திடுக்கிட்டு அவனாக இருக்குமோ? இவ்வூரில் தான் இருக்கிறானோ? என்ற பயம் பிடித்தது.
பின் அவளே தேற்றிக்கொண்டாள். அன்று அவனை முதன்முதலில் பார்த்தபொழுது வேறேதோ ஒரு பாஷை பேசினானே. அரைநொடியில் அது தமிழில்லை என்பது மட்டுமே விளங்கியது.
அவள் அறிந்தவரை அவன் இங்கிருக்க வாய்ப்பில்லை. அப்படித்தான் நினைத்துக்கொண்டாள்.
அந்த கார், அது இன்னும் கண்ணை விட்டு மறையவில்லை. கண்கள் தெறிக்க அதையே வெறித்து பார்த்திருக்க உள்ளிருந்து மூன்று பெண்கள் இறங்கி காரை பூட்டிக்கொண்டு செல்லவும் தான் சற்று நிம்மதியானாள்.
அன்றைய நாள் எத்தனை சீற்றத்துடன் அந்த கார் புழுதியை கிளப்பிக்கொண்டு தன் வீட்டு வாசலில் வந்து நின்றது.
அவனை போன்ற அதே ஆக்ரோஷ கர்ஜனை எழுப்பியதோ என்னும் பிரம்மையையும், பயத்தையும் கொடுத்ததே. மறக்க கூடியதா?
வந்த வேகமும், கிளம்பிய வேகமும் இன்றும் கண்ணை விட்டு அகலவில்லை. நீல நிறத்தில் மின்னிய அந்த காரின் அழகு அவளை கவரவில்லை. மாற்றாக அவனின் மருவுருவமாக பீதியை தந்ததென்னவோ உண்மை.
‘என்ன இது? இப்படி ஏதாவது ஒன்று அவனை ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கிறதே?’ என தன்னையே கடிந்துகொண்டாள்.
“என்ன பன்ற அப்பு? இப்ப எதுக்கு இந்த நினைப்பு? அவனை மற. மற…” என்று தனக்கு தானே சொல்லிக்கொள்ள ரஞ்சனியின் காதில் தெளிவாய் விழுகவும் செய்தது.
“அப்பு இன்னும் தூங்கலையா நீ?…” என்று தங்கையை தன் பக்கம் திருப்பினாள்.
“ஹ்ம்ம், புது இடம்ல. அதான் தூக்கம் வரலை…” என்று சொல்ல அவளின் முகத்தையே பார்த்திருந்த ரஞ்சனி,
“நீ என்ன சொன்னன்னு தெளிவா கேட்டுச்சு அப்பு…” என்றவள் கை நீட்டி படுக்கையின் தலைமாட்டில் இருந்த ஸ்விட்சை போட்டு பார்க்க பவித்ராவின் முகம் பதட்டத்துடன் இருந்தது.
“மற, மறன்னு நீ தான் நின்னைச்சுட்டே இருக்க…” என ரஞ்சனி சொல்லவும்,
“ஸாரிக்கா…” என்றாள் மெல்லிய குரலில்.
பவித்ராவின் இந்த உணர்வுகள் ஓரளவு ரஞ்சனிக்குமே புரியத்தான் செய்தது. ஆனால் என்ன பிரயோஜனம்? இப்படி ஆளாளுக்கு பந்தாடுகிறார்களே?
விஜய்யின் மீதும் கரிசனம் இருந்தாலும் இப்போது இருவரின் எதிர்காலத்தை நினைப்பில் கொண்டாவது பவித்ராவை முழு உரிமையுடன் அழைத்துசெல்ல கூடாதா அவன்? என்று கோபமும் உண்டாகியது.
அவனின் கோபத்திற்கு காரணம் தன் தந்தையாக இருந்தாலுமே அதை ஏற்க அவளின் மனதுக்கு முடியவில்லை. விட்டுக்கொடுக்காமல் தான் நினைக்க தோன்றியது.
“உங்கப்பான்னதும் உனக்கு பொறுத்துக்க முடியலை. எவனோ ஒருத்தன் ரெண்டுமூணு தடவை பார்த்த உன் தங்கச்சிக்காக இறங்கி வரனும். ஆனா உங்கப்பா பார்த்து பார்த்து வளர்த்தவர் இறங்கி வரமாட்டாரு. இது எந்த ஊர் நியாயம்? சும்மா அப்பான்றதுக்காக எல்லாம் நீ ஒத்து பாடாத…” என ஜெகன் காய்ந்திருந்தான் அவளிடம்.
ஜெகன் சொல்லியதும் உண்மை தானே? கண்ணுக்கு முன்னால் பவித்ரா கஷ்டப்படுவதை கண்டு இன்னுமே வறட்டு பிடிவாதத்தில் இருப்பவரே இறங்கி வரமுடியாமல் இருக்க விஜய் மட்டும் உடனே வரவேண்டும் என்று நினைப்பதில் எந்தவித நியாயமும் இல்லை என்றுதான் தோன்றியது.
“வாழ்ந்து முடிச்சு அடுத்து பிள்ளைங்களுக்கு என்னன்னு பார்க்கிற காலத்துல இவருக்கு இளமை ஊஞ்சலாடுதாக்கும்? அப்படியே நான் புடிச்ச முயலுக்கு மூக்கணாங்கயிறும் கட்டுவேன்னு சிலித்துகிட்டு நிக்கிறாரு?…” என்று அன்று அவளிடம் பேசி தீர்த்திருந்தான்.
அத்தனை கோபம் மாமனார் மீது ஜெகனிற்கு. வயதான காலத்தில் இந்த மனுஷனுக்கு எதுக்கு இத்தனை வன்மம் என்று.
அதுவும் பவித்ராவை அழைக்க வரமுடியாது என்று விஜய் சொன்ன பிறகு ஏதோ பேச்சில் எங்கோ ஆரம்பித்து எங்கோ கொண்டுவந்து விஜய்யிடம் ரஞ்சனி நிறுத்தியிருக்க அதனோடு அவனை அவ்வளவு பேச்சும் பேசியிருக்க பொங்கிவிட்டான் ஜெகன்.
என்றும் இப்படி பேசுபவனல்ல தான். ஆனாலும் அன்றைய பேச்சு அத்தனை அதிகமாய் இருக்க ஏகத்துக்கும் பயந்து போனாள் ரஞ்சனி.
அதனைகொண்டே ரஞ்சனி தன் தந்தையை ஆதரித்து எங்குமே பேசுவதில்லை பவித்ரா, விஜய் விஷயத்தில்.
“க்கா, நீ தூங்கு. உன்னையும் எழுப்பிட்டேனா?…” என பவித்ரா கேட்க,
“இல்லடா. ஒரு யோசனை. ஒன்னு நினைச்சு அப்படியே இருந்துட்டேன்…” என்றவள்,
“சரி தண்ணியை குடிச்சுட்டு படு. காலையில நேரமே கிளம்பலைன்னா அதுக்கு உன் மாமா என்னைத்தான் கத்துவார்…” என்று படுத்துவிட்டாள்.
“க்கா, நீ ஒன்னும் நினைக்கலைல…” என எச்சிலை கூட்டி விழுங்கியபடி பவித்ரா கேட்க,
“எனக்கு உன்னை தெரியும்டி. பயத்துல நினைக்கிறதுக்கும், பாசத்துல நினைக்கிறதுக்கும் வித்யாசம். நீ நினைச்சாலும் தப்பில்லைன்னும் தோணுது…” என மனதை மறையாமல் ரஞ்சனி சொல்லவிட,
“க்கா…” என்றாள் அதிர்ந்து.
“வேற என்ன நினைக்க சொல்ற? ரெண்டுபேர்ல யாராச்சும் இறங்கி வந்து நீ சந்தோஷமா வாழமாட்டியான்னு இருக்குது அப்பு…” என்று சொல்லும் போதே ரஞ்சனிக்கு கண்கள் கலங்கிவிட,
“இந்த பேச்சு வேண்டாம்க்கா. நடக்காததை நினைக்காத. நீ தண்ணியை குடிச்சுட்டு படு…” என்று தான் படுத்து கண்ணை மூடிக்கொண்டாள்.
ரஞ்சனியும் ஒரு பெருமூச்சுடன் படுத்துவிட காலை ஜெகன் போன் செய்யும் போது தான் இவருமே கண் விழித்தார்கள்.
பின் பரபரவென கிளம்பி நால்வரும் கல்லூரிக்கு வர அங்கே அத்தனை கூட்டத்தின் மத்தியிலும் பார்வையை சுழற்றியபடி அந்த இடத்தை கவனித்துக்கொண்டிருந்தாள்.
வேடிக்கை பார்த்துக்கொடிருந்தவள் பின்னால் ஹாரன் ஒலி கேட்க திடுக்கிட்டு தன்னைப்போல் வழிவிட்டு திரும்பி பார்த்தவளுக்கு தன் கண்ணையே நம்பமுடியவில்லை.
அதே ப்ளூ கலர் கார். அதே போல ஷைனிங். இப்படித்தானே இருந்தது அந்த கண்ணாடி? அந்த காரே தானா? இல்லை அன்று மாலில் பார்த்தது போல வேறு காரா?
இப்படி யோசனைகளுடனே காரை மட்டுமே சுற்றி சுற்றி அவள் பார்த்துக்கொண்டிருக்க உள்ளிருந்தவனை சுத்தமாய் கவனிக்கவில்லை.
மீண்டும் ஹாரன் சத்தம் அவளை நடப்பிற்கு கொண்டுவர இப்போது பார்வை ஓட்டுனர் இருக்கையில் இருந்தவனை தொட்டது.
“க்கா…” என்ற சத்தத்துடன் அவனை பார்த்துக்கொண்டே பின்னால் சென்று ரஞ்சனியை தேடி அவளருகே நின்றுவிட்டாள் ஒளிந்ததை போல.
அவளின் இந்த செய்கையை கண்டும் காணாத ஒரு பாவனையுடன் கடந்தவன் காரை பார்க் செய்துவிட்டு கீழே இறங்கினான்.
மறுபக்கம் வந்து தன்னுடைய பேக்கை எடுத்துக்கொண்டவன் பவித்ராவை அழுத்தமாய் பார்த்துவிட்டு கடக்க அவனை பார்த்தபடியே அதே அதிர்ந்த பாவனையுடன் நின்றான் பரஞ்ஜோதி.
அருகே ஜெகனும் விஜய்யை பார்த்து அதிர்வதை போல சட்டென முகபாவனையை மாற்றி நிற்க அவனின் முயற்சியில் விஜய்க்கு லேசாய் சிரிப்பு வந்தாலும் ஜோதியை பார்த்ததும் ஒரு நக்கல் சிரிப்புடன் அவனை கண்ணடித்துவிட்டு அங்கிருந்து முன்னேறி சென்றுவிட்டான்.
“மாமா…” என்று கோபத்துடன் ஜோதி திரும்பவும் பதறி போனான் ஜெகன்.
“மச்சான்…” என பதட்டத்தில் பாசமாக கூப்பிட்டுவிட்ட ஜெகன் உடனே தொண்டையை கனைத்துக்கொண்டு,
“என்ன ஜோதி இவன் எங்க இங்க?…” என்று உடனே கோபம் போல கேட்டுவைத்து சமாளித்தான்.
‘போறவன் போகாம என்ன கண்ணடிப்பு வேண்டிகிடக்கு? அவசரத்துக்கு ஆவேசமா பேச கூட வரலை இவன் பண்ணிட்டு போன வேலையில’ என்று உள்ளுக்குள் புலம்பி வெளியே விறைப்பும், முறைப்புமாய் நின்றான்.
“கோவப்படாதீங்க, கோவப்படாதீங்க. இப்போ என்ன வேற காலேஜா இருக்காது. இங்க வேண்டாம்…” என்று வேகமாய் ஜெகனிடம் பேசினாள் ரஞ்சனி.
‘முடிஞ்சது. இப்படியே பேக் பண்ணிடுவா போல?’ என ஜெகன் முட்டிக்கொண்டான்.
“அவன் சரியே இல்ல மாமா. பார்த்தீங்க தானே? என்னை போயி கண்ணடிச்சுட்டு போறான். அன்னைக்கும் மண்டபத்துல வந்து வேணும்னே என்னை முட்டிக்கிட்டு நின்னான். அப்பவே யோசிக்காம விட்டுட்டேன்…” என ஜோதி தன் பங்கிற்கு பற்ற வைக்க சமாளிக்க முடியாமல் திணறி போய் நின்றான் ஜெகன்.
“என்னங்க இத்தனை பேசறோம், பேசாம நிக்கறீங்க? எனக்கென்னமோ இது சரிப்பட்டு வரும்ன்னு தோணலை?…” என்றாள் ரஞ்சனி.
விஜய்யுடன் சேர்த்துவைக்க வேண்டும் என்று ஜெகன் சொன்ன அன்று சரியென தலையை ஆட்டியவர்கள் இன்று அவனை நேரில் பார்த்ததுமே அப்படியே மாறி அவனிருக்கும் இடமே வேண்டாம் என்று சொல்ல ஜெகன் முறைத்தான் இருவரையும்.
“எனக்கும் அவனை பார்த்ததும் கோபம் தான். அதுக்காக அதுக்காக…” என்று வார்த்தைகளை தேடினான்.
“என்னங்க அதுக்காக? அப்பாவுக்கு தெரிஞ்சா அவ்வளவு தான். நீங்கதான் பாவம் தெரியாம இங்க சீட் வாங்கி அட்மிஷன் போட்டுட்டீங்க….” என்று ரஞ்சனி அவனுக்காக பாவப்பட,
“என்ன தெரிஞ்சா? அதுக்கு அவனுக்காக பயந்துட்டு இங்க இருந்து போகலாம்னு சொல்றியா? அதுவே உங்கப்பாவுக்கு அவமானம் இல்லையா?…” என்றான் ஜெகன்.
“ஆமா…” என ரஞ்சனியும், ஜோதியும் பவித்ராவை பார்த்தனர்.
“இருந்தாலும் அப்பா…” என்று இழுக்க,
“அப்பு இங்க வா…” என்று அவளை நன்றாக தூரமாகவே தள்ளி அழைத்து வந்தவன்,
“இங்க படிக்கிறதால உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே? ஏனா இங்க படிக்கத்தான் வந்திருக்கோம். யார் இருக்காங்க இல்லைன்றதா முக்கியம்?…” என்றான்.
“இல்ல மாமா…” என்று பவித்ரா தயக்கத்துடன் இன்னும் அவனை பார்த்த கிலி குறையாமல் யோசிக்க அதற்குள் நேரமாகிவிட ஜெகன்,
“டைம் ஆகிருச்சு. இன்னும் இங்க நின்னுட்டு இருக்க? உன்னோட க்ளாஸ் ரூம் என்னன்னு போய் பாரு. நாங்க கிளம்பறோம்…” என்று சொல்லி அனுப்பிவைத்தான் அவசரமாய்.
“அக்கா…”
“நான் சொல்லிக்கறேன்…” என்றவன்,
“ரஞ்சு…” என்று அங்கு நின்றே சத்தமாய் மனைவியை அழைக்க அவள் திரும்பி பார்த்ததுமே,
“கையை ஆட்டிட்டு கிளம்பு. ஈவ்னிங் உன்னை பிக்கப் பண்ண வரோம். நாளைக்கு தானே ஊருக்கு. சாயங்காலம் பேசிக்கலாம்…” என்று சொல்லி அவளை நிற்கவிடாமல் கிளம்பிவிட்டான் ஜெகன்.
“என்னங்க நீங்க, வந்து பேசறதுக்குள்ள கிளம்பிட்டா. நீங்களும் ஒன்னும் சொல்லலை…” என்று ஜெகனருகே வந்து திட்ட,
“வாயை மூடிட்டு கிளம்பு. ரூம்ல போய் பேசிக்கலாம்…” என்று அதட்ட,
“மாமா, அப்பு…”
“சொன்னது உனக்கும் தான். போய் கார்ல ஏற போறியா இல்லையா?…” என்று முகத்தை கடுகடுவென வைத்துக்கொண்டு சொல்லவுமே இருவரும் பயத்துடன் காரில் ஏறி அமர்ந்தனர்.
“க்கா, என்னாச்சு இவருக்கு?…” என பின்னால் அமர்ந்த ஜோதி ரஞ்சனியிடம் முணுமுணுக்க,
“உன் கூடத்தான வரேன். சென்னைக்கு வந்ததுல இருந்தே மனுஷன் மந்திரிச்சி விட்ட மாதிரி எப்ப சுள்ளுன்னு விழுவாருன்னே தெரியலை…” என புலம்பினாள் ரஞ்சனி.
அவர்களின் கிசுகிசுப்பு ஒன்றிரண்டாக காதில் விழுந்தாலும் கண்டுகொள்ளாமல் இருந்தவன் இன்று இதற்கொரு முடிவு கட்டவேண்டும் என்ற எண்ணத்துடன் அமைதியாக இருந்தான்.
கார் கல்லூரியை விட்டு வெளியேற பவித்ரா தன்னுடைய வகுப்பை தேடி அதற்குள் நுழைந்தாள்.
அங்கிருந்தவர்களில் மேற்ப்பட்டோர் அங்கேயே படித்திருந்தவர்கள். இப்படி புதிதாய் செர்ந்திருந்தவர்கள் சொற்பமே இருக்க அமைதியாக ஓரிடம் சென்று அமர்ந்துகொண்டாள்.
அருகருகே இருந்தவர்கள் அவர்களே தங்களை அறிமுகம் செய்துகொள்ள பவித்ராவும் பதட்டம் குறைந்து தன்னுடைய ஊர் முதலானவற்றை பகிர்ந்துகொண்டவளுக்கு இன்னுமே மனது அடித்துக்கொண்டது விஜய்யை நினைத்து.
இதோ அவள் பயந்தபடி வேக நடையுடன் உள்ளே வந்துவிட்டான் விஜயநெடுமாறன்.
வந்ததுமே அனைவருக்கும் வணக்கம் வைத்தவன் சரளமாக பேச ஏற்கனவே அக்கல்லூரியில் இருந்தவர்களுக்கெல்லாம் அவனை நன்றாகவே தெரிந்திருக்க சிரிப்போடு அவனின் பேச்சை கேட்டுக்கொண்டு இருக்க பவித்ராவோ அவனை அதிசயமாக பார்த்தபடி இருந்தாள்.
அவனின் நிதான முகமும், லேசாய் அங்குமிங்குமாய் நடந்துகொண்டே சிறு புன்னகையுடன் கையை அசைத்து அசைத்து அவன் பேசிய பாங்கும் பவித்ராவினுள் அவனை ஆழந்து கவனிக்கவைத்தது.
அத்தனைக்கும் மேலாக அவள் பார்வை தற்செயலாக அவனின் மீசைக்கடியில் புதைந்திருந்த அழுத்தமான இதழ்களில் படிய அதே நேரம் விஜய்யின் பார்வை பவித்ராவிடம் வந்து நிற்க உறைந்து போனாள்.
என்னை மறந்துவிட்டேன் இந்த உலகத்தில் நானில்லை நானில்லை
உன்னை இழந்துவிட்டால் எந்த மலரிலும் தேனில்லை தேனில்லை.
இது கனவா இல்லை நனவா என்னை கிள்ளி உண்மை தெளிந்தேன்
உன்னை பார்த்தெந்தன் தாய்மொழி மறந்தேன்