உருக்கம் – 6
பவித்ராவின் பார்வையை விஜய் கண்டுகொண்டதுமே உடனே விழிகளை தாழ்த்திக்கொண்டாள்.
அந்த வகுப்பறையில் அமர்ந்திருந்தவர்களை வரிசையாக நிதானமாக பார்வையிட்டவன் எழுந்து வந்து மேஜையின் முன்னால் சாய்ந்து நின்றான்.
அதில் முன் வரிசையில் அமர்ந்திருந்த பெண்ணை விரல் நீட்டி எழ சொல்லியவன்,
“உங்க நேம்?…” என்று சொல்ல அப்பெண்ணும் எழுந்து நின்று சொல்ல சொல்ல அதில் கவனம் இருந்தாலும் பார்வை மொத்தமும் மூன்றாம் வரிசையில் அமர்ந்திருந்தவளிடமே இருந்தது.
அவளும் அவனையும், அடுத்தது தான் தானா? என்பதையுமே கவனித்து திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டு இருந்தாள்.
எதற்கு செய்கிறான் என்று கூட தெரியாத அளவிற்கு முட்டாள் இல்லையே அவள்.
அவளின் பெயரை கேட்டு அவன் நின்ற நாள் மனக்கண்ணில் தோன்ற முகம் ஒரு நொடியானாலும் கசங்கி போனது.
“ஹேய் கேர்ள், நீ தான். இங்க என்ன தூங்கவா வந்திருக்க?…” என்றான் ஒருமையில் சத்தமாக கோபத்துடன்.
‘தன்னை தானோ?’ என்று அவள் மலங்க மலங்க விழித்தபடி சுற்றிலும் பார்த்து வைக்க,
“உன்னை தான்…” என்றான் மீண்டும் கடுமையுடன்.
மெல்ல அவள் எழுந்து நின்று அவனை பார்த்தாள். அத்தனைபேரின் முன்பும் இப்படி அவன் திட்டிவிட்டது அசிங்கமாக போக சற்று கோபமும் கூட அவளின் கண்களில்.
‘உனக்கு கோபம் கூட வருமா? வா வா’ என கேலியாக தன் இதழை வளைத்துக்கொண்டவன்,
“இதென்ன ஸ்கூலா? இப்படி திருதிருன்னு முழிக்கிற? யு.ஜி முடிச்சிட்டு தானே பி.ஜிக்கு வந்திருக்க? அப்பறம் என்ன பர்ஸ்ட் டைம் காலேஜ் வந்த மாதிரி நிக்கிற?…” என்றான் விஜய்.
அவன் வேண்டுமென்றே தன்னை பேசுகிறான் என்று தெரிந்து வாயை திறக்காமல் அவள் நிற்க,
“உன் பேர் என்ன?…” என்றான் ஒரு ஆழ்ந்த பார்வையுடன்.
‘இப்ப நீ சொல்லித்தானே ஆகனும்’ என்னும் கிண்டல் தொனித்ததோ என்பதை போல ஒரு குரல்.
“ஹ்ம்ம், ஸ்பீக்அவுட். பர்ஸ்ட் டே. இன்னும் நிறைய பேர் இன்ட்ரோவுக்கு வெய்ட்டிங்…” என்று அவளை துரிதப்படுத்த,
“பவித்ரா பழனியப்பன்…” என்றாள் அவள்.
கடுகடுத்த முகத்துடன் அவள் தன் பெயரை உச்சரிக்கவுமே ஒரு வெற்றிப்புன்னகை விஜய் முகத்தில்.
“நீ உன் பேரை மட்டும் தானே சொல்ல கேட்டேன்? அதென்ன பழனியப்பன்?…” என்றான் இன்னும் அதே கேலியோடு.
“என்னோட ஃபுல் நேம் அதுதான். பழனியப்பன் எங்கப்பா பேர்…”
“இங்க நீ மட்டும் தானே படிக்க வந்திருக்க?…” என்றவன் பேச்சில் முகம் கன்ற,
“ஓகே, உட்கார்…” என்றான் பெரியமனது பண்ணி இன்றைக்கு இது போதும் என்பதை போல.
அவன் பவித்ராவிடம் அத்தனை கடுமையுடன் நடந்துகொண்டதே அங்கிருந்தவர்களுக்கு ஒரு கிலியை உண்டுபண்ணியது.
முந்தைய மாணவர்களுக்கு விஜயின் கோபமும் தெரியும், அதே நேரம் இப்படி எல்லாம் பேசுபவனல்ல என்றும் தெரியும்.
இது ஏன்? அதுவும் முதல் நாளே என்று அவன ஆச்சர்யம் பொதிந்த பார்வையுடன் பார்க்க அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் தன் போக்கில் கவனமாக இருந்தான்.
அன்றைய வகுப்பு நேரம் முழுவதும் அறிமுகத்திலும், அடுத்து அவர்கள் என்ன செய்யவிருக்கிறார்கள் என்பதிலும், என்ன செய்தால் எதிர்காலத்தில் பயனடைய முடியும் என்பதிலும் கடக்க விஜய் கிளம்பும் நேரமும் வந்தது.
வகுப்பறையை விட்டு வெளியேற இருந்தவன் மீண்டும் உள்ளே எட்டி பவித்ராவை பார்த்து,
“பழனி…” என்றான் சத்தமாக.
அத்தனைபேரும் திரும்பி பார்க்க பவித்ராவிற்கு கடுகடுவென்று வந்தது அவன் இப்படி அழைத்தது.
“உன்னைத்தான்…” என விரல் நீட்டி அவளை சுட்டி காண்பித்தவன்,
“ப்ரேக்ல வந்து என்னை பாரு…” என சொல்லிவிட்டு அவன் செல்ல திகைப்புடன் நின்றாள் அவள்.
“பவித்ரா உங்களுக்கு ஸார் தெரியுமா?…” என்று அருகில் இருந்த விகாஷினி கேட்க,
“ஹாங், இல்லை. இல்லையே…” என்றாள் அவசரமாக.
“ஹ்ம்ம், தெரியுமோன்னு நினைச்சேன். ஏனா உங்ககிட்ட பேசினதை வச்சு சொல்றேன்…” என்றவள்,
“ப்ரெண்ட்ஸ்…” என்றாள் தன் கை நீட்டி.
“ஹ்ம்ம், ப்ரெண்ட்ஸ்…” என்று பவித்ராவும் கை குலுக்கிக்கொள்ள மற்றவர்களின் குறுகுறு பார்வை அவளை துளைத்தது.
அத்தனை பேரையும் இப்படி தன்னையே பார்க்கவைத்துவிட்டானே என்ற கடுப்பில் அவள் இருக்க விகாஷினியுடனான பேச்சும் கொஞ்சம் திசைதிருப்பியது.
முயன்று விஜய்யை தவிர மற்றதில் கவனம் செலுத்த முயல ப்ரேக்டைம் ஆரம்பிக்க விகாஷினி தான் கேட்டாள்.
“விஜய் ஸார் வர சொன்னாரே?…” என்று அவளே ஞாபகப்படுத்த பவித்ராவிற்கு தொண்டை வறண்டது.
“ஹ்ம்ம், ஆமா. மறந்துட்டேன்…” என்றும் அப்படியே இருந்தாள்.
“என்னன்னு கேட்டுட்டு வந்திரு. ஒருவேளை உனக்கு தெரிஞ்சவங்களா இருந்திருக்கலாம். அதை பத்தி கேட்க கூட கூப்பிட்டிருக்கலாம்…” என சொல்லவும் வேறு வழியின்றி எழுந்து சென்றாள்.
அவன் இருக்கும் அறை எங்கே என்று விசாரித்து செல்ல ஏற்கனவே சில ஸ்டாஃப்ஸ் அங்கே இருக்க விஜய்யை தேடி நின்றதும்,
“யாரும்மா நீ?…” என்றான் வரதன்.
“விஜய் ஸார் வர சொன்னார். அதான்…”
“உள்ள போம்மா…” என வரதன் சொல்ல அப்போதும் தயங்கியே நின்றாள்.
“உள்ள போம்மா…” என அவன் மீண்டும் சொல்ல பவித்ரா நகர்வேனா என்பதை போலவே நின்றாள்.
கையில் டீயுடன் நின்றவன் தானே உள்ளே சென்று அனைவருக்கும் தந்துவிட்டு விஜய்யிடம் அவள் நிற்பதை சொல்ல,
“உள்ள வர சொல்லு வரதா…” என்றான்.
“நான் சொல்லிட்டேன் ஸார். அந்த புள்ள அசையுவேனான்னு நிக்குது. நீயே பாத்துக்க…” என சொல்லி சென்றதும் அந்த டீயை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான்.
அங்கே கைப்பிடி சுவரில் சாய்ந்தபடி பவித்ரா நின்றிருக்க அவளின் பக்கம் சென்ற விஜய்,
“வர சொன்னா இப்படித்தான் கையை பிசைஞ்சுட்டு நிப்பியா?…” என்று அதட்டி கேட்க அவனின் குரலில் திடுக்கிட்டு திரும்பியவள் தன்னை நிதானிக்கவே சற்று நொடிகள் சென்றது.
டீயை குடித்தபடி வெளியேயும் பார்த்துக்கொண்டு அவளுக்கும் நேரம் கொடுப்பதை போல அவன் நிற்க,
“எதுக்கு வர சொன்னீங்க?…” என்றாள் இப்போது.
“இதை நீ உள்ள வந்து கேட்டிருக்கனும். உன்னை அங்க தான் வர சொன்னேன்…”
“மத்த ஸ்டாஃப்ஸ் இருந்தாங்க…”
“ஸோ வாட்? உன்கிட்ட நான் பேசத்தானே வர சொன்னேன்? ஐ மீன் இங்க நீ படிக்க வந்திருக்கிறத பத்தி…” என்று தெளிவுபடுத்த பவிதாவின் முகம் கன்றியது.
‘இவங்க என்ன நான் வேற எதோ நினைச்சு உள்ள வராம இருக்கா மாதிரி பேசறாங்க’ என்று பல்லை கடித்தபடி நிற்க,
“நான் கேட்டா பதில் வரனும். இல்லைன்னா இதுக்கும் சேர்த்து நான் தான் பேசுவேன். அப்பறம் அதை பேசிட்டான், இதை சொல்லிட்டான்னு பழி போட கூடாது…” என்று சொல்ல,
“இப்ப நீங்க உள்ள போங்க. நான் வரேன்…” என்றாள் சற்று தைரியமாக.
“பார்ரா…” என்று வியந்தவன் டீ கப்பை ஜன்னலோரம் வைத்துவிட்டு,
“ஆக, நீ இப்ப சொன்னா அதை நான் செய்யனும். இல்லையா?…” என்றான் அவளை பார்த்து சுவற்றில் சாய்ந்து நின்றபடி.
அதற்குள் போவோர் வருவோர் என்று அத்தனை பேரும் இவர்களை பார்த்துவிட்டே கடக்க சங்கடமாக போனது பவித்ராவிற்கு.
“எதுக்கு வர சொன்னீங்கன்னு சொல்லுங்க. நான் கிளம்பனும்…” என்றாள் அவனிடம் அவசரப்படுத்தும் குரலில்.
“ஏன் என்னாச்சு?…” என அவன் கேட்க,
“எல்லாரும் பார்க்கறாங்க…”
“அதனால என்ன? நான் உன்கிட்ட படிப்பை பத்தி தானே பேச கூப்பிட்டேன். நீ ஏன் வேற மாதிரி நினைக்கிற?…” என மீண்டும் விஜய் அங்கேயே நிற்க பவித்ராவிற்கு தான் விழி பிதுங்கியது.
“சரி கேளுங்க…” என்றாள் அவன் வழிக்கே வந்து.
“இங்க எதுக்காக படிக்க வந்த?…”
“இங்க நீங்க இருப்பீங்கன்னு எனக்கு தெரியாது…”
“ஓஹ், இதுவுமா?…” என்று தாடையை தடவிக்கொண்டவன்,
“அதான் இப்போ தெரிஞ்சிருச்சே. நெக்ஸ்ட்?…” என்று விஜய் கேட்டதும்,
“புரியலை…” என்றாள் உண்மைக்கும் அவன் என்ன சொல்ல வருகிறான் என உணராதவளாக.
“நான் இருப்பேன்னு தெரியாதுன்னு சொன்னியே. இப்போ நான் இருக்கேன்னு தெரிஞ்சிருச்சு. என்ன பன்றதா இருக்கன்னு கேட்டேன்…”
“என்ன பண்ணனும்?…” என பதிலுக்கு கேட்க,
“ஹ்ம்ம், இன்னைக்கு மட்டும் இவ்வளவு பேச்சு வருதே அன்னைக்கு ஊமைக்கொட்டான் மாதிரி இருந்த. ஹ்ம்ம், நீ பேசத்தான் செய்வ, அன்னைக்கு என்னையே வெளில போன்னு சொன்னவ தானே?…” என்றான் எள்ளலுடன்.
“இப்போ எதுக்கு அதெல்லாம்?…” என பீதியுடன் அவனை பார்த்தாள்.
“ப்ச்…” என்று நெற்றியில் தட்டிக்கொண்டவன்,
“உன்னை இங்க படிக்க உங்க பெருமை எப்படி அனுப்பினார்? உன்னை அனுப்ப எப்படி சம்மதிச்சார்?…”
“எப்படின்னா?…” என திகைத்தவள்,
“இப்படித்தான் நீங்க எல்லா ஸ்டூடன்ஸ்ட்டையும் பேசுவீங்களா?…” என்றாள் ஏதோ ஒரு வேகத்தில்.
கேட்டுவிட்டு ஐயோ என்ன சொல்வானோ என்று அவனையே பார்க்க விஜய்யும் தலையசைத்தவன்,
“பேர் கேட்டா நீ தான் உன் பெரியப்பா மூஞ்சியை பார்ப்பியே. அதான் இங்க என்ன பன்றன்னு பார்த்தேன். வாய திறந்தா துரத்த மட்டும் தானே தெரியும் உனக்கு. வேற பேச தெரியுமான்னு செக் பண்ணேன்…” என்றவன்,
“பரவாயில்லை நல்லா தான் பேசற. ஆனா என்கிட்டே இன்னைக்கு மாதிரி எப்பவும் பேசலாம்னு நினைக்காத. நானும் இவ்வளவு கூலா பேசமாட்டேன்…” என்று சொல்ல,
“நான் கிளம்பறேன்…” என நகர்ந்தாள்.
“ஹேய் நில்லு. பேசிட்டு இருக்கேன்…” என்றவன்,
“அதானே உனக்கு உன் குடும்ப திமிர் கொஞ்சமும் இல்லைன்னா எப்படி? இங்க பார். இங்க நான் உனக்கு யாருன்றதை தெளிவா மனசுல வச்சுக்கோ. படிக்கிற வேலையை பாரு. போ…” என்று அனுப்ப,
“இதுக்கு தான் கூப்பிட்டீங்களா?…” என்றாள் பதிலுக்கு.
“ஆமான்னா என்ன செய்யறதா உத்தேசம்?…” என முறைத்தவனுக்கு பதில் கொடுக்கமுடியாமல் அவள் தடுமாற,
“முதல்ல கண்ணை பார்த்து பேசு. இதுல நீ படிச்சு…” என்றவன் அவளை கிளம்புமாறு கை நீட்டிவிட்டு மீண்டும் தன்னுடைய இருக்கைக்கு சென்றுவிட பவித்ரா தான் சஞ்சலத்துடன் நின்றாள்.
‘கண்ணை பார்த்து பேசு’ அந்த வார்த்தை அவளை சுட்டது. இவனால் தானே? இவனால் தானே? எல்லாம் செய்துவிட்டு கண்ணை பார் என்றால்?’ பவித்ராவால் தாங்கமுடியவில்லை அவன் அப்படி சொன்னது.
கண்ணீர் முட்டிக்கொண்டு வர கைக்குட்டையால் கண்ணை துடைத்துவிட்டு அங்கிருந்து செல்பவளை ஜன்னல் வழியாக கண்டான் விஜய்.
மதிய உணவுவேளையில் ஜெகனிற்கு அழைக்க அவனோ ஏற்கனவே ரூமில் மனைவிக்கும், மச்சினனுக்கும் வேப்பிலை அடித்த களைப்பில் அயர்ந்து அமர்ந்திருந்தான்.
“சொல்லு விஜய்…” என்று எடுத்ததும் அவன் பேச ரஞ்சனியும், ஜோதியும் அதிர்ச்சியுடன் பார்த்தார்கள்.
“என்ன பண்ணிவச்சிருக்கீங்க? பேசாம வந்து அவளை கூட்டிட்டு போங்க அவ்வளோ தான்…” என்று அவன் கடுப்படிக்க,
“அதெல்லாம் உன் இஷ்டத்துக்கு கூட்டிட்டு போக முடியாது…” என்றான் இங்கே மனைவியின் மீதான கோபத்தில்.
“ண்ணா, இங்க அவ ரொம்ப கஷ்டபடுவா. கூட்டிட்டு போங்க…” என்றான் தன்மையாக.
ஆனால் விஜய் இந்தளவு அமைதியாக பேசுவதே ஜெகனிற்கு ஆச்சர்யமாக இருந்தது. அதுதானே அவனும் வேண்டியது.
இங்கே தான் இறங்கி சென்றால் இன்னும் விஜய் தன்னை கன்வின்ஸ் செய்யவே முயற்சி செய்வான் என நினைத்தவன் அதற்கு வாய்ப்பளிக்கவே கூடாதென நினைத்தான்.
“இல்லை விஜய், இனி அப்பு அங்க தான் படிப்பா. நீ ஏன் வேண்டாம்னு சொல்ற?…” என கேட்க,
“இது தான் உங்க முடிவா?…” என விஜய் கேட்க,
“ஆமா, கூட்டிட்டு வந்து சேர்த்த அன்னைக்கே கூட்டிட்டு போகவா இவ்வளவு தூரம் வந்திருக்கோம்?…”
“ஓஓஹோ, அப்ப சரி…” என்றவன்,
“அப்படியே அந்த தடி தாண்டவராயனுங்க ரெண்டுபேர்க்கிட்டையும் நான் பேசினதை மறக்காம சொல்லிருங்க…” என்று சொல்லி போனை வைத்துவிட்டான்.
“போச்சு…” என்று தலையில் கை வைக்க,
“விஜய், அந்த விஜய் தான?…” என ரஞ்சனி கேட்க,
“ஆமா, இப்போ என்ன? அவன் தான். என் தம்பிதான்…” என்றான் முறைப்புடன்.
“என்கிட்டே நீங்க மறைச்சுட்டீங்க…” என ரஞ்சனி விசும்ப,
“கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி சொன்னது தான் இப்பவும் சொல்றேன். இங்க நடந்ததையோ, விஜய்யை பார்த்ததையோ அங்க தான் அப்புவும் படிக்கிறான்றதையோ ஊர்ல போய் சொன்னீங்க நான் மனுஷனா இருக்கமாட்டேன்…”
ஜெகன் மிரட்டவும் ஜோதி ரஞ்சனியின் கையை பற்றிக்கொண்டவன் அமைதியாய் தலையசைத்தான்.
“உங்களை எல்லாம் அப்புவுக்கு அக்கா, அண்ணன்னு சொல்லாதீங்கடா. அவ வாழ்க்கைக்கு நான் மெனக்கெடற அளவுக்கு கூட உங்க வீட்டுல ஒருத்தருக்கும் அக்கறை இல்லை. இதுல வீம்புக்கும், வெட்டிக்கும் குறைச்சல் இல்லை உங்க வீட்டாளுங்களுக்கு…”
“இல்லைங்க, கோவப்படாதீங்க…” என்ற ரஞ்சனியை பார்த்தவன்,
“அன்னைக்கு நான் கேட்டப்போ ரெண்டுபேரும் வேகமா தலையை ஆட்ட தெரிஞ்சது. இப்ப என்ன அவனை பார்த்ததும் உடனே பழைய குருடி, கதவ திறடின்னு ஜிங்கு ஜிங்குன்னு அங்கயே ஆடறீங்க? தொலைச்சிடுவேன் பார்த்துக்கோங்க…” என்று விரல் நீட்டி எச்சரித்தவன்,
“மனுஷன் ஒருத்தன் வம்பாடுபட்டு இங்க கொண்டுவந்தா நோகாம இன்னொரு காலேஜாம்ல. அவ்வளவு ஈஸியா போச்சோ?…” என்று எகிற ரஞ்சனியின் பார்வையில்,
“என்ன என்ன கேட்கனும்? எதுவா இருந்தாலும் இங்கயே கேட்டு முடிச்சிரு…” என சொல்ல,
“அப்போ விஜய் இங்க தான் இருக்கான்னு…”
“என்ன?…”
“இல்ல இங்கதான் இருக்காருன்னு உங்களுக்கு முதல்லையே தெரியுமா?…” என்றாள் ரஞ்சனி.
“ஆமா, தெரியும். நான் தான் அப்புவுக்கு என்கேஜ் பண்ண போறதை இன்பார்ம் பண்ணேன்…” என்றான் அலட்டிக்கொள்ளாமல்.
“மாமா, உங்ககிட்ட இதை எதிர்பார்க்கலை…” ஜோதி அதிர்ச்சியுடன் பார்த்தான்.
“அன்னைக்கு அப்படி நடக்கும்ன்னு நானுமே எதிர்பார்க்கலைடா ஜோதி. விஜய்க்கிட்ட சொன்னா வந்து பேசி அழைச்சிட்டு போவான்னு நினைச்சேன். இப்படி பண்ணுவான்னு நானுமே நினைக்கலை…” என்றான் வருத்தத்துடன்.
“ஆனா அதுக்காக எல்லாம் அவனை விட்டுட முடியாது. இனி அவங்க வாழ்க்கைய அவங்க தீர்மானிக்கட்டும். ரெண்டு பேரும் மெச்சூர்ட் பர்சனா யோசிங்க. அவ்வளோ தான்…” என்றான்.
“அப்போ அப்புவுக்கு…”
“இதுவரைக்கும் தெரியாது. இனியும் கொஞ்சம் நாளுக்கு தெரியாமலே இருக்கட்டும். அதுதான் நல்லது. புரியுதா?…” என மீண்டும் அதட்ட தலையாட்டுவதை தவிர வேறு என்ன செய்ய முடியும் ஜோதி, ரஞ்சனியால்.
ஜெகனின் இந்த முகம் அவர்களுக்கே புதிது. இப்படி மறைத்து இவ்வளவு தூரம் கொண்டுவந்திருக்கிறானே என்று தோன்றியது.
ஆனாலும் அதை கேட்கவும் பயம். அவன் சொல்ல மட்டுமே கேட்கவேண்டியதாக இருந்தது.
மாலை வழக்கம் போல கல்லூரி முடியும் நேரம் ஜெகன் பவித்ராவை அழைக்க வந்து காத்திருக்க பவித்ரா கிளம்பி கீழே வர விஜய்யும் கிளம்பி வந்தான் அதே நேரம்.
இருவரின் பார்வையும் ஒருநொடி மோதி விலக ‘இனி அவனை பார்த்தால் கூட கண்டுகொள்ள கூடாதென்று’ பவித்ராவும், ‘இனி இவள் தன்னை கவனிக்கவே கூடாதென’ விஜய்யும் நினைத்தபடி கிளம்பினார்கள்.
எங்கிருந்தாய் இதுவரை என்னை தவிக்கவிட்டு
எதற்கு வந்தாய் தவித்திடும் துயர் துடைக்கவந்தாயோ
நடப்பதெல்லாம் எழுதியபடி நடக்கிறதோ
இருவருக்கும் பொருந்திடும்படி எழுதியதாரோ