“இந்த நேரம் என்ன வீடியோ கால்? அதுவும் பிரத்யூவோட?…” என்றான்.
“கண்ணாவுக்கு நைட் ட்யூட்டி போல. குழந்தை தூங்கிட்டா. பிரத்யூவுக்கு தூக்கம் வரலைன்னு பேசிட்டிருக்கா…” என கூற,
“ஹல்லோ டாக்டர் சிஸ்டர்…” என்னும் துள்ளலான குரல் அந்த நேரத்தில்.
கௌரவ்வும் கௌசல்யாவும் ஒரே நேரத்தில் திரும்பி பார்த்தனர். வெண்ணிலா தான் இணைப்பில் சேர்ந்திருந்தாள்.
அன்றுதான் காலை பார்த்துவிட்டு வந்திருக்க, எப்படி அதற்குள் இத்தனை இலகுவாய் அவர்களுடன் ஒரு நட்பு பாராட்டல்?
கௌசல்யாவின் முகத்தில் புன்னகை. அதனை பார்த்துவிட்டு மகனை பார்க்க, அவனும் திரும்ப,
“நம்பர் நான் தான் விக்ரம்க்கு குடுத்தேன். அதுக்குள்ளே க்ரூப் ஆரம்பிச்சிட்டா பிரத்யூ….” என்று சொல்லவும் தன் கைப்பேசியை எடுத்து பார்த்தான்.
‘அன்றில்கள்’ என தலைப்பிட்டு கௌசல்யா, ஆகர்ஷன், பிரத்யூக்ஷா, விக்ரம், அனன்யா, வெண்ணிலா, ஷ்யாமளா, கிருஷ்ணகுமார் என்று சேர்த்து அதனை துவங்கியிருந்ததே பிரத்யூக்ஷா தான்.
“உங்க மொபைல்…” என்றான் சாப்பிட்டுக்கொண்டே தன் இடது கையை நீட்டியவாறு.
கௌரவ்விற்கு இப்படியான பொழுதுபோக்கு அரட்டைகளில் துளியும் விருப்பம் இருந்ததில்லை.
அதனால் அவனை சேர்த்து எதற்கு தேவையில்லாமல் வாங்கி கட்டிக்கொள்ள வேண்டும் என அவனை சேர்க்கவில்லை.
கௌசல்யா தன் கைப்பேசியை எடுத்து நீட்டவும் வாங்கியவன் அதன் செய்திகளில் பார்வையை ஓட்டினான்.
வேகவேகமாய் ஒவ்வொன்றாய் படிக்கும் முன் அத்தனை குறுஞ்செய்திகள். அதற்கே கண்ணை கட்டியது.
வளவளவென்று அவ்வளவு பேச்சுக்கள். எப்படித்தான் முடிகிறதோ என பார்வையிட்டவன் சட்டென மீடியா பக்கம் சென்று புகைப்படங்கள் எதுவும் உள்ளனவா என பார்க்க இருந்ததே.
அன்றைக்கு அவர்கள் இருவரும் சேர்ந்திருந்த புகைப்படங்கள் அத்தனையும் இருந்தது.
கூடவே பிரத்யூக்ஷாவின் கலகலப்பான பேச்சுக்களும், அதற்கு நிலா அளித்திருந்த பதில்களும்.
‘பொண்ணுக்கு பாட தெரியுமா, ஆட தெரியுமா?’ என்று அத்தனை அட்ராசிட்டி செய்திருந்தாள் பிரத்யூக்ஷா.
‘நேர்ல வந்தா தான் ஆட்டம், பாட்டம், பேச்சு போட்டி, கட்டுரை போட்டி எல்லாம்’ என நிலாவும் அவளுக்கு ஈடு கொடுத்து பேசியிருக்க பார்க்கவே அத்தனை புன்னகை.
அதனை பார்த்தபடி இருந்தவனுக்கு நிலாவின் அறையில் தான் கண்ட அந்த புகைப்படமும், தன்னை கண்டுகொண்டதும் அவளின் முகத்தில் வந்துபோன மாற்றங்களும் கௌரவ்வின் மனதை நிரப்பியது.
“அண்ணா…” என்று விக்ரம் அழைக்கவும் கைப்பேசியை வைத்துவிட்டு பார்க்க,
“அண்ணி…” என்று தனது கைப்பேசியை கொடுத்தான்.
“என் மொபைலுக்கு கூப்பிட சொல்லு…” என்றவன் கௌசல்யா கைப்பேசியை அவரிடம் நீட்டினான்.