அவனின் பேச்சுக்களை மறுக்க முடியவில்லை. யார் என்ன கேட்டாலும் அதற்கேற்றவாறு பத்தி சொல்லி அத்தனைபேரின் வாயடைத்தவன் பவித்ராவின் ஆசைப்படி அவளை கிளப்பிவிட்டான் வெளியூருக்கு.
அவள் இங்கே இருந்தாள் என்றால் நிம்மதியாக படிக்கவும் விடமாட்டார்கள் என்று தான் அவன் இந்த ஏற்பாடும் செய்தது.
இன்னும் இரண்டு நாட்களே இருந்தது கல்லூரிக்கு கிளம்புவதற்கு என்று. ரஞ்சனியும் வந்துவிட்டாள் தங்கையை அனுப்புவதற்காக.
சென்னையில் கல்லூரியில் கொண்டு சேர்த்து விடுவதற்காக ஜெகனும், பழனியப்பனும் கிளம்ப முடிவெடுத்தனர்.
கடைசி நேரத்தில் பழனியப்பன் வரமுடியாமல் ஜோதியும், ரஞ்சனியும் சேர்ந்துகொள்ள சென்னை பயணம் மறுநாள் மாலை துவங்க இருந்தது.
அதனால் அன்று காலையே ரஞ்சனி, ஜெகன் இருவரும் பழனி வந்துவிட்டார்கள் அங்கிருந்து கிளம்புவதற்கு.
—————————————-
சென்னையில் அந்த மாடி வீட்டின் படுக்கையறையில் ஜன்னல் வழியே சூரியனின் வெளிச்சம் திரைகளின் அசைவின் வழியே உட்புக அது கூட உணராத ஒரு உறக்கம் விஜய்க்கு.
“மாறா…” என்ற அவனின் தாயின் குரலில் உறக்கம் கலைய,
“ஹ்ம்ம், ம்மா. எழுந்துட்டேன்…” என்றபடி சோம்பலான குரலில் சொல்லியவன் மெல்ல எழுந்து சென்று காலை கடன்களை முடித்து குளித்து வர நேரம் ஏழரை என்றது.
“மாறா, டிபன்…”
“கமிங் ம்மா….” என குரல் கொடுத்துக்கொண்டே கல்லூரிக்கு செல்ல தேவையான பேக்கை எடுத்தவன் அதில் இரண்டாவதாக இருந்த பைலை எடுத்து பிரித்து பார்த்தவனின் முகத்தில் எந்த உணர்வும் இல்லை.
“விஜய், இந்தமுறை அட்மினிஸ்ட்ரேஷன் சைட் கொஞ்சம் உங்க ஹெல்ப் தேவைப்படுது. உங்களால முடியுமா?…” என்று கேட்டிருந்தார் அந்த கல்லூரியின் தாளாளர்.
“ஓஹ், சூய்ர் ஸார்…” என அவனும் வாக்கு கொடுத்திருக்க சொல்லியதை போலவே தன்னாலான உதவியையும் அவன் அங்கே கொடுத்திருந்தான்.
இன்னும் இருநாட்கள் கல்லூரி திறக்க. முடிக்கவேண்டிய சில பொறுப்புக்கள் இருந்தது அவனுக்கும்.
சாப்பிட்டு முடித்து கல்லூரிக்கும் கிளம்பியவன் நேராக ஸ்டாஃப் ரூமிற்கு சென்று தனது இருக்கையில் அமர்ந்தான்.
அந்த விஷயம் தன்னை பாதிக்கவில்லை என்றாலும் சற்று எரிச்சலாக இருந்தது அந்த அட்மிஷன் பேப்பர்.
இன்னும் ஸ்டாஃப்ஸ் வரவில்லை என்பதாலும், விரைவிலேயே இவன் வந்துவிட்டதளும் தனியாக அமர்ந்திருந்தவனிடம் வந்தான் ப்யூன்.
“என்ன ஸார் இன்னைக்கு நேரமாவே வந்துட்டீங்களா?…” என அவன் கேட்க,
“ஆமா வரதா…” என்றவன்,
“தலை வலிக்கும் போல இருக்கு. எனக்கு ஒரு டீ கொண்டுவாயேன்…” என்று சொல்ல,
“இந்தா வரேன் ஸார். மாத்திர எதுவும் வேணுமா?…” என கேட்க,
“ச்சே, ச்சே. டீ சாப்ட்டு வேலையை ஆரம்பிச்சா சரியாகிரும். டீ மட்டும் போதும்…” என்றவன் வரதன் கிளம்பியதும் மேஜையின் மேல் விரல்களை கொண்டு தாளமிட்டுக்கொண்டே அமர்ந்திருந்தான்.
அந்த நேரம் போனும் வர எடுத்து பார்த்தவனுக்கு இதழ்களில் ஒரு கிண்டல் சிரிப்பு. அட்டன் செய்து காதில் வைத்தவன்,
“எனக்கு தெரியும் இது உங்க வேலை தான்னு. ஆனாலும் மாமனாருக்கு ஏத்த மருமகன் தான். கேடி மாப்பிள்ளை…” என்றவனின் குரலில் இருந்த மிதமிஞ்சிய எரிச்சலையும் உணர்ந்துகொண்டான் மறுமுனையில் இருந்தவன்.
“எதை சாதிக்க இப்படி ஒரு புது ப்ளான்?…” என்று விஜய் கேட்க,
“ரொம்ப கோபமா இருக்க போல?…” என்றான் அவன்.
“ஜெகாண்ணா, எதுக்கு பதிலுக்கு பதில் கேள்வி?…” என்று இப்போது தான் இன்னும் கடுப்பானான் விஜய்.
மறுமுனையில் இருந்த ஜெகன் தான் பேசுவதை யாரும் கேட்டுவிடகூடாதே என்று மிகவும் ஜாக்கிரதையாக கவனத்துடன் பெயர் சொல்லாமலே பேசிகொண்டிருந்தான் சுற்றிலும் பார்த்தவாறு.
“இப்ப என்ன பதில் வேணும்? நாளைக்கு சென்னை ரீச் ஆகிடுவோம். நாளை மறுநாள் காலேஜ். அவ்வளவு தான்…”
“எதுக்காக இந்த புது ப்ளான் அப்டின்னு கேட்டேன்…” விஜய் விடாது அவ்விடத்திலேயே இருக்க,
“என்ன ப்ளான் பண்ணினாங்க? இங்க அப்புவை ஆளுக்கு நாலா பிய்ச்சு எடுக்காத குறை தான். போட்டு படுத்தறாங்க…” என சொல்ல விஜய்யிடம் பதிலில்லை.
“உன்கிட்ட தான்டா சொல்லிட்டு இருக்கேன்…”
“காதுல விழுகுது…” என்றவனின் பதிலில் ஜெகனுக்கு எங்காவது முட்டிக்கொள்ளலாம் போல தான் இருந்தது.
அதை எல்லாம் பார்த்தால் இவனை எப்படி வழிக்கு கொண்டுவருவது? அதிலும் தன் வீடென்றால் கூட பரவாயில்லை என திட்டியிருப்பான். ஆனாலும் அத்தனையும் விழலுக்கு இழைத்த நீர் போல தான்.
“இவனை எப்படி வீட்டுல வச்சு வளர்த்தாங்கன்னே தெரியலை?…” என ஆயிரத்தோராவது முறையாக சொல்லிக்கொண்டான் ஜெகன்.
“ண்ணா…” என்ற விஜய்யின் அழைப்பில்,
“சொல்லுடா…” என்று ஜெகன் சொல்ல,
“நான் என்ன சொல்லனும்? கால் பண்ணினது நீங்க. சொல்லவேண்டியதும் நீங்க தான். சொல்லுங்க…” என்றான் மிரட்டல் போல.
“அதான் அதான்…” என்ற ஜெகனுக்கு என்ன பேச வந்தோம் என்றதே மறந்துவிட்டிருந்தது.
“என்னாச்சு? மறந்துட்டீங்களா?…” என கேலி பேசினான் விஜய்.
“உன்கிட்ட பேசறதுக்கு என் மாமனார் மாதிரி பத்துபேரை சமாளிச்சிருவேன். முடியலடா…” என்று நொந்த குரலில் பேச,
“சரி சொல்ல வந்ததை அப்பறமா சொல்லுங்க. நான் என் வேலையை பார்க்கனும்…”
விஜய் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே வரதன் சூடாக டீயுடன் வந்துவிட்டிருக்க அதனுடன் நான்கு வடையையும் கொண்டு வந்திருந்தான்.
“ஒரு நிமிஷம்ண்ணா…” என்ற விஜய் வரதனை பார்த்து,
“டீ மட்டும் தானே கேட்டேன்? இது எதுக்காம்?…” என்று பார்க்க,
“சூடா போட்டுட்டு இருந்தாங்க ஸார். உனக்குத்தான் புடிக்குமே. அதான் வாங்கியாந்தேன்…” என்று சொல்லவும் ஒரு சிரிப்பு விஜய்க்கு.
“நான் கேட்காமலே வாங்கிட்டு வராதன்னு எத்தனைதடவை சொல்லிருக்கேன்….” என்றவன் அந்த பேப்பரை பாதியாக கிழித்து,
“இதை நீ எடுத்துக்கோ. எனக்கு ஒரு வடை போதும். வரும் போதே நல்லா சாப்பிட்டு தான் வந்தேன்…” என்று சொல்ல,
“அய்ய, இத்தன வடைய எனக்கு குடுத்துட்டா? அட சாப்பிடு ஸார்…” என்று சொல்லி தனக்கு இரண்டை மட்டும் எடுத்துக்கொண்டு சென்றான் வரதன்.
“என்ன விஜய்?…” என்று ஜெகன் கேட்கவும் நடந்ததை சொல்ல,
“மத்த எல்லார்ட்டையும் நல்லா தான இருக்க? அப்பறம் ஏன்?…” என்ற ஜெகனின் பேச்சை இடைநிறுத்திய விஜய்,
“நாளைக்கு எப்போ வரேன்னு சொன்னீங்க?…” என்றான்.
“நாளைக்கு காலையில…” என பேசவும் அதையும் பாதியில் வெட்டியவன்,
“தப்பு தப்பு. நாளை மறுநாள் காலேஜ்க்கு எப்போ வரீங்கன்னு கேட்க வந்தேன்…” என்று திருத்த,
“ஹ்ம்ம், காலையில வந்திருவோம்…”
“நான் உங்களை தான் கேட்டேன். ஓகே வாங்க, வந்த வேலையை பார்த்துட்டு போங்க. அவ்வளோ தான்…”
“விஜய், அப்பு என் பொறுப்புல இங்க படிக்க வரா. நீதான் எனக்காக…”
“இந்த காலேஜ்ல நிறைய பேர் படிக்கிறாங்க ண்ணா. சும்மா எல்லாருக்கும் காவல் காக்க முடியாது. இங்க பாடம் சொல்லிக்குடுக்கறது மட்டும் தான் என் வேலை…” என்றான் விஜய் வெடுக்கென்று.
“அவளும் உன் மேஜர் தான்…”
“இதுவும் உங்க சதி தானே?…” என்ற விஜயின் கேள்வியில் ஜெகன் திணறினாலும்,
“இல்லப்பா, அவளுக்கே இன்ட்ரெஸ்ட்…” என்று மழுப்பலாக பதில் சொல்ல,
“நம்பிட்டேன்…” என்று முடித்துக்கொள்ள பார்த்த விஜய் பின் ஒரு முடிவுடன்,
“நீங்க என்ன முயற்சி பன்றீங்கன்னு எனக்கு தெளிவா புரியுது. உங்க பேச்சுக்கு எல்லாம் உங்க பெருமை மண்டையை ஆட்ட வேண்டியது தான். என்கிட்டே அந்த வேலை நடக்காது. ஓகே…” என்றான்.
“அவளை படிக்கத்தான் விஜய் அந்த காலேஜ்ல சேர்த்தேன். ஏன் அதுவும் நல்ல காலேஜ் தானே?…”
“அப்போ அதை மட்டும் அவ செய்யட்டும். நீங்களும் பார்த்துக்கோங்க. என்னை பார்த்துக்க சொல்ற வேலையே விடுங்க. இத்தனை ஸ்டூடன்ஸ் மத்தியில அவளும் ஒரு ஸ்டூடண்ட். அவ்வளோ தான். புரியும்னு நினைக்கறேன்…” என்றவன் போனை வைத்துவிட ஜெகன் அயர்ந்து போய் நின்றான்.
“என்னங்க…” என ரஞ்சனி வந்து அவளின் தோளை தட்ட,
“ஹாங்…” என பதறி திரும்பினான்.
“என்னாச்சு? உங்களை லேசா தானே கூப்பிட்டேன். பதறிட்டீங்க?…” என்றாள் அவனின் பதட்டத்தில் திகைத்தவளாக.
“ஹ்ம்ம், ஒண்ணுமில்லை. திடீர்ன்னு தொடவும் என்னவோன்னு…” என்றவன்,
“ஆமா நீ எப்போ வந்த?…” என்றான் ஒரு படபடப்புடன்.
“இப்ப தான். வந்ததும் கூப்பிட்டேன்…” என்ற ரஞ்சனி,
“ஏன் முகமே வாடி போய் இருக்கு? யார் போன்ல? ஊர்ல இருந்து அத்தை, மாமா போன் எதுவும் செஞ்சாங்களா?…” என்று அவள் வரிசையாக கேள்வி கேட்க நல்லவேளையாக ரஞ்சனி கவனித்திருக்கவில்லை அவன் பேசியதை எல்லாம்.
ஒரு நிம்மதி பெருமூச்சுடன் ஆசுவாசமானவன் ரஞ்சனியின் கையில் இருந்த மோரை வாங்கி ஒரே மூச்சில் குடித்து முடிக்க,
“இது நான் ஜோதிக்கு கொண்டு போக எடுத்துட்டு வந்தது…”
“இப்போ என்ன? அவனுக்கு வேற கொண்டு போ…” என்று சொல்லி அவளை அனுப்ப,
“போன்ல யாருன்னு கேட்டேன். ஒண்ணுமே சொல்லலை…” என்றாள்.
“அதுவா…”
“ஒருவேளை அப்புக்குட்டி காலேஜ்க்கா? அங்க தான் பேசிட்டு இருந்தீங்களா? என்ன சொன்னாங்க?…”என்று மீண்டும் அவளாக ஆரம்பிக்க அதை கப்பென்று பிடித்துக்கொண்டவன்,
“ஆமா, காலேஜ் இல்லை. ஹாஸ்டல்ல இருந்து போன். எப்போ வரீங்க என்னன்னு கேட்டாங்க. நாம கேட்ட மாதிரி சிங்கிள் ரூம் கிடைக்குமான்னு தெரியலைன்னாங்க…” என அவன் அடித்துவிட,
“இப்போ என்ன? ரெண்டுபேர் மூணுபேர் கூட தங்கினா ஒன்னும் பிரச்சனை இல்லை. அங்கயும் போய் தனியாவே இருந்தா இவளும் இங்க நடந்ததையே தான் நினைச்சுட்டு இருப்பா. அதனால பரவாயில்லைன்னு சொல்லுங்க…” என சொல்லிவிட்டு ரஞ்சனி சென்றுவிட ஜெகனிக்கு நின்ற மூச்சு சீரானது.
“இவிங்க மத்தியில இந்த கெத்த மெய்ண்டெய்ன் பன்றதுக்குள்ள நாக்கு தள்ளுதுடா சாமி. இதுல நாளைக்கு அவனை என்னன்னு சமாளிக்கவோ?…” என்ற புலம்பலுடன் மாலை சென்னை கிளம்ப ஆயத்தமானான்.
சமந்தப்பட்டவர்களை தவிர அவர்களுடன் சம்பந்தங்கொண்டவர்களுக்கு அடுத்து என்ன என்பதிலேயே மனது சுற்றியது.
இதோ பவித்ராவின் சென்னை பயணம். வீட்டில் அத்தனை அத்தனை அறிவுரைகளுடன் ஆரம்பமாக ஜெகன் ‘கிளம்பிவிட்டோம்’ என்று விஜய்க்கு மெசேஜ் அனுப்பிவைத்தான்.
“யார் நீங்க?…” என பதில் கேட்டு அனுப்ப,
“அண்ணன். உன் அண்ணன்…” என்று பதில் அனுப்பினான் ஜெகன்.
“நீ பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் உன்னால ஒன்னும் பண்ணமுடியாது’ என்ற மீம்ஸை ஜெகனுக்கு அனுப்பிவைத்தான் விஜய்.
‘இவனுக்கிருக்கற திமிருக்கு?’ என பல்லை கடிக்கத்தான் முடிந்தது ஜெகனால்.
‘எத்தனை கஷ்டப்பட்டு அருமைநாயகத்தின் வாயடைத்து, வசந்தியிடம் மூச்சிரைக்க ஓயாமல் பேசி அத்தனைபேரையும் துளி சந்தேகம் வராமல் சம்மதிக்க வைத்து படாதபாடுபட்டு ரெண்டுபேரையும் ஒண்ணா சேர்க்க நினைச்சா இவன் கழுவற மீனுல நழுவறானே?’ என நொந்துகொண்டான்.
‘இனி அவர்கள் இருவருக்குமான போராட்டம். அவர்கள் பார்த்துக்கொள்ளட்டும். பவித்ரா குடும்பம் என்று சேர்ந்து இருந்தால் எக்காலத்திலும் இருவருக்கும் எதிர்காலம் என்ற ஒன்று இல்லாது போய்விடும். இனி பார்க்கலாம்’ என நினைத்தான்.
ஆரம்பம் என்னவோ பிரச்சனைகள் தான். ஆனால் போக போக அது கலவரமாகுமா காதலாகுமா என்பது அந்த இறைவனுக்கே வெளிச்சம்.