“உன்னைத்தான் பழனி?…” என மீண்டும் அவளின் தோள் தொட்டு லேசாய் அசைக்க,
“ஹாங், என்ன? ஒண்ணுமில்லையே…” என்றாள் நினைவுகளில் இருந்து மீண்டவளாக.
மனது முழுவதும் தங்கள் திருமணத்தில் தொடங்கி மதுவந்தி வரவு, அவரின் மறைவு, மாதவனின் நிலை என அவளை போட்டு அலைகழித்தது.
எத்தனை முயன்றும் மனதை விட்டு அகலாது இருக்க உள்ளுக்குள் ஒருவித சோர்வு அவளை ஆட்கொண்டது.
அவளாக பதில் சொல்ல போவதில்லை என்று நினைத்தவன் மதிய உணவு முடித்து மீண்டும் பயணத்தை தொடங்கி இருந்தார்கள்.
ஆங்காங்கே சில இடங்களை காண்பித்து தங்களின் நினைவுகளை எல்லாம் அவளிடம் பகிர்ந்தபடி வந்தான் விஜய்.
அவனின் பேச்சுக்களை கேட்டபடியே வந்தவளுக்கு ஒன்று அழுத்தமாய் புரிந்தது. எக்காலத்திலும் தன் மனதில் இருக்கும் அந்த குற்றவுணர்வு குறையவே போவதில்லை என்று.
“நீங்க அத்தையை ரொம்ப மிஸ் பன்றீங்களா?…” என்றாள் அவனிடம்.
“ஹ்ம்ம், இல்லைன்னு சொல்ல முடியாது. ஆனா அம்மா கூடவே இருக்கற மாதிரி ஒரு பீல். இப்பவும் என்னோட அப்பாவோட தான் இருக்காங்க அம்மா. வாழ்ந்துட்டே தான் இருக்காங்க…” என்றான் ஆத்மார்த்தமாக.
“நீங்க அன்னைக்கு எங்களை பார்க்காம, வராம இருந்தா நல்லா இருந்திருப்பீங்க தானே?…” என்றாள் லேசாய் விசும்பலுடன்.
அவளை திரும்பி பார்த்தவன் பதில் சொல்லாமல் அமைதியாய் வண்டியை ஓட்ட அந்த அமைதியும் ஒருவகையில் அவளை இம்சித்தது.
“நான் எதாச்சும் தப்பா சொல்லிட்டேனா?…” என்று அவளே கேட்க வழக்கம் போல தோளை குலுக்கிக்கொண்டான்.
இரவு மயங்கும் வேளை. அந்த ஹைவேய்சில் வாகனங்கள் கூட அவ்வளவாக இல்லை.
ஓரிடத்தில் அவசரதிற்கென நிறுத்தியவன் வரும் வழியில் பிளாஸ்க்கில் வாங்கியிருந்த டீயை இருவருக்குமாய் ஊற்றினான்.
“எவ்வளவு நேரம் தான் கார்ல இருப்ப. வெளில வந்து கொஞ்சம் நேரம் நில்லு…” என்று அவளை அழைத்தான்.
டீயை குடித்தபடியே அவன் சுற்றிலும் பார்க்க ஆள் அரவமற்ற அந்த பாதை பயமுறுத்துவதை போல இருந்தது.
“இங்க நிக்கவே பயமா இருக்கு. போகலாமே?…” என்றாள்.
“பயமா இருந்தா பக்கத்துல வா. என்னை பிடிச்சுக்க. அதை விட்டு தள்ளி நின்னுட்டு பயந்தா நான் பொறுப்பில்லை…” என்றான்.
“என்ன?…” என அவள் பார்க்க,
“என்கிட்டே வர உனக்கு என்ன தயக்கம் சொல்லு?…” என்று அவளை நோக்கி கை நீட்டியவன் தன்னருகே அழைத்து கைவளைவிற்குள் நிறுத்திகொண்டான்.
“டீயை குடி. முதல்ல ரிலாக்ஸா இரு. இப்படி ஒரு பயத்தோட நம்ம கல்யாணம். இப்போ உன் டென்ஷன் என்னை தொத்திடுச்சு…” என சோர்வான குரலில் சொல்ல அவளும் கவனித்தாள்.
கிளம்பும் பொழுது இருந்த கலகலப்பு இப்போது அவனின் முகத்தில் இல்லை என்பதை.
“நீ என்ன நினைக்கிற? நான் ஒரு கம்பல்ஷன்ல உன்னை மேரெஜ் பண்ணிக்கறேன்னா?…” என அவளிடம் நேரடியாக கேட்க,
“ம்ஹூம். இல்லை…” என்றாள்.
“வேற என்ன வேணும்? உனக்கு என்னை பிடிக்கும் தானே பழனி? இல்லன்னா இப்பவே சொல்லிடு…” என்று சொல்லும் போதே ஒரு லாரி சப்தத்துடன் அவர்களை கடந்து செல்ல,
“ஓகே, கார்ல உட்கார்…” என்று அவளை அமர சொல்லி தானும் வந்து அமர்ந்தான்.
சற்று தள்ளி இதை கவனித்துக்கொண்டு தான் இருந்தார்கள் ஆகாஷும், ப்ரனேஷும். அவன் கிளம்பட்டும் என காத்திருந்து பின்னோடு தாங்களும் கிளம்பினார்கள்.
எப்படியும் திருவனந்தபுரம் செல்ல அதிகாலை இரண்டுமணியை தாண்டிவிடும் என்று தெரியும். ஆனாலும் பொறுமையுடன் தான் சென்றார்கள்.
காரில் ஏறியதுமே மீண்டும் விஜய் பவித்ராவிடம் கேட்டான். அவளுக்கு தான் பதில் தெரியவில்லை. இப்படியே விட்டால் சரிவராது என நினைத்தவன்,
“நாளைக்கு கல்யாணம் வேணுமா வேண்டாமா? தெளிவா சொல்லு. வேண்டாம்ன்னா இப்பவே சென்னை திரும்பிருவோம்…” என அதிரடியாக கேட்க,
“அய்யோ இல்லை இல்லை. வேணும்…”
“என்ன வேணும்?…”
“கல்யாணம். அதான். வேணும் தான்…” என்றாள் பதட்டத்துடன் அவனின் கையை பிடித்துக்கொண்டு.
“அப்போ நான்?…” என்றான் அடக்கப்பட்ட சிரிப்புடன்.
“கல்யாணம்ன்னா நீங்களும் தான்….” என்றாள் கொஞ்சம் சலுகையுடன்.
எங்கே கோவித்துக்கொண்டு மீண்டும் முருங்கைமரம் ஏறிவிடுவானோ என கலக்கமாக இருந்தது. அவளின் மிகப்பெரிய பயமே விஜய்யின் கோபம் தான்.
கோபத்தில் வேறு ஏதேனும் முடிவெடுத்துவிடுவானோ? இனி அவனை அன்றி தன்னால் இருக்கமுடியுமா? என்னும் எண்ணமும் அவளை சுழற்றிக்கொண்டு இருந்தது.
“ஓய் கேர்ள்…” என்றான் அவளின் முகத்தை நிமிர்த்தி.
“உன்னை நம்ப முடியலையே? இப்போ சரின்னுவ. அப்பறம் கொஞ்சம் தூரம் போகவும் எதையாச்சும் நினைச்சுட்டு திரும்பவும் முகத்தை வாட்டமா வச்சுப்ப. எனக்கு டென்ஷன் ஆகும். நான் காரை திருப்பிருவேன்…” என்றவன்,
“ஆனா ஒன்னு, கல்யாணம் தான் வேண்டாம்னு போவேன். ஆனா நீ என்னோட தான். நீ சொன்னியே. லிவ் இன் ரிலேஷன்ஷிப். அப்படித்தான். உன்கிட்ட அன்னைக்கு சொன்னது தான். என்கூட வந்துட்ட. திரும்ப போகனும்னு நினைக்காத….”
சட்டென விஜய் இப்படி சொல்லவுமே முகம் சிவந்துபோனது. லேசாய் வெட்கமும், அச்சமும் தோன்ற சொன்னால் செய்துவிடுவானே என்ற அவனின் குணமும் அவளை எச்சரித்தது.
“இல்லை இல்லை. நான் நினைக்க கூடாதுனாலும் அதான் தோணுது. அதான் மனசுக்குள்ள வருது…” என்றாள் பாவம் போல.
“ஏனாம்?…”
“தெரியலையே…”
“உன்னோட கான்சன்ட்ரேஷன மாத்து. வேற நினைச்சுக்கோ. ஏன் என்னையே நினைச்சுக்கோ…” என இலகுவாய் அவன் சொல்ல திரும்பி அவனை பார்த்தாள்.
“நான் உனக்கு ஹெல்ப் பண்ண முடியும். பட் உன் பர்மிஷன் வேணும்…” என்றதுமே படிக்க தான் சொல்வானோ என்று நினைத்தாள்.
“புக்ஸ் எதுவுமே எடுத்து வைக்கலை. நீங்க சொல்லிருந்திருக்கலாமே?…” என கேட்க விஜய்க்கு ஐயோ என்று தோன்றினாலும் சிரிப்பு பீறிட்டது.
“அறிவே, அறிவே…” என அவளின் கன்னத்தை பிடித்து ஆட்டியவன் மெல்ல அப்படியே வருட,
“கார் எடுங்க, டைம் ஆச்சு. கிளம்புவோம்…” என்றாள் அவனின் கையை எடுத்துவிடும் விதமாய்.
“பழனி, உங்க ஊர்ல பஞ்சாமிர்தம் டேஸ்ட்டா இருக்குமாமே? அம்மா சொல்லிருக்காங்க. ஆனா உங்க ஊருன்றதாலயே நான் சாப்பிட்டதில்லை…” என்றான் மெல்லிய குரலில்.
“மாமாட்ட சொன்னா கொண்டு வந்திருப்பாங்க தானே?…” என்று அவள் பதில் கொடுக்க,
“நீ நிஜமாவே புரியாம பேசறியா? இல்லை என்னை அவாய்ட் பண்ண இப்படி பேசறியா?…” என்றான் சிரிப்போடு.
“நிஜமா நேரமாகுது தானே? போலாம் போலாம்…” என்றாள் அவள்.
“ஹ்ம்ம், போலாம்…” என சொல்லி கையை உயர்த்தி நெட்டிமுறித்தவனையே என்ன செய்கிறான் என்று பார்த்துக்கொண்டிருந்தவளின் பின்னங்கழுத்தில் கைகொடுத்து அப்படியே தன் பக்கம் இழுத்தான்.
இந்த திடீர் நெருக்கத்தை எதிர்பாராதவள் துள்ளி அவனின் நெஞ்சில் கைவைத்து தள்ள அவளின் கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டுவிட்டே அவன் விலக அப்படியே சுருண்டு கதவின் பக்கமாய் திரும்பிக்கொண்டாள்.
“ஜஸ்ட் மிஸ். வீட்டுக்கு போய் பேசிக்கறேன். இதை நினைச்சுட்டே தூங்கு…” என உல்லாச புன்னகையுடன் சொல்லியவன் காரை கிளப்பினான்.
என்ன நினைத்து விஜய் அதை செய்தானோ அட்சுபிசகாமல் பவித்ராவிற்கு வேறு எந்த நினைப்பும் வரவில்லை.
அவனின் வலிமையை, கைகளின் வன்மையை முன்பே உணர்ந்தவள் தானே? இன்றும் அதை உணர அந்த அழுத்தம் அச்சத்தையும் கூடவே ஒரு எதிர்பார்ப்பு உணர்வையும் உண்டுபண்ணியது.
தடுக்காமல் விட்டால் என்ன செய்திருப்பான் என்ற நினைப்பையும் தர மூச்சுக்காற்று சூடானது. அப்படியே சாய்ந்து அவள் உறங்கியும்விட தூங்கட்டும் என்று விட்டுவிட்டான்.
விழித்திருந்தால் மீண்டும் ஏதேனும் நினைத்து குழப்பிக்கொள்வாள். அவனுக்கு அவளை புரியத்தான் செய்தது.
இத்தனைநாள் அனுபவித்தவை அப்படி. அவள் வேறு எப்படி நடந்துகொள்வாள் என்று அவளை நன்றாக புரிந்து வைத்திருந்தான்.
மனைவியை எப்படி நடத்தவேண்டும் என்று நித்தமும் அறிந்தவனாகிற்றே. சிறந்த தம்பதிகளின் மகனுக்கு இந்த புரிந்துணர்வும் இல்லாவிட்டால் எப்படி?
இடையே உணவிற்கு கூட நிறுத்தவில்லை. அவளை எழுப்ப நினைத்தவன் உணவை பார்சல் வாங்கிவிட்டு எழுந்தால் தருவோம் என்று விட்டுவிட்டான்.
அதிகாலை மூன்று மணி போல தங்களின் வீடு வந்து சேர்ந்தான். நேராக அருகில் இருக்கும் ஆகாஷின் வீட்டிற்கு செல்ல அங்கே தான் பவித்ராவின் குடும்பத்தினரும் இருந்தார்கள்.
பவித்ராவை ஆகாஷின் வீட்டில் விட்டுவிட்டு தான் மட்டும் தனது வீட்டிற்கு வந்துவிட்டான்.
வீட்டின் வெறுமை முகத்தில் அறைந்தாலும் அந்த கசப்பை விழுங்கிக்கொண்டான்.
இப்படி செல்வதற்காக தான் ஒரு பிடிப்பிற்கு பவித்ராவை தனக்கு தந்துவிட்டு சென்றிருக்கிறார் தன் தாய் என்று நினைத்துகொண்டான்.
சிறிது நேரம் கூட உறங்கவில்லை. வழக்கம் போல வீட்டை சுற்றிலும் வலம் வந்து சற்று சாய்ந்தமர ஆகாஷ் வந்துவிட்டான்.
“நேரமாச்சா ஆகாஷ்?…” என அவனை பார்த்ததும் கேட்க,
“பவித்ரா உன்னை பார்க்கனும்னு சொன்னா. அதான் அப்படியே உன்னை கிளப்பி கூட்டிட்டு வந்தேன்…” என்றான்.
நேரம் ஐந்து மணி. ஆறுமணிக்கு முகூர்த்தம். கோவிலில் வைத்து திருமணம். சின்ன மண்டபம் ஒன்று அங்கேயே பூவலங்காரத்துடன் தயாராக இருந்தது. எந்த ஏற்பாட்டிலும் விஜய் இல்லை.
சொன்னது மட்டுமே அவன். செயல்கள் எல்லாம் தாளாளர், ஆகாஷ், பிரனேஷ் தான்.
விஜய், பவித்ராவிற்கு திருமண உடை, நகைகள் என்று அந்த பொறுப்பை ஆகாஷின் குடும்பம் ஏற்றுக்கொண்டது.
இப்படி ஆளாளுக்கு பொறுப்பை தன் தோளில் வாங்கிக்கொள்ள மாதவனை சுற்றியே நினைவுகள் இப்போது.
மதுவந்தியின் இறப்பிற்கு பின்பு இத்தனை வருடத்தில் ஒரு நாளும் இந்த வீட்டிற்குள் அவர் வரவில்லை. அவரின் மனதிற்கு எது இதமோ அதுவே அவரின் நிம்மதி என்று அவரின் போக்கில் விட்டுவிட்டான்.
“விஜய்…” என ஆகாஷ் அழைக்க,
“ஹாங், சொல்லுடா. இப்ப கிளம்பிடறேன்…” என சொல்ல,
“நீ போய் குளிச்சுட்டு வா. உன் ட்ரெஸ் எல்லாம் எடுத்துட்டு வந்துட்டேன்…” என்று அவனை அனுப்பினான்.
சிறிது நேரத்தில் தயாராகி வெளியே வர பவித்ராவும் மணமகள் அலங்காரத்தில் வெண்பட்டுபுடவையில் அவனெதிரே வந்தாள்.
முதன் முதலில் அவளை மருதமலையில் வைத்து புடவையில் பார்த்தவன். அதன்பின் அவளுக்கு ஏற்பாடு செய்த நிச்சயத்தில் என்றாலும் அதை எல்லாம் கவனிக்கும் நிலையில் அவன் அன்று இல்லையே.
இன்று பார்த்தான். அளவிடும் பார்வை என்றாலும் அழுத்தமாய் படிந்தது அவள்மீது.
“வா…” என அவன் தலையசைக்கவுமே வேகமாய் வந்து அவனின் கை சேர்ந்தாள் அவள்.
வந்தவளின் கையை கோர்த்துக்கொண்டவன் தயாராக இருந்த வண்டியில் ஏறிக்கொண்டான்.
யாரையும் கவனிக்கவில்லை. யாரிடமும் பேசும் மனநிலையும் இல்லை. அவனை புரிந்ததை போல மற்றவர்கள் இருக்க,
“என்னக்கா இது? வந்தவங்க யாரையும் வாங்கன்னு கூப்பிடலை…” என்றார் வசந்தி பார்வதியிடம்.
“வாய மூடுறியா? இப்படியே உன்னை ஊருக்கு கிளப்பிவிட்டுடுவேன்…..” என வசந்தியை வாயை திறக்கவிடவில்லை பழனியப்பன்.
அனைவருமே கோவிலுக்கு கிளம்பி செல்ல அங்கே தாளாளர் மெய்யப்பனுடன் அருகே வீல்சேரில் கழுத்திற்கு பேண்ட் போடப்பட்டு லேசாய் தலையை ஆட்டியபடி உள்ளே நுழைபவர்களை கண்கள் பனிக்க பார்த்திருந்தார் மாதவன்.
“ப்பா…” என்றபடி விஜய் அவரை நெருங்கி மண்டியிட்டு அமர்ந்தவன்,
“உங்க மருமக…” என்றான் பவித்ராவின் கையை மாதவனின் நரம்புகள் ஒட்டிய நலுங்கிய கரத்தில் பிடித்து வைத்தவனாக.
பவித்ராவிற்கு தான் அவரை எதிர்கொள்ளமுடியவில்லை. கண்ணீர் வழிய துவங்க லேசாய் தலையசைத்து மறுத்தவராக அவளின் கண்ணீரை துடைத்துவிட்டார்.
“மது இப்ப தான் சந்தோஷப்படுவா…” என சிரிப்புடன் சொல்ல அவரை மடி சாய்ந்து இடையோடு கட்டிக்கொண்டான் விஜய்.
“டேய் நேரமாகுதுடா. வா வா…” என்று தாளாளர் எழுப்ப இருவரும் மாதவனிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு பின் அவரிடமும் ஆசிர்வாதம் வாங்கினார்கள்.
சம்பிரதாயங்கள் நடைபெற மாதவன் மாங்கல்யம் எடுத்து தர அந்த தங்கசங்கிலியை பவித்ராவின் கழுத்தில் பூட்டினான் விஜய்.
“ஹேய் கேர்ள், உன் பேர் என்ன?…” என்றான் அவளின் நெற்றியில் குங்குமம் வைத்து.
அத்தனை நேரம் உணர்ச்சிமிகுந்தவனாக இருந்தவனின் அந்த துள்ளல் குரலில் தானும் மீண்டவளாய்,
“மிஸஸ் பவித்ரா விஜயநெடுமாறன்…” என்றாள் ஆத்மார்த்தமாய்.
“பழனி தேறிட்ட…” என்றான் அதே சிரிப்புடன்.
மாதவனின் மனதே நிறைந்து போனது. திருமணம் முடிந்ததும் தான் விஜய் மற்றவர்களையே கவனித்தான்.
நீ இருந்த போது இழந்த வாழ்வை தேடினேன் தேங்கினேன்
நான் இறுதிவரையில் எந்தன் அன்பில் உன்னை தாங்குவேன்
இருளும் அது விலகி புதிய வெளிச்சம் ஒன்று பூக்குதே
இதயம் அது துடிப்பதற்கு அர்த்தம் கொஞ்சம் கூடுதே
உருகினேனோ நான் உறைகிறேனோ
உந்தன் அன்பினாலே கரைகிறேனோ