கௌரவ் குடும்பத்தினர் கிளம்பி செல்லவும் கீழே சென்று வழியனுப்பிவிட்டு வந்த சாவித்ரி பேத்தியை தேடினார்.
“வளர், எங்க நிலாவை காணும்? இங்க தான இருந்தா?…” என வளர்மதியிடம் கேட்க,
“நானும் உங்களோட தானத்தை வந்தேன்? உள்ள இருப்பா…” என்றார் வளர்மதி.
“சரி நான் போய் பார்க்கறேன்…” என அவர் நகர,
“இருங்க சின்னம்மா. ஒருநிமிஷம்…” என்று நிறுத்தினார் குமரன்.
“சொல்லு குமரா…” என்றவரிடம் யோசனையுடன்,
“அந்த பையனோட அப்பாவுக்கு இதுல பெருசா விருப்பம் இருக்கிற மாதிரி தெரியலையே சின்னம்மா. நீங்க கவனிச்சீங்களா?…” என்றார் குமரன்.
“அப்படியெல்லாம் இல்லை குமரா. அவர் கொஞ்சம் கோபக்காரர்ன்னு சொன்னாங்க. சட்டுன்னு சிரிச்சு பேசற மனுஷன் கிடையாது. அதுதான் உனக்கு அப்படி தெரியுது…”
“ஓஹ், சரி பார்த்துக்கோங்க. என்னவோ வந்ததுல இருந்தே பேச்சே ஒரு தினுசா இருக்கு. பொண்ணை கல்யாணம் பண்ணி வச்சிட்டு பின்னாடி கஷ்டப்பட கூடாதுல…” என்றவர் சாவித்ரியின் பார்வையில்,
“நல்லபடியா நடக்கனும்ன்னு தான் எனக்கும் ஆசை. ஆனா உங்க பேத்தி திரும்பவும் ரைட் கிளம்பறேன்னு பைக்கை எடுத்துட்டு சுத்தி அவங்கக்கிட்ட பேரை கெடுத்துக்காம இருந்தா சரி…” என்றார்.
“என்னங்க இது? இப்படி பேசாதீங்க…” வளர்மதி பதட்டமாய் பேசினார்.
“அதான, என்னப்பா, ஏன் இப்படியெல்லாம் சொல்றீங்க? இப்பதான் பேசி வந்திருக்கும்போது…” என சுனந்தாவும் பேசினாள்.
“நீ சும்மா இரும்மா. உனக்கென்ன தெரியும்? நாம எல்லாம் தான் யோசிக்கனும். அதுவும் இல்லாம அந்த டாக்டரோட பையன் குடும்பமா வந்த பின்னாடி தான் எல்லாம்ன்னு உறுதியா சொல்றாங்க. மாப்பிள்ளையோட அத்தை பொண்ணு வந்து தான் எல்லாம் செய்யனுமா? புதுசா இல்ல இருக்கு…” என்றும் அவர் பேச,
“அவங்களுக்குள்ள அப்படி ஒரு சொந்தம்ன்னு வச்சுக்கோயேன். அந்த முக்கியத்துவம் தர்றாங்கன்னா அவங்களோட பழக்கமும், சொந்தமும் எப்படியானதா இருக்கும்…” என்ற சாவித்ரி,
“உன் பேச்சோட போக்கே சரியில்லை குமரா. அதுவும் கௌரவ் ஷ்யாமளாவுக்கு பையன் மாதிரி. என் வயித்துல பிறந்திருந்தா யோசிக்காம குடுப்பீங்க தான. இப்ப விசாரிச்சிட்டே கௌரவ்க்கு குடுங்கன்னு சொன்னாங்க. கௌசல்யா மாதிரி ஒரு மாமியார் அமையுமா? பேசறான் பேச்சு…” என்றார் கோபமாய்.
“இப்ப நான் பேசறது உங்களுக்கு புரியாது. என்னவோன்னு மனசுல இருக்கு. இப்பவே இன்னார் வந்தா தான் இதெல்லாம்ன்னு சொல்லி நம்மளை கண்ட்ரோல்ல வச்சுக்க பார்க்கறாங்க…” குமரன் கூற,
“ஏன் நீங்க பார்த்த மாப்பிள்ளை வீட்டுல கூட தான் பேச வந்த அன்னைக்கே பாட்டியை பார்த்துக்க முடியாது. எங்க சொல்பேச்சு கேட்டுத்தான் பொண்ணு நடக்கனும்ன்னு அவ்வளோ கண்டிஷன்ஸ்போட்டாங்க. அப்போ மனசுக்கு எதுவும் தோணலையே உங்களுக்கு?…” என்று வெண்ணிலா வந்துவிட்டாள்.
அவளின் வரவில் குமரன் முகம் சுண்டிப்போய் பார்வையை திருப்பிக்கொண்டு நின்றுவிட,
“நீ வருத்தப்படாத நிலா…” என்றார் வளர்மதி.
“இல்லை பெரிம்மா, நான் ஏன் வருத்தப்படனும்?…” என்றவள் குமரனை அழுத்தமாய் பார்த்தாள்.
“நிலா…”
“சும்மா இரு நந்தா. உன் வீட்டுல வச்சு அந்த ஆட்டோமொபைல் மாப்பிள்ளைக்கு அவ்வளோ வக்காலத்து. இத்தனைக்கும் உங்கப்பா முன்னாடி தான் அவ்வளோ பேசினாங்க அந்த பெரியமனுஷங்க ரெண்டுபேரும். அப்ப் ஏன் இதெல்லாம் தோணலை உங்கப்பாவுக்கு?…” என்ற வெண்ணிலா,
“உங்களை மீறி தானா ஒரு சம்பந்தம் பார்த்துட்டாங்கன்னு தானே?…” என்றாள் நேரடியாக குமரனிடம்.
அவரின் மௌனமும், இல்லை என்று ஆட்சேபிக்காத தன்மையுமே அதுதான் என்று உணர்த்தியது.
இவ்வளவு நேரம் வந்தவர்களிடம் அத்தனை ஈடுபாட்டுடன் பேசிவிட்டு, இப்போது தங்களின் மனதில் சஞ்சலத்தினை விதைப்பதை போல பேசுவதை பொறுக்க முடியவில்லை.
“சின்னம்மா, நான் கிளம்பறேன். நம்ம சிவா இங்க தான் இருக்கான். வந்தநேரம் ஒருபார்வை பார்த்துட்டு போக சொன்னான். போய்ட்டு வர்றேன்…” என்று சொல்லிவிட்டு விடுவிடுவென வெளியேறினார்.
“நீங்க மனசோல் வச்சுக்காதீங்க த்தை. அந்த மனுஷனுக்கு கிறுக்கு புடிச்சிருச்சு…” என்று கோரிய வளர்மதி நிலாவையும் பார்த்துவிட்டு,
“நந்தாவோட மாமியார் வீட்டுல போய் அந்தம்மா பேசி வச்சிருச்சுன்னு உங்ககிட்ட ஏற்கனவே சொன்னேன்ல. அதுல இருந்து நந்தா மாமியார் கொஞ்சம் முகத்தை காமிக்கிறாங்க. அந்த கடுப்புல பேசிட்டார். மத்தபடி இந்த இடம் ரொம்ப நல்ல இடமா இருக்கு….” என்று கூறினார்.
“இருக்கட்டும் வளர். என்னால புரிஞ்சுக்க முடியுது. விடு. நான் பார்த்துக்கறேன்…” என்று சொல்லிவிட்டு சுனந்தாவை பார்த்தார்.
“எனக்கொண்ணும் பிரச்சனை இல்லை பாட்டி. சும்மா அம்மா சொன்னாங்கன்னு நீங்க பீல் பண்ண வேண்டாம். என் பாட்னர் செம்ம அண்டர்ஸ்டேன்டிங். இங்க வர்றதுக்கு கூட நான் என்ன சொல்லிட்டு வந்தேன் தெரியுமா?…” என சுனந்தா துவங்க,
“கொன்னுடுவேன்….” என்று அவளின் தோளில் ஒரு அடி வைத்தாள் வெண்ணிலா.
“என்ன சொல்ற?…” வளர்மதி கேட்க,
“டங்க் ஸ்லிப். ஜஸ்ட் மிஸ்ல எனக்கும். தப்பிச்சேன்…” என்றவள் நன்றி பார்வை பார்த்தாள் நிலாவை.
“ச்சீ ப்பே…” என்றவள்,
“சாவி, இது ஒரு விஷயமா? விடு விடு….” என சொல்லிவிட்டு தண்ணீரை எடுத்து குடிக்க,
“உன் தலை. வராம இருந்ததோட, விஷமமா சிரிச்சு, டோர் லாக் பண்ணி வைன்னு சொல்லி எனக்கு ஒரே ஷைய்யா போச்சு தெரியுமா?…” என்றதும் தான் சாவித்ரி இன்னும் நன்றாகவே சுற்றி பார்க்க கட்டிலில் நிலாவின் உடைகள் சிதறி கிடந்தது.
“என்ன நிலா இது? இப்படி இதை போய் போட்டு வச்சிருக்க?…” என்று திகைத்து போனார்.