“என் பொண்ணுமேல எனக்கு பாசமில்லன்னு சொல்றியா?…” என்றார் வசந்தி தேம்பிக்கொண்டே.
“இருந்துச்சு தான். ஆனா அது எல்லாம் வெறுப்பா மாறிடுச்சு. நீங்க என்னலாம் பேசினீங்கன்னு நானும் கேட்டேனே அன்னைக்கு. எனக்கே எத்தனை கஷ்டமா இருந்துச்சு. நானுமே இத்தனை நாள் மழுமட்டையா இருந்துட்டேன்…” என்றவன்,
“ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன் வசும்மா. இப்படியே அவளை எல்லாரும் தள்ளி தள்ளி நிறுத்தி பேசிக்கிட்டே இருந்தா ஒருகட்டத்துல எல்லாரையும் வெறுத்துடுவா அப்பு. அன்னைக்கு மொத்தமா அவ இல்லைன்னு உக்கார்ந்து கதற போறீங்க…” என சொல்லிவிட,
“ஜோதி…” என்று பார்வதி அதட்டி அவனின் பேச்சை நிறுத்தினார்.
“ம்மா, எனக்கு ரூம்க்கு சாப்பாடு கொண்டுவாங்க. வந்த பிள்ளையை சாப்பிட வச்சு கூட அனுப்பாதவங்க எல்லாம் என்ன?…” என்று சொல்லிவிட்டு அடுக்களையை விட்டு அவன் வெளியேற திக்கென்று நின்றார் வசந்தி.
அப்படி அவர் நிற்பதை பார்க்க பார்வதிக்கே பாவமாக போக பேசுவோமா வேண்டாமா என்று யோசனையுடனே அவர் நிற்க வசந்திக்கு என்றைக்கு அதெல்லாம் இருந்தது?
“பார்த்தீங்களாக்கா ஜோதி என்ன சொல்லிட்டு போறான்னு?…” என அவரின் தோளில் சாய்ந்துவிட்டார் வசந்தி.
பார்வதியும் அவரை பேசி பேசி சமாதானம் செய்தவர் அவரை சாப்பிட வைத்துவிட்டு மகனுக்கு எடுத்து வந்தார்.
அந்த நேரம் தான் ஜெகனும் அவனுக்கு அழைத்தான் ‘என்ன விஷயம்?’ என கேட்பதற்காக.
முதலில் நடந்த பிரச்சனைகளை எல்லாம் வரிசையாக சொல்லியவன் கடைசியாக பவித்ராவை பஸ் ஏற்றி அனுப்பியதை சொல்ல,
“முட்டாளாடா நீ?…” என்று சீறினான் ஜெகன்.
“மாமா…”
“என்ன மாமா? இந்த நேரத்துக்கு அனுப்பினா அவ போக மிட்நைட் ஆகும். இப்படி பண்ணியிருக்க? ஏன் நீ பேசாம எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கவேண்டியது தானே? இல்லை என்கிட்ட சொல்லியிருந்தா நானே வந்து கூட்டிட்டு போயிருந்திருப்பேன்…”
“ஸாரி மாமா, நான் ஒரு படபடப்புல…” என்று மெல்லிய குரலில் சொல்ல,
“ஹ்ம்ம், ஓகே, ஓகே. நீ அப்புவுக்கு போன் போடு. நான் பேசிக்கறேன்…” என்றவன்,
“விஜய்க்கு சொல்லுவோம். ஆனா கேட்கனுமே அவன்?…” என்றபடி போனை வைத்துவிட்டான்.
பின் ஜோதி பவித்ராவின் போனுக்கு அழைத்து அழைத்து பார்த்தவன் ரிங் போய்க்கொண்டே இருக்க என்னவோ என்று பயந்து போனான்.
“இதென்ன அப்பு போன் இங்க இருக்குது?…” என்று அங்கே மாடிவளைவின் கீழே டேபிளில் கேட்பாரற்று இருந்த அவளின் மொபைலை எடுத்து பார்க்க வெளியே எட்டி பார்த்தான் தாயின் குரலில்.
“ம்மா, அப்பு போனா?…” என்று பதட்டத்துடன் வர,
“ஆமாப்பா…” என்று பயத்துடன் பார்த்தார் பார்வதி.
“வசந்திக்கு தெரிஞ்சா போச்சு…” என்றும் சொல்ல,
“ம்மா, சத்தம் போடதீங்க? வசும்மா எங்க?…” என்றான் அவன்.
“இப்பத்தான் முன்வாசலுக்கு போனா…”
“சரி ரூம்க்கு வாங்க…” என்று உள்ளே சென்றவன் மீண்டும் ஜெகனுக்கு அழைக்க அவன் விஷயம் கேட்டதும் தலையில் கைவைக்காத குறைதான்.
“என்னடா? கிளம்பும் போது எல்லாம் எடுத்தாச்சான்னு பார்க்கமாட்டியா? இந்த பொண்ணும் கூடவா போனை மறந்துபோகும்?….” என்றான்.
“மறக்காம என்ன செய்வா? அப்பு இங்க வந்தன்னைக்கு காலேஜ்ல இருந்து ப்ரென்ட் கால் பன்றா. பக்கத்துலையே நின்னு யாரு என்னனு கேட்டு அவ போன் எடுத்தாலே சந்தேகமா பார்க்கிற மாதிரி கூடவே நிக்கிறாங்க. சும்மா சும்மா போனை என்னத்துக்கு பார்க்கறன்னு பேச அப்புறம் அவ போனை தொடவே இல்லை….”
“என்னடா அவங்க அம்மா?…” என்று எரிச்சலானான் ஜெகன்.
“ப்ச், போங்க மாமா….” என்று சலிப்புடன் சொல்ல,
“ஓகே எந்த ட்ராவல்ஸ்?…” என கேட்டு அதன் நம்பரை வாங்கி தர ட்ரைவரின் நம்பர் கிடைத்ததும் பவியிடம் பேசினார்கள்.
“போன் கொண்டுபோனதே மறந்துட்டேன் மாமா. அங்கயே இருக்கட்டும். எனக்கு அந்த போன் வேண்டாம்…” என்றாள் அவள்.
“சரி நீ ஒன்னும் பயப்படவேண்டாம். தெரிஞ்ச ட்ரைவர் தான். உன்னை பத்தரமா கூட்டிட்டு போவார். நான் எல்லாம் பேசிட்டேன். நல்லவேளையா நம்ம ஊர்க்காரர் தான்…” என்று சொல்ல,
“ஹ்ம்ம், சரிங்க மாமா…” என்றாள்.
“அப்பறம் நீ அங்க போய் ரீச் ஆகற நேரம் உன்னை என் ப்ரென்ட் பிக்கப் பண்ண வருவான். நானே உனக்கு பேசறேன்…” என்றும் சொல்ல சரி என்று சொல்லி போனை வைத்துவிட்டாள்.
அதன் பின்னர் அவ்வப்போது ட்ரைவரின் எண்ணிலிருந்து அவளுக்கு அழைத்து பேசிக்கொண்டார்கள் வீட்டினர்.
வழக்கம் போல வசந்தியும், அருமைநாயகமும் அவளிடம் கோவித்துக்கொள்ள பழனியப்பன் தான் விஷயம் கேள்விப்பட்டு நொடிந்து போனார்.
வசந்தியின் முகம் பார்த்து பேசாமல் இருக்க அதற்கு ஒருபாடு அழுது தீர்த்த வசந்தி அதற்கும் பவித்ரா தான் காரணம் என்று வந்து நின்றார்.
மாலை வரை பவித்ராவிடம் பேசிக்கொண்டிருந்த ஜெகன் இரவு தான் விஜய்க்கு அழைத்தான்.
முன்பே அழைத்துவிட்டால் அவன் மறுத்து அவனே மாற்று ஏற்பாடு செய்தாலும் செய்வான் என்பதால் கடைசி நேரம் சொல்லிக்கொள்ளலாம் என்று இருந்துவிட ஜெகனுக்கு இயற்கையும் துணைபுரிந்தது.
எப்போதும் பேசுவதை போல முதலில் போனை போட்டு இலகுவாக என்ன செய்கிறாய் என்று பேசிய ஜெகன் பவித்ரா தனியாக கிளம்பி வந்துகொண்டிருப்பதாக சொல்ல விஜய் கண்டுகொள்ளவில்லை.
“என்ன டெஸ்ட்டோ என்னவோ? உடனே கிளம்பனும்னு மத்தியான பஸ்ல கிளம்பிருக்கா. அன்டைம்ல ரீச் ஆகறதால அவளோட ப்ரென்ட் வந்து பிக்கப் பண்ணிக்கறேன்னு சொல்லிருக்கா போல. ஹ்ம்ம், அங்க போய் சேர்ற வரை எங்களுக்கு நிம்மதி இல்லை…” என்று பேசினான் ஜெகன்.
“இதை சொல்ல தான் கூப்பிட்டீங்களா ண்ணா?…” என விஜய் கேட்டதும் புரையேறியது ஜெகனிற்கு.
“ஏன்டா, ஒரு மனுஷன் தம்க்கட்டி தடுமாறாம பேசினா பேசறதுக்காவது மதிப்பு குடுத்து ஓஹ் அப்படியான்னு கேட்டு பேசமாட்டியாடா? இப்படி கப்புன்னு பாயிண்டை பிடிச்சா நான் என்ன செய்வேன்?…” என்று சொல்லி இரும விஜய்க்கு சிரிப்பு.
“ஆஹான், அப்போ இன்னதுன்னு சொல்லிட்டு பேசனும் நீங்க….”
“அதுக்குன்னு பொசுக்குன்னு கண்டுபிடிப்பியா நீ?…” என எகிறினான் ஜெகன்.
“என்கிட்டே நீங்க வேற என்ன எக்ஸ்பெக்ட் பண்ணுவீங்க? எல்லாம் தெரியும்…” என்று அவன் சொல்ல ஜெகன் பெருமூச்சு விட்டான்.
“ண்ணா, லைன்ல இருக்கீங்களா?…” என்று விஜய் கேக்க,
“இருந்துதானே ஆகனும்…” என சொல்லும் பொழுதே ஏதோ சத்தம் கேட்டது.
“விஜய் என்ன இது தண்ணி கொட்டற மாதிரி சத்தம்?…” என்று சிரிக்க,
“ஹ்ம்ம், பால்கனி லாக் பண்ண வந்தேன். மழை ஊத்துது ஈவ்னிங்ல இருந்தே. எங்கயும் போக முடியாம வீட்டுலையே இருக்கேன்…” என்று சொல்லவுமே திக்கென்றானது ஜெகனிற்கு.
“டேய், அப்ப அப்பு?…”
“அன்டைம்ல அனுப்பினது உங்க தப்பு…” என்றான் சற்றும் யோசிக்காமல்.
“விஜய் ப்ளீஸ், இப்படி பேசாத. இன்னும் நாலுமணி நேரத்துல அப்பு சென்னை ரீச் ஆகிடுவா. மழையில எங்க போவா?…” என்று பதறினான்.
“அதுக்கு நான் என்னண்ணா செய்ய முடியும்? நீங்க தான் அவளோட ப்ரென்ட் பிக்கப்க்கு வரதா சொன்னீங்களே?…”
“டேய் அது சும்மா சொன்னேன்டா. உன்னை கூட்டிட்டு போய் ட்ராப் பண்ண சொல்லலாம்னு இருந்தேன். இப்ப இப்படி மழை எல்லாருக்கும் ஆப்பு வச்சிருச்சு…”
“அப்போ ஒன்னும் பண்ணுங்க, போன் பண்ணி எங்க வராளோ அங்க இறங்கி வேற பஸ் பிடிச்சு திரும்ப உங்க ஊருக்கு வர சொல்லுங்க…” என்று சொல்ல பயங்கர கோபம் ஜெகனிற்கு.
“என்ன மனுஷன்டா நீயும்? ஏற்கனவே அந்த பொண்ணை இங்க குத்தி கிழிச்சுட்டு இருக்காங்க அந்த வீட்டு மனுஷங்க. உன் பங்குக்கு நீ செய்வியா?…”
“நான் வேற என்ன செய்ய முடியும்?…”
“ஒன்னும் செய்ய வேண்டாம். இப்போதைக்கு எனக்காக இந்த ஒண்ணை மட்டும் செய். அப்புவை பத்திரமா ரிஸீவ் பண்ணி அவ பிஜில கொண்டுபோய் விட்டுடு. அது மட்டும் போதும் சாமி…”
“ண்ணா இங்க மழை அப்படி பெய்யுது. அதுல நான் எப்படி?…” என்ற விஜய் சொல்ல,
“அந்த இடத்துல என் பொண்ணு இருந்தா இதேதான் சொல்லுவியா விஜய்? அப்புவும் என் பொண்ணுக்கு சமம்…” என்ற ஜெகனின் பேச்சை மீற முடியவில்லை.
“ஹ்ம்ம், ண்ணா. போறேன்…” என்றவன் ட்ரைவரின் நம்பரையும் வாங்கிக்கொண்டு காரை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
இருக்கும் சூழ்நிலைக்கு அப்போதே கிளம்பினால் தான் ட்ராபிக்கில் போய் சேர சரியாக இருக்கும் என கிளம்பிவிட்டான்.
‘ஜெகாண்ணா, உங்களுக்காக மட்டும் தான்’ என்று அவனிடம் அழுத்தமாக சொல்லி தான் கிளம்பி இருந்தான்.
ட்ரைவரிடம் பேசியவன் விஷயத்தை சொல்லி எங்கே வருகின்றார்கள் என்று கேட்டு பவித்ராவை எவ்விடத்தில் அழைத்துக்கொள்ளலாம் என முடிவு செய்துகொண்டான்.
மழை என்பதால் பஸ் சொன்ன நேரத்தை தாண்டி இரண்டுமணிநேரம் லேட்டாக வர அதிலும் விஜய் காத்திருக்கிறேன் என்று ட்ரைவரிடம் சொல்லியிருந்த இடத்தில் பவித்ரா இறங்கி படியில் நின்றபடி அவ்விடத்தில் யாரும் இல்லாமல் இருக்க சுற்றும் முற்றும் பார்த்தாள்.
“ஓரமா அங்க நில்லும்மா…” என்றவர் தன்னிடம் இருந்த ஒரு குடையை கொடுத்தார் ட்ரைவர்.
“இட்ஸ் ஓகே ண்ணா. என்கிட்டே இருக்குது…” என வந்து நின்றவனை பார்த்தவள் முகம் மாற,
“படியை விட்டு இறங்கு, அவங்க கிளம்ப வேண்டாமா?…” என பவித்ராவை விஜய் அதட்ட ட்ரைவர் விஜய்யை பார்த்து தலையசைத்தார்.
ஜெகன் ஏற்கனவே சொல்லியிருந்தான் யார் வருகிறார்கள் என்று. போட்டோவும் அனுப்பியிருக்க தயங்காமல் அனுப்பினார் ட்ரைவர்.
“இறங்குன்னா…” என்று கை பிடித்து தன் குடைக்குள் அவளை இறக்கியவன் அப்படியே கார் வரை அழைத்து சென்று உள்ளே அமரவைத்து மறுபக்கம் வந்து காரை கிளப்பும் பொழுது தான் ஸ்ரமனையே வந்தது பவித்ராவிற்கு.
“உங்க கூட நான் வரமாட்டேன்…” என்று அவள் கார் கதவை திறக்க,
“ரொம்ப சந்தோஷம். எனக்கும் கூட்டிட்டு போக தோணலை. ஆனா வேற வழி இல்லை…” என்றவன் ஜெகனிற்கு அழைத்துவிட்டு பவித்ராவிடம் மொபைலை நீட்டினான்.
“யாரு?…” என்றாள் வாங்காமல்.
“வாங்கி பேசினா தெரிய போகுது…” என்று சொல்ல அவள் பேச்சை வளர்க்காமல் போனை வாங்கி காதில் வைக்க,
“அப்பு, மாமா பேசறேன்டா…” என்றான் ஜெகன்.
“மாமா நீங்க எப்படி?…” என்று அவள் திகைக்க,
“அதை எல்லாம் பேச நேரமில்லை. நீ விஜய் கூட போ. நான் சொல்லித்தான் விஜய் உன்னை பிஜிக்கு அழைச்சுட்டு போறான்…” என்று சொல்லி வைத்துவிட்டான்.
மேலும் பேசினால் ஏதேனும் கேள்வியாய் கேட்பாளே. நிச்சயம் விஜய்க்கு கோபம் வரும். இப்போது பேசவேண்டாம் என கட் செய்துவிட்டான்.
“குடு…” என்று மொபைலை வாங்கிக்கொண்டவன் மேப்பில் எந்த வழியாக செல்லலாம் என்று பார்க்க பிஜி மட்டுமல்லாது நிறைய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓட போதததற்கு அத்தனை நெரிசல் வேறு.
“போச்சு, இதுல மாட்டினா வேற வினையே வேண்டாம். இன்னும் நாலு நாளைக்கு கார்க்குள்ளையே இருக்க வேண்டியது தான்…” என ஸ்ட்ரியரிங்கில் தலைசாய்ந்துகொண்டான்.
பின் பவித்ராவை திரும்பி பார்க்க அவள் முகம் பீதியாக இருந்தது. சென்னைக்கும், சென்னை மழைக்கும் அவள் புதிது என்பதால் பயந்து பார்த்தாள்.
அதையும் விட தான் கிளம்பி வந்த சூழ்நிலை, வீட்டில் பேசிய பேச்சு என்று மனதிற்குள் மாறி மாறி ஓட இப்போது குடும்பத்தினருக்கு தான் விஜய்யுடன் இருப்பது மட்டும் தெரிந்தால் என்னவாகும் என அரண்டு போய் இருந்தாள்.
“என்ன? இங்க மழைன்னா இப்படித்தான். பர்ஸ்ட் டைம்ல. அப்படித்தான் இருக்கும்…” என்றவன் மீண்டும் ஜெகனிற்கு அழைத்தான்.
“என்னடா இது? தூங்கவிடமாட்டியா?…” என அவன் சலிக்க,
“எதே தூக்கமா? என் தூக்கத்தை கெடுத்துட்டு? கொஞ்சமாச்சும் அக்கறை இருக்கா? இப்படி ஒரு இக்கட்டுல விட்டுட்டு எப்படி உங்களுக்கு தூக்கம் வருது? இதுல பொண்ணுன்னு டயலாக் வேற….” என விஜய் பொங்க,
“சரிப்பா நான் தூங்கலை. சந்தோஷமா? இப்ப என்ன விஷயம் சொல்லு?…” என்றான்.
அவனுக்கு அத்தனை நிம்மதி பவித்ரா விஜய்யிடம் சென்று சேர்ந்தது. தற்காலிகமாக இருந்தாலும் அதிலும் ஒரு திருப்தி.
இருவரின் அருகாமையில் யாரேனும் ஒருவராவது வாழ்க்கைப்படியின் முதல் தடத்தில் கால் வைத்துவிடமட்டார்களா என்றிருந்தது.
“நீங்க என்னவும் செய்ங்க. இப்போதைக்கு பிஜி பக்கம் போக முடியாது. ஃபுல் ப்ளாக்ட். என்ன பண்ணலாம் சொல்லுங்க?…”
“என்ன பண்ணலாம்ன்னா? என்கிட்டே கேட்டா என்னடா சொல்லுவேன்?…”
“உங்க ரிலேட்டிவ்ஸ் வீடு இங்க வேற இல்லையா?…” என விஜய் கேட்க,
“எனக்கு சென்னையில தெரிஞ்ச ஒரே ரிலேஷன் என் தம்பி நீதான்டா…” என வசனம் பேசினான் ஜெகன்.
“சத்தியமா நீங்க அண்ணனே இல்லை. கேட்டதுக்கு பதில் சொல்லுங்க…” என விஜய் கடுகடுக்க அதை எல்லாம் ஜெகன் கண்டுகொண்டால் தானே?
“அட நிஜமா தான்டா சொல்றேன்…” என்று உறுதியாய் சொல்ல விஜய்யிடம் ஒரு நொடி மௌனம்.
மீண்டும் பவித்ராவை திரும்பி பார்த்தவனுக்கு ஜெகன் சொல்லிய ‘என் பொண்ணுன்னா செய்ய மாட்டியா?’ என்பதும் யோசனையை விதைத்தது.
“அப்போ உங்களுக்கு அப்ஜெக்ஷன் இல்லைன்னா என் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். ஓகே தானே?…” என்று கேட்க பவித்ரா ஜெகன் இருவரும் இருவேறு மனநிலையில் அதிர்ந்து போனார்கள்.
ஏற்கனவே விஜய், ஜெகனிடம் பேசும் பேச்சு புதிதாய் பேசுவதை போலில்லாது இருக்கவே அதிலேயே எப்படி என்னும் அதிர்ச்சியில் இருக்க இது இன்னும் அதிர்ச்சி.
ஜெகனுக்கோ, ‘அடேய், இப்ப கூட போகவான்னு கேட்காம போறேன். உங்களுக்கு ஒகே தானேன்னு பேசற. அங்க நிக்கிறடா நீ. தம்பிடா. வசந்திம்மாக்கு ஏத்த மருமகன்டா. நீ பேச, அந்தம்மா திணற, அத நா பாக்க. ஆஹா ஆஹா’ என மனதிற்குள் படமே ஓட்டிப்பார்த்துவிட்டான் ஜெகன்.
“ண்ணா….” என்ற விஜய்யின் அழைப்பில் தெளிந்தவன்,
“நீ ஒரு முடிவு பண்ணினா அதுல ஒரு காரணம் இருக்கும்டா தம்பி…” என்று சொல்ல,
“அம்புட்டு சந்தோஷம்….”
“லைட்டா…” ஜெகனும் சிரிப்புடன் சொல்ல,
“அதான் குரல்ல அப்படியே துள்ளல் தெரியுதே? நீங்க பேசுவீங்க. இப்ப போனை வைக்கிறேன். காலையில உங்களை வச்சிக்கறேன்…” என சொல்லி போனை வைத்துவிட்டு பவித்ராவை பார்த்தான் விஜய்.