உருக்கம் – 7
ஜெகன் மறுநாள் மாலை கிளம்பி பழனி வந்து சேர்ந்தான் ரஞ்சனி, ஜோதியுடன்.
கிளம்பும் முன்னர் பவித்ராவை பிஜியில் கொண்டு விட்டுவிட்டு கிளம்ப ரஞ்சனிக்கு தங்கையிடம் தனியே பேச அத்தனை ஆவல் இருந்தும் ஒன்றுமே பேசமுடியவில்லை.
ஜெகனின் மிரட்டல் அப்படி இருந்தது. அதிலும் தங்கையின் எதிர்காலம் என்று சொல்லியிருக்க மனதை தேற்றிக்கொண்டாள்.
ஆனால் எத்தனை நாள் இப்படி தந்தைக்கும், குடும்பத்திற்கும் தெரியாமல் இருக்க முடியும் என்ற பயமும் இருந்தது.
பவித்ரா முதல்நாள் கல்லூரி முடிந்து வந்ததும் அவளின் முகத்தையே ஆராய்ச்சியாக பார்த்துக்கொண்டே இருக்க ரஞ்சனியின் கையை நறுக்கென கிள்ளி வைத்தான் ஜெகன்.
“என்னத்துக்கு இப்படி அவளை வச்ச கண்ணு வாங்காம பார்த்துட்டு இருக்க?…” என அதட்டவும் தான் பவித்ராவும் அதை கவனித்தாள்.
“என்னக்கா?…” என்றவளுக்கு அப்போதுதான் அவர்கள் விஜய்யை பார்த்ததை நினைத்து தான் என்ன நினைக்கிறேனோ என்று பார்ப்பதாக நினைத்துக்கொண்டாள்.
“க்கா, அங்க காலேஜ்ல அவங்களை பார்த்தோம்ல…”
“ஹ்ம்ம், ஆமா. நானும் பார்த்தேனே. ஒன்னும் சண்டை போடலையே? உன்னை எதாச்சும் பேசினானா?…” என ஜோதி வேகமாய் கேட்டு ஜெகனின் ஒற்றை பார்வையில்,
“இல்ல காலேஜ்ல வச்சு எதுவும் வம்பிழுக்க முடியாதுல. அதான் கேட்டேன். நீயோ கொஞ்சம் பயந்தசுபாவம். அதான் அந்த அக்கறையில தான் கேட்டேன்…” என்று சமாளித்து ஜெகனை பார்த்து தலையசைத்தான்.
ஆனால் பவித்ராவிற்கு விஜய் தன்னிடம் பேசியதை சொல்ல வாய்வரை வந்த வார்த்தைகள் எல்லாம் மீண்டும் உள்ளே சென்றது.
இப்படி பயப்படுகிறார்களே எப்படி சொல்வது? என்று அதை அப்படியே மறைத்தாள்.
“இல்ல அதெல்லாம் இல்லை. எனக்கு பாடம் எடுக்க வந்தார் தான். ஆனா தெரிஞ்சமாதிரி காமிச்சுக்கலை…” என்று அவள் சொல்ல ஜெகன் நம்பமுடியாமல் பார்த்தான்.
ஆனால் மனைவியும், மச்சினனும் இதுவும் உங்க வேலை தானே என்பதை போல பார்த்தார்கள்.
‘கல்லூரி என்பது வரை சரி. ஆனால் பவித்ராவிற்கே வாத்தியாராக அவன் வருவான் என்று நினைக்கவில்லையே?’ அக்காவும் தம்பியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.
இப்போது புரிந்தது ஏன் பவித்ராவை மைக்ரோபயாலாஜி எடுக்க சொல்லி ஜெகன் பேசினான் என்று.
பவித்ராவிற்கும் அதில் ஆர்வம் இருக்க அதனோடு அந்த ஆர்வத்தை தூண்டிவிட்டு அந்த படிப்பின் பயன்களை எடுத்து சொல்லியவிதமும், வேகமும் ஏன் என்று இப்போது தெளிவாய் விளங்கியது.
“என்ன?…” என்றான் ஜெகன் இருவரின் பார்வையை வைத்து.
“ஒண்ணுமில்ல மாமா. சும்மா தான்…” என ஜோதி லேசாய் சிரிக்க,
“அது…” என்றவன்,
“இன்னைக்கு க்ளாஸ் எப்படி போச்சு அப்பு?…” என்றான்.
“ஹ்ம்ம், பர்ஸ்ட் டே தானே. பெருசா ஒன்னும் இல்லை. நல்லா தான் இருந்துச்சு மாமா…”
“உனக்கு விஜய் அங்க உனக்கே டீச் பண்ண வரதுல சங்கடம் எதுவுமில்லையே?…” என மீண்டும் ஜெகன் கேட்க ஒருநொடி தயங்கினாலும்,
“நான் படிக்கதான் போயிருக்கேன் மாமா. யாரா இருந்தாலும் பாடம் எடுக்க தானே வருவாங்க. அதை எல்லாம் நான் நினைக்கலை. அவர் அங்க ஒரு ஸ்டாஃப். அவ்வளோ தான்…”
அவள் சொல்லுவது சரி என்று இருந்தாலும் இப்பெண்ணிற்கு சிறு எண்ணம் கூடவா அவனை பார்த்ததும் வரவில்லை என்று கவலையாகவும் இருந்தது. அவனுக்கெங்கே தெரியும் விஜய் பவியிடம் பேசியது பற்றி.
“சரி நீ போய் ப்ரெஷ் ஆகிட்டு வா. நாளைக்கு ஊருக்கு கிளம்பிருவோம்ல. அதனால இப்போ வெளில போவோம்…” என ஜெகன் சொல்லவும் பவித்ராவும் எழுந்து அடுத்த அறைக்கு சென்றாள்.
“என்னங்க இது? இதெல்லாம் வேலைக்கே ஆகாது போல? இவ இப்படி பேசிட்டு போறா?…” என்று ரஞ்சனி கேட்க,
“வாய மூடுறியா? எப்ப பார்த்தாலும் நெக்கட்டிவா பேசிட்டு…” என்றான் எரிச்சலாக.
“இப்ப நான் என்ன பேசிட்டேன்? அப்பு சொன்னதை தான் கேட்டேன்…”
“மாமா, அக்கா கேட்கிறதுல என்ன தப்பு இருக்குது?…” என்றான் ஜோதியும்.
“ஹ்ம்ம், நல்லா கேளுடா…” என்றாள் ஜோதியோடு சேர்ந்துகொண்டு.
“என்ன என்ன தப்பிருக்குது? தப்பு தான். இந்த கல்யாணத்தோட ஆரம்பமே தப்பு தான். பார்த்ததும் பிடிக்கிற மாதிரி ஒரு சூழ்நிலையில இதுவரைக்கும் அவங்க ரெண்டுபேருமே இருந்ததில்லை. பிரச்சனைகள் அப்படி இருக்க ஒரே நாள்ல மாறிடுவாங்களா?…”
“அப்போ போக போக சரியாகும்னு சொல்றீங்களா?…”
“நிச்சயமா. விஜய்க்கு பவி மேல ஒரு அக்கறை இருக்குது. எனக்கு போன் பண்ணி கூட்டிட்டு போங்கன்னு சொல்றான். அது பவி கஷ்டப்பட கூடாதுன்றதனால. பவிக்கு விஜய் மேல ஒரு எண்ணம் இருக்கலாமோன்னு தோணுது…”
“எப்படி சொல்றீங்க?…” என அக்கா தம்பி இருவரும் ஆர்வமாக கேட்க,
“எல்லாம் ஒரு பார்வை தான். இத்தனை வருஷத்துல அவ என்னைக்குமே விஜய்யை திட்டியோ என் வாழ்க்கைய கெடுத்துட்டானோ அவ பேசினதே இல்லை…” என்று ஜெகன் விளக்க,
“ஆமா…” என்றாள் ரஞ்சனி.
“க்கா…” என ஜோதி பார்க்க,
“ஆமாடா ஜோதி. நிச்சயத்தப்பவும் அவ விஜய் வருவான்னு அத்தனை ஆணித்தரமா நம்பினா. அதோட அவ எங்கயுமே விஜய்யை இதுவரைக்கும் திட்டினதே இல்லை. நாம பேசினாலும் அமைதியா தான் இருப்பா…” என்றாள் ரஞ்சனியும்.
“ஹ்ம்ம், அதுக்கு தான் சொல்றேன். அன்னைக்கும் என்ன பேசினா விஜய்க்கு பிடிக்கலை. பிடிக்காம ஏதோ பொருள் மாதிரி அங்க போய் இருக்க முடியாதுன்னு சொன்னாளே தவிர போக மாட்டேன்னோ, இல்லை தனக்கு இஷ்டம் இல்லைன்னோ சொல்லலையே…”
“ஹ்ம்ம் புரியுதுங்க…”
“அதுக்கு தான் சொல்றேன். அன்னைக்கு விஜய் மட்டும் வார்த்தைக்கு சொல்ற என் பொண்டாடின்ற உரிமையை இப்போ நிஜமா மனசார சொன்னா நம்ம அப்பு புரிஞ்சுப்பா…”
“ம்க்கும், அவன் எங்க சொல்றது? கார்ல இருந்து இறங்கினதும் பார்த்தவன் என்னை பார்த்துல கண்ணடிச்சான்? என்னத்த உரிமையில?…” என ஜோதி புலம்ப,
“அடேய் நீ வேற?…” என்று சிரித்த ஜெகன்,
“இப்ப உன் அக்காவுக்கு சொன்னது தான் உனக்கும். இதையே பாஸிட்டிவா பாரேன். மச்சான்ற உரிமையில கூட கண்ணடிச்சிருக்கலாம்…” என்று ஜெகன் இப்போது கண்ணடித்து சொல்ல ஜோதிக்கு சிரிப்பு வந்தது.
“காப்பி அடிக்காதீங்க மாமா…” என்று சிரிக்க,
“ஹ்ம்ம், இதையெல்லாம் எப்படி யோசிக்கிறீங்க?…” என்றாள் ரஞ்சனி.
“அதுக்கெல்லாம் மூளையை தலைக்குள்ளையே வச்சிருந்திருக்கனும். உங்க அப்பா, சித்தப்பா மாதிரி அரிசி மண்டிக்குள்ள அடகுவச்சுட்டு வர கூடாது. ஒன்னுக்குமத்து நமத்து போவும்…” என்றான் கடுப்புடன்.
“இப்ப எதுக்கு எங்கப்பாவை இழுக்கறீங்க?…” என ரஞ்சனி பொங்கிக்கொண்டு வர,
“மனசாட்சி உள்ள எவனும் இப்படித்தான் இழுப்பான். ஏன் உங்கப்பா ஒன்னுமே செய்யலையா? இரக்கமில்லாம பேசாத ரஞ்சு. அன்னைக்கு அந்த நேரம் நான் தான் அங்க இல்லை. நீ இருந்த தானே? அதோட நான் வந்து பார்த்தப்போ உங்கப்பா பண்ணின காரியம்…”
ஜெகன் ஆவேசத்துடன் சொல்லி கண்ணை மூடிக்கொள்ள ரஞ்சனியும், ஜோதியும் தலையை தொங்கப்போட்டனர்.
“இப்பவும் சொல்றேன். விஜய் பன்றதெல்லாம் சரின்னு சொல்லலை. ஆனா அவன் அதை தவிர வேற என்ன பண்ணிட முடியும்? அவன் பன்றது நியாயம் தான். அதனால நான் என் தம்பி பக்கம் தான். இதுல அப்புவை கொண்டுவந்தது தான்…” என்று ஜெகன் நிறுத்த,
“நாங்களும் அதை எதிர்பார்க்கலைங்க…” என்றாள் ரஞ்சனி குற்றவுணர்ச்சியுடன்.
“யாருமே எதிர்பார்க்கலைதான். ஆனா அவன் பன்றது மட்டும் உங்களுக்கு தப்பா தெரியுது. ஏன் பன்றான்னு யோசிக்கமாட்டேன்றீங்க. என்ன மனுஷங்களோ. முதல்ல ஒரு மனுஷதன்மையோட எந்த விஷயத்தையும் பாருங்க. உறவெல்லாம் அப்புறம்…” என்றவன்,
“இப்பவும் உங்கப்பான்ற ஒரே காரணத்துக்காக மட்டும் தான் மதிச்சு பேசாம இருக்கேன். மத்தபடி ஒரு தனிமனுஷனா என்னைக்கோ அவர் மேல எனக்கு நல்ல அபிப்ராயம் போய்டுச்சு. இதை நீங்க எப்படி எடுத்துகிட்டாலும் சரி…” என்று சொல்லவிட்டு பாத்ரூமிற்குள் சென்றுவிட்டான்.
ஜோதியும், ரஞ்சனியும் ஜெகனின் இந்த பேச்சில் அதிர்ந்து போய் அமர்ந்திருந்தார்கள்.
பெண்ணை எடுத்த இடத்தில் மருமகனே இப்படி ஒருவார்த்தை பேச பிள்ளைகளானவர்களுக்கு அது பெரும் வலியை தந்தது.
“என்னக்கா இப்படி பேசிட்டாரு?…”
“ஹ்ம்ம். எனக்கும் கஷ்டமாதான் இருக்குது. சரி விடு. நீ ஊருக்கு போய் எதுவும் சொல்லிக்க வேண்டாம். மாமாவுக்காக மட்டுமில்லை. அப்புவுக்காகவும்…”
“நான் இருந்திருவேன். நீ உன் வாயை கட்டிவை…” என்ற ஜோதி,
“இந்த விஷயம் மட்டும் அப்பாவுக்கு தெரியும் போது என்ன நடக்குமோ?…” என்றான்.
“என்ன நடக்கும்? அவர் தானே அப்புவை விஜய்யை வந்து கூட்டிட்டு போக சொன்னாரு. இப்ப மாமா சொன்ன மாதிரி ரெண்டுபேரும் ஒத்துபோய்ட்டா விஜய்யே அப்புவை அழைச்சுப்பார் தானே? அப்ப அப்பா சொன்னது தானே நடக்குது? பாசிட்டிவ்…” என்று ரஞ்சனி சொல்ல,
“அய்ய…” என்றான் ஜோதி.
“என்ன இன்னும் என்ன டிஸ்கஷன்? கிளம்பலையா? அப்ப நான் அப்புவை மட்டும் வெளில கூட்டிட்டு போகட்டுமா?…” என ஜெகன் வந்து நிற்க,
“இல்ல கிளம்பி தான் இருக்கோம். இதுவே போதும்…” என்று ரஞ்சனி சொல்ல,
“ஹ்ம்ம்ம், நான் ட்ரெஸ் மாத்திட்டு வரேன்…” என மீண்டும் சென்றுவிட்டான் ஜெகன்.
“உன் மாமா ஏன் இப்படி டென்ஷனா இருக்காருன்னு இப்பத்தான் தெரியுது. அந்த விஜய் காத்து இவருக்கும் ஒட்டிக்கிச்சு. எப்ப பார்த்தாலும் முறைச்சுட்டே…” என ரஞ்சனி புலம்ப,
“இதுவும் காதுல விழுந்திடாம. இல்லைன்னா அதுக்கும் வச்சு செய்வார். ஒரு மச்சான் வெளில நின்னு உரண்டையை இழுத்தா, இன்னொரு மச்சான் வீட்டுக்குள்ளையே பன்றாரு. ஆக மொத்தம் ரெண்டுபேரும் ஒத்த நினைப்பாளுங்க…”
“என்னடா ஜோதி, மச்சான்னு எல்லாம் பேச ஆரம்பிச்சுட்ட?…”
“வேற வழி? இப்பவே சொல்லி பழகிக்கனும். எப்போ என்ன செய்வாருன்னு தெரியாதே? அதான்…” என்றான் விவரமாக.
“ஹ்ம்ம், பொழைச்சுக்குவ…” என்று சிரித்தாள் ரஞ்சனி.
அதற்கு மறுநாள் இவர்கள் கிளம்பிவிட பவித்ரா தன் அறையை எடுத்துவைத்து ஒழுங்குபடுத்த ஆரம்பித்தாள்.
ஒருவாரம் சென்றிருந்தது அவள் கல்லூரியில் சேர்ந்து. சேர்ந்த முதல்நாள் விஜய் அவளிடம் தனியே பேசியது.
அதன் பின்னர் இருவருமே தாங்கள் முடிவெடுத்து கொண்டதை போல ஒருவரை ஒருவர் அறிந்துகொண்டதை போலவெல்லாம் நடந்துகொள்ளவே இல்லை.
அதிலும் விஜய் மிக கவனமாக இருந்தான். பவித்ராவை தனியே அழைத்து பேசியவனை அங்கிருந்தவர்கள் பலரும் விசாரிப்பதை போல கேட்டுவைக்க எரிச்சலானது அவனுக்கு.
ஸ்டாஃப்ஸ் ரூமில் விஜய் ஓய்வாக இருந்த நேரம் தொட்டு தொட்டு பேச்சு பவித்ராவிடம் வந்து நின்றது.
“என்ன விஜய் ஸார், ந்யூ அட்மிஷன் ஸ்டூடன்ஸ் எல்லாம் உங்களுக்கு தெரிஞ்சவங்க போல?…” என விரிவுரையாளர் சுசீலா சாதாரணம் போல கேட்க அதனை தொடர்ந்து அடுத்தடுத்து சிரித்தபடி பேச ஆரம்பித்தனர் மற்றவர்களும்.
அத்தனை இலகுவில் இப்படியான பேச்சில் சிக்கிவிடுபவன் அல்ல விஜய். அதிலும் மேனேஜ்மென்ட்டில் நல்ல செல்வாக்கானவனும் கூட.
பாடம் எடுப்பதை ஒரு பக்தியுடன், விரும்பி நேசித்து செய்பவன். அவரவருக்கு ஒரு காதல் என்றால் இவனுக்கு சொல்லித்தருவதில் காதல். அப்படியே அவனின் தந்தையை போல என்று பாராட்டுவார் கல்லூரியின் தாளாளர்.
சொல்லி தருவதில் அத்தனை எளிமையாகவும், இலகுவில் புரிந்துகொள்ளும்படியும் சொல்லிக்கொடுப்பதில் வல்லவன். அப்படியிருக்க அனைவருக்குமே பிடிக்கும் தான்.
ஆனாலும் அவன் பேச்சு, சட்டென முகத்தை காண்பித்துவிடும் விதம் எல்லாம் அவனிடம் மற்றவர்களை கிண்டலாய் பேச யோசிக்கவைத்துவிடும்.
அதனாலேயே அவனின் மேல் சிறு பொறாமையும் இருக்கும். ஆனாலும் காட்டிவிடமுடியாதே? ‘உனக்கு ஏன் எரியுது?’ என நேரடியாகவே கேட்டுவிடுபவன் விஜய்.
இப்போது இப்படி அத்தனை நேரம் பவித்ராவுடன் பேசியபடி அங்கேயே டீயை எடுத்து சென்று குடித்தது எல்லாம் அங்கிருந்தவர்களை வியக்க வைத்தது.
“காலேஜ்ல யாரும் வந்த வேலையை பார்க்கறதில்லை போல? யார் என்ன பன்றாங்க, யார் யாரோட பேசறாங்கன்னு தான் கவனிக்கிறீங்க போல? உங்ககிட்ட படிக்கிற ஸ்டூடன்ஸ் தான் பாவம்…” என்றவன்,
“என்ன கணேஷ் ஸார்? இந்த வெகேஷன்ல அவுட்டிங் போயிருந்தீங்க போல? பேமிலியோடவா?…” என நக்கலாக கேட்க அதுவரை விஜய்யை கேலி பேசிக்கொண்டிருந்த கணேஷ் திருதிருவென விழித்து வைத்தான்.
சென்றிருந்தது பேமிலியுடனோ, நண்பர்களுடனோ அல்லவே. விஜய்யை பார்த்தவன்,
“உங்களுக்கு எப்படி?…”
“அன்னைக்கு நானும் என் ப்ரெண்ட்ஸ் கூட அதே ரெசார்ட் வந்திருந்தேன். தற்செயலா உங்களை பார்த்தேன். ஆனா நீங்க யாரையுமே கவனிக்கலையே…” என்றதும் அவனின் முகம் ப்யூஸ் போன பல்ப் போல ஆகிவிட்டது.
“என்ன கணேஷ் வொய்ப், குழந்தைங்க எல்லாம் மாமியார் வீட்டுக்கு அனுப்பிட்டதா போன் பன்றப்போ சொன்னீங்க?…” என்று இன்னொருவர் சிரிக்க,
“ஓகே, எனக்கு அடுத்த க்ளாஸ்க்கு டைம் ஆகிடுச்சு…” என்று எழுந்துகொண்டான் விஜய்.