உருக்கம் – 8
பவித்ரா பழனிக்கு வந்து இரண்டு நாட்கள் ஆகிறது. வந்த வேலை முடிந்து அன்று சென்னை கிளம்புவதாக சொல்ல வசந்தி விடவில்லை.
மதியம் இரண்டுமணி ஆகியும் அங்கே யாரும் இன்னும் உணவு உண்ணவில்லை வசந்தி செய்த ஆர்ப்பாட்டத்தால்.
“நாளைக்கு ஒரு நாள் லீவ் போட்ட இன்னும் ரெண்டுநாள் சேர்ந்தாப்ல இருக்கலாம்ல. அப்படி என்னடி அவசரம்?…” என்று வசந்தி கேட்க,
“ம்மா, சொன்னா புரிஞ்சுக்கோங்கம்மா. அங்க போய் படிக்கனும்மா…” என்றாள் அவள்.
“ஏன் அப்படியே படிச்சு பட்டத்தை வீட்டு வாசல்ல மாட்ட போறியாக்கும்? கூட ரெண்டுநாள் இங்க இருந்தா குறைஞ்சா போய்டுவ? அந்தளவுக்கா உனக்கு இந்த வீடு ஆகாம போய்டுச்சு….” என்றவர்,
“எனக்கென்னமோ நீ படிக்க போனமாதிரியே இல்ல. இங்க இருந்து தப்பிச்சா போதுமன்ற மாதிரில இருக்கு?…” என்று பேச பவித்ராவிற்கு முணுக்கென்று கண்ணீர் எட்டி பார்த்தது.
“என்னை இன்னும் என்னலாம் சொல்லுவீங்கம்மா? எல்லாரும் சேர்ந்து தானே அனுப்பினீங்க?…” என்று கேட்டுவிட்டாள்.
“அதானே பார்த்தேன், என்னடா இது இருக்க சொன்னா இருக்கறதில்லை? எதுத்து வேற பேச படிச்சிருக்க, இன்னும் என்னெல்லாம் புதுசா பழகி இருக்க? இதுக்குத்தான் தலைப்படா அடிச்சுகிட்டேன் போக விட கூடாதுன்னு. யார் கேட்டா?…” என்று அவர் இஷ்டத்திற்கு பேச ஆரம்பித்துவிட்டார்.
“கூப்பிட மருமகன் வரேன்னு சொல்லியும் தனியா பஸ்ல வந்துப்பேன்னு கிளம்பி வந்திருக்க. என்ன ஒரு அகம்பாவம் உனக்கு?…” என்றும் பேச,
“ம்மா, மாமா தான் தனியா வந்து பழகனும்னு சொன்னாங்க. அதான் வந்தேன்…”
“என்ன சொன்னாங்க? சொன்னா வந்துடுவியா? இதுவரைக்கும் உன்ன தனியா வர விட்டிருப்போமா? முன்ன படிச்ச காலேஜ்லயும் உன் அண்ணன் தான வந்து கூட்டிட்டு போகவும், கொண்டுபோய் விடவுமா இருந்தான். இதென்ன உனக்கு தன்னமிஞ்சினதனம்?…”
“வசு, அவளை விடேன். ஊருக்கு வந்த பிள்ளையை இப்படியா பேசுவ? அவ பரிட்சை வருதுன்னு போய் படிக்கனும்னு தான சொன்னா?…” என்றார் பார்வதி.
“நீங்க சும்மா இருங்கக்கா, இப்படி அவளுக்கு ஏந்துக்கிட்டு பேசி பேசித்தான் இந்தளவுக்கு வளர்ந்து நிக்கிறா. நீங்க இதுல தலையிட்டு பேசாதீங்க…” என்று முகத்திலடித்ததை போல சொல்லிவிட பார்வதி உடைந்து போனார்.
“ம்மா நீங்க பேசாம இருங்க. உங்களுக்கு என்ன வந்துச்சு?…” என்றுவிட்டான் ஜோதி படக்கென்று.
அத்தனை கோபம் அவனுக்கும். வசந்தி கொஞ்சமும் புரிந்துகொள்ளாமல் படுத்துகிறார்களே என்று. இன்னும் பழையவற்றையே திரும்ப திரும்ப பேசி தன் தாயை குற்றம் சொல்ல சுருக்கென்று வந்துவிட்டது.
“ஜோதி?…” என வசந்தி அதிர்ந்து பார்க்க,
“மன்னிச்சுக்கோங்க வசும்மா, நானும் ரொம்ப பொறுமையா இருந்துட்டேன். தப்பு நடந்துச்சுதான். ஆனா முழுக்க முழுக்க அம்மாவே காரணம்ன்ற மாதிரி பேசிட்டே இருக்கீங்க. இத்தனை வருஷம் நான் வாயை திறந்தேனா இல்லையே….” என்றவன் பவித்ராவின் கையை பிடித்து தன்னருகே நிறுத்தி,
“நாங்க மூணுபேரும் என்னைக்குமே வித்யாசமா வளரலையே. உங்களுக்கு மட்டும் எப்போ இருந்து இந்த வித்தியாசம் தெரிய ஆரம்பிச்சது. எங்கம்மாவை பேச கூடாதுன்னு சொல்றீங்க?…”
“இல்ல ஜோதி, நான் அந்த அர்த்தத்துல சொல்லலை…” வசந்தி வருத்தத்துடன் பேச,
“நீங்க சரியான அர்த்தத்துல சொன்னாலும் நீங்க எப்படி எங்கம்மாவை பேச கூடாதுன்னு சொல்லலாம்? ஒரு விஷயத்தால எல்லாமே மாறிடுமா? இத்தனைக்கும் அன்னைக்கு எங்கம்மா என்ன நடந்ததுன்னு சொல்லிருந்தாங்களே. சும்மா சும்மா குத்திகிட்டே இருக்கீங்க…” என்றவன்,
“ப்பா, நீங்க அம்மாவை இப்படி வச்சிருக்கறதால தான் வசும்மா கூட மதிக்காம பேசறாங்க…” என்று சொல்ல அருமைநாயகம் பல்லை கடித்தார்.
“ஐயோ என்ன வார்த்தை சொல்லிட்ட ஜோதி? அக்காவை நான் என்னைக்குமே பிரிச்சு பார்க்கலையே…” என்று வசந்தி சொல்ல,
“ஆனா பேசிட்டீங்களே? இத்தனை வருஷம் பேசினீங்க தானே? கோவத்துல ஒருதடவை ரெண்டுதடவை வரலாம். ஆனா எப்போ பார்த்தாலும் சுருக்குன்னு சொல்லி சொல்லி திரும்ப சமாதானமா பேசினா எல்லாம் சரியாகிடுமா?…” என்றான்.
எதற்கும் பார்வதி வாயை திறக்கவில்லை. பேசட்டும் என்றிருக்கவில்லை, இல்லை கணவன் என்ன சொல்கிறார் என்றும் இருக்கவில்லை.
ஆனால் இப்படி ஒரு பேச்சு தன்னைக்கொண்டு என்ற வரும் போது ஆற்றாமையுடன் அமர்ந்துவிட்டார்.
“பெரிம்மா…” என்றபடி பவித்ரா அவரை பிடித்துக்கொள்ள,
“ஒன்னுமில்லடா…” என்று அவளின் கன்னத்தை பிடித்து பேசினார்.
“அக்கா…” என வசந்தி வர,
“ம்மா, நீங்க என்னை என்ன வேணும்னாலும் பேசுங்க. அன்னைக்கு தாலி கட்டும் போது நான் சரின்னு சொல்லித்தான அவங்க கட்டினாங்க. என்னை சொல்லுங்க. பெரிம்மா அங்க என்ன பண்ணாங்க? இன்னொருவார்த்தை நீங்க பேசினீங்க…” என்று பவித்ரா பொறுமையிழந்து கத்திவிட்டாள்.
“எல்லாரும் ஒன்னு சேர்ந்து என்னை பேசறீங்களா? அப்போ இங்க நான் யாராம்? எனக்கு என்ன உரிமை இருக்கு? அக்கான்ற உரிமையில என் மக வாழ்க்கை இப்படி ஆகிடுச்சேன்ற ஆதங்கத்துல தான அப்படி பேசிட்டேன்…” என்று வசந்தி அழ,
“அது ஆதங்கம் இல்லம்மா. நம்பிக்கை இல்லாமை. என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லை. படிக்கும் போதே மறுக்காம கல்யாணம் பண்ணிகிட்டவன்னு என்னை வேற மாதிரி நீங்க தப்பா நினைக்கிறீங்க. அதுதான் இப்படி பேச வைக்குது…” என பவித்ரா சொல்ல,
“ஏன்டி உன் வாழ்க்கை இப்படி ஆகிருச்சேன்ற ஆத்தாமையில கூட ரெண்டு வார்த்த பேசிருப்பேன். அதுவும் உனக்காக தான பேசினேன்?…” என்றார் வசந்தி.
“அதுக்கு என்ன வேணா பேசுவீங்களா? என்னமோ அவர் என்னை…” என்றவள் வார்த்தைகளை நிறுத்திக்கொள்ள,
“போதும், இதென்ன வீடா என்னது? ஆளாளுக்கு நாட்டாமை பன்றீங்க? இருக்கனும்னா இருக்கட்டும், போகனும்னா போகட்டும். அதுக்கு இத்தனை பேச்சா?…” என்று அருமைநாயகம் கத்த அவரை பார்த்தான் ஜோதி,
“அப்பா, அம்மாவை வசும்மா பேசறாங்க…”
“பார்த்துட்டு தான இருக்கேன். செஞ்சதை தான சொல்றா வசந்தி, போ போ. அவளை இருக்க சொல்லு. வந்து பேசனும்…” என்றவர் எழுந்து வெளியே கிளம்பிவிட்டார்.
அவர் சென்றதும் பத்து நிமிடம் சென்றது நிதானமாவதற்கே. ஒரு முடிவோடு தங்கையை பார்த்த ஜோதி,
“அப்புக்குட்டி நீ கிளம்பு….” என்றான் வேகமாய்.
அத்தனை கோபம் ஜோதிக்கு. தாயை இப்படி பேசியிருக்கிறார் வசந்தி. ஆனால் கொஞ்சமும் அதை பற்றிய வருந்தாமல், அப்படி பேசாதே என்றும் சொல்லாமல் இதென்ன பேச்சு என்று அவனுக்கே எரிச்சல் வந்துவிட்டது.
“ஜோதி? மாமா என்ன சொல்லிட்டு போனாங்கன்னு பார்த்த தானே?…” என்று வசந்தி மீண்டும் பேசினார்.
“ஒன்னும் சொல்லலையே. எதுவும் பேசவேண்டாம்னு சொன்னாங்க. அவ்வளோ தான? எனக்கு அதான் கேட்டுச்சு…”
“ஆனா நீ அவளை கிளப்ப சொல்ற? எதுனாலும் மாமா வரட்டும்…” என்றார் பிடிவாதமாக.
“அப்பு, நீ போக கூடாது. பெரியப்பா வரவும் என்ன சொல்றாருன்னு கேட்டுப்போம்…” என்று மகளிடம் சொல்ல ஜோதிக்கு ஏதோ புரிந்தது.
“வசும்மா, நீங்க பேசினவரை போதும். நான் வந்து பேசறேன். வந்த ரெண்டு நாளும் நீங்க அப்புவை எப்படி பேசினீங்கன்னு பார்த்துட்டு தான் இருந்தேன். கொஞ்சமும் அவ சந்தோஷமா இல்லை. போதும். நிம்மதியா போய் படிக்கவாச்சும் செய்யட்டும்…. என்றவன்,
“அப்பு போய் உன்னோட லக்கேஜை எடு…” என்று கிளப்பினான்.
எந்த நேரம் என்று கூட பார்க்கவில்லை. நண்பனுக்கு போனை போட்டு உடனே சென்னைக்கு ஒரு டிக்கெட்டை போட சொல்லியவன் பவித்ராவை கிளப்பிக்கொண்டு வந்துவிட்டான் பஸ் ஸ்டாண்டிற்கு.
“என்னண்ணா நீங்களும்?…” என்று பவித்ரா கேட்க,
“விட்டா உன்னை வசும்மா பேசியே இருக்க வச்சிருவாங்க. அவங்களுக்கு நீ படிக்கிறதே பிடிக்கலை. சும்மா சும்மா அப்பாட்டையும் சித்தப்பாட்டையும் சொல்லிட்டே இருக்காங்க. இப்ப கூட வேண்டாம்னு சொல்லத்தான் உன்னை இருக்க வைக்கிறாங்க…”
“என்னன்னு பேசறாங்க?…”
“சென்னை வேண்டாம். கூட்டிட்டு வாங்கன்னு. படிச்சு என்ன பண்ண போறான்னு பேசி பேசி கரைச்சுட்டு இருக்காங்க. இப்ப நீ சாமி கும்பிட வந்ததை வச்சு பிரச்சனை பண்ணி உன்னை இங்கயே இருக்க வச்சாலும் ஆச்சர்யம் இல்லை…” என்றான்.
“அதுக்குன்னு இப்போவா? அன்டைம்ல ரீச் ஆகும்ண்ணா….” என்றாள்.
“ஒன்னும் பயமில்லை. நீ போ, நான் ஜெகன் மாமாட்ட சொல்லி அவங்க ப்ரென்ட் யாரையாச்சும் வந்து பிக்கப் பண்ண சொல்றேன். பயப்படாத…” என்றவன் ஜெகனிற்கு அழைக்க அழைப்பு சென்றுகொண்டே தான் இருந்தது.
“சரி பஸ் கிளம்ப போகுது. நீ சாப்பிடவும் இல்லை. லஞ்ச் போற வழில மறக்காம வாங்கிக்கோ…” என்றவன் பழங்களும், தண்ணீர் பாட்டிலும் வாங்கி தந்து பஸ் ஏற்றி அனுப்பிவிட்டான்.
பஸ் கிளம்பியதும் ஜோதி வீட்டிற்கு வர மகன் மேல் கோபத்துடன் இருந்தார் அருமைநாயகம்.
“என்ன ஜோதி? என்ன பழக்கம் இது? நாங்க எல்லாரும் இருக்கும் போதே அவளை அனுப்பி வச்சிருக்க?…”
“ப்பா நீங்க பார்த்தீங்க தானே? வசும்மா என்ன பேசினாங்கன்னு?…”
“பேசினா? பேசினா என்னடா பண்ணுவ? பொண்ண பெத்தவ அவ அப்படித்தான் பேசுவா. அதையும் செய்ய கூடாதோ?…” என்றார்.
“சரிங்கப்பா, நான் பண்ணினது தப்பாவே இருக்கட்டும். அந்த நேரம் கூட நீங்க ஒன்னும் சொல்லலையே. நீங்க எதாச்சும் பேசியிருந்தா நான் ஏன் இதை செய்ய போறேன்? அப்பு படிக்கனும்னு தானே போறா? அதையும் வேண்டாம்னு சொன்னா?…”
“ஆமா, வேண்டாம்னு தான் சொல்லலாம்னு இருந்தோம். எனக்கே இது சரிவருமான்னு மனசுக்குள்ள ஒரு குறுகுறுப்பு. அதான் சரின்னு அவளை இருக்க சொல்லிட்டு பொறுமையா நாளைப்பின்ன பேசலாம்னு இருந்தேன்…”
“என்னப்பா நீங்க? என்ன சொல்றீங்க?…” என ஜோதி அதிர்ச்சியானான்.
“அன்னைக்கு மருமகன் சொல்லிட்டாருன்னு தான் மறுக்கமுடியலை. அப்பறமா மெதுவா பேசி நிப்பாட்டிடலாம்னு இருந்தேன். இன்னைக்கும் நீ என் முகத்தை கூட பார்க்காம மாத்தி மாத்தி பேசிட்டு கொண்டுபோய் விட்டுட்டு வந்துட்ட. அப்போ இந்த வீட்டுல மூத்தவன்னு நான் எதுக்கு?…” என்றார்.
“ப்பா…”
“என்னடா அப்பா? ஆளாளுக்கு முடிவெடுக்கறீங்க? பார்த்த தானே உன் தங்கச்சி பேசினதை? என் முன்னால பேசவே யோசிக்கிறவ இன்னைக்கு எப்படி பேசினான்னு. இதுக்குத்தான் வேண்டாம்னு சொன்னேன்…” என்று சொல்ல ஜோதிக்கு ‘என்னடா இது?’ என்று ஆயாசமாக இருந்தது.
ஆனால் ஒன்றுமட்டும் புரிந்தது. தான் பவித்ராவை கொண்டு சென்று விடவில்லை என்றால் அவளை அனுப்பியிருக்கவேமாட்டார்கள் என்று.
“எதுக்கு நான் வரதுக்குள்ள அவசரமா அனுப்பின? நான் தான் வந்து பேசறேன்னு சொல்லிருந்தேன்ல?…”
“ப்பா, மாமாவுக்கு அப்புவை அனுப்பலைன்னு தெரிஞ்சா என்ன நினைப்பாரு?…” என்றான்.
“அவர் சொல்லும் போது சரின்னு சொன்ன எனக்கு அவர எப்படி சமாளிக்கன்னு தெரியாதா? உன்னை எல்லாம்?…” என்று பேச ஜோதிக்கு ஜெகன் சொல்லியவை எல்லாம் எத்தனை உண்மை என்று விளங்கலானது.
‘என்ன மனிதர்கள் இவர்கள்?’ என இந்த இரண்டு நாளில் வெறுத்துவிட்டான். அந்தளவிற்கு பவியை பேசிக்கொண்டே இருந்தார் வசந்தி. அருமைநாயகமும் பேசவிட்டு வேடிக்கை பார்த்தார்.
நித்தமும் போனில் பேசியதையே நேரிலும் பேச கொஞ்சமும் அத்தனை மாதம் கழித்து மகள் வந்திருக்கிறாளே என்கிற வாஞ்சை துளியும் இல்லாததை போல நடந்துவிட்டு அத்தனையும் பாசம் என்று பசப்புகிறார்களே என்று தான் எரிச்சலானான்.
இப்போது முழுமனதாக அவனுக்கு பவித்ராவை விஜய்யிடம் சேர்ப்பித்துவிடவேண்டும் என்னும் எண்ணமே வந்துவிட்டது.
அவன் கோபக்காரனே தவிர வேறு எந்த தவறும் அவனிடத்தில் இருப்பதை போல தெரியவில்லை ஜோதி விசாரித்தவரை.
தங்கையை கல்லூரியில் சேர்த்த பின்னர் ஜெகன் சொல்லி விஜய்யை ஏற்றாலும் அதன் பின்னர் தன்னாலான அளவுக்கு அவனை விசாரித்திருக்க திருப்தி தான்.
இப்போது குடும்பத்தினர் பேச பேச அமைதியாக பார்த்தவன் ஓரமாய் அமர்ந்திருந்த பார்வதியை பார்த்து,
“ம்மா, எனக்கு சாப்பாடு எடுத்து வைங்கம்மா…” என்றான்.
அருமைநாயகத்திற்கு இன்னும் கோபம் மகன் இவ்வாறு நடந்துகொண்டதில். அவனை உறுத்துவிழித்தவர்,
“பார்த்துக்கறேன்…” என்று சொல்லி உள்ளே சென்றுவிட்டார்.
உள்ளே வந்த பார்வதி மகனிடம் மெல்லிய குரலில் பவித்ராவை கேட்க அவனும் வசந்தி கேட்கட்டும் என்றே பேசினான்.
“இந்நேரம் அவ பழனியை தாண்டிருப்பாம்மா. நிம்மதியா இருக்கட்டும். இனி அப்பு அடுத்து வரும் போது இதே வேலையை காட்டனும்னு நினைச்சா நான் பார்த்துக்கறேன். நீங்க வருத்தப்படாதீங்க…” என்று சொல்ல வசந்திக்கு கோபம் பொங்கியது.
“ஏன் ஜோதி என்னவோ மாதிரி பேசற?…” என்றார் அவர்.
“வசும்மா இனி அப்பு விஷயமா நீங்க மாமாக்கிட்ட பேசிக்கோங்க. நான் பதில் சொல்லமாட்டேன்…” என்றவன்,
“ஏன் அவளை அவ புருஷனோட அனுப்பறதுக்கு சரின்னு தான சொன்னீங்க? இப்போ என்ன படிக்க கூட அனுப்பமாட்டேன்னு? ஏன் திடீர்ன்னு?…” என்றான்.
“உனக்கென தெரியும்? பொம்பளைங்க நாங்க தான அக்கம்பக்கத்துல இருக்கறவங்க பேச்சை காதுகுடுத்து கேட்கனும். என் காதுபடவே நக்கலா பேசறாங்க. எல்லாத்தையும் விட்டுட்டு படிக்க அனுப்பிருக்கோம்னு எவ்வளவு பேசறாங்க…” என்று வசந்தி அழ,
“அவங்க பேசறதெல்லாம் குப்பை. அதை நீங்க அப்பு மேல வந்து கொட்டுவீங்களா? அம்மான்னா எப்படி இருக்கனும்? நீங்க அப்படியா இருக்கீங்க? பேசறாங்கலாம், இவங்க அதனால அனுப்பமாட்டாங்கலாம்….” என பொரிய,
“ஜோதி…” என மகனை தடுத்தார் பார்வதி.
“பாவம்மா அப்பு, அங்க இருக்கும் போதும் அந்த பொண்ணை போன்ல அவ்வளவு பேசறாங்க. எங்க போறா வரா? இவங்க பேச்சை கேட்டுட்டு காலேஜ், பிஜின்னு தானே இருக்கா? அவ வந்த நேரத்துல கூட அவளுக்கு பிடிச்சதை செஞ்சுவச்சு பக்கத்துல வச்சு பார்த்துக்கனும்னு தோணலையே வசும்மாவுக்கு. அதை கேட்க கூடாதாம்மா?…”