தி இன்னைக்கு விஜய்க்கிட்ட நல்லா வாங்க போறாங்கடா…” என்றான் ஜெகன்.
“முதல்ல இங்க இருந்து கிளம்புவோம். அங்க போய் கூட என்னன்னு வெய்ட் பண்ணுவோம்…” என்று அருமைநாயகம் ஹோட்டலில் இருந்து வெளியே வந்தேவிட்டார்.
“முதல்ல பொண்ணை நம்மக்கிட்ட வச்சுக்கிட்டு அங்க வீட்டுல வச்சு அவளை பேசிக்கோ. இங்க ஆரப்பாட்டம் பண்ணாத…” என வசந்தியையும் கண்டித்தவர் எல்லோரையும் காரில் ஏற சொன்னார்.
“ஏன் மாமா, நாம மட்டும் போலாம். இவங்கலாம் ரூம்ல இருக்கட்டும்…” என்று ஜெகன் சொல்ல,
“அதெல்லாம் இருக்கமாட்டாங்க. எனக்கு தெரியாதா?…” என்றார் அவர்.
‘அங்க அப்புவே இருக்கமாட்டாளே?’ என நினைத்தபடி ஜெகன் அவர்களுடன் கிளம்பி பிஜி சென்று நின்றான்.
“வாங்க முதல்ல நாம மட்டும் போவோம். நீங்க கார்ல இருங்க…” என்ற ஜெகன் அருமைநாயகம், ஜோதியுடன் உள்ளே செல்ல,
“பவித்ராவா? நேத்தே அந்த பொண்ணோட ஹஸ்பண்ட் வந்து கூட்டிட்டு போய்ட்டாங்களே? ரூமும் வெக்கேட் பண்ணிட்டாங்க…” என்று அந்த பெண் சொல்ல,
“என்னது புருஷனா? ஏமா? என்னம்மா ஆஸ்ட்டல் வச்சு நடத்தற? யார கேட்டு என் பொண்ணை அனுப்பி வச்ச?…” என்று அருமைநாயகம் எகிற பழனியப்பன் ஏதோ பேசுவதற்குள் ஜோதி அவரை தடுத்துவிட்டான்.
“பழனிப்பா, கொஞ்சமா அமைதியா இருங்க. எல்லாம் எனக்கு தெரியும். பேசாம என்னன்னு பாருங்க…” என்று சொல்லவும் அண்ணன் மகனை அதிர்ச்சியுடன் பார்த்தார் அவர்.
“என்ன ஸார் பிரச்சனை பன்றீங்களா? நேத்து ட்யூட்டில இருந்தவங்க வேற லேடி. இன்னைக்கு நான் தான் இருக்கேன். புருஷன்னு சொல்லி சைன் போட்டு போனது உங்க பொண்ணு. இது ஒன்னும் காலேஜ் ஹாஸ்டல் கிடையாது…”
“யார் யார்கூட போறாகன்றத பாக்கறதா எங்க வேலை? கேட்டீங்க தகவல் சொல்லிட்டேன். கிளம்பிட்டே இருங்க. என்ன கேட்கறதா இருந்தாலும் உங்க பொண்ணுக்கிட்ட கேளுங்க…” என்று முகத்திலடித்ததை போல அப்பெண் பேசிவிட,
“என்னம்மா ஒரு வயசுல மூத்தவன்னு மரியாதை இல்ல?…”
“அது அது நீங்க நடந்துக்கறதை பொருத்து. போவீங்களா? வந்து ஒரு பொது இடத்துல எப்படி நடந்துக்கனும்னு தெரியலை. மரியாதையாம்…” என அப்பெண் எகிற அந்த கோபம் எல்லாம் விஜய்யின் மேல் திரும்பியது.
“மாப்பிள்ளை…” என்று படக்கென்று கத்திக்கொண்டே திரும்ப, விஜய் வீட்டிற்கு எப்படி அழைத்து செல்வது என்ற யோசனையில் இதை கவனிக்காமல் இருந்தவனுக்கு பக்கென்று ஆனது.
“மெதுவா கூப்பிடுங்க மாமா…” என்றான் எரிச்சலுடன்.
“என்ன மாப்பிள்ளை நீங்க, இங்க என்ன நடந்துச்சுன்னு தெரியாம?…” என்று சொல்லிக்கொண்டே வெளியேறியவனர்,
“வசந்தி உன் பொண்ணு நம்மை எல்லாத்தையும் அசிங்கப்படுத்திட்டா. நீ சொன்ன மாதிரியே அவனோடவே போய்ட்டா. போச்சு, என் மானம், மரியாதை எல்லாம் போச்சு…” என அருமைநாயகம் சொல்ல,
“ஐயோ, என் தலையில கல்லை போட்டுட்டாளே?…” என்று ஆரம்பிக்க,
“வசும்மா…” என்று அவரின் வாயை பொத்தினான் ஜோதி.
“ரோட்ல வச்சு. ப்ச், முதல்ல கார்ல ஏறுங்க…” என்று உடனே அனைவரையும் காருக்குள் ஏற்றியவன்,
“அப்புவுக்கு போனை போடுங்க…” என்றான்.
இவர்களின் போனை எதிர்பார்த்தபடியே அமர்ந்திருந்த விஜய் வசந்தியின் எண்ணிலிருந்து அழைப்பு வந்ததும் இப்போது அதை அட்டன் செய்தான்.
“அடியேய், என்ன காரியம்டி பண்ணிருக்க? இப்படி எங்களை சிரிக்கும்படி பண்ணிட்டியே? உன்னை நேர்ல வந்து பேசிக்கறேன். ஒழுங்கா கிளம்பி வீடு வந்து சேருடி…” என்று மிரட்ட,
“யாரும்மா நீங்க?…” என்றான் விஜய்.
“நா வசந்தி பேசறேன். அப்புவோட அம்மா…” என்று அவர் சொல்ல,
“இங்க அப்புவும் இல்லை சொப்புவும் இல்லை. ஒழுங்கா பேசுங்க…” என்னும் பொழுதே,
“டேய், டேய் நீதான. எனக்கு தெரியும்டா. என்னடா என்கிட்டையே விளையாட்டு காட்டுறியா?…” என்று அருமைநாயகம் வாங்கி பேச,
“ஓஹ் மிஸ்-டர்ர் எருமை…” என்று விஜய் சொல்ல இங்கே அதை கேட்டுக்கொண்டிருந்த ஆகாஷும், ப்ரனேஷும் வாயை பொத்தி சிரிக்க அங்கே ஜெகனும், ஜோதியும் அவஸ்தையுடன் பார்த்தார்கள்.
“ஆனாலும் இவருக்கு இம்புட்டு ஆகாது. மிஸ் டர்ர்ர்ன்னு எப்படி பேசறார்…” என்றான் ஜோதி.
“இன்னைக்கு உங்கப்பாவுக்கு டர்ர்ர்ரு தான்டா. எப்படான்னு இருந்தவன் வாய்க்குள்ள அல்வா துண்டு மாதிரி போய் விழுந்துட்டார்…” என்று சொல்ல இங்கே அருமைநாயகம் விஜய்யை மிரட்டிக்கொண்டு இருந்தார்.
“யோவ் மாமா, என்ன பேசனும்னாலும் வந்து பேசு…” என்று விஜய் சொல்ல,
“எங்கடா இருக்க? எங்கடா இருக்க?…” என அமர்ந்திருந்த இடத்தில் இருந்தபடி அவர் குதிக்க,
“என் மச்சானுக்கு அட்ரஸ் அனுப்பி விடறேன். வந்து சேரு…” என்று சொல்லிவிட்டு போனை வைக்கவும் ஜோதியின் போனை வெடுக்கென்று பிடுங்கினார் அருமைநாயகம்.
பதறியே போனான் ஜோதி. அவன் தான் விஜய்க்கு அத்தனை மெசேஜ் அனுப்பியிருந்தானே? போதாதற்கு சின்னமாப்பிள்ளை விஜய் என்று வேறு பெயரை பதிந்திருக்க,
“அய்யோ போச்சே…” என ஜோதியின் முகம் பஞ்சர் போக அதை பார்த்த ஜெகன்,
“உன் ஆத்மா சாந்தியடைய வாழ்த்துக்கள்…” என்றான்.
“என்ன எழவுடா இது? போனை பூட்டி வச்சிருக்க. நேரங்காலம் தெரியாம. முதல்ல எடுத்துவிடு…” என்று மீண்டும் நீட்ட,
“ஹப்பாடா…” என்றவன்,
“தெய்வமே? ஏன் தெய்வமே?…” என்றான் ஜெகனிடம்.
“இரு பார்த்துக்குவோம்…” என்றவன்,
“மாமா நான் இந்த ஏரியாவுக்கு வந்திருக்கேன். நீங்க பின்னால வந்து உட்காருங்க. நான் வழி சொல்றேன்…” என்றதும்,
“என்னது வந்திருக்கீங்களா?…” என திரும்பிய வேகத்தில்,
“உங்கப்பாவுக்கு இன்னைக்கு கழுத்து கையோட வர போகுது. பார்த்துக்கிட்டே இரு….” என கடுப்புடன் ஜோதியிடம் சொல்லிவிட்டு இறங்கி முன்னால் செல்லும் பொழுதே,
“அம்புட்டு சந்தேகம் இருந்தா நீங்களே போய்க்கோங்க. சென்னையில இங்க நான் சுத்தாத இடமான்னு சொன்னா உடனே நான் தான் அவன் இருக்கற இடம் தெரிஞ்சும் மறைச்ச மாதிரில முறைக்கிறீங்க? நான் வரலை. உங்க விஷயத்தை நீங்களே முடிச்சுக்கோங்க…” என்று முறுக்கிக்கொண்டான் ஜெகன்.
“ஐயோ மன்னிச்சிக்கோங்க மாப்பிள்ளை, புத்திகெட்டு என்னவோன்னு நினைச்சுட்டேன். வாங்க நீங்க கூட வாங்க…” என்று சொல்லி அவனை முன் இருக்கையில் அமர சொல்லிவிட்டே பின்னால் அமர்ந்தார் அருமைநாயகம்.
ஜெகன் வழி சொல்ல சொல்ல கார் விஜய்யின் இருப்பிடம் வந்து சேர்ந்தது மெதுவாய்.
“இந்தா இருக்கற இடத்துக்கு உனக்கு இம்புட்டு நேரமா? இதுக்குத்தான் கார் ஓட்ட தெரியாதவன்ட்ட எல்லாம் வண்டி எடுக்க கூடாதுன்றது…” என்று ட்ரைவரை வேறு திட்டிக்கொண்டே இறங்கினார்.
“இந்த வீடுதான் மாமா…” என்று பொதுவாய் அந்த வீட்டை காண்பித்து சொல்லிய ஜெகன் ட்ரைவரிடம் காரை எங்கே நிறுத்தவேண்டும் என்ற சொல்லிக்கொண்டிருந்தான்.
கீழே அனைவரும் இறங்கி பார்க்க வசந்தி இறங்கிய வேகத்தில் விடுவிடுவென கீழ் வீட்டு வாசலுக்கு சென்றுவிட்டார்.
“அப்பு, கதவ திறடி. அறிவுகெட்டவளே? இப்படி குடி முழுக வச்சிட்டியே? அப்பு, கதவ திறடி. இங்க வந்து இவன் வீடோட இருந்துக்கிட்டு எங்க மூக்கறுத்திட்டியே…” என்று ஓங்கி ஓங்கி கதவை அடிக்க அங்கே யாரும் இல்லை.
“அத்தை என்ன பன்றீங்க? வீடு மாடில. இந்த பக்கம் வாங்க. இங்க யாரும் இருக்கற மாதிரி தெரியலை…” என ஜெகன் சொல்லிக்கொண்டிருக்க,
“என்னது மாடியா?…” என்றார் அருமைநாயகம். ஜெகன் உடனே சுதாரித்தவன்,
“ஆமா மாமா, அட்ரஸ்ல போட்டிருக்கு. பர்ஸ்ட் ப்ளோர் அப்படின்னு…” என்று சொல்ல,
“ஹ்ம்ம்…” என்று மேலே நிமிர்ந்து பார்க்க விஜய் மாடியில் கைப்பிடி கம்பியை பிடித்தபடி அவரை பார்த்தபடியே நின்றான்.
அவனின் பார்வையை கண்டதும் பகபகவென்று பற்றிக்கொண்டு வந்தது அருமைநாயகத்திற்கு.
“டேய்…” என்று அவனை பார்த்ததும் கோபத்துடன் மேலே செல்ல அசையாமல் பார்த்தபடியே இருந்தான் விஜய்.
“எங்கடா என் பொண்ணு?…” என்று அவர் வந்ததும் அவரின் பின்னோடே எல்லோரும் வந்தார்கள்.
“உம்பொண்ணா? உம்பொண்ணுக்கு இங்க என்ன வேலை?…” என்றான் எள்ளலுடன்.
அவர்கள் யாரையும் உள்ளே நுழையவே விடவில்லை விஜய். கதவிற்கு முன்னால் இருக்கும் வராண்டாவில் வைத்து பேச அருமைநாயகத்திற்கு தெரிந்தது தன்னை அவமதிக்கிறான் என்று.
ஆனாலும் இவனிடம் தான் தோற்பதா? என மூச்சுவாங்க அவனை ஆக்ரோஷத்துடன் பார்த்தவர்,
“அப்புக்குட்டி. வெளில வாம்மா…” என்றார் சத்தமாக.
“இப்பவும் சொல்றேன், உம்பொண்ணு இங்க இல்லை…” என்றவன் பழனியப்பனை அழுத்தமாய் பார்த்தான்.
“நீ என்னடா சொல்றது என் பொண்ணு இல்லைன்னு. அவ என் பொண்ணுடா. நான் வளர்த்த பொண்ணுடா…” என்றார் அருமைநாயகம்.
“நீ பெத்த பொண்ணு இல்லையே. பேசறதுன்னா பெத்தவர் பேசட்டும். வேற எந்த இதுக்கும் இங்க பேச எதுவும் இல்லை….” என்று சொல்லவுமே,
“டேய்…” என்று அவரை அடிக்க பாய்ந்தார்.
“ஹலோ இது எங்க ஊர். இங்க வீட்டுக்குள்ள வந்து கொலை பண்ண ட்ரை பன்றேங்கன்னு கேஸ் குடுத்தா போதும். முடிஞ்சது. ஊர் போய் சேர முடியாது…” என்று வந்தான் ஆகாஷ். கூடவே ப்ரனேஷும்.
“இப்ப என்ன பெத்தவங்க தான கூப்பிடனும்?…” என்ற வசந்தி,
“அடியேய். அம்மா கூப்பிடறேன். இங்க வா. அப்பு…” என்று கத்த,
“ஹலோ மூச். பெத்தவர்ன்னா நான் அவரை சொன்னேன். நீங்க வாயை திறந்தீங்க. அவ்வளோ தான்…” என வசந்தியை விரல் நீட்டி எச்சரித்தவன்,
“ஆமா, எங்கம்மாவை சொல்லி சொல்லி என்னவோ பேசினேங்கலாம். எங்க இப்போ பேசுங்க பார்ப்போம்…” என்று அவன் நின்றவிதம் அச்சமூட்ட,
“என்ன இது? பொண்ணை அடைச்சு வச்சுட்டு இப்படி பேசிட்டு நிக்கறான். எல்லாரும் பார்த்துட்டு நிக்கறீங்க? ஜோதி உள்ள போய் அவள இழுத்துட்டு வாடா….” என்று வசந்தி கூச்சலிட பவித்ரா வெளியே வந்தாள்.
“நான் எங்கயும் வரமாட்டேன். எனக்கு இங்க இருக்கத்தான் பிடிச்சிருக்கு….” என்று சொல்ல,
“இப்படி பேச வெக்கமாயில்ல உனக்கு. இவன் உன்னை ஏமாத்தறான். வேணாம்டி, வா. எதுவானாலும் நம்ம ஊருக்கு வந்து பேசிக்கட்டும். ஆளுங்களை வச்சு முறைப்படி பேசிப்போம். இப்படி கழுத்துல தாலி இல்லாம இவனோடு வந்து இருக்கியே. என் நெஞ்செல்லாம் எரியுது…”
பவித்ராவின் அருகே வந்து அவர் சொல்லவும் அவரை விடுத்து விஜய்யின் கையை பற்றிக்கொண்டவள்,
“அந்த தாலியை தான் கழட்டி எரிஞ்சுட்டீங்களே. இனி அது எனக்கு தேவை இல்லை. நான் முடிவு பண்ணிட்டேன். இனி இதுதான் என் வீடு. நீங்க தான் சொன்னீங்களே, போய்டுவ போய்டுவன்னு. அதான் இங்கயே இருந்தா என்னன்னு தோணுச்சு. இருந்துட்டேன்…” என்றவள் விஜய்யோடு ஒட்டி நின்றாள்.
மகள் தான் அதட்டவும் பயந்து வந்துவிடுவாள் என்று நினைத்திருக்க அழைக்க சென்றவர்களுக்கு அவளின் பேச்சு தலைசுற்றியது.
“இங்க பாருங்க, இங்க பேசனும்னா பவித்ரா அப்பா மட்டும் பேசலாம். வேற யாருக்கும் இங்க பேச உரிமையோ தகுதியோ கிடையாது. புரியுதா?…” என்றவன்,
“முக்கியமா உனக்கும், இந்த லேடிக்கும். உன்னை நான் மனுஷனாவே மதிக்கலை. உன் பேச்சை கேட்கனுமோ? இப்போ பேசேன்…” என விஜய் சொல்ல அருமைநாயகத்தின் அகங்காரத்திற்கு பலத்த அடி அங்கே.
அவனின் பேச்சிற்கு கட்டுப்பட்டு தான் பேசாமல் இருப்பதா? அதுவும் வாசலில் வைத்து இப்படி செய்துவிட்டானே? என எரிமலையாய் குமுறத்தான் முடிந்தது.
எல்லாவற்றிற்கும் மேல் தன்னை பேசியதற்கு தன்னை சேர்ந்தவர்கள் யாருமே எதிர்ப்பும், மறுப்பும் தெரிவிக்கவில்லை.
“இந்த வீட்டோட பெரியமனுஷன் நான். என்ன முடிவுனாலும் நான் தான் எடுப்பேன்…”
“அப்ப போய் உன் வீட்டுல வச்சு முடிவெடுத்துக்க. கிளம்பு கிளம்பு…” என்றான் விஜய்.
“டேய்…” என்று அவர் கத்த,
“இதை தவிர வேற என்னதான் தெரியும்?…” என்ற விஜய்,
“இங்க பாரு, உன் குடும்பத்துக்கு நீ என்னவாவும் இருந்துட்டு போ. ஆனா எனக்கு நீ யாரும் இல்லை. உன்கிட்ட முகம் குடுத்து பேசனும்னும் இல்லை…” என்றவன் பழனியப்பனிடம் திரும்பினான்.
“பொண்ணை பெத்தவரா நீங்க வேணா பேசுங்க. இந்த கேட்பார் பேச்சை கேட்டு பேசற வேலை என்கிட்டே வேண்டாம்…” என்றவன்,
“சீக்கிரம் பேசி முடிச்சா நானும் என் வொய்பும் என்னோட சொந்த ஊருக்கு புறப்படனும்…” என சொல்ல பழனியப்பன் அலமலந்து நின்றார்.
“டேய், அவனுக்கு பேச தெரியாதுடா. நான் தான் முடிவெடுப்பேன்…” என அருமைநாயகம் அடங்காமல் பேச,
“அய்யய்யய இது ஆவாது. கிளம்புங்க எல்லாருமே. முதல்ல இடத்தை காலி பண்ணுங்க…” என விஜய் சொல்ல,
“வச்சு செய்யறான்டா என் தம்பி…” என்றான் ஜெகன் பெருமிதமாய்.
“ஆமா, ஆமா…” என்று சொல்லிய ஜோதியை பார்த்து விஜய் கண்ணடிக்க,
“இதை ஒண்ணை விடவே மாட்டார் போல…” என்று குனிந்துகொண்டான் ஜோதி.
அங்கே தன் தன்மானத்தை இழந்து பொம்மை போலவா தான் நிற்பது என்று அருமைநாயகம் விஜய்யை எரிக்கும் பார்வை பார்க்க,
‘உன்னை இப்படி நிக்க வைக்கிறதுக்கு தான வரவச்சேன். நில்லு நில்லு’ என்று நக்கலாய் பார்த்தவன் பார்வை வசந்தியையும் சுட்டு பொசுக்காமல் இல்லை.
இத்தனை பிரச்சனையிலும் பவித்ராவை பிடித்த கையை அவன் விடவே இல்லை.