உருக்கம் – 19
விஜய்யை மீறி பவித்ராவை யாராலும் நெருங்க முடியவில்லை. அருமைநாயகமும், வசந்தியும் கையை பிசைந்துகொண்டு இருந்தனர்.
பார்வதிக்கு அத்தனை சந்தோஷமும் நிறைவும். அது அப்படியே அவரின் முகத்தில் தெரிய அதை கவனித்திருந்தால் இன்னும் ஆடியிருப்பார் வசந்தி.
ஜெகனும், ஜோதியும் அமைதியாக இருக்க பழனியப்பனுக்கு மகளின் முடிவில் முழு சம்மதம் என்றாலும் அதனை வாய்வார்த்தையாக வெளிப்படுத்த முடியவில்லை.
“நான் உங்களை பேசுங்கன்னு சொன்னா இப்படியே நிக்கறீங்க. இதுக்கு என்ன அர்த்தம்?…” என்றான் விஜய் பழனியப்பனை பார்த்து.
“அவன் பேசமாட்டான். இதுல இருந்தே தெரியலை. இந்த குடும்பத்துக்கு நான் தான் முக்கியமானவன்னு…” என்ற அருமைநாயகம்,
“அப்பு, நீ கிளம்பு. பெரியப்பா நான் சொல்றேன். நீ கிளம்பி நம்ம வீட்டுக்கு வா. அங்க வச்சு இவன் வந்து உன்னை கேட்கட்டும். ஊரார் முன்னாடி பேசி முடிவு பண்ணிக்குவோம்…” என்று அருமைநாயகம் கூப்பிட அசைவேனா என்பதை போலத்தான் நின்றாள்.
“என்னடி கொழுப்பா? உன் பெரிப்பா இத்தனவாட்டி கூப்பிடுறாரு, மரமாட்டம் நிக்கிற? எங்களை இன்னும் என்னலாம் செஞ்சு அசிங்கப்படுத்தனும்னு இருக்க? ஊரே உன்னால எங்களை காறி துப்பும்படி பண்ணிட்ட…” என்று சொல்லவும் விஜய்யின் கைகள் இறுகியது.
அதை உணர்ந்தவள் முகமும் கசங்கி போக இதுநாள்வரை வீட்டிற்குள் வைத்தே பேசிக்கொண்டிருந்தவர் இன்று விஜய், அவனின் நண்பர்கள் முன்னிலையிலும் கொஞ்சமும் யோசிக்காமல் தன்னை பேசுவதை கேட்டவளுக்கு மனது விட்டுபோனது.
“மரியாதையா கிளம்பி வா. இல்ல நாலு அடிய போட்டு கூட்டிட்டு போவேன்…” என்றதும்,
“எங்க அடிங்க, அடிங்க பார்ப்போம்….” என்று பாய்வதை போல வந்தான் விஜய்.
“இருங்க, நான் பேசறேன்…” என்ற பவித்ரா,
“இப்போ என்னம்மா? நீங்க சொன்னதை தானே செஞ்சிருக்கேன். ஓயாம இவ இப்படித்தான்னு சொல்லி சொல்லி இந்த முடிவுக்கு நான் வர நீங்களும் ஒரு காரணம். என்னை என்னைக்காவது நம்பிருப்பீங்களா?…” என வசந்தியிடம் பவித்ரா கேட்க,
“அதுக்கு? நான் ஆயிரம் பேசுவேன் ஆத்தமாட்டாமைக்கு. நீயும் தினவெடுத்து செய்வியோ?…” என்றார் அப்போதும் வசந்தி.
“ஆமா, ஆமா செய்வேன். அன்னைக்கு இவங்க முத்தம் குடுத்தப்பவும் பிடிச்சு தான் நின்னேன். நீங்க தான சொன்னீங்க பிடிக்கலன்னா உதறிட்டு வந்திருப்ப. உனக்கும் நெனப்புதான், அதான் அவனோட போய்டலாம்னு இருந்தியோன்னு. ஆமா இப்ப வாழலாம்ன்னு வந்துட்டேன்…” என்றாள் பிடிவாதமாய்.
பவித்ரா சொல்லியதை கேட்ட விஜய் அதிர்வுடன் கொதித்து போய் பார்த்தான் வசந்தியை.
‘ஒரு தாய் இப்படி எல்லாம் பேசக்கூடுமா?’ என்று ஆத்திரம் வந்தது வசந்தி மேலும், அதை கேட்டு நின்ற அந்த குடும்பத்தின் மேலும்.
“ஏன்டி வீட்டுக்கு வான்னு சொன்னா தப்பாவா பேசற? உன்னை பார்த்துட்டு நானும் கம்முன்னு நிக்கறேன் பாரு…” என்று வசந்தி மீண்டும் அடிக்க வர பார்க்க விஜய் முறைப்பில் மீண்டும் பின்வாங்கினார்.
“இத்தனை வருஷம் இதை தானே நீங்க பேசினீங்க? அப்போ அது தப்புன்னு தெரியலையா?…” என பவித்ரா கேட்க,
“அதுக்குன்னு தாலி கட்டாம இப்படி? என்னடி இது?…” என்றார் வசந்தி.
“என்ன இதுன்னா? கொஞ்சமும் யோசிக்காம அறுத்து வீசினது நீங்க தானே? சொன்னது இவர் தானே?…” என்று அருமைநாயகத்தை காண்பிக்க,
“அது போனது போகட்டும். எங்க தலையில கல்ல தூக்கி போட்டுடாத. நீ எக்கேடோ கெட்டு போய் தொலை. ஆனா ஊருக்கு வா. அங்க வந்து அங்க வச்சு மதிப்பா தாலி கட்டிட்டு வந்து இங்க வாழு. யார் வேண்டாம்ன்னா?…” என்றார் வசந்தி.
“முடியாது. உங்க இஷ்டத்துக்கு அறுக்கவும், கட்டவும் முடியாது. இப்ப என்ன? நீங்க முன்னாடி சொன்னதை தானே இப்ப நான் செய்யறேன். இவர் கூப்பிட்டா கூட போய்டுவேன்னு எத்தனை நாள் ரூம்க்குள்ள விட்டு வெளில பூட்டு போட்டீங்க? எவ்வளோ பேசினீங்க. இனி தயக்கமில்லை. இப்படிதான் இருப்பேன்…” என்றாள் பவித்ரா.
உண்மையில் தலையில் கல் விழுந்த பாவனை தான் அத்தனைபேரின் முகத்திலும். விஜய் வாயில் கை வைக்காத குறையாக அவளை பார்த்தான்.
“யூ மீ லீவ் இன் ரிலேஷன்ஷிப்?…” என்று அவன் சொல்ல,
“ஆமா கல்யாணம் செஞ்சுக்காம ஒண்ணா வாழறது தான அது? அப்பு என்ன இது?…” என வேண்டுமென்றே விளக்கமாக வசந்திக்கு புரியும்படி ஜெகன் சொல்ல வசந்திக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.
“ஐயோ ஐயோ…” என்று அங்கேயே அமர்ந்துவிட்டார் அழுதபடி.
அத்தனை பேரையும் ஆட்டிவைத்தாள் பவித்ரா. திருமணம் செய்யாமல் வாழ போகிறேன் என்று அருமைநாயகத்திற்கும் வசந்திக்கும் பிபியை ஏற்றினாள்.
“இதுக்கா உன்னை பெத்தேன்? இப்படியா உன் வாழ்க்கையை நீ முடிவு பண்ணுவ? ஐயோ என்னால ஒன்னும் பண்ணமுடியலையே? மாமா நீங்களும் இப்படி நிக்கறீங்களே? இவ என்னை தூக்குல ஏத்தாம விடமாட்டா. ஒருமுழம் கயிறு வாங்கி குடுத்திருங்க. தொங்கிடறேன்….” என வசந்தி அழ,
“முழம் நீளம் போதுமா என்ன? கணக்கு தப்பா இருக்கே…” என சொல்லிய விஜய்,
“இங்க எல்லாம் இப்படி ஒப்பாரி வைக்க கூடாது. அழறதுன்னா ஊர்ல உங்க வீட்டுல வச்சு அழுதுக்கோங்க. கிளம்புங்க…” என்றான்.
“என்னடா எங்களை கிளப்பறதுலையே இருக்க?…” என அருமைநாயகம் முன்னால் வர,
“தள்ளி நின்னு பேசுய்யா. உன்னை வாய திறக்க கூடாதுன்னு சொன்னேன்ல…” என்ற விஜய்,
“உங்களுக்கு பேச எதுவும் இல்லை தானே?…” என்றான் பழனியப்பனை பார்த்து.
“இங்க பாருங்க தம்பி…” என்று பழனியப்பன் வாயை திறந்தார்.
“நீ சும்மா இருடா…” என்ற அருமைநாயகம்,
“அவன் பேசமாட்டான். நான் தான் பேசுவேன்…” என பிடிவாதமாய் நிற்க அவரை நக்கல் பார்வை பார்த்த விஜய்,
“ஓகே தனியா இங்க நின்னு நீ பேசு. நாங்க கிளம்பறோம்…” என்றதும் அருமைநாயகம் முகம் கன்றியது.
“பவித்ரா, போய் லாக் எடுத்துட்டு வா. நாம கிளம்புவோம்…” என பேசினான் விஜய்.
“எங்க எங்க கிளம்பற? எங்க பொண்ணை கூட்டிட்டு…” என மாறி மாறி பார்த்துக்கொண்டே அவர் இருக்க,
“அதை எல்லாம் உன்கிட்ட சொல்ல முடியாது. நாங்க கிளம்பறோம். லீவ் போட்டாச்சு. எப்போ வருவோன்னும் சொல்ல முடியாது…”
விஜய் சொல்ல எங்கே மீண்டும் எங்கிருக்கிறான் என்று தெரியாதளவிற்கு தன் மகளுடன் போய்விடுவானோ என்ற பயத்தில் பழனியப்பன் வாயை திறந்தார்.
“இல்லை, இல்லை மாப்பிள்ளை. அப்படி சொல்லாதீங்க. தயவு செஞ்சு கோவப்படாதீங்க…” என்று முன்வந்ததும் இல்லாமல் அவனை மாப்பிள்ளை என்று அழைத்ததை கேட்டு அருமைநாயகத்தின் ஆணவம் பெரிதாய் அடிவாங்கியது.
“பழனி…” என்று தம்பியிடம் அவர் இரைய,
“சும்மா இருங்கண்ணே, எனக்கு என் பொண்ணு முக்கியம். கிளம்பறேன்னு கிளம்பி எங்கையாச்சும் கண்காணாத இடத்துக்கு போய்ட்டா நான் என்ன பண்ணுவேன்? ஒத்தைக்கு ஒத்தையா பெத்து வச்சிருக்கேனே?…” என கண்ணீருடன் அவர் பேச,
“அதுக்கு, இவன்கிட்ட இறங்கி போவியா நீ?…” என்றார் அருமைநாயகம்.
“அவரு என்னோட மாப்பிள்ளை. ஜெகன் மாப்பிள்ளைக்கு என்ன மவுசோ அதான என் மாப்பிள்ளைக்கும். நீங்களும் அதை புரிஞ்சுக்கோங்கண்ணே…” என்றவர்,
“என் பொண்ணு வேற என்னவோ சொல்லுறா. அவ மனசு என்ன பாட பட்டுச்சோ. இந்த முடிவுக்கு வந்துட்டா…” என்று பேசவும்,
“அட்ரா அட்ரா. டேய் ஜோதி இதை எல்லாம் உன் சித்தப்பா மனசுக்குள்ள மனப்பாடம் பண்ணிட்டிருந்தாரு போலடா…” என முணுமுணுத்தான் ஜெகன்.
“அதுக்குன்னு நீங்க என்ன இவ இஷ்டத்துக்கு விட போகனும்னு சொல்லுவீங்களா? அதெல்லாம் முடியாது. இப்ப இவ என்னோட வரனும். இந்த பையன் கோவிச்சிக்கிட்டு போனா போகட்டும்…” என்று வசந்தி சொல்ல,
“அப்போ என் பொண்ணோட எதிர்காலம்?…” என்றார் பழனியப்பன் அத்தனை வருட மௌனத்தை உடைத்தவராக பேச,
“ஏன் அதான் சொன்னாலே திமிர்ல, தாலி கட்டாம இருப்பேன்னு. அப்படி ஒன்னும் இந்த வாழ்க்கை வாழறதுக்கு வாழாமலே வீட்டோட கிடக்கட்டும். அப்பத்தான் புத்தி வரும். இல்ல எதாச்சும் மருந்த குடுத்து இவ சோலிய…” என்று சொல்லிய நொடி இடியாய் அறைந்திருந்தார் பழனியப்பன்.
“இன்னொருவார்த்த பேசின உன்ன இங்கயே கொன்னுட்டு போய்ருவேன். கம்முன்னு இருக்கறதுன்னா இங்கயே கிட. இல்ல…” என்று விரல் நீட்டி எச்சரித்தார் மனைவியை.
“பழனி…” என அருமைநாயகம் அதிர்ச்சியுடன் பார்க்க அவரை கண்டுகொள்ளாதவராக,
“நீங்க சொல்லுங்க மாப்பிள்ளை, நாங்க என்ன செஞ்சா என் பொண்ணை கல்யாணம் செஞ்சுப்பீங்க?…” என்றார் அவர்.
இத்தனை நேரம் நடந்ததை பார்த்துக்கொண்டே இருந்தவனுக்கு மனதிற்குள் சங்கடம்.
“விஜய் உள்ள கூப்பிட்டு பேசுப்பா. இது ரோட்டுல வச்சு பேசறது இல்லை…” என்று பார்வதி சொல்லவும் ஜெகனும் தலையசைத்தான் அழைக்க சொல்லி.
ஒரு பெருமூச்சுடன் அவர்களை பார்த்தவன் வேறு வழியின்றி உள்ளே அழைத்தான். அதுவும் பழனியப்பன், பார்வதியை மட்டும்.
“நீங்க உள்ள வாங்க…” என்று அவர்கள் இருவரையும் அழைக்க பழனியப்பன் உள்ளே வந்ததும் பார்வதியும் பின்னால செல்ல கதவோரமாய் நின்றுகொண்டார் வசந்தி.
“உட்காருங்க…” என்று சோபாவில் அமர சொல்லியவன் வெளியே நின்ற அருமைநாயகத்தை அழைக்கவே இல்லை.
விஜய் பார்த்ததும் தன்னை அழைக்கத்தான் என்று நினைத்து முகம் திருப்பிக்கொள்ள விஜய் கண்டுகொள்ளவே இல்லை.
அதையும் விட அவரை ஜெகனும், ஜோதியுமே உள்ளே வர சொல்லி சொல்லாமல் அப்படியே சென்றுவிட்டார்கள்.
பழனியப்பன் பேசட்டும் என்று விஜய் பார்த்தபடியே இருந்தான். ஆனால் மனதிற்குள் அவனின் எண்ணங்கள் முழுவதும் தன்னுடைய இழப்பை பற்றியே தான் இருந்தது.
“நடந்தது எல்லாம் இருக்கட்டும் மாப்பிள்ளை. எங்களால நீங்க பாதிக்கப்பட்டிருக்கீங்க, எனக்கும் புரியுது ஆனா இதுக்கு நாங்க என்ன பண்ண முடியும்ன்னு சொல்லுங்க. அதுக்காக என் பொண்ணை…” என்றவரை கூர்மையா பார்த்தவன்,
“என்ன சொன்னா செய்வீங்க? எங்கம்மாவை திருப்பி தந்துடுவீங்களா?…” என்றான் அவன்.
“மாப்பிள்ளை…” என்று பழனியப்பன் திகைக்க,
“சொல்லுங்க. தர முடியுமா? இன்னைக்கு உங்க பொண்ணுன்னு வரவும் நான் யாரு என்னனு உங்களுக்கு தேவை இல்லை. அவ வாழ்க்கை முக்கியம். ஆனா அன்னைக்கு எங்கம்மா? அவங்க உங்களுக்கு எப்படி ஒண்ணுமில்லாம போனாங்க?…” என்றான்.
“உங்க கூட பிறந்த தங்கச்சி தானே அவங்க? அந்த பாசத்துல ஒரு துளி கூடவா மிச்சமில்லை உங்ககிட்ட?…”
“அய்யோ மாப்பிள்ளை அன்னைக்கு இருந்த சூழ்நிலை வேற…” என்றார் பழனியப்பன் விஜய்யின் கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல்.
“பழனி, நான் தான் சொன்னேன்ல. இவன் சரிப்பட்டு வர மாட்டான்…” என வீட்டிற்குள் நுழைய போக வேகமாய் வந்தவன் அருமைநாயகத்தின் நெஞ்சில் கை வைத்து வெளியே தள்ளினான்.
“போயிரு பார்த்துக்கோ. இந்த வீட்டுக்குள்ள காலை வச்ச நான் மனுஷனா இருக்கமாட்டேன். இங்க உன் தம்பிக்கு நான் இடம் குடுத்ததுக்கு காரணம் பவித்ரா அப்பான்ற ஒரே உறவுக்காக தான். வேற எதுவும் இல்லை…” என்றான் பழனியப்பனை பார்த்து.
அவரும் எழுந்து நின்றுவிட்டார் விஜய்யின் இந்த கோபத்திலும், பேச்சிலும் அவமானப்பட்டவராக.
“என் மேலையே கை வச்சிட்டியா நீ?…” என்று அருமைநாயகம் எகிற,
“ஆமா வச்சேன் என்ன பண்ணுவ? ஆமா இங்க உனக்கென்ன நாட்டாமை? கிளம்பு. இது என் வீடு. எங்கம்மா இருந்த வீடு. இங்க உன் நிழல் பட கூட உனக்கு தகுதி இல்லை. வெளில போ. போன்றேன்ல…” என்று அவன் கத்த முகம் ஜிவுஜிவுக்க தம்பியை பார்த்தார் அருமைநாயகம்.
“பார்த்தியா இவன் என்னை என்ன பேசறான்னு பார்த்தியா? என் தம்பின்னு எவ்வளவு பெருமையா உன்னை வச்சிருந்தேன். இதானா? அப்ப என்னை விட உனக்கு உன் பொண்ணு முக்கியமா போய்ட்டாளா?…” என்றவர்,
“பழனியப்பா, போதும்டா. நம்மளை மதிக்காம வந்தவளை தூக்கி போட்டுட்டு வா. கழுதை கண்ணை கசக்கிட்டு வந்து நிக்கிற அன்னைக்கு இருக்கு வேடிக்கை…” என்று சொல்லி பழனியப்பனை அழைத்தார் அருமைநாயகம்.
“அண்ணே…” என பழனியப்பன் கண்ணீருடன் மாறி மாறி பார்த்தார்.
யாருக்கென்று பேசுவார் அவர்? இதுநாள்வரை பார்த்து வளர்ந்த அண்ணன், இன்னொருபக்கம் பெற்ற மகள். இருவருமே முக்கியமே. ஆனாலும் அண்ணனின் பேச்சை சகிக்கமுடியவில்லை.
‘கண்ணை கசக்கிக்கொண்டு வருவாளா?’ என நெஞ்சில் இடி இறங்கியதை போல தோன்றியது.
“என்ன பேசறீங்க? நாம வளர்த்த பொண்ணு நல்லா வாழனும்னு நினைக்காம இப்படி சாபம் குடுக்கற மாதிரி பேசறீங்களே?…” என்றார் பார்வதி.
“ஆமா அப்படித்தான். மதிக்காத கழுதை எப்படி போனா என்ன? அப்படியே அவ புத்தி. அவள மாதிரியே வந்து வாய்ச்சிருக்கு இதுவும். எல்லாம்…” என்று பேசும் முன்னே அருமைநாயகத்தின் கழுத்தை பிடித்துவிட்டான்.
“உன்னை பேசாத பேசாதன்னு சொன்னா பேசிட்டே இருக்க? எங்கம்மாவையே பேசற. உனக்கு என்னையா உரிமை இருக்கு எங்கம்மாவை பேச?…” என்று அவன் கழுத்தை நெறிக்கவுமே ஜெகனும் ஜோதியும் வந்து பிடித்துக்கொண்டார்கள்.
“விடுடா, விஜய் விடு…” என்று ஜெகன் கத்த,
“இந்தாளு என் கண்ணு முன்னாடி வந்தான் அவ்வளோ தான்…” என்று சோழி விஜய் விட,
“ஜோதி உங்கப்பாவை முதல்ல காருக்கு கூட்டிட்டு போ. சொல்றேன்ல…” என்று சத்தம் போட,
“வாங்கப்பா…” என்று அழைத்துக்கொண்டு சென்றான்.
அருமைநாயகத்தின் கண்களுக்கு எமன் நெருக்கமாய் வந்து சென்றார். சற்று தாமதித்திருந்தாலும் கைகளால் குரல்வளையை உடைத்திருந்திருப்பான் விஜய்.
தண்ணி தண்ணி என்று இருமிக்கொண்டே சைகை செய்ய ஜோதி எடுத்து கொடுத்து நெஞ்சை தடவிவிட்டான் அருமைநாயகத்திற்கு.
“ஏன்ப்பா நீங்க தான் கொஞ்சம் நேரம் அமைதியா இருந்திருக்கலாம்ல?…” என்று ஜோதி சொல்ல தண்ணீரை குடித்து தன்னை ஆசுவாசம் செய்தவர்,
“நீயெல்லாம் எனக்கு புள்ளையாடா? என் கழுத்த பிடிச்சப்பவே அவனை நீ நாலு சாத்தியிருந்தா எம்புட்டு சந்தோஷபட்டிருப்பேன்? மாடுமாதிரி வளர்ந்தது தான் மிச்சம்….” என்றதும் ஜோதிக்கு எரிச்சலானது.
“அவனை உண்டில்லைன்னு ஆக்கறேன் பாரு. வீடு தெரிஞ்சிக்கிச்சுல்ல. நம்ம ஊர் பயலுவளை இறக்கி…”
“ப்பா வாய மூடுங்க. திரும்ப எதையாச்சும் இழுத்து வைக்காதீங்க…” என்றவன் ட்ரைவரை அழைத்து குடிக்க ஜூஸ் கடை ஏதாவது இருக்கிறதா என்று பார்த்துவிட்டு வருமாறு சொல்லி வண்டியின் சாவியை வாங்கிக்கொண்டு அனுப்பிவைத்தவன் காரை பூட்டிவிட்டு மேலே வந்துவிட்டான்.
“ஜோதி, டேய்…” என்ற அவரின் அழைப்பை காதில் வாங்கவில்லை.
“எங்கடா உன் அப்பா?…” என்றான் ஜெகன்.
“கார்ல வச்சு பூட்டிட்டேன்…” என்று சாவியை காண்பித்தான்.
“அடப்பாவி?…” என்று ஜெகன் சொல்ல,
“கொஞ்ச நேரம் இருக்கட்டும். ட்ரைவர் வரட்டும்…” என்று சொல்லியவன் அங்கே என்ன நடந்தது என்று கேட்க ஒன்றும் பேசவில்லை என்றான் ஜெகன்.
“ஓகே விஜய் இப்போ என்னதான் முடிவு பண்ணியிருக்க? சொல்லு. நாங்க கட்டுப்படறோம்…” என்றான் ஜெகன்.
பழனியப்பன் பேசமுடியவில்லை விஜய்யின் கேள்விகளினால். வசந்தி விஜய், பழனியப்பன் இருவருக்கும் பயந்து வாயை திறக்கவில்லை.
இப்படியே சென்றான் எவ்வளவு நேரம் அமைதியாகவே இருப்பது என்று ஜெகன் பேச்சை துவங்கிவிட அவரை பார்த்த விஜய்,
“கட்டுப்படறதுன்னா?…” என்றன புருவம் உயர்த்தி.
‘டேய் என்கிட்டயுமா?’ என்று கெஞ்சலுடன் பார்த்தான் ஜெகன்.
“ஓகே, சொல்றேன், நானும் பவித்ராவும் கல்யாணம் பண்ணிக்கறோம். ஆனா இவங்க யாரோட உறவும் அவளுக்கும் எனக்கும் தேவை இல்லை. எந்த பேச்சும் வச்சுக்க கூடாது. எங்களை எங்க போக்குல வாழ விடனும். இதுக்கு சம்மதமா?…” என்று சொல்ல,
“என்னது உறவில்லையா? அதெல்லாம் முடியாது…” என்ற வசந்தியின் கூச்சலில் அவரை திரும்பி பார்த்த விஜய்,
“ஆமா, உங்க உறவு இல்லை. முக்கியமா உங்க உறவு. உங்க பேச்சே எனக்கு பிடிக்கலை. எங்கம்மாவை பேசினீங்க தான? இந்த மரியாதையும் உங்க வயசுக்கு தான். வாயை மூடிட்டு இருங்க. இல்ல வெளில போங்க…” என்று விஜய் கத்திவிட கப்பென்று வாயை மூடினார் வசந்தி.
அழுகை பொங்கியது அவருக்கு. இப்படியா தனக்கு ஒரு நிலை வரவேண்டும்? அதுவும் பார்வதியின் முன்னால் என்று குமைந்து போனார்.
தன்னை எந்தளவுக்கு வெறுப்புடன் விஜய் பார்த்தானோ அந்தளவுக்கு பார்வதியை அன்புடன் பார்த்தான். அதில் பரிவு இருக்க வசந்திக்கு அதுவுமே எரிச்சல்.
‘அப்படி என்ன நான் குறைந்து போய்ட்டேன்?’ என்று வெதும்பி போய் நின்றார் எரிச்சலாக.
“மாப்பிள்ளை, மாப்பிள்ளை…” என ஜெகனை பரிதாபமாக பார்த்தார் பழனியப்பன்.
அவனுக்குமே தாங்கவில்லை அவர் அப்படி இருப்பதை பார்த்து. மனது கேட்கவில்லை.
“பொறுங்க மாமா, நான் பேசறேன்…” என்றவன்,
“விஜய் உன்னோட தனியா பேசனும்…” என்றதும் அவனும் எழுந்து உள்ளே சென்றான்.
விஜய் சென்றதும் வசந்தி மகளருகே வர பார்க்க ஆகாஷும், ப்ரனேஷும் நின்றார்கள்.
“நீங்க விஜய் வர வரைக்கும் அங்கயே இருங்க…” என்று பிரனேஷ் சொல்ல,
“எம்மக அவ…” என்றார் வசந்தி.
“நாங்களும் பார்த்தோமே உங்க பாசத்தை. பெத்த பொண்ணுக்கு மருந்து வைக்கறேன்னு சொன்னவங்க தான?…” என்றான் ஆகாஷ்.
“வசந்தி இருக்கற பிரச்சனை போதாதா? பேசாம இரேன்…” என்று பார்வதி சொல்ல,
“உங்க வேலையை பாருங்கக்கா. இது என் பொண்ணு சம்பந்தப்பட்டது. அவளுக்கு நான் பாக்காம யாரு பார்ப்பா? இதுல நீங்க தலையிடாதீங்க. அவ்வளோ தான்….” என தன் புகைச்சலை எல்லாம் பார்வதியிடம் காட்டிக்கொண்டிருந்தார்.
உள்ளே ஜெகனோ விஜய்யிடம் பேசிக்கொண்டு இருந்தான் அவன் என்னதான் முடிவெடுத்திருக்கிறான் என்று. விஜய் பதில் சொல்ல,
“அடப்பாவி, அப்ப எல்லாம் ப்ளான் பண்ணிட்டு தான் இங்க உன்னோட பெர்பாமென்ஸா?…” என்றான் ஜெகன்.
“இதுவே போனா போகுதுன்னு விட்டேன். இருக்குற கடுப்புல அந்தாளை கடிச்சு துப்பிருப்பேன். தப்பிச்சுட்டாரு….” என விஜய் சொல்ல,
“இங்க பாரு விஜய், சின்னமாமா ரொம்ப பாவம். சொல்ல போனா அவரும் நம்ம அப்பு மாதிரி தான் அந்த வீட்டுல. என்ன ஒன்னு, தொழில் தெரிஞ்சவர். அப்படியே பழக்கி வச்சிருக்கார் என் மாமனார். அவரை போட்டு தாளிக்காத. ஆனா இங்க நீ பேசறது அங்க பத்தனும். வா…” என்று ஜெகன் வெளியே வந்தான்.
விஜய்யை பார்த்ததும் பார்வதியை பேசிக்கொண்டிருந்த வசந்தி வாயை மூடிகொண்டார்.
“ஓகே, நாங்க திரும்ப கல்யாணம் செஞ்சுக்கறோம்…” என்று விஜய் சொல்லவுமே பழனியப்பன் நிம்மதியான பெருமூச்சுடன் தன் மருமகனை பார்த்தார்.
“ஆனா ஒரு கண்டிஷன்….” என சொல்லிய விஜய்யை பீதியுடன் பார்த்தார் இப்போது.
“கல்யாணம் எங்க ஊர்ல. எங்க முறைப்படி. ஐ மீன், எங்கப்பாவோட முறைப்படி…” என்று சொல்லவும்,
“அதெப்படி? அதெல்லாம் முடியாது….” என்று வசந்தி குதிக்க அவரை திரும்பி பார்த்து முறைத்தவன்,
“முக்கியமான கண்டிஷன் இவங்க எங்க கல்யாணத்துக்கு வர கூடாது…” என்றதுமே வசந்தியின் முகம் பயங்கரமாக மாறியது.
“என்ன? ஏன் நான் வர கூடாது? நான் அப்புவை பெத்தவ?…” என்று அழுதுகொண்டே விஜய்யை பார்க்க,
“அந்த வார்த்தையை நீங்க சொல்லாதீங்க. பெத்த அம்மான்னா என்ன தெரியுமா? ஒவ்வொரு நிமிஷத்துலையும் உங்க பொண்ணுக்கு வார்த்தையால நரகத்தை காமிச்சிருக்கீங்க? அன்னைக்கு நான் நடந்துகிட்டதுக்கு அவக்கிட்ட ஆறுதலா ஒரு வார்த்தை பேசிருப்பீங்களா?…”
“அது அது ஏதோ கோவத்துல பேசறது. பொண்ணை எப்படி வளர்க்கனும்னு தெரியுமா? அப்படி வளர்த்தே இந்த லட்சணத்துல வளர்ந்து நிக்கிறா. ஊரே சொல்லும் அப்படியே அவளை மாதிரி வளர்க்காதன்னு. இன்னைக்கு அத நிரூபிச்சுட்டாளே?…” என்று சொல்லியதுதான் தாமதம்,
“ஜோதி, இப்ப இவங்க வெளில போகலை….” என்று விஜய் ஆவேசமாய் கத்திவிட அந்த சத்தத்தில் பயந்து போன வசந்தி,
“இல்ல அது…” என்று சமாளிக்கப்பார்க்க,
“ஜோதி முதல்ல உன் சித்தியை வெளில கூட்டு போ…” என்றன ஜெகன்.
“இல்ல, நான் தெரியாம வாய்தவறி பேசிட்டேன்….” என வசந்தி நகரமாட்டேன் என்பதை போல இருக்க பவித்ரா உடைந்துபோய் அழுதாள்.
“வசும்மா, இப்ப நீங்க வரலைன்னா நல்லா இருக்காது…” என்று சொல்ல,
“இல்லை, இனி எதுவும் பேசலை. பேசமாட்டேன். பேசமாட்டேன்…” என்று கண்ணீருடன் வாயை மூடிக்கொண்டு நிற்க,
“நீ சொல்லுப்பா…” என்றார் பார்வதி வசந்தியை ஆறுதலாக பிடித்துக்கொண்டு.
“ஹ்ம்ம், நான் சொல்றது தான். எங்க கல்யாணம் கேரளாவுல எங்கப்பா முறைப்படி தான் நடக்கும். கல்யாணத்துக்கு வாங்க. எப்போன்னு சொல்றேன். ஆனா அம்மாவா எல்லா கடமையையும் பவித்ராவுக்கு நீங்க தான் செய்யனும்…” என்று சொல்ல வசந்தி நொறுங்கி போனார்.
ஏற்கனவே விஜய்யிடம் பார்வதிக்கு இருக்கும் முக்கியத்துவம் பார்த்து வெதும்பி போய் இருந்தவர் இதையும் கேட்டு மொத்தமாய் உடைந்துவிட கேவல் வெடித்தது.
மகளும் இதற்கு மறுப்பு சொல்லாமல், கணவனும் சம்மதம் என்பதை போல இருந்தது இன்னுமே வசந்திக்கு பெரிய வேதனை.
“இன்னொரு விஷயம். இதுவுமே நான் பவித்ராவுக்காக தான் சொல்றேன். என்னால் உங்க யாரையும் மன்னிக்கவோ, ஏத்துக்கவோ முடியாது. அதுக்காக அவளையும் நான் பார்க்காம இருக்க முடியாதே? அதனால தான உங்களை இன்வைட் பன்றேன்…”
“ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ளை. இது போதும். இது போதும்…” என்று பழனியப்பன் மகிழ்ந்து பேச,
“எனக்கு இது போதாது. இந்த கல்யாணத்துக்கு உங்க அண்ணன் வர கூடாது…” என்று சொல்ல இதை எதிர்பார்த்ததை போல தான பார்வதி அமைதியாக இருக்க பழனியப்பன் தவித்து போனார்.
“மாப்பிள்ளை அது எப்படி?…” என்று விஜய்யிடம் கேட்க,
“தம்பி…” என பார்வதி அழைத்தார்.
“என்னண்ணி, அண்ணன் இல்லாம?…” என்று அவரிடமும் பழனியப்பன் கேட்க,
“இப்ப கல்யாணம் தான் முக்கியம். அவர் வரவேன்டமா. விடுங்க. பேசிக்கலாம்…” என்று சொல்ல மனமின்றி தலையசைத்தார்.
“நீங்க கிளம்புங்க. நானே போன்ல இவர்கிட்ட சொல்றேன்…” என்று ஜெகனை கை காண்பித்து விஜய் சொல்ல மகளை பார்த்துவிட்டு பழனியப்பன் முதலில் கிளம்பினார்.
“அக்கா, அதான் பேசிட்டாங்கல்ல. அப்புவை கூட்டிட்டு போவோம். கல்யாணத்துக்கு அழைச்சுட்டு போவோம்…” என பார்வதியிடம் வசந்தி முணுமுணுக்க,
“சும்மா இரு வசந்தி. கிளம்புவோம். இன்னும் வீட்டுல என்ன நடக்குமோ?…” என பயந்துகொண்டே தான் கிளம்பினார்கள்.
அருமைநாயகம் என்ன சொல்வாரோ என்று. நினைத்ததை போலவே அவர் காருக்குள் எதுவோ கத்தி பேச மேலே நின்றபடி பார்த்தான் விஜய்.
அவரை ஜெகன் சமாளிப்பது இங்கே வரை கேட்க இறுக்கத்துடனே அவற்றை எல்லாம் பார்த்தபடி நின்றான் விஜய் இளக்கமற்ற இரும்பாய்.