“உனக்கு தெரியாத ஒன்னு சொல்லவா? இங்க நீ படிக்கனும்னு முடிவு பண்ணதுல முதல் ஆளு இவர். உன் மாமா ரெண்டாவது. மூலகாரணம் ஆகாஷ், பிரனேஷ். எல்லாம் சேர்ந்து தான் உன்னை இங்க வரவழைச்சது…” என்று சொல்ல அவள் அவரை திரும்பி பார்த்தாள்.
சிரிப்புடன் அவளை பார்த்து அவர் தோளை குலுக்கி கையை விரித்து காண்பித்து புன்னகைத்தவர்,
“எல்லாம் இவனுக்காக தான். அதுல இவனுக்கு செம டென்ஷனும் கூட. என் மேல கூட கோச்சுக்கிட்டான்…” என்றார் அவர்.
பவித்ராவிற்கு தலைசுற்றியது. இப்படி எத்தனை பேர் இதில் இருக்கிறார்கள் என்று.
அதுவும் தாளாளர் அறைக்கு முதன்முதலில் வருகிறாள் அவரை பற்றி கேள்விப்பட்டதற்கு நேர்மாறாய் இங்கே விஜய்யுடன் அவர் பேசுவதும் அவரை அவன் கேலி செய்வதும் கண்டு திகைப்பாய் இருந்தது.
“நீங்க எப்போ வரீங்க? இன்னும் கிளம்பலை…” என்றான் விஜய்,
“உனக்கு காலையில நான் அங்க இருக்கனும். அவ்வளோ தானே? உனக்காக இல்லன்னாலும் என் ப்ரென்ட்க்காக வருவேன்டா. நீ முதல்ல சேஃபா கிளம்பு…” என்றார் அவர்.
“ம்மா பவித்ரா…” என அவளை அழைக்க,
“ஹ்ம்ம், ஸார்…” என்றாள்.
“வாழ்த்துக்கள்ம்மா. ரெண்டுபேரும் நிறைய கஷ்டங்கள் அனுபவிச்சுட்டீங்க. இனியாவது சந்தோஷமா இருங்க. இங்க உனக்கொரு அப்பா இருக்கேன்னு நினைச்சுக்கோ. எதுக்கு கலங்க கூடாது. புரியுதா?…” என்று அவர் சொல்லவும்,
“வா ஆசிர்வாதம் வாங்கிப்போம்…” என்றான் விஜய். இருவரும் எழுந்து அவரருகே செல்ல அவர்களை இரண்டு பக்கத்திலும் அரவணைத்துக்கொண்டார் காலில் விழவிடாமல்.
“என் மாதவனை தவிர பெரிய ஆசிர்வாதத்தை யாராலும் உங்களுக்கு தரமுடியாதுடா கண்ணுங்களா. முதல்ல அவன்கிட்ட வாங்குங்க. நான் எப்பவும் உங்க கூட தான் இருக்க போறேன்….” என்றவர் பவித்ராவின் உச்சந்தலையில் கை வைத்து நெகிழ்ச்சியுடன் சொல்ல,
“அங்கிள்…” என்று அவரை கட்டிக்கொண்டான் விஜய்.
“டேய் தம்பி, என்னடா இது? கிளம்பு முதல்ல. எமோஷனல் ஆகாத. உனக்கு செட் ஆகாது…” என்று அவனின் கன்னம் தட்டி சொல்லி வழியனுப்பினார். இருவரும் வெளியே வர பவித்ராவிடம் அசாத்திய அமைதி.
“என்னாச்சு உனக்கு?…” என்றான் லேசாய் அவள் பக்கம் குனிந்து கேட்கும் விதமாய்.
“என்ன ஒண்ணுமில்லையே…” என தலையசைத்து பவித்ரா மறுக்க,
“நிஜமா?…” என்றான்.
இருவரும் பேசியபடி அந்த காரிடாரைவிட்டு கீழிறங்க அஷ்வினி அங்கே நின்று போனில் பேசிக்கொண்டிருந்தபடி இருவரையும் பார்த்து முறைப்புடன் நின்றாள்.
விஜய் அதனை கண்டுகொள்ளவில்லை என்றாலும் பவித்ரா பார்த்துவிட வழக்கமான பார்வை தான் அஷ்வினிக்கு அவளிடம்.
ஆனால் இப்போது அவள் அழைத்து பவித்ராவை கேட்க முடியாதே? பல்லை கடித்தபடி இருவரையும் வெறித்துக்கொண்டு நிற்க,
“நம்மளோட பாதை இந்த பக்கம். நீ எங்க பார்த்துட்டு வர? நேரா நட…” என்றான் அவன் பவித்ராவை கவனித்து.
“நான் ஒன்னும் அவங்களை முறைக்கலை. எப்பவும் அவங்க தான் என்னை அப்படி பார்க்கறாங்க…”
“நான் ஒன்னும் உன்கிட்ட கேட்கலையே. நீ முறைச்சாலும் தப்பில்லை…” என்றான் சிரிப்புடன்.
“எப்ப என்ன பேசுவீங்கன்னும் தெரியலை. எப்ப திட்டுவீங்கனும் தெரியலை…” என்று காரில் ஏற,
“டிஸ்டன்ஸ் கீப்அப் பண்ணும் போது இப்படிதான் புரிஞ்சுக்காம இருப்போம். கேப் ஃபுல்ஃபில் ஆகிட்டா பேசாமலே பார்த்தாலே புரிஞ்சிடும். என்ன நினைக்கறோம்ன்னு…”
“அதெப்படி? ஏன் என்ன கேப்?…” என்றாள் தன்னை சுற்றி பார்த்துக்கொண்டு.
அவன் சொல்லியது சரியாய் அவளின் மூளையை சென்று அடையவில்லை. ஏதோ நியாபகத்தில் அவள் கேட்க இன்னும் அவள் ஒரு நிலையான சூழ்நிலைக்குள் வரவில்லை என்று புரிந்தது.
“போற வழில சொல்றேன். கொஞ்சம் நேரம் கண்ணை மூடி தூங்கு…” என்றான்.
விஜய் வீட்டை சென்று அடைய ஆகாஷும், ப்ரனேஷும் வந்துவிட்டனர் அவனின் பின்னாலேயே.
“வாங்கண்ணா…” என்றாள் இருவரையும் வரவேற்கும் விதமாய்.
“எல்லாம் பேக் பண்ணியாச்சாம்மா? ரெடியா?…” என பிரனேஷ் கேட்க,
“முடிஞ்சது ண்ணா. பேக்கை எடுத்துட்டு கிளம்பனும். அவ்வளோ தான். லஞ்ச் போற வழில சாப்பிட்டுக்கலாம்னு சொல்லிட்டாங்க…” என்றாள் விஜய்யை காண்பித்து.
“ஹ்ம்ம், ஆமா அதுவும் சரி தான்….” என ஆகாஷ் சொல்ல,
“விஜய் லஞ்ச் நம்ம ரெகுலர் ஹோட்டல் தானே?…” என்றான் பிரனேஷ்.
அதற்கு பதில் சொல்லாமல் பவித்ராவிடம் திரும்பியவன் பாக்கெட்டில் இருந்த வீட்டு கீயை எடுத்து தந்தான்.
“பழனி. இந்தா கீ. போய் பேக் எடுத்துட்டு வா…” என அவளை மாடிக்கு அனுப்ப,
“டேய் பேக்கை தனியா தூக்கிட்டு எப்படி வரும்? நீ வேணும்னா நில்லு. நான் போய் எடுத்துட்டு வரேன்…” என ஆகாஷ் உள்ளே போக முயல,
“நில்லுடா…” என்ற விஜய்,
“நீ போய் வாட்டர் பாட்டில்ல தண்ணியை ஃபில் பண்ணு. நான் வந்து பேக் எடுத்துக்கறேன்…” என்று விஜய் சொல்லவும் பவித்ரா கிளம்பிவிட்டாள்.
“இங்கே எங்கடா வந்தீங்க?…” என்றான் விஜய்.
“என்னது எங்கடா வந்தீங்களா?…” என மற்ற இருவரும் கோரஸ் பாட,
“ஆமா, கரெக்ட்டா தான் கேட்கறேன்…”
“டேய், அம்மா எல்லாம் நேத்தே கிளம்பிட்டாங்க. நாம ஒண்ணா கிளம்பறதா தானே ப்ளான். ஜெகாண்ணா கூட கிளம்பிட்டோம்னு சொன்னாங்க. இப்ப என்னன்னா வரவேண்டாம்ன்ற மாதிரி பேசற?…” என பிரனேஷ் கடுப்பாகிவிட்டான்.
“உன்னை வரவேண்டாம்னு யார் சொன்னா?…” என்றான் விஜய் அசட்டையாக.
“இதோ இப்போ நீ சொன்னியே? அதுக்கு பேர் என்னடா?…” என ஆகாஷ் கேட்க,
“அடேய், உங்களை வச்சு ஒரு கல்யாணம் கூட பண்ண முடியாது. ஒழுங்கா வந்த கார்ல ஏறி ஊர் வந்து சேருங்க. எனக்கு முன்னாடி போயிருக்கனும் பார்த்துக்கோ….”
“அப்ப நீ?…” என பிரனேஷ் கேட்க,
“நானும் பழனியும் தனியா வருவோம்…” என்றான் விஜய்.
“அடப்பாவி, நீயாடா இது?…”
“ப்ச், கிளம்புறியா?…” எனும் பொழுதே பவித்ரா வரும் சத்தம் கேட்க,
“அவ கேட்டா எதாச்சும் சொதப்பின பார்த்துக்கோ….” என்று எச்சரித்தவன் அவள் வரவும் அதே சீரியஸான பாவனையுடன்,
“ஓகே டா. பார்த்து கிளம்புங்க. நாங்க பின்னாடியே வரோம்…” என்றான் விஜய்.
“எங்க கிளம்பறாங்க? நீங்க வரலையாண்ணா?…” என்றாள் அவள் இருவரையும் பார்த்து.
விஜய் தன் காரில் சாய்ந்துநின்றபடி விரல்களால் தாளமிட்டுக்கொண்டே விசிலடிக்க,
“வாயில நல்லா வருது. ஆனா வரமாட்டிக்குது…” என ஆகாஷ் விஜய்யை முறைத்துக்கொண்டே சொல்ல,
“போடா…” என்றான் அவனும்.
“இல்லம்மா, நீங்க வாங்க. நாங்க ஒரு வேலையை முடிச்சுட்டு கிளம்பனும். லேட் ஆகிடும்…” என ஆகாஷ் சொல்ல,
“அதான் சொல்றாங்கல்ல. நீ என்ன தொணதொணன்னு…” என்று பவித்ராவை சொல்லியவன்,
“அப்பறம்டா. சீக்கிரம் வாங்க. அங்க நிறைய வேலை இருக்குது…” என சொல்ல,
“உன் பேச்சு கா டா…” என்றான் பிரனேஷ்.
“சேர்ந்தே போகலாம்…” என்று பவித்ராவும் சொல்ல விஜய் முறைத்த முறைப்பில் இருவரும் கிளம்பினார்கள்.
“வச்சுக்கறேன்டா உன்னை. இதுக்குத்தான் இந்த ஃபேமிலி மேன் சங்காத்தமே ஆகாதுன்றது…” என பிரனேஷ் சொல்ல,
“வாடா வாடா…” என அவனை அணைத்துக்கொண்டான் ஆகாஷ்.
“நமக்கு இருக்கவே இருக்கார் ஜெகன் அண்ணா…” என பிரனேஷ் பேச,
“டேய் அவரு பதினாலு வயசு பொண்ணுக்கு அப்பாடா…” என்றான் விஜய் சிரிப்புடன்.
“என்னாச்சு?…” என பவித்ரா புரியாமல் பார்க்க,
“அவனுங்களுக்கு அப்பப்ப அம்னீஷியா மாதிரி. நீ போய் கார்ல இந்த பாட்டில்களை வை…” என்று அனுப்பியவன்,
“பேக் தூக்கனும், யார்டா வரீங்க?…” என்று கேலி பேச,
“டேய் மரியாதையா போய்டு…” என்று ஆகாஷ் வெறியானான்.
“ஓகே, ஈஸி…” என்று தோளை குலுக்கிவிட்டு மாடிக்கு செல்ல,
“நீ வாடா, நாம நிம்மதியா மெலோடிஸ் கேட்டுட்டு போகலாம். இவன் கூட போனா காதுதான் பங்க்சர் ஆகும்…” என்று பிரனேஷ் சொன்னாலும் விஜய்யின் பின்னால் செல்லாமல் இல்லை.
“எங்கடா இருக்கு?…” என பேக்கை தேட,
“அதெல்லாம் காலையில காலேஜ் போகும் போதே டிக்கில போட்டுட்டேன். சும்மா சொன்னேன்…” என்றவன் பூஜையறைக்கு சென்று நின்றான் அமைதியாக.
“இங்க வந்துட்டீங்களா?…” என பவித்ராவும் வர,
“வாம்மா, முதல்ல சாமி கும்பிட்டுக்கோ….” என்று சொல்லி இருவரும் இறைவனை வணங்கிவிட்டு கிளம்பினார்கள்.
ஆகாஷும், ப்ரனேஷும் இருவரையும் பார்த்து போகும்படி சொல்லி அனுப்பிவிட்டு கிளம்பி சென்றார்கள் தாங்களுமே.
கிட்டத்தட்ட ஒருகிலோமீட்டார் இடைவெளியில் தான் பின்தொடர்ந்து வந்தார்கள்.
அவர்களுக்கு புரிந்தது விஜய் பவித்ராவுடன் தனியே செல்ல நினைக்கிறான் என்று. அது அத்தனை சந்தோஷத்தை தந்தது.
கடமைக்கென்று இல்லாமல் அவன் அதில் மனமுவந்தே அந்த வாழ்க்கைக்குள் நுழைவது நினைக்கவே நிம்மதியாக இருந்தது.
ஜெகனுக்கு அழைத்து சொல்ல அவன் குத்தாட்டம் போடாத குறை தான். பெரிய வேனில் வந்துகொண்டிருந்தார்கள் அவர்களும்.
விஜய்க்கு தெரியாது இத்தனைபேர் கிளம்பி வருகிறார்கள் என்று. ஆகாஷ் குடும்பம் கேரளாவிலேயே இருக்க, பிரனேஷ் குடும்பம் முதல்நாள் கிளம்பிவிட்டது.
இப்போது ஜெகன், ரஞ்சனி, பழனியப்பன், ஜோதி, பார்வதி. வசந்தியை மட்டும் அழைத்து வருகிறோம் என்று விஜய்க்கு ஜெகன் சொல்ல அவனும் மறுக்கவில்லை. இப்படித்தான் வருவார்கள் என்று அவன் நினைத்திருந்தான்.
ஆனால் நெடுமாறனும், ஜெகனின் தாய் தந்தையும் வருவது அவனுக்கு தெரியாது. ஜெகன் வேண்டாம் என்று சொல்லியும் அவனின் தந்தை கேட்கவில்லை. வருவேன் என்று கிளம்பிவிட்டார்.
இதோ நெஞ்சமெல்லாம் பூரிப்புடன் கோலாகலமாக அத்தனைபேரும் ஆரவாரத்துடன் வந்துகொண்டிருந்தார்கள்.
ஜெகனும், ஜோதியும் பழனியப்பனிடம் ஒவ்வொன்றாய் சொல்லியிருக்க இது எதுவும் வசந்திக்கு இன்னும் தெரிந்திருக்கவில்ல.
பழனியப்பனுக்கு இத்தனை நடந்திருக்கிறதா என்று ஆச்சர்யம். அதைவிட வேதனை.
தன் பெண்ணின் வாழ்க்கைக்கு தானே எந்த முயற்சியு செய்யாதிருக்க இத்தனைபேர் அவர்கள் இணைய முயற்சி செய்திருக்கிறார்களே என மனம் கசிந்து போனார்.
இங்கே விஜய்யுடன் வந்துகொண்டிருந்தவள் வீட்டில் இருந்து கிளம்பியிருப்பார்கள். நாளை இந்த நேரம் திருமணம் முடிந்திருக்கும். நினைக்கும் பொழுதே ஒரு படபடப்பு.
“என்ன ஏதோ யோசனையாவே இருக்க?…” என்றான் விஜய்.
அவளின் அலைப்புருதலை கண்டுகொண்ட பின்பு தான் இந்த தனித்த பயணத்தை தேர்ந்தெடுத்தான் விஜய்.
முதலில் இவளின் இந்த பயத்தையும், சஞ்சலத்தையும் போக்கவேண்டும் என்று நினைத்தான். அதை விட நாளை முக்கியமான நாள்.
முதலில் நடந்தது வேண்டுமென்றால் கட்டாயத்தின் பேரில் ஒருமித்த சம்மதம் இல்லாது நடந்திருக்கலாம். ஆனால இப்போது நடக்கவிருப்பது இவருமே முழுமனதுடன் சஞ்சலமின்றி ஏற்கவேண்டும் என நினைத்தான்.
அதற்கு இவள் முதலில் தெளிவாகவேண்டும். பயத்தை விதைத்த தானே அதை களையவும் முன்வந்தான்.