கதிரவனின் தாக்கம் கடும் கோபத்துடன் தான் தகித்திருந்தது அந்த காலை வேளையிலும்.
இத்தனைதூரம் அவ்வளவு காட்டம் என்பதனை போல ஆறு மணி என்றாலும் குளுமை குறைந்து, சூரியன் வெம்மையுடன் உதித்துவிட்டான்.
உடலை இறுக்கிப்பிடித்த கையில்லா பனியனோடு த்ரெட்மில்லில் கௌரவ் தனது பயிற்சியில் இருந்தான்.
ஆடை தழுவா புஜங்களில் வியர்வை ஆறாய் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது.
முன்நெற்றியில் அவனின் ஓட்டத்திற்கேற்ப சதிராடிக்கொண்டிருந்த சிகையின் நுனியில் நீர் திவலைகள் ஒற்றை புள்ளியாய் நிற்பதும், விழுவதுமாய் இருக்க மூச்சிரைக்க ஓடி முடித்தவன் அதனை அமர்த்திவிட்டு வந்து ஒற்றை இருக்கையில் ஒரு காலை ஊன்றி நின்றான்.
கைகள் இடையில் பதிந்திருக்க ஷணநேரம் ஆசுவாசம் அவனிடத்தில். விழிகள் மூடி நின்றவன் ஓரளவு சமன்பட்டதும் தான் அந்த அறையை விட்டு வெளியே சூரிய கதிர்கள் படும்படி வந்து நின்றான்.
அடுத்ததாய் மாடியின் நீள அகலத்தை எட்டி நடைபோட்டு அளப்பதை போல இங்குமங்குமாய் சிறிதுநேர நடை பயிற்சி.
தனது அன்றாட உடற்பயிற்சியை முடித்துக்கொண்டு தண்ணீரை பருகியவன் கழுத்தை சுற்றி பூதுவாலையை போட்டுக்கொண்டே கீழே இறங்கி வந்தான்.
“ஹேப்பி பர்த்டே அண்ணா…” என வாழ்த்துக்களும், புன்னகையுமாய் வந்தான் விக்ரம்.
“தேங்க் யூ…” என்ற தலையசைப்புடன் தானும் மென்புன்னகை புரிந்தபடி நகர,
“ம்மா ப்ரேக்பாஸ்ட் ரெடியா? இப்பவே பெருங்குடல் சிறுகுடலை ஸ்மாஷ் பண்ணுது…” தன் வயிற்றை தடவியபடி விக்ரம் அடுக்களை பக்கம் செல்ல,
“விடிஞ்சதும் உனக்கு பசிச்சிருமே. ஒரு வேலைக்கும் லாயிக்கில்லை…” என்று இளையமகனை வசைபாடியபடி வந்தார் ராம்நாத்.
அடுக்களை வாயில்வரை சென்ற விக்ரமின் நடை அப்படியே நின்றுவிட்டது.
கௌரவ்வுமே தன் அறைக்குள் நுழைந்தவன் நின்றான் ராம்நாத்தின் பேச்சில்.
“உன்னை தான் சொல்றேன். மண்டையில ஏறுதா? ஏழு கழுதை வயசாச்சு. சொன்னது எதாச்சும் உருப்படியா செய்யமுடியுதா?…” என்று மேலும் மேலும் பேச விக்ரமின் முகம் வாடிவிட்டது.
“எவ்வளோ நாளைக்கு தான் கீழ்வேலை மட்டுமே பார்த்துட்டிருக்க போற?…” என்று நிறுத்தவே இல்லை.
அதற்குள் ராம்நாத்திற்கு கைப்பேசியில் அழைப்பு வர, அவரின் கவனம் அதில் செல்லவும் விக்ரம் தப்பித்தான்.
ஆனாலும் பட்டென்று அவர் பேசியதில் சற்றே மனம் வலித்தது. முன்புமே கண்டிப்புடன் பேசுபவர் தான்.
ஆனாலும் அதற்கும் இதற்குமான வேறுபாட்டினை உணரமுடிந்தது விக்ரமிற்கு. இப்போதைய தகப்பனின் பார்வையில் தெரியும் சிறு வெறுப்பை கண்டுகொள்ள முடிந்தது அவனால்.
அடுக்களை பக்கம் செல்லாமல் தன் அறைக்குள் சென்றுவிட அனைத்தும் கேட்ட கௌரவ் ஒரு பெருமூச்சுடன் தனது காலை கடமைகளை எல்லாம் முடித்துவிட்டு உடையினை பார்க்க, கண்ணாடியின் அருகில் புத்தம்புது சட்டை.
அவனின் தாய் எடுத்து வைத்துவிட்டு சென்றிருப்பதை புன்னகையுடன் பார்த்தவன் அதனை எடுத்து அணிந்துகொண்டான்.
கையில் லிங்கமுகப்பு வைத்த காப்பையும் எடுத்து அணிந்துகொண்டவன் தனது சிகையை கோதிக்கொண்டவன் அறையிலிருந்து வெளியே வர,
“கௌரவ்…” என்றழைத்தார் கௌசல்யா.
தாயின் சத்தம் கேட்டநொடியில் அவனின் நடையில் இன்னும் வேகம் கூடியது. பூஜை அறையில் நின்றவரின் முன் சென்று அவன் நின்றதும்,
இவ்வளவு தான் அவனின் தாய் என நினைத்திருந்தான் விக்ரம். ஆனால் உண்மை அறிந்த கௌரவ்விற்கு தெரியுமே அவரின் மௌனத்தின் காரணம்.
“நீங்களும் உட்காருங்க ம்மா…” என கௌசல்யாவை அமர சொல்ல,
“இன்னைக்கு விரதம் கௌரவ்….” என்றார் கௌசல்யா.
தொண்டை அடைத்தது கௌரவ்விற்கு. தனக்காக இறைவன் கொடுத்த ஒரு உயிர். அவனுக்காக வருடாவருடம் இந்த விரதத்தை அவர் மேற்கொள்வது அவனும் அறிந்தது தான்.
அன்றைக்கென்று என்னவோ மனதோரம் சிறு சலனம். இதயத்தின் சமநிலை அன்றைக்கு தடுமாறியபடி தான் இருந்தது.
“சாப்பிடு விக்ரம்…” என இளையமகனிடம் அவர் கூற,
“கொஞ்சம் அதட்டி தான் சொல்லுங்கம்மா. மத்த அம்மாலாம் எப்படி அதட்டி, அடிச்சு வளர்க்காங்க…” என விக்ரம் இயல்பிற்கு திரும்பிவிட்டான்.
அவன் கூறியதற்குமே கௌசல்யாவிடம் சின்னதாய் முறுவல். சிரித்தபடி இன்னும் கொஞ்சம் சர்க்கரை பொங்கலை எடுத்து மகனின் தட்டில் வைத்தார்.
அந்த புன்னகையை பார்க்க பார்க்க ராம்நாத்தின் மனதும், வயிறும் சேர்ந்தே எரிந்தது.
அது அவரின் ஏமாற்றத்தின் எரிச்சல். கௌசல்யாவை நெருங்க முடியாத கோபத்தின் எரிச்சல்.
“போதும், போதும். இப்படி நீ ஊட்டி வளர்த்து தான் அடங்காம சுத்தறான். இப்ப என் முன்னாடியே பேச்சை பார்த்தியா? பயம் விட்டு போச்சோ?…” ராம்நாத் அதிகாரமாய் பேச, விக்ரம் மௌனமாகிவிட்டான்.
சட்டென்று இறுக்கம். அந்த இறுக்கத்தை மட்டும் ராம்நாத் இளகவிடுவதாய் இல்லை.
முன்பு தலைவிதியே என்றிருந்ததெல்லாம் சமீபமாய் எரிச்சலும், அலுப்புமாய் தோன்ற ஆரம்பித்திருந்தது.
சர்க்கரை பொங்கலை விண்டு வாயில் வைத்த கௌரவ் அழுத்தமாய் ராம்நாத்தை பார்த்தான்.