உருக்கம் – 24
நான்குமாதங்கள் சென்றது கூட தெரியாது. திருமணம் முடிந்து முதலில் கல்லூரிக்கு செல்லவே அத்தனை தயக்கம் பவித்ராவிற்கு.
வழக்கம் போல விஜய் அவளை தேற்றி தேற்றி ஒருவழியாய் கூட்டிக்கொண்டு கிளம்பினான்.
கல்லூரியில் கிண்டலாக விளையாட்டாக கூட யாராவது ஏதாவது சொல்லிவிட்டால் உடனே இவனிடம் சுணங்கிவிடுவாள் வரவில்லை என்று.
ஆனால் யாரும் எதுவும் சொல்லிவிடகூடாது என்பதிலும் அத்தனை கவனம் இருக்கும். அதிலும் விஜய் வகுப்பெடுக்க வந்துவிட்டால் அங்கிருக்கும் அனைவருக்குமே பவித்ரா மேல் ஒரு பார்வை இருக்கத்தான் செய்தது.
முதலில் கண்டுகொள்ளாமல்விட்டவன் ஒருநாள் அத்தனைபேரையும் பிடிபிடியென பிடித்தான்.
“படிக்க தானே வந்திருக்கீங்க? ஆனா உங்க ஒருத்தருக்கும் கவனம் இங்க இல்லை இல்லையா?…” என்று அன்று தான் நடத்திய பகுதியின் விளக்கம் கேட்டு அத்தனைபேரையும் வாட்டினான் பவித்ரா உட்பட.
கல்லூரியில் வைத்து பேசியது போதாததிற்கு வீட்டிற்கு வந்து வாங்கிக்கட்டினாள் அவனிடத்தில்.
“அவங்க தான் உன்னை பார்க்கறாங்கன்னா உனக்கு ஏன் கவனமில்லாம போச்சு? திருதிருன்னு முழிக்கிற கொஷின் கேட்டதுக்கு?…” என்று பேச,
“அத்தை…” என ஆரம்பித்துவிட்டாள் பவித்ரா.
“மூச், எதாச்சும் கம்ப்ளைன்ட் பன்றேன்னு அம்மாக்கிட்ட பேசு வச்சுக்கறேன்…” என்று கத்திவிட அவனின் கோபத்தில் வாயை மூடிக்கொண்டாள்.
“இப்போ நான் வந்து கேள்வி கேட்பேன். கண்ணை உருட்டு வச்சுக்கறேன்…” என்று சொல்லிவிட்டு இருவருக்கும் காபி கலக்க செல்ல புத்தகத்தை வைத்துக்கொண்டு அப்படியே படுத்துவிட்டாள்.
“ஹேய் கேர்ள்…” என கிட்சனில் இருந்து அழைப்பு வந்தது அடித்துபிடித்து எழுந்து செல்ல,
“என்ன குட்டி தூக்கமா?…” என்றான் விஜய் கேலிப்புன்னகையுடன்.
“லைட்டா…” என்று இவளும் புருவம் சுருக்கி சொல்ல,
“ஓகே, இந்த பாலை பார்த்துக்கோ. வந்திடறேன்…” என்று சொல்லி ப்ரெஷ் ஆனதும் வந்து காபி குடித்தபடி அவளுக்கு பாடம் நடத்தினான்.
வகுப்பில் கூட அத்தனை வாங்கியிருக்கமாட்டாள், இங்கே வைத்து காதை திருகவும், கன்னத்தை கிள்ளவும், முதுகில் லேசாய் தட்டவும் என்று படுத்திவிடுவான்.
அதற்கு பயந்தே இப்போதெல்லாம் வகுப்பறையிலேயே ஒழுங்காக கவனித்து பார்க்க ஆரம்பித்தாள்.
அவன் திட்டிய நாட்களில் எல்லாம் இரவுகளில் அவனை கொஞ்சமாவது கெஞ்சவிடலாம் என்றால் அதற்கும் வாய்ப்பின்றி போனது.
“காலேஜ் பாடத்துக்கே ஒழுங்கா படிக்கலைன்னு வாங்கின நீ என்கிட்டே. இப்போ குடும்ப பாடத்துக்கும் டிமிக்கி குடுத்த…” என்று அவளை மடக்குவான்.
அதற்கும் மேல் பேச்சுக்கள் அல்லாது, ‘ஹேய் கேர்ள்’ என்ற ஒற்றை அழைப்பு போதுமானதாக இருந்தது.
“இதை சொல்லியே…” என்பவளின் பாதியில் நிறுத்தும் வார்த்தைகளின் பொருளை வாங்காமல் விட்டுவிடவும் மாட்டான்.
அன்று காலை வழக்கம் போல விஜய் எழுந்துவிட பவித்ராவிற்கு சுத்தமாக கண்ணை திறக்கமுடியவில்லை.
“பழனி, நேரமாச்சு இன்னைக்கு லேப் க்ளாஸ். ஞாபகம் இருக்கா இல்லையா?…” என்று விஜய் சத்தம் போட்டபடி கிளம்பிக்கொண்டிருக்க,
“அத்தை, உங்க பிள்ளைட்ட சொல்லுங்க, ப்ளீஸ்…” என்று இவள் உருண்டுகொண்டு இருந்தாள் படுக்கையில்.
சொல்லி சொல்லி பார்த்தவன் வேகமாய் வந்து அவளை தூக்கிக்கொண்டு சென்று குளியலறையில் விட்டான்.
“ஒழுங்கா குளிச்சு முடிச்சு வர. நீ ஒன்னும் செய்யவேண்டாம். சாப்பாடு ரெடி…” என்று சொல்லி செல்ல அவனின் டிஷர்ட்டை பிடித்து இழுத்தாள்.
“மாமால்ல. இன்னைக்கு ஒரு நாள் லீவ்…” என்று தோளில் சாய்ந்து கெஞ்ச அவனுக்குமே சிரிப்பு தான்.
ஆனால் இளகுவானா என்ன? இந்த வருட படிப்பை அவளை முழுவதும் நல்லபடியா முடிக்கவைத்து அனுப்பவேண்டுமே?
“இப்போ மட்டும் மாமா வரும். மத்த நேரமெல்லாம் பார்த்து பார்த்துன்னு பார்க்கவச்சு சீண்டறது. ஒழுங்கா கிளம்பு. உனக்கு சமைக்கிற வேலை கூட இல்லை…” என சொல்லி செல்ல வழியின்றி கிளம்பினாள் பவித்ரா.
அதற்குள் ஆயிரம் குறைகள், அவனை லேசாய் முணுமுணுத்தபடி மதுவிடம் சொல்லி சொல்லி கிளம்ப ஒரு புன்னகையுடன் கேட்டுக்கொண்டே அத்தனையும் எடுத்துவைத்தான்.
“பழனி உன் பேக்….” என்று ஞாபகப்படுத்த அவனின் பேச்சை காதில் வாங்காமல் கோபத்துடன் சாமி கும்பிட்டு நெற்றியில் பூசிக்கொண்டு வந்து பேக்குடன் நின்றாள்.
“சாப்பிடலை. அதை பத்தி கொஞ்சமும் கவலை இல்லை. கேட்கவும் இல்லை…” என இவள் பொரும,
“அதுக்கு நீ சீக்கிரம் எழுந்திருக்கனும்…” என்றான் முறைப்புடன்.
பதிலே இல்லை இவளிடத்தில். பேசினால் தனக்கு தான் கொட்டுவிழும், இப்போது கல்லூரிக்கு வேறு.
அங்கு வைத்து லேபில் சொதப்பினால் அதற்கும் சேர்த்து வைத்துசெய்வான் என்று வாயை மூடிக்கொண்டாள்.
“நல்லா கத்துவச்சிருக்கடி. எப்ப பேசனும், எப்ப சைலன்ட் ஆகிடனும்னு…” என்று அவளின் காதை பிடித்து தன் பக்கமாய் சாய்த்தவன் இதழொற்ற,
“ப்ச், ஒன்னும் வேண்டாம். போங்க போங்க…” என சொல்லி கதவை தாண்டி வெளியே வந்து நின்றாள்.
கீழே வந்து காரை கிளப்பியவன் அவளிடம் பின்னால் இருந்த பேக்கை எடுத்து நீட்ட,
“லஞ்ச் தானே அங்கயே இருக்கட்டும்…” என்றாள்.
“ப்ச், முதல்ல வாங்கி பாரு…” என்று அவளின் மடியில் வைத்துவிட்டு பாதையை கவனித்தான்.
திறந்து பார்க்க அதில் பாக்ஸில் இட்லியும், சாம்பாரும், இன்னொரு அடுக்கில் எண்ணெய்பொடி இருந்தது.
“உனக்கு லஞ்ச் பேக் பண்ணிட்டேன். ப்ரேக்பாஸ்ட் கார்ல சாப்பிட்டுக்கலாம்ன்னு எடுத்துட்டேன். டைம் இல்லைல…” என்றான் அவளை பாராமல்.
“அங்கயே சொல்லிருக்கலாம்ல…” என சொல்லி சாப்பிட,
“பேச்சுக்காவது சாப்பிடுங்கன்னு கேட்கிறியா பழனி?…” என்றான் கடுப்புடன் விஜய்.
“அப்ப நீங்களும் இன்னும் சாப்பிடலையா?…” என்றதும் அவளை திரும்பி பார்த்தவனின் பார்வையில் நாக்கை கடித்துக்கொண்டாள்.
அவளறிந்து இந்த திருமணத்தின் முன் அவனுடன் இருந்த பொழுதும் சரி, திருமணத்திற்கு பிறகும் சரி. தனியே என்றுமே அவன் சாப்பிட்டதில்லை.
கல்லூரி நாட்களில் மட்டும் மதிய உணவு அவரவர் இடங்களில் தான். மற்றபடி உணவை தனியே உண்ண விரும்பாட்டான் விஜய்.
“அது தூக்க கலக்கத்துல கேட்டுட்டேன்…” என்று பவித்ரா கண்ணை சுருக்கி கெஞ்ச,
“ஏன் நைட் சீக்கிரம் தூங்கிட்ட தானே?…” என்றவன் அவளின் முறைப்பில் இதழ்களுக்குள் புன்னகைக்க,
“பேசாதீங்க…” என்றாள்.
“ஓஹ்…” என சொல்லி தோளை குலுக்க அந்த இட்லி பாத்திரத்தை அவனின் தலையில் போட்டால் என்ன என்று தோன்றியது.
“பேசாதீங்கன்னா அந்த பேசாதீங்க இல்லை. இது வேற…” என சமாதானம் பேச பார்க்க அதற்கும் தலையசைப்பு தான் அவனிடத்தில்.
“ப்ளீஸ் மாமா…” என்ற வார்த்தையில் மீண்டும் லேசாய் சிரித்துவிட,
“ஷேர் பண்ணிக்கலாம்…”
“அறிவே, ஷேர் பண்ணனும்னு தான் இத்தனை கொண்டு வந்திருக்கேன்…” என்றதும் தலையில் தட்டி சிரித்துக்கொண்டவள் தானும் சாப்பிடு அவனுக்கும் அவளே தர வாங்கிக்கொண்டான்.
“இது கூட நல்லா இருக்குல? ட்ரைவிங்ல நீ ஊட்ட நான் சாப்பிடன்னு…” என்று கண்ணடிக்க,
“நானே ட்ரெஸ்ல, கார்லன்னு சிந்திடுமோன்னு பயந்துட்டே ஊட்டினா…” என்றவள்,
“லஞ்ச் என்ன செஞ்சீங்கன்னு சொல்லவே இல்லை?…” என கேட்டாள்.
“வீக்கென்ட் செஞ்சு வச்ச புளிக்காய்ச்சல் இருந்தது. ரைஸ் வச்சு மிக்ஸ் பண்ணிட்டேன். கூடவே வத்தலும் பொரிச்சு இருக்கு. ஓகே தானே? வேணாம்ன்னா சொல்லு வரதன்கிட்ட வாங்கிட்டு வர சொல்றேன்…” என்றான்.
சாப்பிடு முடித்திருக்க ஓரமாய் காரை நிறுத்தி கையை கழுவி தண்ணீரை குடித்துவிட்டு பாத்திரத்தையும் அலசி வைத்தாள்.
“கார்லயே இருக்கட்டும். பின்னாடி வச்சுடு…” என சொல்லி சற்று நேரத்தில் கல்லூரியின் அருகே வந்துவிட்டிருந்தார்கள் இப்போது.
சாப்பிட்டு முடித்தவள் மீண்டும் கண்ணை சுழற்றி சாய்ந்து உறங்க பார்த்தவனுக்கு சிரிப்பு தான் வந்தது.
இப்போதெல்லாம் வீட்டில் இருக்கும் நேரம் கூட பகலில் அவளை உறங்கவிடுவதில்லை. கெட்டபழக்கம் என்று சொல்லி சொல்லி அவளை தன்னைவிட்டு அகலாமல் தனக்குள்ளேயே வைத்துக்கொண்டான்.
இப்போது செல்லும் வழியில் சாப்பிட்டதும் உறங்கி வழிந்துகொண்டிருந்தவளை பார்க்க பாவமாகவும் இருந்தது. காலேஜ் நெருங்கும் வரை தூங்கட்டும் என விட்டுவிட்டவன் பார்க்கிங்கில் காரை நிறுத்தியதும் அவளை எழுப்பினான்.
“அதுக்குள்ளையுமா காலேஜ் வந்திருச்சு?…” என்று கண்ணை கசக்க,
“அடிங், நல்லா வாங்க போற என்கிட்ட. நல்லா முகத்தை துடைச்சுக்கோ…” என்று டவலை நீரில் நனைத்து நீட்ட வாங்கியவள் கண்ணில் ஒற்றி எடுத்தாள்.
“ஓகே தானே?…” என்றான் அவளிடத்தில்.
“பழனி, முழுசா தெளிஞ்சிட்டியா? இப்படி மயங்கற?..” என கிண்டல் வேறு பேச,
“ப்ச், அதான் கூட்டிட்டு வந்துட்டீங்களே? நான் போறேன்…” என்று சொல்லி இறங்கி செல்ல சிரித்துக்கொண்டே விஜய்யும் இறங்கி காரை பூட்டிக்கொண்டு நடந்தான்.
காலை மூன்றாம் வகுப்பு லேபிற்கு செல்லும் நேரமென்பதால் வொய்ட் கோட், நோட்ஸ் என அத்தனையும் பரபரபாப்பாக எடுத்து விகாஷினியுடன் பேசியபடியே சென்றாள் பவித்ரா.
மாணவர்களுக்கு முன்பே விஜய் அங்கே காத்திருக்க அவர்களுக்கான பாடமும் ஆரம்பமாகியது.
பவித்ராவால் அங்கே நிற்கவும் முடியவில்லை. ஆனாலும் சாமாளித்து அந்த வகுப்பை முடித்து சென்றவளை யோசனையுடன் பார்த்தான் விஜய்.
“உடம்பு எதுவும் முடியலையாடா?…” என்று அனைவரும் செல்லவும் கடைசியாய் அவளை நிறுத்தி கேட்க ஏற்கனவே அவனின் மேல் கோபத்துடன் இருந்தவள்,
“பார்த்தா தெரியும் தானே? ரொம்ப நல்லா இருக்கேன்…” என்றாள் அவளின் குரலிலேயே.
“ஹேய் கேர்ள், உனக்கு கோபப்பட கூட தெரியலை. என்ன வாய்ஸ் இது? நீ கோவமா பேசினா கூட நார்மலா கேட்குது? அதுல உன் பேஸ் எக்ஸ்ப்ரஷன்ஸ் வேற?…” என்று அவன் சிரிக்க,
“எனக்கு கோவம்ன்னு உங்களுக்கு புரியுதுல, அது போதும்…” என்றவள்,
“ஸார்க்கு தனியா காலேஜ்ல வச்சு என்கிட்டே பேசவெல்லாம் வருது…” என்று கிண்டலாக கேட்க,
“போடி…” என்றான் மெல்லிய குரலில்.
“போ…” என்று வாயை திறந்தவள் அவன் புருவம் உயர்த்தி என்னவென்று பார்க்கவும்,
“போறேன்னு சொல்ல வந்தேன்…” என சொல்லிவிட்டு வேகமாய் செல்ல விஜய்யின் முகத்தில் அழகாய் வந்து ஒட்டிக்கொண்டது அந்த புன்னகை.
வகுப்பறைக்கு வந்தவள் தண்ணீரை குடித்துவிட்டு அமர விகாஷினி குறும்புடன் பார்த்தாள் அவளை.
“என்னவாம், எல்லாரையும் அனுப்பிட்டு உன்கிட்ட மட்டும் ஸார் பேசறார்?…” என்று சிரிக்க,
“சும்மா நீ ஒழுங்கா படிக்கிறியா என்னன்னு கேட்டார்…” என்றாள் பவித்ராவும்.
அடுத்த வகுப்பு ஆரம்பித்துவிட அனைவரும் நேராக அமர்ந்துகொள்ள பத்து நிமிடம் கூட சென்றிருக்காது. அங்கேயே மயங்கி விகாஷினியின் மீது சாய்ந்தாள் பவித்ரா.
“பவி, என்னாச்சு? மேம்…” என வகுப்பாசிரிசையிடம் விகாஷினி சொல்ல அத்தனை பேரும் என்னவோ என்று பதறி போனார்கள்.
அதற்குள் ஒரு மாணவன் பக்கத்து வகுப்பில் இருந்த விஜய்யிடம் போய் சொல்லியிருக்க வேகமாய் வந்துவிட்டான் அவனும்.
“என்னாச்சு?…” என்று வர பவித்ராவின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினார்கள்.
விஜய்யை பார்த்ததும் திட்டிவிடுவானோ என பயந்து பார்த்தவள் கண்ணில் இருந்த தண்ணீரையும் துடைத்து அவனை நன்றாக பார்த்தாள்.
“என்னாச்சுடா?…” என்று அவனும் கேட்க,
“நான் ஒன்னும் பண்ணலை. க்ளாஸ் போய்ட்டிருந்தது. ஆனா தூங்கலாம் இல்லை…” என்று அவள் வேகமாய் சொல்ல அங்கிருந்த ஆசிரியை சிரித்துவிட விஜய்க்கும் வெட்கபுன்னகை.
“என்ன உளறிட்டு இருக்க?…” என்றவன்,
“மேம், கேன் ஐ…” என்றதும்,
“சூர் ஸார்…” என்றார் அவரும்.
யாரையும் ஏறிட்டு பார்க்கமுடியவில்லை. அத்தனைபேரும் குறுகுறுவென்று அவர்களையே பார்க்க விஜய் பிடித்திருந்த கையில் இருந்து தன் கையை உருவிக்கொண்டாள்.
“திரும்ப விழுந்திடாத பழனி…” என்று அவன் மீண்டும் பிடிக்க,
“எல்லாரும் பார்க்கறாங்க…” என்று நழுவத்தான் பார்த்தாள்.
“பார்த்து போ பவித்ரா…” என்று ஆசிரியை சொல்லவும்,
“ஓகே மேம்…” என்றவளின் பவ்யம் இன்னும் சிரிப்பை மூட்டியது விஜய்க்கு.
“ஓகே மேம், வரேன்..” என்று விஜய்யும் சொல்லிவிட்டு செல்ல இப்போதே அடுத்து வீட்டில் பவித்ரா என்ன பேசுவாள் என்பது காதில் ஓட துவங்கியது.
“தள்ளி வாங்க, இப்போ நான் நல்லா தான் இருக்கேன்…” என்றாள் விஜய்யிடம்.
“க்ளாஸ் ரூம்ல தூங்கி விழுந்துட்டு பேச்சை பாரு…” என்றவன்,
“கார்ல இரு. வந்திடறேன்…” என்று சொல்லி மீண்டும் ஸ்டாஃப் ரூம் சென்றான்.
தனக்கும் சேர்த்து விடுப்பு சொல்லிவிட்டு வேகமாய் வந்தவன் நேராக மருத்துவமனைக்கு செல்ல அது ஆகாஷ் வேலை செய்யும் மருத்துவமனை.
“இங்க எதுக்கு? எனக்கொண்ணுமில்லை…” என்றவளுக்கு பதில் சொல்லாமல் பார்த்தவன் முகம் மலர்ந்து இருந்தது.