அவர்கள் பேருந்து நின்ற எதிர் திசையில் கௌரவ்வின் செரோகி வந்து நின்றது.
அவர்கள் இருவரின் சம்பாஷணையில் கோபமாய் நின்ற இரு பெண்களும் யார் அது என்று எட்டி பார்த்தனர்.
அந்த காரில் இருந்து இறங்கியவன் பார்வை இருபக்க சாலையிலும் கவனமாய் பதிய, பேரிகாட் வரை வந்தவன் அதில் ஒற்றை கையை ஊன்றி சட்டென எம்பி குதித்து பேரிகாடை தாண்டிவிட்டான்.
“காட்…” என சுனந்தா சொல்லும்பொழுதே, கௌவ்ரவ்வின் இடது கை நீண்டு இருவிரல் கொண்டு வந்துகொண்டிருந்த வாகனங்களை பார்த்து அசைந்துகொண்டே ஓட்டமும் இல்லாத, நடையுமில்லாத வேகத்துடன் எதிர்பக்கத்தில் வந்து நின்றான்.
கண்கள் சுருங்கி இதழ்கள் குவிந்து விசிலடிக்கும் தோற்றத்துடன் அவன் அதனை கடந்துவந்ததையும் வெண்ணிலா கவனிக்கவே செய்தாள்.
முகத்தில் சற்று அதிருப்தி. எத்தனை அனாயசமாக அவன் பேரிகாடை தாண்டி குதித்து, வாகனங்களை தன் சுயவிருப்பத்திற்கு நிறுத்தி வருகிறான் என்று பார்த்தாள்.
அவர்களை கடந்து செல்ல இருந்தவன் அப்போது தான் அவர்களை கவனிக்க, உடன் உதவியாளனும் கையை பிசைந்துகொண்டு பார்த்தான்.
கௌரவ்வின் பார்வையே சொல் என்பதை போலிருக்க வார்த்தையாய் கேட்கவில்லை.
அவன் கேட்பான் என சுனந்தாவும் பார்த்திருக்க, வெண்ணிலாவுக்கு தான் பற்றிக்கொண்டு வந்தது.
“அண்ணே, இவங்க ஒரு சீட் தான் புக் பண்ணியிருக்காங்க. இப்ப வந்து இன்னொரு சீட்டும் வேணும்ன்னு சொல்றாங்க. பணம் குடுத்திருவாங்களாம். நானும், சோமண்ணனும் போய் ட்ராவல்ஸ்ல புக் பண்ணிட்டு வாங்கன்னு சொல்லியும் கேட்காம பேசறாங்க…” என்று கூறி,
“இவர் தான் எங்க ஓனர்…” என்றான் உதவியாளன்.
அதுவரை அமைதியாய் கேட்டு நின்ற கௌரவ், இறுதியாய் அவன் சொல்லியதில் ஒரு முறைப்பை காண்பித்துவிட்டு சுனந்தாவின் புறம் திரும்பினான்.
“இங்க பாருங்க ஸார், இது ஒரு சின்ன விஷயம். இதுக்கு போய் ஓவரா பேசறாங்க. நாங்க ஒன்னும் ப்ரீ சீட் கேட்கலையே…” என்றாள் சுனந்தா அவனிடம்.
அவர்கள் பேசிக்கொண்டிருக்கையிலேயே அந்த வயதான தம்பதிகளும் வந்துவிட அவர்களுக்கு வழிவிட்டு நின்றனர்.
“ஒரு சீட்டு தானப்பா. பொம்பளை புள்ளைங்க வேற….” என்று இந்த சம்பாஷனையை கேட்டுக்கொண்டே வந்தவர்களில் அந்த பெண்மணி கூறிவிட்டு உள்ளே ஏறி செல்ல சுனந்தா கௌரவ்வை பார்த்தாள்.
“இதுல இந்த ஜெண்டர்க்கு பர்ஸ்ட் ப்ரிப்ரேன்ஸ் எல்லாம் இல்லை. எல்லாரும் பேசஞ்சர்ஸ்….” என்றவன்,
“இன்னொரு சீட் வேணும்னா போய் புக் பண்ணிட்டு வாங்க. இன்னும் ஒரு பைவ் மினிட்ஸ் பஸ் வெய்ட் பண்ணும்…” என்றுவிட்டு அவன் நகர, மீண்டும் சுனந்தா அவனை இடைமறித்தாள்.
“ஏன் ஸார்? ஒரு சீட். நாங்க என்ன பண்ணிடுவோம். கொஞ்சமும் நம்பிக்கை இல்லாம அதுவும் இந்த அன்டைம்ல இப்படி பேசறீங்க? எங்களுக்கு புக் பன்றது விஷயமே இல்லை. ஆனா…”
“ஹலோ யார் நீங்க?…” என்ற கௌரவ்விற்கு பிபி தாறுமாறாக ஏற ஆரம்பித்தது.
அத்தனை ஈகோவா இவர்களுக்கு என்று தோன்ற முயன்று கோபத்தை அடக்கிக்கொண்டவன்,
“ரவி புக் பண்ணின சீட்க்கு மட்டும் அலோவ் பண்ணு….” என்று சொல்லிவிட்டான்.
“இப்படி இருந்தா இந்த ட்ராவல்ஸ் வளர்ந்த மாதிரி தான்…” அதுவரை மௌனமாய் பார்த்திருந்த வெண்ணிலா பேச,
“க்ரோத் பத்தின கவலை உங்களுக்கு அனாவசியம்…” நிதானமாய் வார்த்தைகளை நிறுத்தினான் கௌரவ்.
“ப்ச், ஊர்ல வேற ட்ராவல்ஸே இல்லாத மாதிரி இங்கயா நீ புக் பண்ணனும்? பேச்சை பார்த்தியா? இதுக்கு சிங்கிள் ஸ்டார் கூட குடுக்ககூடாது. ரிவ்யூ போட்டு கிழிக்கிறேன் பாரு….” என வெண்ணிலா சுனந்தாவிடம் கோபமாய் உரைக்க,
“சோம், டைம் ஆகிடுச்சு. பஸ்ஸை எடுங்க….” சத்தமின்றி அதிராமல் ஒரு உத்தரவு கௌரவ்விடமிருந்து.
“ப்ச், நிலா வேற எந்த ட்ராவல்ஸ்லையும் சீட் இல்லைடி. பேசாம இரு. இனிமே பஸ் மாறி மாறி என்னால போக முடியாது. உன்னை விட்டும் போக முடியாது…” என்று அவர்கள் வாதாடியபடி இருக்க, அதனை கண்டுகொள்ளாமல் கிளம்பிவிட்டான் கௌரவ்.
இனி அது அவர்களின் விருப்பம். தனக்கென்ன வந்தது என்பதை போல அவன் கடந்துவிட்டான்.
ஆனால் வெண்ணிலாவால் அப்படி அதில் ஏறி செல்ல அவளின் தன்மானம் இடமளிக்கவில்லை.
“நீ போய்க்கோ…” என வெண்ணிலா கிளம்ப,
“இல்லை, இல்லை. நானும் உன்னோடவே வர்றேன்…” என சுனந்தா தனது உடமைகளை மீண்டும் கீழே இறக்கிவிட்டாள்.
“பேசாம அவங்க சொல்லும்போதே போய் மரியாதையா புக் பண்ணியிருக்கனும் நான். தேவை இல்லாம வார்த்தையை விட்டு இப்ப இப்படி ஆகிடுச்சு…” என வழியெங்கும் புலம்பல் தான்.
வெண்ணிலா அதனை எல்லாம் கண்டுகொள்ளவே இல்லை. பயணம் அவளுக்கு எப்படி இருப்பினும் பிடித்தம் தரக்கூடியது.
தனிமையாகவோ, கூட்ட நெரிசலோ, காத்திருப்போ எதுவாகினும் பயணம் அவளுக்கு அலாதியான ஒரு உணர்வையும், தேடலையும் தரும்.
மாநகர பேருந்தில் தான் வந்துகொண்டிருந்தனர் இருவரும். அந்தநேரம் காரில் பயணம் செய்யலாம் என்றால் சுனந்தாவின் வீட்டில் ஒப்புக்கொள்ளவில்லை.
“இப்ப என்ன? சென்னை போய் ரிலாக்ஸ் பண்ணிட்டு உன்னை ப்ளைட்ல கூட்டிட்டு போறேன். ஓகே வா…” என சொல்லியே அழைத்து வந்தாள் வெண்ணிலா.
மொதுமொதுவென்று மூச்சுவிட முடியாத கூட்டத்தின் மத்தியில் எப்படியோ இருவரும் அமர இருக்கை கிடைத்துவிட்டதில் ஜன்னலோரம், வெண்ணிலாவும் அருகில் சுனந்தாவும் அமர்ந்திருந்தனர்.
“இந்த விசுவிசு காத்து வேற எனக்கு ஒத்துக்காது…” என்று ஒருபாடு புலம்பிக்கொண்டிருந்தவள் பார்வை நிலைபெற்றது.
ஓரிடத்தில் தங்கள் பேருந்துக்கு இணையாய் அந்த வாகனம் டோலில் வந்து நின்றதும்,
“ஹேய் நிலா அங்க பாரேன்…” என்று காண்பிக்க அங்கே கௌரவ்வின் வாகனம்.
“என்ன சொல்லு, ஆனாலும் செம்ம ஸ்மார்ட். பொண்ணுங்கன்னு சட்டுன்னு ஓகே சொல்லாம….” என சட்டென விழிகளில் ஒரு ரசிப்பு தன்மை.
“அதுவேற. இருந்தாலும் நம்ம பக்கமும் தப்பு இருக்கே?…”
“என்ன சிம்ரன்ஸ் இதெல்லாம்? விட்டா கங்கை கரை தோட்டம் கன்னி பெண்கள் கூட்டம்ன்னு கௌரவத்தை நடுவுல உக்கார வச்சிருவீங்க போல? கொலை பண்ணிப்போடுவேன் பார்த்துக்கோ…” என்றவள் மீண்டும் ஜன்னல் வழியாக பார்த்தாள்.
“கௌரவமா?…” சுனந்தா கேட்க,
“ஹ்ம்ம், அந்த கிளீனர் பையன் சொன்னானே?…”
“ஓஹ், பேர் ஞாபக இருக்கா? நான் கவனிக்கவே இல்லை பாரேன்…” என்றாள் சுனந்தா.
அவளோடு வெண்ணிலாவும் திரும்பி பார்க்க, ஆமை வேகத்தில் இருவரின் வாகனமும் மெதுவாய் நகர்ந்ததில் இன்னும் கௌரவ்வின் கார் அவர்கள் பேருந்தின் அருகில் தான்.
அவனின் இடதுகையில் செரோகி சாலையில் மெதுவாய் நழுவிக்கொண்டிருக்க வலதுகையில் பகார்டி ப்ரீசர் பானத்தை சிறிது சிறிதாய் பருகியபடி வாகனத்தை முன்னோக்கி செலுத்தினான் கௌரவ்.