ஆனால் விரிந்திருந்த புத்தகத்தின் எழுத்துக்கள் கண்ணுக்குள் வந்தால் தானே? விஜய்யை விடுத்து இப்போது மனது வீட்டினரை நினைத்தது.
‘இப்ப ஊருக்கு போயிட்டிருப்பாங்களோ? என்ன செய்வாங்க? என்ன நடக்கும்? இந்த கல்யாணத்துக்கு பெரியப்பா வரமுடியாதே? வரவேண்டாம். ஆனா வீட்டுல ஒத்துக்கனுமே? இப்படி யோசித்து யோசித்து குழம்பி அப்படியே சோபாவில் சரிந்து அமர்ந்தவள் அமர்ந்தவாக்கில் உறங்கியும் விட்டாள்.
அவள் தூங்குவதை பார்த்துவிட்டு ஒரு தலையசைப்புடன் இதழோரம் சிறுநகையுடன்,
“பழனி உங்கம்மா வந்துட்டாங்க…” என கத்தியதும் அடித்துபிடித்து பதறி அலறிக்கொண்டு எழுந்தவள் வாசலை பார்க்காமல் ஓடிவந்து விஜய்யை கட்டிக்கொண்டு அவனின் தோளில் முகம் புதைத்துக்கொண்டாள்.
“ஹேய் கேர்ள் என்ன பன்ற?…” என்றான் சிரித்தபடி.
“நான் போகலை. போகலை…” என்று நிமிராமல்.
“ஓகே, போகவேண்டாம். ஆனா பாரேன். நிமிர்ந்து பாரு அங்க…” என்று சொல்ல,
“ம்ஹூம், இல்லை இல்லை…” என்றாள் இன்னும் நெருங்கி அமர்ந்து.
விஜய்க்கு தான் ஒருமாதியானது. அவளின் நெருக்கமும், அணைப்பும், இந்த பயத்துடன் கூடிய அவளின் நடுக்கமும் அவனால் உணரமுடிந்தது.
“பழனி நான் தான் சொல்றேன்ல. நிமிர்ந்து பாரு…” என சொல்லவும் அவனின் குரல் வித்யாசமாக இருக்க மெல்ல கண்களை திறந்தாள்.
கதவு பூட்டப்பட்டது அப்படியே இருக்க இன்னும் நன்றாக பார்த்தவள் விஜய் பொய் சொல்லியிருப்பது புரிந்து விலகி அமர்ந்தாள் உடனே.
“ஏன் பொய் சொன்னீங்க?…” என்று முறைக்க,
“நீ ஏன் தூங்கின? படிக்க சொன்னா தூங்கிட்டு இருக்க?…” என்றான்.
“அது தானா வந்திருச்சு. வேணும்னு ஒண்ணுமில்லை…”
“ஆனா இன்னும் பயம் போகலை போல? கூட்டிட்டு போய்டுவாங்கன்னு நினைச்சுட்டே இருக்கியே?…” என்றதும் மலங்க மலங்க பார்த்தாள்.
“இல்லை தான்…” என இழுக்க,
“பயம் இருக்க போய்தான கொஞ்சமும் யோசிக்காம அடிச்சுப்பிடிச்சு வந்து என்னை கட்டிபிடிச்ச?…” என்றதும் அசடுவழிந்தது பவித்ராவிற்கு.
“என்ன? பதில் சொல்லு…”
“அது ஒரு வேகத்துல. ஆனா கட்டி எல்லாம் பிடிக்கலை. சும்மா இங்க கூட வந்து உட்கார்ந்தேன்…” என சமாளித்தாள்.
“ஓஹ்…” என்றவன் தோள் குலுக்கிக்கொண்டு அமைதியாக இருந்துவிட ‘இவன் வேற, இப்படியே செய்யறான்’ என நினைத்தவள்,
“கிளம்பும் போது கூட பெரிம்மாட்ட கூட்டிட்டு போகனும்னு சொல்லிட்டே போனாங்களா, அதான் அது மனச விட்டு போகலை…”
“உண்மையா அந்த நேரம் லாஸ்ட்ல அவங்க சொன்னது அதுக்காக இல்லை. இங்க நாம ஒண்ணா இருந்தா, ப்ச். அதை விடு. இப்போ தூக்கம் கலைஞ்சிருச்சா?…” என்றான்.
விஜய் சொல்லவந்து நிறுத்தியதும், பேச்சை மாற்றியதுமே பளிச்சென்று பவித்ராவிற்கு விளங்க செய்ய குப்பென்ற ஒரு மின்சார உணர்வு. அவன் கேட்டதற்கு பதில் சொல்லாமல்,
“நான், உள்ள போய் படிக்கறேன்…” என்று சோபாவில் விழுந்துகிடந்த புத்தகத்தையும் எடுக்காமல் அவள் உள்ளே செல்ல,
“ஓய் நில்லு…” என்றான் விஜய்.
“நான் ஒன்னும் தூங்கமாட்டேன். படிக்கத்தான் போறேன். தூக்கம் போய்டுச்சு…” என அவனை பாராமல் அவள் சொல்லியவிதம் விஜய்க்கு ரசனை உணர்வை உயிர்ப்பிக்க,
“ஹ்ம்ம், ஆனா அதுக்கு புக். வேணுமே? எடுத்துட்டு போ…” என்றான் அடக்கப்பட்ட சிரிப்புடன்.
பவித்ராவிற்கு அவனின் அந்த குரல் சாதாரணமாய் சொல்வது மாதிரி இருக்கு. ஆனா இல்லை என்பதை போல காட்ட அறைக்குள் நுழைந்து கதவை சாற்றிக்கொண்டாள்.
————————————————
விஜய்யின் வீட்டில் இருந்து கிளம்பி ஹோட்டல் ரூமிற்கு வந்ததில் இருந்து அருமைநாயகம் முழுதாய் என்ன நடந்தது என்று கேட்க ஊருக்கு சென்று பேசிக்கொள்ளலாம் என ஜெகன் சொல்லிவிட்டான்.
வந்த வேகத்தில் அறையை காலி செய்து பழனிக்கு அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.
பழனியப்பன் போட்ட போட்டில் வசந்தி வாய் திறக்கவில்லை அருமைநாயகத்திடம். அப்படியும் இடையே ஓரிடத்தில் வசந்தியிடம் வந்து அருமைநாயகம் பேச,
“வசந்தி, சொன்னா புரியும் தானே?…” என மிரட்டிய பழனியப்பன்,
“அண்ணே வீட்டுக்கு போய்ட்டு பேசுவோம். குடும்ப விஷயம் ரோட்டுல வச்சு வேண்டாம்…” என்று இறுக்கத்துடன் சொல்ல அருமைநாயகதிற்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.
வீடு வரும் வரை பொறுமையில்லை. அத்தனை பரபரப்பு. அதற்கு மேலும் உள்ளுக்குள் ஒரு நமைச்சல்.
இப்படி ஒரே நாளில் தம்பி தன்னை எதிர்த்து பேசிவிட்டானே? அப்போ தனித்த முடிவிற்கு வந்துவிடுவானோ என பயந்துகொண்டே இருந்தார்.
வெளிக்காட்டிக்கொள்ளவில்லை அவ்வளவே. ஆனால் உள்ளுக்குள் உதறல். தன் பேச்சிற்கு மதிப்பின்றி போனால் ஊராரும், உறவுகளும் தன்னை எவ்விடத்தில் வைத்து பார்ப்பார்கள் என்று உதறல் எடுத்தது.
ஊர் வந்து சேர இரவு பதினோருக்கு மணிக்கு மேலாகிவிட காலையில் பேசலாம் என்று ஜெகன் சொல்லிவிட்டான்.
அதற்கு மேல் மறுத்து அப்போதே பேசு என்று சொல்லமுடியாமல் கோபத்துடன் தன்னறைக்குள் சென்றுவிட்டார் அருமைநாயகம்.
ரஞ்சனியிடம் அங்கே நடந்ததை பேசிக்கொண்டிருந்தான் ஜெகன். மாடியில் இதை எல்லாம் நெடுமாறனும் கேட்டபடி படுத்திருக்க அவரின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
“எல்லாம் சரியாகிடுச்சு தாத்தா. இனிமே விஜய்க்கு நாம எல்லாருமே இருக்கோம். நீங்க கவலைப்படாதீங்க…” என்றான் ஜெகன் அவரின் கையை பிடித்தபடி.
மனைவியின் மறைவில் இருந்து படுத்த படுக்கையாகியவருக்கு அந்த அறையே நிரந்தரமாகியது.
இப்படி வந்து செல்லும் நேரங்களில் பேரன், பேத்திகளின் ஆறுதலோடு ஜெகனின் அன்பும் சேர்ந்துகொள்ள தன்னுடைய மகள் வயிற்று பேரனின் நலனை அறியவே ஜெகனின் வருகைப்போதெல்லாம் அத்தனை ஆர்வத்துடன் இருப்பார்.
நெடுமாறனிடம் ஒவ்வொன்றாய் சொல்லிக்கொண்டிருந்தான் ஜெகன். உடன் ஜோதியும், ரஞ்சனியும் இருந்தார்கள்.
இவர்கள் பேசுவது தற்செயலாக அவர்களுக்கு குடிக்க பால் எடுத்துவந்த பார்வதியின் காதில் விழுந்துவிட அவரின் நிழலை கண்டு திரும்பினான் ஜோதி.
“ம்மா…” என்று அதிர்ச்சியுடன் பார்க்க,
“என்ன பேசறீங்க? அப்போ உங்க எல்லாருக்கும் முன்னவே இது நடக்கும்னு தெரியுமா?…” என்று பதட்டத்துடன் வந்தார் அவர்.
“அத்தை மெதுவா. மெதுவா…” என்று ஜெகன் அவரை அமைதிப்படுத்தினான்.
“ம்மா, எதையாச்சும் சத்தம் போட்டு பேசிடாதீங்க. அப்பாவுக்கு தெரிஞ்சா வேற எதாச்சும் பிரச்சனை செய்வார்…” என்றாள் ரஞ்சனி.
“நீயுமாம்மா?…” என்று மகளை பார்க்க,
“நான் சொல்லாம அவ வாயை திறக்கமாட்டா அத்தை…” என்ற ஜெகன்,
“இதுவும் நல்லதுக்குதான்…” என்று பார்வதியிடம் நடந்தவற்றை எல்லாம் சொல்லிவிட்டு திருமணம் எங்கே என்று என்பதையும் சொல்ல இன்னும் நம்பமுடியாமல் தான் பார்த்தார் பார்வதி.
“ஆனா போகவும் சொல்றேன்னு தான அந்த புள்ளை சொல்லுச்சு…” என்றார்.
“எல்லா ஏற்பாடும் ஆகிடுச்சு. நாளைக்கு இந்நேரம் விஜய் அப்புவோட கேரளா கிளம்பிடுவான். நாளை மறுநாள் கல்யாணம். நாமளும் நாளைக்கே கிளம்பனும்…” என்றான் ஜெகன்.
“என்ன மாப்பிள்ளை, நாளைக்குன்னா இவர் கேட்கனுமே?…”
“அவரை யார் கூட்டிட்டு போறா?…” என்று ஜோதி சொல்ல அவனின் தோளில் ஒரு அடி வைத்தார் பார்வதி.
“அவன் சொல்றது உண்மை தான் அத்தை. போதும். இந்த கல்யாணம் நல்லபடியே நடக்கட்டும்…” என ஜெகன் சொல்ல மாற்றி மாற்றி பார்வதியை தங்கள் வழிக்கே கொண்டுவந்தனர்.
நினைத்ததை போல ஜெகன் விஜய் அழைத்து திருமணத்தை பற்றியும் மறுநாள் திருமணம் என்பதை பற்றியும் சொல்ல ஒருவரும் வீட்டை விட்டு போக கூடாதென்றார் அருமைநாயகம்.
தன்னை மீறி இந்த திருமணம் எப்படி நடக்கிறது என்று பார்த்துவிடுகிறேன் என்று ஆவேசமாக ஆட அவரின் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்ததென்னவோ பழனியப்பன் தான்.
“என் பொண்ணு நல்லா வாழனும்னு உங்களுக்கு எண்ணமே இல்லைல? ஏண்ணே இப்படி இருக்கீங்க?…” என்றார் பழனியப்பன்.
“யப்பா பழனி, அண்ணே உன் நல்லதுக்கும், நம்ம குடும்ப கௌரவத்துக்கு தான்ப்பா இவ்வளவு பேசறேன். உனக்கு உன் பொண்ணு தான வேணும்? அந்த கழுதையை எப்படி கூட்டிட்டு வரேன்னு மட்டும் பாரு. உன்னையே எனக்கெதிரா திருப்பிட்டான்ல அவன்…” என்றார் அருமைநாயகம்.
“எண்ணே என்னைக்காச்சும் என் பொண்ண நீங்க திட்டும் போது எதுத்து கேட்டிருப்பேனா? நம்மண்ணே சொன்னது நல்லதுக்குத்தான்னு வாய திறக்காம தான இருந்தேன். ஆனா எம்பொண்ணு வேற உம்பொண்ணு வேறன்னு காமிச்சுட்ட தான?…” பட்டென்று சொல்லிவிட்டார் பழனியப்பன்.
“பழனி என்ன பேசற?…” என்ற அருமைநாயகம்,
“பார்த்தீங்களா மாப்பிள்ளை?…” என்றார் ஜெகனை பார்த்து.
“சின்னமாமா பேசறதுல எந்த தப்பும் இருக்கறதா எனக்கு தெரியலை. அவர் கேட்கறதுக்கு நீங்க பதில் சொல்லுங்க…” என்றான் ஜெகன்.
“என்ன?…” என அருமைநாயகம் திணறலுடன் பார்த்தார்.
“நான் உன்னை அப்படியாடா வளர்த்தேன் பழனி?…”
“ஆமா, சொல்ல போனா அடிமை மாதிரி வளர்த்தீங்க. என்னை மட்டுமில்ல, என் குடும்பத்தையும்…” என்ற பழனியப்பன்,
“ஏன் என் பொண்ணு தான் உங்க கோவத்துக்கு எல்லாம் வடிகாலா கிடைச்சாளா? வசந்தி இப்படி ஆனதுக்கு காரணமே இதுதான். உன் பொண்ணு துருதுருன்னு இருக்கா. பார்த்து வளர்த்துவை. இல்லன்னா இவளும் அந்த ஓடிப்போனவ மாதிரியே ஊர் பேச வச்சுருவான்னு சொன்னீங்க தானே?…”
“டேய் அது நம்ம குடும்பத்தோட நல்லதுக்குடா…”
“ஏன் அதையே உங்க பொண்ணுக்கு சொல்லி வளர்க்கலை? அது கூட இப்பத்தான எனக்கு தெரியுது. புத்தி இருந்திருந்தா அன்னைக்கே கேட்டிருப்பேன். ஆனா இல்லாம போச்சே…” என்று தன் தலையில் அடித்துக்கொண்டார் பழனி.
“என் பொண்ணு என்ன தப்பு பண்ணினா? நம்ம அப்பாம்மா சொல்லவும் தானே கல்யாணத்துக்கு சம்மதிச்சா. அதுக்கு முன்னாலையும், அதுக்கப்பறமும் அவ தப்பு என்ன இருந்துச்சு? எல்லாத்துக்கும் அவளை போட்டு வசந்தி அடிக்க இரக்கமில்லாம தான பார்த்துட்டு இருந்தீங்க? நானும் தான நின்னேன் தடுக்காம….”
“எதுவுமே செய்ய முடியாம நானும் நின்னேனே? என் பொண்ணு துடிக்கிறதை இத்தனை வருஷமா பார்த்துட்டு நின்னது என்னைக்காச்சும் அவளுக்கு இதுல இருந்து ஒரு விடிவு வந்துடாதான்னு தான். படிக்கனும்னா கூட மருமவன் சொல்லி தான்…”
“அதுவும் எங்க அவரு கோச்சுப்பாரோன்னு தட்டமாட்டாம செஞ்சீங்க. என்ன காரணம்? அங்க மக வாழ்க்கை இருக்கே. இன்னைக்கு தான தெரிஞ்சிச்சு என் மக வேற உங்க மக வேறன்னு நீங்க நினைக்கிறது…”
“இல்லன்னா கல்யாணமே ஆவாட்டிலும் பரவால அந்த நாயை இங்க கொண்டுவந்து மூலையில போடுன்னு சொல்ல வாய் வந்திருக்குமா உங்களுக்கு? என் பொண்ணு என்ன நாயா?…” என்று பழனியப்பன் நிறுத்தவில்லை.
வசந்தி அழுதுகொண்டே இதை எல்லாம் கேட்டுக்கொண்டு இருக்க அவரின் சத்தத்தில் இன்னும் எரிச்சலானவர்,
“அழு நல்லா அழு. பொண்ணை பாசமா வளர்க்க துப்பில்லாத நமக்கு இது ஒண்ணுதான் தண்டனை. உன்னையும் நான் கண்டிக்காம விட்டேன்ல. எனக்கு தேவை தான். அழு. இந்த மனுஷன் சொன்னாருன்னு தான் ஊருக்கு ஊருக்கு என் பொண்ணை நித்தம் பாடா படுத்தின? போதுமா இப்ப நிம்மதியா உனக்கு?…”
பழனியப்பன் நிறுத்தவே இல்லை. அத்தனை வருட மனஉளைச்சலையும் அன்றே கொட்டி தீர்ப்பதை போல பேசினார்.
“பழனி, நீ ரொம்ப பேசற. பாரு என் பொண்ணும், பையனும் உன் மேல எத்தனை பாசம் வச்சிருந்தாங்க?…” என்று அருமைநாயகம் சொல்லவும் ரஞ்சனியும், ஜோதியும் பழனியப்பன் அருகே சென்று நின்றுகொண்டார்கள்.
“எங்களுக்கு பழனிப்பா பேசறதுல சந்தோஷம் தான். இதை என்னைக்கோ பேசிருக்கனும். இன்னைக்காவது பேசறாரே…” என ஜோதி சொல்ல,
“தாயா பிள்ளையா இருந்தாலும் வாயும் வயிறும் வேறன்னு நீங்க காட்டிட்டே தான் இருந்தீங்கப்பா. ஆனா இன்னைக்கு தான் பழனிப்பாவுக்கு புரிஞ்சிருக்குது. ஏன் நாங்களே ஒன்னும் சொல்லலை. உங்களுக்கு என்ன?…” என்றாள் ரஞ்சனி.
இன்னும் பேசட்டும் என்பதை போல தான் அவர்கள் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். அத்தனை நிம்மதியும் கூட.
“முடிவா என்னடா சொல்ற?…” என அருமைநாயகம் கேட்க,
“என் பொண்ணுக்கு என் தங்கச்சி மகன் கூட தான் கல்யாணம். அதுவும் அவர் விருப்பப்பட்ட இடத்துல தான். நாங்க போவோம்…” என பழனியப்பன் உறுதியாக சொன்னார்.
“இப்ப இந்த கல்யாணத்துக்கு போனேங்கன்னா திரும்பி ஒருத்தரும் இந்த வீட்டு வாசப்படியை மிதிக்க கூடாது…” என மிரட்டலாய் சொல்ல,
“தேவையே இல்லை. இங்க இருக்கறதுக்கு என் தங்கச்சி புருஷன் இருக்கற ஆசிரமத்துல அங்க இருக்கறவங்களுக்கு சேவகம் பார்த்தாச்சும் கஞ்சியை குடிச்சு காலத்த முடிச்சுக்குவோம். அப்பவாச்சும் பண்ணின பாவத்தை கழுவ முடியுதான்னு பாக்கறேன்…” என்ற பழனியப்பன்,
“என்ன சொல்ற? வரியா? இல்ல இங்கவே இருந்து ஊரு ஊருன்னு சாக போறியா? எனக்கொண்ணும் இல்ல. ஆனா நான் போனா போனது தான். ரெண்டாவது அழுது புரண்டாலும் உன் மூஞ்சில முழிக்க மாட்டேன் நான்…” என்றார் பழனியப்பன்.
“இல்லங்க, வரேன். உங்க கூடவே வந்திடறேன். நீங்களே போன பின்னால எனக்கு இங்க என்ன சோலிக்கழுத?…” என்று வசந்தி அழ,
“போங்க, எல்லாரும் போங்க…” என்று இரைந்தார் அருமைநாயகம். பார்வதியும் அவர்கள் அனைவருடனும் கிளம்ப,
“நீ எங்க போற?..” என்றார் கோபத்துடன்.
“அப்புவுக்கு நான் தான் அம்மா ஸ்தானத்துல எல்லாம் செய்யனும்னு ஆசைப்படறா…” இதை பார்வதி சொல்லும் போதே வசந்திக்கு சூடு போட்டதை போலானது.
“அவ சொன்ன நீ போவியோ? மரியாதையா உள்ள போ. இல்ல கைய, காலை உடைச்சு போடுவேன்…” என சொல்ல,
“எங்க உடைங்க பார்ப்போம்…” என்றான் ஜோதி.
“டேய்…”
“சும்மா நிறுத்துங்கப்பா. அம்மாவை கூட்டிட்டு தான் போறோம். திரும்ப வர தான் செய்வோம். ஏனா இது ஒன்னும் நீங்க உழைச்சு சம்பாத்திச்சது இல்ல. பூர்வீக சொத்து. இங்க நானும், பழனியப்பாவும் எங்க உழைப்ப போட்டிருக்கோம். வர கூடாது. போக கூடாதுன்னு சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை. உங்களுக்கு எவ்வளவு ரைட்ஸ் இருக்கோ. அதே உரிமை எங்க எல்லோருக்கும், அப்பு புருஷன் உட்பட எல்லோருக்குமே இருக்குது….” என்றான் ஜோதி.
“சபாஷ்டா. இன்னைக்கு தான் எனக்கு நிம்மதியா இருக்குது…” என்று ஜெகன் அவனை அணைத்துக்கொள்ள அருமைநாயகம் அநாதையாக நின்றார்.
அருமைநாயகத்தை மட்டும் விட்டுவிட்டு நெடுமாறனையும் வண்டி ஏற்பட்டு செய்து அழைத்துக்கொண்டு திருவனந்தபுரம் கிளம்பினார்கள் அனைவருமே.
மொத்த உறவும் விட்டுசென்று யாருமின்று அன்று தனியாய் தனித்துவிடப்பட்டார் அருமைநாயகம்.