உருக்கம் – 20
அவர்களின் கார் கிளம்பும் வரை மேலே இருந்து பார்த்துக்கொண்டே இருந்தான் விஜய்.
ஜெகன் ஊருக்கு போய்விட்டு பேசுகிறேன் என சொல்லிவிட அங்கே சென்ற பின்னர் தான் திருமணம் என்றைக்கு என்பதை ஜெகன் அங்கே சொல்வான்.
“விஜய், நாங்களும் கிளம்பறோம்…” என்று ஆகாஷ் வர,
“என்னடா? இருந்து லஞ்ச் சாப்பிட்டு போகலாம்ல…” என்றான்.
“அதெல்லாம் வேண்டாம். ஊருக்கு வேற போகனும். அதுக்குள்ளே இருக்கற வேலை எல்லாம் முடிக்கனும்…” என்று பிரனேஷ் பேசவும் தலையசைத்தவன்,
“வீட்டுக்கு சொல்லனுமே?…” என்றான் விஜய்.
“டேய் ச்சீ, என்ன இது? அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நாங்க பார்த்துப்போம். நீ கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கோ. அப்பறம் பவித்ராவை போய் பாரு. ரொம்ப டவுனா இருக்காங்க…” என்று சொல்லி விஜய்யின் தோளில் தட்டிவிட்டு கிளம்பினார்கள்.
இருவரும் சென்றதும் உள்ளே வந்தவன் கதவை பூட்டிவிட்டு சாய்வாக அமர்ந்தான்.
பெரிய அலையடித்து ஓய்ந்ததை போன்ற மனநிலை அவனுக்கு. இத்தனை பேசி இத்தனை சச்சரவில் மனது மிகுந்த அழுத்தத்திற்குள்ளானது.
“தண்ணி…” என்ற சத்தத்தில் திரும்பி பார்க்க பவித்ரா தான் நின்றிருந்தாள் தண்ணீர் பாட்டிலோடு.
அப்போதுதான் வந்தவர்கள் யாருக்கும் தண்ணீர் கூட கொடுக்கவில்லை என்பதே தோன்றியது. கூடவே ‘ரொம்ப முக்கியம்’ என்ற எண்ணமும்.
“நீ இப்போ ஓகே தானே?…” என்றான் அவளிடம்.
“ஹ்ம்ம். ஓகே…”
சொல்லிவிட்டாள், ஆனால் முகம் அப்படி இல்லை என்று காட்டிக்கொடுக்க பெருமூச்சுடன் எழுந்து கிட்சனுக்குள் சென்றான்.
“நிஜமா தான் ஓகே…” என அவளும் பின்னால் போக,
“நான் எதுவும் கேட்கலையே? நீ ஓகே சொன்ன. அவ்வளோ தான்…” என்று அவன் முடிக்க பவித்ராவிற்கு அதை எப்படி எடுத்துக்கொள்வது என்றுதான் தெரியவில்லை.
ஒருமுறை தான் எந்த கேள்வியானாலும் அவனிடத்தில் இருந்து. ஆனால் உடல்மொழியில் அதற்கான பதிலை அவளிடத்தில் வாங்கிக்கொண்டிருந்தான் விஜய்.
‘இவன்கிட்ட எதையுமே மறக்க முடியாது போல? தானாவே வந்து சொல்லிடறோமே?’ என்று நினைத்துக்கொண்டே இருந்தாலும் அவனின் கேள்விக்கான பதில் வார்த்தையாக வந்துவிட்டது.
“இதுவரைக்கும் இப்படி நான் பேசினதில்லை. என்ன பேசினாலும் அமைதியா இருந்திருவேன்…”
“ஹ்ம்ம்…” என்றவன் குக்கரை எடுத்து அரிசி அளந்து போட்டான்.
“அதுவும் இன்னைக்கு நான் பேசினது. எப்படி பேசினேன்னே தெரியலை. ஆனா வந்திருச்சு…”
“இத்தனை நாள் உன் மனசுக்குள்ள போட்டு டம்ப் பண்ணிருந்திருப்ப. அது இன்னைக்கு அவுட்பர்ஸ்ட் ஆகிடுச்சு. இது யூஸ்வல் தான்…”
“நான் பேசினது உங்களுக்கு ஒன்னும் தப்பா படலையா?…” என்றாள் கேள்வியாக அவனிடம்.
பேச்சுக்கள் இவளிடம் இருந்தாலும் விஜய்யின் கைகள் தன்னைப்போல வேலையில் இருந்தது.
“எதை கேட்கிற? தெளிவா சொல்லு…” என்று அவளையே பேசவைக்க,
“தெளிவாவா?…” என விழித்தாள்.
“ஹாம், தெளிவா தான். நீ ஏதாவது தப்பா பேசிருந்தா எனக்கு அது ஸ்ட்ரைக் ஆகிருக்கும். எல்லாமே பெர்பெக்ட்ன்னு தோணுச்சு…” என்று சொல்ல பவித்ராவிற்கு எப்படி விளக்குவது என்று தெரியவில்லை.
அவளின் பார்வையின் திருதிருப்பில் ஓரளவு அதை கண்டுகொண்டவனின் கண்கள் குறுகுறுவென்று அவளை வட்டமிட்டபடி மிதமான புன்னகையோடு,
“லிவ் இன் ரிலேஷன் பத்தி பேசினதை சொல்றியா பழனி?…” என்றான் கேலி இழையோட.
நேரடியாக அவன் கேட்டதும் ஆமாம் என ஆமோதிப்பாய் தலையசைத்தவள் ஒரு தக்காளியை கைகளுக்குள் வைத்தபடி உருட்டிக்கொண்டிருந்தாள் அவனை பாராமல்.
“இங்க பாரு என்னை…” என்று சொல்லவும்,
“இல்ல தப்புன்னு எனக்கு தெரியும். ஆனா ஏன் அப்படி பேசினேன்னு தான் தெரியலை. கோவத்துல பேசிட்டேன்…” என முணுமுணுக்க,
“ஹேய் கேர்ள். இங்க பாரு….” என்று அவளை தன்புறமாக திருப்பினான்.
“இதுக்கா இப்டி முகத்தை தூக்கிவச்சுட்டு நெவர்ஸா பீல் பன்ற?…” என்ற கேட்டவனுக்கு அவளின் பாவனையில் அப்படி ஒரு சிரிப்பு.
“அது ஒரு வேகத்துல…” என்று இன்னுமே யோசனையுடனே பேசினாள்.
அவளுக்கு இப்படி தான் பேசியதால் தன்னை குறித்த அவனின் பார்வை இப்போது எப்படி இருக்குமோ என அச்சம் தோன்றியது. அதற்கு அவசியமில்லை என்பதை போல அவன் பேசினான்.
“சோ வாட்? உனக்கு ஓகேனா சொல்லேன். அதான் ஒருதடவை தாலி கட்டியாச்சே?…” என்று கேலி பேச,
“இல்ல இல்ல…” என்றவளின் பதற்றம் அவள் மேல் ஒரு வாஞ்சையை தூண்டியது.
“ஓகே, லீவ் ட்…” என்றான் மேலும் அவளை சங்கடப்படுத்த விரும்பாமல்.
ஆனாலும் இன்னும் ஒரு கலக்கத்துடனே தான் இருந்தாள். மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது தன் செயலின் மீதான ஓர் அதிருப்தியும் கூட.
“இன்னுமே என்ன பழனி? இப்படி இருந்தா நீ ரூம்க்கு போ. எனக்கு டிஸ்டர்ப் ஆகுது…” என்று அவன் சொல்ல,
“இல்லை, நான் அப்படி இருக்கலை…” என்று அவள் சொல்லி அவன் வேறு பேசுவானா என்று பார்த்தாள்.
ம்ஹூம், விஜய் வாயை திறக்கவில்லை.. வழக்கம் போல அவளே தான் அவனிடத்தில் சொல்ல ஆரம்பித்தாள்.
“என்னை கூட்டிட்டு போய்டுவாங்கன்னு பயந்துட்டேன். இன்னும் அந்த பயம், அடுத்து என்ன செஞ்சு என்னை வரவழைப்பாங்கன்னு இருக்கு. அதான் டென்ஷன். இப்ப மாதிரி நானும் எல்லா நேரத்துலையும் பேசிடமுடியாது இல்லையா?…” என்றாள்.
“அதெல்லாம் எதுவும் பண்ணமாட்டாங்க. பண்ணும் போது பார்த்துப்போம். ஜெகாண்ணா இருக்காங்க…” என்றான் விஜய் சமாதானம் போல.
“நான் அதுக்கு சொல்லலை…”
“பின்ன?…”
“என்னை கூட்டிட்டு போனா கண்டிப்பா திரும்ப அனுப்பமாட்டாங்க. அது மட்டுமில்ல…” என்றவள் பேச்சை விழுங்க என்னவென்று திரும்பி பார்த்தான்.
“நான் அங்க போய்ட்டா நீங்களும் கூப்பிட வரமாட்டீங்க தானே? அங்க சண்டை வரும். திரும்பவும் திரும்பவும் நான் அங்க…” என்று பேசியவளின் கைகள் எல்லாம் நடுங்க கண்ணீர் வழிய வேகமாய் துடைத்தாள் அதனை.
“ஏன் அப்படி நினைக்கிற? நான் உன்னை கூப்பிட வரமாட்டேன்னு?…” என்றான் விஜய்.
எந்த உணர்வையும் வெளிக்காட்டவில்லை அவன். தன் மீதான அச்சத்தில் அவள் யோசனைகளை இப்படி அவளை அலைகழிக்கிறது என்று புரிந்தது.
“முன்ன நடந்ததுக்கு நான் பொறுப்பில்லைன்னும் போதே நான் ரொம்ப கஷ்டபட்டுட்டேன். இப்போ நடந்ததுக்கு நானும் தானே பொறுப்பு?…” என்று கேட்க,
“ஹ்ம்ம், ஆனா நீ சொல்றதை பார்த்தா அவங்க எமோஷனலா பேசி வான்னு சொன்னா போய்டுவ போல?…” என்றான் அழுத்தமாக.
தான் என்ன கேட்டால் இவன் என்ன கேட்கிறான் என்று அவனுக்கு பதில் கூற முடியாமல் அவள் தயங்க விஜய்க்கு வருத்தமானது.
“இதே தான் நீ என்னை கேட்கும் போதும் பீல் ஆச்சு. உன்கிட்ட நேத்து நான் பேசினப்போவும் கூட உனக்கு நம்பிக்கை இல்லை இல்லையா?…” என்றதும்,
“நான் அப்படின்னு சொல்லலை. ஆனா தோணிச்சு…”
“வெல், அது அப்படியே இருக்கட்டும். இங்கயே இப்படியே விட்டுடு. ஆனா அதுக்காக இப்படி ஆகுமோ அப்படி ஆகுமோன்னு நினைச்சு உன்னை நீயே கஷ்டப்படுத்திக்காத. இனியாச்சும் ஒரு பீஸ்ஃபுல் லைப் லீட் பண்ணனும்னு நினை….” என்றான் மென்மையுடன்.
“ஹ்ம்ம், ஓகே…”
“என்ன ஓகே, நான் ஏன் சொல்றேன்னா நாம ஒரு விஷயத்தை இப்படி ஆகிடுமோன்னு நம்பிட்டே இருந்தா அது சில இடங்கள்ல அந்த பயத்தை உண்மையாகிடும். எண்ணங்களுக்கு வலிமை அதிகம்ன்னு என்னோட அம்மா சொல்லுவாங்க. புரியுதா?…” என்றான்.
“ஓகே, புரியுது…” என்றதும் அவளின் கன்னத்தில் தட்டியவன்,
“தட்ஸ் மை கேர்ள்… என்றான்.
லேசாய் வெட்கம் பூக்க முகத்தை சுடிதார் துப்பட்டாவில் துடைத்துவிட்டு கையை கழுவி வந்து,
“நானே சமைக்கட்டா?…” என்றாள்.
“ஆல்மோஸ்ட் முடிஞ்சது. என்ன சமைக்க போற?…” என்று அவன் முறைக்க,
“ஆமாவா?…” என அடுப்பை பார்த்தாள்.
ஒரு அடுப்பில் குக்கர் விசில் வரும் அளவில் இருக்க இன்னொன்றில் ஏதோ குழம்பு போல கொதித்துக்கொண்டு இருந்தது.
“என்ன இது?…” என்றாள் அதன் வாசத்தை ஆழ்ந்து நுகர்ந்தவளாக.
“ரைஸ், வத்தகுழம்பு….” என்றான் இன்னோர் அடுப்பில் அப்பளம் பொரிக்க ஓர் சின்ன கடாயை வைத்துக்கொண்டே.
“எதுவும் அரைச்சீங்களா? எனக்கு எதுவும் ஞாபகம் இல்லையே?…” என்று அவனிடம் இருந்து அவள் வாங்கிக்கொள்ள, தந்துவிட்டு நகர்ந்து நின்றான் விஜய்.
“இது மிக்ஸிங் பவுடர் தான். எப்பவும் ப்ரிட்ஜ்ல ஸ்டோர் பண்ணிப்பேன். லீவ் அன்னைக்கு வேற என்ன வேலை? வத்தகுழம்பு இங்க்ரிடியன்ஸ் எல்லாமே அரைச்சு காலி ஆக ஆக ரெடியா வச்சுப்பேன். எடுத்து கரைச்சு தாளிக்க எனக்கு ஈஸியா இருக்கும்….”
“இது என்ன?…” என்று இன்னொரு டப்பாவை காண்பிக்க,
“இது புளி. நாம நினைச்ச நேரம் யூஸ் பண்ணிக்கலாம். வெந்நீர் வச்சு ஊற வச்சு அது ரெடியாகற வரைக்கும் வெய்ட் பண்ண வேண்டாம் பாரு. கொஞ்சமா டப்பர்வேர்ல போட்டு ரெண்டுமூணு ஸ்பூன் தண்ணியை விட்டு ப்ரிட்ஜ்ல போட்டுட்டா டக்குன்னு கரைச்சு சமைச்சுடலாம்…”
தன்னுடைய பேச்சிலர் சமையல் குறிப்புகளை ஒவ்வொன்றாய் அவளிடம் சொல்லிக்கொண்டிருக்க தலையை ஆட்டியபடி இருவருக்குமான அப்பளங்களை பொரித்தெடுத்தாள்.
“மசால் பவுடர் பன்றது மாசத்துக்கும் வச்சுக்கலாம். ஆனா புளி ஒன்வீக் தான் தாக்குப்பிடிக்கும்…” என்று அதையும் சொல்ல,
“நல்ல டெக்னிக். நீங்க சொல்ற மாதிரி நாங்க செய்யறது புளியை வெந்நீர்ல போட்டு கரையற வரைக்கும் வெய்ட் பண்ணி அந்த நேரத்துல மத்த வேலைங்க பார்ப்போம். இது ஈஸியா இருக்கு…”
“ஹ்ம்ம், வேலைக்கு போகனுமே? பாதி நாள் நான் சமைச்சே எடுத்துட்டு போவேன். முடியாதப்போ வெளில தான்….”
இருவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடிக்க அவன் ஒரு புக்குடன் சென்று அமர்ந்துகொண்டான்.
“உனக்கு தூக்கம் வந்தா தூங்கு. போ…” என்று சொல்ல சரி என்று தலையசைத்தவள்,
“சரியான புத்தகபுழு…” என்று முணுமுணுப்புடன் உள்ளே செல்ல,
“பழனி…” என்றான் சத்தமாக விஜய்.
“சொல்லுங்க…” என அறை வாசலில் நின்றவாறே கேட்க,
“உன்னோட புக்கை எடுத்துட்டு வா. நாளைக்கு எக்ஸாம் இருக்கு தானே?…” என்றான்.
“அடப்பாவி…” என அவனை பார்க்க,
“என்ன பார்க்கற? போ போ நேத்தும் எக்ஸாம்க்கு மட்டம் போட்டுட்ட. ஒழுங்கா படிக்கலைன்னா இருக்கு உனக்கு…” என்று அதட்டவும் புத்தகத்துடன் அவனின் முன்னே வந்து அமர்ந்தாள்.
“நீங்க பகல்ல தூங்க மாட்டீங்களா?…” என கேட்க,
“கெட்டபழக்கம். எனக்கு பிடிக்காது…” என சொல்ல பவித்ராவிற்கு அய்யோ என்றானது.
“என்ன? உனக்கு இருக்கா என்ன?…” என்று கேட்டதற்கு ஆமாம், இல்லை என்பதை போல இருபக்கமும் தலையை சுழற்ற,
“படி…” என சொல்லிவிட்டு தன்னுடைய புத்தகத்தில் மூழ்கி போனான்.
அதுவும் பாடம் சம்பந்தப்பட்ட புத்தகம். பவித்ராவிற்கு தான் அத்தனை அவஸ்தை.
காதல் என்று மனது சொன்னாலும் அப்படி ஒரு உணர்வை இதுவரை அவள் அனுபவித்ததில்லை. பிடித்தத்தை தாண்டிய அடுத்த கட்டத்திற்குள் இருவருமே அடியெடுத்து வைத்தாகிவிட்டது.
இன்னுமே அவன் என்ன நினைத்து தன்னை அழைத்து வந்தான்? அவனின் மனதில் என்ன இருக்கிறது என்றே புரியவில்லை. ஆனாலும் திருமணம்.
புத்தகத்தை திருப்பும் போதே அவனின் மேல் ஒருநொடி தன் பார்வையை விதைத்து மீட்டாள்.
‘இவனுக்கு காதல், கல்யாணம் என்றால் என்னவென்று தெரியுமா?’ என்னும் எண்ணம் மனதில் சுற்ற லேசாய் சிரிப்பும் கூட வந்தது.
அவளறிந்து அவன் தன்னை நன்றாக பார்த்துக்கொள்கிறான், கண்ணியமாய் நடந்துகொள்கிறான், ஆதரவாய் தன்னுடன் இருக்கிறான் அவ்வளவே. ஆனால் வாழ்க்கைக்கு இது மட்டும் போதுமா?
நினைவுகள் எல்லாம் தன்னை குறித்தும் கூட சுற்றியது. தான் மட்டுமென்ன? அவனை பார்ப்பதை, அவனை பிடிப்பதை தவிர வேறு என்ன நினைக்கிறேன்? அதற்கு மேல் எப்படி நினைக்க வேண்டும்? என்றபடி தன்னையறியாமல் மீண்டும் விஜய்யிடம் பார்வை நிலைத்தது.
பார்த்தவள் ஏதோ ஒரு யோசனையில் பார்த்தபடி அப்படியே இருக்க அந்த குறுகுறுப்பில் விஜய் திரும்பினான்.
“என்னாச்சு இவளுக்கு?…” என்று தான் தோன்றியது.
‘சுத்தம், படிக்க சொன்னா சைட்டடிச்சிட்டு இருக்காளே?’ என தோன்ற டீப்பாயின் மேல் இருந்த டிஷ்யூ ஸ்டாண்டில் இருந்து ஒரு பேப்பரை எடுத்து உருட்டி அவள் மீது எறிந்தான்.
திடுக்கிட்டு தன்னுணர்வு வந்தவள் தன் மீது என்ன விழுந்ததென்று தேடி எடுத்து அவனை பார்க்க,
“என்ன கனவா? உதைபடுவ, ஒழுங்கா படி கேர்ள்…” என்று சொல்ல,
“ஹ்ம்ம்…” என தலையசைத்தாள்.