“கொல்ல போறேன் உன்னை. அங்க பாரு சாவி…” என அவள் கை நீட்டியதை பார்த்ததும் முதலில் புரியாம, அதன் பின்னரே புரிந்தது.
கட்டிலின் அருகிருந்த சுவற்றில் பெரிய விதத்தில் நிலாவின் குழந்தை கால புகைப்படம்.
அப்போதுதான் அவள் தவழ்ந்து அமர்ந்த பொழுது. தங்கக்கட்டியை போல கொழுகொழுவென்று இருந்தவள் கழுத்தில் இரண்டு தங்க சங்கிலி மின்ன கையில் தங்க வளையல், இடுப்பில் தங்க கொடி, குட்டியாய் சுருண்ட முடியில் குடுமி போடப்பட்டு பூ, கண்மையில் நெற்றியில் பெரிதாய் பொட்டு வைக்கப்பட்டு, கண்களின் கீழ், மேல் மை வரைந்து என்று பொக்கை வாய் தெரிய கொள்ளை புன்னகை.
குண்டு கன்னங்கள் கடித்துக்கொள்ளும் விதமாய் மின்ன, சிரிப்பில் அரிசி பற்கள் மேலும், கீழுமாய் அப்போதுதான் எட்டி பார்த்திருந்தது.
கால்களில் தங்க கொலுசு, குட்டி பிஞ்சு விரல்களில் மோதிரம் என்று அத்தனை இருந்தும் மருந்திற்கும் உடையில்லா குழந்தை புகைப்படம்.
அமரவைத்து ஒன்று, குப்புற படுத்தவாக்கில் ஒன்று, மல்லார்ந்து படுத்தபடி என மூன்றுவிதமாய் எடுக்கப்பட்டு மூன்றும் ஒரே புகைப்படத்தில் பெரிதாய் மாட்டபட்டிருன்தது.
“இப்ப மாதிரியா? குழந்தைல எவ்வளோ அழகு நீ?…” என புகைப்படத்தை தொட்டு முத்தமிட்டுக்கொண்டவர்,
“இதுக்கென்ன?…” என்றார்.
“சாவி, இத்தனை நகை போட்டுவிட்டுருக்கியே, கண்ணுக்கு மை, குடுமி போட்டு அதுல பூ, கைக்கு வளையல், மோதிரம், கொலுசு, இடுப்புக்கு தங்க கொடி எல்லாம் போட்டியே, ஒரு ட்ரெஸ் போட்டு எடுத்திருக்க கூடாதா?…” என்றாள் அழாத குறையாய்.
“குழந்தைல இப்படி எடுத்தா தான் அழகு. அப்போ தான் எடுக்கவும் முடியும். உங்கம்மா ரசிச்சு ரசிச்சு எடுத்தது….”
“சாவி, உனக்கு எப்படி நான் சொல்லி புரியவைக்க…” என்று கட்டிலில் அமர்ந்தவள் நெற்றியில் கை வைத்துவிட்டாள்.
நிச்சயம் முதலில் கட்டிலை பார்த்துவிட்டு தான் புகைப்படத்தையும் பார்த்திருப்பான் என்பதில் அத்தனை நிச்சயம்.
அதிலும் அந்த பார்வையும், கள்ளப்புன்னகையும் என்னவோ செய்ய, குரல்வளையை அவளின் கைகள் நீவிக்கொண்டது.
பேத்தியின் முகபாவனையிலேயே சாவித்ரி சிரிப்புடன் அங்கிருந்து சென்றுவிட்டார்.
எப்போதும் அத்தனை தூரத்திற்கு யாரும் வரும் அவசியமே இருந்ததில்லை என்பதனால் அதுவரை இப்படியெல்லாம் தோன்றியதே இல்லை.
காலை எழுந்ததுமே அவளை அவளே கொஞ்சிக்கொள்வதுண்டு அந்த புகைப்படத்தை பார்த்து.
‘ஆனாலும் நீ இவ்வளோ அழகா புரிந்திருக்க கூடாது நிலாம்மா’ என்று அந்த கன்னங்களை தொட்டு பார்த்து தன் கன்னத்தையும் அளவு பார்ப்பாள்.
‘கொழுக்கட்டை முழுங்கின மாதிரி இதென்னடி ஒரு வயசுக்குள்ளயே இங்க இத்தனை கட்டிங்ஸ் உனக்கு? உங்கம்மா என்ன ஊட்டி வளர்த்தாங்களோ எவ்வளோ குண்டா இருந்திருக்க நீ?’ என்பாள் சுனந்தா பார்க்கும் நேரமெல்லாம்.
“ஹப்பா இது வேலைக்கே ஆகாது. கௌரவம் என்னவோன்னு நினைச்சேன். சரியான ஆளு தான்…” என தலையில் தட்டிக்கொண்டவள் அந்த புகைப்படத்தை கழற்ற நினைத்து,
“ப்ச், இன்னும் டேட்டே பிக்ஸ் பண்ணலை. பண்ணட்டும். அப்பறம் கழட்டிப்போம்…” என்று தலையசைத்து சொல்லிக்கொண்டாள்.
“இப்படி ஒரே நாள்ல தனியா புலம்ப விட்டுட்டானே…” என்னும் கடுப்புடன் உடை மாற்றி வந்து தனக்கு தரப்பட்டிருந்த அந்த படத்தின் தெலுங்கு பதிப்பினை பார்க்க துவங்கினாள் வெண்ணிலா.
————————————
காஞ்சிபுரம் வந்து சேர்ந்திருந்தனர். கௌரவ் தாயையும், தங்கையையும் வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு ட்ராவல்ஸ்க்கு சென்றுவிட்டான்.
அப்போதுதான் விக்ரம் வீடு வந்திருக்க நடந்தவற்றை எல்லாம் தாயிடம் கேட்டு தெரிந்துகொண்டவனுக்கு அத்தனை சந்தோஷம்.
“எப்போம்மா கல்யாணம்?…” என விக்ரம் கேட்க,
“பிரத்யூ கிளம்பி வர்ற நேரம். அநேகமாய் நாலுமாசத்துல இருக்கும் விக்ரம்….” என்றார் மகனிடம்.
“கல்யாணம் ஓகே. அதுக்கு முன்னாடி எங்கேஜ்மென்ட் எல்லாம்? அதை கேட்டேன்…”
“இல்ல விக்ரம், இன்னைக்கே சம்பிரதாயத்துக்கு உறுதி பண்ண தான் போனோம். மத்த எல்லாமே கண்ணா வரவும் பண்ணிக்கலாம்ன்னு…”
“கௌரவ் அண்ணா சொன்னாங்களாம்மா?…” என்றான் விக்ரம் சரியாய்.
“நல்லா கேளு விக்ரம். அவங்க வர்றதுக்காக நம்ம வீட்டு விசேஷத்தை ஏன் நாம தள்ளி வைக்கனும்? இதெல்லாம் ஓவரா தெரியலையா? சும்மாவே அந்த பிரத்யூ அலட்டுவா. இது தெரிஞ்சா என்னை எல்லாம் என்ன நினைப்பா?…” என கசந்த முகத்துடன் கூறிய சாருலதா,
“இப்பவும் ஒன்னு இல்லை. யோசிக்கலாம்…” என்றாள் தாயிடம்.
“நீயே பாருடா, அந்த பொண்ணு. அது நம்ம குடும்பத்துக்கு சரிப்பட்டு வரமாட்டா. அப்பாவுக்கு நம்ம அம்மா மாதிரி பொண்ணு தான் அண்ணனுக்கு வேணும்ன்னு ஆசை. ஏன் எனக்குமே தான். ஆனா அவ அப்படி இல்லை…” என்றவள்,
“கன் எல்லாம் வச்சிருக்கா. பைக்ல தான் சுத்துவாளாம். அதுவும் எவ்வளோ பெருசு. நம்மட்ட கூட அப்படி இல்லை. இதெல்லாம் சரிவருமா? எனக்கு புடிக்கலை. சட்டுன்னு கன்னை எடுத்து என் முகத்துக்கு நேர காமிச்சிட்டா…” என்று கூறினாள்.
“முதல்ல மரியாதை குடுத்து பேசு சாரு. உன் மாமனார் வீட்டுல நீ எவ்வளோ அதிகாரமா இருக்க? நீயும் அம்மா வளர்த்த பொண்ணு தான். அம்மா மாதிரியா இருக்க?…” என்று விக்ரம் கேட்கவும் அவனை முறைத்தாள் சாருலதா.
“அது என் புருஷன் வீடு. என் வீடு…” என அவனை திருத்த,
“உன்னால உன் மாமனார் வீடுன்னு சொன்னாலே பொறுக்க முடியலை. உன் வீடுன்னு நிக்கிற. முதல்ல நம்ம எப்படி இருக்கோம்ன்னு யோசி சாரு. அடுத்து மத்தவங்களை யோசிக்கலாம்…” என்றவன்,
“அதெப்படி எனக்கு வரப்போற அண்ணி பத்தி யோசிக்க கூடாதுன்னு நீ சொல்லுவ?…” என்றவள்,
“ம்மா, நீங்க சொல்லுங்க. உங்களை மாதிரியே அண்ணி இருந்தா தான் இங்க வீடும் அமைதியா இருக்கும். அப்பா மாதிரி அண்ணனும் நிம்மதியா இருக்க முடியும். வர்றவங்களுக்கும் ஒரு பயம் இருக்கும்…” என்றாள் சாருலதா.
அவளின் இந்த கூற்றில் விக்ரம் கௌசல்யா இருவருமே திடுக்கிட்டு பார்த்தனர்.
“என்ன சொல்ல வர்ற சாரு, உன் அப்பாவுக்கு நான் பயந்து இருக்கறேன்னா?…” என கௌசலயா கேட்க,
“ம்மா, புரியலையா? சாருவோட அதிகாரம் இங்க குறைஞ்சிட்ட கூடாதுன்னு நினைக்கிறா…” என்றான் விக்ரம்.
“ஏன் சாரு, இதே மாதிரி தான உன் புகுந்தவீட்டு மனுஷங்களும் நினைச்சிருப்பாங்க? நீ அப்படியா இருக்க?…” என்றவன்,
“முதல்ல நீ சரியா இரு. முடிஞ்சா எங்க அம்மா மாதிரி ஒருநாள் உன் வீட்டுல அமைதியா இருந்து பாரேன். உன் மாமனார் வீடுன்னு சொன்னதும் அவ்வளோ கோவம் வருதே, அவர் இல்லாம வந்துட்டாரா உன் புருஷன்?…” என்றான் கண்டிப்புடன்.
எப்போதும் கலாட்டாவாய், விளையாட்டாய் பேசும் விக்ரம்மின் கண்டிப்பில் சாருலதாவின் முகம் மாறியது.
“விடு விக்ரம்….” என மகளின் முகம் சோர்வதை கண்டு கூறிய கௌசல்யா,
“எதிர்பார்ப்பு எல்லாருக்கும் இருக்கும் சாரு. இவங்க இப்படித்தான் இருக்கனும்ன்னு நினைச்சோம்ன்னா அதுக்கு பேர் அடக்குமுறை. எல்லாருக்குமே சுதந்திரமா இருக்க ஆசை இருக்கும். அது தப்பில்லை. நீ நிலாவை பார்க்கிற விதம் தான் உன்னை தவறா நினைக்க வைக்குது…” என்றார்.
“உன்கூட இனிமே பேசிட்டேனா என்னன்னு பாரு. போடா…” என எழுந்து உள்ளே சென்றுவிட்டாள்.
“இவளை ஏன்ம்மா கூட்டிட்டு வந்தீங்க. குழந்தையை விட்டுட்டு இங்க வந்து பஞ்சாயத்து பண்ணிட்டிருக்கா?…” என விக்ரம் கௌசல்யாவிடம் கேட்க,
“அவங்க வீட்டுல ட்ராப் பண்ணனும்ன்னு தான் கௌரவ் சொன்னான். ஆனா சாருதான் குழந்தை அவ நாத்தனார் கூட்டிட்டு போயிருக்குன்னு சொல்லி இங்க வந்தா. வேணாம்ன்னு எப்படி சொல்ல?…” என்றார்.
“சரி அதை விடுங்க. அண்ணி எப்படி பேசினாங்க? அண்ணனும், அண்ணியும் பேசினாங்களா?…” என்று சிரிப்புடன் கேட்க,
“பேசிருப்பாங்க. கௌரவ் தனியா பேச போனான்…”
“போனாங்கன்னு சொல்லுங்க. பேசினாங்களா? அண்ணியா பேசினா தான் உண்டு. பாவம்…” என்று கேலி பேச,
“அவன் கொஞ்சம் அமைதியான பிள்ளையாவே அதிகம் பேசாமலே வளர்ந்துட்டான். அதுக்காக பாவம் எல்லாம் சொல்லுவியா நீ?…” என்று அவனின் தலைமுடியை கலைத்துவிட்டவர்,
“குட்டி கண்ணாவும், கண்ணாவும் பேசினாங்க போல, பிரத்யூ மெசேஜ் பண்ணியிருந்தா திரும்ப ஒருதடவை பொண்ணு பார்க்க போகனும்ன்னு சொல்லி…”
“இப்ப மேடம் பெரியண்ணின்னு வேற சொல்ல சொல்லி அராஜகம் பன்றாங்க. எனக்கும் மெசேஜ் பண்ணிருந்தாங்க. திரும்ப போய் பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட போகனும்ன்னு எல்லாம் சொல்லி….” என்றான் கிண்டலுடன்.
அத்தனை பேசினாலும் அவன் மனதில் கௌரவ்வின் முக்கியத்துவம் ஆகர்ஷனிடத்தில் இந்தளவுக்கு ஏன் என்னும் எண்ணம் இன்னுமே வலுப்பட்டது.
இருவரும் பேசிக்கொண்டிருந்துவிட்டு இரவு உணவிற்கு தயார் செய்ய கௌசல்யா செல்ல, விக்ரமும் தாய்க்கு துணைக்கு சென்று நின்றான்.
கௌரவ் வருகையில் அனைவருமே உண்டு முடித்திருந்தனர். விக்ரம் கைபேசியில் பிரத்யூக்ஷாவின் கலகலக்கும் குரல்.
“வா கௌரவ், சாப்பாடு எடுத்து வைக்கவா?…” என கௌசல்யா வர,
“ஹ்ம்ம்…” என தலையசைத்துவிட்டு உடை மாற்ற சென்றவன் குளித்துவிட்டே வந்தான்.
அத்தனை வெக்கை வாட்டிக்கொண்டிருந்தது. டிஷர்ட்டும், ட்ராக் சூட்டுமாய் வந்தமர்ந்தவன் தலையில் இன்னுமே நீர் சொட்டியது.