‘கிராதகா நான் மட்டுமாடா உன்னை கேட்டேன்? எல்லாரையும் விட்டுட்டு என்னை புடிச்சு இழுத்துட்டியே’ என்னும் விதமாய் விஜய்யை பார்க்க அந்த அறையின் வாசல் வரை சென்ற விஜய்,
“எல்லாரும் தெரிஞ்சுக்க கேட்டீங்க தானே? ஆமா தெரிஞ்ச பொண்ணு தான். இப்போ தெரிஞ்சிருச்சா? இதனால இந்த மந்த் சேலரில டென் பர்சென்ட் எக்ஸ்ட்ரா கிடைச்சிரும். ஆமா தானே?…” என நக்கலாக சொல்லிவிட்டு அவன் சென்றுவிட,
“இவன்கிட்ட போய் பேசுவீங்களா? பாருங்க எப்படி பேசிட்டு போறான்னு…” என்று கணேஷ் பொரிய,
“நாம கேட்டது தப்பில்லையா என்ன? சிலவிஷயங்கள் பர்சனல். ஏன் இதே ஸ்டாஃப் ரூம்ல நாம யாருமே ஸ்டூடன்ஸ்கிட்ட படிப்போ, வார்னிங்கோ இப்படி தனியா பேசினதில்லையா? புதுசா நடக்கற மாதிரி என்ன பேச்சு? இதெல்லாம் ரொம்ப தப்பு…” என்று விஜய்க்கு ஆதரவாக ஒருசிலர் பேச அங்கே சிறு சலசலப்பு.
இதை எதையும் கண்டுகொள்ளாதவன் தன் வேலையில் கவனமாக இருந்தான். பவித்ராவிடம் பாடம் சம்பந்தமாக மட்டுமே பேசுபவன் வேறு எந்தவகையிலும் அவளிடம் நெருங்கவில்லை.
அதுவே அவளுக்கும் ஒரு நிம்மதியை தர படிப்பில் கவனம் செலுத்தினாள். சந்தேகம் எதுவும் இருந்தாலும் தயங்காமல் அவனிடம் நேரடியாக கேட்கவும் செய்ய எந்த பாவலாவும் இல்லாமல் விஜய்யும் அவளுக்கு விளக்கம் கொடுப்பான்.
ஐந்து மாதங்கள் கண்ணை மூடி திறப்பதை போல கடந்து சென்றிருந்தது. தினமும் வீட்டில் இருந்து அழைப்பு வந்துவிடும் பவித்ராவிற்கு. வசந்தி கேள்வி கேட்டே மகளை ஒருவழியாக்கிவிடுவார்.
அன்றும் வசந்தி இரவு போன் செய்திருக்க எடுத்து பேசியவள் முதலில் தந்தையிடம் பேசி, பார்வதி, ஜோதி என்று வந்து கடைசியாக தாயிடம் பேசினாள்.
“என்கிட்டே பேச உனக்கு இவ்வளவு நேரமா?…” என்று தான் ஆரம்பித்தார்.
“ம்மா, நீங்க உள்ள இருந்ததா பெரிம்மா சொன்னாங்க. அப்பா தான் போன் பண்ணினார் உங்க நம்பர்ல இருந்து…”
“அதுக்கு மட்டும் என் நம்பரு உங்கப்பாவுக்கு?…” என்று நொடித்த வசந்தி,
“என்ன பண்ணிட்டு இருக்க? மத்தியானம் என்ன சாப்ட்ட?…” என்றார்.
“ட்ரெஸ் அயர்ன் பண்ணிட்டிருக்கேன்ம்மா. நாளைக்கு காலேஜ்க்கு போட்டுட்டு போறதுக்கு…”
“ஹ்ம்ம், அப்படியாச்சும் வேலையை பாரு. பொழுது போகும்…” என்றார்.
பவித்ரா ஒன்றும் பேசாமல் அலைபேசி திரையை பார்த்தபடி இருக்க அவளுடன் இருந்த விகாஷினி நாசூக்காக எழுந்து வெளியே சென்றுவிட்டாள்.
வகுப்பு தோழியான விகாஷினியே இப்போது அவளின் அறைக்கும் இடம் பெயர்ந்திருந்தாள். வேறொரு அறை தான் தனக்கு வாங்கியிருந்தாள்.
பவித்ராவும் அங்கேயே தங்கி இருக்க அவளுடன் சேர்ந்து தாங்கிக்கொள்ள இன்சார்ஜிடம் பேசி அங்கேயே சேர்ந்துகொண்டாள் விகாஷினி.
இந்த ஐந்து மாதத்தில் அவளின் குடும்பத்தினர் பேச்சுகளை ஓரளவு கணித்திருந்தாள் அவள். அதனைக்கொண்டே அவள் வெளியேறிவிட இங்கே பவித்ரா பேச்சில் கவனம் செலுத்தினாள்.
“என்னடி சத்தத்தையே காணும்?…” என்றார் சத்தமாக.
“சொல்லுங்கம்மா கேட்டுட்டு தான் இருக்கேன்…” என்றாள்.
“இன்னைக்கு சாப்பாடு நல்லா இருந்துச்சா?…”
“ஹ்ம்ம் நல்லா இருந்துச்சும்மா….” என்றாள் சற்றே சலிப்புடன்.
தினமும் இந்த கேள்வி வந்துவிடும். பதில் சொல்ல யோசித்தாள் அதற்கு நாலு திட்டு விழும். அதற்கு பயந்தே சொல்லிவிடுவாள்.
“இன்னைக்கு நைட்டுக்கு என்ன செஞ்சிருந்தாங்க?…”
“தோசைம்மா…”
“நீ எத்தனை தோசை சாப்பிட்ட?…”
“ம்மா, ப்ச் நல்லா தான் சாப்பிட்டேன்….”
“ம்க்கும், கேள்வி கேட்டா உடனே முணுக்குன்னு வந்துருவியே. ஆமா ஒழுங்கா படிக்கிறியா? இன்னும் ரெண்டு நாள்ல லீவ்ன்னு சொன்ன. எங்கயும் வெளில போறியா?…”
“இல்லம்மா…”
“அந்த பழக்கம் வச்சுக்காத. காலேஜ் போனோமா ரூம்க்கு வந்தோமா படிச்சோமான்னு இருக்கனும். உன் மாமா அம்புட்டு பாடுபட்டு உன்னை காலேஜ்ல சேர்த்துவிட்டிருக்காரு. அவரு பேர் சொல்ற மாதிரி படிக்கனும்…”
“ஹ்ம்ம்…”
“என்ன குரலு உள்ள போவுது? உன் பெரியப்பா சம்மதிக்கவே மாட்டேன்னு சொல்லியும் ரஞ்சனி புருஷன் தான் பேசி சரிக்கட்டினாரு. பார்த்து, அவரோட மதிப்ப காப்பாத்தற மாதிரி நடந்துக்க. இல்லன்னா உன் அக்காவுக்கு தான் பிரச்சனை. அவளாச்சும் ஒழுங்கா பிழைக்கட்டும். புரிஞ்சு நடந்துக்க…” என்றார் தன் தினசரி பேச்சை அப்படியே ஒப்பித்தவராக.
கேட்டு கேட்டு பவித்ராவிற்கு மனப்பாடமே ஆகிவிட்டது. அடுத்து என்ன சொல்வார் என்பது வரை வசந்தியின் பேச்சு அத்துப்படி.
“சரிங்கம்மா, நான் தான் எங்கயும் போறதில்லையே. எங்கயும் போகலை…” என்றுவிட்டாள் பவித்ரா.
“ஹ்ம்ம், நான் சொன்ன உனக்கு குத்தமா தான் தெரியும். உன் ஒருத்திய பெத்துட்டு இப்ப வரைக்கும் நெருப்ப கட்டிட்டு இருக்கேன். ஒரு நிம்மதி இல்ல…” என்று சொல்ல பவித்ராவிற்கு மரத்து போன உணர்வு தான்.
இத்தனை மாதத்தில் இருமுறை விடுமுறை நாளில் ரஞ்சனியுடன் வந்து சென்றிந்திருந்தார் வசந்தி.
“ஊரா இது?…” என்று பேச ஆரம்பித்துவிட்டார் வந்ததுமே.
அதனைக்கொண்டே எங்கும் செல்ல கூடாதென உத்தரவு. அதற்கு முன்பும் பவித்ரா எங்கும் செல்வதில்லை.
கல்லூரி, பிஜி. அதன் கீழே உள்ள சின்ன பார்க் என்றே பொழுது போக வசந்தி வந்துவிட்டு சென்ற பின்னர் வெளிலே தோழியுடன் செல்லவேண்டும் என்பது கூட சுத்தமாக விருப்பமின்றி போனது.
“என்ன வேணும்னாலும் சொல்லு, நாங்க வந்து வாங்கி குடுக்கறோம். வெளில போகனுமா நாங்க வரும் போது போய்க்கோ. அவ்வளோ தான்…” என்று காது தீய தீய மகளை தீட்டியிருந்தார்.
ஜெகனிற்கு கடுப்பாகிவிட வசந்தியிடமே நேரடியாக கேட்டுவிட்டான் அவன் பொறுக்கமாட்டாமல்.
“இத்தனை கட்டுப்பாடு போடறதுக்கு பேசாம நீங்களே கூடவே இருந்து காலேஜ் கூட்டிட்டு போய்ட்டு கூட்டு வந்திருங்க அத்தை. இப்படி சொல்றது மிச்சமா போகும். இங்கயே ஒரு வீடு பார்க்கட்டா? மாமா சந்தோஷப்படுவார்…” என்று பேச,
“அதுக்கில்லை மாப்பிள்ளை. ஏற்கனவே நம்ம மேல ஒரு பேச்சைக் போச்சு. இனியாச்சும் சூதானமா இருக்கனும்ல. அதுக்காக தான் சொல்றேன். எல்லாம் நாம குடும்ப கௌரவத்துக்காக தான். ஏற்கனவே ஒருத்தனால ஊர் சிரிச்சு போச்சு…” என்று இரக்கமின்றி மகளை வைத்துக்கொண்டே அவர் பேச,
“இன்னொருதடவை உன் சித்தி வராங்கன்னு கூட கூட்டிட்டு வந்த பாதிவழில கார் ரிப்பேருன்னு எங்கியாச்சும் இறக்கிவிட்டுடுவேன் உன்னையும் சேர்த்து. பேச்சா பேசறாங்க…” என்று கத்திவிட்டான் ரஞ்சனியிடம்.
அதன் பின் அடுத்தமுறை ரஞ்சனியோடு சத்தமின்றி சென்னை வந்துவிட்டு சென்றிருந்தான்.
வந்த நேரம் தன் மகளையும் அழைத்து வந்திருந்தவன் பவித்ராவுடன் மூன்று நாள் இருந்து எங்கெல்லாம் செல்லவேண்டும் என்று சுற்றிவிட்டு தான் ஊருக்கு திரும்பினான்.
அப்போது வெளியே சென்றது. அதன் பின்னர் மீண்டும் தன் அறைக்குள் முடங்கிக்கொண்டாள்.
விகாஷினி எத்தனையோ முறை அழைத்தும் அவள் மறுத்துவிடுவாள். வசந்தியின் பேச்சுக்கள் ஒவ்வொன்றும் அவளை எத்தனை காயப்படுத்துகிறது என்பது புரியாமல் அவர் பேசியிருக்க முன்பை விட இன்னுமே கஷ்டமாக தான் இருந்தது அவளுக்கு.
அதிலும் முன்பு நடந்ததற்கு தான் தான் காரணம் என்பதை போல அத்தனையையும் தன் தலைமேல் ஏற்றும் தாயை என்ன சொல்வது? எதையும் சொல்லியும் பழக்கமில்லை.
ஒன்று அவள் பேச்சு கேட்கபடவோ மதிக்கப்படவோ மாட்டாது. இன்னொன்று உனக்கு என்ன திடீரென இத்தனை பேச்சு? எங்கிருந்து இந்த துணிச்சல்? என்று அதையும் ஏதேனும் பேசுவார்கள் என்றே இருந்துகொண்டாள்.
மௌனம், அவளுக்கு பழக்கமில்லை என்றாலும் நாளடைவில் அவளை அதற்கு பழக்கிவிட்டனர் என்றே சொல்லலாம்.
என்றாவது இலகுவான நேரங்களில் பேசி சிரிப்பதோடு சரி. முக்கிய நிகழ்வுகள், முடிவுகள் எதிலும் எங்கும் தன்னை பார்க்கமாட்டார்கள் குடும்பத்தில்.
தெரிந்தவிஷயம், பழகிய ஒன்று. ஆனாலும் நிச்சயத்தில் தான் பேசிய பின்பு, இங்கு படிக்க என்று தனியே வந்த பின்பு அவளை பேசும் பேச்சுக்கள் இன்னும் அதிகமான சுமை தான் அவளுக்கு.
ஐயோ இந்த வார்த்தைக்கு என்ன மாதிரியான பேச்சுகள் வருமோ என்று பயந்து பயந்து வார்த்தைகளை விழுங்க ஆரம்பித்திருந்தாள்.
ஐந்து மாதம் ஆகிற்று. நிச்சயம் முறிந்து, சென்னை வந்த பின்பு அருமைநாயகம் இன்றுவரை ஒருவார்த்தை அவளிடம் பேசவில்லை.
இன்றும் வழக்கம் போல பேச்சுக்கள் தான். பேசி முடித்ததும் எந்த வேலையையும் செய்ய தோன்றாமல் படுத்துக்கொண்டாள்.
முக்கியமாக வசந்தி ஞாபகப்படுத்தியது அடுத்த வாரத்தில் இருநாட்கள் விடுப்பெடுத்து வரும்படி சொல்லியிருக்க பரிட்சை வேறு நெருங்கி இருந்தது. எப்படி லீவ் எடுக்க என்று யோசனைகள் தாம்.
“ரெண்டு நாள் லீவுக்கு இவ்வளவு யோசிப்பியா நீ?…” என விகாஷினி கூட கிண்டல் செய்தாள்.
“நான் யுஜில கூட ஒரு நாள் லீவ் கூட எடுத்ததில்லை…” என்ற பவித்ராவை ஆச்சர்யத்துடன் பார்க்க,
“நிஜமா, லீவ் எடுக்க அவசியமில்லை. அதே நேரம் தோணவும் தோணாது. காலேஜ் லீவ் குடுக்குதே. அதுவே போதும்னு இருந்திருவேன். இப்போ இவ்வளவு யோசிக்க காரணம் எக்ஸாம்ஸ் வருது. அதான்…” என்று சொல்ல,
“நீ யுனிக் பீஸ் போ. எல்லாத்துலையும் சைலன்ட்…” என்று சிரித்தாள்.
“சரி இன்னைக்கு ஆஃப் டே தான். கிளாஸ் முடியவும் ஹெச்.ஓ.டியை பார்த்து பேசிரு. நானா இருந்தா லீவ் போட்டுட்டு தான் இன்பார்மே பண்ணுவேன். நீ செய்யமாட்டியே…” என்று சொல்ல தலையசைத்தாள் பவித்ரா.
“நான் கீழே கேண்டீன்ல வெய்ட் பன்றேன். நீ பேசிட்டு வா. எனக்கு தலை வலிக்குது. போய் ஒரு டீ குடிச்சா தான் பெட்டரா இருக்கும்…” என்று விகாஷினி கிளம்பிவிட ஓரளவு மாணவர்கள் எல்லாம் சென்றிருந்தனர்.
ஸ்டாஃப் ரூம் நோக்கி செல்ல அங்கே ஹெச்.ஓ.டி இல்லாமல் போக திரும்ப இருந்தவள் பார்வை விஜய்யின் இருக்கையில் அவனுக்கெதிரே அமர்ந்திருந்த அஷ்வினி மேல் பதிந்தது.
அதிலும் விஜய்யிடம் அவளின் பேச்சு. உடனே பார்வையை திருப்பிக்கொண்டு வாயிலை நோக்கி செல்ல போக அவளை போகவிடாமல்,
“உள்ள வா…” என்றான் அவளை பார்த்ததுமே விஜய்.
அஷ்வினியும் திரும்பி பார்க்க இவள் எங்கே இங்கே என்று முகத்தை சுண்டினாள் உடனே.
“ஓகே மேம், நீங்க கிளம்புங்க…” என்று விஜய் சொல்லவும் வேறு வழியின்றி அஷ்வினியும் நகர்ந்துவிட்டாள்.
செல்லும் போது திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே செல்ல அவள் செல்லும் வரை பார்த்திருந்தவன் பின் பவித்ராவின் பக்கம் திரும்பினான். இன்னும் அவள் ஒரு படபடப்பிலேயே தான் இருந்தாள்.
அவர்களை அவள் பார்த்த நேரம் அஷ்வினி சொன்னது அப்படி. கேட்டதுமே உள்ளுக்குள் தடதடக்கும் உணர்வு.
அது ஒருவேளை முதல்முறை இப்படி ஒரு பெண் ஆணிடம் தன்னுடைய விருப்பத்தை சொல்லியதால் இருக்கலாம் என்று அவளே நினைத்துக்கொண்டு விஜய்யிடம் திரும்பினாள்.
“இங்க என்ன பன்ற? இன்னைக்கு ஆஃப் டே தானே?…” என்றான் அவனும் வெகு மாதங்களுக்கு பிறகு ஒரு தனிப்பட்ட பேச்சை போல.
அவளின் அதிர்ந்த முகமும் அலைகழிப்புடன் தவிக்கும் விழிகளும் அவனுக்கு பரிதாபம் தர அவனறியாமல் ஒரு அக்கறை அதில் வெளிப்பட்டது விஜய் குரலில்.
‘இதை சகஜமா எடுத்துக்க கூட முடியாம என்னடா பொண்ணை வளர்த்து வச்சிருக்கீங்க பெருமைகளா?’ என அவளின் குடும்பத்தை உள்ளுக்குள் திட்டினான்.
“ஹெச்.ஓ.டியை பார்க்க வைத்தேன். அப்போ தான் இங்க நீங்க?…” என்று தயங்கி வார்த்தைகளை நிறுத்தவும் விஜய்க்கு லேசாய் சிரிப்பு வந்தது.
அவளின் இந்த தடுமாற்றத்தில் சற்று சுவாரஸியம் கூட ஒரு உல்லாச மனநிலைக்கு வந்தவன்,
“ஹ்ம்ம், இங்க நாங்க? கம்ப்ளீட் பண்ணு பழனி…” என்றான் கிண்டலுடன்.
சற்றுமுன் இருந்த ஒரு எரிச்சல் மனநிலை மாறி ஏதோ ஒரு நிம்மதி மனதில் இதமாய் பரவியது.
“என் பேர் பழனி இல்ல ஸார்…” என்றாள் அவள். சுறுசுறுவென கோபம் பொங்கியது அவனின் விளிப்பில்.
“நீ தானே அன்னைக்கு உன் பேர்ன்னு சொன்ன?…” என்று அவன் ஞாபகப்படுத்த அவளுக்கு புரிந்து போனது.
‘என்னவோ கூப்பிட்டுக்கொள், எனக்கென்ன?’ என்றுவிட்டாள். இப்பொது என்ன என்பதை போல அவள் பார்க்க,
“ஓகே, அதை விடு. நீ எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனுமே…” என கேட்டதும் அதிசயமாய் அவனை பார்த்தவள்,
“சொல்லுங்க ஸார்…” என்றாள்.
“இந்த லெட்டரை இப்போ போனாங்க தானே அஷ்வினி. அந்த மேம்கிட்ட குடுக்கனும். என்ன பார்க்கற? இது ப்ரப்போசல் லெட்டர் தான்…” என்று சொல்லி ஒரு மடித்த காகிதத்தை காண்பிக்க சஞ்சலத்துடன் அவனை பார்த்தாள் அவள்.
“என்ன மாட்டியா? இந்த ஹெல்ப் கூடவா செய்ய மாட்ட?…” என்ற கேட்க முடியாது என்பதை போல பின்னால் நகர்ந்தாள்.
“ஏன்?…” என்றவனின் கூர்மையான பார்வையில் அவன் என்ன கேட்க வருகிறான் என்று தெளிவாக தெரிந்துவிட்டது.
“நான் இங்க படிக்க தான் ஸார் வந்திருக்கேன். இதெல்லாம் செய்ய வைக்காதீங்க…”
“ஹ்ம்ம், எவ்வளவு கோவம்?…” என அவன் சிரிக்க,
“ஒன்னும் இல்லை. எந்த கோவமும் இல்லை. நான் கிளம்பறேன்…” என்று திரும்பியவள் பின் கொஞ்சமும் யோசிக்காது அவனின் கையில் இருந்த காகிதத்தை எட்டி பிடித்து பறித்து துண்டுதுண்டாய் கிழித்தவள்,
“நான் எப்படி இங்க படிக்க வந்திருக்கேனோ அது மாதிரி நீங்க பாடம் எடுக்க மட்டும் வாங்க. இந்த அட்வைஸ் எல்லாம் மத்தவங்களுக்கு தான். உங்களுக்கு இல்ல அப்படித்தானே?…” என்று கோபத்துடன் கத்திவிட்டு அவள் செல்ல திகைத்து போய் புருவன் உயர்த்தினான் விஜய்.
“நீங்கலாம் என்ன டீச்சிங் ஸ்டாஃப்?…” என போகும் போது தன் தலையில் அடித்துக்கொண்டு சென்றுவிட விஜய்யின் முகத்தில் அப்பட்டமான புன்னகை.