சட்டென்று கோபம் மூண்டாலும் எங்கே தான் எதுவும் வார்த்தையை விட்டு, அதற்கும் மூத்தமகன் பேசுவானோ என அடக்கி வாசிக்கவேண்டிய கட்டாயம்.
“அதுதான் இன்னும் ஒருவாரம் இருக்கே…” என்று பேச்சை மாற்ற, அவரை ஒருபார்வை பார்த்தவன்,
“விக்ரம், நீ ரைஸ்மில் போகவேண்டாம். என்னோட ட்ராவல்ஸ் டிப்போவுக்கு வா…” என்று சொல்லிவிட்டு எழுந்துகொண்டான்.
“ஏன்? ஏன்? அங்க அவனுக்கு என்ன தெரியும்?…” என்றார் வேகமாய்.
“தெரிஞ்சுப்பான்…” என்று சொல்லிவிட்டு விக்ரமை பார்க்க,
“வர்றேண்ணா…” என விக்ரமும் உண்டுமுடித்துவிட்டான்.
பிள்ளைகள் இருவரும் கிளம்பி தயாராய் வந்துவிட ராம்நாத் ஹாலிலேயே இருக்க கண்டான் கௌரவ்.
“நீங்க ரைஸ்மில் கிளம்பலையா?…”
“இல்லப்பா, கொஞ்சம் டயர்டா இருக்கு. வெயில் அதிகம். கொஞ்சம் நேரம் கழிச்சு போறேன்…” என்றவர் மீண்டும் கௌசல்யாவை பார்க்க, உணவு மேஜையில் இருந்தவற்றை உதவிக்கு இருக்கும் பணிப்பெண்ணுடன் சேர்ந்து எடுத்து வைத்துக்கொண்டிருந்தார்.
“அவ ஏன் கோவிலுக்கு? அதான் விடியக்காலையே போய் பொங்கல் வச்சு, சாமி கும்பிட்டு வந்துட்டாளே?…” என அவசரமாய் வந்தார் ராம்நாத்.
கௌரவ்வினுள் தீப்பந்தமாய் அத்தனை கோபம் பற்றிக்கொண்டது. அவரும் அவர் பார்வையும் என்று வெந்து தணியாமல் பார்த்தவன்,
“ம்மா…” என்றான் தாயிடம்.
“இதோ போலாம் கௌரவ். கிளம்பி தான் இருக்கேன்…” என்றவர்,
“இது இன்னொரு கோவில். போகனும்…” என ராம்நாத்தை பார்க்காமல் தகவலை மட்டும் சொல்லி நிற்க,
“வாங்க…” என்று அவரின் கை பிடித்து அழைத்து சென்றான் கௌரவ்.
வாசலில் விக்ரம் பைக்கை கிளப்பிக்கொண்டிருக்க, தாயும் வர பார்த்து என்னவென்று நின்றான்.
“நீ டிப்போவுக்கு போய் எஃப்சி வண்டியை எல்லாம் செக் பண்ணு விக்ரம். நான் வந்திடறேன்…” என தன் தம்பியை அனுப்பிவிட்டு,
“ஏறுங்கம்மா…” என்றான் தனது காரில்.
கருப்பு நிற கிராண்ட் செரோகி தாயையும், மகனையும் சுமந்தபடி கம்பீரமாக அந்த வீட்டின் கேட்டை தாண்டி வீதியில் ஒய்யாரமாய் இறங்கி நகர்ந்தது.
‘என்னதான் ஆகிற்று இந்த கௌரவ்விற்கு?’ என நினைத்து கோபக்கனல் தெறிக்க அடைபட்ட நரியாய் இங்குமங்கும் சுற்றினார் ராம்நாத்.
இது இன்று நேற்று நடப்பதல்ல. கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக இதுவே தான் வழக்கமாகிக்கொண்டிருந்தது.
ஒருவேளை கௌசல்யா உண்மையை சொல்லியிருக்க கூடுமோ என்று ஒருபக்கம் நினைத்தாலும், தெரிந்திருந்தால் ஒன்று நேரடியாக கேட்டிருப்பான், இல்லையேல் வேறு விதமாக நடந்திருக்க கூடும்.
இது எதுவுமில்லாமல் வேறு என்ன? தன்னிடம் என்ன பிணக்கு தன் மகனுக்கு என்று மண்டை காய்ந்தது.
கண்ணுக்கு தெரியாத ஒரு பிடித்தமின்மை இருப்பதை போன்றும், இல்லாததை போன்றும் ஒரு உணர்வை கொண்டே அவரை ஆட்டிப்படைத்தான் கௌரவ்.
சட்டென அவனிடம் அதை பற்றி கேட்டுவிடவும் முடியவில்லை. மகனை இப்படி வளர்த்த தானே அவனை நெருங்க இயலாமல் தவித்தார்.
எதுவும் செய்ய இயலாமல் ஒரு இயலாமை அவரை வாட்ட அங்கேயே ஹாலின் சோபாவில் அமர்ந்துவிட்டார்.
கோவிலில் தாயை இறக்கிவிட்ட கௌரவ் உள்ளே வரை கொண்டுசென்று விட்டவன்,
“பூஜை முடிஞ்சதும் கால் பண்ணுங்கம்மா. நான், விக்ரம் யாராவது வந்து கூப்பிடுவோம்…” என்று சொல்லிவிட்டு விடைபெற்றான் கௌசல்யாவிடம் இருந்து.
————————————————-
காஞ்சிபுரம் வெளி மாநில பேருந்துகள் வந்து பயணிகளை ஏற்றிசெல்லும் பகுதி அது.
பேருந்துநிலையத்தை தாண்டி இருந்தது. ஒவ்வொரு தனியார் பேருந்துகளின் பெயர் பலகையுடன் வரிசையாய் அடுத்தடுத்து கட்டிடங்களில் அமைந்திருந்தது.
“ராம்நாத் ட்ராவல்ஸ், இதோ இதுதான் பிக்கப் பாயிண்ட் அண்ணா…” என ஆட்டோ ட்ரைவரிடம் அந்த பெண் கூற,
“தெரியும்மா, கடைக்கு முன்னாடி வண்டியை நிப்பாட்டினா கத்துவானுங்க. தள்ளி தான் நிறுத்தனும்…” என்று சொல்லியபடியே தள்ளி செல்ல, இன்னும் மூன்று பேருந்துகளுக்கு முன்பு சென்று நிறுத்தினார் அவர்.
“ஆமாண்ணா. கரெக்ட் டைம். நல்லவேளை பஸ் மிஸ் பண்ணலை…” என்று இரு பெண்களும் இறங்கிக்கொண்டனர்.
ஆட்டோவிற்கு பணத்தை செலுத்திவிட்டு ஆட்டோவினுள் இருந்த உடைமைகளை எடுத்துக்கொண்டனர்.
அனைத்தும் பட்டு ஜவுளிகள். இருவருமாய் வந்து எடுத்திருந்தனர். அதனை தூக்கியபடி பஸ்ஸை நோக்கி சென்றவர்கள், வெளியில் நின்ற பேருந்தின் உதவியாளரிடம், தன்னுடைய இருக்கையின் எண்ணை கூற,
“உள்ள போங்கம்மா…” என்றார் அவர்.
கொண்டுவந்த பைகளை உள்ளே தங்களின் இருக்கையில் சென்று வைத்துவிட்டு வந்தனர் இருவரும்.
“அண்ணா இன்னொரு சீட் வேணும். அலார்ட் பண்ணிடுங்க…” என சுனந்தா ட்ரைவரிடம் கூற,
“புக் பண்ணலையாம்மா?…” என்றார் ட்ரைவர்.
நேரத்தை பார்க்க இன்னும் ஐந்துநிமிடம் தான் இருந்தது வாகனத்தை கிளப்புவதற்கு.
“சீட் இல்லைன்னாலும் பரவாயில்லை. நாங்க ஒரே சீட்ல அட்ஜஸ்ட் பண்ணிக்கறோம். இன்னொரு டிக்கெட்க்கான காசை வாங்கிக்கோங்க…” என அதிகாரமாய் சுனந்தா பேச ட்ரைவரின் முகத்தில் கோபம்.
“என்னம்மா பேசறீங்க? அப்படியெல்லாம் பழக்கம் இல்லை. சீட் இருக்கே. நீங்க கால் பண்ணி சொல்லியிருந்தா கூட புக் பண்ணியிருக்கலாம்…” என்றார்.
“தேங்க் காட். சீட் இருக்கே. அப்பறம் என்ன?…” என்று சுனந்தா தனது கைப்பையில் இருந்து பணத்தை எடுத்து நீட்ட,
“எம்மா, சொல்றது புரியலையா?…” எனும்பொழுதே,
“கொஞ்சம் வழிவிட்டு நில்லுங்க. மத்த பேசெஞ்சர்ஸ் ஏற வேண்டாமா?…” என்றார் வெளியில் நின்றவர்.
வெண்ணிலா, சுனந்தா இருவருமே இறங்கிவிட்டனர் பேருந்தைவிட்டு. ஒருவருக்கு மட்டுமே பயணச்சீட்டு எடுத்துவிட்டு இருவரும் சென்று அமர முடியாதே?
“இப்பவும் சொல்றேன். நான் பஸ் மாறி போய்ப்பேன். நீ கிளம்பு…” என்றாள் வெண்ணிலா.
இப்படியெல்லாம் பேசி, சரிக்கட்டி இந்த பேருந்தில் பயணிக்க வேண்டுமா என்றே தோன்றிவிட்டது.
“பேசாம இரு நிலா. இது எல்லா பஸ்லையும் இருக்கறது தானே?…” சுனந்தா தடுக்க,
“பாரு, முகத்துல அடிச்ச மாதிரி பேசறதை. எனக்கு இதெல்லாம் புடிக்காது. நீ ட்ராவல் பண்ணனுமேன்னு தான் நான் பொறுமையா இருக்கேன். நீ கிளம்பு. நான் பஸ் மாறி நீ பெங்களூர் ரீச்சாகறதுக்கு முன்ன அங்க இருப்பேன். போதுமா?…” என்றாள் வெண்ணிலா.
“அதெல்லாம் வேண்டாம். நான் தான உன்னை இங்க வர சொன்னேன்? அப்படியே விட்டுட்டு போறதா நான்? நோ வே…” என்று சொல்லிக்கொண்டிருக்க,
“அதான் பஸ்ல முடியாதுன்னு சொல்றாங்களே?…” என வெண்ணிலா கூற,
“என்ன மேடம், என்ன முடிவு பண்ணியிருக்கீங்க? இன்னும் ரெண்டுபேர் தான் வரனும். வந்துட்டா கிளம்பிடுவோம். அதோ ட்ராவல்ஸ் போர்ட் போட்டிருக்கு பாருங்க, அங்க போய் இன்னொரு டிக்கெட் புக் பண்ணிடுங்க. ரிஜிஸ்டர் பண்ணிடுவாங்க உடனே…” என்றார் உதவியாளன்.
“ஏன் ஸார், அங்கயும் அதே காசை தான் குடுக்கறோம். இது என்ன புதுசா இருக்கு? எவ்வளவோ பஸ்ல இப்படி அட்ஜஸ்ட் பன்றது இல்லைங்களா?…” என சுனந்தாவிற்கு கோபம் வந்துவிட்டது.