உருக்கம் – 22
திருமணம் முடிந்து மற்ற சம்பிரதாயங்கள் எல்லாம் சிறப்பாகாவே நடைபெற்றது. முடிந்ததும் முதலில் வந்து மாதவனின் காலில் விழுந்து வணங்கி எழுந்தவர்கள் அடுத்ததாக நெடுமாறனிடம் வந்தார்கள்.
“விஜய், அய்யா…” என்றவரின் நெகிழ்ச்சியான அழைப்பும் கூட விஜய்யை இளக்கினாலும் முகத்தில் காட்டவில்லை. சம்பிரதாயமாக அவரின் காலில் விழுந்து எழுந்தான்.
பழனியப்பன், வசந்தி அருகே வரும் முன்னே பார்வதியின் காலில் விழுந்தவனை முகத்தை வருடி நெட்டிமுறித்தார் பார்வதி. அருகே வசந்தி நிற்க,
“இவங்க கால்ல எல்லாம் என்னால விழ முடியாது…” என்றுவிட்டான் படக்கென்று.
“வேண்டாம் மாப்பிள்ளை. இதுவே எங்களுக்கு போதும்….” என கண்ணீரை துடைத்துவிட்டு இருவரையும் பூ தூவி ஆசிர்வாதம் செய்தார் பழனியப்பன்.
என்னவோ மனதில் ஒட்டவே இல்லை. அவரை பார்க்க பாவமாக இருந்தாலும் இந்த மனிதனாவது சரியாய் இருந்திருந்தால் என்ன? என்ற எண்ணம் விஜய்க்கு எழாமல் இல்லை.
“அப்பறம் தம்பி…” என்ற ஜெகனை திரும்பி பார்த்து சிரித்தவன்,
“பழனி, உன் மாமா கால்ல வேணா விழுவோமா? பதினாலு வயசு பொண்ணுக்கு அப்பா. வயசுல பெரியவர். மூத்தவர்…” என்று விஜய் வம்பிழுக்க,
“ஆரம்பிக்காதடா…” என்ற ஜெகன் ரஞ்சனியை பார்த்து சிரித்தான்.
“விஜய்…” என்ற ஜெகனின் தந்தையை பார்த்ததும் அவரின் கையை பிடித்துக்கொண்டான்.
“நீங்க வருவீங்கன்னு நினைக்கலை நான். கவனிக்கலைப்பா…” என்று சொல்ல,
“நான் வராம உன் கல்யாணம் நடக்குமா என்ன?…” என்று மீசையை முறுக்கிக்கொண்டார் அவர்.
பின்னே எதிர்பார்ப்பில்லாத அன்பையும் ஆதரவையும் தந்தவர்கள் அல்லவா!! அவர்களை எக்காலும் மறக்கமாட்டானே.
“கல்யாணம் முடிஞ்சதும் நீ அங்க மறுவீடு போக போறதில்லை. ஆனா சம்பிரதாயம்ன்னு ஒன்னு இருக்கே. அதனால நீ நம்ம வீட்டுக்கு தான் வர. புரியுதா? மாட்டேன்னு சொல்ல கூடாது…” என்றார் உரிமையாய் அதட்டி.
“கண்டிப்பா சொல்லமாட்டேன். அங்க தான் வருவேன்…” என்று அவரிடம் வாக்கு கொடுக்க அவரும் மனமார ஆசிர்வாதம் செய்தார்.
பெரியவர்கள் சற்று நகர்ந்ததும் ஹேய்ய்ய்ய் என்னும் ஆராவாரத்துடன் ஆகாஷ், பிரனேஷ், ஜெகன், ஜோதி என்று நால்வரும் விஜய்யை தூக்கி சுற்ற கூடவே ஆகாஷின் அண்ணனும் சேர்ந்துகொண்டான்.
அத்தனைபேரின் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி. பவித்ராவின் குடும்பத்தினருக்கு விஜய்யுடனும், அவனின் நண்பர்களுடனும் ஜெகன் சரிக்கு சரி ஆட்டம் போட அவர்களுக்கு அத்தனை ஆச்சர்யம்.
“இவருக்கு இம்புட்டு சிரிக்க வருமாக்கா? பாருங்களேன் நம்ம மூத்த மாப்பிள்ளைய? இப்பத்தான் பழக்கம், ஆனா சட்டுன்னு ஒட்டிக்கிட்டாங்க…” என வசந்தி பேச பார்வதி தலையசைப்புடன் நிறுத்திக்கொண்டார்.
ஆனால் மனதிற்கு ஒரு ஆனந்தம். எத்தனை பிணைப்பு. இத்தனையும் இவ்வளவு வருடம் தங்களிடம் காண்பித்துக்கொள்ளாமல் எத்தனை முயற்சித்து இந்த நாளில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்கள் என பெருமையுடன் பார்த்தார் அவர்களை.
மதுவந்தி என்ற ஒரு உயிர் இல்லை என்றாலும் அதற்கு ஈடு செய்வதை போல இத்தனை உறவுகளை நட்புகளை விஜய்க்கு அந்த இறைவன் தந்திருக்கிறான் என மகிழ்ந்துபோனார் பார்வதி.
காலை உணவு நேரம் வந்துவிட்டது. அத்தனையும் கேரளாவின் பாரம்பரிய உணவுகள்.
சாப்பிட்டு முடித்ததுமே மாதவனுடன் அவர் தங்கியிருக்கும் அந்த ஆயுர்வேத மருத்துவமனையின் ஆசிரமத்திற்கு சென்றார்கள்.
அவ்விடத்தை ஒவ்வொன்றாய் சுற்றிகாட்டியவன் தனித்து ஓரிடத்தில் பவித்ராவுடன் வந்தான்.
அங்கே தான் அனைவருக்கும் சேர்த்து மதிய உணவை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
மற்ற அனைவரையும் ஜெகனும், ஆகாஷும் தனியே அழைத்து செல்ல மணமக்களுக்கான ஒரு தனிமை.
அடர்ந்த மரங்களும், குளுமையும் அவ்விடத்தை தெய்வீகமாய் மாற்றியிருந்தது. அருகில் இருப்பவனை விடுத்து அங்கே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தாள் பவித்ரா.
பச்சைப்பசேல் என கண்ணை நிறைக்கும் அந்த குளிர்ச்சியும் மரங்களில் இருந்து வந்த பறவைகளின் சத்தமும் மனதிற்கு இதமாய் இருந்தது.
“அம்மா போனதும் இங்க தான் அப்பாவை கொண்டுவந்து சேர்த்தோம். ஆரம்பத்துல அவரையுமே காப்பாத்த ரொம்ப கஷ்டமா தான் இருந்தது…” என விஜய் சொல்லவும் திரும்பி அவனில் கவனம் வைத்தாள்.
“கஷ்டம்ன்றதை விட அப்பாவுக்கே வாழ விருப்பமில்லாததை போல ஒரு பீல் ஆனா ரொம்ப ட்ரை பண்ணி ஒரு வைராக்கியத்தோட எனக்காக மீண்டு வந்தார்…” என்றவனின் கையை ஆறுதலாய் பற்றிக்கொண்டாள்.
“அப்பாவுக்கு ஒரு பயம். அப்பாவும் அவரோட டீனேஜ்ல தான் அவங்கம்மாப்பாவை தொலைச்சது. அப்போ இங்க வந்தவர். தனியா படிச்சு வேலைக்கு போய்ன்னு ரொம்ப தனியாவே இருந்தவர். அம்மா அவர் லைப்ல வரவும் எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு அம்மாவை தாங்கினார்…”
“அப்படி ஒரு வாழ்க்கை வேற யாரும் வாழ்ந்திருப்பாங்களான்னு தெரியாது. ஆனா அப்பாவும், அம்மாவும் வாழ்ந்தாங்க. முகம்பார்த்து மனசை படிக்கிறது. அது ஒரு ஸ்பெஷல் பவர்ன்னு நான் அடிக்கடி சொல்லுவேன் அவங்கட்ட. சிரிச்சுட்டே தலையை கலைச்சுவிடுவாங்க அம்மா…”
“இந்த ஆசிரமம் கூட அவங்களோட பேவரெட். அப்பாவுக்காக இங்க அம்மா அவ்வளோ சப்போர்ட்டிவா இருந்தாங்க. இப்போ அப்பா மட்டும். திரும்பவும் நான் இருந்தும் அப்பா இங்க இருந்து வரமாட்டேன்னு பிடிவாதமா இருக்காங்க. என்னால அவங்களை வற்புறுத்த முடியாது பாரு…”
“இங்க அம்மா கூடவே இருக்கறதா அப்பா பீல் பன்றாங்க. இந்த ஊரை விட்டு வரமுடியாதுன்னு சொல்றதுல கூட அவங்களோட காதல் தான் எனக்கு தெரியுது…” என்றவன்,
“எனக்குமே அப்படி ஒரு வாழ்க்கையை வாழனும்னு தான் ஆசை. முடியும் தானே?…” என்றான் பவித்ராவை பார்த்து.
அவனையே இமைக்க மறந்து கேட்டுக்கொண்டிருந்தவளின் உணர்வுகள் நெகிழ்ச்சியாகவும், பாரமாகவும் இருக்க தலையை அசைத்தாள்.
“என்ன எமோஷனல் ஆகிட்டியா?…” என்று அவன் சிரிக்க,
“ஹ்ம்ம்…” என்றவளின் கையை அழுத்தமாய் பற்றிக்கொண்டான்.
“விஜய்…” என ஜெகனின் அழைப்பில் இருவருமே திரும்பினார்கள்.
அங்கே வீல் சேரில் மாதவன் அமர்ந்திருக்க அவரை பார்த்ததும் அருகே சென்றான் விஜய்.
“என்னப்பா தேடினீங்களா?…” என்று அவரருகே ஒரு சேரை இழுத்து போட்டு அமர பவித்ரா பக்கத்தில் வந்து நின்றாள்.
“ஹ்ம்ம், ஆமா ஒன்னு சொல்லனும்…” என்றவ அவளையும் பார்த்துவிட்டு,
“நீ சந்தோஷமா இருக்கன்னு உன் முகமே சொல்லுது. அப்பாவுக்கு இன்னைக்கு தான் நிம்மதியா இருக்குப்பா…” என்றவர் குரல் லேசாய் தடுமாறி குளறி வந்தாலும் நிதானமாய் பேசினார்.
“மதுவோட ஆசை, இன்னைக்கு அதை நீ சரியான பாதைக்கு கொண்டுவந்துட்ட. அன்னைக்கு இல்லைன்னாலும் இப்போ இன்னைக்கு இதுல உனக்கு முழு சம்மதம்னு என்னால புரிஞ்சுக்க முடியுதுப்பா. ஆனாலும் ஒன்னு சொல்லனும்…” என்றார் மாதவன்.
“என்ன சொல்ல போறீங்கன்னு தெரியுமே…” என விஜய் சிரிக்க,
“சொல்றதை கேளுப்பா, நீ தான் சொந்தமில்லாம, உறவுகள் இல்லாம வளர்ந்துட்ட. ஆனா உன்னோட வாரிசுகள் நிறைய உறவுகளோட வளரனும். ஆனா உன்னை மாதிரியே…” என்று கையை உயர்த்த தன் கன்னத்தை அவருக்கு கொடுத்தான் விஜய்.
அதை வாஞ்சையுடன் வருடியவரை புன்னகையுடன் பார்த்திருந்தான் விஜய். பவித்ராவிற்கு அதிலும் ஆச்சர்யம். எப்படி பெற்ற தந்தை இப்படி ஒரு நிலையில் இருக்கும் போது இத்தனை திடமாய் எதிர்கொள்ளமுடிகிறது அவனால் என்று.
அவளுக்கு தெரியாதே அவன் சுருண்டுபோகும் தருணங்களை. சவலைபிள்ளை என ஏங்கிபோகும் நேரங்களில் கூட தன் வலியை காண்பிக்காமல் தன் தைரியத்தை துணையாய் அவருக்கு தந்துகொண்டிருகிறான் என்று.
அதுவே மகனிற்கு பக்கபலமாய் தானிருக்கவேண்டும் என்று தெம்புடன் அவர் மீண்டுகொண்டிருக்கிறார் என்று. ஆச்சர்யத்துடன் அவள் அவனையும், மாதவனையும் பார்த்தாள்.
“இங்க வாம்மா…” என தன்னருகே அழைத்தவர் மருமகள் வந்ததும்,
“இனி நீ தான் பவித்ராவை நல்லபடியா பார்த்துக்கனும். ரெண்டுபேரும் சந்தோஷமா இருக்கனும்…” என்றார் மகனிடத்தில்.
விஜய் பதில் சொல்வதற்குள் தன் மனதில் உருபோட்டிருந்த விஷயத்தை மிகவேகமாய் பவித்ரா பேசினாள் மாதவனிடம்.
“இல்லை இல்லை. நான் தான் அவங்களை பார்த்துக்கனும். நான் பார்த்துப்பேன் மாமா…” என உத்திரவாதம் போல பவித்ரா சொல்ல சின்ன சிரிப்புடன் புருவம் உயர்த்தினான் விஜய்.
“எவங்களை பழனி?…” என்றான் குறும்புடன் சிரித்துக்கொண்டே.
“உங்களை…” என்று அவனை பார்க்க அவளை தன்னருகே இருந்த சேரில் அமர்த்தினான்.
“அதான் நான் யாரு?…” என்று கேட்கவும்,
“ஹஸ்பண்ட்…” என்ற பதில் வந்தது அவளிடத்திலிருந்து வேகமாய்.
“ப்ச், பழனி இதை தமிழ்ல சொல்லு. பன்ச் இல்லை இந்த இங்க்லீஸ்ல…” என்றான் வம்பிழுத்து.
“ம்ஹூம், மாமா இருக்காங்க…” என அவள் தலை தாழ்ந்து பேச இன்னும் சிரிப்பு தான் விஜய்க்கு.
அவளின், அச்சம், தயக்கம், குழப்பம் என எல்லாம் அறிந்திருந்தவனுக்கு தன்னை பார்த்துக்கொள்வதாய் சொல்லிய அவளின் இந்த உத்திரவாதம் புன்னகையை விளைவித்தது.
“அப்பவே போயாச்சு அவங்க. நீ சொல்லு, கேட்போம்…” என்றான் அவளின் கையை சொடுக்கெடுத்தபடி.
பவித்ரா திரும்பி பார்க்க ஜெகன் மாதவனுடன் பேசியபடி சென்றுகொண்டிருந்தான்.
“எப்போ போனாங்க?…” என பவித்ரா பேச்சை மாற்ற,
“இப்ப அதுவா முக்கியம்? எங்க சொல்லு…”
“என்ன சொல்ல? நான் போறேன்…”
“ம்ஹூம், சொல்லிட்டு போ. நான் யாரு உனக்கு?…”
“அதான் மேடையில சொன்னேனே?
“அது உன்னோட பேர்…” என்றான்
“விடமாட்டீங்களா?…” பவித்ரா அவனின் கைகளின் வருடலில் லேசாய் கூசியபடி கேட்க,
“ம்ஹூம். சொல்லு. சொல்லு…” என்று ஊக்குவிக்க,
“ஆகாஷ் அண்ணா…” என்றதும் விஜய்யும் திரும்பி பார்த்த நிமிடம் எழுந்து ஓடி போக,
“பிராடு, என்கிட்டையே எஸ் ஆக பார்க்கற? இப்படியே ஓடினா புடவை தடுக்கி கீழே தான் விழுவ. இப்ப வரைக்கும் புடவை கட்டினா உனக்கொரு பயம் இருந்துட்டே இருக்கே?…” என்றான் விஜய்.
“இப்போ வரைக்கும்ன்னா? ஓஹ் நீங்க அன்னைக்கு என்னை கவனிச்சீங்களா?…” என்றாள் மருதமலையில் வைத்து பார்த்ததை கொண்டு.
“ஹ்ம்ம், ஆமா, செம கோவம் சின்ன பொண்ணுக்கு இப்படி புடவை கட்டிவிட்டிருக்காங்கன்னு…” என்றவன் இப்போது சேரில் நன்றாய் சாய்ந்தமர்ந்தபடி கைகளை உயர்த்தி நெட்டிமுறித்தவன்,
“பட், இப்போ பார்க்க கோவம் எல்லாம் வரலை…” என்றான் சன்னமான குரலில்.
அவன் பேசிவிட்டான், பவித்ராவிற்கு தான் அவனின் முன்னால் அமரமுடியவில்லை.
“இந்த பெண்குட்டி ரொம்பவே சோதிக்கும் போல. எதுக்கெடுத்தாலும் ஓட்டம்…” என்றவன்,
“இந்த ட்ரெஸ், இந்த வெடிங் நீ எப்படி பீல் பன்ற பழனி?…” என்றான் மென்மையாய்.
அவனின் ஒவ்வொரு பரிமாணங்களுமே அவளை ஆங்காங்க நிறுத்தி நின்று ரசித்து வியக்கசெய்பவை.
அதில் இந்த மென்மையின் மேன்மைக்கும் பெரும்பங்கும், பேரிடமும் உண்டு அவளின் மனதில்.